23.10.25

மண்ணெண்ணெய் கியூவில்... தாவணிப் பெண்களின் பின்னே...

 

சர்க்கரை வாங்குவது கூட எளிது. ​முதல் ஒரு வாரத்திலேயே போனால் கொஞ்சம் கூட்டமாகத்தான் இருக்கும்.  அப்புறமாய் போனால் காலை நேரங்களில் சர்க்கரையும், அதன்கூட வாங்க வேண்டிய சில கட்டாய பொருட்களையும் வாங்கி வந்து விடலாம்!   மண்ணெண்ணெய் வழங்கும் நாளாய் இருந்தால் இன்னும் சுத்தம்.  அதை கான்சென்ட்ரேட் செய்யும் ஜனம் காலை நேரம் ப்ரீயாக விட்டு விடும்.  அவசரப்படுத்தும் அம்மாவிடம் அநுபவங்களை\சொல்லி ஆற்றுப்படுத்தி வாங்கி வருவேன்.  ஆனாலும் அவர் அவசரம் அவருக்கு.  டப்பாவில் சர்க்கரை அபாய அளவை எட்டுவது அவருக்கல்லவா தெரியும்!

மண்ணெண்ணெய் வாங்குவதுதான் மிகவும் சிரமமான காரியம்.  இன்று மாலை மண்ணெண்ணெய் போடப் போகிறார்கள் என்று காலையிலேயே அறிவிப்பு வந்துவிடும். காலை நேரங்களில் மண்ணெண்ணெய் கொடுக்க மாட்டார்கள். மற்ற சரக்குகள் வாங்கிக் கொள்ளலாம். ​  இன்று மண்ணெண்ணெய் போடுகிறார்களா என்று தினசரி காலை ஒருநடை ரேஷன் கடை சென்று பார்த்து வந்து தெருவுக்கே தகவல் சொல்லி விடுவேன்.  சமயங்களில் 'இந்த எண்ணுள்ள கார்டிலிருந்து இந்த எண்ணுள்ள கார்டு வரை இன்று' என்று கட்டுப்பாடும் கொண்டு வருவார்கள்.  ஒரு வகையில் வசதிதான்.  கூட்டம் கம்மியாக இருக்கும்.  முதல் நூறு எண்களுக்குள் வந்து விடும் எங்களுக்கு எப்படி இருந்தாலும் முதல் நாள் வரிசை அலாட் ஆகிவிடும்!  மற்ற எண்களுக்கும் அடுத்தடுத்த நாட்களில் கொடுத்து விடுவார்கள்.

மாலை மண்ணெண்ணெய் மட்டும்.  சுமார் மூன்று மணி போலவே போய் மண்ணெண்ணெய்  tin ஐ ஒரு வரிசையில் வைத்துவிட வேண்டும். ​சமயங்களில் மதியம் பனிரெண்டு மணியிலிருந்தே வரிசையில் வைக்கத்தொடங்கி விடுவார்கள்.  வைத்து விட்டு வந்ததும் நம்மளுடைய சீனியாரிட்டி மெயின்டைன் ஆகும். பிறகு கடை திறந்ததும் அந்த வரிசையின் படி சென்று, பில்லை போட்டுக் கொண்டு வந்து, ,tinனை நகர்த்தி நகர்த்திக் கொண்டு வரவேண்டும்.  நம்முடைய நேரம், நடுவிலேயே இரண்டு பேரல்கள் மாற்றப்பட வேண்டிய கட்டாயம் வரும்.  அது வேறு நேரத்தை சாப்பிடும்.

இன்னொன்று, மண்ணெண்ணெய் விநியோகிக்கும் நபருக்கு தெரிந்த, அல்லது கமிஷன் கொடுக்கும் ஆட்கள் சிலர் வரிசையை மீறி நடுவிலே வருவார்கள்.  ஒன்றும் சொல்ல முடியாது.  இம்மாதிரி நாட்களில் மண்ணெண்ணெய் விநியோகிக்கும் ஆட்களுக்கு என்ன அந்தஸ்து இருக்கும் தெரியுமா?  

நம்முடைய டர்ன்  வந்ததும் டின்னை அவர் மண்ணெண்ணெய் ஊற்றும் இடத்தில் வைக்க வேண்டும்.  ​சுற்றிலும் கல் வைத்து நடுவில் டின் அல்லது பிளாஸ்டிக் கேன் வைப்பது போல இடம் செய்து வைத்திருப்பார்.  விழாமல் பிடித்துக் கொள்வது நம் கடமை. ரசீதை நீட்டினால் அவர் வாங்கி கிழித்து ஓரமாக போடுவார்.  ஐந்து லிட்டர் மண்ணெண்ணெய்க்கு அவர் நாலரை லிட்டர் மண்ணெண்ணெய் அளந்து ஊற்றுவதை எடுத்துக்கொண்டு வீடு வந்து சேர வேண்டும். இந்த பிராசஸ் கிட்டத்தட்ட மதியம் மூன்று மணியிலிருந்து மாலை 6:00 வரை ஆகிவிடும். சமயங்களில் ஏழு கூட ஆகும்.​  வரிசையில் நிற்கும்போது என் நண்பர் சுகுமார் அங்கு வந்து விடுவார்.  அவருடைய டி வி எஸ் 50 அங்கு இருக்கும்.அதில் அமர்ந்து கொண்டு அரட்டை அடித்துக் கொண்டிருப்போம்.  பொழுது போகவேண்டுமே...

ஹூம்...  அது ஒரு காலம். கோவிலுக்கு சென்று கலர் பார்ப்பது போல, இங்கும் சில தாவணிகளுடன் கண் சந்திப்புகள் புன்னகைகள் பரிமாறக்கூடிய வாய்ப்பு இருக்கும்!​ பாஸை அப்போதே நான் சந்தித்து விட்டிருந்தாலும், சில சமயங்களில் வேறு சில போனஸ் ஓரப்பார்வைகளும், இதழோர கள்ளப் புன்னகையும் கிடைக்கும்.   பொழுது போகவேண்டுமே...

மண்ணெண்ணெய் வாங்கும் வேலை முடிந்தால் அந்த மாதத்தின் ஒரு பெரிய டாஸ்க் முடித்தாற்போல.  'இனி அடுத்த மாதம்தான், அப்பாடி' என்று மூச்சு விடலாம்.  தஞ்சையில் வந்தது போல தெருவில் வரும் மண்ணெண்ணெய் வண்டிக்காரரும் மதுரையில் இல்லை.

திருமணமானபின் என் மகன்கள் இது மாதிரி பொறுப்பை ஏற்கவே இல்லை.  முதல் சில வருடங்கள் நானும், பின்னர் பாஸும்தான் ரேஷன் வாங்கும் வேலை எல்லாம். .  என் அப்பாவுக்கு அந்தக் கஷ்டத்தை நான் வைத்ததில்லை.  
இப்போது கூட பழைய வீட்டு முகவரியிலிருந்து ரேஷன் கடை இன்னும் இங்கு மாற்றவில்லை.  இரண்டுமுறை ஆன்லைனில் மாற்ற முயற்சித்து, நுண்ணிய முகவரி கோளாறுகளால் வேலையை வெற்றிகரமாக முடிக்க முடியாமல் போனது.  ஒன்றரை வருடங்களுக்கு முன் வரை நான் அலுவலகம் செல்லும்போது ரேஷனில் சர்க்கரை வாங்கி கார்டை உயிர்ப்பில் வைத்திருந்தேன்.  இப்போது என்ன நிலையோ...  மகன்களிடம் சொல்லிக் கொண்டே இருக்கிறேன்..  அவர்களும் இதோ, அதோ என்று இருக்கிறார்கள்.  ம்ஹூம்....

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\


கூரைக்கூச்சல் – 02
"சேட்டை" வேணுஜி 


ஒரு தூரத்து உறவினர் – சேலம் டி.வி.எஸ்ஸில் பணிபுரிந்து, ஓய்வு பெற்றவர், அடிக்கடி என் அப்பாவிடம் சொல்லக் கேட்டிருக்கிறேன்:
‘வீட்டுக்கு அடங்காத புள்ளைகளை கொஞ்ச நாள் பட்டாளத்துக்கு அனுப்பணும்; இல்லேன்னா டி.வி.எஸ்ல வேலை வாங்கிக் கொடுத்திரணும்.’

கம்பனி சீருடை அணிந்து, ஓசூர் ஏரிக்கரையிலிருந்து டி.வி.எஸ் செல்லும் பஸ்ஸுக்காக முதல் நாள் காத்திருந்தபோது அன்னார் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. ‘அப்படியென்னதான் நடக்கும் டி.வி.எஸ்ஸில்? அடிப்பார்களோ?’ என்றெல்லாம் யோசித்தபடியே, அடக்கவொடுக்கமாக வரிசையில் நின்று கொண்டிருந்த டி.வி.எஸ் ஊழியர்களின் வரிசையிலிருந்து வெளியேறி, சற்று தொலைவில் சென்று நின்று, பாக்கெட்டிலிருந்து ஒரு சிசர்ஸ் சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்தபோது, பலர் அதிர்ச்சியுடனும், பலர் ஆச்சரியத்துடனும் என்னைக் கவனிப்பதை நான் கவனித்தேன். என்னமோ பஞ்சமாபாதகத்தை இழைத்து விட்ட படுபாவியைப் பார்ப்பதுபோல, வரிசையில் நின்றிருந்த அத்தனை பேரும் கண்கொட்டாமல் என்னையே பார்த்தார்கள். யாரோ ஒருவர் ‘நாராயணா,’ என்று சொல்ல, சிலர் சிரிப்பதையும் என்னால் கேட்க முடிந்தது. (அப்போதெல்லாம் [1982], தொழிற்சாலைக்குப் போக, அரசுப் பேருந்துகள் தான்; இப்போது கம்பனியே பேருந்துகளை இயக்கி, ஊழியர்களை அள்ளிக்கொண்டு போகிறார்கள்!)

பஸ் தொழிற்சாலையில் நின்றதும், இறங்கி செக்யூரிட்டியில் பெயர், துறை எல்லாவற்றையும் பதிவு செய்து கொண்டிருந்தபோது, அசப்பில் ஆசாத் பயில்வான் போலிருந்த S.O. கேட்டார்; ‘தம்மடிச்சிருக்கீங்களா?’

’ஆமாம் சார்!’

அங்கிருந்து டைம்-ஆபீசுக்குப் போனதும், அதே கேள்வி கேட்கப்பட்டது. ஆர்.வேணுகோபாலன், டோக்கன் எண்; 9302, துறை; Rough and Raw Stores’ என்று எனக்கு ஒரு கார்டு உருவாக்கப்பட்டு, எப்படி கார்டை அனுதினமும் வரும்போதும் போகும்போதும் பஞ்ச் செய்ய வேண்டும் என்ற செயல்முறை விளக்கத்தைச் செய்து காட்டி விட்டு, ‘என்ன சிகரெட் பிடிப்பீங்க?’ என்று கேட்டார். ‘சிசர்ஸ்’ என்று நான் சொல்ல, ‘ஆஹா, நீங்க நம்ம இனம்,’ என்று அவர் உற்சாகத்துக்கு உள்ளாக, முதல் நட்பு தொடங்கியது. கொஞ்ச நேரம் என்னை உட்காரவைத்துவிட்டு, எல்லா ஊழியர்களும் தத்தம் கார்டுகளை பஞ்ச் பண்ணி முடித்தபிறகு, அந்த பிரம்மாண்டமான தொழிற்சாலைக்குள் கூட்டிக்கொண்டு போக, ஜெகம் புகழும் டி.வி.எஸ்-50 பல்வேறு கட்டங்களில் உருவாகிக் கொண்டிருப்பதை, வாய்பிளந்து பார்த்தவாறே நானும் அவருடன் சென்றேன்.
படம்  :  நன்றி இணையம்.
ஸ்டோர்ஸ் மேனேஜரான திருவாளர் ராமச்சந்திரன் அவர்கள் புன்னகை பூக்கும் முகத்துக்குச் சொந்தக்காரர். என்னோடு சில நிமிடங்கள் பேசிவிட்டு, என்னை Rough and Raw ஸ்டோர்ஸுக்குள் அழைத்துச் சென்றார். அதாவது, டி.வி.எஸ்-50க்குத் தேவையான, இன்னும் வண்ணம் அடிக்கப்படாத, chrome-plating, electro-plating போன்ற செயல்பாடுகளுக்கு முற்பட்ட கச்சா இரும்புப் பொருட்கள் அனைத்தையும் பாலட் பாலட்டாக அடுக்கி வைத்திருக்கும் ஸ்டோர்ஸ் அது. அங்கே மிக சாதாரணமான இரண்டு மேஜைகளும் நாற்காலிகளும் போடப்பட்டிருக்க, ஸ்ரீசைலன் என்ற இன்னொரு தங்கமனசுக்காரர் ‘இவர்தான் ஸ்டோர்கீப்பர்; உன்னோட பாஸ்,’ என்று அறிமுகம் செய்விக்கப்பட்டார். எனக்கென்று ஒரு மேஜை, நாற்காலி – புல்லரித்தது.

Good Inwards Stores என்பதுதான் அனைத்துப் பொருட்களையும் லாரிகள், டெம்போக்களிலிருந்து இறக்கி, எண்ணிக்கை, தரம் ஆகியவை சரிபார்க்கப்பட்டு, உரிய மற்ற ஸ்டோர்களுக்குப் பிரித்து அனுப்பப்படுகிற முக்கிய இடம். அங்கிருந்து Fork Lift மூலமாக பொருட்கள் pallotகளில் அலாக்காகத் தூக்கிக்கொண்டு வரப்பட்டு இறக்கப்படும். அந்தந்தப் பாலட்டுகளில் ஜி.ஆர்.என் எனப்படும் Goods Receipt Note ரப்பர் பாண்டுகளில் கட்டப்பட்டிருக்கும். அதை எடுத்து, எந்த வகை பொருள், அதை உட்கார வைக்க வேண்டிய இடம், அதாவது location எதுவென்று சொல்லிவிட்டால், ஃபோர்க் -லிஃப்ட் டிரைவர் சாதுரியமாக, ஏற்கனவே இருக்கிற பாலட்டுகளை இறக்கியோ மாற்றியோ வைத்து வந்த பொருளை அதனதன் இடத்தில் நச்சென்று உட்கார வைத்து விடுவார். ‘Right thing in the right place’ என்று பி.காமில் படித்த Materials Management அடிப்படை என்னவென்று அன்றுதான் என் மரமண்டைக்குப் புரிந்தது.
கம்ப்யூட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், இன்றிருப்பதுபோல மேஜைக்கு மேஜை அமர்த்தி வைக்கப்படுவதுபோல அப்போது கம்ப்யூட்டர்கள் மலிந்து போயிருக்கவில்லை. அட்மின் பிளாக்கில், ஒரு அறையில் ஒரே ஒரு பிரம்மாண்டமான IBM Main Frame கம்ப்யூட்டர் அறையில் முக்கால்வாசியை ஆக்கிரமித்து அழிச்சாட்டியமாக உட்கார்ந்திருந்தது. மற்றபடி, எல்லாரும் பேனா, பென்சில் உதவியோடுதான் பணிபுரிந்து கொண்டிருந்தார்கள். எங்களது ஸ்டோர்ஸில் மொத்தம் 900+ அயிட்டங்கள். ஒவ்வொன்றுக்கும் ஒரு கார்டு உருவாக்கப்பட்டு, என் மேஜைக்கு மேலே ஒரு மரப்பெட்டியில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு ஜி.ஆர்.எண்ணையும், அதற்குரிய கார்டைத் தேடியெடுத்து, வந்ததை வரவாக எழுதி, புரொடக்‌ஷன் ஆசாமிகள் வந்து வாங்கிக்கொண்டு போகையில், அவுட் என்று கழித்து, மீதம் இவ்வளவு இருப்பது என்பதை, கால்குலேட்டர் இன்றி, கணக்குப் போட்டு எழுதி வைப்பதுதான் எனது பணியாக இருந்தது.
ஸ்டோர்கீப்பர் ஸ்ரீசைலன் எனக்கு உதவியதை விடவும், நடராஜன் என்று இன்னொரு ஸ்டோரின் ஸ்டோர்கீப்பர்தான் குருவைப்போல, அம்மாம்பெரிய மரப்பெட்டியிலிருந்து ஒரு குறிப்பிட்ட கார்டை எப்படி சட்டென்று எடுப்பது என்ற சூட்சுமத்தைக் கற்றுக் கொடுத்தார். அதற்குக் காரணம், அவரும் ஒரு சிசர்ஸ் சிகரெட்டர் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். ஆக, சிகரெட் பிடிப்பது உடல்நலத்துக்குக் கேடு என்றாலும், வேலை செய்யுமிடத்தில் சில நாட்களிலேயே நெருக்கமான நட்புக்கள் உண்டாக உதவி செய்யும் என்பதைப் புரிந்து கொண்டேன்.
படம்  :  நன்றி இணையம்.

டி.வி.எஸ் கேன்டீன்கள் குறித்துக் கேள்விப்படாதோர் தமிழ்கூறும் நல்லுலகத்தில் குறைவாகவே இருப்பர். காலைச் சிற்றுண்டிக்கு இட்லி, பொங்கல், உப்புமா, பூரி கிழங்கு என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்று. சிலர் இரண்டுக்கு மேல் எப்போதும் வேண்டாமென்று உணவுக்கட்டுப்பாடு கடைபிடிக்கும் அளவுக்குப் பெரிது பெரிதான இட்லிகள். வாரத்துக்கு ஒரு நாள் இட்லிக்கு வடைகறி உண்டு. சாம்பார், சட்னியெல்லாம் அவ்வளவு கெட்டியாக இருக்கும். சாப்பிட்டுவிட்டு வந்தால், கள்ளிச்சொட்டு போல கெட்டியான டீ ஓரிரெண்டு கேன்களில் வைக்கப்பட்டிருக்கும். குடித்துவிட்டு, டைம் ஆபீஸுக்கு எதிரே இருந்த கழிப்பறையில் முன்னடியில் இருந்த காலி இடத்தில் புகைபிடிப்போர் சம்மேளனம் நிகழும். மதியம் சாப்பாடும், சாம்பார், ரசம், மோர், ஒரு காய், ஒரு கூட்டு அல்லது அவியல், அப்பளம், ஊறுகாய் என்று அமர்க்களமாக இருக்கும். வெள்ளிக்கிழமை என்றால், பாயசமும் உண்டு. ஷிஃப்ட் முடிந்து அவுட்- பஞ்ச் அடித்துவிட்டுக் கிளம்புகையில் ஒரு பாக்கெட் மிச்ஸர் / காரச்சேவு / ஓமப்பொடி / 2 போண்டா / 2 மெதுவடை என்று கொடுப்பார்கள். இது தவிர பகல் 11 மணி மற்றும் மதியம் 3 மணிக்கு அதே கள்ளிச்சொட்டு டீ தள்ளிக்கொண்டு வரப்பட்டு அவரவர் இருப்பிடத்திலேயே விநியோகிக்கப்படும். மொத்தத்தில், இரவுச்சாப்பாடு மற்றும் வெளியே பார்த்துக்கொண்டால் போதும்.

முக்கியமான விஷயம்: பணிக்குச் சேரும்போது நான் ஹோட்டலில் ரூம் எடுத்துத் தங்கியிருந்தேன். கட்டுப்படியாகாது சாமி! அன்று மாலை அப்படியே ஒரு ரவுண்டு அடித்து எங்காவது தங்க இடம் கிடைக்குமா என்று பார்த்துக்கொண்டு வந்தபோது, பாவாடை தாவணியுடன் கொலுசுச்சத்தம் கொஞ்ச இரண்டு மூன்று இளம்பெண்கள் தெலுங்கில் பேசிக்கொண்டு போக, செருப்பாலடித்தாலும் திருந்தாத ஜென்மமாகிய நான், கொஞ்ச நேரம் அவர்களையே ஃபாலோ பண்ணிக்கொண்டு போக, ‘To Let’ பலகையொன்று கண்ணில் பட்டது. கதவைத் தட்ட, பட்டை பட்டையாக விபூதியுடன், குடுமியுடன் ஒரு தெலுங்கு சாஸ்திரி கதவைத் திறந்தார். ‘சரி, இந்த இடம் காலியாக இருந்தாலும் நமக்குக் கிடைக்காது,’ என்று தோன்றினாலும், ‘டு லெட் போர்டு பார்த்தேன். பார்க்க முடியுமா?’ என்று கேட்டேன்.

‘பேச்சிலரா?’

‘ஆமாம்!’

‘அப்ப கொடுக்கிறதில்லை,’ என்று கதவைச் சாத்தப்போனவர், திடீரென்று ‘எங்கே வேலை பார்க்கறீங்க?’ என்று கேட்டார்.

’டிவி.எஸ்,’ என்று நான் சொல்லவும், ‘அதை முதல்லயே சொல்லியிருக்கப்படாதா?’ என்று கதவைத் திறந்து உள்ளே விட்டார்.

‘வாங்க,’ என்று மரியாதையோடு அழைத்துக்கொண்டு போய், நான் நான்கு ஆண்டுகள் தங்கப்போகிற பத்துக்கு ஆறு அறையைக் காட்டினார். அறுபது ரூபாய் வாடகை, இருநூறு ரூபாய் அட்வான்ஸ்! கொடுத்துவிட்டு, அன்று இரவே அறையைக் காலி செய்துவிட்டு, வருகிற வழியில் ஒரு பாய், தலையணை, பிளாஸ்டிக் பக்கெட், மக், ஒரு நல்ல ஆஷ் ட்ரே ஆகியவற்றுடன் குடிபுகுந்தேன். ஒரு டீ குடிக்கலாமென்று வெளியே இறங்கியபோது, அன்று பார்த்த அதே பாவாடை தாவணி பதுமைகள் எதிர்வீட்டு வாசலில் அமர்ந்தபடி பேசிக்கொண்டிருந்தனர்.
’நல்ல சகுனம்,’ என்று எண்ணிக்கொண்டேன்.

என் முகரைக்கட்டையைப் பார்த்ததும், இவனைப் போன்ற Rough and Raw ஆசாமிக்கு இதுதான் லாயக்கு என்று பணி செய்கிற துறையை ஒதுக்கிய டி.வி.எஸ்ஸின் நிர்வாகத்திறமையை எப்படி மெச்சாமல் இருப்பது?

============================================================================================

அந்த வருட லைவ் சர்டிபிகேட் கொடுத்த பென்ஷனரிடம் ஊழியர், 'இந்த வருடம் சர்டிபிகேட் கொடுத்து விட்டீர்கள்.  சென்ற வருடம் விட்டுப்போயிருக்கிறது.  அதையும் கொடுங்கள்' என்று கேட்டதாக ஒரு சம்பவமோ, ஜோக்கோ உண்டு.  அது நினைவுக்கு வருகிறது!

எல்லாம் அரசியல்தான்ப்பா...  தமிழ் இப்போதுதான் நினைவுக்கு வருகிறது.

எத்தனை சதவிகிதம்?!

அப்பாடி..  இது நல்ல தீர்ப்பு!


எஜமானியைக் காப்பற்றவோ, இயல்பான சண்டையிடும் குணத்தாலோ...  எபப்டியோ நல்ல காரியம்.  

தாக்கி விட்டு தாக்கி விட்டு போர் நிறுத்தமாம்.  நம்மூர் அரசியல்வாதிகள் உண்ணாவிரதம் போல!

இப்போ இது ட்ரெண்டிங் போல.  மத்தியஸ்தம் செய்ய ஆளாளுக்கு கிளம்பிட்டாங்க...!


========================================================================================



உயர்ந்து நின்ற
உங்கள் காலங்கள்
நாங்களும் அறிவோம் தாத்தா
தளர்ந்து போக வேண்டாம்
தயங்காமல் நில்லுங்கள்
நிமிர்ந்து.
வளர்ந்து உயரும் காலம்
வரும் மறுபடியும்.
வராவிடினும்
தோளணைத்துச் சொல்கிறோம்
உங்கள் நிழலில் வளர்ந்த
நாங்கள் இருக்கிறோம்
உங்களுக்கு கடைசிவரை 
துணையாக.

============================================================================================
 

கவிஞர் மீராவின் மனைவி இரா.சுசீலா ஒரு நேர்காணலில் சொன்னது

“எனக்கு கல்யாணம் செய்யும் போது 16-17வயசு. அபூர்வமான மனிதர் என் கணவர். சோர்வில்லாதவர். நகைச்சுவையாளர். யாரையும் கடிந்து பேசமாட்டார். எல்லாருக்கும் தன்னாலான நல்லதை செய்யப் பிரயாசைப்பட்டவர்.
ருசித்து சாப்பிடுவார். அசைவ பிரியாணியும், மீன் குழம்பும் ரொம்ப இஷ்டம். காபி ரொம்பப் பிரியம். கேட்கறப்போவெல்லாம் தரணும். ஆசிரியர் போராட்டத்துல கலந்து கிட்டப்ப சிறைக்குப் போய் வந்த பெறகு, ‘அங்க சாப்பாடெல்லாம் எப்படி'ன்னு கேட்டதுக்கு, ‘பிரமாதம், வீட்டைவிடக் காபி நல்லாவேயிருந்துச்சு'ன்னார். (சிரிப்பு)
கடைசியா உடம்பு முடியாமப் போனபோது கூட, ‘பத்தியமாச் சாப்பிட்டு 100 வயசு வாழறதை விட, விருப்பமானதைச் சாப்பிட்டு எந்த வயசிலயும் போகலாம்' அப்படீம்பார்.
இராத்திரி படுக்க ரெண்டு மணியானாலும் விடியக்காலையில 4-5 மணிக்குள்ள எழுந்திடுவார். பேராசிரியர் வேலையிலயிருந்து ஓய்வு பெற்ற பெறகும் கூட, பதிப்பிக்கிற நூல்களுக்கு அச்சுப் பிழை சரி செய்யறது, பேப்பர், இங்க் மத்த பொருட்கள் வாங்கிட்டு வரது, படிக்கிறது, எழுதுறது, தேடி வர்ற நண்பர்கள் கிட்ட பேசறதுன்னு நாள் பூரா ஏதாவது செய்துகிட்டேயிருப்பார்.
தினம் தினம் பயணத்துக்கும், புத்தகக் கட்டுகளை சுமந்து எவ்வளவு தூரமும் நடக்கவும் அசராதவர். வெளியே போனா கடைசி வண்டியாவது பிடிச்சு ஊருக்கு வந்து வீட்டில் படுத்தாத் தான் அவருக்கு நிம்மதியாயிருக்கும்.
இப்பவும் ஊருக்குப் போயிருக்கார்... வந்துடுவார்ன்னு தான் நெனைச்சு நெனைச்சு, ஒரேயடியாப் போயிட்ட துக்கத்தைக் கரைச்சுக்கறேன். சிவகங்கையில எங்க வீட்டுல 30 வருஷமா ஒரு அம்மா வேலை பாத்துச்சு. இப்பவும் நான் ஊருக்குப் போனா அப்படித்தான் சொல்லும்... “ஐயா ஊருக்குப் போயிருக்கார்ம்மா... வந்துடுவார், கவலைப் படாம இருங்க.”
கவிக்கோ விருது வாங்க சென்னை போன போது, என் தம்பி கார்த்திகேயன் வீட்டில் திருவான்மியூரில் ஒரு மாசமிருந்தோம். தினமும் சாயங்காலமானா அப்துல் ரஹ்மான், மேத்தா, இந்தியா டுடேயிலிருந்த விஸ்வநாதன் எல்லாரும் இவரைப் பார்க்க வந்துடுவாங்க. என் தம்பி, இவர், அவங்க மூணு பேர் எல்லாருமா பீச்சுக்கு வாக்கிங் போயிட்டு 8.30 மணிக்கு மேல வீடு திரும்புவாங்க. அந்த ஒரு மாசமும் என்னோடவே அதிக நேரமிருந்தார். ரொம்ப சந்தோஷமாயிருந்தேன் அப்ப.
இவ்வளவு வேலை செய்தவரை, இவ்வளவு பேரோடு பேசியவரை நம்மோட ஒரு மணி நேரமாவது பேச வைக்க முடியாமப் போனோமேங்கற ஏக்கம் எப்பவுமிருந்துச்சு. அதுவும், ஜெயலலிதா கண்ணகி சிலையை பீச்சுல இருந்து அப்புறப்படுத்தினப்போ தீர்ந்துச்சு. ‘அப்படியென்ன அந்த சிலை மேல பயப்படும் படி'ன்னு கேட்டேன் அவரை. அதிசயமா, ஒரு மணி நேரத்துல சிலப்பதிகாரம் காப்பியம் முழுக்க எனக்குப் புரியுற விதமா பாடம் மாதிரி சொன்னாரு. அந்த ஒரு மணி நேரப் பேச்சு இப்பவும் நினைவிருக்கு எனக்கு. மறக்கவே முடியாது.
இப்ப, அவர் இல்லாத ஒரு குறைதான்... எது இருந்தும் அவர் இல்லாதது பெரும் குறைதான் எனக்கு.”
இணையத்தில் படித்து FaceBook ல் பகிர்ந்தவர் திரு சா. கந்தசாமி.
=======================================================================================

பொக்கிஷம் 



விடை....




 
கணேஷ்பாலா FaceBook ல் 21/10.25 ல் பகிர்ந்திருந்த சில ஜோக்ஸ் கீழே...   நன்றி கணேஷ்..  இவை 1937 விகடனில் வந்தவை.



-

57 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா... வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. மண்ணெண்ணெய் மகாத்மியம் நன்றாக உள்ளது. அதை ரேஷன் கடையில் வாங்குவதற்குள் படும் பாட்டை நன்றாக விவரித்துள்ளீர்கள். அம்மா வீட்டில், முக்கால்வாசி சமையல் விறகடுப்புதான். எப்போதும் கரி அடுப்பு பத்தில்லாமல், காப்பி, வென்னீர், ஏதாவது சமையலுக்கு வேண்டியவற்றை வறுப்பதற்கு என பயன்பாட்டில் இருக்கும். மண்ணெண்ணெய் காலங்கள் வந்தவுடன் திரிஸ்டவ் அடுப்பு பழக்கத்திற்கு மாறினோம். அது வசதியாக இருந்தது. ஆனால், வந்த பிறகு நாங்கள் ரேஷன் கடைக்கு சென்றதில்லை அப்பா, பாட்டிதான் செல்வார்கள். பின் எங்கள் அண்ணாவுக்கு அந்த வேலை வந்த போதும், என்னை கடைகளுக்கு அம்மா அனுப்ப மாட்டார்.(ஜாலி)

    என் திருமணத்திற்கு பின்னும். (சென்னை வந்ததும்) எங்கள் நாத்தனார் அவருக்கும், எங்களுக்கும் வாங்கி வருவார்.அப்போது பம்பிங் ஸ்டவில்தான் சமையல், எல்லாமுமே. அந்த இரைச்சலே என் காதுகளை குறி வைத்திருக்கும் என இப்போது நினைக்கிறேன். பின் 83ல் கேஸ் இணைப்பு வந்தவுடன் மண்ணெண்ணெய் உபயோகம் கொஞ்சம் குறைந்தது. ஆனாலும், மறுதடவை சிலிண்டர் தீர்ந்து போன பின் மற்றொரு கேஸ் சிலிண்டர் வரும் வரை அந்த இரைச்சலை கேட்டுத்தானே ஆக வேண்டும். எப்படியோ காலத்தை ஓட்டி மதுரை வந்த பல வருடங்களும் பின் இரண்டாவது சிலிண்டர் கிடைத்தது.

    காலங்கள் ஓடுகிறது. தொடர்ந்து வாழ்க்கையும் அதன் கைப்பிடித்தவாறு செல்கிறது. இத்தனை சிரமங்களையும் பார்த்த பின், இன்னமும், தினமும் சமையல் செய்து சாப்பிடும் ஆசை மட்டும் ஓயவில்லையே என்ற எண்ணம் அடிக்கடி வருகிறது. உயிர் மேல் உள்ள அக்கறை இந்த ஆசையை தக்க வைத்துக் கொண்டு வேடிக்கைப் பார்க்கிறது..! வேறு என்ன சொல்ல..!

    ரேஷன் கார்டு உங்கள் வீட்டு நிலைமைதான் இங்கும்.மகன்கள் கண்டு கொள்ளவே மாட்டேன் என்கிறார்கள். இப்போது அதிகமாக வெளியிடங்களில் அது தேவையில்லை போலும்..! பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்..  எங்கள் வீட்டிலும் அதே..  அதே...   ஆனால் Gas கனெக்ஷன் இல்லாமல்!  பால் காய்ச்சுதல், ரசம் வைப்பது போன்றவை கரி அடுப்பில்.  பம்ப் ஸ்டவ், திரி ஸ்டவ் போன்றவை வீட்டில் இருக்கும். 

      ஒரு பெரியவர் வாராவாரம் தெருவில் கூவிக்கொண்டு வருவார்.  "ஜனதா திரி...   ஸ்டவ் திரி"  அவரிடம் அவ்வப்போது திரி வாங்குவோம்.  ரேஷன் கடைக்கு போகும் பாக்கியம் உங்களுக்கு கிடைக்கவில்லை என்பதில் எனக்கு வருத்தமே!  என்ன ஒரு அனுபவங்கள்!!!

      நீக்கு
    2. // அந்த இரைச்சலே என் காதுகளை குறி வைத்திருக்கும் என இப்போது நினைக்கிறேன். //

      "ஆ...."

      // மற்றொரு கேஸ் சிலிண்டர் வரும் வரை //

      ஆம்.  முதலில் எல்லோருக்கும் ஒரு சிலிண்டர்தானே?  தீர்ந்த உடன் அடுத்த சிலிண்டர் உடனே கிடைக்காது.  லேட்டாகும்!  எல்லோரும் இரண்டாவது இணைப்பு பெற்றுக் கொள்ளலாம் என்கிற அறிவிப்பு பலபேர் மனதில் வயிற்றில் அப்போது பாலை வார்த்தது!

      நீக்கு
  3. டி வி எஸ் கேன்டீனும், வீடு பிடிச்ச மஹாத்மமுமாக சேட்டைக்பாரன் எழுதியது, என் கெம்ப்ளாஸ்ட் காலங்களை நினைவுபடுத்தியது. அது 1989. சேட்டை செய்த வேலையை முற்றிலும் கணினி மயமாக்குவது. ஆறு மாதங்களுக்குள் அதைச் செய்ததால் எனக்கு ரொம்ப நல்ல பெயர் அங்கு.

    கேன்டீன் உணவு இலவசமா? நான் குறைந்த பணம் கொடுத்துப் பெற்றுக்கொள்வேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​வாங்க நெல்லை.. கேன்டீன் உணவு இலவசமாக இருந்திருக்காது என்றுதான் நான் நினைக்கிறேன். குறைந்த விலை இருந்திருக்கலாம். பேச்சிலருக்கு வீடு கொடுக்க விரும்பாதவர் கூட டி வி எஸ் என்றதும் கொடுக்கிறார் என்றால் மக்கள் ம் மனதில் டி வி எஸ் ஸுக்கு எவ்வளவு மதிப்பு இருந்திருக்கும்!

      நீக்கு
  4. ரேஷன் கடைக்கு நான் சென்றதை விரல் விட்டு எண்ணிவிடலாம். வீட்டில் இல்லாத்தும் வேலைக்குச் சென்றதும்தான் காரணம். ரேஷன் கடைக்கார்ர்கள் கூட்டுக் கொள்ளை அடிப்பது கோபத்தைத் தரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மறுபடியும் சொல்வது என்ன என்றால் ரேஷன் கடை செல்லாதது மகிழ்ச்சியா, நஷ்டமா என்பது!  நல்லதொரு பொழுது போக்கை அந்தக் காலத்தில் இழந்திருக்கிறீர்கள்!  ஹா..  ஹா..  ஹா...

      நீக்கு
  5. நண்பர்களின் கனிவான கவனத்துக்கு.. 

    Review வுக்கு செல்வதால் மற்ற கமெண்ட்ஸுக்கு பதில் சற்றே தாமதமாகும் என்பதை.... 

    பதிலளிநீக்கு
  6. ​நான் திருவனந்தபுரத்திற்கு வந்து கல்யாணம் ஆகி குடித்தனம் வைக்கும்போது தான் ரேஷன் அனுபவம் பெற்றேன். வெளி மார்க்கெட்டில் அரிசி கிடைக்காது. எல்லாம் ரேஷன் வழி தான். அதைப்பற்றியெல்லாம் எழுத ஒரு பதிவாகிவிடும்.

    ரேஷன் மண் எண்ணெய் புராணம் விளக்கமாக இருக்கிறது. சேட்டைக்காரன் பதிவும் இன்டெரெஸ்ட்டிங் ஆக இருந்தது. நானும் வேலையில் சேர்ந்தபின் சிகரெட் பிடிக்க துவங்கினேன்.

    துணுக்கு செய்திகள் வித்தியாசமான முயற்சி. காரணம் படங்கள்.
    திரும்பி வந்த கந்தசாமிக்கு நல்வரவு உரித்தாகுக.

    ஜோக்குகள் காலங்களுக்கு ஏற்ப மாறியதை புரிந்து கொள்ள முடிகிறது.
    ஒரு வியாழன் பதிவு நிறைந்தது. புரிந்ததா?

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க JKC சார்...   அரிசி பற்றி எழுதலாமே...   ஒரு பதிவாக்கி விட்டால் போச்சு.  அப்போது வெளிமார்க்கெட்டில் அரிசி கிடைத்ததா இல்லையா என்று எனக்கு நினைவில்லை.

      'உம்' விகாரத்தால் மண்ணெண்ணெய் பதிவும் இன்டெரெஸ்ட்டிங் ஆக இருக்கிறது என்று நைஸாக எடுத்துக் கொள்கிறேன்!!

      துணுக்குச் செய்தியும் ஓகே யா?  அட...!

      வியாழப்பதிவு நிறைவைத் தந்திருக்கிறதா...   மிக்க மகிழ்ச்சி.  ஆனால் புரியவில்லை.  எது நிறைவைத் தருகிறது, எது குறையாக படுகிறது என்று புரியவில்லை!

      நீக்கு
    2. சேட்டைக்காரர் பணியில் சேர்வதற்கு முன்னாலிருந்தே சிகரெட் பழக்கம் வைத்திருந்தார் என்று அவர் எழுத்திலிருந்து தெரிகிறது.

      நீக்கு
  7. ரேஷன் அனுபவங்களில் நானும் சிலதை டிட்டோ செய்து கொள்கிறேன், ஸ்ரீராம். முதலில் ஊரில் இருந்தப்ப. அதன் பின் திருமணத்திற்குப் பின், சென்னையில் இருந்தப்ப, புகுந்த வீட்டிலும் ரேஷனுக்குச் சென்று என்ன போடுகிறார்கள் என்று கேட்டு வாங்கிவந்ததுண்டு. திருவனந்தபுரத்தில் குடியேறிய பின் ரேஷன் அனுபவங்கள்.

    அதை விட, அதற்கு முன் திருவனந்தபுரத்தில்தானே என் மாமா தாமசம். 70களில் அவர் ஊருக்கு வரப்ப, இங்கிருந்து அரிசு கொண்டு போக முடியுமா என்று பார்ப்பார் ஆனால் முடியாது. நடுவில் செக்போஸ்ட். ஏனென்றால் திருவனந்தபுரத்தில் அரிசி கிடைப்பது சிரமம். அரிசி கடத்தல்கள் நிறைய நடந்த நேரம்.

    ரேஷனில் கேரளத்து அரிசிதான் பிரதானமாகக் கிடைக்கும் என்று மாமா சொல்வதுண்டு. இல்லைனா வெள்ளை குண்டு அரிசி.

    அதன் பின் நான் அங்கு குடியேறிய வருடங்களில் பரவாயில்லை கடைகளில் அரிசி கிடைத்தது. நல்ல பொன்னி அரிசி உட்பட.

    ஆனாலும் ரேஷனில் கிடைப்பதை வாங்கியதுண்டு. அது போல சம்பா கோதுமை அங்கு கிடைக்கும். ஊரிலும் கூட சம்பா கோதுமை நன்றாகக் கிடைத்தது. சிவப்புக் கோதுமையும் கிடைக்கும்

    அதில்தான் அப்பவும் சப்பாத்தி செய்தது.

    திருவனந்தபுரத்தில் பஞ்சாப் கோதுமை என்று கொஞ்சம் கலராகக் கிடைத்தது பிந்தைய வருடங்களில். அப்போதுதான் தெரிந்தது இப்படியும் கோதுமை உண்டு என்று.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரேஷன் அனுபவங்கள் எல்லோருக்குமே இருக்கும். கேரளா அரிசி அனுபவங்கள் கொடுமை. நாங்களும் ரேஷனில் அரிசி வாங்கி சமைத்ததுண்டு. அப்புறம் அதை வாங்கி அரிசி மாவு செய்து உபயோகிப்போம். அப்புறம் யாராவது கேட்பவர்களுக்கு கொடுப்போம். நாங்கள் செய்வதில்லை என்றாலும் எங்களிடமிருந்து வாங்குபவர்கள் அதை குறைந்த விலைக்கு தெரிந்தவர்களுக்கு விற்பதுண்டு. என்னுடைய ஆஸ்தான ஆட்டோக்காரரின் மைத்துனி வீட்டில் சிறிய டிபன் கடை வைத்திருந்ததால் அவர்களுக்கு அரிசி பயன்படும் என்று வாங்கிச் செல்வார்.


      நாங்களும் கோதுமை வாங்கி சப்பாத்தி செய்ததுண்டு. ஒரே தூசியும் குப்பையாக இருக்கும். அரைக்கும் முன் புடைத்து சுத்தம் செய்ய வேண்டும்.

      நீக்கு
  8. ஐந்து லிட்டர் மண்ணெண்ணெய்க்கு அவர் நாலரை லிட்டர் மண்ணெண்ணெய் அளந்து ஊற்றுவதை எடுத்துக்கொண்டு வீடு வந்து சேர வேண்டும். //

    ஆமாம். டிட்டோ. எனக்கு மண்ணெண்ணை வாங்கும் போதுதான் ஹையோ கையில் படும், சிந்தாமல் கொண்டு வர வேண்டும். என்னதான் கையை சோப் போட்டுக் கழுவினாலும் கையெல்லாம் மண்ணெண்ணைய் வாசம் வரும்.....வருவது போலவும் தோன்றும் சாப்பிடக் கஷ்டமாக இருக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். கொண்டு வரும்போது சிந்தும். ஒரு மாணவி மண்ணெண்ணெய் வாங்கி அங்கேயே போட்டு கொட்டியபோது அனைவருக்கும் வந்த சோகம்..

      நீக்கு
  9. நாங்களும் இன்னும் சென்னையிலிருந்து இங்கு மாற்றவில்லை ஸ்ரீராம்.

    //நுண்ணிய முகவரி கோளாறுகளால் வேலையை வெற்றிகரமாக முடிக்க முடியாமல் போனது. //

    எங்களுக்கும் இது பிரச்சனையாகிறது. அங்கு சென்று முதலில் பெயர்கள் எல்லாம் எடுத்து இங்கு புதுசாக அப்ளை செய்து, அங்கு அது ப்ராசஸ் எனவே நம்மவர் லீவு போட்டால்தான் நடக்கும். இதுவரை அவரும் முயற்சி எடுக்கவில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒருமுறை ஈ சேவை மையம் செல்லவேண்டும் என்கிற எண்ணம் இன்னும் செயல்படுத்தப்படாமல் இருக்கிறது.

      நீக்கு
  10. ஜெகம் புகழும் டி.வி.எஸ்-50//

    இதுதாங்க எனக்குப் பல வருடங்கள் மயில் வாகனம்!!!!!

    இதன் அருமை பெருமை எல்லாம் நம்ம ஸ்ரீராமுக்குத் தெரியும்!!!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். அதிலேயே ஆவி, சீனுவுடன் டபுள்ஸ் வேற... எதையும் தாங்கும் இதயம் அந்த வண்டிக்கு..

      ஒருநர் ரகசியம்... மதுரையில் எங்களுக்கும் சிலகாலம் அது காதல் வாகனமாக பயன்பட்டிருக்கிறது!

      நீக்கு
  11. எனக்கு ரேஷன் கடைக்குச் சென்ற அனுபவம் இல்லை. எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் இருந்த ஒருவர் எங்கள் வீட்டு ரேஷன் கார்டில் அரிசியைத் தவிர மற்ற சாமான்கள் வாங்கிக் கொள்வார். அவரே எங்களுக்கு சர்க்கரை வாங்கி வந்து விடுவார். எங்களுக்கு ஊரிலிருந்து அரிசி வரும். அதற்கு பர்மிட் வாங்குவதற்கு ரேஷனில் அரிசி வாங்க மாட்டோம் என்று ரேஷன் கடையிலிருந்து கடிதம் தர வேண்டும். தமிழ் நாட்டிற்குள்ளேயே தஞ்சை மாவட்டத்திலிருந்து திருச்சி மாவட்டத்திற்கு அரிசி கொண்டுவர பர்மிட்..என்ன அபத்தம்!
    மண்ணெண்ணெய் வாசலில் வண்டியில் வரும். அதை வைத்து ரா.கி.ரங்கராஜன் 'ஷ்ணாயில்..' என்று ஒரு சிறுகதை எழுதியிருந்தார். எனக்கு அந்தக் கதைதான் நினைவுக்கு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அக்கா... அதற்கு ஏன் அந்தப் பெயர் வந்தது என்பது புரியாத புதிர். ரா கி ரங்கராஜனின் அந்தக் கதை... எனக்கு தலைப்பு நினைவிருக்கிறது. கதை நினைவில் இல்லை.

      தமிழ்நாட்டுக்குள்ளேயே அரிசிக்கு பர்மிட் அபத்தம்தான். ஆனால் பக்தவச்சலம் அரசு அரிசியினாலேயே கவிழ்ந்தது நினைவிருக்கிறதா?

      நீக்கு
  12. ஹிந்து பத்திரிகை காண்டீன், பி.ஹெச்.இ.எல். காண்டீன் போன்ற இடங்களில் கூட subsidized rate தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறைய கேன்டீன்களில் அப்படிதான். பார்லிமென்ட் கேன்டீன் விக்கலை விவரம் வயிற்றெரிச்சல். அங்கிருபப்வர்கள் எல்லாம் ஏழைகள் அல்லவா?

      நீக்கு
  13. ஜோக்குகள் சுமார்தான். மீரான் மனைவியின் பேட்டியை படித்ததும் ஏனோ சுஜாதாவின் மனைவியின் பேட்டி நினைவுக்கு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா.. ஹா... யாராவது சொல்கிறார்களா என்று பார்த்தேன். சொல்லி விட்டீர்கள்!

      நீக்கு
  14. பொருளாதார சுதந்திரம் உள்ள பெண்ணுக்கு ஜீவனாம்சம் தர வேண்டியதில்லை என்னும் தீர்ப்பு முன்பே வந்து விட்டதல்லவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி என்றால் ஆர்த்தி ரவி உட்பட நிறையபேர் இன்னமும் ஜீவனாம்சம் கேட்பததே? ஒரு பெண் தனக்கு BMW கார் வேண்டும், நான்கு கோடியில் வீடு வேண்டும், இவளவு சொச்சம் என்பதுபோல சொல்லி சில லட்சங்கள் ஜீவனாம்சம் வேண்டும் என்று கேட்டாரே... நினைவிருக்கிறதா?

      நீக்கு
  15. ‘Right thing in the right place’ என்று பி.காமில் படித்த Materials Management அடிப்படை என்னவென்று அன்றுதான் என் மரமண்டைக்குப் புரிந்தது.//

    எப்பவுமே தியரியோடு கூட நடைமுறைக் கல்வியும் இருந்தால் நல்லது நன்றாகப் புரியும்.

    எனக்கும் பாடங்களைப் படித்துக் கக்குவதை விடப் பார்த்து தெரிந்து கொள்வது அனுபவத்தில் அதைக் கற்பது சட்டென்று ஏறிவிடும்.

    டிவிஎஸ் கேண்டீன் குறித்து நன்றாகவே தெரியும்.

    //Rough and Raw ஆசாமிக்கு இதுதான் லாயக்கு என்று பணி செய்கிற துறையை ஒதுக்கிய டி.வி.எஸ்ஸின் நிர்வாகத்திறமையை எப்படி மெச்சாமல் இருப்பது?//

    ஹாஹாஹா மேலே முதலில் துறையின் பெயரைப் பார்த்ததுமே என் மனதில் தோன்றி கருத்தை அடித்துவிட்டேன் அதெப்படி டி வி எஸ் ஸிற்கு நம்ம வேணுஜி சேட்டைககரர் என்று தெரிந்திருக்கு கரெக்ட்டா கொடுத்திருக்காங்களேன்னு....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுவாரசியமாக இருக்கிறது தொடர்!

      கீதா

      நீக்கு
    2. சொல்ல விட்டுப் போன ஒன்று - சேட்டை சிகரெட் பிடிச்சப்ப, வரிசையில் நின்ற டிவிஎஸ் ஊழியர்கள் ஒரு மாதிரி பார்த்தது....நாராயணா என்றது....

      முதலில் வாடகைக்கு ரூம் கொடுக்க மறுத்த வீட்டு உரிமையாளர் பின்னர் டி வி எஸ் என்று தெரிந்ததும் கொடுத்தது என்பதை எல்லாம் பார்க்கும் போது

      டி வி எஸ் என்ற நிறுவனத்தின் மீதான மதிப்பு... நல்ல மதிப்பு மக்களின் மனதில் எவ்வளவு இருந்திருக்கு என்பது தெரிய வரும். அப்போதெல்லாம் டிவிஎஸ் ல வேலை என்றாலே உயர்வாகப் பார்த்த நேரம்.

      எங்கள் வீட்டில் டிவிஎஸ் ஸில் பணி புரிந்தவர்கள் நிறைய. இப்பவும் ஒரு பையன் இருக்கிறான் அதில். ஃபினான்ஸ் துறையில்.

      கீதா

      நீக்கு
    3. எங்கள் வீட்டிலும் நிறைய பேர் TVS ல் வேலை பார்த்தவர்கள் / பார்ப்பவர்கள் இருக்கிறார்கள்.

      நீக்கு
  16. தைவான் நிறுவனம் இறந்தவரிடம் லீவ் லெட்டர் கேட்டதா? இப்படியும் கவனக்குறைவுகள்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதற்கு லிங்க் கொடுக்க வேண்டும் என்று நினைத்து விட்டுப்போச்சு. அவர்கள் வேறு விஷயத்துக்கு அப்படி கேட்டிருக்கிறார்கள் என்றாலும் வாபஸ் வாங்கி விட்டார்கள்.

      நீக்கு
  17. எல்லாம் அரசியல்தான்ப்பா... தமிழ் இப்போதுதான் நினைவுக்கு வருகிறது.//

    நிச்சயமாக அரசியல்தான். ஆனால் ஸ்ரீராம் இதுதானே அரசியல்வாதிக்கான இலக்கணமும் கூட!!!!
    அதாவது ஒரு நிகழ்வை, தருணத்தைத் தங்களுக்க்ச் சாதகமாக்கிக் கொள்வதுதானே சாணக்கிய தந்திரம் அரசியல்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  18. பெற்றோரைப் புறக்கணிக்கும் அரசு ஊழியருக்கு சம்பளம் கட்

    இது எந்த அரசு? ஸ்ரீராம்? அது சரி அதைவிடத் தனியாரில் பணி செய்யறவங்கதானே அதிகம் அதுக்கு என்ன நடவடிக்கையோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதற்கும் லிங்க் கொடுக்க மறந்து விட்டேன். நிச்சயமாக தமிழ்நாடு இல்லை. சட்டிஸ்கர் என்று ஞாபகம்.

      நீக்கு
  19. அந்த நல்ல தீர்ப்பு இப்பதான் வருகிறதா? முன்னரே இருக்குல்ல? இல்லை அது கேஸைப் பொருத்து வாதாடும் திறனைப் பொருத்தோ? உறவினர் ஒருவருக்கு டிவோர்ஸ் ஆனப்ப கொடுக்கவில்லை. சில வருடங்களுக்கு முன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது தெரியவில்லை. சட்ட வல்லுநர்கள் சொல்லக்கூடும். அல்லது மீட்டாவை கேட்கலாம்! ஆனால் இதெல்லாம் தர்மம் நியாயங்களை உட்பட்டதுதானே... பெங்களுருவில் ஒரு எஞ்சினியர் தற்கொலை செய்து கொண்டதும் நினைவுக்கு வருகிறது.

      நீக்கு
  20. இஸ்ரேல், ஹமாஸ், உக்ரைன் ரஷ்யா....என்னவோ என்ன சண்டையோ என்னவோ போங்க. சில சமயம் தோணும் அடிச்சுக்கறவங்க அடிச்சுக்கிட்டு சாவுங்க, எதுக்கு அப்பாவி மக்களையும் சேர்த்துக் கொல்றீங்கன்னு. இதெல்லாம் கொலை இல்லையா? கொலைக்குற்றத்தின் மீது வராது போல இதுக்குத் தனி எத்திக்ஸ்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  21. சண்டை போட்ட செல்லத்துக்கு அடிபட்டிடுச்சோ?

    போரை முதல்ல நிறுத்துங்கப்பா. அறிவு வேண்டாம்? பச்சைப்புள்ளையா? எல்லாருக்கும் 5 அறிவுதான் போல. மத்யஸ்தம் பண்ண ஏதாச்சும் கொடுப்பாங்களோ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!??

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நோபல் பரிசு கொடுக்கணும் என்று ட்ரம்ப்பார் கேட்டிறார். விரும்பூகிறார்!

      நீக்கு
  22. செய்திகள் பகிர்ந்த விதம் நல்லாருக்கு ஸ்ரீராம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவனத்தைக் கவரும்படி செய்திகள் வரும்போது பகிரலாம் என்று... நன்றி கீதா.

      நீக்கு
  23. கவிதை நல்லாருக்கு ஸ்ரீராம். வரிகளை விட அதில் இருக்கும் கருத்து.

    படத்தில் வெட்டப்பட்ட ஒரு மரம் அதன் வடிவம் சூப்பர் பல வடிவங்களைக் காட்டுகிறது

    ஆணும் பெண்ணும் வித்தியாசமான உருவ வடிவங்கள் மூக்கை உரசிக் கொள்வது போன்று அவர்களை / அவற்றை யானை துதிக்கையில் தாங்கிக் கொண்டிருப்பது போன்றும்....யானையின் மீது முரட்டு ஆஜானுபாகுவான மனிதன் ஒருவன் கால்களை மடித்து அமர்ந்து யானையின் மீது சாய்ந்திருப்பது போன்றும் ஒரு கை இல்லை. வலக்கை மட்டும் தெரிவது போன்றும்....முகம் செடிக்கிளைகளுக்கிடையில் மறைந்திருப்பது போன்றும்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேற்று கடைக்குச் சென்று திரும்பும்போது வீட்டுக்கு அருகில் நான் அடிக்கடி பார்க்கும் பார்க்கும் அந்த மரத்தின் வெட்டப்பட்ட அடிபாகம் வித்தியாசமாக செடிகளால் சூழப்பட்டு காட்சி தந்தது. உடனே புகைப்படம் எடுத்துக் கொண்டேன். அருகில் இருந்த வீட்டுக்காரர் என்னை வினோதமாக பார்த்துக் கொண்டிருந்தார்.

      வீட்டுக்கு வந்தததும் வரிகளை அமைத்து இஸ்டாவிலும் ஃபேஸ்புக்கிலும் பகிர்ந்தேன்!

      நீக்கு
  24. கவிஞர் மீராவின் மனைவி இரா சுசீலா அவர்களின் நேர்காணலை வாசிச்சப்ப, அட முன்னரே வாசிச்ச நினைவு இருக்கே என்று, குறிப்பாக, தன்னோடு பேசும் நேரம் குறித்துச் சொன்ன பகுதி, கண்ணகி சிலை பற்றிய பகுதி எல்லாம் வாசிச்சப்ப எபியில் ஏற்கனவே வாசிச்சிருக்கோமேன்னு தோன்றியது.

    அப்புறம் டக்குனு தேடினப்ப....நம்ம மெமரி சரிதான் என்று தெரிந்தது. 2023 ல் இதோ போன்று அக்டோபரில் பகிர்ந்திருக்கீங்க, ஸ்ரீராம்.

    அதனாலென்ன. மீண்டும் வாசிச்சா என்ன இப்ப?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அச்சச்சோ... மீளாயிடுச்சா?!! கபி கபி ஐஸா பீ ஹோத்தா ஹை...

      நீக்கு
  25. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  26. இன்று ரிவியூ இல்லையா? அதான் பதில் தாமதமாக வரும் என்று தெரிகிறது, ஸ்ரீராம். எல்லாம் நல்லபடியாகச் சொல்லட்டும் மருத்துவர்.

    பொக்கிஷம் ல சில ஜோக்ஸ் நல்லாருக்கு

    இது என்ன மாயம் - நல்ல கற்பனை!!!

    நாவலும், நைட் வாச்மென்னும் புன்னகைக்க வைத்தன

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்று ஜீன்ஸ் அணிந்து வாட்ச் கட்டி ரிவியூவுக்கு சென்றிருந்தேன்.

      அந்தப் பெண் மருத்துவர் கடுப்பாயிட்டார் போல.. மெயின் மருத்துவரும் ஈக்வலா கடுப்பாயிட்டார் போல...

      ஸ்டைலா காட்டரே ஸ்டைலு... என்று மூக்குக்குள் கம்பி விட்டு நோண்டி, குத்தி, கண்கலங்க வைத்து புன்னகையுடன் அனுப்பினார்!

      நீக்கு
  27. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  28. //பாஸை அப்போதே நான் சந்தித்து விட்டிருந்தாலும், சில சமயங்களில் வேறு சில போனஸ் ஓரப்பார்வைகளும், இதழோர கள்ளப் புன்னகையும் கிடைக்கும். பொழுது போகவேண்டுமே...//

    பாஸ் படிக்கமாட்டார்கள் என்ற தைரியமா, படித்தாலும் ஒன்றும் இல்லை, இன்றும் சொல்ல்மாட்டார்கள் என்ற நம்பிக்கையா?
    இரண்டாவதுதான் காரணம் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!