21.4.25

"திங்க"க்கிழமை  :  மாகாளிக்கிழங்கு ஊறுகாய்   -  பானுமதி வெங்கடேஸ்வரன்  ரெஸிப்பி 

 

மாகாளிக் கிழங்கு ஊறுகாய்


தேவையான பொருள்கள்:



மாகாளிக் கிழங்கு       -  1/2 கிலோ

கடுகு                                 - 4 அல்லது 5 டேபிள் ஸ்பூன்

தயிர்                                 - 300 மில்லி

உப்பு                                 -  11/2  டீ ஸ்பூன்

எலுமிச்சம்பழம்          - 1

செய்முறை:

மாகாளிக் கிழங்குகளை நன்றாக கழுவிய பிறகு, தண்ணீரில் ஆறு மணி முதல் எட்டு மணி நேரம் வரை ஊறப் போடுங்கள். கடுகை ஒரு தட்டில் கொட்டி வெய்யிலில் வைக்கவும்.

ஊறிய கிழங்குகளின் மேல்தோலை சீவிக் கொள்ளவும். 

பிறகு மீண்டும் ஒரு முறை கழுவி விட்டு, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இதுதான் கொஞ்சம் கஷ்டம். ஏனென்றால் மாகாளிக் கிழங்கில் அதன் கெட்டியான வேர் நடுவில் இருக்க, சதைப்பகுதி அந்த வேரைச் சுற்றி இருக்கும். எனவே, கத்தியால் நறுக்கும் பொழுது, ஒரு பாதிதான் வெட்டுப்படும். முதலில் ஒரு பாதியையும், பிறகு அடுத்த பாதியையும் நறுக்கிக் கொண்டு, பிறகு அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.


நறுக்கப்பட்ட ஔதுண்டுகளை ஒரு கண்ணாடி அல்லது பீங்கான் அல்லது பிளாஸ்டிக் பாட்டிலில் போட்டுவிட்டு, வெய்யிலில் வைத்திருக்கும் கடுகை மிக்ஸியில் பொடி செய்து, மாகாளிக் கிழங்கின் மீது போட்டு, கொஞ்சம் மஞ்சள் தூளையும், உப்பையும் சேர்த்து எலுமிச்சம் பழத்தை மீடியம் சைஸ் துண்டுகளாக்கி சேர்த்து, தயிரால் குளிப்பாட்டி நன்கு குலுக்கி இரண்டு நாட்கள் வைத்து விடுங்கள். பிறகு மோர் சாதத்தோடு சாப்பிட ஆஹா! ஒருவருடம் வரை கெடாது. அதற்குள் தீர்ந்து விடும். 

மார்கழி, தை மாதங்கள்தான் சீஸன்.  இந்த சமயத்தில் கிடைப்பதுதான் இளசாக இருக்கும். தோல் அடர்ந்த சிவப்பாக இருந்தால் முற்றல். 

சிலர் மூட்டைப்பூச்சி வாசனை என்று இதை சாப்பிட மாட்டார்கள். ஆனால் பல நல்ல மருத்துவ குணங்கள் கொண்டது. 'மலையில் விளைந்தால் மாகாளி நாட்டுல  விளைந்தால் நன்னாரி' என்பார்கள். வேர் வகையைச் சார்ந்த இது உடலுக்கு குளிர்ச்சியைத் தரக் கூடியது. 

28 கருத்துகள்:

  1. ​நான் இதுவரையில் தயிர்ல போட்டால் பச்சடி, மிளகாய்ப்பொடி போட்டால் ஊறுகாய் என்று நினைத்திருந்தேன். தயிர் ஊறுகாய் என்று பார்ப்பது இதுவே முதல் முறை. ஆமாம் தயிர் ஊறுகாய் ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும் என்கிறீர்கள், தயிர் புளிப்பு அத்தனை நாள் தாங்குமா?

    மாகாளி கிழங்கு சென்னையில் கிலோ 400,500 ரூ க்கு விற்பதாக கண்டேன். கட்டுப்படியாகுமா?

    படத்தில் கடுகு கோதுமை போல் மஞ்சள் நிறத்தில் இருக்கிறது. அப்படி ஒரு கடுகு உண்டா?

    காணொளி திறக்கவில்லை?.
    கேள்விகளை அடுக்கிவிட்டேன், பதில் கிடைத்தால் சரி.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெ கே அண்ணா,
      அக்காவுக்கு சொல்லிவிட்டேன் அதை பப்ளிஷ் பண்ண சொல்லி அவங்க யுட்யூபில் ப்ரைவெட்டில் போட்டிருக்காங்க பப்ளிஷ் பண்ணலை அதனால இங்கு திறக்கவில்லை. இப்ப பப்ளிஷ் பண்ணியதும் திறக்கும் இங்கு

      கீதா

      நீக்கு
    2. ஜெ கெ அண்ணா இப்ப பப்ளிஷ் ஆகிவிட்டது இப்ப வீடியோ வேலை செய்யும்

      கீதா

      நீக்கு
    3. வாங்க ஜெ.கே.சார், வணக்கம். நான் 1/2 கிலோ ரூ.150/-க்கு வாங்கினேன். ஆறு மாதங்கள் வரை இருக்குமே. தயிர் போட்டாலும் கெட்டுப் போகாது என்பதுதான் ஸ்பெஷல்.

      நீக்கு
    4. //படத்தில் கடுகு கோதுமை போல் மஞ்சள் நிறத்தில் இருக்கிறது. அப்படி ஒரு கடுகு உண்டா?// காமிராவில் அப்படி காண்கிறது.

      நீக்கு
    5. //அக்காவுக்கு சொல்லிவிட்டேன் அதை பப்ளிஷ் பண்ண சொல்லி// நன்றி கீதா.

      நீக்கு
    6. ​விளக்கங்களுக்கு நன்றி.

      நீக்கு
    7. அம்மா பச்சை மிளகாய் அரைத்து விடுவார். நாங்கல்லாம் அப்படிச் சாப்பிட்டுத் தான் பழகி இருக்கோம். நாக்கு நாலு முழமாச்சே. இதே போல் கடுகு, மஞ்சள் மட்டும் அரைத்தோ பொடித்தோ உப்போடு சேர்த்து மாவடுவையும் என் மாமியார் போடுவார். வெறும் உப்பும் கடுகும் மட்டும் தான். காரமே போட்டதில்லை. நான் வந்து தான் மிளகாய் வற்றலைக் கடுகோடும் மஞ்சளோடும் சேர்த்து அரைத்து//பொடித்து எடுத்துக் கொண்டு உப்புப் போட்டு ஊற வைச்ச மாவடுவில் சேர்ப்பேன். அதன் பின்னர் இதுவும் பழக்கம் ஆகிவிட்டது. நம்ம ரங்க்ஸ் மாவடுவில் நான் போடும் காரம் பத்தலை என்பார். ஆவக்காய் 2 வருஷங்கள் கழிச்சு இந்த வருஷம் போட்டு வைச்சிருக்கேன். மாவடுவெல்லாம் வாங்கிக் கொடுக்க ஆள் இல்லாததால் விலைக்குத் தான் வாங்கி இருக்கேன். மாகாளிக்கிழங்கு எனக்குப் பைல்ஸ் வந்தப்போ விட்டது. பின்னர் சாப்பிடவே இல்லை. குறுமிளகும் மோர்//எலுமிசைச் சாறில் உப்புச் சேர்த்து ஊற வைச்சுத் தொட்டுப்போம் குழம்பு சாதத்துக்கு. இப்போச் சாப்பிடுவதே ஒரு பிடி என்பதால் ஊறுகாயெல்லாம் இல்லை. :)

      நீக்கு
    8. விரிவான கருத்திற்கு நன்றி.

      நீக்கு
  2. உண்மையில் மாகாளி ஊறுகாய் நான் போடுவதாக இருந்தேன். அதாவது ஊறுகாய் நான் போட்டுவிட்டேன். அதை பற்ற பதிவை நான் போடுவதாக இருந்தேன்.. பானு அக்கா அனுப்பி விட்டதால் நான் போடவில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் இப்பட் உடனே போடலைனாலும் பின்னாடி போடலாமே வித்தியாசங்கள் இருந்தால்.

      கீதா

      நீக்கு
    2. @ஸ்ரீராம்: நான் பந்திக்கு முந்திக் கொண்டு விட்டேனோ? :))

      நீக்கு
  3. அக்கா மாகாளி ஊறுகாய் நன்றாக இருக்கு. வீடியோவும் நன்றாக இருக்கு.

    இதே முறைதான். என் மாமியாரும் எலுமிச்சை சேர்ப்பாங்க. நானும் அப்படிக் கற்றுக் கொண்டு சேர்க்கிறென்.

    மாகாளியே நான் சென்னை வந்த பிறகுதான் தெரிந்து கொண்டேன். அதுவரை நாகர்கோவிலில் திருவனந்தபுரத்தில் அப்பலாம் பார்த்ததில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்னையில் கிடைக்கும் மாகாளி சுமார்தான். பெஸ்ட் சேலத்தில் கிடைக்கும். பின்னர் கிருஷ்ணகிரி,கோவை, திருச்சி, பெங்களூரில் கூட நன்றாக இருக்கும்.

      நீக்கு
    2. இங்கு நன்றாகவே கிடைக்கின்றன, பானுக்கா

      கீதா

      நீக்கு
    3. மதுரை திருச்சியில் மாகாளி நன்றாகக் கிடைக்கும். நாங்களும் பச்சை மிளகாயோடு எலுமிச்சையும் சேர்ப்போம். இந்தப் பருவத்தில் தான் தஞ்சாவூர்க் குடைமிளகாயும் கிடைக்கும். வாங்கிப் புளி, மோர், எலுமிச்சைச் சாறில் தனித்தனியாக உப்புச் சேர்த்து ஊற வைச்சுக் காய வைத்து வைச்சுப்போம். இப்போல்லாம் வாங்கறதே இல்லை. முன்னர் போட்ட மோர் மிளகாயே இன்னமும் இருக்கு. காரம் தாங்கலை

      நீக்கு
  4. ஆமாம் மாகாளியின் ஒரு வகைதான் நன்னாரி. இந்த வாசனை சிலருக்குப் பிடிக்காதுதான். ஆனால் எனக்கும் மகனுக்கும் பிடிக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரி

    இன்றைய தினங்களுக்கு தங்கள் பதிவாக வந்த மாகாளி ஊறுகாய் படங்களும், செய்முறைகள், காணொளியும் அருமையாக உள்ளது. ஆம்.. மாகாளியின் ருசி பலருக்கு பிடிக்காது. நானும் அவ்வளவாக இதை சாப்பிட்டதில்லை. முன்பு பிறந்த வீட்டுக்குச் செல்லும் போது, மன்னியின் அம்மா அவர்கள் இந்த ஊறுகாயை அவர்களுக்கு கொண்டு வந்திருந்தார்கள். அப்போது ஒரு தடவை இதை சாப்பாட்டுக்கு போட்டுக் கொண்டேன். அதன் ருசியும் இப்போது நினைவில் இல்லை. ஒரு மாதிரி ஐயிட்டோஃபாரம் கெமிகல் வாசனை மட்டுந்தான் நினைவில் உள்ளது. பொதுவாக இப்போது நான் ஊறுகாயே சேர்ப்பதில்லை. உடம்புக்கு ஒத்து வரமாட்டேன் என்கிறது. உங்கள் செய்முறை பக்குவம் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "திங்களுக்கு" என்றால் "தினங்களுக்கு" என பிழை வருகிறது.

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    நானும் நேற்றுத்தான் ஒரு மட்டும் மாலை மீன் படங்களை ஆறுக்குள் அனுப்பி விட்டேன். வந்ததா? இல்லை, "ஆறுக்குள் செல்லாது தப்பி நழுவி குளத்தில் விழுந்து விட்டதா?" தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மெயில் பார்க்க முடிந்தால் பாரத்துச் சொல்லுங்கள். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      பாதி எழுதும் போதே நிறைவடையாமல் எழுத்தும் மீனாக நழுவி விட்டது. மன்னிக்கவும். . நன்றி.

      நீக்கு
  7. மாகாளி ஊறுகாய் படங்களும் செய்முறை விளக்கமும் அருமை. மாகாளியை எப்படி வேர் எடுத்து வெட்டுவது செய்முறை விளக்கம் அருமை.

    எங்கள் வீட்டில் யாருக்கும் பிடிக்காது அதனால் செய்வது இல்லை.
    செய்பவர்களுக்கு சொல்லலாம் உங்கள் குறிப்பை.

    பதிலளிநீக்கு
  8. மாகாளிக்கிழங்கு ஊறுகாய் செய்முறை காணொளி படங்களுடன் அருமையாக உள்ளது பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  9. எனக்கு இது மொத்தமும் புதுசா இருக்கு, மரவள்ளிக்கிழங்கைத்தான் செல்லமாக இப்பூடி அழைக்கிறீங்களோ என நினைச்சிட்டேன்:)))...பார்க்க நன்றாக இருக்கு.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!