26.10.25

நாங்கள் தரிசனம் செய்த கோயில்கள் - 29 :: நெல்லைத்தமிழன்.

 


தஞ்சை பெருவுடையார் கோயில்

எதற்கும் ஒத்துவராத தன் தம்பி ஏகோஜியின்மேல் வெறுப்புற்ற சத்ரபதி சிவாஜி, ரகுநாத் நாராயண் என்பவரின் தலைமையில் மராட்டியப் படையைத் தஞ்சையைத் தாக்குவதற்கு அனுப்பி, அய்யம்பேட்டையில் நட ந்த சண்டையில் தஞ்சைப் படை தோல்வியைத் தழுவியது. பின்பு, ஏகோஜியின் மனைவி தீபாம்பாள், ரகுநாத் நாராயணனுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு உடன்படிக்கை செய்துகொண்டார். தஞ்சைப் பகுதி மாத்திரம் ஏகோஜிக்கு உரியது என்றும் அதற்காக 3 லட்சம் பிர்தோக்கள் சிவாஜிக்கு விலையாகக் கொடுக்கவேண்டும் என்று ஏற்பாடாயிற்று. 

தன்னை நம்பிய விஜயராகவ நாயக்கருக்கு துரோகம் செய்துதான் ஏகோஜி ஆட்சியைப் பிடித்தார். சத்ரபதி சிவாஜியின் நடவடிக்கைகளால் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வந்தார். பிறகு சிவாஜி விட்டுக்கொடுத்தபோதிலும் ஏகோஜி மன அமைதியின்றி தன் இறுதிக்காலத்தை தஞ்சையில் கழித்தார்.. கிபி 1680ல் சத்ரபதி சிவாஜி இறந்தார். ஏகோஜி 1683ல் மரணமடைந்தார். இன்றைக்கும் மராத்திய மன்னர் குடும்பத்தில் இருப்பவர்கள் சத்ரபதி சிவாஜியின் வாரிசுகள் என்பதை நினைவில் வைக்கவும்.   மராத்தியர்கள் வரலாற்றை நாம் அதற்குரிய தகுந்த சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.

நாயக்க மன்னர்களில் செவ்வப்ப நாயக்கர் மற்றும் அச்சுதப்ப நாயக்கர் இருவரும் தஞ்சைப் பெரிய கோயிலுக்கு நிறைய செய்துள்ளனர்.  இவர்கள் காலத்தில் தஞ்சை இழந்த தன் பொலிவைக் கொஞ்சம் கொஞ்சமாக மீட்டெடுக்க ஆரமித்தது.  

தஞ்சையில் சோழ மன்னர்கள் காலத்தில் வம்புலாஞ்சோலை, சிவதாசன் சோலை போன்ற சோலைகள் இருந்தன. அந்த இடங்களில் சைவ வைணவக் கோயில்களும் இருந்தன. இவை பின் வந்த காலங்களில் பழுதுபட்டோ இல்லை அழிந்துபட்டோ இருந்திருக்கவேண்டும்.  திருமங்கை ஆழ்வார், தன்னுடைய பெரிய திருமொழியில், முதல் பத்து முதல் திருமொழியில்,

எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் எனக்கரசு என்னுடை வாழ்நாள்

அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி அவர் உயிர் செகுத்த எம் அண்ணல்

வம்புலாம் சோலை மாமதிள் தஞ்சை மாமணிக் கோயிலே வணங்கி

நம்பிகாள் உய்ய நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்

என்று பாடியிருக்கிறார். அதன்படி தஞ்சை நகரம் மதிள் சூழ்ந்திருந்தது என்பதும் (இதுபோல சைவ சமயக் குரவர்கள் இஞ்சி சூழ் தஞ்சை என்று பாடியிருக்கின்றனர். இஞ்சி-மதிள்.  இப்படி எழுதலைனா இஞ்சியும் விளைவித்தார்கள் என்று நினைத்துவிட வாய்ப்பு இருக்கிறது),  வம்புலாஞ்சோலை என்ற இடத்தில் தஞ்சை மாமணிக் கோயில் இருந்தது என்றும் தெரியவருகிறது.

செவ்வப்ப நாயக்கரும் அச்சுதப்ப நாயக்கரும், அழிந்திருந்த தஞ்சை நகரில் பேணுவாரின்றி அழிந்துபட்ட நிலையில் இருந்த மாமணிக்கோயிலையும், தஞ்சை ஆளி விண்ணகரத்தையும்-தஞ்சை சீனுவாசபுரத்திற்கு மேற்குப்பகுதியில் சிங்கப்பெருமாள் குளக்கரையில் இருந்த கோயில், வெண்ணாற்றங்கரையில் புதிதாக நிர்மாணம் செய்தனர். இதுவே தற்போது திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த தாக வழிபடப்படும் மணிக்குன்றப் பெருமாள் கோயில், நீலமேகப் பெருமாள் கோயில் மற்றும் சிங்கப்பெருமாள் கோயில் ஆகியவையாகும். வைணவ திவ்யதேசக் கோயிலைக் காத்த பெருமை செவ்வப்ப நாயக்கரையும் அச்சுதப்ப நாயக்கரையும் சேரும். (நாம் தற்காலங்களில் சிறுமதியினால், ஆதித் தமிழர், தெலுங்கர், கன்னடர் என்றெல்லாம் நமக்குள் வித்தியாசம் காண விழைகிறோம். தமிழகத்தைப் புகலிடமாகக் கொண்ட அனைவருமே தமிழர்கள்தாம் என்ற எண்ணம் நமக்குள் வரவேண்டும். ஆழ்வார்களிலோ இல்லை நாயன்மார்களிலோ கொஞ்சம்கூட சாதி என்ற பிணக்கு வந்ததில்லை என்பதையும், அவர்கள் வைணவ ஆழ்வார்கள், சைவ சமயக் குரவர்கள் என்றே அழைக்கப்படுவார்கள், அவர்களில் இவர் உயர்ந்தவர் இவர் தாழ்ந்தவர் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதையும் எத்தனை தடவை எழுதினாலும் பலருக்கு புரிதல் வருவதில்லை.)

மனிதர்கள் எப்போதுமே தான் பிறரை விட உயர்ந்தவர் என்ற எண்ணம் கொண்டவர்கள், அது மூன்று வகையான குற்றங்களில் கொண்டுபோய் விடும். குற்றம்-குணக் குறை, பாவ எண்ணம். கல்விப் பெருமை, செல்வப் பெருமை மற்றும் குலப் பெருமையே அவை மூன்றும். இராமானுச நூற்றந்தா தி என்பது நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் கடைசியாக சேர்த்துக்கொள்ளப்பட்ட அந்தா திப் பதிகம். இதனை இராமானுசர் உயிருடன் இருந்த போது, அவர் முன்னிலையில் திருவரங்கது அமுதனார் என்பவர் அரங்கேற்றியது. இந்தக் கதைக்குள் நுழைந்தால் சுலபத்தில் வெளியில் வரமுடியாது, ஒன்றைத் தொட்டால் இன்னொன்று என்று வரலாறு போய்க்கொண்டே இருக்கும். அந்த இராமானுச நூற்றந்தாதியில், இராமானுசரின் முதல் சீடரும், அவரைவிட வயதில் மூத்தவருமான கூரத்தாழ்வானைப் பற்றிக் குறிப்பிடும்போது 

மொழியைக் கடக்கும் பெரும் புகழான் வஞ்ச முக்குறும்பாம் 

குழியைக் கடக்கும் நம் கூரத் ஆழ்வான் சரண் கூடிய பின்

என்று குறிப்பிடுகிறார். அதில் குறிப்பிட்டுள்ள முக்குறும்புகளையே மூன்று குற்றங்களாக மேலே சொல்லியிருக்கிறேன்.  இதில் கல்வி என்பது நம் முயற்சியினாலும், செல்வம் என்பது நம் முயற்சி மற்றும் பூர்வ கர்மாக்களினால் வருவது. ஆனால் குலப்பெருமை என்பது நம் முயற்சியினால் வருவதல்ல. (அதுவும் நம் பூர்வ ஜென்ம வினைகளினாலேயே வரும். இதற்கு சமீப காலம் வரை ஏகப்பட்ட வரலாற்று உதாரணங்கள் இருக்கின்றன. அதில் இரண்டு வரலாற்றை அடுத்த வாரத்தில் பார்க்கலாம்)

கல்வெட்டுகள் சிதைந்திருப்பது தெரிகிறதா? காலப்போக்கில் எல்லாம் மறைந்துவிடும் போலிருக்கிறது.






இந்தச் சிற்பத்தைத்தான் எல்லோரும் துவாரபாலகர்களின் பிரம்மாண்டத்திற்கு உதாரணமாகச் சொல்லுவார்கள். பாம்பின் வாயில் யானை, அந்தப் பாம்பை மிதித்துக்கொண்டு துவாரபாலகரின் கால் எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கிறது, அப்படியென்றால் துவாரபாலகர்கள் சிறிய குன்றினை ஒத்த வடிவம் என்று பார்ப்பவர்கள் புரிந்துகொள்ளும்படியாக அமைத்திருப்பர். சும்மாவா சொல்வார்கள் தஞ்சை பெருவுடையார் கோயிலை தக்ஷிண மேரு என்று.   

தஞ்சை துவாரபாலகர் சிலையில், அரவு விழுங்கும் யானை என்பதெல்லாம் பல தடவை கேள்விப்பட்டதுதான். ஆனால் அந்த உவமை/உதாரணம் எதிலிருந்து வந்தது என்பதுதான் சுவாரசியம்

திருஞானசம்பந்தர் திருக்கயிலாய மலையின் சிறப்பையும், அதன் பிரம்மாண்டத்தையும் தான் பாடிய திருக்கயிலாய பதிகத்தின் இரண்டாம் பாடலாக,

“புரிகொள் சடையார்  அடியர்க்கு எளியர் கிளி சேர் மொழி மங்கை

தெரிய உருவில் வைத்து உகந்த தேவர் பெருமானார்

பரிய களிற்றை அரவு விழுங்கி மழுங்க இருள் கூர்ந்த

கரிய மிடற்றர் செய்ய மேனிக் கயிலை மலையாரே”

எனப் பாடி, உமையொரு பாகனாகியவரும் கரிய மிடற்றினை உடையவரும் (ஆலகால விஷத்தை உண்டதால் கருத்த கழுத்தினை உடையவர்), சடைமுடியை உடையவரும், அடியவர்களுக்கு எளியவரும் ஆன கயிலைநாதன் அமர்ந்திருக்கும் அம்மலை எவ்வளவு பிரம்மாண்டமுடையது எனின் அங்கு ஊர்ந்து கொண்டிருக்கும் பாந்தள் எனும் பெரும் பாம்பு தன் வாயால் யானை ஒன்றினை விழுங்கிக் கொண்டிருக்கும் காட்சியை உடையது எனக் கூறியுள்ளார். அங்கிருந்து அந்தக் காட்சியை எடுத்து, அந்தப் பாம்பையே மிகச் சிறிது என்று எண்ணும்படியான அளவுள்ள துவாரபாலகர்கள் என்றால் அது எவ்வளவு பிரம்மாண்டமானது? அப்படியென்றால் அந்தக் கோவில் எவ்வளவு பெரியது, அதனுள் உறைந்திருக்கும் இறைவன் எவ்வளவு பெரியவர் என்பதை நம் கண் முன்னே கொண்டுவருகிறது இந்தச் சிற்பம்.

ஒரு காட்சியின் பிரம்மாண்டத்தை விளக்க ஆழ்வார்களும் இத்தகைய உதாரணங்களைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

கரிய மாமுகில் படலங்கள் கிடந்து அவை முழங்கிட, களிறென்று

பெரிய மாசுணம் வரையெனப் பெயர்தரு பிருதியெம் பெருமானை

வரிகொள் வண்டறைப் பைம்பொழில் மங்கையர் கலியனது ஒலிமாலை

அரிய இன்னிசை பாடு நல் அடியவர்க்கு அருவினை அடையாவே  

பெரிய திருமொழி முதல் பத்தில் இரண்டாவது திருமொழியில், திருப்பிரிதி எம்பெருமானைப்பற்றிப் பாடும்போது இந்த வர்ணனையை எடுத்தாள்கிறார். பெரிய அளவில் கருப்பான மேகக் கூட்டங்கள் ஒன்றன்பின் ஒன்றாகக் கர்ஜனை செய்துகொண்டு யானைகளைப் போன்று நகர்கின்றன. அதனைப் பார்த்த மிகப் பெரிய பாம்பு ஒன்று, மலைகளே நகர்கின்றதோ என்று எண்ணி தன் இருப்பிடத்தைவிட்டு நகர்ந்து செல்கின்றதாம்.

திடுமென பெரிய திருமொழி (திவ்யப்பிரபந்தங்களில் திருமங்கையாழ்வாரால் பாடப்பெற்றது) பக்கம் நகர்ந்தபோது, வைணவ திவ்யதேசங்கள் பற்றிய நினைவும் வந்தது. அது வம்புலாம் சோலை தஞ்சை மாமணிக்கோயில் இடமாற்றம் செய்யப்பட்டதற்குச் சம்பந்தமானது. அடுத்த பகுதியில் எழுதப்பார்க்கிறேன்.




மேற்பகுதியில் கல்லினால் செய்யப்பட்ட வளையம். கூரை மரத்தால் செய்தது போலவே தோன்றும்படி கல்லினால் வடிவமைத்திருக்கிறார்கள்.


இதைப் பார்த்தபிறகுதான் மரத்திலும் இந்த மாதிரிச் செதுக்கினார்களா இல்லை கேரளத்தில் மரத்தில் இந்த மாதிரி அழகுபடுத்துவதைப் பார்த்து, சோழமண்டலத்தில் ஏன் கல்லில் வடிக்கக் கூடாது என்று நினைத்துச் செய்தார்களா?


கையால் எழுதினால்கூட இவ்வளவு அழகாக எழுத முடியாதே. கல்லில் எப்படி இவ்வளவு அழகாகச் செதுக்கினார்களோ. ஒவ்வொரு கல்லிற்கும் எண்ணிட்டு, அவற்றில் செய்திகளைச் செதுக்கி, அதனைக் கோயிலில் அததற்கு உரிய இட த்தில் பொருத்தியிருக்கிறார்கள். செய்தியில் பிழை வந்துவிடக் கூடாது, அதனைச் சரிபார்க்கும் ஆட்கள் இருப்பர். செதுக்குபவனுக்கு தெளிவாக ஓலையில் என்ன செதுக்க வேண்டும், ஒவ்வொரு கல்லிலும் எவ்வளவு செதுக்கவேண்டும் என்றெல்லாம் சொல்லியிருப்பார்கள். நினைக்கவே பிரமிக்கவைக்கும் வேலை இது. 







இன்றைக்கு படங்களும் வரலாறும் ரொம்பவே அதிகமாகிவிட்டது இல்லையா? அடுத்த வாரம் தொடரலாமா?

(தொடரும்) 

65 கருத்துகள்:

  1. அய்யம்பேட்டையில்//

    அய்யம்பேட்டை என்றதுமே எனக்கு உடனே தில்லுமுல்லு ரஜனியின் டயலாக்தான் நினைவுக்கு வரும்.

    ஸ்ரீராம் உங்களுக்கும் வந்திருக்குமே!!!!!!!ஹாஹாஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன். கரெக்டா?

      கீதா

      நீக்கு
    2. நான் வந்து சொல்வதற்குள் நீங்களே சொல்லி விட்டால் எப்படி!!!

      இதனுடன் கூட தஞ்சையில் படித்த காலங்களில் எங்கள் ஆசிரியர்களில் ஒருவரான ஹரிஹரன் அடிக்கடி சொல்வார், "அய்யம்பேட்டை வேலை" என்று.  அதுவும் நினைவுக்கு வருகிறது!

      நீக்கு
    3. ஹாஹாஹா.....

      உங்க ஆசிரியர் சொல்லியிருந்ததும் முன்னரே தெரிந்திருந்தால் அதையும் சொல்லியிருப்பேன் ஹிஹிஹிஹி

      கீதா

      நீக்கு
    4. வாங்க கீதா ரங்கன்.. வரலாற்றில் சில பெயர்களைப் படிக்கும்போது சமகாலப் பெயர்களும், அது சம்பந்தமான தகவல்களும் நினைவுக்கு வரும். திருச்சியில் எந்த ஊர் கத்தரிக்காய் மிகவும் புகழ் பெற்றது?

      நீக்கு
    5. வாங்க ஶ்ரீராம். இந்த அய்யம்பேட்டை வேலை, என்ற வார்த்தையை எஸ் வி சேகர் டிராமாக்களில் அடிக்கடி கேட்டிருக்குறேன். சில வருடங்களுக்கு முன் எஸ் வி சேகரைப் பார்த்தேன். என்னா சிகப்பு அந்த மனுஷன்.

      நீக்கு
    6. சினிமா! சினிமாவின் சக்தி வாய்ந்த அந்த அபார விளக்குகளின் முன் நின்றால் எப்படிப்பட்ட கருத்த தோலும் சிவந்து போகும்!!

      நீக்கு
    7. இல்லை ஸ்ரீராம். இது நல்ல சிவப்பு நிறம். ஜெயலலிதா, எம்ஜிஆர் போன்றோர்களின் நிறம்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. சரணம் சண்முகா. சமீப காலங்களில் என் உடலில் ஏதோ பிரச்சனைகள் வருகின்றன. உங்கள்டேர்ந்து எனக்கு ஷிஃப்ட் ஆயிடுச்சோன்னு யோசிப்பேன் துரை செல்வராஜு சார்.

      நீக்கு
  3. 3 லட்சம் பிர்தோக்கள்//

    இதன் மதிப்பு என்னவாக இருந்திருக்கும்?

    ஏதோ ஜப்பான் கரன்சி வால்யூ போல இருக்கே!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிர்தோ -  ஜப்பானியர் நினைவு வரவில்லை.  அக்பர் அரசவைக் கவிஞர்களில் ஒருவர் நினைவுக்கு வருகிறார்!

      அப்போதைய பணங்களில் பகோடா (ஆனியன் பகோடா அல்ல!) என்று கேள்விப்பட்டிருக்கிறேன். 

      நீக்கு
    2. நானும் இதன் மதிப்பு என்னவாயிருக்கும் எனத் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க இயலவில்லை. வரலாற்றில் ரொம்ப உள் நுழைந்தால் ஒவ்வொருவர் பிம்பமும் சிதைவுறுகிறது.

      நீக்கு
    3. பகோடாக்கள் கரன்சி பற்றி பல குறிப்புகள் உள்ளன ஶ்ரீராம். காரணம் ஆங்கிலேயர் வரலாற்றிலும் இது வருகிறது. என்ன இருந்தாலும் சாதாரண மக்களிடம் இவை புழங்கியதில்லை.

      நீக்கு
  4. இன்றைக்கும் மராத்திய மன்னர் குடும்பத்தில் இருப்பவர்கள் சத்ரபதி சிவாஜியின் வாரிசுகள் என்பதை நினைவில் வைக்கவும். //

    அப்ப ரஜனியும் இதில் அடக்கமா? சிவாஜி ராவ் ??!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ.. அப்படித்தான் இந்த ஐயம்பேட்டை வசனமும் படத்தில் வந்ததா?

      நீக்கு
    2. ஒரு "ஐயம்பேட்டை ஊர்" எத்தனை நினைவாற்றலை எழுப்பித் தருகிறது. வாழ்க தில்லு முல்லு படம்.

      நீக்கு
    3. இருக்கலாம் கீதா ரங்கன். இதுபோலவே ஷாருக்கானும் பெரிய சிறப்பான முன்னோர்களைக்்கொண்டவர், என்ன ஒண்ணு அவர்கள் இந்தியர்கள் அல்லர்.

      நீக்கு
  5. ஆழ்வார்களிலோ இல்லை நாயன்மார்களிலோ கொஞ்சம்கூட சாதி என்ற பிணக்கு வந்ததில்லை இவர் உயர்ந்தவர் இவர் தாழ்ந்தவர் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதையும் எத்தனை தடவை எழுதினாலும் பலருக்கு புரிதல் வருவதில்லை.//

    அதைச் சொல்லுங்க. அறிவிலிகள். சும்மா சண்டை போட்டுக் கொண்டு. எல்லாம் ஒருவனே என்று பார்த்துவிட்டால் எந்தவிதப் பாகுபாடுமே வராது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா ரங்கன்... அனைவரும் சமமே. இது ஆழ்ந்து யோசித்தால் தெரியும். இருந்தாலும் மனித மனம் தனக்குத் தானே உயர்வு தாழ்வு கற்பித்துக்கொண்டு, நான் அவனைவிட உயர்ந்தவன் என்று கற்பித்துக்கொள்கிறது.

      நீக்கு
    2. //அ.சி.ஒ. அ வா.ம // சோவின் குமுதம் தொடர் மாதிரி இப்படி எழுதினால் சட் என்று என்னவாயிருக்கும் என்று யோசிக்க வைக்கிறது.

      நீக்கு
    3. கீதா ரங்கன்... சாதி மற்றும் குலப் பெருமை பலரிடத்திலும் ஆழ்வார்கள் ஆசாரியர்கள் காலங்களிலும் இருந்திருக்கின்றன. திருப்பாணாழ்வாரையும் ந்ந்தனாரையும் ஏற்றுக்கொள்ளாத அந்தணர்கள் பலர் அவர்கள் காலத்திலேயே இருந்திருக்கின்றனர். இதைப் பற்றியும், ஆசார்யர்கள் வாழ்வில் நடந்த இத்தகைய செயல்கள், காலத்தை மீறிய ஞானத்துடன் கூடிய செயல்களை எனக்கு இங்கு எழுத ஆசை. பார்ப்போம் வாய்ப்பு அமைகிறதா என்று.

      நீக்கு
  6. துவாரபாலகர் -

    நெல்லை, நீங்க சொல்லியிருக்காப்ல ஒரு விஷயத்தை அதன் பிரம்மாண்டத்தைச் சொல்ல இப்படி உருவகப்படுத்திச் சொல்லும் போதுதான் அதன் பிரம்மாண்டத்தை உள்வாங்க முடியும் என்பதால்தான் என்பது எனக்கும் தோன்றும். அப்படியே லிட்டரலாகக் கொள்ளக் கூடாது. அதன் உட்பொருள் தான் முக்கியம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாச் சொன்னீங்க..

      நீக்கு
    2. கவிஞர்கள் கருத்தை உருவகமாகத்தான் கொள்ளணும். லிட்டரல் அர்த்தம் கொண்டால் அனர்த்தமாகிவிடும். தங்கமயமானவன் இறைவன் என்று சொன்னால் அவனுடைய உயர்வு, பிரகாசம் போன்றவற்றின் குறியீடாகத்தான் கொள்ளவேணுமே தவிர உலோகத்தின் எண்ணம் வரக்கூடாது.

      நீக்கு
  7. கூரை மரத்தால் செய்தது போலவே தோன்றும்படி கல்லினால் வடிவமைத்திருக்கிறார்கள்.//

    ஆமாம் மரத்தால் போலவே டக்கென்று தெரிந்தது ஆனால் கல்தான் என்பதும் புரிந்தது. அசாத்திய கைவண்ணம்.

    அடுத்த சிவப்பெழுத்து அதான் எங்கிருந்து வந்தது என்பது - கோழியிலிருந்து குஞ்சா குஞ்சிலிருந்து கோழியா என்பது போல!!!!!!!

    கேரளத்து வடிவம் ஏதேனின் காலம் பார்த்தால் ஓரள்வு சொல்லிவிட முடியாது? சோழர்கள் கேரளத்திலும் இருந்திருக்காங்களே அங்கு செப்பேடுகள் கிடைத்த தகவலும் உண்டே. இடுக்கி பாலக்காடு, வட கேரளம் எல்லாம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக் கூரை மிக மிக ஆச்சர்யமானது. ஆனால் நாகர்கோயில் பகுதிகளில் பத்மனாபபுரம் அரண்மனை மற்றும் திருவட்டாறு கோயில்களில் மரத்தாலான இத்தகைய அமைப்பைப் பார்த்து வியந்திருக்கிறேன். கல்லில் எப்படி இதனைச் செய்யமுடியும்? வளையம் உட்பட....

      நீக்கு
  8. மேலே உள்ள படத்தில் கல்வெட்டுகள் சிதைந்திருந்தாலும் கீழே உள்ள படத்தில் சற்றுத் தெளிவாகவே இருக்கு

    படங்களும் விவரங்களும் எல்லாமே நல்லாருக்கு நெல்லை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருந்தாலும் தஞ்சைகோயிலில் உள்ள கல்வெட்டுகள் சில சிதைவது வருத்தத்தைத் தந்தது. நல்ல வேளை, ஸ்ரீராமிடம் இருக்கும் பைண்ட் பண்ணப்பட்ட புத்தகங்கள் போல அவை இல்லை, காலத்தால் அவையாகவே சிதைவுற.

      நீக்கு
  9. இந்த வாரம் எனக்கென்னவோ வரலாறும் சுவாரஸ்யமாக இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா. சில சமயங்களில் இவ்வாறு, என் எழுத்துக் குறையினால் நேர்ந்துவிடுகிறது. கணவனின் பிரச்சனையை மனைவியே நேரில் சென்று பேசித் தீர்த்தாள் என்பதுதான் எனக்கு சுவாரசியமாகப் பட்டது.

      நீக்கு
  10. வரலாறு கதா காலட்சேபம் ஆகிவிட்டது ஆனால் துல்லிய நுணுக்கமான வேலைப்பாடுகளைக் காட்டும் புகைப்படங்கள் ஆச்சர்யப்பட வைக்கின்றன.

    சம்பாஜியையும், சாம்பார் வரலாறையும் சேர்த்து ஒரு சாம்பார்சாதம் வரலாறு எழுதுங்கள்.

    ஆரியர் திராவிடர் பிரிவு இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு நிலவும் என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயகுமார் சார். வரலாறு கதா காலட்சேபம் போலத் தோன்றிவிட்டதா? அடடா...

      சாம்பார் வரலாறு, மைசூர்பாக் போன்றவை நிஜமாகவே சரித்திர நிகழ்வுகளாக இருந்திருக்குமா?

      ஆரியர் திராவிடர் பிரிவு அரசியல் சம்பந்தப்பட்டது என்பதால், மக்கள் மனதிலிருந்து அது அகலும்வரை ஓயாது. எந்தக் காரணத்தைக் கொண்டும் உருதைத் தாய் மொழியாகக் கொண்டவர்களைப் பற்றி யாரும் பேசவே அஞ்சுவார்கள்.

      நீக்கு
  11. /செவ்வப்ப நாயக்கரும் அச்சுதப்ப நாயக்கரும், அழிந்திருந்த தஞ்சை நகரில் பேணுவாரின்றி அழிந்துபட்ட நிலையில் இருந்த மாமணிக்கோயிலையும், தஞ்சை ஆளி விண்ணகரத்தையும்-தஞ்சை சீனுவாசபுரத்திற்கு மேற்குப்பகுதியில் சிங்கப்பெருமாள் குளக்கரையில் இருந்த கோயில், வெண்ணாற்றங்கரையில் புதிதாக நிர்மாணம் செய்தனர். /
    ஆக இந்தக் கோயில்கள் பிற்காலத்தில் கட்டப்பட்டனவா? இந்த நரசிம்மப்பெருமாள் ஸம்ஹாரம் பண்ணின அசுரன்தானே (தஞ்சகன்?) தஞ்சைக்குப் பெயர் தானம் செய்தான்? அந்தக் காலத்தில் தஞ்சை ஒரு வைணவத்தலமாக இருந்திருக்கின்றது போலும்.
    படங்கள் (especially, கேரள மர வேலைப் பாடு ஸ்டைல்) வெகு ஜோர். கடைசி படத்தில் இருப்பவர் யார்? எந்த ஸ்வாமி?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சூர்யா சார்... இந்த மூன்று கோயில்களும் பிற்காலத்தில் ஏற்படுத்தப்பட்டவை. தஞ்சை வைணவம் மற்றும் சைவ சமயங்களின் கலவையாக இருந்திருக்கிறது. இரண்டு பிரிவினருக்குமே கோயில்கள் பல இருந்தன. இருந்தாலும் அரசர்கள் சைவ சமயத்தை ஒழுகிவந்தனர் (நாயக்கர் காலத்தில் இது மாறுபட்டது)

      சைவ சமயத்தை நியமமாக ஒழுகிவந்த சோழ அரசர்கள் சிலர், வைணவ சமயத்தை ஒழுகிவந்த பிற நாட்டு இளவரசிகளை மணந்துகொள்வதில் தயக்கம் காட்டினார்கள். அதில் ஒருவராக, கண்டராதித்த சோழரை வரலாறு காட்டுகிறது. இது ஒரு ஆச்சர்யமான வரலாறு.

      கடைசிப் படத்தில் இருப்பவர் மற்றும் அந்த மண்டபத்தில் இருந்த மற்ற பெண் தெய்வங்கள் சட் என்று நினைவுக்கு வரவில்லை. பிறகு எழுதுகிறேன் சூர்யா சார்.

      நீக்கு
  12. வரலாற்றுக் குறிப்புகள் அருமை..

    இன்றைக்கும் இந்தப் பக்கத்தில் -

    ஐயம்பேட்டை வேலை எல்லாம் என்னிடத்தில் வேண்டாம்!.… என்று கடிந்து கொள்வார்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி. ஒரு ஊர் பெயரையே ரிப்பேர் ஆக்கிவிட்டார்களே. பாவம் அய்யம்பேட்டைக் காரர்கள். எஸ் வி சேகர் அடிக்கடி இந்தப் பதத்தை உபயோகிப்பார்.

      நீக்கு
  13. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம். ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்களை ஞாயிறு அன்றே காண்கிறேன். பிரார்த்தனைக்கு நன்றி

      நீக்கு
    2. முந்தி உங்களின் ஞாயிறு பதிவுகளுக்கு தவறால் வந்து விடுவேன். கடந்த இரண்டொரு ஞாயிறு பதிவுகளில் என்னால் வர இயலாமல் போனது. மன்னிக்கவும்., 🙏. ஆனால் சென்ற ஒரு ஞாயிறு பதிவுக்கு சற்று தாமதமாக கருத்து தந்துள்ளேன். இன்று சற்று உடனடி கருத்து. இனி கடவுள் அருளால், தொடர்ந்து வருகிறேன்.

      உங்கள் பதிவு ரசனையானது. சரித்திரம் சம்பந்தபட்ட வகைகளை நான் விரும்பி படிப்பேன். எப்போதுமே எந்த பதிவாக ஆயினும் முழுவதையும் படித்து மனதில் கொள்ளாமல் நான் கருத்துரை தர மாட்டேன். அது என் சுபாவமாகி போய் விட்டது. அதனாலும் மறுநாள், மறுநாள் என்று காலதாமதமாகி போய் விடும். மறுபடியும் மன்னிக்க வேண்டுகிறேன். நன்றி சகோதரரே.

      நீக்கு
    3. இல்லை கமலா ஹரிஹரன் மேடம். சமீபகாலங்களாக உங்களுக்கு வேலைகள் அதிகமாவதை நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். அதனால்தான் என்று எனக்கு புரிந்துகொள்ள முடிகிறது. அதுபோல பதிவை முழுமையாகப் படித்தபிறகுதான் நீங்கள் கருத்திடுவீர்கள்..

      பொதுவா ஞாயிறு வெளியில் செல்லும் வாய்ப்புகள் வருமல்லவா? அதன் காரணமாகவும் இருக்கும். இன்று வந்தது மிக்க மகிழ்ச்சி.

      நீக்கு
  14. யானையைப் பாம்பு விழுங்க பாம்பை துவாரபாலகர் மிதித்துக் கொண்டிருக்கின்ற சிறியதான சிற்பம் தஞ்சையை அடுத்த திருப்பூந்துருத்தி கோயிலிலும் உள்ளது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு எனக்கு அமையுமானால், நிச்சயம் அதனைப் படமெடுத்து இங்கு பகிர்கிறேன்.

      நீக்கு
  15. தஞ்சை மாமணிக் கோயில்களில் ஒன்றான வீர நரசிம்மப் பெருமாள் கோயிலுக்கு 10/11 அன்று மகா சம்ப்ரோக்ஷணம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாகச் சென்றுவாருங்கள் துரை செல்வராஜு சார். உங்களுக்குக் கிடைக்கும் பெரிய வாய்ப்பு அது.

      நீக்கு
  16. சிற்பக் காட்சியுடன் கயிலாயப் பாடலை இணைத்தது சிறப்பு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி. எனக்குமே இந்தத் தொடர்பு அபூர்வமாகக் கிடைத்ததால் பகிரத் தோன்றியது

      நீக்கு
  17. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே.

    இன்றைய ஞாயிறு பதிவு அருமை. பல சரித்திர விஷயங்கள், பல பழங்கால சம்பவங்கள் என தொகுத்து தந்தது அருமை. நாயக்கர் வரலாறு நன்றாக உள்ளது. படங்கள் அனைத்தும் அருமை. ஆழ்வார்கள், அடியார்கள் சாதி சமயத்தை கடந்து வந்ததினால்தான், அவர்களால் எளிதாக தெய்வ அருளை பெற முடிந்தது. பல நல்ல தகவல்களுடன் இன்றைய பதிவு சுவாரஸ்யமாக இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொஞ்சம் இழுவை சரித்திரமாக இருக்கிறதோ கமலா ஹரிஹரன் மேடம்? நன்றி

      நீக்கு
    2. இல்லையில்லை. சுவாரஸ்யமாக இருக்கிறது. தெரியாத/ மறந்து போன பல சங்கதிகளை உங்கள் பதிவு தருகிறது. எப்படி உங்களால், இத்தனை சரித்திரங்களை படித்து நினைவு வைத்துக் கொண்டு வாராவாரம் எழுத முடிகிறது என வியக்க வைக்கிறது. இதை நீங்கள் முயன்று ஒரு மின்னூலாக்கினால் அனைவருக்கும் மிகவும் பயன்படும். இதை முன்பே ஒரு கருத்துரையிலும் சொல்லியுள்ளேன்
      கருத்துப் பதிலுக்கு நன்றி சகோதரரே.

      நீக்கு
    3. நான் புத்தகங்கள் பலவற்றையும் (அந்த அந்த வரலாறு தொடர்புடைய) ஒரே சமயத்தில் படித்து, அதற்கேற்றபடி வரலாற்றைத் தொடர்ச்சியாக எழுதுவேன். உதாரணமா, தஞ்சை பெரிய கோயில் தொடர்புள்ள படங்களைக் கோர்த்து 8 இடுகைகள் தயார் செய்த பிறகு வரலாற்றுச் செய்திகளைப் புகுத்துகிறேன். அதனால் பெரும்பாலும் தொடர்ச்சி அறாது. மிக்க நன்று உங்கள் கருத்துக்கு

      நீக்கு
  18. அய்யம்பேட்டை வேலை என்று இதுவரை இரண்டு பேர் சொல்லி விட்டார்கள். அய்யம்பேட்டை வேலை என்றால் என்ன என்று சொன்னால் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானுமதி வெங்கடேஸ்வரன் மேடம். இருவர் இடையில் சிண்டு முடிவது ஐய்யம்பேட்டை வேலை.

      நீக்கு
  19. நாயக்கர்கள் காலத்தில்தான் தஞ்சை பொலிவு பெற்றது என்று எழுதியிருக்கிறீர்கள். ஆனால் அந்த காலத்தில்தான் கலைஞர்கள் புறக்கணிக்கப்பட்டு மைசூருக்கும், கேரளாவுக்கும் அரசுஆதரவை நாடிச் சென்றதாகவும் கூறுவார்கள். சுவாதித்திருநாளின் அவையில் அப்படிச் சென்ற தஞ்சாவூர் சகோதரர்கள் பொன்னையா,சின்னையா கூட அப்படிச் சென்றவர்கள்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு அரசரிடத்தில் தாங்கள் பொலிவு பெறாமையால், அல்லது வேறு ஒரு அரசர் அழைத்ததால் மற்றொரு சமஸ்தானத்திற்கு கலைஞர்கள் செல்வது இயற்கைதான். ஆனால் தஞ்சையில் நாயக்கர் காலத்தில் கலைஞர்கள் புறக்கணிக்கப்பட்டதாக நான் படிக்கவில்லை. இதனைச் சரிபார்க்கிறேன். கோயில்கள் பல நிர்மாணம் செய்யப்பட்டதால் அது தொடர்பான கலைகள் வளர்ந்திருக்கத்தான் வாய்ப்பு இருக்கிறது

      நீக்கு
  20. மரம் போல தோற்றமளிக்கும் கற்றளி வேலைப்பாடு அபாரம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லையா பா.வெ. மேடம். கற்றளியில் எப்படி இப்படி முயற்சித்தார்கள் என்பது எனக்கு ஆச்சர்யமாகவே இருந்தது.

      நீக்கு
  21. புகைப்படங்களும், சரித்திர தகவல்களும் சுவாரஸ்யம். துவாரபாலகர்கள் சிலைக்கு ஆதார பாடல்களை இணைத்தது சிறப்பு.

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

    கல்வெட்டு எழுத்துக்களின் சீரமைப்பு, அதுபற்றிய உங்களின் கருத்துக்கள் வியக்க வைக்கிறது. மரவேலைப்பாடுகளை போலவே கல்லிலும் வடிவமைத்திருப்பமது பிரமிக்க வைக்கிறது. எத்தனை அரிய செய்திகள் இன்று. கலைக் கண்ணோடு நோக்கினால் ஒரு சிறிய சிற்பம் எத்தனை நுணுக்கமான செய்திகளை நமக்குத் தருகிறது. எல்லாமே அருமை. அக்கறையுடன் சரித்திரத்தையும், சிற்பங்களைப் பற்றியும் ஆராய்ந்து தரும் தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கமலா ஹரிஹரன் மேடம்... இத்தகைய திறமைசாலிகளின் பெயர்கள் வரலாற்றில் கிடைப்பதில்லை. தலைமைச் சிற்பியின் பெயர், ராஜராஜன் பொறித்துவைத்திராவிட்டால் நமக்குத் தெரிந்திருக்காது. பல கோயில்களில் தூண்களில் உள்ள சிற்பங்கள் ஒரே மாதிரி இருப்பதையும் கண்டிருக்கிறேன்.

      நீக்கு
  23. /// சமீப காலங்களில் என் உடலில் ஏதோ பிரச்சனைகள் வருகின்றன. உங்கள்டேர்ந்து எனக்கு ஷிஃப்ட் ஆயிடுச்சோன்னு யோசிப்பேன் துரை செல்வராஜு சார்... ///

    இப்படியான கருத்து
    மிகவும் வருத்தமாக இருக்கின்றது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமீபத்தில் திருப்பதி சென்றேன். அப்போது ஃப்ளூ பிடித்துக்கொண்டது என்று நினைக்கிறேன் (பயணத்தினால் மற்றும் தினமும் நடைப்பயிற்சி செய்வதைத் தொடர்வதால். அந்தப் பயணத்தில் ஹெட்போன் எடுத்துச் செல்லாததால் காதை மூடிக்கொள்ளவில்லை). பிறகு முகத்தில் சில சில இடங்களில் வீக்கம் வருகிறது, பிறகு அதுவாகவே சரியாகிறது. இதெல்லாம் கொஞ்சம் கவலையை விளைவிக்கின்றன. ஆனால் ஜிம் செல்வது நடைப்பயிற்சி செய்வது, க்ரியா செய்வது ஆகியவற்றைத் தொடர்கிறேன்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!