19.4.25

தாய்மாமனாக லோக்சபா சபாநாயகர் மற்றும் நான் படிச்ச கதை

 புல்வாமாவில் உயிரிழந்த வீரரின் மகள் திருமணம் தாய்மாமனாக பங்கேற்ற லோக்சபா சபாநாயகர்.  

கோடா:புல்வாமாவில், 2019-ல் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரரின் மகள் திருமணத்தில், தாய்மாமனாக லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா பங்கேற்று சடங்குகளை செய்தார்.  ஜம்மு- - காஷ்மீரின் புல்வாமா பகுதியில், 2019 பிப்., 14-ல் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் சென்ற வாகனம் மீது பாக்., பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர்.  இதில், 40 வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களில், ராஜஸ்தான் மாநிலம் கோடா பகுதியைச் சேர்ந்த ஹேம்ராஜ் என்பவரும் ஒருவர். அப்போது அவரது மகள் ரீனா மீனாவுக்கு, 19 வயது.  ஹேம்ராஜின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற கோடா லோக்சபா தொகுதி எம்.பி.,யான ஓம் பிர்லா, ஹேம்ராஜின் மனைவி மதுபாலாவுக்கு மூத்த சகோதரனாக இருந்து, அவரது குடும்பத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தார்.  கோடா தொகுதியிலேயே தொடர்ந்து மூன்று முறை வென்று எம்.பி.,யாகவும், கடந்த ஆறு ஆண்டுகளாக சபாநாயகராகவும் ஓம் பிர்லா இருக்கிறார்.ஹேம்ராஜ் குடும்பத்துக்கு அளித்த வாக்குறுதியை மறக்காமல், ஆண்டு தோறும் ரக் ஷா பந்தன் தினத்தில் சகோதரனாக, அந்த குடும்பத்துக்கு பரிசுகளை வழங்குவதோடு, தேவையான உதவிகளையும் செய்து வந்தார்.  இந்நிலையில், ஹேம்ராஜின் மகள் ரீனா மீனா, 25, திருமணம், கோடா-பண்டி அருகே உள்ள சங்கோட் கிராமத்தில் நடந்தது. அதில், ஏற்கனவே உறுதி அளித்தபடி, மணப்பெண்ணுக்கு தாய்மாமன் முறையில் பங்கேற்று, அனைத்து திருமண சடங்குகளையும் ஓம் பிர்லா செய்தார்.  ராஜஸ்தானில், திருமணத்தின்போது, 'மைரா' என்ற சடங்கில் மணப்பெண்ணின் தாய்க்கு, அவரது சகோதரர் பரிசுகள் வழங்குவது வழக்கம். இதன்படி, மணப்பெண்ணின் தாயும் ஹேம்ராஜின் மனைவியுமான மதுபாலாவுக்கு சகோதரராக புடவை உள்ளிட்ட பரிசுகளை ஓம் பிர்லா வழங்கினார்.  திருமண நிகழ்வு முழுதும் ஒவ்வொரு சடங்கிலும் ஓம் பிர்லா பங்கேற்றார். முன்னதாக, திருமணத்துக்கு வந்த சபாநாயகருக்கு ஆரத்தி எடுத்து, நெற்றியில் திலகமிட்டு மதுபாலா வரவேற்றார்.

===============================================================================================

சிறுமியின் தொண்டையில் சிக்கிய 5 ரூபாய் நாணயத்தை அகற்ற விடுமுறையில் இருந்தாலும் விரைந்து வந்து கடமையாற்றிய அரசு மருத்துவர்.  அரசு மருத்துவர்கள் பற்றி எதிர்மறை செய்திகளையே படிக்கும் நமக்கு ஒரு மாறுதலான நேர்மறைச் செய்தி.  

=======================================================================================================

சென்னை: அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்சில் திருடு போன ரூ.5 லட்சத்தை மீட்க உதவிய கண்டக்டர், டிரைவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.  தூத்துக்குடியைச் சேர்ந்தவர் செல்வகுமார்,39. இவர் திருப்பதியில் பால்கோவா கடை நடத்தி வருகிறார். செல்வகுமார் திருப்பதியில் இருந்து தூத்துக்குடி செல்வதற்காக அரசு பஸ்சில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவரது கைப்பையில் ரூ. 5 லட்சம் பணத்தை வைத்திருந்தார்.  பஸ் வேலூர் புதிய பஸ் நிலையம் வந்ததும் வாலிபர் ஒருவர் பஸ்சில் ஏறினார். செல்வகுமாரை நோட்டமிட்ட அந்த நபர் பையை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இது குறித்து வேலூர் வடக்கு போலீசில் புகார் அளித்தார்.  திருடியவர் பற்றிய சரியான விபரங்களுடன் போலீசில் தெரிவித்து ரூ. 5 லட்சம் பணத்தை மீட்க, கண்டக்டர் கவுதலை, டிரைவர் யோனா டேவிட் உறுதுணையாக இருந்தனர். அவர்களை விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் மோகன் பரிசு வழங்கி கவுரவித்தார்.

=================================================================================================================================================================

 

நான் படிச்ச கதை (JKC)


நாமக்கல்லிலே பன்னிரண்டு நாள்

கதையாசிரியர்: ஹேமா ஆனந்ததீர்த்தன்

ஹேமா ஆனந்ததீர்த்தன் (1923-1986)  1980 களில் பிரபலமான எழுத்தாளர். கிளுகிளு கதைகள் படைப்பதில் சமர்த்தர்.

ரிசெர்வ் வங்கியில் துணை உதவி மேலதிகாரியாக பணியாற்றியவர். தமிழ், ஆங்கிலம், மராட்டி, ஹிந்தி, கன்னடம் (தாய் மொழி), மலையாளம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர்.

300க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 30க்கும் மேற்பட்ட நாவல்கள் தமிழில் எழுதியுள்ளார்.

பாலியல் சம்பந்தமான கதைகளை அதிகம் எழுதியதால் சர்ச்சைக்கு உள்ளானவர். கண்டித்து வண்ண நிலவன் , கோவி. மணிசேகரன் போன்றோர் எழுத, மணியன், குமுதம் ஆசிரியர் எஸ் ஏ பி, போன்றோர் இவரை ஆதரித்தனர்.

ஹேமா ஆனந்ததீர்த்தன் பற்றி ஜெயமோகன், “ஹேமா ஆனந்ததீர்த்தனின் மொழியாக்கம் சரளமாகவும் நுட்பமாகவும் இருக்கிறது. தமிழில் ஒரு காலத்தில் கிளுகிளு எழுத்துக்காக பெயர் பெற்றிருந்த இவர் இன்று அவரது கன்னட மொழியாக்கங்களுக்காகவே நினைக்கப்படுகிறார்.” முக்கியமாக “சிக்க வீர ராஜேந்திர” என்ற கன்னட நாவல். 

மேலதிக விவரங்களுக்கு

ஹேமா-ஆனந்ததீர்த்தன் 

(1975ல் வெளியான சிறுகதை, கதை, சிறுகதைகள்.காம் லிருந்து பெறப்பட்டது. )

நாமக்கல்லிலே பன்னிரண்டு நாள்

 முன்னுரை

வெள்ளரி பிஞ்சை நாமும் தான் கீறி சாப்பிடுகிறோம், வெயிலுக்கு இதம். ஆனால் அதை விற்பவர் தோல் சீவி கீறி உப்பு மிளகாய் தூள் தூவி கொடுப்பதில் கிடைக்கும்  ருசி தனி. அவர் அவ்வாறு விற்பதால்  விற்பனை அதிகரிக்கிறது.

இந்தக் கதை, ஒரு சின்ன வேண்டுதல், மற்றும் அதை நிறைவேற்றல் பற்றியது, ஆனால் அதை சொல்லும் முறையில் கொஞ்சம் கிளுகிளுப்பேற்றி சொல்வதில்தான் ஆசிரியரின் திறமை வெளிப்படுகிறது. இது போன்ற குறும்பு/குசும்பு  கிளுகிளுப்புகள் குமுதத்திற்கே உரியவை.  

பொங்கலில் நெய், முந்திரி பருப்பு இருந்தால்தான் அது பொங்கல். இல்லாவிட்டால் அது கஞ்சி.

**********************

இருபத்தெட்டு வயதாகியும் வரதன்ஒரு ‘கால்கட்டு’ இல்லாமல் தடிப் பிரம்மசாரியாக நின்றிருந்த போதும், அரையும் குறையுமாக அவனைப் பற்றியும் அவன் ஆபீசிலுள்ள கொங்கணிப் பெண்ணைப் பற்றியும் சம்பந்தப்படுத்தி ரங்கநாயகி காதில் சில விஷயங்கள் விழுந்த போதும் அவள் பட்ட கவலையை யார் அறிவார்கள்? அப்போது அவள் தங்கள் குலதெய்வமான நாமக்கல் நாமகிரித் தாயாரை வேண்டிக் கொண்டாள். “தாயே, நல்லபடியாக எங்கள் வரதனுக்கு ஒரு நல்ல இடத்தில் சீக்கிரமே கல்யாணம் ஆகட்டும். அவனையும் அவன் மனைவியையும் உன் சந்நிதிக்கு வந்து பன்னிரண்டு நாள் சேவை செய்ய வைக்கிறேன். கண் திறந்து பார் தாயே நாமகிரி!”

நாமகிரி தாயார். படம் இணையத்தில் இருந்து

அவள் பிரார்த்தனை சீக்கிரமே பலித்து விட்டது. மைதிலி வரதராஜனின் மனைவியாக வந்தாள். ஸ்ரீரங்கத்துப் பெண். நல்ல அழகி.

“நீ என்னம்மா, என்னைக் கன்ஸல்ட் செய்யாமல் வேண்டிக் கொண்டுவிட்டு இப்போ வந்து தொண தொணக்கறே. ஒரு நாளா ரெண்டு நாளா? பன்னிரண்டு நாள். எப்படி முடியும்? இப்போ ஒண்ணும் நடக்காது. எனக்கு லீவு கிடைக்காது”, என்றான் வரதன்.

“எப்ப கேட்டாலும் இப்படியே சொன்னா எப்படிடா?”

“சரி பார்க்கலாம். நாளைக்கு மானேஜரைக் கேட்டுப் பார்க்கிறேன். எப்படியும் கல்யாணமான பிறகு ஹனிமூனுக்குக் கூடப் போகவில்லை. இந்தச் சாக்கை வைத்துக் கொண்டு இப்போது ஒரு பதினைந்து நாள் போய்விட்டு வந்தால் போச்சு,” என்றான் வரதன், ஓரக்கண்ணால் மைதிலியைப் பார்த்துப் புன்னகைத்தபடி.

“சீ, வாயை அலம்பு, ஹனிமூன் போறானாம் ஹனிமூன். அப்படி யெல்லாம் போய் ஜாலியா இருந்து விட்டு வர்றதில்லைடா இது.”

“என்ன பண்ணணும்கறே பன்னிரண்டு நாளும்?”

“ஒண்ணுமில்லே. தினமும் காலையிலே நரசிம்மதீர்த்தத்துலே குளிச்சுட்டு ஈரத் துணியோடு ஆஞ்சநேயர், கொடிக் கம்பம், நரசிம்மர், தாயார் என்று ஒவ்வொரு பிராகாரத்திலும் பன்னிரண்டு பிரதட்சிணம், நமஸ்காரம் செய்யணும். ஒவ்வொரு பிராகாரத்திலும் அர்ச்சனை செய்யணும். உச்சி கால பூஜை நடக்கும்போது சந்நிதியில் இருக்கணும். ஆரத்தி கொடுத்த பிறகு மூஞ்சியிலே தீர்த்தம் தெளிப்பார்கள். பிறகு பலி சாதம்னு சொல்லி, சின்னதா ஒரு உருண்டை சாதம் கொடுப்பார்கள். அதைச் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு வந்த பிறகு தான் சாப்பிடணும். கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கொண்டு சாயங்காலம் மறுபடியும் அதே மாதிரி குளத்தில் குளிச்சிட்டுப் பிரதட்சிணம், நமஸ்காரம், அர்ச்சனை எல்லாம் செய்துவிட்டு வீட்டுக்கு வரணும். ராத்திரி சாப்பிடக் கூடாது. ரொம்பப் பசிக்கிறாப்பலே இருந்தால் பலகாரம் செய்யலாம். பன்னிரண்டு நாளும் இப்படி இருந்ததுக்கப்புறம் பதிமூணாவது நாள் ஸ்வாமிக்கும் தாயாருக்கும் அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்தால் சேவை முடிஞ்சுது”, என்று ரங்கநாயகி விவரித்தாள்.

“அடேயப்பா! தபசுதான் போலிருக்கு”, என்றான் வரதன்.

நாமக்கல் வந்து சேர்ந்த அன்றைக்கே மூவரும் மாலை கோவிலுக்குள் போனார்கள்.

தாயார் சந்நிதி அர்ச்சகர் எல்லாம் விவரமாகச் சொன்னார். ரங்கநாயகி சொன்னபடியே தான் எல்லாம். ஒன்றை மட்டும். அவள் சொல்ல விட்டு விட்டிருந்தாள். அதை அர்ச்சகர் சொன்னார். “படுக்கையில் படுக்கக் கூடாது. பாய்கூட வேண்டாம். புடவையோ, துண்டோ தரையில் விரிச்சு அதன்மேல்தான் படுக்கணும். தலைக்கு ஏதாவது உசரக் கட்டையோ புஸ்தகமோ வெச்சுக்குங்க”, என்றார். “அப்புறம் தம்பதிகள் சேர்ந்து படுக்கப்படாது. தனித்தனியாகப் படுக்கணும். பெண்கள் ரெண்டு பேரும் ரூம்லே படுத்துக்கட்டும். நீங்க வாசத் திண்ணையிலே படுத்துக்குங்கோ. கண்ட் ரோல் யுவர்செல்ஃப் ஃபர் ட்வெல்வ் டேஸ்,” என்று வரதராஜனைப் பார்த்துக் கூறித் தமது தெற்றுப் பற்கள் தெரியப் புன்னகைத்தார். புன்னகை அவர் சொன்ன விஷயத்திற்காகவும் இருக்கலாம். இங்கிலீஷ் பேசியதற்காகவும் இருக்கலாம். வரதனும் அசடு வழியச் சிரித்தபடி விடை பெற்றுக் கொண்டான்.

“குளத்தில் இறங்கிக் குளிப்பியா? குளிருமே?” என்று வரதன் மைதிலியைக் கேட்டான்.

அவர்கள் இருவரும் வாசல் திண்ணையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். ரங்கநாயகி உள்ளே வீட்டுக்கார அம்மாளுடன் அரட்டையடித்துக் கொண்டிருந்தாள்.

“எனக்குக் காவேரியில் குளிச்சுப் பழக்கம். உங்களுக்குத்தான் ஆறு, குளம் பழக்கம் கிடையாது.”

“பார்க்கலாம், நாளையிலேர்ந்துதானே சேவை ஆரம்பிக்கப் போகிறோம்? இன்னிக்கு நானும் ரூம்லேயே உன்னோடு படுத்துக்கலாம் இல்லையா?” என்று வரதன் விஷயத்திற்கு வந்தான். ரங்கநாயகி வருவதற்குள் இந்த விஷயத்தை முடிவு பண்ணிவிட வேண்டுமென்று அவனுக்கு ஆத்திரம்.

மைதிலி சிரித்தாள்.

“என்ன சிரிக்கிறே? நான் சீரியஸ்ஸா கேட்கறேன்”, என்று முகத்தைச் சுளித்தான்.

“எனக்குத் தெரியாதம்மா. அம்மாவைக் கேட்கலாம்.”

“அம்மாவையும் கேட்கவேணாம் ஒருத்தரையும் கேட்க வேணாம். நாளையிலேந்து தான் நியமம்.”

“உங்களைப் பார்த்தால் எனக்குப் பரிதாபமாக இருக்கு. இப்படியும் கூடவா மனசு அலைய விடுவார்கள் கட்டுப்பாடு இல்லாம?” என்று மைதிலி மறுபடியும் சிரித்தாள்.

“போறும் வாயை மூடு. கன்னத்துலே ஒண்ணு வெச்சேன்னா தெரியுமா சேதி. ரொம்பத்தான் மனசைக் கட்டுப்படுத்தத் தெரிஞ்சவ. உன் வண்டவாளத்தை எங்கிட்டேயே காட்டறியா?” என்று வரதன் கூறிக் கொண்டிருந்த போதே ரங்கநாயகி அங்கே வந்து விட்டாள்.

“என்ன வாக்குவாதம் ரெண்டு பேருக்கும், வாசலில் உட்கார்ந்துகொண்டு?”

“ஒண்ணுமில்லை அம்மா. என்னாலே எல்லா சந்நிதியிலேயும் பன்னிரண்டு பிரதட்சிணம் நமஸ்காரம் பண்ண முடியாதுன்னார். முடியும். எனக்கு சக்தி இல்லாட்டாலும் தாயார் சக்தி கொடுப்பாள்னு சொல்லிக் கொண்டிருந்தேன்,” என்று சமயோசிதமாகப் புளுகினாள் மைதிலி.

பெண்களுக்கே ஆண்களைவிட இது விஷயத்தில் சாதுரியம் அதிகம் என்று நினைத்துக் கொண்டான் வரதராஜன். அதை மறுபடியும் நிரூபித்தாள் மைதிலி. அடுத்த கணமே, “அம்மா. இன்னிக்கி ராத்திரி எங்க ரெண்டு பேருக்கும் சாப்பாடா பலகாரமா? சேவை நாளை யிலிருந்துதானே?”

“பலகாரம்தான். எனக்கும் சேர்த்து மூணு பேருக்குமே ஒரு உப்புமா கிளறிடறேன். நாளைக்குச் சேவை ஆரம்பிக்கிறதுன்னா இன்னி ராத்திரியிலேந்தே நியமம் ஆரம்பிச்சுடணும்.”

அன்று இரவு வரதன் வாசல் திண்ணையில் துண்டை விரித்துப் படுத்தான். பகலெல்லாம் வெய்யில் பட்டுச் சூடேறியிருந்த சிமெண்ட் திண்ணையில் சூடு இறங்கியிருக்கவில்லை. அந்த வெப்பமும், தனிமையினால் உடலில் கிளம்பிய வெப்பமும் துன்புறுத்தத் தூக்கமில்லாமல் புரண்டு புரண்டு படுத்தான்.

மறுநாள் காலை. இருவரும் குளத்திற்குக் குளிக்கப் போனார்கள். வேறு யாரும் இருக்கவில்லை. அவர்கள் இரண்டு பேர் மட்டும் தான். இருவரும் அருகருகே குளத்தில் இறங்கினர்.

“பாசி வழுக்கும். ஜாக்கிரதை!” என்றான் வரதன் – மைதிலி புடவையை அவிழ்த்து ஒரு மடிப்பாக உடுத்திக் கொள்வதை ஓரக்கண்ணால் ஆர்வத்தோடு பார்த்துக்கொண்டு.

“ஆமாம். பன்னிரண்டு நாளும் வழுக்கி விடாமல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்?” என்று கூறிச் சிரித்தாள் மைதிலி.

“பொடி வச்சுப் பேசறியா?” என்றான் வரதன்.

“ராத்திரி தூக்கம் வந்ததா?” என்று மற்றொரு கேள்வியைக் கேட்டாள் மைதிலி. குறும்பு அவள் உதடுகளில் நடனமாடியது.

“உனக்குக் கேலியா இருக்கு. வா வா, சேவை முடியட்டும். அப்புறம் பேசிக்கிறேன்,” என்றான் வரதன்.

இருவரும் குளித்தார்கள். இருவருக்கும் அது புது அனுபவம். மைதிலியின் பொன்மேனியில் நீர்த்திவலைகள் முத்து முத்தாக உருண்டோடும் அழகு அவனுக்குக் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

மைதிலியும் ஈரத்தோடு கூடிய கணவனின் பரந்த மார்பையும், உருண்டு திரண்ட தோள்களையும், குளித்துத் துவட்டிக் கொள்வதற்கு முன் உடலில் ரோமங்கள் படிந்து இருக்கும் அழகையும் பார்த்தும் பார்க்காமலும் கிளர்ச்சி பெற்றுக் கொண்டிருந்தாள்.

“குளிரவே இல்லை. உங்களுக்கு?”

“எனக்கும் தான்… போகலாமா?”

இருவரும் ஒவ்வொரு சந்நிதியாகச் சென்று முறையாகப் பிரதட்சிணம், நமஸ்காரம் எல்லாம் செய்து விட்டு வீடு திரும்பினார்கள். சாப்பிட்டு விட்டு ஓய்வு எடுத்துக்கொண்டார்கள்.

மறுபடியும் மாலையில் அதே மாதிரி. கோவிலில் அதிகமாகக் கூட்டமே இல்லை. “முன்பெல்லாம் சேவை செய்யறவா நிறைய வருவா. இப்போ உங்களை மாதிரி யாராவது ஒண்ணு, ரெண்டு பேர்தான் வரா. பக்தர்களும் குறைஞ்சு போச்சு. காலம் கெட்டுப் போச்சு. தெய்வ பக்தி குறைஞ்சுடுத்து. என்னைப் போல அர்ச்சகாளுக்கெல்லாம் ஜீவனம் ரொம்பக் கஷ்டமாய்ப் போயிட்டுது” என்றார் அர்ச்சகர்.

“ஏழு நாள் ஓடிவிட்டது”, என்றாள் மைதிலி, இருவரும் மண்டபத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தபோது,

“இன்னும் நாலு நாள் பாக்கி”, என்றான் வரதன்.

“நல்லா இருக்கு உங்க கணக்கு. பன்னிரண்டிலே ஏழு போனா நாலு நாளா? இன்னும் அஞ்சு நாள்”.

“நான் ராத்திரி கணக்குச் சொல்றேன். இன்னும் நாலு ராத்திரிகள் ஓடினால் போதும். பன்னிரண்டாவது நாள் சேவை முடிஞ்சுடறது. அன்னிக்கு ராத்திரி நியமம் ஒண்ணும் வேண்டியதில்லை.”

“எப்பப் பார்த்தாலும் இதையே நினைச்சுட்டிருங்கோ!” என்று சிரித்தாள் மைதிலி.

“உனக்கு இந்த நினைப்பே இல்லை என்று நெஞ்சிலே கையை வைச்சு சொல்லு”, என்று அவள் நெஞ்சின் மீது தன் கையை வைக்கப் போனான் வரதன்.

“ஊம். இது கோயில். ஆக்கப் பொறுத்தாச்சு. ஆறப் பொறுக்கணும்,” என்று மைதிலி அவன் கையைப் பற்றிப் பின்னுக்குத் தள்ளினாள்.

பதினொரு நாள் சேவை முடிந்துவிட்டது. திண்ணையில் படுத்திருந்த வரதன் மறுநாள் இரவு மைதிலியுடன் கழிக்கப் போகும் சுகத்தை நினைத்து, நாட்களை எண்ணுவதை விட்டு மணிக்கணக்கில் புகுந்திருந்தான்.

திடீரென்று படபடவென்று மழைத் துளிகள் மேலே விழ ஆரம்பித்ததும் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தான். விரித்துப் படுத்திருந்த வேட்டியையும் தலைக்கு வைத்துக் கொண்டிருந்த டிக்ஷனரியையும் எடுத்துக் கடகத்தில் இடுக்கிக்கொண்டு கதவைத் தட்டினான்.

கதவைத் திறந்தார்கள். வரதன் அறைக்குள் நுழைந்து சுற்று முற்றும் பார்த்தான்.

“எப்படிப் படுத்துக்கறது? மழை நிற்காது போலிருக்கு. நின்னாலும் கூடத் திண்ணையெல்லாம் ஈரமாயிட்டது,” என்றான்.

“இங்கேயே படுத்துட்டால் என்ன?” என்ற மைதிலி மாமியாரியின் முகத்தை நோக்கினாள்.

“மூணு பேரும் இங்கே எப்படிப் படுத்துக்கறது?” என்று ரங்கநாயகி தயங்கினாள். “வீட்டுக்காரரை வேணா சின்ன ரூமைத் திறந்து விடச் சொல்லலாமா?”

“வேண்டாம், அம்மா. அவர்களை உபத்திரப்படுத்த வேண்டாம். மணி ஒண்ணாயிட்டுது. இன்னும் நாலு மணி நேரம். நீங்க அப்படி ஓரமா படுத்துக்குங்கோ. அவர் இப்படி இந்த ஓரமா படுத்துக்கட்டும், நான் நடுவிலே படுத்துக்கறேன். பரவாயில்லை,” என்றாள்.

மூவரும் படுத்துக் கொண்டார்கள். மழை விடாமல் பெய்து கொண்டே இருந்தது. 

ரங்கநாயகி சுவரைப் பார்த்தபடி படுத்திருந்தாள். மைதிலியின் இடுப்பை ஒரு கரம் அணைத்துக்கொண்டது. மைதிலி திடுக்கிட்டாள். கணவனின் கையை அகற்றியபடியே, “வேண்டாமே. இன்னிக்கு ஒருநாள். ப்ளீஸ்”, என்று முகத்தருகே வந்து கிசுகிசுத்தாள்.

“பரவாயில்லை. மைதிலி. கொஞ்ச நேரம். நான் சும்மா படுத்திருக்கேன்”, என்று அவன் கெஞ்சுவது போலக் கேட்டான்.

“அப்படித்தான் சொல்லுவீர்கள். அப்புறம் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக ஜாஸ்தியாயிடும்; உங்களாலே சும்மாயிருக்க முடியாது.” என்றாள் மைதிலி.

அவள் வாய்தான் அப்படிச் சொல்லிற்றே ஒழிய, கைகள் அவன் தோள்களையும் கன்னங்களையும் வருடின.

தொண்டையைக் கனைத்தபடி ரங்கநாயகி இந்தப் பக்கம் திரும்பினாள். வரதன் உருண்டபடியே தன்னிருப்பிடத்திற்குச் சென்று படுத்துக் கொண்டான். அயர்ந்து தூங்குபவனைப்போல.

“இந்த மழை வந்துட்டுது சனியன். என் ஆஸ்துமாவுக்குக் கொண்டாட்டம்தான். இன்னிக்குத் தூக்கம் அவ்வளவுதான்,” என்று கூறியபடியே ரங்கநாயகி படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கொண்டாள்.

மைதிலி தூக்கத்திலிருந்து விழித்தெழுபவள் போல எழுந்திருந்து கவலைப்பட்டாள்.

“நீ தூங்கு. நான் இனி விடிய விடிய இப்படியேதான் உக்கார்ந்திட்டிருப்பேன். இந்தச் சனியன் இப்போ போகாது.” என்று மூச்சு இழுத்துக் கொண்டு பேசினாள் ரங்கநாயகி.

மூன்று பேருக்குமே தூக்கமில்லாமல் கழிந்தது அந்த இரவு.

மறுநாள். வரதனும் மைதிலியும் குளிப்பதற்காகக் குளத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்கள். கோவில் வெளிப் பிராகாரத்தில் அவர்கள் நடந்து கொண்டிருந்தபோது, மதில் சுவரின் மீது வரிசையாக ஏழெட்டுக் குரங்குகள் வந்து கொண்டிருந்தன.

“இவ்வளவு குரங்குகள் நாம் ஒருநாள் கூடப் பார்க்கலை இல்லையா?” என்றாள் மைதிலி கணவனிடம் அவைகளைச் சுட்டிக் காட்டி.

படம் உதவி இணையம்  

வரதன் அவைகளைப் பார்த்து, ‘உஷ்’ என்று சீட்டியடித்தான்.

அடுத்த நிமிடம் ஒன்றன் பின் ஒன்றாக அந்தக் குரங்கள் சுவரிலிருந்து குதித்து அவர்கள் எதிரே வந்து வழியை மறைத்துக்கொண்டு உட்கார்ந்து கொண்டன.

“உஸ். போ,” என்று வரதன் கையை ஓங்கினான்.

“குர்ர்ர்.” என்று அவை கோரமாகப் பல்லைக் காட்டிக் கொண்டு உறுமின.

“ஐயோ எனக்குப் பயமாயிருக்கு. நீங்க ஏன் அதுங்களைப் பார்த்து விசிலடிச்சிங்க?” என்று மைதிலி அவனோடு ஒட்டிக்கொண்டாள்.

“பயப்படாதே, போயிடும்,” என்று அவளுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு. “தே, போறயா இல்லையா?” என்று கீழேயிருந்த கல்லையெடுத்து எறிவது போல் பாசாங்கு செய்தான்.

அடுத்த நிமிடம் ஒரு பெரிய குரங்கு ‘சங்’ கென்று அவன் மீது பாய்ந்துவிட்டது. இன்னொரு குரங்கு மைதிலியின் புடவையைப் பிடித்து இழுக்க ஆரம்பித்தது.

“ஐயோ, குரங்கு! குரங்கு!” என்று மைதிலி வீறிட்டாள்.

நல்ல வேளையாக, அந்த வழியாக அப்பொழுது வந்து கொண்டிருந்த  கோவில் மடைப்பள்ளிக்காரர் ஒரு தடியைக் கொண்டு வந்து விரட்டவும் குரங்குகள் ஓடிப்போய்விட்டன.

மைதிலியின் நெஞ்சுப் படபடப்பு வெகுநேரம் அடங்கவே இல்லை.

அன்று மாலை மங்கள ஆரத்தி யெல்லாம் முடிந்து, மறுநாள் அபிஷேகத்திற்கான ஏற்பாடுகளைப் பற்றி அர்ச்சகருடன் மண்டபத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள் மைதிலி, வரதன், ரங்கநாயகி மூன்று பேரும்.

பேச்சோடு பேச்சாக அர்ச்சகர் சொன்ன ஒரு விஷயம், “ஒரு நாள் பாருங்கோ, சேலம் கலெக்டர் வந்திருக்கார். தாயாரைத் தரிசித்து ஒரு அர்ச்சனை பண்ணிடுங்கோன்னு தர்மகர்த்தா சொன்னார். அப்போ நான் குளிச்சிருக்கலை. தாயார் சந்நிதிக்குப் போகப்படாது. தர்மகர்த்தாவிடம் சொன்னேன். அஞ்சு நிமிஷத்திலே குளிச்சிட்டு வந்துடறேன்னு சொன்னேன். அதெல்லாம் வேண்டாம்னுட்டார். கலெக்டருக்கு நேரமில்லையாம். ஈரோட்டுக்குப் போகணுமாம். சீக்கிரமாக ஆகட்டும், பரவாயில்லை என்றார். சரின்னு அவர் சொன்னபடியே அப்படியே விழுப்போட மனசுக்குச் சமாதானமில்லாமலே அர்ச்சனையைப் பண்ணிக் கலெக்டரை அனுப்பிச்சுட்டு கர்ப்பக்கிரகத்தின் கதவை மூடப் போற சமயம் தரையிலே என்னமோ பளபளத்தது. தாயாரோட மூக்குத்தி மாதிரி இருந்தது. என்னடாது மூக்குத்தி எப்படிக் கீழே விழுந்தது என்று அதை எடுக்கப் போனேன். தொட்டேனோ இல்லியோ, கையிலே பொட்டுனு போட்டுட்டது, பெரிய செந்தேள்! தாயார் கை மேலே ‘பனிஷ்மெண்ட்’ கொடுத்துட்டா. மூணு நாள் விரலை அசைக்க முடியலே.”

‘குரங்கு என் மேலே விழுந்து ஏன் மிரட்டியது என்று இப்போ புரியுது’ என்கிற அர்த்தத்திலே வரதன் மைதிலியைப் பார்த்து அசட்டுச் சிரிப்புச் சிரித்தான்.

‘நல்ல வேளை, இவர் அம்மா இடைஞ்சல்னு நினைச்சோம். அவர் இல்லாம இருந்திருந்தா இன்னும் என்ன அபசாரம் பண்ணியிருப்போமோ. குரங்கு நம்மைக் கடித்துக் குதறியிருக்கும்’, என்று மைதிலி நினைத்துக்கொண்டாள்.

‘ஆஸ்துமான்னு பொய் சொல்லி இவர்களை ராத்திரி பூரா நெருங்க விடாம கண்காணிச்சேனோ, தப்பித்தார்களோ! இல்லாட்டா என்ன அசம்பாவிதம் நடந்திருக்குமோ’, என்று ரங்கநாயகி தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

– 08-05-1975

பின்னுரை

இக்கதையின் தொடர்பாக இரண்டு எண்ணங்கள் உதித்தன.

ஆலய குருக்கள் விழுப்புடன் கர்ப்ப கிரகத்தில் பூஜை செய்ததிற்கு தண்டனை …..தேள் கொட்டி விரல் அசைக்க முடியாமல் மூன்று நாட்கள் கடும் அவதி.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

 “மனம் ஒரு குரங்கு” என்று சாதாரணமாக கூறுவதை உருவகமாக கிளுகிளுப்பு  எண்ணங்கள் குரங்குகளாய் வருவதாய் கற்பிக்கிறார் ஆசிரியர். மதில் மேல் அமர்ந்து இருந்த அவற்றை விசில் அடித்து அழைத்தான்  வரதன். அதன் விளைவு குரங்குகள் மைதிலியின் புடவையை இழுத்தன. நடுவில் அம்மா ரங்கநாயகி போன்று கோயில் ஊழியர் தடியுடன் வந்து அக்குரங்குகளை விரட்டுகிறார்……சரியான உருவகம். 

தவறு செய்யத் தூண்டுவது குரங்கு புத்தி. அதை தடுப்பது மனவலிமை. 

45 கருத்துகள்:

  1. அரசு மருத்துவர். அரசு மருத்துவர்கள் பற்றி எதிர்மறை செய்திகளையே படிக்கும் நமக்கு ஒரு மாறுதலான நேர்மறைச் செய்தி. //

    உண்மையிலேயே நல்ல செய்தி. அந்த மருத்துவர்களை வாழ்த்துவோம். பார்க்கப் போனால் அரசு மருத்துவர்கள் நல்லவர்கள் நிறைய இருந்தாலும் பெரும்பாலும் எதிர்மறை செய்திகளே பெரிதாக்கப்படுவதால் மாஸ் சைக்காலஜியில் எதிர்மறைதானே அதிகம் பதியும். அதனால்தான் அரசு மருத்துவர்கள் பற்றியும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  2. இக்கதை முன்பு ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் என்று நினைக்கிறேன், இல்லை என்றால் ஜெ கே அண்ணா நான் படிச்ச கதை ஒன்றில் கீழே இக்கதையையும் சுட்டியாகக் கொடுத்திருந்தாரோ இல்லை முன்பு வந்த கதையா? வேறு யாரேனும் பகிர்ந்து என்று நினைவில்லை ஆனால் இக்கதை பற்றி அப்போது கருத்துகள் பரிமாற்றம் நடந்த நினைவு நன்றாக இருக்கிறது.

    லிங்க் கிடைக்கிறதா என்று பார்க்கிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் நினைவுக்கு எட்டிய வகையில் இங்கு நான் படித்த கதை பகுதியில் ஜெ கே அண்ணா தொடர்ந்து எழுதி வருகிறார். தன் பின் ஜீவி அண்ணா இடையிடையே எப்போதாவது பகிர்வதுண்டு. நினைவை ஒரு அலசு அலசியதில்.....அப்படி இக்கதையை ஜீவி அண்ணா சொல்லிப் பகிர்ந்த நினைவு.,

      தேடி எடுக்கிறேன் எடுத்து லிங்க் தருகிறேன்

      கீதா

      நீக்கு
  3. கதையை நான் முன்பே வாசித்திருக்கிறேன். கதை நன்றாக இருக்கிறது.

    கதையில் வரும் கருத்துகளுக்கு எனக்குத் தனிப்பட்ட முறையில் வேறு கருத்து என்றாலும் (இறைவன் சம்பந்தம்பட்ட பொதுவாக சமூகத்தில் நிலவும் கருத்துகள்) பொதுவாக சமூகத்தில் நிலவும் நம்பிக்கைகளைக் கொண்டு அழகாகப் புனையப்பட்ட கதை.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. ஹேமா ஆனந்ததீர்த்தன் அவர்களின் கதைகள் கிளு கிளுப்புக் கதைகள் என்று சொல்லப்பட்டாலும், இதில் அப்படி ஒன்றும் தெரியவில்லை அண்ணா. அடக்கியே வாசித்திருக்கிறார். ஒரு வேளை கோவில், இறை நம்பிக்கைகள் வந்திருப்பதாலோ என்னவோ!!!

    அது இயல்பான ஒன்றுதானே. இயற்கை உணர்வுகள்தானே

    கீதா

    பதிலளிநீக்கு
  5. ஆமாம். இயற்கையான உணர்வுகள் இயல்பாகவே வெளிப்பட்டிருக்கின்றன.  சில தற்செயல்களைக் கூட தண்டனையாக கருதும் பக்த மனோபாவம்!

    பதிலளிநீக்கு
  6. ஹேமா ஆனந்ததீர்த்தனுக்கும் துர்வாசருக்கு நடந்த எழுத்துப்போர் அந்தக் காலத்தில் பிரபலம்.  நானும் சொல்லிக் கொண்டே இருக்கிறேன்.  இன்னும் பகிரவில்லை.  முதலில் தேடி எடுக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ! பகிருங்கள் ஸ்ரீராம்...அது என்னன்னு தெரிஞ்சுக்க ஆர்வம்

      கீதா

      நீக்கு
    2. ஸ்ரீராம், இந்தக் கருத்தை அப்பவும் சொல்லியிருக்கீங்க. இப்ப நினைவோடு தேடுங்க...அந்த மேட்டரை

      கீதா

      நீக்கு
  7. தவறு செய்யத் தூண்டுவது குரங்கு புத்தி. அதை தடுப்பது மனவலிமை. //

    டிட்டோ. அண்ணா சொல்லியிருக்கும் இந்தக் கருத்துதான் எனக்கும் அதாவது....

    கதையில் சொல்லப்படு ம் உணர்வுகளைத் தவறு என்று சொல்வதற்கில்லை. சக்தி தண்டனை கொடுக்காது. நல்ல வழிகளைத்தான் புலப்படுத்தும் அந்த மாபெரும் சக்தி. நம் மனதை எவ்வள்வுக்கெவ்வளவு சமப்படுத்திக் கொண்டு அழுக்குகளை அகற்றிக் கொண்டு அந்த சக்தியோடு நாம் எவ்வளவுக்கு எவ்வளவு நெருங்கி உணர்கிறோமோ அப்போது அது காட்டும் வழிகள் நமக்குப் புலப்படும். புரிந்து கொள்வோம்.

    ஆனால் மனித மனம் அலைபாய்வதால்தான் அது காட்டும் வழிகளைப் புரிந்து கொள்ளாமல் எங்கெங்கோ தேடி அலைகிறோம்...

    கீதா

    பதிலளிநீக்கு
  8. https://engalblog.blogspot.com/2024/09/blog-post_28.html

    இதோ இதுதான் சுட்டி.

    அங்கு நாம் என்ன கருத்துகள் கொடுத்திருக்கிறோம்.....இப்போது இதே கதையை வாசிக்கும் போது நம் கருத்து என்ன என்பதையும் பார்த்துக் கொள்ளலாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. கருத்துகளை நேரடியாகப் பார்க்க முடியாமல் பெட்டியைத் திறந்து திறந்து பார்க்க வேண்டியது சற்று சிரமமாகத்தான் இருக்கு! ஹிஹிஹி

    பாவம் ஸ்ரீராமும் கௌ அண்ணாவும் அதைச் சரி செய்ய என்ன அவஸ்தைப் படுகிறார்களோ...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேஜிஜி தான் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்.  நான் ஓரமாக நின்று பலனை அனுபவிக்கக் காத்துக் கொண்டிருக்கிறேன்!

      நீக்கு
  10. வேறு யார் தி.கீதா சகோ?

    இதே கதையை இதே பகுதியில்
    ஏற்கனவே நான் தான் பகிர்ந்து கொண்டிருந்திருக்கிறேன். அதனால் என்ன? இப்பொழுதிய வாசிப்பில் இப்பொழுதிய வாசகர்கள் கண்ணோட்டத்தில் சொல்லும் கருத்துக்கள் மாறுபடலாம் இல்லையா?

    தங்கள் ஞாபகசக்தி அற்புதம்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், எனக்கும் கீதாவின் ஞாபக சக்தி ஆச்சர்யமூட்டுகிறது!

      நீக்கு
    2. ஆமாம் ஜீ வி அண்ணா. அதே சமயம் நம் கண்ணோட்டமும் கூட ஒரு சில கதைகளை வெவ்வேறு காலகட்டத்தில் வாசிக்கும் போது மாறுபடவும் வாய்ப்புண்டு. எல்லாமே நம் மன ஓட்டங்கள், மனதில் அவ்வப்போது மாறுபடும் எண்ணங்கள் அதன் வலிமை என்பதன் அடிப்படையில்

      கீதா

      நீக்கு
    3. ஜீவி அண்ணா அண்ட் ஸ்ரீராம், பொதுவாகவே நான் வாசிப்பதை ஆழ்ந்து வாசிப்பவள். (இது படிப்பில் இருந்திருந்தால் கணக்கும் வசமாகியிருந்திருக்கும் ஹிஹிஹிஹி) அப்போதே எழுத்தும் வாசிப்பிலும் கற்பனை உலகில் சஞ்சரிப்பதில்தான் தான் என் ஆர்வம் இருந்தது. ஆனால் அது அப்போது நிறைவேறவில்லை...

      பொதுவாக நான் வாசிப்பதை ஆழ்ந்து வாசிப்பவள். அப்படி வாசித்திருந்தேன் என்றால் மறப்பதில்லை. ஆனால் சில சமயம் மேலோட்டமாக வாசித்திருந்தால் நினைவில் இருப்பது சற்று சிரமம்.

      அதனால்தான் எனக்கு எழுதுவதிலும் நேரம் எடுக்கிறது.

      அப்படி கல்லூரி படித்த சமயத்தில் என் பாட்டி, அப்பாவின் அம்மா அப்போது சந்தா கட்டி வாங்கி வந்த அமுதசுரபி, கலைமகள், கல்கி இப்படி ஏதோ ஒன்றி பரிசு பெற்ற கதை என்று வெளியாகியிருந்த, நான் வாசித்த என் மனதில் பதிந்த கதை ரா சு நல்லபெருமாள் அவர்களின் கதை. நம்பிக்கைகள். இப்போது அதை மீண்டும் வாசிக்கவும் அவரது கதைகளை வாசிகக்வும் தேடுகிறேன் இணையத்தில் இல்லை. இன்னொரு கதை மயக்கங்கள் எனும் கதை அதுவும் வாசிக்க வேண்டும் என்று ஆவல்.

      கீதா

      நீக்கு
  11. இன்று காலை நான் வந்து கமெண்ட் போட்டபோது Reply Option காட்டவில்லை.  இப்போது காட்டுகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடாடா மறுபடியும் ரிப்ளை ஆப்ஷன் வேலை செய்யவில்லையே..

      நீக்கு
    2. இப்போ முயற்சி செய்து பார்க்கவும்.

      நீக்கு
  12. கௌ அண்ணா, ப்ளாகர் தள அமைப்பை உருவாக்கிய போது ஒரு ஹெச்டிஎம்எல் வடிவம் இருந்திருக்கும். அது செட்ட்டிங்ஸில் உள்ளே போனால் மேலே இருக்குமே. உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

    முன்னர் எங்கள் தளத்தை உருவாக்க்ய போது பிரச்ச்சனை வந்த போது டிடி கொடுத்த ஒரு பரிந்துரை. அந்த ஹெச் டி எம் எல்லை சேமித்து வைக்கச் சொல்லியிருந்தார்.

    ஒரு வேளை நீங்கள் சேமித்து வைத்திருந்தீர்கள் என்றால் அதை எடுத்துப் போட்டுப் பாருங்க.

    இது தளத்தின் வடிவமைப்பு ஹெச்டிஎம்எல்லில் நடந்த கோளாறாகத் தெரிகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  13. ​நான் ஜீவி சார் இக்கதையை ஏ பி யில் விமரிசத்ததை மறந்து விட்டேன். தவறை சுட்டியத்திற்கு நன்றி. ஒரே கதை இருவர் கண்ணோட்டம் என்று வைத்துக்கொள்ளுங்கள். கீதா ரங்கன் அவர்களுக்கு நன்றி.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெ கே அண்ணா, தவறே அல்ல. ஏன் இப்படி நினைக்கிறீங்க.

      ஒவ்வொருவரின் கண்ணோட்டமும் ஒவ்வொரு மாதிரி இருக்கும் இல்லையா? இப்ப பாருங்க அன்று நாம் கொடுத்த கருத்துகளுக்கும் இன்று நாம் கொடுக்கும் கருத்துகளும் கூட கொஞ்சம் வித்தியாசப்படலாம். எனவே இதில் தப்பு சரி என்ற பொருளே தேவையில்லை, அண்ணா.

      நானுமே கூட இதே கதையை என் கோணத்தில் சொல்லலாம். ஏனென்றால் கதையில் சொல்லப்பட்டிருக்கும் நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டது என் எண்ணம். ஆனால் கதையை கதையாகத்தான் பார்க்க வேண்டும்.

      அதனால்தான் நான் இங்கு குறிப்பிட்டேன் எல்லோரும் அப்போது தாங்கள் சொன்னதற்கும் இப்போதும் எண்ண ஓட்டத்தில் மாறுபாடுகள் இருக்கா என்றும் பார்த்துக் கொள்ளலாம் என்பதாஅல்.

      இல்லைனா உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் சொல்லியிருப்பேன் ஜெ கே அண்ணா.

      இலக்கியத்தில் ஈடுபாடு கொண்ட ஜீவி அண்ணாவும் இதைத் தவறாக எடுத்துக் கொள்ளமாட்டார். அவரைப் பொறுத்தவரை எல்லோரும் இங்கு எழுத வேண்டும் என்றே நினைக்கிறார்.

      எனவே தவறு என்றெல்லாம் நினைக்கவே வேண்டாம். எல்லோருக்கும் அவரவர் கோணத்தில் கருத்தைச் சொல்லும் உரிமை சுதந்திரம் உண்டு.

      கீதா

      நீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள்.

    இன்னமும் எபி சரியாகவில்லையே என்ற கவலை வருகிறது. இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை. இன்றைய கதை பகிர்வும் அருமை. ஆரம்ப வரிகளை படித்துக் கொண்டுப் போகையில் இந்தக்கதையை முன்பே இங்கு பகிர்ந்து படித்திருக்கிறேன் என்ற நினைவு வந்தது. ஜீவி சகோதரர் பகிர்ந்த நினைவு வருகிறது. மற்றொரு முறை பிறகு படிக்கிறேன். இதற்கு சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்கள் தந்த முன்னுரை, பின்னுரை அனைத்தும் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  15. சிறுகதைகள்.காமை நாம் பார்த்துவந்தால் அங்கு, யாரெல்லாம் போட்டிகள் அறிவித்திருக்கிறார்களோ அவை எல்லாம் அங்கும் அறிவிக்கிறார்கள். பங்கு பெற நினைப்போருக்காக ... இரு போட்டிகளின் முடிவுத் தேதி முடிந்துவிட்டது

    https://www.sirukathaigal.com/

    இங்கு போனால் வலப்பக்கம் போட்டிகளைப் பற்றிப் பார்க்கலாம்

    கீதா

    பதிலளிநீக்கு
  16. முதல் செய்தியில் கோடா என்று குறிப்பிடப்பட்டிருக்கும் ஊரின் பெயர் கோட்டா.
    விடுமுறையை ரத்து செய்து குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவரை பாராட்டலாம்.

    பதிலளிநீக்கு
  17. ஹேமா ஆனந்ததீர்த்தனோடு கோ.வி.மணிசேகரன் குமுதத்திற்காக உரையாடிய பொழுது ஹே.ஆ.வை கோ.வி., காமநாயகன் என்று சாடினார்., அதை முன்னவர் ஈசியாக எடுத்துக் கொண்டார்.
    இந்தக் கதையை ஏற்கனவே படித்திருக்கிறோமே என்று நினைத்துக் கொண்டேன். ஜீ.வி. சார் பகிர்ந்திருக்கிறாரா?

    பதிலளிநீக்கு
  18. ​எப்படி சார் கருத்துப்பெட்டியையும் பதிவுடன் இணைத்தீர்கள்?
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போ முன் போல மாற்றியிருக்கிறேன்.

      நீக்கு
    2. அண்ணா இப்ப வொர்க் ஆகுது! ஹே ஹே ஹே!!

      கீதா

      நீக்கு
  19. ஹேமா ஆனந்த தீர்த்தன் குதத்தில் எழுதியிருந்த ஒரு சிறு கதையை என்னால் மறக்க முடியவில்லை. ஒரு இளம் தம்பதியரில் கணவனின் கைகளை மிகவும் பிடிக்கும். ஒரு முறை அவர்கள் வீட்டு முற்றம் அடைத்துக் கொண்டுவிட, அதை சுத்தப்படுத்திய கணவனின் கை இன்ஃபக்ஷனாகி புண்ணாகி விடும். அது சரியாகி அவன் கை பழைய நிலைக்கு திரும்பும்வரை மனைவி தவித்து விடுவாள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக மனைவி திடீரென்று இறந்து விட, அவள் உடலுக்கு கொள்ளி போட்ட அவள் கணவன் எரிந்து கொண்டிருக்கும் சிதையை கைகளாள் அள்ளி விடுவான். அவள் இருந்தவரை தன்னுடைய கைககளைத்தானே கொண்டாடினாள், அவளோடு என் கைகளும் எரிந்து விட்டன, இப்போதுதான் கட்டைப் பிரிக்கப் போகிறேன், கைகள் என்ன நிலையில் இருக்கின்றன என்பது இனிமேல்தான் தெரியும் என்று கணவன் நினைத்துக் கொள்வதாக கதை முடியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​எழுத்து பிழையை சரி செய்ய முடியுமானால் செய்யவும். விவரம் விபரீதம் ஆகிறது. //ஹேமா ஆனந்த தீர்த்தன் குதத்தில் எழுதியிருந்த//
      போட்டோ கிடைக்கவில்லை.
      Jayakumar

      நீக்கு
    2. எழுத்துப்பிழை மோசமாகத்தான் இருக்கிறது. ஆனால் கைபேசியில் திருத்தும் option இல்லை. இப்போது என்ன செய்வது? ஸ்ரீராம் உதவுவாறா?

      நீக்கு
    3. பின்னூட்டத்தில் எழுதி இருப்பதை எழுதியவராலும் சரி, எங்களாலும் சரி எடிட் செய்ய முடியாது.  எழுதியவரே பழைய பின்னூட்டத்தை அழித்து விட்டு புதுசு போடுவது மட்டும்தான் வழி!   பானு அக்கா...  அறிய மாட்டீர்களா இதை!

      நீக்கு
    4. நான் சொல்ல வந்தேன் ஸ்ரீராம் சொல்லியிருக்கிறார்.

      அக்கா, இந்த கமென்டை அப்படியே காப்பி செய்து கொள்ளுங்கள், அப்புறம் இங்கு அக்கருத்தை அழித்து விட்டு, காப்பி செய்ததை பதியுங்கள். பதிந்து விட்டு, அதில் செய்ய வேண்டிய திருத்தங்களைச் செய்து விட்டு பப்ளிஷ் கொடுங்கள்.

      இல்லை என்றால் அதே கமென்டை கருத்துப் பெட்டியில் காப்பி பேஸ்ட் செய்து ....கரெக்ஷன் செய்து விட்டு பழையதை அழித்துவிடலாம்.

      இல்லை என்றால் கருத்தில் ஏற்பட்ட பிழைகள் திருத்தி வாசிகக்வும் என்று மீண்டும் ஒரு கருத்தைப் பதியலாம்.

      மொபைலிலும் செய்ய முடியும்.

      மற்றபடி மொபைலாக இருந்தாலும் சரி, கணினியாக இருந்தாலும் சரி கருத்து வெளியான பிறகு எடிட் செய்ய முடியாது.

      கீதா

      நீக்கு
    5. அழிக்கவும் முடியவில்லை. சே!

      நீக்கு
  20. நாமகிரித்தாயாரின் அழகான படத்திற்கு நன்றி. பெங்களூரிலிருந்து திருச்சி செல்லும் பொழுதெல்லாம் நாமக்கல்லில் நிறுத்தி நரசிம்மர், நாமகிரித்தாயார்,ஆஞ்சனேயர் எல்லோரையும் தரிசித்து விட்டு செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். செயல்படுத்த முடிந்ததில்லை. அதுவும் நாமகிரித் தாயார் கணித மேதை ராமானுஜத்திற்கு அருளியவள் அல்லவா?

    பதிலளிநீக்கு
  21. ஹேமா ஆனந்த தீர்த்தனின் நல்ல புகைப்படம் கிடைக்கவில்லையா?

    பதிலளிநீக்கு
  22. இந்தக் கதையை இந்தத் தளத்தில் ஏற்கனவே படித்திருக்கிறேன். மீள் பதிவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை, மீள் பதிவெல்லாம் இல்லை. முன்பு ஜீவி அண்ணா, நான் படிச்ச கதை - இதை தன் கோணத்தில் பகிர்ந்திருந்தார்.

      இப்ப ஜெ கே அண்ணா தன் பாணியில் தன் கோணத்தில் இக்கதையை பகிர்ந்திருக்கிறார்.

      அவ்வளவுதான்.

      கீதா

      நீக்கு
  23. குழந்தையை காப்பாற்றிய டாக்டருக்கு பாராட்டுகள்.

    கதை ஏற்கனவே பகிர்ந்து படித்ததுதான்.

    பதிலளிநீக்கு
  24. விடுமுறை நாளாக இருந்தாலும் குழந்தைக்கு வைத்தியம் செய்ய வந்த மருத்துவர் சேவைக்கு பாராட்டுக்கள் , வாழ்த்துகள்.

    கதை முன்பு படித்த நினைவு இருந்தது. தாயார் படம் அருமை.

    பதிலளிநீக்கு
  25. ஹேமா ஆனந்த தீர்த்தன் குமுதத்தில் எழுதியிருந்த ஒரு சிறு கதையை என்னால் மறக்க முடியவில்லை. ஒரு இளம் தம்பதியரில் கணவனின் கைகளை மிகவும் பிடிக்கும். ஒரு முறை அவர்கள் வீட்டு முற்றம் அடைத்துக் கொண்டுவிட, அதை சுத்தப்படுத்திய கணவனின் கை இன்ஃபக்ஷனாகி புண்ணாகி விடும். அது சரியாகி அவன் கை பழைய நிலைக்கு திரும்பும்வரை மனைவி தவித்து விடுவாள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக மனைவி திடீரென்று இறந்து விட, அவள் உடலுக்கு கொள்ளி போட்ட அவள் கணவன் எரிந்து கொண்டிருக்கும் சிதையை கைகளாள் அள்ளி விடுவான். அவள் இருந்தவரை தன்னுடைய கைககளைத்தானே கொண்டாடினாள், அவளோடு என் கைகளும் எரிந்து விட்டன, இப்போதுதான் கட்டைப் பிரிக்கப் போகிறேன், கைகள் என்ன நிலையில் இருக்கின்றன என்பது இனிமேல்தான் தெரியும் என்று கணவன் நினைத்துக் கொள்வதாக கதை முடியும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!