சாப்பாடு இங்குள்ளதற்கும், அங்கு உள்ளதற்கும் வித்தியாசமாய் இருக்கும் என்று தெரியும். ஆனால் இப்படி எதிர்பார்க்கவில்லை.
இலைபோட்டு தண்ணீர் தெளித்து காய் போல ஒன்று, கறி போல ஒன்று என்று போட்டுக்கொண்டு வந்தார்கள். காய் போல இருந்தது காய் இல்லை. கரி போல இருந்தததும் கறி இல்லை. லேசான திரவத்தில் இருந்த வடை போன்ற பொருள் இனிப்பா காரமா என்று சஸ்பென்சாக எடுத்து வாயில் வைத்தால் இரண்டுக்கும் இடைப்பட்ட சுவையில் இருந்தது. ஊறுகாய் போல என்றார்கள். சாதம் போட்டு, பருப்பு போல ஒன்றை எடுத்து வந்தபோது எப்போதும்போல வேண்டாம் என்று மறுத்து விட்டேன்.
அப்புறம் அதே போல நெய்க்காக வருவார்கள் மறுக்கலாம் என்று பார்த்தால் வரவில்லை. சரி, சாம்பார் எடுத்து வருவார்கள் என்று காத்திருந்தால் அதற்கும் வரவில்லை. பாத்திரங்கள் வைத்திருக்கும் இடத்தில் வரிசையாக நின்றிருந்தார்கள். நானும் இதோ சாம்பார் கொண்டு வருவார், அதோ கொண்டு வருவார் என்று காத்திருந்து, அப்புறம் இலையில் போட்டிருந்த ஏதோ ஒரு வஸ்துவை சாதத்தோடு பிசைந்து சாப்பிட்டேன். எனக்குதான் இந்த நிலை என்று நான் நினைத்தால் இன்னும் நான்கைந்து பேர்கள் இதே அனுபவத்தைச் சொன்னபோது சிரிப்பு வந்தது.
இதில் பாஷை வேறு பிரச்னையாக இருந்தது. தெலுங்கில் பேசினாலும் சரிவரவில்லை. தமிழில், இங்கிலீஷில் பேசினாலும் சரிவரவில்லை. அவர்கள் அடுத்து போட்டது காரக் குழம்போ என்று சந்தேகப்பட்ட வேளையில் அது இனிப்பான ரசம் என்று தெரிந்தது.
சாப்பிட்டு விட்டு மாப்பிள்ளை வரும் பஸ்ஸுக்காக காத்திருந்து, வரவேற்று, அவர்களை சாப்பிட அழைத்துப்போய், (நாங்களே 'விவரம்' ஆகிவிட்டோமே!) அப்புறம் அறை ஒதுக்கீட்டுக்காக காத்திருந்து, அறை பெற்று, காபிக்கும் அலைந்து கிடைக்காமல்... வெளியில் சென்றுகூட குடிக்க முடியாது அத்துவானக்காடு! ஒரு கடை கிடையாது.
மழை பெய்துகொண்டே இருந்தது.
லைட்டர் வேலை செய்யாததால் தீப்பெட்டி தேடி அலைந்த உறவுக்கு துணையாய் சமையலறை சென்று தீப்பெட்டி கேட்டால் அவர்களே லைட்டர் வைத்துதான் அடுப்பு பற்ற வைக்கிறார்கள் என்று தெரிந்தது. அப்புறம் ரிஸப்ஷனில் சொல்லி வாங்கி கொடுத்தேன். "தூக்கிட்டு வந்துடு.. நம்மளை அப்புறம் அவன் ஏன் கேட்கப்போகிறான்?" னு சொன்னால் நேர்மையாய் அவனிடமே இவர் "பாஸ்.. நான் இதை வைத்துக் கொள்கிறேன்" என்று சொல்லி விட்டே வந்தார்.
அறை தேடி அலைந்து, அமைய நேரமானதால் மாலை சிற்றுண்டியும் சற்று தாமதமாகவே சாப்பிட்டேன். எங்கள் அறையில் நான், கே ஜி ஜி ஜவர்லால், என் சகோதரர், இன்னொரு மாமா பையன். நல்ல பெரிய அறை. .இவ்வளவு லேட்டாக டிஃபன் வேண்டாம் என்று சிலர் அபிப்ராயப்பட்டாலும் நம்மூரிலேயே சுவை எப்படி இருக்கிறது என்று பார்க்கும் ஆவல் வரும். அங்கே எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம் என்று உட்கார்ந்தோம்.
எனக்கு முன்னால் உட்கார்ந்திருந்த பாஸ் தோசை போட்டதும் சரி என்றவர், அடுத்து வந்ததை வேண்டாம் என்று சொல்லி விட்டார். "சேமியா உப்புமா" என்றார். நான் எதற்கும் இருக்கட்டும் என்று போட்டுக் கொண்டேன். என்ன என்று சுவைக்க, கொஞ்சம் நாக்கில் வைத்துப் பார்த்தால் உருளைக்கிழங்கு மசாலா... அட ராமா... அது மசாலா தோசை. தோசை தனியாக, மசாலா தனியாக இருந்தது! குலோப்ஜாமுன் சுவையில் ஒரு இனிப்பு போட்டார்கள்.
இரவு உணவு சற்று தாமதமாகவே எடுத்துக் கொண்டோம். வழக்கம்போல ஸாம்பார்ப் பிரச்னை இருந்தது. பதர்ப்பேணி போல ஒன்று போட்டார்கள்.. ஆனால் அதை மோர் சாதம் சாப்பிட்டாகியதும் போட்டார்கள். மாலை டிஃபன் முதலே சாப்பாட்டு செக்ஷனுக்கு ஒரு கோ ஆர்டினேட்டர் ஏற்பட்டிருந்தார். இரவு உணவு சமயமும் அவர் சுற்றி வந்தார். ஒவ்வொன்றும் பரிமாறப்பட்ட சட்டு தாமதமாக அவரை நாங்கள் படுத்தி எடுத்தோம்.
அவரிடம் எங்கள் சாம்பார் அனுபவம் பற்றி சொன்னதும் எங்களை காக்க வைத்து விட்டு அவர்களிடம் சென்று விசாரித்து வந்தார். ஆங்கிலத்தில் எங்களிடம் "இங்கு இன்று இரண்டு வகை குழம்புகள் இருக்கின்றன. இரண்டையும் உங்களுக்கு பரிமாறச் சொல்கிறேன்" என்றார். நாங்கள் ஏற்கனவே மோர்க்குழம்பு ஊற்றி சாப்பிட்டிருந்தோம். இதென்னடா இரண்டாவது குழம்பு.. சாம்பாரா? அல்லது வத்தக்குழம்பு வகையறாவா? என்றெல்லாம் யோசித்து, அதைக் கொண்டு வரச்சொன்னால்... ரசம்!!
கடவுளே...
நம்மூர் போல மெனுவில் அவியல் பரிமாறினார்கள். சேமியாவில் தயிர்சாதம் போடாதவரை எல்லாம் ஓகே. பரிமாறுபவர்கள் சுத்தமாக காவி உடை அணிந்து சுத்தமாக இருந்தார்கள். கையுறை, தலை உரை எல்லாம் போட்டிருந்தார்கள்.
இரவு என் அருகில் படுத்திருந்த ஜவர்லால் நடுவில் காணாமல் போயிருந்தார். நினைத்தபடியேதான் நடந்திருந்தது. என்னுடைய, என் சகோதரரின் குறட்டை சத்தம் தாங்காமல் வேறு அறைக்கு எஸ்கேப் ஆகி இருந்தார். அவரும் குறட்டையை குறைந்தவர் இல்லை. யார் முந்திக் கொள்கிறார்களோ அவர்களுக்கு லாபம்!
மறுநாள் காலை டிஃபன் ஓகே. நார்மல். இட்லி, பொங்கல். மதியம் சாப்பாடு வர ஒரு மணிக்கு மேல் ஆகும் என்று தெரிந்ததால் அதை ஸ்கிப் செய்து சென்னை கிளம்பினோம்.
அத்தைக்கு உடம்பு சரி இல்லாததால் அவரை கவனித்துக் கொள்ளவேண்டி எங்கும் வரமுடியாமல் இருந்த கே ஜி ஜி, அத்தை மறைந்து விட்ட காரணத்தால் திருமணத்துக்கு வந்ததோடு எல்லா உறவினர்களையும் கண்டு அளவளாவி மகிழ்ந்தார்.
அந்த கடைசியில் மணமகன் மற்றும் உறவினர், இந்தக் கடைசியில் மணப்பெண் மற்றும் உறவினர் மாலைகளோடு... ஒருவரை ஒருவர் நான் ஒரு அடி அடுத்து வைத்து விட்டேன், நீ வா நீ வா என்று அழைத்துக் கொண்டு...
திருமண முறைகளில் சிறு மாற்றங்கள் இருந்தன. நம் இல்லங்களுக்குள்ளேயே சிறு மாற்றங்கள் இருக்கும்போது வேறு மாநிலக் கலப்பில் இல்லாமல் இருக்குமா? மாலை மாற்றும் வைபவம் சிறு இடத்தில நடக்கும். அவர்கள் நீளமாக ஒரு கோலம் போல போட்டு இடம் ஏற்படுத்தினார்கள். இந்த மூலையில் மாப்பிள்ளை வீட்டார், எதிர் மூலையில் பெண் வீட்டார். பார்ப்பவர்களின் பொறுமை கொஞ்சம் சோதிக்கப்பட்டாலும் சந்தோஷமாக நடைபெற்றது. காசி யாத்திரைக்கு முன் மாப்பிள்ளைக்கு தலைப்பா கட்டினார்கள். மாப்பிள்ளை தன் அறையிலிருந்து வெளிப்பட்ட கணமே பெண்ணின் தாயும் தந்தையும் அவரை கைப்பற்றி இருபுறமும் ஆக்ரமித்து நின்று சடங்குகள் செய்தார்கள். மாப்பிளையின் அப்பாவும் அம்மாவுமே சற்று தள்ளி பின்னால்தான் நிற்க வேண்டி இருந்தது. விரதம் இருக்க தனியாய் மண்டபம் போன்ற ஒன்றையே ஏற்பாடு செய்திருந்தார்கள். சப்தபதிக்கு மேடையிலேயே நடத்தாமல் கீழே ஹாலில் வித்தியாசமான டிஸைனில் கோலம் போல போட்டு அதில் செய்தார்கள்.
எவ்வளவோ இடங்கள் அங்கு பார்ப்பதற்கு இருந்தும், நேரமின்மை உடல்நிலை காரணமாக ஹரிஹர் மட்டும் சென்று ஹோய்சால கட்டிடக்கலையில் ஒரு சிறு கோவில் பார்த்து விட்டு சென்னை திரும்பினோம்.
தம்பி மனம் கேட்காமல் திருமண வீட்டிலிருந்து காலை டிஃபனுக்கு பரிமாறப்பட்ட இட்டலி, பொங்கலை நான்கு பேர் சாப்பிடும் அளவு பொட்டலம் கட்டி சாம்பார் வைத்து கொடுத்திருந்தான். ஒன்றரைக்குள் சாப்பிடச் சொல்லி இருந்தான். வழியில் ஓரிடத்தில் நிறுத்தி அதைச் சாப்பிட்டு விட்டு பயணத்தைக் தொடந்து வந்து, இரவு டிஃபனை திண்டிவனத்தில் முடித்து வீடு சேர்ந்தபோது மணி இரவு இரண்டு மணி,
"நெஞ்சை நிமித்திகிட்டு தெனாவட்டா வரான் பாரு..." என்பார்களே...
அதுபோல கர்நாடகா ஆட்டோ எல்லாம்.
எப்படி தலையை நிமிர்த்தி வைத்துக்கொண்டு ஒரு தெனாவட்டுடன், ஒரு திமிருடன் வருகிறது பாருங்கள்!!
======================================================================================
இட்லி சந்தை - FaceBook கிலிருந்து..
சர்வதேச அளவில் இட்லிக்கு என தனிச் சந்தை ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் உள்ளது.
ஈரோட்டின் அடையாளமாக மாறிய இட்லி சந்தை சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது.
ஈரோட்டில் உள்ள கருங்கல்பாளையத்தில் தினமும் இட்லிகளின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
விறகு அடுப்புகளில் பெரிய இட்லிப் பானைகளில் இட்லிகள் தயாரிக்கப்படுகின்றன.
அதுவும் முகூர்த்த நாட்களில் ஒரு லட்சம் இட்லி வரை கூட விற்பனையாகும் என்று சொல்லப்படுகிறது. இதற்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான வரலாறு உள்ளது.
ஈரோட்டின் அடையாளமாக இட்லி சந்தை மாறியுள்ளது. 60 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் மாட்டுச்சந்தை ஒன்று இருந்துள்ளது. ஈரோடு கருங்காலய மாட்டுச்சந்தை மிகவும் பிரபலமானது.
இங்கு பல்வேறு ஊர்களில் இருந்து மக்கள் வந்து மாடுகளை வாங்கிச் செல்வார்கள். அவர்களின் பசியைப் போக்குவதற்காக இங்கு முதலில் இட்லி கடைகள் ஆரம்பிக்கப்பட்டன.
காலையில் சந்தைக்கு வருபவர்கள் இங்கு இட்லி சாப்பிடுவதுடன் வீட்டிற்கும் பார்சல் வாங்கிச் செல்ல ஆரம்பித்தார்கள். பலர் இங்கு இட்லி சாப்பிடுவதற்காகவே வர ஆரம்பித்தார்கள்.
ஒரு கட்டத்தில் அதிகாலையில் ஆவி பறக்க சுடச்சுட இட்லிகளை சுவைத்த பிறகுதான் விற்பனையே துவங்கும் என்ற நிலை உருவானது. மக்களின் கூட்டம் அதிகரிக்க அதிகரிக்க இட்லி கடைகளும் விரிவானது.
மாட்டுச்சந்தை இடம் மாறியபோதும் இந்தப் பகுதியில் இட்லி சந்தை தொடர்ந்து இயங்கி வருகிறது.
இப்போது இப்பகுதிகள் முழுக்க இட்லி சந்தையாகவே மாறிவிட்டது.
இட்லி சந்தை பிரபலமடைந்ததால், ஈரோடு அருகில் உள்ள சேலம், நாமக்கல் மாவட்டங்களில் நடக்கும் விசேஷங்கள், கோயில் விழாக்கள், திருமணம் போன்ற பலவற்றுக்கும் காலை உணவுக்கு இங்கிருந்துதான் இட்லி சப்ளை செய்யப்படுகிறது.
அத்துடன் ஈரோடு மற்றும் சுற்றுவட்டாரங்களிலும் பெரும்பாலான ஓட்டல்களுக்கு இங்கிருந்துதான் இட்லி எடுத்துச் செல்லப்படுகிறது.
அதிகாலை முதல் இரவு 10 மணி வரையிலும் சுடச்சுட இட்லிகள் அதற்கு பக்கவாத்தியங்களான சட்னி வகைகளுடன் கிடைக்கிறது.
மிகவும் மென்மையான மல்லிகைப் பூ இட்லி, குஷ்பூ இட்லி, இளநீர் இட்லி, ரவா இட்லி, ஜவ்வரிசி இட்லி, சாண்ட்விச் இட்லி, மிளகு, சீரகம், கொத்தமல்லி சேர்த்த காஞ்சிபுரம் இட்லி, கப் இட்லி, மினி இட்லி என அனைத்து வகை இட்லிகளும் இங்கு கிடைக்கின்றன.
ஆடம்பரமின்றி, பிளாஸ்டிக் சேர்கள் மற்றும் மேசைகளுடன், வரிசையாக சுமார் 10க்கும் மேற்பட்ட கடைகள் இங்கு செயல்படுகின்றன.
யானை
==================================================================================================
காக்கா பாண்டிய கட்டபொம்மன்
கூடு கட்டிய காக்கையிடம்
கிஸ்தி கேட்டது
வெள்ளைக் காக்கா
கடுப்பானது கருப்பு காக்கா
மதிகெட்டு போனாயோ
மானம் கெட்டவனே
நீ என்ன
எம்குல காக்கைக்கு
குச்சி சேர்த்தாயா
கூடு கட்டினாயா..
இல்லை
அங்கு கொஞ்சி நிமிரும்
எம் குல
காக்கைக் குழந்தைக்கு
புழுதான் ஊட்டினாயா
எதற்குக் கேட்கிறாய் கிஸ்தி?
யாரைக் கேட்கிறாய் வரி?
வெறுப்பான வெள்ளைக்காக்கா
கூட்டைக் கலைக்க
உத்தரவிட்டது.
நின்ற கிளையிலிருந்து
நிமிர்ந்து எழுந்த
கருப்பு காக்கா
இறக்கைகள் படபடக்க
ஆவேசமாக சுற்றி வந்தது
என் தம்பி
குயில் கேட்டிருக்க வேண்டும்
இதை
கூவிக்கூவியே
உன்
குரல்வளையைக்
கழற்றியிருப்பான்.
என் கணவன்
கேட்டிருக்க வேண்டும்
இதை
கா கா கா கா
என்று
கத்திக் கத்தியே
கூட்டம் சேர்த்திருப்பான்..
என் தாய்
காக்காம்மா கேட்டிருக்க வேண்டும்
இதை...
தொடரும் முன்
வெள்ளைக் காக்கா
'அட போங்கப்பா'
என்று பறந்து போனது.
===============================================================================================
========================================================================================================
நேற்று M R ராதா நினைவு நாள்.. FaceBook கிலிருந்து எடுத்த ஒரு பதிவு...
மலேசியவில் நடந்த ஒரு கூட்டத்திற்குக் கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தார் நடிகவேள் எம்.ஆர்.ராதா. 'அந்தக் கூட்டத்தில் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் உங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய இருக்கிறார்கள்' என விழா ஏற்பாட்டாளர்கள் சொல்ல, எதையும் அலட்டிக் கொள்ளாமல் கூட்டத்தில் பேசினார் ராதா.
‘ எம்.ஜி.ஆரை சுட்டுட்டேன்னு ஆளாளுக்கு கோஷம் போடறாங்க. உங்களுக்கு ஒன்னு சொல்லிக்கறேன். நானும் எம்.ஜி.ஆரும் ஐம்பது வருஷமாக நண்பர்களா இருக்கோம். எங்களுக்குள்ள சின்ன கோபம். செல்லமா சண்டை போட்டுட்டோம். அந்த சமயத்துல கம்பு இருந்திருந்தா கம்புச் சண்டை போட்டிருப்போம். துப்பாக்கிதான் இருந்துச்சு. சுட்டுக்கிட்டோம்'. இந்தியாவையே உலுக்கிய ஒரு வழக்கைக்கூட மிகச் சாதாரணமாகக் கடந்து போனார் எம்.ஆர்.ராதா.
எம்.ஜி.ஆர் துப்பாக்கியால் சுடப்பட்டு 53 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், இன்றளவும் எம்.ஆர்.ராதா
நடத்திய துப்பாக்கிச்சூட்டின் பரபரப்பு அவ்வளவு எளிதில் அடங்கிவிடவில்லை. என்ன நோக்கத்திற்காக ராதா துப்பாக்கியைத் தூக்கினார்? என்ற கேள்விக்குப் பதிலைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் சாதாரண மக்களிடம் மேலோங்கியே இருக்கிறது. 1967-ம் ஆண்டு, ஜனவரி 12ம் தேதி மாலை 5 மணிக்கு எம்.ஜி.ஆர் வீட்டில் துப்பாக்கி சூடு நடந்தது. தான் கொண்டு போயிருந்த துப்பாக்கியில் மூன்று தோட்டாக்களை மட்டுமே நிரப்பியிருந்தார் ராதா. எம்.ஜி.ஆரை நோக்கி துப்பாக்கியின் விசை அழுத்தப்பட, எம்.ஜி.ஆரின் இடதுகாதை ஒட்டி துப்பாக்கி ரவை துளைத்துக் கொண்டு போனது. பிறகு அதே துப்பாக்கியால் தனது நெற்றிப் பொட்டிலும், தோளிலும் இரண்டு குண்டுகள் பாய, ரத்த வெள்ளத்தில் மிதந்தார் எம்.ஆர்.ராதா. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் உயிர் பிழைத்தனர்.
" என் முகத்துக்கு நேராக குண்டு பாய்ந்துவந்தது. நான் எப்படிப் பிழைத்தேன்?" என தடயவியல் நிபுணர் சந்திரசேகரனிடம் ஆச்சர்யத்தோடு கேட்டார் எம்.ஜி.ஆர். ராதா பயன்படுத்திய ரவைகளை தீவிரமாக ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்தார் சந்திரசேகரன். 'அந்தத் துப்பாக்கி ரவைகள் பதினைந்து வருடங்களுக்கு முன்பு வாங்கப்பட்டவை. அவற்றை ஒரு டப்பாவில் போட்டு அடிக்கடி பயன்படுத்தும் மேஜை டிராயரில் வைத்திருந்தார். டிராயரில் இருந்த துப்பாக்கி ரவைகள் ஒன்றுக்கொன்று உருண்டு தேய்ந்ததால், ரவையின் மேல் பிணைக்கப்பட்டுள்ள கேட்ரிஜ் கேசின் பிடிமானம் தளர்ந்து போய்விட்டது. அதனால்தான் இரண்டு பேரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படவில்லை' என விளக்கினார்.
துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு என்னவெல்லாம் காரணம் என அரசுத் தரப்பு, நீதிமன்றத்தில் தெளிவாகவே எடுத்து வைத்தது. எம்.ஆர்.ராதாவின் வக்கீலாக என்.டி.வானமாமலை ஆஜரானார். ராதாவுக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே நீண்டநாட்களாக இருந்துவரும் கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது. தொழிலாளி திரைப்பட சூட்டிங்கின்போது எம்.ஜி.ஆர், எம்.ஆர். ராதா சம்பந்தப்பட்ட ஒரு காட்சியில், எம்.ஜி.ஆர், ‘இந்த பஸ் இனி தொழிலாளர்களின் நம்பிக்கை நட்சத்திரம்' எனப் பேச வேண்டும். ‘இந்த பஸ்தான் இனி தொழிலாளர்களின் உதயசூரியன்' என மாற்றிச் சொன்னார் எம்.ஜி.ஆர். இதனால் கடுப்பான எம்.ஆர்.ராதா, ‘சினிமாவுக்குள்ள உன் கட்சி சின்னத்தைக் கொண்டு வராதே... வெளிய போய் மேடை போட்டு பேசு' என சண்டை போட்டிருக்கிறார். இதனால் கோபமான எம்.ஜி.ஆர் படப்பிடிப்பை நிறுத்த, தயாரிப்பாளர் சின்னப்பா தேவர் வந்து சமாதானப்படுத்தினார். இறுதியில் குறிப்பிட்ட அந்தக் காட்சியில் ‘நம்பிக்கை நட்சத்திரம்’ என்று பேசவைத்தார் சின்னப்பா. இதுதவிர, காமராஜரைக் கொல்ல சதி செய்யப்படுவதாகவும் ராதா எழுதிய ஒரு கட்டுரை, எம்.ஜி.ஆரை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியிருந்தது. வழக்கு விசாரணையில், எம்.ஆர்.ராதாவை வளரவிடாமல் சினிமா வாய்ப்புகளை எம்.ஜி.ஆர் கெடுத்தார் என்றெல்லாம் காரணம் சொல்லப்பட்டது.
'எம்.ஜி.ஆரும் அவருடைய துப்பாக்கியால் என்னை நோக்கிச் சுட்டார்' என ராதா தரப்பில் சொல்லப்பட, அதை முறியடித்தது தடயவியல் துறை. கே.சி.பி. கோபாலகிருஷ்ணன், பி.சந்திரசேகரன் மற்றும் துப்பாக்கி நிபுணர் ஏ.வி.சுப்பிரமணியம் ஆகியோர் அடங்கிய குழு, வெடிக்கப்பட்ட 3 குண்டுகளும் ராதாவின் துப்பாக்கியில் இருந்து மட்டுமே வெளியேறியது என நிரூபித்தனர். இந்த சம்பவம் நடந்தபோது, கண்ணால் பார்த்த ஒரே சாட்சி. தயாரிப்பாளர் வாசு மட்டும்தான். அவர் தன்னுடைய சாட்சியத்தில், 'எம்.ஜி.ஆரை சுட்டுவிட்டு அதே துப்பாக்கியால் இரண்டு முறை தன்னை சுட்டுக் கொண்டார் ராதா' என வாக்குமூலம் கொடுத்தார். 'எம்.ஜி.ஆர் செல்வாக்குமிக்கவர் என்பதால் வாசுவை மிரட்டி பொய் சொல்ல வைக்கின்றனர்' என ராதா தரப்பில் வாதம் செய்தாலும், முடிவில் சிறைத்தண்டனைக்கு ஆளானார் ராதா.
நீதிமன்றத்தில் வாதம் நடந்தபோது பல சுவாரஸ்ய சம்பவங்களும் நடந்தன. எம்.ஆர்.ராதா லைசென்ஸ்
இல்லாத துப்பாக்கியால் சுட்டார் என அரசுத் தரப்பு வக்கீல் குற்றம் சாட்டிக் கொண்டே போக, ஒருகட்டத்தில் கடுப்பான ராதா, ' யுவர் ஆனர். வழக்கில் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். லைசென்ஸ் இல்லாத துப்பாக்கியால் ராதா சுட்டார் என அரசுத் தரப்பு வக்கீல் சொல்வதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். துப்பாக்கியால் சுட்டதில் நானும் சாகவில்லை. ராமச்சந்திரனும் சாகவில்லை. யாரையும் கொல்லாத ஒரு துப்பாக்கிக்கு லைசென்ஸ் தேவையா?' எனக் கேட்க, அதிர்ந்தது நீதிமன்றம்.
துப்பாக்கிச் சூடு வழக்கு மிக விரைவாக நடந்தது. அதே ஆண்டு நவம்பர் 4-ம் தேதியன்று நீதிபதி லட்சுமணன் தீர்ப்பை வாசித்தார். 'அரசியல் முன்விரோதம் காரணமாக ராதா தன் துப்பாக்கியால் எம்.ஜி.ஆரை சுட்டார். பிறகு தன்னைத்தானே இரண்டு முறை சுட்டுக்கொண்டார். இதை அரசுத்தரப்பு ஆதாரபூர்வமாக நிரூபித்துள்ளது' எனக் கூறி, ராதாவுக்கு ஏழாண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து ராதா உயர்நீதி மன்றத்தில் அப்பீல் செய்தார். மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். அங்கே தண்டனை காலம் ஐந்தாண்டுகளாகக் குறைக்கப்பட்டது. சிறையில் அவருடைய நன்னடத்தை காரணமாக நான்கு ஆண்டுகள் நான்கு மாதங்களில் அவர் விடுதலையானார்.
தண்டனைக் காலத்தில் அவரது சிறைக் கொட்டடியில் வெளிநாட்டு கைதி ஒருவரும் தங்கியிருந்தார். அந்தக் கைதிக்கு ராதா சமைத்துப் போட்ட கேசரியும், சாம்பாரும் ரொம்பவே பிடித்துப் போய்விட்டது. ஒருநாள் பேச்சுவாக்கில் ஒன்றைக் கேட்டார் ராதா. " ஏன்யா வெள்ளைக்காரா...உங்கள் ஊரில் எப்படி... 30 வருஷம் வக்கீலாக இருக்கறவர்தான் ஜட்ஜா வருவாரா?" எனக் கேட்க, அந்த வெளிநாட்டுக் கைதியும், " ஆமாம். எங்கள் ஊரிலும் அதே வழக்கம்தான்" எனச் சொல்ல, பலமாக சிரித்த ராதா, " அதெப்படிய்யா...முப்பது வருஷம் பொய்யை மட்டுமே வாழ்க்கையாக வச்சுட்டு வாதாடி சம்பாதிக்கற ஒருத்தர் ஜட்ஜா வந்து உட்கார்ந்ததும், மை லார்டுன்னு சொல்றோமே. இந்த அநியாயம் வேறெங்காவது நடக்குமா?" எனக் கேட்க, வெளிநாட்டுக் கைதி யோசனையில் ஆழ்ந்தாராம். அதுதான் எம்.ஆர்.ராதா.
துப்பாக்கிச் சூடு வழக்கில் இருந்து வெளியே வந்துவிட்டாலும், 1975-ல் இந்திரா காந்தி அரசின் நெருக்கடி நிலை அறிவிப்பின்பின்போது, மிசா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார் ராதா. 'திராவிடர் கழகத்துடன் தொடர்பில்லை' என எழுதித் தந்தால் விடுதலை செய்வதாகக் கூறியும், நிபந்தனையை ஏற்க மறுத்து பதினொரு மாதங்கள் சிறையில் இருந்தார் எம்.ஆர்.ராதா. கடைசிவரை, எந்தப் பேச்சுவார்த்தையும் வைத்துக் கொள்ளாமல் இருந்த எம்.ஜி.ஆரும் ராதாவும் சந்தித்துக் கொண்டது பெரியாரின் இறப்பின்போதுதான். அப்போதுகூட,' உங்களுக்கு பக்கத்தில் இருப்பவர்களை நம்ப வேண்டாம்' என ராதா கூறியதாகவும் ஒரு செய்தி உண்டு.
அதன்பின் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் வெற்றிகரமாக நாடகம் நடத்திவிட்டு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டதையடுத்து திருச்சி திரும்பினார். 1979-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி இறந்தார். அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள முன்வந்தாலும், ராதா குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். அரசு மரியாதையையும் ஏற்றுக் கொள்ளவில்லை.
-ஆ.விஜயானந்த்
நன்றி: விகடன்; நன்றி R கந்தசாமி ஸார்.
====================================================================================
60 களின் காது மெஷின் விளம்பரம்.
ரசிக்க இரண்டு பழைய படங்கள்...
கோபுலு, சித்ரலேகா படங்கள் அழகு.
பதிலளிநீக்கு