வியாழன், 25 பிப்ரவரி, 2010

இது கதையா - பகுதி மூன்று

முன் கதைச் சுருக்கம் : கனவும் விழிப்பும் ... பகுதி ஒன்று. பெப்ரவரி பதின்மூன்று பதிவு.
நீ தினமும் என்னையும், நான் தினமும் உன்னையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். நீ கேட்டதால் சொல்கிறேன், நாளைக் காலையில் நீ எழுந்த பிறகு நீ சந்திக்கின்ற உன் சொந்த பந்தம் இல்லாத நான்காவது உயிரினம் நாந்தான் - அந்த நான்காவது உயிரினத்தை ஞாபகத்தில் என்றும் வைத்திரு. மீண்டும் சந்தர்ப்பம் நேர்ந்தால் நாம் இந்தக் கனவுலகில் சந்திப்போம்." விழித்துக் கொண்டேன். வியப்புடன் யோசித்தேன்.

பகுதி இரண்டு : பெப்ரவரி பதினேழு பதிவு.
ஒன்று : கார் துடைப்பவர்.
இரண்டு : ஈ
மூன்று : ஜாகிங் செல்லும் பெண்ணுருவம்.
நான்கு : ?

இது கதையா - பகுதி மூன்று:
நிஜமாகவே என்னால் நம்பமுடியவில்லை. கடவுள் என்று நான் நம்பிய கனவு உருவம் நிச்சயமாக என்னை வைத்துக்கொண்டு காமெடி கீமெடி பண்ணுவதற்குத்தான் முனைப்பாக இருப்பது போலத் தோன்றியது. வேறு என்ன? நான்காவது உயிரினமாக எதிர்ப் பக்கத்தில் கட்டப்படும் வீட்டினுடைய வாட்ச்மேனை என் கண்ணெதிரே காட்டினால் - நான் என்ன சொல்வது?

கடவுளை மீண்டும் கனவிலே கண்டால் - அவரிடம் கண்டிப்பாகச் சொல்லி விடவேண்டும். கடவுளே இந்த விளையாட்டுக்கு நான் வரவில்லை என்று.
கொஞ்சம் நிதானமாக யோசித்தேன். ஆமாம், இவருக்கு என்ன குறை? இவர் ஏன் கடவுளாக இருக்க முடியாது?

இந்த வாட்ச்மேன் அதிகாலையில் நான் எழுவதற்கு முன்பே எழுந்துவிடுகிறார். எப்பொழுதுமே கடமையில் கண்ணாக இருக்கிறார். மனைவி குழந்தைகள் என்று யாரும் இவருக்கு இருப்பதாகத் தெரியவில்லை. சிரிப்பது இல்லை, அழுவதும் இல்லை. எப்பொழுதும் தீவிரமாக எதையாவது யோசனை செய்துகொண்டே இருக்கிறார். எனக்குப் பிடிக்காத ஒரே விஷயம் - அடிக்கடி பீடி புகைக்கிறார். மற்றபடி - மீதி எல்லாமே தெய்வீக குணங்கள்தானே? டீ வி இல் கூட ஏதேதோ சாமியார்கள் - பீடி புகைப்பவர்கள், சாராயம் குடிப்பவர்கள் எல்லோரையும் காட்டினார்களே? 

அவரைப் பார்த்து லேசாக புன்முறுவல் பூத்தேன். அவர் என்னை லட்சியம் செய்யவில்லை. சரிதான் - GOD =  LOVE. LOVE =  BLIND, So, GOD = BLIND போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன். ஆனாலும் அப்படியே விட்டுவிட மனது இல்லை. எனவே அவரை நோக்கி இரண்டடி எடுத்துவைத்து (நீங்க கடவுளை நோக்கி ஓரடி எடுத்து வைத்தால் அவர் உங்களை நோக்கி மூன்றடி எடுத்து வைப்பார் என்று எங்கேயோ படித்திருக்கிறேனே) "ஹல்லோ" என்றேன். அவர் என்னை நிதானமாக தலை முதல் கால் வரை, மறுபடியும் கால் முதல் தலை வரை பார்த்தார். அவர் பார்வையில், 'அடாடா இவர் நேற்று வரை நல்லாத்தானே இருந்தார்' என்ற ஒரு குழப்பம் நிதரிசனமாகத் தெரிந்தது. பிறகு எனக்குத் தெரியாத இந்த மாநில மொழியில் ஏதோ முனகியது போல இருந்தது. 

சரி சரி - இன்று இரவு கனவு லோகத்திற்கு மம்தா பானர்ஜி ஏதாவது பகவான் எக்ஸ்பிரஸ் விட்டிருக்கிறாரா என்று பார்த்து, அதில் டிக்கட்டில்லாமல் பயணித்து, கடவுளை சந்தித்து, இந்தக் குழப்பத்திற்கு விடை தெரிந்து கொள்ளவேண்டும்.
வர்ர்ட்டுமா?
(தொடரும்)

7 கருத்துகள்:

  1. உங்கள் கனவு பெரிய பட்ஜெட்டாக தெரிகிறதே!பார்த்து ரயில் பயணம்...கனவில் இல்லாத பாக்கெட்டில் கை வைத்து விட போகிறார்கள். நல்லா எழுதிறீங்க!

    பதிலளிநீக்கு
  2. // GOD = LOVE. LOVE = BLIND, So, GOD = BLIND போலிருக்கிறது .//

    இதே அர்த்தத்தோடு நானும் ஒரு கவிதை எப்போதோ போட்டிருந்தேன்.உண்மையான வாக்கியம்தான் இது !

    கனவு உலகத்துக்கு டிக்கட் இல்லாம போகலாமா ஸ்ரீராம்!

    பதிலளிநீக்கு
  3. /GOD = LOVE. LOVE = BLIND, So, GOD = BLIND போலிருக்கிறது .//

    ஹா ஹா ஹா..இது உண்மை...

    பதிலளிநீக்கு
  4. கனவுகள் எப்போதுமே வித்தவுட் தான்!
    வித்தவுட் டிக்கெட்! வித்தவுட் முன்தயாரிப்பு! வித்தவுட் பட்ஜெட்!

    கைதட்டிப் பெரிசா விசிலடித்து உற்சாகப் படுத்துகிறமாதிரிக் கனவு கண்டுகொண்டே, கதையை அல்லது கனவைத் தொடரவும்!!

    :-))

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!