8.9.25

"திங்க"க்கிழமை   :  வழுதுணங்காய் வதக்கல்.. வறுவல்… பொரியல்...மெழுகு புரட்டி. - JKC ரெஸிப்பி 

 [ ஸ்ரீராமின் முன்குறிப்பு : "ஹய்யா... இன்னிக்கி எனக்கு லீவு...  ஜாலி.. ஜாலி..." ]

                                       வழுதுணங்காய் வதக்கல்.. வறுவல்

பொரியல்...மெழுகு புரட்டி.

வழுதுணங்காய்– தெரியாத பெயர் – தெரிந்த காய். கீழே படத்தைப் பாருங்க. 

வழுதுணங்காய் என்பது ஒரு வகை கத்தரிக்காய். ஔவையார் பாடிய ஒரு பாடலில் இது குறிப்பிடப்படுகிறது. இந்த பாடல், "வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்" என்று தொடங்குகிறது.

வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்

முரமுரென வேபுளித்த மோரும் - திறமுடனே

புல்வேளுர்ப் பூதன் புரிந்துவிருந் திட்டான்ஈ(து)

எல்லா வுலகும் பெறும்.

இது பசியுடன் வந்த அவ்வையாருக்கு பூதன் அளித்த விருந்தாகும். இதில் வழுதுணங்காய் (கத்தரிக்காய்) எண்ணெய் சேர்த்து வதக்கப்பட்டிருந்தது.

மத்திய கேரளத்தில் ஒரு நாலம்பல க்ஷேத்ராடனம் என்று கர்கிடக (ஆடி மாதம்) மாதத்தில் ஒரே நாள் பயணமாக . திருப்பிரயார் ராமர் கோயில், இரிஞ்சாலக்குடா கூடல்மாணிக்கம் பரதர் கோயில், மூழிக்குளம் லக்ஷ்மணன் கோயில்,  பாயம்மல் சத்ருக்கனன் கோயில் என்று நான்கு கோயில்களுக்குச் சென்று வழிபடுவர். அதில் இரண்டாவதாக கூறப்பட்ட பரதன் கோயில் தமிழ் மன்னர்களுடன் தொடர்புடையது. சேர மன்னர் குலசேகர பெருமாள் பல நிவந்தங்கள் ஏற்படுத்தி ஆதரித்தமைக்குச் சான்றாகக் கல்வெட்டுகள் உள்ளன. இந்தக்கோயிலில் வழிபாடாக வழுதுணங்காய் நெய்வேத்தியம் செய்யப்படுகிறது. நெய்வேத்தியத்திற்கு வழுதுணங்காய் திருத்தும் புகைப்படம் கீழே.    

இதுவும் வருடத்தில் ஒரு முறை செய்யப்படும் முக்குடி நெய்வேத்தியமும் வயிறு சம்பந்தமான உபாதைகளுக்கு மருந்தாகக் கருதப்படுகிறது.

சரி நம்முடைய வதக்கல் செய்முறை பார்ப்போம்.

வேண்டிய பொருட்கள்:

வழுதுணங்காய்  ஒன்று

வெங்காயம் சின்னது 4.

சில்லி பிளேக்ஸ் கொஞ்சம்

உப்பு தேவையான அளவு.

வாசனைக்கு விரும்பினால் பூண்டு 2 பல் சேர்க்கலாம். சுவை கூட தேங்காய் துருவல் சேர்க்கலாம். 

எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு உட்கார்ந்தபோது பாஸ் ‘நான் செய்கிறேன், நீங்க கம்ப்யூட்டரை நோண்டுங்க’  என்று வெளியாக்கினார். அதனால் நறுக்கிய காய் படம் எடுக்க முடியவில்லை.

வழுதுணங்காயை 5x1x 0.5 cm பரிமாணத்தில் அவியலுக்கு நறுக்குவது போல் நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். 

ஒரு பாண் அல்லது வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் கழுவி எடுத்த வழுதுணங்காயை போட்டு சிறிது நேரம் வதக்கவும். வற்றல் மிளகாய் பொடித்து (flakes) தூவி உப்பு, கொஞ்சம் தண்ணீர் தெளித்து வேகவிடவும்.

பாஸுக்கு தக்காளி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பூண்டு என்பவை இல்லாமல் சமையல் செய்ய வராது,  தக்காளி ஒன்றை நறுக்கி சேர்த்திருக்கிறார்.

கத்தரிக்காய்கள் ஒரு தனி டைப். உருண்டை, நீளம், கலர், வரி, முள், சுவை என்று வடிவத்திலும் குணத்திலும், சுவையிலும் மாறுபடும் சுமார் 20 வகைகளைப் பார்க்க முடியும்.

கூடுதல் வகைகளை பின்வரும் லிங்கில் காணலாம்.

https://knowledge.desikheti.com/12-popular-brinjal-types-in-india/

பச்சை நிறத்தில் நீளமாக இருக்கும் கத்தரிக்காயையே வழுதுணங்காய் என்று கேரள மக்கள் கூறுவர். திருநெல்வேலி அல்வா போல் வழுக்கும் texture தான் வழுதுணங்காயின் சிறப்பு.

27 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.....

    அட இன்றைக்கு JKC அவர்களின் சமையல் குறிப்பா? ஆஹா.....

    வழுதுணங்காய் - நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த வார்த்தையைக் கேட்கிறேன். இங்கே சில சமயங்களில் கிடைக்கும். சட்னி செய்வதுண்டு. சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வெங்கட்..  வணக்கம்.  நான் இந்தப் பெயரை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்!

      நீக்கு
    2. //நான் இந்தப் பெயரை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்!// ஸ்ரீராம் என்ன அக்கிரமம்? கீதா வழுதுணங்காய் வைத்து ஒரு சமையல் குறிப்பு எழுதியிருக்கிறார்.

      நீக்கு
    3. மறந்து போச்சு அக்கா.   மறதி!   என்ன செய்ய!  அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தை இல்லையே...   

      கீழே கீதாவின் கமெண்ட் இப்படி வரும்...  

      "என்ன ஸ்ரீராம்..  நான் முன்பே இது பற்றி எழுதி உங்களுக்கு அனுப்பி இருக்கிறேனே..".  

      அப்புறம் இந்த பதிலின் கீழே... 

      "ஓ..  இங்கே ஏற்கனவே வந்திருக்கா?   எஸ்...  இதைதான் நானும் சொல்லி இருக்கிறேன்.  நன்றி பானு அக்கா..."

      நீக்கு
    4. ஹிஹிஹிஹி....ஸ்ரீராம் இப்பதான் இதையே பார்க்கிறேன்!!!!!!

      கீதா

      நீக்கு
  2. ​நன்றி. ம்ம்ம்ம்ம்

    Jayakumar

    பதிலளிநீக்கு
  3. எனக்கு இந்த பச்சை வெண்ணெய் கத்தரிக்காய் ரொம்ப பிடிக்கும். செய்முறை எளிதாக இருக்கிறது. பொரியலை விட நீங்கள் கொடுத்திருக்கும் மேல் தகவல்கள் சுவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. JKC  சார்பில் நன்றி மட்டும் நான் சொல்கிறேன்.  இதில் அரட்டை, கருத்துக்கு இடமிருந்தால் அவர் சொல்வார்!

      நீக்கு
    2. பானுக்கா இந்தக் கத்தரிக்காய் நல்லா இருக்கும். எனக்கும் ரொம்பப் பிடிக்கும்

      கீதா

      நீக்கு
  4. சிம்பிள் நல்ல செய்முறை, ஜெ கே அண்ணா.

    எங்க ஊர்ல இது வழுதுணங்காய். சிலர் பேச்சு வாக்கில் வழுதலைங்கான்னும் சொல்வாங்க.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. ஜெ கே அண்ணா இலக்கியத்தையும் இதோடு இணைத்துச் சொல்லியிருப்பது சூப்பர். தகவல்கள் நல்ல தகவல்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவில் ஒரு கேட்ட கெட்ட தகவல் வெட்டப்பட்டது நன்று.

      Jayakumar

      நீக்கு
  6. நம்ம எபி ல இதை வைத்து ஒரு ஆந்திரா செய்முறை மிக எளிய செய்முறை போட்ட நினைவு.

    சப்பாத்தி, தோசை எல்லாத்துக்கும் கூடவே சாதத்தில் பிசைந்தும் சாப்பிட அருமையா இருக்கும் ஒரு ரெசிப்பி.

    ஸ்ரீராம் நினைவிருக்கா? நீங்களும் சுவைத்திருக்கீங்க நல்லாருக்குன்னு. நம்ம வர்ஷினிக்கும் ரொம்பப் பிடித்திருந்தது. கத்தரி பக்கவே வராத பாஸ் கூட விரும்பிச் சாப்பிட்டாங்க.....

    கீதா

    பதிலளிநீக்கு
  7. நம்ம வீட்டுல பொரியல், வதக்கல் (அதான் மெழுக்குப்புரட்டி) அப்புறம் அந்த ஆந்திரா துவையல் எல்லாம் அப்பப்ப செய்துவிடுவதுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. வழுதுணங்காய் வதக்கல் அருமை. பொதுவா வழுதுணங்காய்னா கத்தரிக்காய்தான், அதில் இந்த வெரைட்டி என்று கிடையாது.

    நான் இந்த நாலம்பலங்களுக்கும் சென்றிருக்கிறேன். பிரசாதம் செய்தி புதிது. பொதுவாக எல்லா கேரள கோயில்களிலும் அரவணைப் பாயசம், கடுசர்க்கரை எனப்படும் சர்க்கரைப் கொங்கல், சில கோயில்களில் பால் பாயசம், உன்னியப்பம் கிடைக்கும். ஒரு சில கோயில்களில் வெல்லம் தேங்காய்.... போன்றவை சேர்ந்த கலவையும். பிரசாதம் எப்போதும் வாங்குவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டருளச் செய்யப்படும் நெய்வேத்தியங்கள் பிரசாதம் என்ற நாமத்தில் விற்பது கேரளக் கோயில்களில் அரிது. உதாரணமாக பத்மநாப சுவாமிக்கு ஒரு கண் ஓட்டையான தான கொட்டாங்கச்சியில் மாங்காய் நெய்வேத்தியம் கண்டருளப்பண்ணுவார்கள்.

      நீக்கு
    2. கோயில்களில் பிரசாத ஸ்டால்களில் இருப்பதை பிரசாதம் என்றே எண்ணிவந்தேன். தமிழகம் போல், வெளி ஆட்கள் கண்டதையெல்லாம் செய்து விற்பனை செய்வது போல கேரளாவில் கிடையாது என்று நினைத்தேன். அரவணை பாயசம், திருவனந்தபுரம் பத்மநாபஸ்வாமி கோயிலிலும் நான் வாங்கியிருக்கிறேன். (இப்போ அனேகமா எல்லா கோயில்களிலும் அந்த கோயில் பெயரில் டின்ல விற்கறாங்க). கண்டருளப்படுவது விற்பனை செய்வது கடினம், காரணம் அளவு மிகக் குறைவு. ஆனால் ஸ்டாலில் உள்ளவற்றில் சிறு பகுதியாவது கடவுளுக்கு நெய்வேத்யம் செய்திருப்பார்கள் என்று நம்பினேன்.

      நீக்கு
  9. கத்தரியில் S3, S7 மற்றும் வரி பிரிஞ்சால் எனச் சொல்லப்படும் வயலட் கத்தரியும் நம்பி வாங்கலாம். பச்சை நிறக் கத்தரியில் தோல் உரியும். மற்ற கத்தரிகளை நம்பி வாங்கமுடியாது. கைக்கும். பிடி கத்தரி எனச் சொல்லப்படும் பெரிய கத்தரி கைக்காது. துவையலுக்கு மாத்திரமே வெளிநாட்டில் உபயோகித்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  10. கத்திரிக்காயும் வெங்காயமும் சேர்த்து இப்படி நான் சப்பாத்திக்குக் கூட்டுப்பல முறை பண்ணி இருக்கேன். ஆரம்பத்தில் கத்திரிக்காயுடன் வெங்காயமானு சொன்னவங்கல்லாம் பின்னால் ரசிச்சுச் சாப்பிட்டிருக்காங்க. ஆனால் இன்னமும் கொத்தவரை, அவரை, வெண்டைக்காயோடு வெங்காயம் சேர்த்துப் பண்ணுவதை என்னால் ஒத்துக்க முடியலை. வெங்காயம் சேர்க்காமல் பண்ணி இருக்கேன். அதிலும் வெண்டைக்காயைப் பல விதங்களில் சப்பாத்திக்குத் தொட்டுக்க ஏற்றாற்போல் பண்ணி இருக்கேன். சின்னச் சின்ன வெண்டைக்காயை ஒரே மாதிரிப் பொறுக்கி அலம்பித் துடைத்துவிட்டு நான்காகப் பிளந்து கொண்டு உள்ளே மசாலாப் பொடிக்கலவையை அடைத்து வைத்துப் பின்னர் எண்ணெயில் போட்டு வதக்கி ஸ்டஃப்டு பிண்டி, தயிரில் மசாலா கலந்து தஹி பிண்டி எனப் பண்ணி இருக்கேன். அதே போல் மோர்க்குழம்பு மிஞ்சினால் தஹி ஆலூ பண்ணுவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாக்கா, கத்தரியும் வெங்காயும் நல்லா இருக்கும்.

      பெய்ங்கன் பர்தா நல்லாருக்கும்

      கீதா

      நீக்கு
  11. பெரிய கத்திரிக்காயில் பைங்கன் பர்த்தாவும் ப்ண்ணி இருக்கேன். பொதுவாகக் கத்திரிக்காயே பிடிச்சுச் சாப்பிடும் ஒரு காய். சின்னக் கத்திரிக்காய் மற்றும் பாகற்காயைப் பிளந்து கொண்டு உள்ளே ஸ்டஃப்(மசாலாப்பொடிகள்) வைத்துக்கொஞ்சம் வதக்கிக் கொண்டு தனியே எடுத்து வைச்சுக்கணும். தக்காளிச் சாறில் வெங்காயம் மற்றும் மசாலாப் பொருட்கள் சேர்த்து அரைத்க கிரேவியைக் கொதிக்கவிட்டுக் கொண்டு அதில் இந்த வதக்கிய கத்திரிக்காய்(பொடி அடைச்ச) பாகற்காயை ஒவ்வொன்றாகப் போட்டு மெதுவாகக் கலந்து விட்டு ஒரு கொதி வந்ததும் கசூரி மேதி தூவிட்டுப் பச்சைக்கொத்துமல்லி தூவி இறக்கணும். விருந்துக்கு ஏற்ற சைட் டிஷ்.கொஞ்சம் வேலை அதிகம் என்பதால் எப்போவானும் பண்ணலாம். இங்கே கோதுமை மாவு நன்றாகவே இல்லை என்பதால் சப்பாத்தி சாப்பிடவே பிடிக்கலை. அநேகமாய்த் தோசை மாவு இருக்கும். எனக்கு மட்டும் 2 தோசை ப்ண்ணிக்கிறேன். இப்போ கோதுமை மாவு மாற்றி வாங்கி இருக்காங்க என மருமகள் சொன்னாள். எப்படி இருக்குனு பார்க்கணும்.

    பதிலளிநீக்கு
  12. இந்தப் பிரசாதங்கள் கோயில்களில் விற்பதை அதுவும் ஸ்டால்களில் விற்பதை நாங்க வாங்கினதே இல்லை. டென்டர் போட்டு குறைந்த அளவுக்கு விலையில் விற்பவர்களுக்குக் கொடுக்கப்படும் ஆர்டர். கோயில் மடப்பள்ளியில் பண்ணுவதில்லை. வெளியே இருந்து வரும். ஸ்ரீரங்கம் கோயிலில் முன்னெல்லாம் மத்தியானம் பனிரண்டு மணிக்கு மடப்பள்ளி வாசலிலேயே புளியஞ்சாதம், தயிர் சாதம், பொங்கல், தோசை, சர்க்கரைப் பொங்கல் போன்றவை தொன்னைகளில் விற்பார்கள். அதிகம் போனால் ப்த்து ரூபாய் தான் வாங்குவாங்க. இரண்டு தொன்னை வாங்கிச் சாப்பிட்டாலே போதும். இப்போல்லாம் அறமற்ற நிலையத்துறையின் தலையீட்டினால் நிறுத்திட்டாங்க என்று கேள்வி. கோயிலுக்கும் போய்க் கிட்டத்தட்ட ஏழெட்டு வருடங்கள் ஆகி விட்டன. வைகுண்ட ஏகாதசி சமயம் விற்கப்படும் சம்பார தோசை மடப்பள்ளியிலிருந்தே வந்து கொண்டிருந்தது. சில சமயங்களில் மாலை ஐந்து, ஐந்தரை மணிக்கெல்லாம் இந்த தோசை விற்பார்கள். ஒரு தோசை ஐந்து ரூபாயாக இருந்தது. அதைத் தவிரவும் பக்தர்களுக்குச் சில சமயம் அப்பம், அதிரசம், லட்டு போன்றவை சாயந்திரம் மூன்றிலிருந்து நான்கு மணிக்குள் கொடுத்து வந்தார்க்ள். அதுவும் நின்னுட்டது என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  13. வழுதுணங்காய் பொரியல் நன்றாக இருக்கின்றது.

    இங்கும் இந்த இனம் உள்ளது . வதக்கலாக செய்து மசாலாப்பொடி கொஞ்சம் தூவுவோம்.

    இங்கு மட்டுவில் கத்தரிக்காய் என்ற வெள்ளை நிற இனம் உள்ளது இக் காய் பெரிதாக இருக்கும் இக் கத்தரியை தனியே நாட்ட வேண்டும் ஏனைய இனங்களுடன் நாட்டக் கூடாது . மற்றைய இனத்துடன் நாட்டினால் கலப்பு இனம் ஆகிவிடும். இந்தக்காயை கோவில் பொங்கலுக்கு தண்ணியுடன் கறி சமைத்து செய்வார்கள் அருமையாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  14. ஆஆஆஆ வழுதுணங்காய் என்பதை, முள்ளுக்கத்தரிபோல இருக்கும் என நினைச்சிருந்தேன்....

    குறிப்பு நன்றாக இருக்கு, இப்படியேதான் நானும் செய்வேன் தக்காளி சேர்க்காமல் கொஞ்சம் நீர் தெளிச்சு மூடி விட்டிடுவேன், இதேபோல சில்லி பிளேக்ஸ் போடுவேன் நல்லெண்ணெய் சேர்ப்பேன் சூப்பராக இருக்கும்...

    பதிலளிநீக்கு
  15. இப்போ கனடாவால் திரும்பும்போது கைகாவலுக்கு கொஞ்சம் நம் ஊர் மரக்கறி கொண்டுபோகலாமே என அங்கு தமிழ்க் கடைக்குப் போனால்,
    பால் வெண்மை நிறத்தில குட்டிக் குண்டுக் குண்டுக் கத்தரிக்காய் பார்த்தேன், இதுவரை பார்த்ததுமில்லை சமைச்சதுமில்லை...

    அப்போ சமைக்கலாம் என வாங்கி வந்து இப்படி உங்கள் குறிப்புப்போலவே செயேன்.. அதன் சுவை எனில் காணி பூமி வித்துக் கூட வாங்கிச் சாப்பிடலாம் அப்படி இருந்தது... இங்கு எங்கட தமிழ்க் கடைக்கு வருவதில்லை... கவலையாக இருக்கு:(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​அதிரா அம்மையாரே அறிவித்து விட்டார் அட பொலி என்று. நன்றி.

      வெள்ளை சின்ன குண்டு கத்தரிக்காய் நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் விளைவது, இது குறுமிளகு + பட்டை கிராம்பு மசாலா அடைத்து வதக்கினால் கறி வறுவல் போல் இருக்கும். சோறு சப்பாத்தி என்று எதற்கும் சேரும்.

      Jayakumar

      நீக்கு
  16. வழுதுணங்காய் வதக்கல் செய்முறையும், படங்களும் இலக்கிய செய்திகளும் அருமை.
    எங்கள் மாமனாருக்கு வெள்ளை சின்ன குண்டு கத்திரிக்காய் பிடிக்கும்
    கடையில் பார்த்து விட்டால் வாங்கி வந்து விடுவார்கள்.
    என் கணவருக்கு சின்ன பிஞ்சு வைலட் கத்திரிக்காய் பிடிக்கும்
    விதையே இல்லாமல் உள்ளே வெள்ளையாக கத்திரிக்காய் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!