6 நிமிடத்தில் அரும் பெரும் உயிர் பிழைத்தது; சினிமா பாணியில் செயல்பட்ட போலீசார்
புதுடில்லி: டில்லி அருகே குருகிராமில் ஒரு பெண் தற்கொலைக்கு முயற்சிப்பதாக வந்த தகவலை அடுத்து போலீசார் விரைந்து வந்து சினிமா பாணியில் கதவை உடைத்து மீட்டனர். ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ஒரு வீட்டில் பெண் ஒருவர் சிலிண்டர் வாயுவை திறந்து தீ வைத்து தற்கொலைக்கு முயற்சிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே 6 நிமிடத்தில் இந்த பகுதிக்கு வந்த போலீசார் சஞ்சய், தினேஷ் ஆகியோர் சினிமா பாணியில் கதவை காலால் எட்டி உதைத்து உள்ளே சென்று அழுது கொண்டே தற்கொலைக்கு தயாராகி கொண்டிருந்த பெண்னை தடுத்து நிறுத்தி வெளியே கொண்டு வந்தனர். மேலும் அவருக்கு போலீசார் கவுனசிலிங் அளித்தனர். விசாரணையில் இவரும் இவரது நெருங்கிய தோழிக்கும் தகராறு ஏற்பட்டதால் பிரிவை தாங்க முடியாமல் இந்த முடிவுக்கு வந்ததாக போலீசாரிடம் தெரிவித்தார்.

குருகிராமில் சின்னத்திரையில் சிஐடி என்ற குறுந்தொடர் நாடகத்தில் இது போன்று போலீசார் காப்பாற்றும் காட்சி வரும். இதன் அடிப்படையில் போலீசார் செயல்பட்டதாக சுற்றுப்புற மக்கள் பேசி கொள்கின்றனர். இந்த சம்பவத்தில் துரிதமாக செயல்பட்ட இன்ஸ்பெக்டர் சஞ்சய், கான்ஸ்டபிள் தினேஷ் மற்றும் சுந்தர்லால் ஆகியோரைப் பாராட்டி, அவர்களுக்கு பாராட்டு கடிதமும், தலா ரூ.5,000 வெகுமதியும் குருகிராம் கமிஷனர் விகாஸ் குமார் அரோரா வழங்கினார்.
நான் படிச்ச கதை (JKC)
குருட்டு வாழ்க்கை
கதையாசிரியர்: அ.ந.கந்தசாமி
அறிஞர் அ.ந.கந்தசாமி (1924-1968) பல்துறை விற்பன்னராகவிருந்தவர். இலக்கியத்தின் சகல பிரிவுகளிலும் சிறுகதை, நாவல், நாடகம், விமர்சனம், மொழிபெயர்ப்பு, கவிதை எனச் சகல பிரிவுகளிலும் கொடி கட்டிப் பறந்தவர். கவீந்திரன், பண்டிதர் திருமலைராயர், கலையரசன், சிப்பி, புரூனே போன்ற புனைபெயர்களிலும் எழுதியவர். ஈழத்து முற்போக்கிலக்கியத்தின் முன்னோடிகளில் முக்கியமானவராகக் கருதப் படுபவர். தனக்குப் பின்னால் ஓர் எழுத்தாளப் பரம்பரையையே உருவாக்கிச் சென்றவர்.
அ.ந.கந்தசாமி ஈழகேசரியில் தனது முதலாவது சிறுகதையை எழுதிய போது வயது பதினேழு. அதன் பின்னர் அவர் தேசாபிமானி, சுதந்திரன், வீரகேசரி ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றிய கால வேளையில் கிட்டத்தட்ட 40 சிறு கதைகள் வரையில் எழுதியுள்ளார் என அறியக் கிடைத்திருக்கிறது.
1953 இலிருந்து 1963 வரை இலங்கைத் தகவற் திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணிபுரிந்தார். தகவற்துறையில் பணிபுரிந்த காலகட்டத்தில் தகவற்துறையினால் வெளியிடப்பட்ட 'ஸ்ரீ லங்கா' இதழாசிரியராகவும் விளங்கினார். அதன் பின்னர் தோட்டத் தொழிலாளர் சங்கத்தில் முழுநேர ஊழியராகப் பணியாற்றினார். தனியார் நிறுவனங்களுக்கு ஆங்கில நூல்களை மொழிபெயர்க்கும் பணியினையும் செய்து வந்தார். ஆப்சர்வர் பத்திரிகையில் உரை திருத்துபவராகவும் சில காலம் வேலை பார்த்துள்ளார்.
நான் ஏன் எழுதுகிறேன் என்ற கட்டுரையில்
“மனிதனுக்கு எதையாவது சாதிக்க வேண்டும். அதன் மூலம் மற்றவர்களின் மதிப்பையும் அன்பையும் பெறவேண்டும். தான் ஒருவன் உலகில் இருப்பது சுற்றியுள்ள மற்றவர்களுக்குத் தெரிய வேண்டும் என்ற ஆசை நனவிலி மனதில் என்றும் இருந்து கொண்டிருக்கும் ஒன்றாகும். குழந்தை கூட தன்னை மற்றவர்கள் கவனிக்க வேண்டுமென்பதற்காகக் கையைத் தட்டுகிறது. ஆரவாரங்கள் செய்கிறது. இந்த ஆசையை நாம் வெளியரங்கமாகப் புரிந்து கொள்ள முடியாதிருக்கலாம். ஆனால் இவ்வித உள்மன ஊக்கங்களில் இருந்து நமக்கு விடுதலையில்லை. ஏனென்றால் நாம் மனிதர்கள். மனித மனத்தின் இயல்பு அப்படி”
என்று உண்மையை கூறுகிறார். .
முன்னுரை
சிறுகதை என்பது துவக்க வரியிலேயே வாசகனை உள்ளே இழுத்து விட வேண்டும். அது முக்கியம் என்பார் சுஜாதா. இந்தக் கதையும் அப்படியே. தலைப்பும் முதல் வரியும் இழுக்க கதையை படித்தேன். “குருட்டு வாழ்க்கை” என்பது குருடனின் வாழ்க்கை தான். குருட்டு அதிர்ஷ்டம் போன்றது அல்ல. எதிர்பாராத திருப்பங்கள் என்பார்களே அது போன்று கதையும் திருப்பங்களைக் கொண்டது. ஆனால் கடைசி முடிவு தான் சற்றே ஏமாற்றமளிக்கிறது. கதை தொடரலாம் என்பதையும் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். இவரின் கதை சொல்லும் பாணி புதுமைப்பித்தனின் எழுத்து பாணி எனலாம்.
ஈழத்தின் பழந்தமிழ் இவரது நடையில் சிறிது வினோதமாக தோன்றலாம்…. உதாரணம்:
//தன் நிர்ப்பிரயோசனமான இளமைக் கனவுகள் பலிதமாகாததையிட்டுத்தான் அவள் அப்படி உள்ளம் வெதும்பியிருக்க வேண்டும். அவள் மனக் குறைவுக்கு இந்த ஜன்மத்திலை மருந்து கிடைக்கப்போவதில்லை. ஒரு வேளை மறுஜன்மத்தில் கிடைக்குமோ?//
இது போன்ற தமிழையும் ரசிக்கமுடியும் என்பதற்காகவே இக்கதை இப்பகுதியில் இடம் பெறுகிறது.
இவரின் கதைகள் பத்திரிகைகளின் தேவைகளுக்காக அவ்வப்போது எழுதப்பட்டவையாகும். எனவே, சிலவற்றின் கலைத்துவமோ, பூரணத்துவமோ நிறைந்திருப்பதாகக் கூறமுடியாது.
இன்றைய கதை குருட்டு வாழ்க்கையும் அது போன்றதே. முடிவு என்று சொல்ல ஒரு நிகழ்வு இல்லாதது.
(1947ல் வெளியான சிறுகதை)
குருட்டு வாழ்க்கை
எனது பழைய நண்பன் சேகரனை எதிர்பாராத விதமாக அன்று சந்தித்தேன்.
நான் றோட்டோரமாக பைஸிக்கிளில் சென்று கொண்டிருந்தேன். அப்பொழுதுதான் அவன் வந்தான். என்கூடப் பள்ளிக்கூடத்தில் படித்த அதே ஆள்தான். நின்று கதைக்க வேண்டுமென்று தோன்றிற்று. நான் சேகரா” என்று கூறிக்கொண்டே பைஸிக்கிளிலிருந்து இறங்கினேன்.
அதே ஆள்தான். சிவப்பு நிறம், சுருட்டைமயிர் எல்லாம் அப்படியேயிருந்தன. ஆனால் அவன் கண்கள் குருடடைந்தவைபோல் காணப்பட்டன. நான் “சேகரா” என்று மீண்டும் கூப்பிட்டேன். ஆனால் அவன் என்னை அறிந்துகொள்ளவில்லை. எனக்கொரு சந்தேகமுண்டாயிற்று; ஒரு வேளை குருடாய்த்தான் போய்விட்டானோ?
“யாரது?” என்றானவன்.
“என்ன தெரியவில்லையா? ராமலிங்கம், உன்னோடு படித்தவன்.”
“சா ராமலிங்கமா!” என்று கூறியவண்ணம் அவன் என்னைப் பிடிப்பதற்குக் கையை நீட்டினான். அப்போதும் நான் கவனித்தேன். அவன் எங்கெல்லாமோ கையை அலைத்து விட்டுப் பின்னரே என்னைக் கண்டு கொண்டான்.
“என்ன சேகரா, கண்ணில் ஏதாவது கோளாறோ?”
“ஆமாம், நான் குருடனாய்ப் போய்விட்டேன். அதுதானே இந்தப் பிரம்பு?” அவன் பிரம்பை மேலே உயர்த்திக் காட்டினான்.
நான் திகைத்துவிட்டேன். அவன் பள்ளிக்கூடத்தில் என்னுயிர்த் தோழன். அப்படிப்பட்டவன் குருடனாவதென்றால் ….? எனக்குப் பெரிய மனக்கஷ்டமாயிருந்தது.
“எனக்கொன்றும் தெரியவில்லையே, விளங்கச் சொல்லன்.”
“அது ஒரு நீண்ட கதை. சொல்கிறேன். என்று கூறி என்னென்னெல்லாமோ அறிவுரையின் பிறகு சொல்ல ஆரம்பித்தான்.
“நான் இப்போது குருடாகியிருப்பது இரண்டாவது தடவை. அதாவது முதல் ஒருதரம் குருடாகிச் சொஸ்தமானேன். பிறகு நானே என்னை மறுபடியும் குருடாக்கிக்கொண்டேன்.– “உன்னுடைய புதிர் எனக்கு விளங்கவில்லை. விளங்கும்படி சொல்லு – அந்த மரநிழலில் போயுட்கார்ந்து சம்பாஷிப்போம் வா” என்றேன் நான்.
“இருவரும் போயுட்கார்ந்தோம். அவன் தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தான்.”
“உனக்கு நாங்கள் பள்ளிக்கூடத்தில் படித்த காலம் நினைவிலிருக்கிறதா? எவ்வளவு சந்தோஷமாய்க் காலத்தைக் கழித்தோம். அதை இப்போது நினைத்துப் பார்த்தால் ஏதோ அரைகுறையாய் நினைவிலிருக்கும் சொப்பனம் போல்தான் எனக்குத் தோன்றுகிறது. அப்போது நீதானே என் உயிர்த்தோழன்? இப்படி அரைவாசியில் நாங்கள் ஒருவருடன் ஒருவர் சம்பந்தமில்லாது போய்விடுவோமென்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. அந்தக் காலத்தில் உன்னைக் காணாது ஒருநாளைக் கழிப்பதென்றால் எனக்கெவ்வளவு மனக்கஷ்ட மாயிருந்தது? அப்படிப்பட்ட இரண்டு சிநேகிதர்கள் இவ்வளவு காலம் பிரிந்திருந்தது ஒருவரை யொருவர் காணாமல் – ஒருவர் புதினம் ஒருவருக்குத் தெரியாது – இப்படியெல்லாமிருப்பது ஆச்சரியமில்லையா?”
அவன் இங்கே கதையை நிற்பாட்டி ஒரு பெருமூச்சு விட்டான்!
“இதென்னடா, கதையைச் சொல்லாமல் இவன் வேறு ஏதேதோ சொல்கிறான்” என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன். அவன் தொடர்ந்தான்.
“ஆமாம். உனக்கொன்றும் தெரியாது. உன்னிடம் தான் என் அந்தரங்கங்களையெல்லாம் சொல்லுவது வழக்கம். ஆனால் உன்னிடம் கூட நான் அவளைப் பற்றிச் சொல்லியது கிடையாது.”
அவள் எங்கள் பாடசாலைக்கணித்தாயிருந்த பெண்கள் கல்லூரியில் மற்றிக்குளேஷன் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தாள். எங்களுக்கிடையில் எப்படியாக முதன் முதல் பரிச்சயமுண்டாயிற்று என்று எனக்கு நினைவில்லை. ஆனால் நாங்கள் எப்படியோ உயிர்க் காதலராகி விட்டோம்.
அவளையே யல்லாமல் வேறொருவரையும் மணப்பதில்லை என்று அந்தரங்கத்தியாக நான் அவள் முன்னிலையில் எத்தனையோ தடவை கூறியிருக்கிறேன். ஆனால் விதிதான் ஒன்று எதற்கும் குறுக்கே நிற்கிறதே? மனப்பூர்வமாக என்னைக் காதலித்து வந்த அவளுக்கும் எனக்கும் எதிராக அது சதிசெய்துவிட்டது. நான் படிப்பு முடிந்து எனது கிராமத்திற்குச் சென்றேன். அங்கு சென்ற பிறகு அவளிடமிருந்து எனக்குப் பல கடிதங்கள் வந்தன. ஒவ்வொன்றும் உணர்ச்சிப் பிரவாகமாயிருக்கும். அவற்றைக் காணும்போது அவளையே காண்பதுபோல் எனக்குத் தோன்றும். ஏதோ கிட்டாத பாக்கியத்தை அடைந்து விட்டது போல் நான் புளகாங்கிதமாவேன். ஆனால் இது தெய்வத்திற்குப் பொறுக்கவில்லையோ? அவளுடைய மோஹன சொரூபத்தை நீண்டகாலம் நான் கண்டுகளிக்கவில்லை.
கண்கெட்ட கடவுள் என் கண்களைக் கெடுத்துவிட்டது. எங்களுாரில் இருந்தாற் போலிருந்து அம்மை நோய் திடீரெனப் பரவ ஆரம்பித்தது. எங்கள் வீட்டில் என்னுடைய தாயாருக்கும் எனக்கும் அம்மை வார்த்தது. அதனால் நான் குருடானேன். இரண்டு கண்களும் பொட்டையாகிவிட்டன. ஆனால் வேறு இடங்களில் ஒரு குருடனுக்கேற்படக்கூடிய கஷ்டம் எனக் கேற்படவில்லை. எனக்கு வேண்டிய பண வருவாயிருந்தது. ஆகையினால் வாழ்க்கைக்கு உழைக்க வேண்டுமென்று இருக்கவில்லை.
எனக்கு இருபத்தைந்து வயதாகியிருந்தது. அம்மாவுக்கும், அப்பாவுக்கும் நான் ஒரே ஒரு செல்லப்பிள்ளை. எனக்குக் கலியாணம் கட்டிவைத்து விட வேண்டுமென்று அவர்களுக்கு ஆவலாயிருந்தது. வேண்டிய பொருள். படிப்பு. அழகு. குணம் எல்லாம் எனக்கமைந்திருந்தபடியால் “குருடனாகிவிட்டானே என்றும் பார்க்கமாட்டார்களென்பது அவர்களது எண்ணம். ஒரு நாள் இதைப்பற்றி என்னோடு கதைத்தார்கள். நான் கலியாணம் முடிப்பதென்றால் இப்படி அட்வகேட் சிங்காரவேலுவின் மகள் ராஜம்மா என்ற பெண் பட்டினத்தில் என்கூடப் பரிச்சயமாயிருந்தவள், அவளைத்தான் கலியாணம் பண்ணிக்கொள்வேன். இல்லாவிட்டால் இல்லை” என்று தீர்க்கமாய்க் கூறிவிட்டேன்…. இங்கு கதையை அவன் நிறுத்தினான்.
எனது மனம் படபடத்தது. “திகீர்” என்ற உணர்ச்சி என்னுடம்பில் ஓடிச் சென்றது. நான் அதை மறைத்துக்கொண்டு கேட்க ஆரம்பித்தேன். அவன் தொடர்ந்தான்.
“நான் எனது முடிவைத் தெரிவித்துவிட்டேனா? பின்னர் என் மனத்தில் ஒரு சந்தேகமுண்டாகியது. ராஜம் நான் குருடென்று தெரிந்து என்னை மணக்க மறுத்துவிட்டால் . ஆனால் அவள் கொண்டுள்ள காதல் எவ்வளவு உண்மையானது என்று எனக்குத் தெரிந்திருந்தபடியால் அந்தச் சந்தேகத்தை மேலும் நான் வளரவிடவில்லை . அப்படி ஒன்றும் நேராது என்று திடப்படுத்திக்கொண்டேன்.
சில நாட்கள் சென்றபின் என்னுடைய தந்தையார் என்னைக் கூப்பிட்டு, துக்கமும், சோர்வும் கலந்த குரலில் சொன்னார்.
“நீ சொன்ன பெண்ணின் தகப்பனார் சிங்காரவேலுவைக் கண்டேன். அவருக்கு எல்லாஞ் சம்மதந்தான். ஆனால் உன் கண்கள் பொட்டையென்பதால்” அவர் இதைக் கூறும் போது தேம்பியழ ஆரம்பித்து விட்டார். என்னாலும் தாழ முடியவில்லை . என் மனமும் மிக வருந்திற்று.
இதற்கு இரண்டு வாரங்களின் பிறகு பின்னரும் என்னைக் கூப்பிட்டுக் கதைக்க ஆரம்பித்தார்.
“வேறொரு இடத்தில் ஒரு பெண் பார்த்திருக்கிறேன்.” “எனக்கு வேறொரு பெண்ணும் வேண்டாம்.”
“என்னடா செய்வது? நீ கொடுத்து வைத்தது அவ்வளவு. இவளும் நல்ல அழகு.”
எனக்குச் சிரிப்பு வந்தது: “காணக் கண்ணில்லை . அழகிருந்தென்ன பிரயோசனம்?”
“மேலும் படித்திருக்கிறாள். நன்றாய்ப் பாடுவாள்.”
“அதெல்லாம் அவளோடேயே இருக்கட்டும் நான் கல்யாணம் பண்ணிக்கொள்ளவில்லை அப்பா: என்னைத் தொந்தரவு படுத்தாதேயுங்கோ.”
இது நடந்து இரண்டு மாதம் கடந்தது. பின்னருமொருதரம் என்னைக் கூப்பிட்டுக் கதைத்தார். இந்த முறை அவருடைய பேச்சு உற்சாகமாயிருந்தது. மகிழ்ச்சி பொங்குவது போலிருந்தது.
“அட்வகேட் சிங்காரவேலுவைப் பின்னரும் கண்டேன். கடைசியாய் நிச்சயமாகி விட்டது. நீ சொன்ன பெண்ணே உனக்குக் கிடைத்து விட்டாள்.”
எனக்கென் காதுகளை நம்பமுடியவில்லை . எனது குருட்டுக் கண்களில் ஒளிவந்து சேர்ந்துவிட்டது போன்ற சந்தோஷமுண்டாயிற்று. கடைசியில் என் ராஜம் எனக்கேயாகி விட்டாளென்று மகிழ்ந்தேன்.
கலியாணமும் ஆர்ப்பாட்டமாய் முடிந்தது. குருட்டுக் கண்ணுடன் அவள் கழுத்தைத் தடவிக் கண்டுபிடித்த நான் தாலியைக் கட்டும்பொழுது என் கண்களில் ஜலம் ததும்புவது போலிருந்தது. ஆனந்த பரவசத்தால் உண்டாகிய கண்ணீர் அது. “குருடனாகி விட்டேனே” என்று நினைத்து நான் விட்ட கண்ணீர் என்று சிலர் அதைக் கருதியிருக்கலாம்.
ஆனால் என்ன ஆச்சரியம்: கலியாணமாகி இரண்டு நாட்கள் கடந்தன. நான் பள்ளிக்கூடத்தில் படித்த ராஜம்மாவை நேசித்தது போல் இப்போதிருக்கும் ராஜம்மாவை நேசிக்க முடியவில்லை போல எனக்குத் தோன்றியது. இவ்வளவுக்கும் நானவளிடத்தில் ஒரு வித்தியாசத்தையும் காணவில்லை. மூன்று வருடங்களின் முன்னர் கேட்ட அவள் குரலுக்கும், இப்போது கேட்ட குரலுக்கும் எனக்கு வித்தியாசந் தோன்றவில்லை. அவள் நடந்ததைப் போல் தான் இவளும் நடந்தாள். அவள் சிரித்து விளையாடியது போல்தான் இவளும் சிரித்து விளையாடினாள். ஆங்கிலங் கலந்து பேசினாள். ஆனாலும் என் மனதில் ஒரு அதிருப்தியிருந்தது. ஆனால் அவள் நான் குருடனென்பதை லட்சியம் செய்யாது மிக நேர்மையாக நடந்து கொண்ட முறையும், அன்பொழுகப் பேசிவந்த ரீதியும் எனக்கு ஆச்சரியத்தையும், அவளிடம் ஒருவித நன்மதிப்பையும் பெருக்கிக்கொண்டு வந்தன.
ஒரு வாரந்தான் கழிந்தது. எனது நண்பன் வரதன் என்னைப் பார்க்க வந்தான். அவன் என்னிடம் “பட்டினத்தில் ஒரு ரஷ்யன் ஐ ஷ்பெஷலிஸ்ட்” (கண் வைத்தியம்) வந்திருக்கிறார். உன்னைப்போல் இடையிட்டு வந்த குருட்டைச் சில இடங்களில் சொஸ்தமாக்கியிருக்கிறாராம். ஏன் நீயும் அவரிடம் போய் சிகிச்சை பெறக்கூடாது?” என்று கூறினான்.
எனக்கு நம்பிக்கை பிறக்கவில்லை . ஆனால் சொஸ்தமாகி விட்டால்…….? ஆகா! எவ்வளவு சந்தோஷமாயிருக்கும்? ராஜம்மாவுக்கு மனத்தில் ”என் கணவன் குருடன்” என்ற குறை. கவலையிருந்தால் அது நீங்கிவிடுமே! அவள் எவ்வளவு சந்தோஷப்படுவாள்.
கடைசியாய், “எதற்கும் பார்ப்போம்” என்று கிளம்பி விட்டேன். ஒரு ஒன்றரை மாத காலத்தின் பின்னர் ஆச்சரியப்படும் படியாய் எனக்கு தெளிவான கண்பார்வை ஏற்பட்டுவிட்டது. என்னுடைய தகப்பனார் பட்ட சந்தோஷம் சொல்லி முடியாது.
ஐயாயிரம் ரூபாவை டாக்டருக்கு “பீஸா”கக் கொடுத்தார். வழிநெடுக ராஜாத்திக்கேற்படக் கூடிய சந்தோஷம் பற்றி மனராஜ்யம் செய்தபடியே வீடு வந்து சேர்ந்தேன்.
வீட்டு வாசலில் ஆவலும் மகிழ்ச்சியும் பொங்குகின்ற முகத்துடன் ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். என்னை ஆச்சரியத்துடன் நோக்கினாள். ஆனாலிவள் ஏன் இங்கு வந்தாள்? ஒரு வேளை ராஜத்தின் சிநேகிதி யாராவதாயிருக்கலாம் என்று எண்ணிக்கொண்டே உள்ளே போனேன்.
“ராஜம் ராஜம்” என்று ஆவலுடன் கூவினேன். “என்ன” என்றுகொண்டே அந்தப்பெண் என்னிடம் ஓடிவந்தாள். “உன்னையல்ல ராஜம் எங்கே? காணவில்லை?”
அவள் என்னைப் பரிதாபகரமாய்ப் பார்த்தாள். “நான் தான் ராஜம். என் பெயர் கமலா. உங்களுடைய தகப்பனார்தான் அந்தப் பெயரை எனக்கு வைத்தார்” என்று அந்தப் பெண் தழ தழத்த குரலில் சொன்னாள்.
நான் திகைத்துவிட்டேன். என்னால் பேசமுடியவில்லை . “இது இமிட்டேஷன் ராஜம். அதனால்தான் இவளை அவள் போல் நேசிக்க முடியாதிருந்தது. என்று கண்டுகொண்டேன். என் மனத்தில் ஏதோ பெரிய சூறாவளி ஏற்பட்டுவிட்டது போலிருந்தது. ஒன்றும் பேசாமல் என் அறைக்கு ஓடினேன்.
நான் அங்கே செய்யத் துணிந்து செய்து முடித்துவிட்ட காரியத்தை நினைக்க இப்போதும் மனநடுக்கமுண்டாகிறது. ஒரு முரட்டு உணர்ச்சி என்னை அந்நேரத்தில் ஆட்டி வைத்தது. மேசையிலிருந்த ஒரு குண்டூசியை எடுத்து ஏமாற்றமடைந்த என் கண்களை நானே குத்திக்கொண்டேன். அப்படி நான் குத்திக்கொண்டு விட்டாலும் நல்லதாய்ப் போயிற்று. இல்லா விட்டால் பொன்னிருதயம் படைத்த அந்த உத்தம மனைவியை நான் அவளை நேசிக்க வேண்டியளவு நேசித்திருக்க மாட்டேன். விழித்துக்கொண்டிருக்கும் போது அவளை என் ராஜம்மா போல் கருத முடியவில்லை . ஆனால் குருடாகியிருக்கும் பொழுது அவளிடம் ராஜத்தின் அம்ஸங்கள் தலைதூக்கி நிற்பதைக் காண்கிறேன். இப்பொழுது நீ என்னைக் கேட்டாயானால் அந்த ராஜத்தைவிட இவளை மேலாக நேசிக்க நான் கற்றுக் கொண்டேன். அவளே இந்தக் குருடனுக்குக் கண்ணாய் விளங்குகிறாள்.”
அவன் இங்கு நிறுத்தினான். அவளுடைய மனத்தில் ஒருவித சாந்தம் பிறந்தது போலிருந்தது. அவன் முகத்தில் ஒருவித அமைதி நிலவிற்று.
ராஜம்மாவைப்பற்றி எனக்குத் தெரிந்த கதையைச் சொல்லி அவனைக் கஷ்டப்படுத்த விரும்பவில்லை . “நான் போய் வருகிறேன்” என்று கிளம்பினேன். வழி நெடுகிலும் ஒரே சிந்தனை. என்னுடைய மனைவியைப்பற்றி தான். என் மனதில் நெடுங்காலமாக விடை தேடிக்கொண்டிருந்த ஒரு கேள்விக்கு இன்று தான் மறுமொழி கிடைத்தது. நான் ஆபீஸிலிருந்து நேரஞ் சென்று திரும்ப சில நாட்களில் அவள் கண்கலங்கிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்ததைக் கண்டிருக்கிறேன். தன் நிர்ப்பிரயோசனமான இளமைக் கனவுகள் பலிதமாகாததையிட்டுத்தான் அவள் அப்படி உள்ளம் வெதும்பியிருக்க வேண்டும். அவள் மனக் குறைவுக்கு இந்த ஜன்மத்திலை மருந்து கிடைக்கப்போவதில்லை. ஒரு வேளை மறுஜன்மத்தில் கிடைக்குமோ?
– ஈழகேசரி – 15.05.1947.
கதை sirukathaigal.com தளத்தில் இருந்து பெறப்பட்டது. சுட்டி
========>குருட்டு-வாழ்க்கை<=========
பின்னுரை.
தன்னைத்தானே கண்களைக் குருடாக்கிக்கொள்வது என்பது சற்றே மிகையாகத் தெரிகிறது.
ஆசிரியரைப் பற்றிய விவரங்களுக்கு
======>அ.ந.கந்தசாமி
=======>கந்தசாமி
//இவரின் கதை சொல்லும் பாணி புதுமைப்பித்தனின் எழுத்து பாணி எனலாம். // கருத்து சரியில்லை என்று ஒத்துக்கொள்கிறேன். புதுமைப்பித்தன் மூன்றாம் மனிதனின் பார்வையில் கதையை நகர்த்துவார். இக்கதை நேர்முக வர்ணனையாக உள்ளது. மேலும் கதையை முடிக்காமல் தொடரும் என்று குறிப்புணர்த்துகிறார்.
பதிலளிநீக்குJayakumar
புதுமைப்பித்தனை விட்டு விடுவோம். தொடரும் பின்னூட்டததில்
பதிலளிநீக்குமறுபடியும் புதுமைப்பித்தனைப் பற்றி யாராவது குறிப்பிட்டுத் தொடராமல்
இருக்க வேண்டுமே, சாமி!
அவர் திரும்பவும் தன் பார்வையை இழந்திருக்க வேண்டாம் என்றுதான் எனக்கும் தோன்றியது. ஆனால் - நண்பரின் மனைவிதான் அவர் நேசித்த ராஜம் என்று அவர் தெரிந்துகொள்ள நேர்ந்தால், மேலும் தர்மசங்கட நிலை உருவாகியிருக்கும்.
பதிலளிநீக்குஇரண்டாம் முறை பார்வை இழப்பு அவசியமா இல்லையா என்பதை விட, பார்வை இழப்பு தன் இச்சையாக செய்யாமல் ஏதாவது ஒரு விபத்து (தீப்பொறி கண்ணில் விழுந்தது, கால்தடுக்கி கீழே விழுந்தபோது கல் குத்து) போன்ற ஏதாவது ஒரு காரணத்தை கூறியிருக்கலாம். இது எனது கருத்து.
நீக்குJayakumar
அதுவும் சரிதான்!
நீக்குபாஸிடிவ் செய்திகள் இரண்டும் உயிரை காப்பாற்றிய நல்ல செயல் இருக்கிறது. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குகதை படித்தேன்
/அவள் நான் குருடனென்பதை லட்சியம் செய்யாது மிக நேர்மையாக நடந்து கொண்ட முறையும், அன்பொழுகப் பேசிவந்த ரீதியும் எனக்கு ஆச்சரியத்தையும், அவளிடம் ஒருவித நன்மதிப்பையும் பெருக்கிக்கொண்டு வந்தன.//
இப்படி பட்ட நல்ல பெண்ணை கண்ணுக்கு கண்யாய் வைத்து பார்த்துக் கொள்ளாமல் இவர் தன் கண்ணை குருடாக்கி கொண்டு விட்டாரே!
//பொன்னிருதயம் படைத்த அந்த உத்தம மனைவியை நான் அவளை நேசிக்க வேண்டியளவு நேசித்திருக்க மாட்டேன். விழித்துக்கொண்டிருக்கும் போது அவளை என் ராஜம்மா போல் கருத முடியவில்லை . ஆனால் குருடாகியிருக்கும் பொழுது அவளிடம் ராஜத்தின் அம்ஸங்கள் தலைதூக்கி நிற்பதைக் காண்கிறேன். இப்பொழுது நீ என்னைக் கேட்டாயானால் அந்த ராஜத்தைவிட இவளை மேலாக நேசிக்க நான் கற்றுக் கொண்டேன். அவளே இந்தக் குருடனுக்குக் கண்ணாய் விளங்குகிறாள்.”//
அவர் சொல்லும் காரணம் அவரை பொருத்தவரை சரியாக இருக்கலாம்.
//என் மனதில் நெடுங்காலமாக விடை தேடிக்கொண்டிருந்த ஒரு கேள்விக்கு இன்று தான் மறுமொழி கிடைத்தது. //
இந்த முடிவை எதிர்பார்த்தேன். அது போலவே இருக்கிறது.
15-ம் தேதி 1947 என்பது என்னால் மறக்க முடியாத
பதிலளிநீக்குதிரு நாள். அது ஆகஸ்ட் 1947 என்றால் இந்தக் கதை
சரியாக மூன்று மாதங்களுக்கு முன் இலங்கை ஈழகேசரி
இதழில் பிரசரமாகியிருக்கிறது.
அவ்வளவு காலத்திற்கு முன்னால் என்ற
ஞானோதயத்தோடு வாசித்தால் கதை சொல்லல் என்னை
வியக்க வைத்தது. அதுவும் தமிழினத்தின் தொப்புள் கொடி
உறவான இலங்கைத் தமிழகத்து எழுத்தாளுமை
இன்றைய தமிழகத்து தமிழறிந்த எழுத்தாளர்களின்
எழுத்து நடையை விடச் சிறப்பாக இருப்பதைச்
சொல்லியே ஆகவேண்டும்.
நிர்பிரயோசனம், அந்தரங்கத்தியாக, பலிதம் ஆகுதல் போன்ற வார்த்தைகள் தமிழ் எவ்வாறு அந்நிய தேசங்களில் வாழ்கிறது என்பதை உணர்த்துகிறது.
நீக்குகதையைப் படித்து கருத்து கூறியமைக்கு நன்றி.
பாசிட்டிவ் செய்திகள் இரண்டுமே நல்ல விஷயங்கள். போலீஸார் விரைந்து சென்று காப்பாற்றியதும், பைக் நபர் தைரியமாகச் சென்று சிறுவனைக் காப்பாற்றியதும் பாராட்ட வேண்டிய விஷயங்கள்.
பதிலளிநீக்குரயில் செய்தியும் சூப்பர்.
கீதா
ஆசிரியரின், நான் ஏன் இதை எழுதுகிறேன் என்ற கட்டுரைலியிருந்து சொல்லப்பட்ட அந்த பத்தி, உண்மையான மன ரீதியான வரிகள்.
பதிலளிநீக்குஅது சரியாகக் கிடைக்காத போது மனம் பேதலிப்பவர்கள் எத்தனை பேர் இருக்காங்க இந்தச் சமூகத்தில்! நான் அறிந்தே பல பேர்!
கீதா
கதை மிக அழகாக எழுதபப்ட்ட கதை. அதுவும் அந்த வருடங்களில் எழுதப்பட்டது என்பது உட்பட.
பதிலளிநீக்குகதையில், அப்பா இரண்டாவது முறை வந்து கல்யாணம் பற்றிச் சொல்லும் போதே புரிந்துவிட்டது. கதை எப்படிப் போகப் போகிறதென்று. கண்டிப்பாக அந்த ராஜம் இல்லை என்று,
கீதா
அதே போன்று ராஜம் இவருக்குத்தான் மனைவி என்பதும் கதையில் தெரிந்துவிடுகிறது முடிவுக்கும் முன்னரே. அதுதான் கடைசி பத்தியில் வருகிறது விடையாய்.
பதிலளிநீக்குகீதா
கதை முடிவு பெற்றுத்தான் உள்ளது, தொடரும் பாணியில் இல்லை. முடிவு சரியாகத்தான் உள்ளது. அவ்வளவுதான் கதை. எதையும் மாற்ற முடியாது. மாற்ற முடியாதவற்றை வெளியில் சொல்லி இரு குடும்பங்களுக்குள் ஏன் வீண் குழப்பம்?
பதிலளிநீக்குஅது தனிக் கதையாகவே எழுதலாம். ஆனால் இப்போது அவுட்டேட்டட். நிறைய படங்கள் இப்படியான கருவில் வந்துவிட்டன. பழைய கறுப்பு வெள்ளை படங்கள் உட்பட.
வியாழன் பகுதியில் வந்த செய்திகளில் ஒன்றில், ஒரு கணவன் தன் மனைவையைத் தன் காதலுடன் சேர்த்து வைத்தது போன்று இதில் செய்ய முடியாதே...நண்பனுக்கும் மனைவி இருக்கிறாளே...
கீதா
ஜெ கே அண்ணா, தன்னைத் தானே குருடாக்கிக் கொள்வதை மிக என்று சொல்ல முடியாது, தன் விருப்பம் நிறைவேறாமல் தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்வது உண்டில்லையா அப்படியான ஒன்றுதான் இது. அதீத உணர்ச்சிகளின் வெளிப்பாடு. அப்படித்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பதிலளிநீக்குகீதா
தன்னைத்தானே அடித்துக் கொள்வது, தன்னைத்தனே சுட்டுக் கொள்வது, வெட்டிக் கொள்வது....தற்கொலையின் ஒரு வடிவம்'
நீக்குகீதா
இப்போதுதான் இதைப் படித்தேன். என் நண்பன் (உயிர் நண்பன்), ஒரு பெண்ணிற்காக தன் கைகளில் பல இடங்களில் சூடு வைத்துக்கொண்டான். என்னிடமும் காண்பித்தான். நான் உடனே, இது என்னடா பைத்தியக்காரத்தனம் என்றேன். கடைசியில் அந்தப் பெண்ணுடன் அவனுக்கு திருமணம் ஆகவில்லை, அது வேறு ரூட்டில் சென்றுவிட்டது. இன்னொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்.
நீக்குபெண்ணுக்காக தற்கொலை செய்துகொள்வது, தாடி வளர்ப்பது என்பதெல்லாம் எனக்குச் சுத்தப் பைத்தியக்காரனின் செய்கைகளாகத் தென்படும்.
இன்றைய கதை பரவாயில்லை ரகம்.
பதிலளிநீக்குதன் கண்ணைத் தானே குத்திக் குருடாக்கிக்கொண்டவனின் மனம்தான் ஊனம் என்று எனக்குத் தோன்றியது. காதல் என்ற உணர்வு இருப்பவனுக்கு இதெல்லாம் எப்படி சாத்தியம்?
கடைசி இரண்டு பத்தி கதைக்குத் தேவையில்லை. படிப்பவர்களுக்கே சுலபமாகப் புரிந்துவிடும்.
பதிலளிநீக்குபயணிகளுக்கு இலவச உணவா? சுத்த பைத்தியக்காரத்தனமாக அல்லவா இருக்கிறது. கோயிலில் இலவச உணவு, அதிலும் யாத்ரீகர்களுக்கு மாத்திரம் என்று இருப்பதில் அர்த்தம் உண்டு (இப்போதெல்லாம் கோயில்களில் வழங்கப்படும் அன்னதானம் என்பது கணக்கெழுதி பணத்தைச் சுருட்டவே உபயோகப்படுகிறது. சந்தேகம் இருப்பவர்கள் அந்த அந்தக் கோயிலில் என்ன வழங்குகிறார்கள், யார் சாப்பிடுகிறார்கள் என்று பார்த்தாலே தெரிந்துவிடும்)
பதிலளிநீக்குஇலவசம் இல்லை. விலையில்லா உணவு என்று வைத்துக்கொள்ளுங்கள்.
நீக்குJayakumar
தற்கொலைக்கு முயன்ற பெண்ணை விரைந்து சென்று காப்பாற்றிய போலீஸாரை பாராட்ட வேண்டும். அந்த தகவலை போலீஸாருக்கு கொடுத்தவர்கள் ஏன் காப்பாற்ற முயலவில்லை? என்னும் கேள்வியும் எழுகிறது.
பதிலளிநீக்குமழை நீரில் மின்சார தாக்குதலுக்கு உள்ளான சிறுவனை காப்பாற்றிய இளைஞர் பற்றிய காணொளி வாட்ஸாப்பில் எனக்கும் வந்தது. தீரன்தான்.
இலங்கைத்தமிழ் கேட்கவும் படிக்கவும் எப்போதும் இனிமைதான்.
பதிலளிநீக்குநண்பனின் முன்னாள் காதலியை அவன் மணந்து கொண்டது, அதை தெரிந்து கொண்டதும் அவன் உணர்வுகளை ஒரு கதையாக்கலாம்.
பெண்ணைக் காப்பாற்றிய பொலிசார் , துணிச்சலாக சிறுவனைக்காப்பாற்றிய மனிதர் இவர்களுக்கு பாராட்டுகள்.
பதிலளிநீக்குகதை எழுத்து நடை நன்றாக இருக்கிறது .கதையின் ஆழத்துக்காக இப்படி ஒரு முடிவை தந்துள்ளார் போல் தெரிகிறது கதை. முடிவை ஜீரணிப்பது சிரமமமாகத்தான் உள்ளது.
கதை படித்தேன், வித்தியாசமாக இருக்குது கற்பனை, எதிர்பாராத டுவிஸ்ட்டுகள் ஹா ஹா ஹா.
பதிலளிநீக்குகதையில்[நான் பேசும்] "புதினம்" வருகிறதே:).
மீண்டும் பார்வை தெரியாமல் போனவிதம்..., கதையின் சுவையைக் கொஞ்சம் குறைக்கிறது.
இன்னொன்று, பள்ளிக்காலத்திலேயே விரும்பியிருக்கிறார், ஆனா இவர்தான் உயிர் நண்பனாம், இவருக்கது தெரியாதாம்... அப்போ உயிர் நண்பன் என்பதும் கொஞ்சம் இடிக்குது.
ஆனாலும் விதி எப்படி விளையாடுகிறது, இனி இவரால் மனைவோடு மகிழ்ச்சியாக வாழ முடியுமா?:).. ஹா ஹா ஹா...
மொத்தத்தில் கதை சூப்பர்.
நன்றி. மாற்றி யோசி என்பார்கள். அது போலவே இதுவும். திருப்பங்கள் எதிர்பாராதவை.
நீக்குJayakumar