24.4.25

புத்தகம் பையிலே.... புத்தியோ பாட்டிலே

 

போன புதன், வியாழன் எல்லாம் மனதில் ஓடிக்கொண்டிருந்த பாடல் "ஆணென்ன பெண்ணென்ன நீயென்ன நானென்ன.."

அதே ஞாயிறு திங்கட்கிழமைகளில் அல்லது 'கடந்த புதனுக்கும் கடந்த புதன் முதலே 'அவ்வப்போது மனதில் ஓடிய பாடல் "தேன்மழையிலே தினம் நனையும் என் நெஞ்சமே"

​இந்தப் பாடல்கள் மனதில் ஏன் விட்டு விட்டு ஓடுகின்றன என்று நான் உடனே யோசிக்கவில்லை.  எனக்கே என் வழக்கம் தெரியும்தான் என்றாலும் ஏனோ மனதில் படவில்லை.

முன்னரும் இதுபோன்ற சில சந்தர்ப்பங்கள் பற்றி எழுதி இருக்கிறேன்.

வெங்கட் சமீப காலமாக பதிவுகள் எழுதுவதில்லை.  அவர் தளத்துக்கு சென்று திறந்தாலே எனக்கு மனதில் "முத்துக்களோ கண்கள்" என்னும் பாடல் மனதில் ஓடும்.

​'ரொம்ப இழுக்காம விஷயத்துக்கு வா' என்று கடுப்படுப்பீர்களே ஆனால்,

அல்லது இந்நேரம் விஷயத்தை யூகித்திருப்பீர்களேயானால்,

அதே சமயம், 

எப்படி என்று மட்டும் புரிந்திருக்காது.  சரிதானே?

பானு அக்கா சில நாட்களுக்கு முன்னால் செவ்வாய்கிழமைக்கு ஒரு கதை அனுப்பி இருந்தார்.  கதையின் தலைப்பு 'புதியவன்'.

அது கண்ணில் படும் நேரமெல்லாம் மனதில் 'தேன்மழையிலே' பாடல் ஓடி இருக்கிறது.  அதாவது அந்த SPB பாடல் இடம்பெற்ற திரைப்படம் புதியவன்!  மனதின் அல்லது மூளையின் செயல்பாடுகள் ஆச்சர்யமானவை.

அடுத்த பாடல் 'ஆணென்ன...  பெண்ணென்ன..'.  இதுவும் SPB பாடல்தான்.  யார் பாடியது என்பதில் விசேஷம் ஒன்றும் இல்லைதான்.  சும்மா குறிப்பிடுகிறேன்.  இந்தப் பாடல் மனதில் ஓடியதற்கு காரணம் சென்ற வார வியாழன் பதிவுக்கு நானே கொடுத்திருந்த தலைப்பு...  "ஆண் ஊசி, பெண் ஊசி!"

சரி..   இப்போ வெங்கட் தளத்துக்கு சென்றால் ஏன் அந்தப்பாடல் நினைவுக்கு வரவேண்டும் என்று நீங்கள் சொல்லுங்களேன்...

==========================================================================================

வட்டார எழுத்து...


சமீபத்தில் சகோதரி 'அமைதிச்சாரல்' சாந்தி மாரியப்பன்  சிபாரிசில் ஒரு நாஞ்சில் நாடன் கதை படித்தேன்.  பல அம்சங்கள் என்னைக் கவர்ந்தாலும் இந்த மூன்று வரிகளை ஸ்பெஷலாக பகிர்ந்து விட்டு மிச்சதுக்கு வருகிறேன்!.

1)  தமிழைத் சொல்லி கொடுக்க சம்பளம் வாங்குகிறவரெல்லாம் தமிழ் கற்றிருக்க வேண்டும் என்று அவசியமில்லை என்பது மானா காவன்னாவுக்கு மனதில் ஏறியிருக்கவில்லை  

2)  மேலும் மானா காவன்னாவுக்கு நீர் பிரிவதில் தொந்தரவு உண்டு.  அடிக்கடி செலவாதிக்குப் போகவேண்டும்.  கடங்காணியில் இருக்கும் பைப்பு மூடு போலச் சொட்டு சொட்டாக வரும்.  நீண்ட நேரமாகும்.

3) காலனின் வாகனத்தின் கனைப்புச்சத்தம் காதோரம் கேட்டதுபோல தோன்றியது.


வெஜிடபிள் பிரியாணி பற்றிய அந்த சிறுகதையின் ஆரம்ப வர்ணனை மிகவும் அற்புதமானது.  இளையராஜா இசை போல நீங்கள் அந்த காட்சிக்குள் உடனே புகுந்து ஒன்றி பயணிக்க ஆரம்பித்து விடுவீர்கள்,.

வழியெங்கும் மஞ்சளாய் நெருஞ்சி பூத்திருந்தது. ஆடி மாத நடப்பில் வேம்பு பழுத்து உதிர்ந்துகொண்டிருந்தது. கிளிகள் வயிறார உண்டு கொஞ்சின. புங்கு மொட்டுப் பிடிக்க ஆரம்பித்திருந்தது. முத்துக் கள் போலக் கோக்கலாம். கானுயிருக்கோ புள்ளினத்துக்கோ கன்று காலிக்கோ எந்தப் பயனும் தராத சீமை உடைமரங்கள் காலி நிலங்களில் எல்லாம் தழைத்துக்கொண்டிருந்தன. நடந்தால் காலில் குத்தும், கை கால்களில் கீச்சும், வெட்டிக் காயப் போட்டால் விறகாகும்.

தூரத்து மலைப்பாறையில் வெள்ளைப் பெயின்டில் பெரிய எழுத்துக்களில் 'கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்!' எனத் தீற்றப்பட்டிருந்தது. வெயிலில் பளீரென மினுங்கியது.பாறையை நோக்கிச் சென்று முட்டித் திரும்பியது சாலை. திரும்பும் வளைவில் பெரிய ஆலமரம் ஒன்று ஒங்கிச் செழித்திருந்தது. எழுபது எண்பது வயதி ருக்க வேண்டும். யார் கல்யாணத்துக்கு வைத்த ஆலங்கொம்பு என்று வயசாளிகளைக் கேட்டால் தெரியும். நீண்ட குளத்தங்கரை முழுக்க ஆல மரங்கள்.

பெரும்பாலும் எல்லா ஆலமரங்களும் மூளி பட்டுத்தான் நின்றன. சாலையில் படர்ந்த கிளைகளை பஸ் போக்குவரத்துக்காகத் தறித்தது. நிச்சயதார்த்தத்துக்குக் கால் நாட்ட ஆலங்கொம்பு வேண்டுமெனத் தறிபட்ட கிளைகள். பால்மரங்களை விறகுக்கு வெட்ட ஆரம்பித்திருக்க வில்லை இன்னும். ஆட்டுக்கு ஒடிபட்ட தழைகள்...

ஆலமரங்களைப் பிளந்து கொண்டு சாலையாஅல்லது சாலைக்கு வரம்பாக ஆலமரங்களா எனத் தோன்றும். சிலமரங்களின் அடிக்கிளை களில் - பசுவோ எருமையோ ஈன்றதும் விழும் நஞ்சுக்கொடியை பனை ஒலைப்பெட்டிகளில் கருப்பட்டிச் சிப்பங்கள் போலக் கட்டிக் கொச்சக் கயிறுகளில் தூக்கிய ஊசலாட்டம்.

சாலைமுட்டித் திரும்பும் வளைவில் நின்ற பெரிய ஆலமரத்தில் ஒரு கிளைகூட வெட்டுப்பட்ட ஊனம் இல்லை. 'எலுங்கொடித்' தொங்கல் இல்லை. பருவ காலங்களில் பொங்கிப் பூரித்துக் காய்த்துப் பழுத்து பல்வகைப் புள்ளினங்களும் பிறந்த வீட்டுச் சீராடலில் குலுங்கும் மரம் ஏனெனில் அம்மரத்தில் பேயாடிக் கொண்டிருந்ததான அச்சம் இருந்தது.

வெள்ளி செவ்வாய் இரவுகளில் பொந்து போல் மடிந்திருந்த அடிமர இடுக்கில் மினுங்கிய அகல்விளக்கு. கழிப்புக் கழித்து வெட்டி முறித்த இளவன்காய், எலுமிச்சம் பழம். சிலசமயம் பெரிய மந்திரவாதங்கள் தடந்த அடையாளங்கள். ஓரடிச் சதுரத்தில் குருத்தோலைத் தட்டுக் காமணம், புதுப்பானைப் பொங்கல், பூசைச்சாமான்கள், கழுத்தறுபட்டுச் செத்துக்கிடக்கும் கறுப்பு விருதுப்பூனை..........

==========================================================================================

நியூஸ் ரூம் 




இந்தியாவின் மிக நீளமான ரயில் சுரங்கப்பாதை; ரயில்வே துறையில் அடுத்த மைல்கல்.  ரிஷிகேஷ்: உத்தரகண்டில் அமைக்கப்பட்டு வரும் நாட்டின் மிக நீளமான ரயில் சுரங்கப்பாதையின் இறுதிகட்ட பணிகளை ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டார்.

பெண் என்பவர் யார்? பிரிட்டன் கோர்ட் விளக்கம்.

சென்னை:நிலத்தின் சர்வே எண் மற்றும் பட்டா விபரங்களை, மொபைல் போன் வாயிலாக அறிவதற்காக, புதிய செயலியை வருவாய் துறை உருவாக்கி வருகிறது.

கேன்சர் நோய் பாதிப்பு : சாவிலும் சத்தியத்தை நிறைவேற்றிய கணவன்

டேராடூன்: குமாவுன் பல்கலை.,யில் ஆள் மாறாட்டம் செய்து பேராசிரியர் பணி நியமனம் செய்தது 20 ஆண்டுகளுக்கு பிறகு வெட்ட வெளிச்சமாகி உள்ளது.  

சண்டிகர்: இறந்து போனதாக அறிவிக்கப்பட்ட ராணுவ வீரர் ஒருவர், 16 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பி வந்த நிகழ்வு குடும்பத்தினரிடையே இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மீரட் : உத்தர பிரதேசத்தில், காதலனுடன் நெருக்கமாக இருந்ததை கணவன் பார்த்து விட்டதால், அவரை காதலன் உதவியுடன் கழுத்தை நெரித்துக் கொலை செய்து, அவர் உடல் மீது உயிருள்ள பாம்பை விட்டு, பாம்பு கடித்து இறந்ததாக நாடக மாடிய மனைவியை போலீசார் நேற்று கைது செய்தனர்.

ராசிபுரம்: நாமக்கல் அருகே பலகோடி ரூபாய் மதிப்புள்ள திமிங்கல எச்சத்தை விற்பனை செய்ய முயன்ற 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

சென்னை: ''மனித உடலில் இருக்கும் மின்சாரமே பட்டாசு ஆலை விபத்திற்கு காரணம்,'' என, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் தெரிவித்தார்.

இந்த மனுவை நீங்கள் எளிமையாக திரும்பப் பெற அனுமதித்தால், அது தவறான முன்னுதாரணமாக மாறிவிடும். எனவே, மனுவை தாக்கல் செய்த வழக்கறிஞர் சந்தீப் டோடிக்கு, 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கிறோம். அதை நான்கு வாரங்களுக்குள் தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தில் செலுத்த வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


================================================================================================

"குமுதம் எஸ் ஏ பி யோசனையின்பேரில் நடத்தப்பட்ட அந்த லைப்ரரி மீட்டிங்கில் குமுதம் எடிட்டோரியலில் வேலை பார்ப்பவர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி உண்டு.

அதிகபட்சம் பத்துப் பேர்.

ஆனால் வரும் பிரபலத்துக்குத் தெரியும். அந்தப் பத்துப் பேரிடம் பேசுவது பத்துலட்சம் பேருக்கு எதிரில் பேசுவதற்குச சமம்.

அதனால்தான் சுஜாதா அந்த லைப்ரரி மீட்டிங்கில் பேசியபோது “என் எதிரில் அமர்ந்திருக்கும் தமிழ்நாட்டுக்கு வணக்கம்.” என்றதோடு, தொடர்ந்து குமுதம் = தமிழ்நாடு என்றும் சொன்னார்."

  குவிகம் - ஏப்ரல் - 'என் குமுத நாட்கள்'

=================================================================================================


அலமாரியில் 
நீட்டிக் கொண்டிருந்த 
சீப்பில் 
வெள்ளி இழைகளாக 
சிக்கி 
தொங்கி  கொண்டிருக்கின்றன 
தடுக்கி விழுந்ததில் 
தவறிப்போன 
பாட்டியின் தலைமுடிகள் 

தூக்கி எறிந்து 
சுத்தம் செய்ய 
மனமில்லாமல் 
மயங்கி நிற்கிறாள் 
அம்மா.

=========================================================================================

முன்பின் தெரியாதவர்கள்கூட, விற்பனைக்காக புத்தகங்கள் கேட்டால் அனுப்பி விடுவாராம் விஜயா வேலாயுதம். விற்று விட்டு ஒழுங்காக பணம் அனுப்புவார்களா? என்று, யாராவது கேட்டால், ”புத்தகம் படிப்பவர் மட்டுமல்ல. புத்தகம் வாங்குபவரும் நிச்சயம் தரமானவர்களாகத்தான் இருப்பார்கள்” என்பாராம்.
சகமனிதர்கள் மீதான அவரது நம்பிக்கை இன்றுவரை தொடர்வது வியப்பாகத்தான் இருக்கிறது.
விற்பனைக்காக புத்தகங்கள் பெற்றுச் சென்ற ஒருவரிடமிருந்து சில மாதங்களாகியும் பணம் வரவில்லை. அலுவலகத்தில் பணம் அனுப்ப நினைவூட்டி கடிதம் எழுதச்சொல்லி ஐயாவிடம் வலியுறுத்தியபோது அவர் எழுதிய கடிதம், ‘இந்த தேதியில் புத்தகங்களை அனுப்பியிருந்தோம். பெற்றுக் கொண்டீர்களா? விபரம் தெரியப்படுத்தவும்’. பணம் எப்போது அனுப்புவீர்கள் என்று ஒரு வார்த்தைகூட அதில் இல்லை.
கடிதம் போய்ச்சேர்ந்த அடுத்த நாளில் விற்பனையாளரின் மனைவியிடமிருந்து போன். கணவருக்கு கிட்னி பெயிலியராகி மருத்துவமனையில் இருப்பதாகவும், மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டு உடல் நலம் தேறி வருவதாகவும் விரைவில் பணம் அனுப்புவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
வேலாயுதம் ஐயா, அலுவலக பணியாளரைக்கூப்பிட்டு சொன்னார், ‘நிச்சயம் அவர்கள் உடல் நலம் பெற்று வந்தவுடன் பணம் அனுப்புவார்கள். அதுவரை அவர்கள் கேட்கும் புத்தகங்களை அனுப்பி வைக்கவும். பணத்தைப் பற்றி பேசி அவர்களை சங்கடப்படுத்த வேண்டாம்.’
வணிகம் என்று வந்துவிட்டால் அதில் மனிதாபிமானத்திற்கோ நம்பிக்கைக்கோ இடமில்லை என்கிற, இன்றைய காலகட்டத்தில்கூட இப்படிப்பட்ட மனிதர்கள்தான் நம்பிக்கையை இன்னும் உயிரோடு வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நாமும் அதில் இணைவோம்.
இணையத்தில் படித்தது  - கந்தசாமி ஸார் பகிர்வு - 28-3-25
============================================================================

இணையத்தில் ரசித்தது...


================================================================================

ஜோக்ஸ் 








94 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை.
    பாட்டுக்கள் அதன் வரிகள், வார்த்தைகள் என நம்முடன் எப்போதும் இணைந்திருப்பவை என்பது உண்மைதான். எனக்கும் யாராவது எதையாவது குறித்துப் பேசினாலும், இல்லை நான் பதில் அளித்து பேசும் போதும், ஒரு வார்த்தைக்கேற்ற பாட்டு என் மனதிலும் ஓடும். அது முக்கால்வாசி பழைய பாட்டுகள். இப்போது வரும் புது பாட்டுக்கள் நான் கேட்பதேயில்லை.

    நீங்கள் சகோதரர் வெங்கட் அவர்களின் தளத்திற்கு சென்றவுடன் உங்கள் மனதில் உதிக்கும் பாடல் "முத்துக்களோ கண்கள்" அவர் தன் தளத்திற்கு வைத்த பெயரான "சந்தித்ததும், சிந்தித்ததும்" என்ற வரிகள்தான் காரணம். அந்தப்பாடல் நன்றாக இருக்கும். "சந்தித்த வேளையில் சிந்திக்கவில்லை தந்து விட்டேன் என்னை" படம் ஊட்டி வரை உறவா? . மனதில் பட்ட என் ஊகம் சரிதானா? நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருத்தம்.

      உங்கள் மனதில் உதிக்கும் பாடல் "முத்துக்களோ கண்கள்" நினைவுக்கு வருவதற்கு அவர் தன் தளத்திற்கு வைத்த பெயரான "சந்தித்ததும், சிந்தித்ததும்" என்ற வரிகள்தான் காரணம்.என வந்திருக்க வேண்டும். திருத்திப் படிக்க வைத்தமைக்கு மன்னிக்கவும்.

      "முத்துக்களோ கண்கள்" பாடல் இடம் பெற்ற திரைப்படம் "நெஞ்சிருக்கும் வரை" இப்போதுதான் சென்று கூகுளில் தேடிப் பார்த்து வந்தேன். இதுவும் சரியா? பாடல் நினைவிருக்கிறது. படம் நினைவில் இல்லை. தவறுதலாக கூறி விட்டேன். நன்றி.

      நீக்கு
    2. கரெக்ட்டாக சொல்லி இருக்கிறீர்கள் கமலா அக்கா.  உங்களுக்கு அந்தப் பாடல் ஊட்டி வரை உறவு என்று தோன்றுவது போல எனக்கு அவ்வப்போது நிறைகுடம் என்று குழப்பும்!

      நீக்கு
    3. நெஞ்சிருக்கும் வரை படத்தில் வரும் பாடல் "முத்துக்களோ கண்கள் பாடல்."

      நீக்கு
    4. சரிதான் கோமதி அக்கா.

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    இன்றைய கவிதை சோகத்தை சொல்கிறது. படித்ததும் மனது கனத்துப்போனாலும், இயற்கை நியதியை மாற்ற முடியுமா?

    நகைச்சுவை அனைத்தும் நன்றாக உள்ளது. நகைக்கடை ஜோக் நன்றாக உள்ளது. நகைக்கடையில் மறுபடியும் ஒரு பர்ஸ் கொடுப்பதே சேமித்து இங்கு கொண்டுவா என்பதை குறிக்கத்தான்.:)) தலைவலி காரணம் அந்த காதலிக்கு புரிந்தால் சரிதான்.இல்லையா...!! . சொர்க்கம் நகைச்சுவை வாய் விட்டு சிரித்து விட்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா அக்கா, அனைத்தையும் ரசித்ததற்கு.

      நீக்கு
  4. மொத்த பதிவுப் பிரிவுகளில் ஒன்றுக்கு மட்டும் ஒருவர் தான் பின்னூட்டமிடப் போகிறார். அவர் யார், எந்தப் பதிவு என்று நாள் முடிவில் பார்த்துக் கொள்ளுங்களேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புரியாத புதிர் என்றாலும் அந்த ஒற்றை நபர் நீங்களாயிருக்கக் கூடும் என்று நினைக்கிறேன்!!  பதிவு நாஞ்சில் நாடன் பகுதி அல்லது விஜயா பதிப்பக வேலாயுதம் சார் பற்றி..

      நீக்கு
  5. வித்தியாசமான வியாழன் பதிவு.
    இப்போதெல்லாம் செய்திகள் கச்சிதமான அளவில் வருகின்றன. //'மனித உடலில் இருக்கும் மின்சாரமே பட்டாசு ஆலை விபத்திற்கு காரணம்,// புதிய தகவல்.
    விஜயா வேலாயுதம் ஆச்சர்யமான அற்புதமான மனிதர். இவருக்கும் கே.ஆர்.விஜயாவின் கணவருக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா?
    ஜோக்குகள் வலையில் வந்தவை.
    படங்கள் இரண்டும் பிரமாதம்.
    வெங்கட் தளத்திற்குச் செல்லும் பொழுதெல்லாம் 'முத்துக்களோ கண்கள்..' பாடல் நினைவுக்கு வரும் காரணத்தை கமலா கூறிவிட்டார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானு அக்கா...   சில சமயம் தேர்தலோ, வேறு ஏதாவதோ விஷயங்களை ஆக்ரமித்துக் கொள்ளும்போது சுவாரஸ்யமான, அல்லது வித்தியாசமான இந்த செய்திகள் குறைவாகவே கிடைக்கும்.  இந்தமுறை காஷ்மீர். 

      விடை சரிதான்.  கமலா அக்காவுக்கும் சொல்லி இருக்கிறேன்.

      நீக்கு
    2. நன்றி சகோதரி. உண்மை மற்ற எதையும் சாதா"ரணமாக்கி", காஷ்மீர் செய்திகள் மனதை "ரணமாக்கி" கதிகலங்க வைக்கின்றன.

      நீக்கு
    3. என்னதான் மாறுதலுக்குப் படிச்சாலும் உள் மனசில் அந்தப் பெண் ஹிமான்ஷி சொன்ன "ஜெய்ஹிந்த்" தான் ஓடிட்டிருக்கு. பார்க்கும்போதெல்லாம் கண்ணீர் வந்துடுது.

      நீக்கு
  6. காக்க காக்க
    கனகவேல் காக்க..

    பதிலளிநீக்கு
  7. ​புத்தகம் பையில் தானே இருக்கிறது. கையில் இல்லையே. அதனால் புத்தி பாட்டில் கவனம் செலுத்துவது தவறாகாது.

    விஜி பதிவை தானே சொல்கிறீர்கள். எனக்கு காண்டாக்ட் லென்ஸ் தான் திரையில் வரும். அந்த கண்கள்!!

    நாஞ்சில் தமிழ் வித்தியாசமானது தான். மலையாளக் கலப்பு கொஞ்சம் தென்படலாம். மற்றபடி சென்னைத் தமிழைக் காட்டிலும் சிறப்பானது.

    //- பெண் என்பவர் யார்? பிரிட்டன் கோர்ட் விளக்கம்.// எதற்கெல்லாம் விளக்கம் தர வேண்டி இருக்கிறது.

    கவிதை சோ சோ தான்.
    சிற்பங்களை கண்டபோது எழுந்த உணர்வு யூரேகா.

    ஜோக்ஸ் நிகழ் காலம் என்றாலும் பலவும் மும்பே வாசித்தவையாக தோன்றுகின்றது.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு விஷயம் சொல்லட்டுமா JKC ஸார்...   உங்கள் மெயில் பார்க்கும்போது, அல்லது கமெண்ட் பார்க்கும்போது சிலசமயம் எனக்கு 'சந்த்ரசேகரா என்கிற பாடல் நினைவுக்கு வரும்.  சஹானா ராகம் என்று நினைவுக்கு வரும்.  தேடிப்பார்த்தால் அப்படி ஒரு பாடல் கிடைக்காது.  இப்போது தேடியதில் சிந்துபைரவியில் ஒரு நாதஸ்வரம் வந்தது!

      //விஜி பதிவை தானே சொல்கிறீர்கள். எனக்கு காண்டாக்ட் லென்ஸ் தான் திரையில் வரும். அந்த கண்கள்!//

      புரியவில்லை!


      ஆம், நாஞ்சில் நாடன் பதிவுகள் வட்டார வழக்கைவிட அந்தப் பகுதியின் வழக்கங்களும் சுவாரஸ்யம்.

      ஜோக்ஸ் - பைண்டிங் கலெக்ஷனுக்கு சென்று விடவா?

      நீக்கு
    2. // நிகழ் காலம் என்றாலும் பலவும் முன்பே வாசித்தவையாக தோன்றுகின்றது. //

      நியாயம்தானே?  நான் ஏற்கெனவே வெளியான ஜோக்ஸைத்தானே எடுத்துப் போடுகிறேன்!  புதிது இல்லையே!

      நீக்கு
    3. https://www.youtube.com/watch?v=2I50BQ8BLJE

      நீக்கு
    4. இல்லை, இது இல்லை.  நான் சொல்வது சந்திரசேகரா...   சினிமா பாடல் இல்லை.  கர்னாடக இசைப் பாடல்.

      நீக்கு
  8. இன்றைய நகைச்சுவைகள் ரசிக்கும்படி இருந்தன.

    விஜயா வேலாயுதம் மனதை நெகிழ்த்திவிட்டார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை...   நன்றி. 

      எடுத்த உடனே ஜோக்ஸுக்கு போய்விட்டீர்கள்!!

      நீக்கு
    2. https://www.youtube.com/watch?v=2I50BQ8BLJE

      நீக்கு
  9. திண்டுக்கல் தனபாலன், கில்லர்ஜி போன்றவர்களைக் காண முடியவில்லையே. அவர்கள் நலமா? மொபைல் திரை சரியில்லாத்தால் துரை செல்வராஜு சார் தளங்களுக்கு வருவதில்லை என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. DD மறுபடி கொஞ்ச நாட்களாய் இணையம் வருவதில்லை.  தேவகோட்டை ஜி இணையம் அவ்வப்போது வருகிறார்.  இங்கும் அவ்வப்போது வருகிறார்!

      நீக்கு
    2. கில்லர்ஜி அவ்வப்போது வந்து கொண்டிருந்தாலும், தற்போது துபாயில் வேலை கிடைத்துச் சென்றிருக்கிறார். செட்டில் ஆனதும் வருவார் என்று நினைக்கிறேன்.

      கீதா

      நீக்கு
    3. ஓ..  மறுபடி துபாய் சென்றிருக்கிறாரா?

      நீக்கு
  10. புரியவில்லை!
    ​கிருஷ்ணர் காண்டாக்ட் லென்ஸ் போட்டிருப்பது போன்று கண்கள் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதாவது, வெங்கட் தளத்தில் விஜியின் பதிவுகளில் வரும் கிருஷ்ணரின் AI படங்கள் பற்றி சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  11. ஆணென்ன பெண்ணென்ன பாட்டு வரிகளைப் பார்த்ததுமே பாடல் டக்குனு மனசுல வந்துடுச்சே! பரவால்லியே கீதா என்று எனக்கு நானே ஷொட்டுப் போட்டுக் கொண்டேன்.

    ஆனா பாருங்க அடுத்ததாகச் சொல்லியிருக்கும் பாடல் ம்ஹூம் நினைவுக்கு வரலை. கூகுளில் போட்டுக் கேட்கிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தப் பாடல் கொஞ்சம் அபூர்வமான பாடல் தான் கீதா. எல்லோரும் கேட்டிருக்க வாய்ப்பில்லை.

      நீக்கு
  12. மனதின் அல்லது மூளையின் செயல்பாடுகள் ஆச்சர்யமானவை.//

    டிட்டோ. ஸ்ரீராம்.

    இப்போ வெங்கட் தளத்துக்கு சென்றால் ஏன் அந்தப்பாடல் நினைவுக்கு வரவேண்டும் என்று நீங்கள் சொல்லுங்களேன்...//

    ஜிம்பிள்! தளத்தின் பெயர்தானுங்கோ!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  13. நாஞ்சில் நம்மூருல்லா...அதுவும் நம்ம கிராமத்துக்கு அடுத்தாப்ல. எங்கள் கிராமத்தின் பெயரும் அவர் கதைகளில் வரும்.

    அவரது கதைகள் வாசிப்பதுண்டு. பிடிக்கும் ரசித்து வாசிப்பேன் என்பதோடு எங்க ஊர் வட்டார வழக்கு அதுவும் ஒரு குறிப்பிட்ட பகுதி எங்க பகுதியில் நாரோயில் நாஞ்சில் கொஞ்சம் வித்தியாசமா இருக்கும் ஒரு சில மனதில் இருக்கும் ஆனால் டக்கென்று வர மறுக்கும்...அதுக்கும அவர் கதைகள் ரெஃபரன்ஸ்!!!!

    இக்கதையும் வாசித்திருக்கிறேன். அழகான கதை...ரொம்பப் பிடித்த கதை. ரசித்த கதை

    எவ்வளவோ குறிப்பிட்டுப் பதிவு எழுத வேண்டும் என்று நினைத்து எடுத்தும் வைத்துக் குறிப்பிட்டும் கோப்புகள் இருக்கு. எழுத வேண்டும் ஆனால் கணினி படுத்தும் பாட்டில் அயற்சி வருகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கமெண்ட்டின் கடைசி வரிகள் நீங்கள் அடிக்கடி உபயோகப்படுத்தும் வரிகள்!! ஹா...ஹா...ஹா...

      நீக்கு
    2. ஹாஹாஹாஹா ஆமாம் ஸ்ரீராம்...

      கீதா

      நீக்கு
    3. கணிணி படுத்தும் பாடா இல்லை இந்த அம்மா படுத்தும் பாடா? எதையும் முடிக்காமல், ஒவ்வொன்றாக டிராப்டில் வைத்து, பிறகு முடிக்கலாம் என்று நினைப்பதைப் பார்த்து கணிணிக்குன்னா அயர்ச்சி வரணும்?

      நீக்கு
    4. நற நற.....ஹாஹாஹா நெல்லை, நான் சொன்னதன் அர்த்தம் அது மறைமுகம்.

      கீதா

      நீக்கு
    5. உண்மையில் மனம் அதில் செல்லவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.  மனம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை பொறுத்தது அது!

      நீக்கு
  14. இக்கதையில் வரும் மனகாவலப்பெருமாள் - பெயர் பார்த்ததுமே எங்கள் ஊர் மனகாவலப்பெருமாள் டாக்டர் இதய நிபுணர் ஆஸ்பத்திரி நினைவுக்கு வரும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே...

      எப்படி, உங்கள் ஊரை ஞாபகப்படுத்தும் பகுதி ஒன்றை பகிர்ந்திருக்கிறேன் பார்த்தீர்களா?

      நீக்கு
    2. ஹாஹாஹா ஸ்ரீராம், அவர் கதைகள் பலவும் எங்க ஊரைச் சுத்திதானே இருக்கும்.

      எங்க கிராமம் பெயர், கிராமத்து அருகில் இருக்கும் பகுதிகளின் பெயர் எல்லாமே பயன்படுத்தியிருப்பார். தேரேகால் உட்பட.

      இதை முன்பும் சொல்லியிருந்த நினைவு. என் மாமா ஹெட்மாஸ்டராக இருந்த வீரநாராயணமங்கலம், நம்ம கிராமத்திலிருந்து 4.5 கிமீ தூரத்தில் தான். நடந்து கூடச் சென்றதுண்டு. ஆனா பாருங்க நம்ம வீட்டுல கதை புஸ்தகம், எழுத்து இதெல்லாம் பேசப்பட்டதில்லையே பாடப் புத்தகம் தவிர...அதனால எங்க ஊர் எழுத்தாளர்கள் பற்றி காலம் கடந்துதான் தெரிந்து கொண்டேன்.

      இவரது, தலைகீழ் விகிதங்கள்தான், சொல்ல மறந்த கதை என்று தங்கர்பச்சான் எடுத்த படம்.

      கீதா

      கீதா

      நீக்கு
  15. தமிழைச் சொல்லிக் கொடுக்க ......./// சரியான மறைமுக நையாண்டி. நானும் இதை ரசித்தேன் வாசிக்கறப்ப!!

    நிறைய இடங்கள் நம்மைச் சிரிக்கவும் வைக்கும். எங்க ஊர் வழக்கு நல்லாத் தெரிஞ்சா ரொம்ப ரசித்து வாசிக்கலாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை. சில இடங்களில் சில பிரயோகங்கள் புரியாது! விளக்கம் தேவைப்படும்.

      நீக்கு
  16. செருப்பாய் உழைக்கிறேன்னு குறிப்பாகச் சொல்கிறாரோ பவன் கல்யாண்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏதோ எப்படியோ ஒரு நல்லது செய்திருக்கிறாரே...   இதை பாஸிடிவில் சேர்த்திருக்கலாமோ!

      நீக்கு
    2. ஆமாம் பாசிட்டிவில் சேர்த்திருக்கலாம்.

      கீதா

      நீக்கு
  17. சென்னையில் ஏசி ரயில் பற்றி நானும் கேள்விப்பட்டேன். நல்லாருக்கும்ல...

    ரயில் சுரங்கப்பாதை ...ம்ம்ம்ம்ம்ம்ம் இப்பகுதியில் இழுத்து மூடிப் போர்த்திக் கொண்டு பயணிக்கலாம். பின்ன இயற்கையை ரசிக்க முடியாதே

    டேராடூன் - அட! ரொம்பச் சீக்கிரம் கண்டு பிடிச்சிட்டாங்களே! சபாஷ்!

    பல செய்திகள் பல விஷயங்களைச் சொல்கின்றன. அடுத்த வரியை சொல்ல மாட்டேனே. ஸ்ரீராம் அது என்ன என்று கணித்துவிடுவார்!!!ஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
  18. சுஜாதா விஷயம் சுவாரசியம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவர் தான் நான் சொன்ன அந்த ஒற்றை நபரும்
      இவர் மட்டுமே பின்னூட்டமிட்டிருக்கிற சுஜாதா பற்றிய
      அந்தப் பதிவும்.

      நீக்கு
  19. உணர்வுபூர்வமான கவிதை ஸ்ரீராம். சூப்பர்

    கீதா

    பதிலளிநீக்கு
  20. விஜயா வேலாயுதம். //

    மனதை நெகிழ்ச்சியடைச் செய்துவிட்டார். எவ்வளவு பெரிய மனசு!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை. இதெல்லாம் இயற்கையாக பிறவியிலேயே வரணும்.

      நீக்கு
    2. //இயற்கையாக பிறவியிலேயே// உண்மை ஸ்ரீராம். எனக்கு சட் என்று உதவும் மனம் வருவதில்லை. 'இரந்தவர்க்கு இல்லையே என்று' என்ற வரிகள் போல, சட் என்று இரந்தவர்க்கு கொடுக்கும் மனம், பயணங்களில் சக வயதானவர்களின் லக்கேஜை நானே எடுத்துக்கொடுத்து உடவும் செயல் போன்றவை எனக்கு இல்லாததையும், பலருக்கு இவை இயற்கையாகவே அமைந்திருப்பதையும் நான் கவனித்திருக்கிறேன். அவனைப் பார்க்கும்போதே சாதாரணனன் என்று தோன்றும், ஆனால் அவன் தன்னிடம் இரப்பவர்க்கு உடனே 2-3 ரூபாயைத் தருவதைக் கவனித்திருக்கிறேன். இதெல்லாம் பிறப்பிலேயே வரும் குணம் என்று நினைக்கிறேன். இதனால்தான் 'குலத்தளவே ஆகுமாம் குணம்' என்று சொன்னார்கள் போலிருக்கிறது

      நீக்கு
    3. நானும் உங்களை போலதான் நெல்லை.  பெரியவர்களைக் கண்டதுமே பணிந்து கால்தொடுபவர்ஜ்களை பார்க்கும்போது ஏன் நமக்கு அப்படி தோன்றுவதில்லை என்று தோன்றும்.  சில நல்ல செயல்களை செய்ய நினைத்து செய்யப் புகுந்தாலும் எனக்கே என்னை செயற்கையாகத் தோன்றும்!  'யாரைக் கவர' என்று தோன்றும்!!

      நீக்கு
  21. இணையத்தில் ரசித்தது - படம் செமை ஷாட். ரசித்துப் பார்த்தேன் எப்படி இவ்வளவு அற்புதமாகப் பொருந்தி வருகிறது என்று.

    அதில் குறிப்பிட்டிருப்பது போன்று குறிப்பிட்ட கோணத்தில் பார்க்கும் போதுதன. அப்படி அதை நுணுக்கமாகக் கவனித்து எடுத்திருப்பதும் திறமை

    கீதா

    பதிலளிநீக்கு
  22. ஜோக்குகள் சிரித்துவிட்டேன்....நடுரே புடுரே....வேலை வெட்டி இல்லாம...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிரிப்பைத் தவிர இதில் சிந்திப்பதற்கும் ஒன்று இருக்கிறது. ஆங்கில வார்த்தைகளே, ஆங்கிலம் தாய்மொழி அல்லாதவர்களால் ஆக்கப்பட்டதால், பெரும்பாலான வார்த்தைகள் பேசுவதுபோல அமைக்கப்பட்டிருக்காது. Eat, Meet, Meat, Wheel, where என்று எதை எடுத்தாலும் உச்சரிப்புக்கும் எழுத்துக்கும் சம்பந்தம் இருக்காது. Bus, Busy, Bye, Buy, But, Bull ... தமிழில் பேசுவதுதான் எழுத்தில் வரும், இதற்கு விதிவிலக்குகள் இலக்கணப்படி அமைக்கவேண்டிய வார்த்தைகள்.

      நீக்கு
  23. விஜயா பதிப்பகம் வேலாயுதம் பற்றிய செய்தி புதுசு. கேட்டதே இல்லை. ஜோக்குகள் பரவாயில்லை ரகம் நாஞ்சில் நாடனின் கதைத் தொகுப்பு ஒண்ணு என்னிடம் இருந்தது. ஆனால் இந்தக் கதை படிச்சதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா..  நாஞ்சில் நாடன் பக்கத்தை நான் மார்க் செய்து வைத்திருக்கிறேன்.  அவ்வப்போது பதிவுகள் விவரம் வரும்.  ஆனால் படிக்காமல் விட்டு விடுவேன்!  சோம்பேறித்தனம்!

      நீக்கு
    2. விகடனில் கூடச் சில ஆண்டுகள் முன்னர் ஒரு தொடர்கதை வந்த நினைவு. என்னிடம் இருப்பது அல்லது இருந்தது தலைகீழ் விகிதங்கள் தொகுப்புத் தான்.

      நீக்கு
  24. தி/கீதா சொல்லி இருப்பதைப் படிச்சப்போ எங்க தாத்தா வீடு (அம்மா வீடு) நினைவுக்கு வந்தது. பெரும்பாலும் புத்தகங்கள்/ எழுத்தாளர்கள் பத்தியே பேசுவோ. அந்த நாட்கள் மறக்க முடியாதவை. அதிலும் தாத்தா நான் ரா.கண்பதி, பரணீதரன் ஆகியோரை எல்லாம் படிப்பது தெரிந்து ரொம்பவே சந்தோஷத்துடன் எனக்கு மேலும் மேலும் தகவல்கள் சொல்லுவார். வ.ரா., எஸ்விவி., வைமுகோ, வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஆரணி குப்புசாமி முதலியார், மணிக்கொடி காலக் கதைகள், ஆனந்தரங்கம்பிள்ளை டைரி என எனக்கு அறிமுகம் செய்வித்தது தாத்தா தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் சின்னப்பையனாக இருந்த பொழுது வீட்டில் இருந்த புத்தகங்களை எடுத்துப் படிக்க வேண்டும் என்று எனக்கு தோன்றியது போல என் மகன்களுக்கோ, மனைவிக்கோ தோன்ற மாட்டேன் என்கிறது.  வாட்சாப் முதல் OTT தளங்கள் வரை அதற்கு காரணமாக இருக்கலாம்.

      நீக்கு
    2. இரண்டு நாட்கள் முன்னர் வந்த சித்தி பெண்ணிடம் பேசும்போது யதேச்சையாக தெய்வத்தின் குரல் பற்றியும், ரா.கணபதி பற்றியும் பேச்சு வந்தப்போ அவளுக்கு ரா.கணபதி யாரெனத் தெரியலை. எனக்கோ ரொம்பவே அதிர்ச்சி. வெளிக்காட்டிக்கலை. ஆனாலும் கல்கியில் ரா.கணபதி அவர்கள் எழுதி வெளிவந்த தொடர்களைப் படிக்காமல் இருந்திருப்பாளானு ஜந்தேகமாவும் இருந்தது. : ( அறிவுக்கனலே அருட்புனலே இது ஒண்ணு போதுமே! புத்தகம் என்னிடம் இருந்தது. ஒரு ஆன்மிகப் பொருட்காட்சியிலே வாங்கினேன்.

      நீக்கு
    3. நானெல்லாம் நாயாய், பேயாய் அலைந்து திரிந்து கௌரவமெல்லாம் பார்க்காமல் புத்தகங்களுக்கு அலைஞ்சிருக்கேன் பாடப்புத்தகங்கள் உள்பட. இப்போக் கூட வெங்கட் வீட்டில் யாரேனும் வரதாகச் சொன்னால் புத்தகங்கள் தான் எடுத்து வரச் சொல்லுவேன். என்ன பிர்ச்னைன்னா முன்னாடி எல்லாம் மாமா அந்தப் பக்கம் போனால் கொடுத்துட்டு வருவார். இப்போ அவங்களே வந்து வாங்கிக்கணும். :( ஆனாலும் புத்தக ஆசை தீரலை. இதனால் இப்போ மனஸ்தாபமே வந்திருக்கு. எழுதினேனே கொஞ்ச நாட்கள் முன்னால். :(

      நீக்கு
    4. நல்லவேளையாக எனக்கு ரா கணபதி என்றால் யாரென்று தெரியும்!  என்னிடம் அவர் புத்தகங்கள் ஒன்றிரண்டு இருக்கிறது.  யாரென்று மட்டும்தான் தெரியும்.  (மறுபடியும் அதிர்ச்சி அடையாதீங்க அக்கா)

      நீக்கு
    5. என் அக்காவும் புத்தகங்கள் நிறைய கேட்டுக் கேட்டு வாங்கி படிப்பார்.  ஆனால் என்ன படித்ததாய் என்று கேட்டால் சொல்லத் தெரியாது.  கொஞ்சம் நினைவு படுத்து என்பாள்.  அது பற்றி ஏதாவது அபிப்ராயம் சொல்லு என்றாலும் சொல்லத் தெரியாது!

      நீக்கு
  25. முழுப்பதிவையும் படிக்கவில்லை., இணையம் எப்போதும் போல பிரச்னை...

    நகைச்சுவை துணுக்குகள் அருமை..

    மகிழ்ச்சி ஸ்ரீராம்..

    பதிலளிநீக்கு
  26. தலைப்பும் பதிவும் அருமை.
    வெங்கட் வலைத்தளம் அழகாய் சிந்திக்க வைத்து விட்டது பாடலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விஷயம், எனக்கு எதற்கெடுத்தாலும் பாடல் நினைவுக்கு வரும் என்பது!

      நீக்கு
    2. எனக்கும் தான் பாடல் நினைவுக்கு வரும். கடைசியாக கேட்ட பாடலும் மீண்டும் மீண்டும் சில நேரம் தொடர்ந்து கொண்டு இருக்கும் நினைவுகளில்.

      நீக்கு
    3. அதுவும் இருக்கும். காதில் விழும் வார்த்தைகள் சம்பந்தப்பட்ட பாடல்கள், படிப்பதில் கண்ணில் படும் வார்திகள் சம்பந்தப்பட்ட பாடல்கள் மனதில் உடனே தோன்றி படுத்தும்.

      நீக்கு
  27. நாஞ்சில் நாடன் அவர்களின் வட்டார எழுத்து கதை பகிர்வு அருமை.

    நியூஸ் ரூம் செய்திகள் நிறைய நன்மை, தீமை இரண்டும் கலந்து இருக்கிறது. உலகம் போகும் போக்கை பார்க்க பயமாகவும் இருக்கிறது.

    சுஜாதா படமும், பகிர்வும் அருமை.

    உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது.

    //புத்தகம் படிப்பவர் மட்டுமல்ல. புத்தகம் வாங்குபவரும் நிச்சயம் தரமானவர்களாகத்தான் இருப்பார்கள்” என்பாராம்.//

    விஜயா வேலாயுதம் அவர்கள் நம்பிக்கை புத்தகம் படிப்பவர், வாங்கி செல்பவர்களை எவ்வளவு காலம் கவனித்து இருப்பார் அவர் சொல்வது சரியாகத்தான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // சுஜாதா படமும், பகிர்வும் அருமை. உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது. //

      பாராட்டுகளுக்கு நன்றி கோமதி அக்கா.

      வியாழக்கிழமை வரும் செய்திகள் பகுதியில் பாசிட்டிவ் எதிர்பார்க்க முடியாது. வித்தியாசம் மற்றும் சுவாரஸ்யம்!

      நீக்கு
  28. இணையத்தில் ரசித்த இரண்டு காட்சிகளை நானும் ரசித்தேன். நகைச்சுவைகளை படித்து ரசித்து சிரித்தேன், நகைகடை பர்ஸ் நொந்து போன உள்ளம் அனுப்பிய நகைச்சுவை என்று நினைக்கிறேன்.
    அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
  29. வணக்கம் சகோதரரே

    இன்றைய கதம்பத்தில் மற்ற பகுதிகளையும் படித்து விபரங்கள் அறிந்து கொண்டேன். செய்திகள் பல இப்படியும் மனிதர்களா என மனதை பாதித்தது. சில பயனுள்ளவை. விஜயா வேலாயுதம் அவர்களின் செயல் பிரமிக்க வைக்கிறது. நாஞ்சில் நாடன் அவர்களின் கதையை (நீங்கள் குறிப்பிட்ட கதையையும்) படிக்கிறேன். சுஜாதா அவர்களின் பகிர்வும் படித்து தெரிந்து கொண்டேன்.

    இணைய படங்கள் அருமை. ரசித்தேன். இன்றைய அத்தனை பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பின்னர் நேரம் கிடைக்கும்போது படித்து ரசியுங்கள். நீங்கள் ஏதோ போட்டி சொன்னீர்களே... அனுப்பி விட்டீர்களா?

      நீக்கு
    2. நல்லது படிக்கிறேன். அதையேன் கேட்கிறீர்கள்..!! அந்தப் போட்டியை இங்கிருந்துதான் பிடித்தேன். கை ந(க)ழுவியதா..! எனத் தெரியவில்லை. அதனால்தான் அன்று கலைமகளை உங்களிடம் விசாரித்தேன்.

      "கலைமகள் கைப்பொருளே.. உன்னை கவனிக்க ஆளில்லையோ.." என்ற பாடலை நான் இப்போது அடிக்கடி மனத்துள் பாடிக் கொண்டிருக்கிறேன். ஹா ஹா ஹா.

      நீக்கு
    3. கொஞ்சம் விவரமாகத்தான் சொல்லக்கூடாதா?  கலைமகள் போட்டி ஒன்றும் சொல்லவில்லையே..  நானா பகிர்ந்தேன்?

      நீக்கு
    4. ஆம். எபியில் மார்ச் மாதம் ஒன்றாம் தேதி சனியன்று நான் படிச்ச கதைப்பகுதியின் இறுதியில் இந்த கலைமகள் போட்டி விபரத்தை யதேச்சையாக கண்டேன். எனக்கு போட்டிகளில் கலந்து கொண்டோ, பத்திரிக்கைகளுக்கு கதைகள், செய்திகள் அனுப்பியோ அவ்வளவாக பழக்கமில்லை. தெரியவும் இல்லை. ஆனால் ஆர்வம் இந்தப்குதியை பார்த்ததும் அவ்வளவு (கடலளவு என்றாலும் மிகையில்லை.) வந்தது. அதன் விளைவு இப்போது நான் பகிர்ந்த பாடலுடன் உலா வருகிறேன். ஹா ஹா ஹா.

      நீக்கு
    5. இது மாதிரி புத்தகங்கள் முடிவு அறிவிக்க மூன்று மாதங்கள் கூட எடுத்துக் கொள்வார்கள். பொறுமையாக இருங்கள். வாழ்த்துகள்.

      அயராமல், சளைக்காமல் இன்னும் முயற்சி செய்யுங்கள். முதல் படியில் ஏறி இருக்கிறீர்கள்.

      நீக்கு
  30. வியாழக்கிழமை எபி பக்கம் போனாலே
    அரட்டை தாங்க என்றார் உங்களுக்கும் எனக்கும்
    தெரிந்த நண்பர் ஒருவர். என்னால் அதை
    ஒத்துக் கொள்ள முடியவில்லை.
    நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், ஸ்ரீராம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கும் எனக்கும் தெரிந்த நண்பர்?  ஃபாதர்ஜி?  ஆனால் இதைப்பற்றி என்னிடமே அபிப்ராயம் கேட்டால் நான் என்ன சொல்ல?  ஆமாம்னு பொய் சொல்லவா?  அல்லது இல்லைன்னு உண்மை சொல்லவா?!

      நீக்கு
  31. என் அனுபவத்தில் வியாழன் பதிவுகளை அரட்டை லிஸ்டில் சேர்க்கத்
    துணியேன். நீங்கள் என்ன எதிர்பார்த்து ஒவ்வொரு வியாழனுக்கும் விவரங்களை சேகரிக்கிறீர்களோ அதை நீங்கள் தான் சொல்ல வேம்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் சேர்க்கும் விவரங்களை எல்லோரும் படிக்க வேண்டும், படித்து விடுவார்கள் என்றுதான் எல்லோரும் போல எதிர்பார்க்கிறேன்.  எல்லோரும் எல்லாவற்றையும் பற்றி பேசுவதில்லை.  ஐந்தாறு பேர்கள்தான் பின்னூட்டம் போடுகிறார்கள்.  மௌனமாக படித்து ஒன்றும் சொல்லாமல் வெளியேறுபவர்கள் நூற்றுக் கணக்கில் இருக்கிறார்கள்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!