செவ்வாய், 11 ஏப்ரல், 2017

கேட்டு வாங்கிப்போடும் கதை :: விதி - ரெங்கசுப்ரமணி



     

     இந்த வாரம் சாதாரண கேட்டு வாங்கிப் போடும் கதை!  சீதை அடுத்த வாரம்!  அதே சமயம் சீதை ராமனை மன்னிக்கும் முதல் கதையைப் படித்த எங்கள் ஆசிரியர் திரு ராமன் உடனடியாக ஒரு சின்னஞ்சிறு கதையை அனுப்பி வைத்தார்.  அதை இங்கு கீழே தந்திருக்கிறேன்.



=====================================================================





     இதோ சின்னஞ்சிறு கேட்காமலே அனுப்பும் கதை - இராமாயண சீதை தான் . No compromise.

"எனக்கும் ஒன்று ஏற்பாடு செய்யாமல் அண்ணனும் தம்பியும் மரவுரி தரித்து வந்தீர்களே " என்று ஆரம்பித்தது விவாதம்.   போகப் போக ஒருவழியாக இராமனை வழிக்குக் கொண்டு வந்த  சீதை இராமனை மன்னித்து விட்டாள் !
 
 
==================================================================




எங்கள் ப்ளாக்கில் செவ்வாய்க்கிழமைப் பதிவான
கேட்டு வாங்கிப்போடும் கதை பகுதியில் இந்த வாரம் இடம் பெறுபவர் நண்பர் ரெங்கசுப்ரமணி.


     இவரின் தளம் ரெங்கசுப்ரமணி.

      புத்தகங்கள்...... புத்தகங்கள்..... புத்தகங்கள்...  இது பற்றித்தான் இவர் தளத்தில் பார்க்க முடியும்.அசராமல் புத்தகங்களை படித்து, வாசகர்களுடன் பகிர்கிறார்.  நீங்கள் அவசியம் சென்று ரசிக்க வேண்டிய தளம் நண்பரின் தளம்.  சமீபத்தில்தான் அவரிடம் கதை கேட்காமல் இருக்கிறோமே என்று தோன்றியது.  கேட்டு விட்டேன்.  அவரும் தந்து விட்டார்.


     இதில் ஒரு விசேஷம் நண்பர் ரெங்கசுப்ரமணி இதுவரை சில கதைகள் எழுதி இருந்தாலும் தனது வலைத்தளத்திலேயே வெளியிட்டுக் கொண்டதில்லை.  எனவே அவர் கதை வெளியாகும் முதல் தளம் 'எங்கள் ப்ளாக்' என்பது ஒரு பெருமை 'எங்களு'க்கு.    நண்பரும் எங்களை மறக்க மாட்டார்!

 
     அவரின் முன்னுரையைத் தொடர்ந்து அவரின் படைப்பு...


========================================================================


     முன்னுரை என்று என்ன எழுதுவது தெரியவில்லை. இந்த கதையில் வரும் சில சம்பவங்கள் நிஜத்தில் நடந்தது. சில சம்பவங்கள் எந்த தர்க்கத்திலும் அடங்காது. புத்தகங்கள பற்றிய எனது எண்ணங்களை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தது என்னுடை ப்ளாக். அதில் அவ்வப்போது எனக்கு தெரிந்த / நேர்ந்த சில சம்பவங்களை கதை மாதிரியாக எழுத முயற்சி செய்வதுண்டு. அதிலொன்று இது.


==================================================================

விதி 
 ரெங்கசுப்ரமணி


இரண்டு வருடம் கழித்து ஒரு மழை நாளில் சென்னையில் ஒரு பேருந்து நிலையத்தில் அவரை சந்தித்தேன்.


"கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நான் சேவியர். கர்த்தர் அருளால, அவருக்கு ஊழியம் பண்ணிட்டு இருக்கேன். உங்கள மாதிரி பாவிகள மீட்டு, அவர்கிட்ட கொண்டு சேர்த்துட்டு இருக்கேன். இந்தாங்க இத படிங்க, உங்க பாவத்த போக்கிக்கங்க. பாவியான என்ன ரட்சித்தமாதிரி உங்களையும் ரட்சிப்பார்"


கையில் நோட்டிசை திணித்தவரை கோபத்துடன் நிமிர்ந்து பார்த்தேன். எங்கோ பார்த்த முகமாக இருந்தது.


ஆளும் கொஞ்சம் மாறி இருந்தார். இறுக்கமான, வெறுமையான முகம்.


வணக்கம் சார். எப்படி இருக்கீங்க” என்னை பார்த்தவர் கண்ணில் என்னை கண்டு கொண்ட அறிகுறியில்லை.


குமரவேள்.

****
காலியாக இருந்த பக்கத்து வீட்டில் அமர்க்களம். காபியை கையில் வைத்துக் கொண்டு திண்ணையில் வந்து அமர்ந்தேன். ஒரு தம்பதி. அவருக்கு ஒரு முப்பந்தைந்து இருக்கலாம், அவர் மனைவிக்கு ஒரு முப்பது இருக்கலாம். ஒவ்வொரு சாமானாக இறக்கிக் கொண்டிருந்தார்கள். அதிக சாமானில்லை. சிறிய குடும்பம்.


இரண்டு நாளில் நெருங்கி விட்டார். வந்தவர் பெயர், குமரவேள். தீவிர சைவர். ஆர்.எஸ்.எஸ் ஆசாமி. காலையில் ஷாகா. ஒரு ஆடிட்டரிடம் கணக்கு எழுதிக் கொண்டிருக்கின்றார். அதை தவிர மற்றொன்றும் உண்டு, ஜோசியம். வந்த நாளிலிருந்து காலையில் யாரவது வந்து கொண்டேதான் இருந்தார்கள். காலை எட்டு முதல் ஒன்பது வரை ஜோசிய நேரம்.


சிறிது நாளில் அப்பாவின் நெருங்கிய நண்பராகிவிட்டார். திண்ணையிலமர்ந்து கொண்டு அனைத்து விஷயத்தை பற்றியும் பேசுவார்கள். சினிமா முதல் ஆன்மீகம் வரை.


அவ்வப்போது அவரது குடும்ப விஷயத்தை பற்றியும் கூறுவார்.


"அவங்க குடும்பம் கிறிஸ்டியன் குடும்பம். எங்க கல்யாணத்துக்கு ஒரு வருஷம்  முன்னாடி தான் கிறிஸ்டீனா மதம் மாறி இருந்தாங்க. அவங்கள திரும்ப தாய் மதத்துக்கு கூட்டி வர்ற முயற்சிலதான் இவ எனக்கு பழக்கம். அப்படியே கல்யாணத்துல முடிஞ்சது"


"கல்யாணத்துக்கு பின்னாடி அவங்க குடும்பத்தை மாத்திட்டோம், அவ திரும்ப மதம்மாறல"


"அதுக்குதான் அவள கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு அவளுக்கு கோபம், மதம் மாறின அவங்க குடும்பத்து மேலயும் கோவம்"


"யார்க்கிட்டயும் பேசமாட்டா"


அம்மாவின் தொல்லை தாங்காமல் ஒரு நாள், அக்காவின் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு அப்பாவும் சென்றார்.


"வேள், இது நம்ம கல்யாணி ஜாதகம், பாருங்களேன். வர்ற வரன் எல்லாம் தட்டி போகுது"


"அட இவ்வளவு நாள் கழிச்சு காட்றீங்களே, முதல்லயே காட்டியிருக்காலமில்ல, யார் யார்க்கோ சொல்றேன், உங்களுக்கு இல்லாமலா?"


வெகு நேரம் ஏதேதோ கணக்குகள் போட்டவர், இதுல ஏதோ தோஷம் இருக்கு ஆனா சரிய புலப்படல. உங்க பையன் ஜாதகத்தையும் தாங்க என்றார்.


இரண்டையும் வைத்து ஆராய்ச்சி செய்தவர், இது உங்க பரம்பரை தோஷம். உங்க முன்னோர்கள் யாரோ செஞ்ச பாவம் உங்கள தேடிவந்திருக்கு, இதற்கு பரிகாரம் பண்ணாம உங்களால எதுவும் செய்ய முடியாது. எந்த சுப நிகழ்ச்சியும் நடக்காது” என்றார். சில ஹோமங்களின் பெயரை கூறி, “இந்த ஹோமம் எல்லாம் பண்ணுங்க” என்றார். அவரை  வைத்துக் கொண்டு, அவரின் நண்பரின் உதவியுடன் அனைத்து ஹோமங்கள், பரிகாரஙகளை செய்து முடித்தோம்.


அக்காவிற்கு அடுத்த மாதமே கல்யாணம்.


அதன் பின்னால் இன்னும் நெருக்கமாகிவிட்டார். குடும்பத்தில் ஒருவர்.
கொஞ்ச நாளில் குமரவேளின் நடவெடிக்கைகளில் ஏதோ ஒரு மாற்றம் தெரிந்தது. ஒரு பதற்றம். எப்போதும் ஒரு பயம். அப்பாவிடம் பேசுவது குறைந்துவிட்டது.


அப்பா கடைசியில் கேட்டே விட்டார்.


"சொல்லலாம்னா சொல்லுங்க"


முதலில் மறுத்தவர், அப்பா மறுபடி மறுபடி கேட்க கூறினார்


"யார்கிட்டயாவது சொல்றது நல்லதுதான், போன மாசம் எதேச்சயா என் ஜாதகத்த எடுத்து பாத்தேன். அப்படி பார்த்திருக்ககூடாது, ஆனா அதுவும் நல்லதா போச்சு"


"நல்லதுதான அப்புறம் என்ன"


சோகமாக புன்னகைத்தார் "ஒரு பெரிய கண்டம். அனேகமா அடுத்த மாசம் நான் இருக்றது சந்தேகம். புரட்டாசி பவுர்ணமி தாண்டினா பெரிசு"


"என்னங்க இப்படி சொல்றீங்க"


"எல்லா கணக்கும் போட்டுட்டேன், நல்ல பாத்தாச்சு. அம்மாவும் அதான் சொல்றா. நான் அவகிட்ட வர்ற நாள் வந்தாச்சுன்னு"


"ஏதும் பரிகாரம் இல்லயா"


"ஒன்னும் பண்ண முடியாது, விதிய மாத்த முடியாது"


"என் பொண்ணுக்கு மட்டும் பரிகாரம் பண்ணி கல்யாணம் நடந்ததே"


"அதுவும் விதிதான், உங்க பொண்ணுக்கு ஆகனும்னு விதி. பரிகாரம் பண்ணுணதும் விதி, எனக்கு ஒன்னுமில்ல"


"வேற ஜோசியர்கிட்ட காட்டுங்களேன்"


"யார்கிட்ட காட்றது, இங்க இருக்றவங்க எல்லாம் முட்டாப்பசங்க, திருடனுங்க"
"உங்களுக்கு குரு இருப்பாருல்ல, அவர்கிட்ட காட்டுங்க. நானும் வர்றேன்"


அவர் முகம் சற்று தெளிந்தது.


அடுத்த நாளே கிளம்பி சென்றார்கள். பயனில்லை. குருவும் அதை உறுதி செய்தார்.


"இவளுக்கு ஏதாவது பண்ணிட்டு போகனும், நான் போனப்புறம் இவளுக்கு யாரும்  கிடையாது, கண்டிப்பா அவங்க வீட்டுக்கோ என் வீட்டுக்கோ போகமாட்டா"


"அவங்ககிட்ட சொல்லிட்டீங்களா"


"எப்படி சொல்றதுன்னு தெரியல, கொஞ்சம் பயமா இருக்கு"


"சொல்லிடுங்க, திடீர்னு அதிர்ச்சி வந்த தாங்க முடியாது, அட்லீஸ்ட் கொஞ்சமாவது தயாரா இருப்பாங்க இல்ல”


"நீங்களே சொல்லுங்க" என்று அப்பாவிடம் தள்ளிவிட்டார்.


அவரும் சொன்னார். அவர் மனைவி பெரிய அதிர்ச்சியையோ பயத்தையோ காட்டவில்லை. வழக்கமான அதே பார்வை.


"நல்ல பாத்தாங்களா?, அவுகளே பாத்தாகளா?"


"ஆமா"


"இன்னும் எத்தன நாள்"


"அதிகம் போன ரெண்டு மாசம், புரட்டாசி பவுர்ணமி"


அதன் பின் குமரவேளை பார்ப்பதே அரிதாகி விட்டது. வெளியே கொடுத்த பணத்தை வசூலிப்பது, பூர்வீக சொத்துக்களை விற்று பணமாக்குவது என்று பல விஷயங்களை செய்து கொண்டிருந்தார்.


அவரின் மனைவிவியிடமும் மாற்றம். அதுவரை நெற்றியில் பொட்டில்லாமால் இருப்பவர் நெற்றியில் பொட்டு, கோவில் கோவிலாக போக ஆரம்பித்தார். ஆனாலும் வேளிடம் பேசுவதில்லை. ஒரு முறை ஏதோ வாங்க சென்ற போது அம்மன் படம் முன்னால் அமர்ந்து கொண்டு ஏதோ பூஜை செய்து கொண்டிருந்தார்.


"ஹூம், ஒன்னும் பிரயோசனமில்ல. அவ என்ன கூட்டிட்டு போக காத்திருக்கா, அவளுக்கு நீ பூஜ பண்ற. ஏதோ இந்த மட்டுக்கு நீ மாறினதுல்ல எனக்கு சந்தோஷம்"


அவர் மனைவி திரும்பி பார்த்துவிட்டு தன் பூஜையை தொடர்ந்தார்.


சரியாக புரட்டாசி மாத பவுர்ணமிக்கு முதல்நாள்.


அவர் எங்கோ வெளியூர் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த பேருந்து விபத்துக்குள்ளானது. பக்கத்து ஊரில் இருந்த மருத்துவமனையில் சேர்க்கப்படிருந்தார்.


அப்பாவும் நானும்  ஓடினோம். .சி.யூவில் இருந்தவரை பார்க்க அனுமதிக்கவில்லை. "டேய் இப்பவே ஒன்னும் சொல்ல வேண்டாம், டாக்டர் சொல்லட்டும்"


இரண்டு மணி நேரத்தில் டாக்டர் அப்பாவை அழைத்து சொன்னார்.


"ஒன்னும் பிரச்சினையில்லை பிழைச்சிட்டாரு"


மகிழ்ச்சியாக இருந்தது. அவர் ஜோதிடம் பொய்த்ததில் முதல் முறை சந்தோஷமாக இருந்தது.


அவர் மனைவியிடம் சொல்ல அவர் வீட்டிற்குள் செல்ல முடியவில்லை. கதவை உடைத்துதான் செல்ல வேண்டியிருந்தது. அமைதியான தூக்கத்திலிருக்கின்றார் என்றே தோன்றியது, ஆனால் அவர் அனைத்தையும் தாண்டி சென்றிருந்தார்.
இப்போது செய்தியை குமரவேளிடம் சொல்வது பிரச்சினையானது. அவர் தேற பல மாதங்கள் ஆனது.


"சார், டெய்லி சாமி படம் முன்னாடி மணிக்கணக்கா, தூங்காம கொள்ளாம உக்காந்துட்டு இருப்பா. எனக்கு ஒன்னும் ஆகக்கூடாதுன்னு வேண்டிட்டு இருந்தான்னு நினச்சேன். வேற ஏதோ வேண்டியிருக்கா பாவி"


விரைவில் வீட்டையும் காலி செய்துவிட்டு எங்கோ போய்விட்டார்.


இப்போதுதான் கண்ணில் படுகின்றார்.


"கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நான் சேவியர். கர்த்தர் அருளால, அவருக்கு ஊழியம் பண்ணிட்டு இருக்கேன். உங்கள மாதிரி பாவிகள மீட்டு, அவர்கிட்ட கொண்டு சேர்த்துட்டு இருக்கேன். இந்தாங்க இத படிங்க, உங்க பாவத்த போக்கிக்கங்க. பாவியான என்ன ரட்சித்தமாதிரி உங்களையும் ரட்சிப்பார்"


ஒரு சிறிய புத்தகத்தை தந்துவிட்டு
, இன்னொருவரை அடைந்து, "கர்த்தருக்கு ஸ்தோத்திரம், நான் சேவியர்" என்று ஆரம்பித்தார்.

53 கருத்துகள்:

  1. 'விதி'யை மாற்றியது மனைவியின் பிரார்த்தனை...? (!)

    பதிலளிநீக்கு
  2. ஓ! இப்படித்தான் மத மாற்றம் நடக்குதா?

    தம பட்டை காணவில்லையே!

    பதிலளிநீக்கு
  3. யாருக்கு எப்போது வாழ்க்கை மாறும் புள்ளியிருக்கும், அதன் காரணம் என்ன என்று யாருக்குத் தெரியும்? ஏ.வி.எம் ராஜன் (நடிகர்) தீவிரமான மகமாயி பக்தர். பண நஷ்டம், கஷ்டம் இதெல்லாம் அழுத்திய சமயம், மதம் மாறிவிட்டார். தீவிர மதப் பிரச்சாரகராகவும் ஆகிவிட்டார். அவர் பெண் நடிகை மகாலக்ஷ்மி (?) ரொம்ப வருடம் தாய் மத்த்திலேயே இருந்தார். அப்பா சொல்லியும் கேட்கவில்லை. அவரின் தனிப்பட்ட வாழ்வில் குழப்பம் நேர்ந்து எப்படித் தீர்வுகாணுவது என்று தெரியாமல் இருந்தபோது, "நான் கர்த்தரிடம் ப்ரே பண்ணுகிறேன். பிரச்சனை தீர்ந்தால் மதம் மாறிவிடு" என்று ஏ.வி.எம். ராஜன் சொல்லி பின்பு மாகாலக்ஷ்மியும் மதம் மாறினார் என்று படித்திருக்கிறேன். கதை நன்றாக வந்திருக்கிறது. ரெங்கசுப்ரமணி அவர்களுக்குப் பாராட்டுகள்.

    எங்கள் ஆசிரியர் ராமன் அவர்கள், கதை அனுப்புவதற்குப் பதிலாக அல்வா அனுப்பியுள்ளாரே!

    பதிலளிநீக்கு
  4. ஜோதிடம் பொய்க்கவில்லையே..

    குமரவேள் மறைந்து விட்டார் தானே!..

    பதிலளிநீக்கு
  5. கதை நன்றாக இருக்கிறது...மீண்டும் வருகிறேன்..கொஞ்சம் வேலை முடித்துவிட்டு...

    கீதா

    பதிலளிநீக்கு
  6. மிகவும் நன்றாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
  7. குமரவேல் முழுமையாய் சேவியராக (saviour!) ஆகி விட்டார்!!

    நானும் ஒரு சீதைக் கதை சொல்றேன், உங்கள் பாணியில் - ராமன் சீதையை தெரியாமல் இடித்து விட்டு ஸாரி சொல்ல, சீதை ராமனை மன்னித்து விட்டாள்!! (ஜஸ்ட் ஃபார் ஜோக்)

    பதிலளிநீக்கு
  8. மி.கி.மா - எங்கிட்ட ஸ்ரீராம் கேட்டார்னா, ஏகப்பட்ட KNOTS இந்த 'சீதை ராமனை மன்னித்துவிட்டாள்' என்ற வரிகளுக்கு இருக்கு. நானே ஒரு கதை எழுதிக்கொண்டிருக்கிறேன். கடைசியில்தான் தெரியும் எங்க போகப்போகிறதுன்னு (DUSTBINஆ அல்லது ஸ்ரீராம் மெயில் ஐடியான்னு)

    பதிலளிநீக்கு
  9. ஹாஅ ஹா முதல்ல ஸ்ரீராமுக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்*456234....
    இரு படங்களைப் போட்டு, என்னைக் குயப்பி:) விட்டதுக்கு. இதில் வரும் சுப்பிரமணி.. ஹையோ வெறி சொறி... மூன்றாம்பிறை நினைவுக்கு வந்து டங்கு ஸ்லிப் ஆகுதே....
    விதியின் கீழே இருக்கும் ரெங்கட்சுப்ரமணி அவர்களின் இப்போதைய படம்தான், மேலே இருக்கிறதாக்கும் என அவதிப்பட்டு நினைச்சு, எதுக்கு இளமைப் படத்தையும், இப்போதைய படத்தையும் போட்டிருக்கிறார்..... ஓ அதனால்தான் கதைக்குப் பெயர் "விதி" ஆஆ க்கும் என முடிவுக்கு வந்தேன், 2ம் தடவை படிச்சுத்தான் கண்டு பிடிச்சேன் கரீட்டாஆஆஆஆ.:) சரி சரி ஆரும் முறைக்காதீங்கோ.

    பதிலளிநீக்கு
  10. மேலே சீதை ராமனை மன்னித்து விட்டாள் இருவரியில் சொல்லியிருப்பது ஓகே, இருப்பினும் கதை எனில் குறைந்தது 100 சொற்களாவது இருந்தால் நல்லது....

    ஓகே விதிக்கு வருகிறேன்...

    பதிலளிநீக்கு
  11. விதி மிக அழகான கதை... முடிவுதான் கவலை. வேள்.. மதத்தில் கடுமையாக இருந்தமையால் இப்படி விதி அமைந்திருக்கலாம்... எல்லா மதத்தையும் மதிக்கோணும் என...

    படிக்கும்போது கதைபோல படிக்க முடியவில்லை, உண்மைச் சம்பவமாகவே நகர்ந்தது... உண்மை கலந்து எழுதும்போது இப்படி பீலிங்ஸ் படிப்போருக்கு வருவது இயல்பு....
    இவ்வாரம் கேட்டு வாங்கிப் போடும் கதை சூப்பர் ...

    பதிலளிநீக்கு
  12. இதேபோலவே ஒரு படம், எங்கட முத்துராமன் மாமாவின் கார்த்திக் நடிச்ச பழைய படம் ... கொஞ்ச காலம் முன் பார்த்தேன்ன்... பெயர் நினைவுக்கு வரல்லே ஆனா நல்ல படம்...
    முடிவில் கார்த்திக்குக்கு வருத்தம் தப்ப மாட்டார் என அறிந்து அவசரப்பட்டு மனைவி நஞ்சைக் குடிச்சு இறந்து விடுகிறார், கார்த்திக் தப்பி விடுகிறார்....

    படம் பார்த்து அழுது.... ஹையோ கணவர் சிரிக்கப் போகிறாரே என ஓடிப்போய் பாத்ரூம் கதவை லொக் பண்ணிப்போட்டு... ஓஒவென முழுவதையும் அழுது முடிச்சு வெளியே வந்தேன்ன்ன் ஹா ஹா ஹா... அப்படி ஒரு கவலையாக இருந்துது.

    இக்கதையால், அப்படம் நினைவுக்கு வந்துது.

    பதிலளிநீக்கு
  13. ////middleclassmadhaviApril 11, 2017 at 11:27 AM///

    உங்கள் தற்போதைய கலர்ப்படத்தை:) உடனடியா சகோ ஸ்ரீராமில் மெயிலுக்கு அனுப்பி வைக்கவும்:) .. அடுத்தவாரம் நீங்களேதேஏஏஏஏஏன்ன்ன்:).

    என்னாது நெல்லைத் தமிழன் கதை எழுதுகிறாரா???? :), வழி விடுங்கோ வழி விடுங்கோ நான் முதலாவதாக்க்க்க்க்க் குதிச்சிடுறேன்ன்ன்ன்ன்ன்:),,,, ஹையோ தேம்ஸ்ல இல்லை... கதை படிக்க... அனுப்பி வைங்கோ படிக்க நாமிருக்க உங்களுக்கென்ன கவலை.

    பதிலளிநீக்கு
  14. வருகிறேன் மீண்டும் ...நிறைய விஷயங்கள் நினைவுக்கு வருது பகிர்கிறேன்

    பதிலளிநீக்கு
  15. எந்தக் கதையாக இருக்கட்டுமே, எழுதியவர் அதை எப்படிச் சொல்லியிருக்கிறார் என்பது தான் முக்கியம். அப்படிச் சொன்னது தான் சுவாரஸ்யத்தைக் கூட்டி நம்மைப் படிக்க வைத்தது என்பது உண்மை.

    ஆனால் பதிவுலகில் இந்த 'எப்படிச் சொல்லியிருக்கிறார்' என்பதைப் பற்றிச் சொல்லி சிலாகிக்க யாருமே அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. ஏனென்றால் அதெல்லாம் எழுத்தாளன் பாடு, வாசகன் பாடு இன்ன கதை என்று தெரிந்து கொள்வது மட்டும் தான் என்று பெரும்பாலும் நினைக்கிறார்கள்.

    அதாவது பதிவுலகில் வாசகனாக இருக்கவே விருப்பப்படுகிறார்களே தவிர, எழுதும் கலை பற்றித் தெரிந்து கொள்ள பெருமாலும் அக்கறை காட்டுவதில்லை. அப்படியே எழுத முனைகிற சிலருக்கும் எழுதுவதின் நுணுக்கங்கள் தெரியாமல் போவது இதனால் தான்.

    அதனால் தான் ரெங்க சுப்ரமணி போன்றோர் கதைகள் ஏதோ ஒரு கதையைப் படித்தோம் என்ற உணர்விலேயே படிக்கப் படுகின்றன. தான் சொல்ல நினைக்கிற ஒரு விஷயத்தை ரெ.சு. போன்றவர்கள் எவ்வளவு அழகாக சொல்ல முயற்சித்திருக்கிறார்கள் என்கிற சிரமங்கள் எல்லாம் கவனம் கொள்ளாமலேயே போய்விடுவதும் அதனால் தான்.

    பதிலளிநீக்கு
  16. ராமன் சாரின் கதை நல்லாருக்கு :) குட்டி தீம் சூப்பர்ப் ..
    ராமன் சாரை எங்கோ பார்த்த நினைவு ..ஒருவர் ஜான் மில்லன்ஸ் கொயரில் முன்பு பாடுவார் 19 80ஸ் அவர் மாதிரியே இருக்கார் .

    பதிலளிநீக்கு
  17. ரெங்க சுப்பிரமணி உங்கள் கதை அப்படியே ஒரே மூச்சில் வாசித்தேன் ..நிஜ சம்பவங்கள் எனும்போது மனதில் ஆழ பதிந்திடும் ..
    சில சம்பவங்களை நியாயப்படுத்தவும் தர்க்கத்தில் அடக்கவும் முடியவே முடியாது என்பதே உண்மை அதுதான்சில விஷயங்கள் சம்பவங்கள் நிகழ்வுகள் நம்ம மீறி நிகழ்வதுண்டு அதுவே விதி .இக்கதையில் குமரவேளும் மனைவியும் ஆத்மார்த்த தம்பதிகள் போலும்.மதத்தையும் நம்பிக்கையையும் அன்பு வென்று விட்டது அதுதான் தன மனைவிக்காக குமாரவேளை ட்ராக்ட்ஸ் கொடுக்கவும் வைத்துள்ளது

    பதிலளிநீக்கு
  18. குமரவேள் எதோ தவறு செய்துட்டோமென்ற குற்ற உணர்வில் இருக்கிறார் ..அவர் இறுக்கமாக இருக்க காரணம் இதுவே ..சிலர் இப்படி அவர்கள் கொள்கைகளில் தீவிரமாக இருப்பது கடைசில இப்படி வேதனையில் முடிகிறது பாவம் குமரவேல் ..மரணிக்குமுன் மனைவி கணவனுக்காக தாய் மதத்துக்கு திரும்பினது பிறகு குமரவேள் மனைவிக்காக அவர் விருப்பமான கிறிஸ்துவ மத பிரச்சாரம் செய்வது என்பது மதம் தாண்டிய அவரவர் மீது கொண்ட அன்பையே காட்டுகிறது ..

    பதிலளிநீக்கு
  19. எனக்கு இந்த கதையை படித்ததும் ஆச்சர்யம் ஏனென்றால் ..நேற்று ஒரு கதை பற்றி நினைவு வந்தது 1987/88 இல் மங்கையார் மலர் கல்கி எதோ ஒன்றி வாசித்தேன் கிட்டத்தட்ட இதே கதை போலத்தான் ..60 வயது கல்யாணராமன் என்பவர் திடீரென கிறிஸ்தவ மத மாறுகிறார் அவரது மகனும் மகளும் மிகவும் கோபப்பட்டு தங்க புகுந்த/மாமனார் வீடுகளில் ஐக்கியமாகின்றனர் தகப்பனின் செயலை கண்டித்து ..அவர் மனைவி பெயர் காயத்ரி ..காயத்ரியின் மரணத்துக்குப்பின் தான் மாறுகிறார் ..காரணம் காயத்ரி திருமணத்துக்குமுன் காத்தரின் :) ..அவர் காதலுக்காக பிராமண மத கோட்பாடுகள் சம்பிரதயங்களை கற்று இரண்டு வருடம் கழித்தே கல்யாண ராமனை ,மணக்கிறார் ..தனக்காக மதம் மாறிய காயத்ரிக்கு இவர் செய்யும் அன்புக்கடன் தான் பிற்காலத்தில் இவர் க்ராஸ் அணிந்து தனது பெயரையம் டேவிட் என்று மாற்ற வைத்தது ..

    இந்த கதையை நேற்று எனோ யோசிச்சிட்டிருந்தேன் இன்னிக்கு அதே போல மற்றொரு கதை மிகவும் அருமையான எழுத்து நடை ரெங்க சுப்பிரமணியனுக்கு பகிர்ந்த எங்கள் பிளாக்குக்கும் big thanks ..

    பதிலளிநீக்கு
  20. இந்த மாதிரி கைரேகை பார்த்து என்னிடம் ஜோசியம் சொன்னவரால் அந்த நாட்களில் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன் வலையில் பகிர்ந்து கொண்டும் இருக்கிறேன் கதாமாந்தர்களின் பெயர்களால் கன் ஃப்யூஷன் இருக்கக் கூடாது கதைகளில் எழுதினால் அதுவே நம் எண்ணமும் என்றும் நினைக்கிறார்கள் நான் எழுதி இருந்த சௌத்வின் கா சாந்த் என்னும் சிறுகதைக்கு அம்மாதிரி பின்னூட்டம் வந்தது

    பதிலளிநீக்கு
  21. நீரு பூத்த நெருப்பாகக் கனிந்து கொண்டிருந்த அன்பு இக்கதையில், உண்மை ஸம்பவமாகக் கூட இருக்கலாம், இதில் வெளிப்படுகிறது.
    கணவனுக்காக,மனைவிக்காக மதம் என்பதை மாற்றாமலே மனம்மாறி வாழ்பவர்களும் உண்டு. சோகமான முடிவு.ஏதோ பக்கத்து வீட்டில் நிகழ்ந்தது போலத் தோன்றியது. அன்புடன்

    பதிலளிநீக்கு
  22. கதைதானே, இதுவும் நடக்கும், என்னவெல்லாமும் நடக்கும்! படிக்க சுவாரஸ்யமான நடை.

    - இராய செல்லப்பா (இன்று) நியூ ஆர்லியன்ஸ்

    பதிலளிநீக்கு
  23. ரொம்ப எதார்த்த நடையில் அருமையான சிறுகதை...

    பதிலளிநீக்கு
  24. இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
    Tamil News | Latest News | Business News

    பதிலளிநீக்கு
  25. விதி எப்படி விளையாடுகிறது!! செம கதை! முதலில் பார்த்தவர்தான் குமரவேள் என்பது புரிந்தது என்றாலும் அருமையாகக் கொண்டு சென்றுள்ளார். எழுதிய நடை எல்லாம் சூப்பர்!! கதாசிரியருக்குப் பாராட்டுகள்!!! வாழ்த்துகள்! கதாசிரியர் ரெங்க சுப்ரமணியைப் பற்றி அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி எங்கள் ப்ளாக்!!! தளம் குறித்துக் கொண்டோம்.

    கதை மனதில் நிறைந்து நிற்கிறது!!

    பதிலளிநீக்கு
  26. கதையின் முடிவு சோகம்தான்! இருந்தாலும் அதில் அன்பு வெளிப்படுகிறது. யதார்த்தமாக இருக்கிறது நடை...அருமை...

    பதிலளிநீக்கு
  27. ராமன் அவர்களின் கதை செம!!! ஷார்ட் அண்ட் ஸ்வீட். ஒரு சில காட்சிகளிலேயே சீதை ராமனை மன்னித்துவிட்டாளே!!! சீதை கொஞ்சம் லீனியன்ட் தான் போல...ஹஹஹ் ஆனாலும் நல்லாருந்துச்சு...ஏன்னா நாங்கல்லாம் பக்கம் பக்கமால எழுதறோம்...அதுக்கே ராமன் சாருக்கு குடோஸ்!!! ஒரு நிமிடக் கதைக்கு அனுப்பலாமோ??!!! சார்?!!

    கீதா

    பதிலளிநீக்கு
  28. அதிரா ஹைஃபைவ்!!! உங்களைப் போல நானும் முதலில் அவியலாகி, குழம்பாகி, ரசமாகித் தெளிந்தேன்!! அப்புறம்தான் மீண்டும் மீண்டும் பார்த்து வாசித்துவிட்டு கீழ வந்தப்புறம்தான் ரெங்கசுப்பிரமணி வேறனு தெரிந்துச்சு..ஹிஹிஹி என் மூளை ட்யூப் லைட்!!!ஹ்ஹாஹ்ஹஹ்

    கீதா

    பதிலளிநீக்கு
  29. அதிரா உங்க மூளையை ட்யூப்லைட்னு சொல்லலை....என் மூளைதான் ஆனா சேம் பிஞ்ச்!!!!! ஹிஹிஹி...இப்போ ஏஞ்சல் என்னைக் காப்பாத்துங்க....அதிராகிட்டருந்து...

    கீதா

    பதிலளிநீக்கு
  30. மிகவும் professional ஆக எழுதப்பட்டிருக்கும் கதை. பாராட்டுக்கள்.நன்றி எங்கள் ப்ளாக்!

    பதிலளிநீக்கு
  31. ராமன் அவர்கள் சிறுதுளி கதை அருமை.
    ரெங்கசுப்பிரமணி கதையும் அருமை.
    மாற்றம் எப்போது நடக்கும்? எப்படி நடக்கும் என்று சொல்ல முடியாது என்ற உண்மையை கூரும் கதை.

    பதிலளிநீக்கு
  32. ///Thulasidharan V Thillaiakathu said...
    அதிரா உங்க மூளையை ட்யூப்லைட்னு சொல்லலை....என் மூளைதான் ஆனா சேம் பிஞ்ச்!!!!!///

    ஆங்ங்ங்ங்ங்:).. இது இது இது இந்தப் பயம் எப்பவும் இருக்கட்டும்:)... ஏதோ சவுண்டு விட்டே எல்லோரையும் மிரட்டிடுவேன்:) நேரில எனில் என் கதை கந்தலாயிடும்...:).

    அம்மம்மா சொல்லுவா.. உனக்கு உந்த வாயும் இல்லாட்டில், உன்னை நாய் தூக்கிப் போயிடும் என ஹையொ ஹையோ:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாலோ சேம் பிஞ் னு சொல்லிருக்கோம்ல....ஹிஹி அது பார்க்கல போல அதிரா

      கீதா

      நீக்கு
  33. ///Thulasidharan V Thillaiakathu said...
    அதிரா ஹைஃபைவ்!!! உங்களைப் போல நானும் முதலில் அவியலாகி, குழம்பாகி, ரசமாகித் தெளிந்தேன்!! //

    ஹா ஹா ஹா இது எல்லாத்துக்கும் காரணம், எங்கட சகோ ஸ்ரீராம் தேன்ன்ன்:).. அவரை ஒருக்கால் அந்த முருங்கிமரத்தில ஏத்தி இறக்கினால் எல்லாம் சரியாகிடும்:).. ஹையோ படிச்சதும் கிழிச்சு.. அஞ்சு வீட்டு மீன் பொண்ட்ல வீசிடுங்கோ கீதா பீஸ்ஸ்ஸ்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் சிரித்து ரொம்ப நாளாச்ச்ச்சுன்னு சொல்லிருக்கார்....வெங்கட்ஜி தளத்துல...பாவம் முருங்கை மரம் லாம் வேணாம்...

      கீதா..

      நீக்கு
    2. ஸ்ரீராம் சிரித்து ரொம்ப நாளாச்ச்ச்சுன்னு சொல்லிருக்கார்....வெங்கட்ஜி தளத்துல...பாவம் முருங்கை மரம் லாம் வேணாம்...

      கீதா..

      நீக்கு
  34. //ஜீவி said...
    ஆனால் பதிவுலகில் இந்த 'எப்படிச் சொல்லியிருக்கிறார்' என்பதைப் பற்றிச் சொல்லி சிலாகிக்க யாருமே அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. ஏனென்றால் அதெல்லாம் எழுத்தாளன் பாடு, வாசகன் பாடு இன்ன கதை என்று தெரிந்து கொள்வது மட்டும் தான் என்று பெரும்பாலும் நினைக்கிறார்கள்.

    அதாவது பதிவுலகில் வாசகனாக இருக்கவே விருப்பப்படுகிறார்களே தவிர//

    நீங்கள் சொல்வது அனைத்துக்கும் நானும் உடன்படுறேன். ஆனா இங்கிருக்கும் பிரச்சனை என்னவெனில், கதை மட்டுமல்ல, ஒருவர் போஸ்ட் போட்டால்கூட, நாம் போய் அதுக்கு, நம் மனதில் தோன்றும் என்ணங்களை வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் இருக்கிறது... அதாவது பெரும்பாலும்..எல்லோருமே பொஸிடிவ் கருத்துக்களை மட்டுமே விரும்புகின்றனர், நாம் கொஞ்சம் குறை சொன்னால்கூட அடிக்க வருகின்றனர்:).... அல்லது நம் பக்கம் வருவதை தவிர்க்கின்றனர் அல்லது கொமெண்ட்டை வெளியிட மாட்டினம்.. இது கடந்த 9 வருட வலையுலக வாழ்க்கையில் என் அனுபவம்.

    பொஸிடிவ்வான பின்னூட்டங்களை மட்டுமே விரும்பும்போது, எப்படி நாம் அனைத்தையும் ஓபினாக கருத்திட முடியும்? நம் மனதில் அந்நேரம் என்ன தோணுதோ அதைத்தானே சொல்ல முடியும்.. சிலது பொஸிடிவாக இருக்கும், சிலது நெகடிவாக இருக்கும்... அது படிப்பவர் மனநிலையைப் பொறுத்ததே... ஆனா இதை எத்தனை எழுத்தாளர்கள் ஏற்றுக்கொள்ள ரெடியாக இருக்கின்றனர்???.. எழுதுபவர் மனநிலையில்தான், படிப்பவரின் மனநிலையும் இருக்கோணும் என்றில்லைத்தானே.

    இன்னுமொன்று, ஒரு போஸ்ட்டை பலநூறு பேர் படிப்பதாக கூகிள் சொல்லுது, ஆனா கொமெண்ட் போடுவோர், நம் நட்பு வட்டத்துள் இருப்போர் மட்டுமே[அதுவும் நம் முகத்துக்காகவே போடுகின்றனர்], இதனால என்னைப் பொறுத்து நம் எழுத்துக்களை வேலை மினக்கெட்டுப் படிச்சோம் எனச் சொல்வதே பெரிய விசயம்.. அதுக்கே நாம் பல நன்றிக்கடன் பட்டிருக்க வேண்டும், இதுக்கு மேல எப்படி எதிர்பார்ப்பது? எப்படிக் குறை சொல்லுவது...

    நான் எழுதியதில் தப்பிருப்பின் மன்னிக்கவும்.. இதுவும் என் மனதில் தோன்றியதை ஓபினாகச் சொல்லியிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  35. அன்றாடம் நடக்கும் ஒரு நிகழ்வு இந்த tracts கொடுப்பது சென்ட்ரல் ஸ்டேஷன் பக்கம் எப்பவும் பார்க்கலாம் சேவியர் போன்றோரை
    இன்று உங்கள் கதையை தான் ரெங்கசுப்பிரமணி கணவரிடமும் விவரித்துக்கொண்டேசிலாகித்து கொண்டே சென்றேன் ..என்னவோ தெரில குமரவேள் பாவம் அவர் மனைவிக்கு இவர் மாறியது தெரியவா போகுது :( இருக்கும்போதே மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்திருந்தா நன்றாக இருந்திருக்கும் ..எல்லாருக்குமே ஈகோ என்ன பண்றது

    பதிலளிநீக்கு
  36. அருமையான கதை. கதாசிரியருக்கு பாராட்டு. பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  37. ஜோசியம் உண்மையா பொய்யா என்பதைக் கூறும் இந்தக் கதை அல்லது நிஜம் போல் எங்கள் வாழ்க்கையிலும் நடந்துள்ளது. ஆனால் யாரும் மதம் மாறவில்லை. மற்றபடி ஜோசியம் பலித்திருக்கிறது! ரெங்கசுப்ரமணியின் தளத்துக்கு நானும் அவ்வப்போது போவதுண்டு. புத்தகப் பிரியர்! நன்றாகக் கதை எழுதி இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  38. மதத்தை நம்பினால் சோதனை வந்துகொண்டே இருக்கும் ,குமரவேள்,சேவியர் ஆகியுள்ளார் ,இன்னும் சில நாட்களில் அப்துல்லா ஆகக் கூடும் :)

    பதிலளிநீக்கு
  39. @ athira

    பாஸ்ட்டிவாக பின்னூட்டம் போடுவது இல்லை குறைகளைச் சொல்வது என்பதற்கெல்லாம் நான் போகவே இல்லை.

    மனசில் தோன்றும் கருத்தை எழுத்தில் வடித்துச் சொல்வது என்பது ஒரு கலை. அதற்கு ஒரு பயிற்சி தேவை. இது அடிப்படை விஷயம். இதில் உடன்பாடு கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

    பதிவுலகில் அத்திப் பூத்தாற் போல சிலர் இந்த எழுதும் கலையில் தேர்ச்சி பெற்றவராய் எழுதும் பொழுது ஓரிரண்டு வார்த்தைகள் எடுத்துச் சொல்லி அந்த எழுதிய முறையைப் பாராட்டுங்கள் என்று சொல்கிறேன். அவ்வளவு தான்.

    ஏதாவது ஒரு கருத்து என்பது கதைக்கு இருக்கலாம்; இருக்க வேண்டும் என்ற அவசியம் கூட இல்லாது
    போகலாம். ஆனால் உங்களை போரடிக்காமல் வாசிக்க வைக்க சொல்கிற முறையில் சுவாரஸ்யம் வேண்டும். இது முக்கியம்.

    இந்த முக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்கிறேன். சுவாரஸ்யமாக கதையை நகர்த்திச் சென்றவர் கதைக்கும் அவர் அப்படி நடத்திச் சென்றதைக் கண்டு கொள்ளாமல் ஏதாவது ஒரு கருத்தைப் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டு இருக்க வேண்டாம் என்று சொல்கிறேன்.

    எந்தக் கதைக்கும் அதன் ஆரம்பம் முக்கியம். ஒரு கதை மனசில் தோன்றிவிட்டதென்றால், அதை எங்கே இருந்து வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம். அதைத் தேர்ந்தெடுப்பதில் எழுதுபவன் பாதி வெற்றியைத் தீர்மானித்து விடுகிறான்.

    இந்தக் கதையை எங்கே, எப்படி எழுதியவர் ஆரம்பித்திருக்கிறார் என்று பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  40. (தொடர்ச்சி)

    இரண்டு வருடம் கழித்து ஒரு மழை நாளில் சென்னையில் ஒரு பேருந்து நிலையத்தில் அவரை சந்தித்தேன் ---- என்று இந்தக் கதை ஆரம்பிக்கிறது.

    இந்த ஒரே வரியில் எழுதியவர் அந்த இரண்டு வருட சரித்திரத்தையே அடக்கி வைத்து அந்த சரித்திரம் என்ன என்பதைத் தான் சொல்லத் துவங்குகிறார்.

    அந்த இரண்டு வருடச் சரித்திரத்தைச் சொல்லி விட்டு--

    'இப்போது தான் கண்ணில் படுகிறார்'-- என்று கதையை ஆரம்பித்த அந்த மழை நாளுக்கு வருகிறார்.

    இந்த இரண்டு வருடக் கதையைச் சொல்லி விட்டு,

    இரண்டு வருடம் கழித்து ஒரு மழைநாளில் அவரைச் சந்தித்தேன் என்று தொடர்ந்தால் கதையை வேறு ஏதாவது சொல்லி நீட்ட வேண்டி இருந்திருக்கும்.

    இதெல்லாம் தான் கதை சொல்கிற முறைகள்.

    பிறர் எழுதுவது நாம் எழுதுவதற்கும் பாடமாவது இப்படித்தான்.

    அந்தப் பாடத்தை பிறர் எழுதுவதில் படித்து பாராட்டி நாமும் இந்தக் க்தை எழுதும் கலையில் தேர்ச்சி பெறுவோம் என்கிறேன்.

    இந்த கதை எழுதும் நுணுக்கங்களில் நீங்கள் தேர்ந்தால், கதை எழுதும் கலை இன்றைய பிரபல எழுத்தாளர்களுக்குக் கூட கைகூடாமல் போக்குக் காட்டிக் கொண்டிருபபதை சுலபமாக நீங்கள் கண்டு பிடிக்கலாம்.







    பதிலளிநீக்கு
  41. வாவ்! ஜீவி சார்! உங்கள் கருத்துகளை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். நிச்சயமாக நீங்கள் கூறும் கருத்துகளை வாசகர்கள் முன்வைப்பார்கள் என்றால் எழுத்தாளர்களைக் கௌரவிப்பதும் மற்றும் எழுத்தை மேம்படுத்தவும் உதவும். நான் எங்கள் ப்ளாகில் கேட்டு வாங்கிப் போடும் கதைக்கு உங்கள் பின்னூட்டத்தை இப்போதும் மனதில் கொண்டுள்ளேன். இப்போது தாங்கள் இங்கு கொடுத்திருக்கும் கருத்தையும் வாசித்து மனதில் பதித்துக் கொண்டேன். இனி வாசிக்கும் போது நீங்கள் குறிப்பிட்டது போல கருத்து சொல்ல முயற்சி செய்கிறேன். எனக்கு அத்தனை அறிவு இருக்கிறதா என்று தெரியவில்லை. இருந்தாலும் தங்களின் கருத்தை ஒரு உதாரணமாகக் கொண்டு என் மனதில் தோன்றுவதை முன்வைக்க முயற்சி செய்கிறேன். ஒரு சில சமயங்களில் சிறிதாக வைத்ததுண்டு. என்றாலும் விமர்சனம் செய்யவும் திறமை வேண்டும் தான். வளர்த்துக் கொள்ள முயற்சி செய்கிறோம். எங்களைப் போன்றோருக்கு மிகச் சிறந்த பரிந்துரை செய்தமைக்கு.. மிக்க நன்றி சார்.

    கீதா

    பதிலளிநீக்கு
  42. இப்படியாக, தேர்ந்த எழுத்தாளர்களின் கதைகளையும், அதற்கு தேர்ந்த அனுபவமுள்ள ஆசிரியர்கள் ஜீவி சார் போன்றோரின் அரிய கருத்துகளை வெளிக் கொணரும் எங்கள் ப்ளாகிற்கு மிக்க நன்றி! இது ஒரு நல்ல களமாகியிருக்கிறது. என்னைப் போன்ற கத்துக்குட்டிகளுக்குக் கதை எழுதுவது எப்படி என்ற நல்ல பாடம் கற்றுக் கொள்ள உதவுகிறது. அதுவும் வாசிப்பு குறைந்து வரும் இவ்வேளையில்.... ஜீவி சார் தங்களுக்கும் மிக்க நன்றி! தங்களின் வழிகாட்டலுக்கு மிக்க நன்றி. சிரம் தாழ்ந்த வணக்கங்களும்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  43. வாங்க, தில்லையகத்து கீதா,

    உங்கள் பின்னூட்டமே சொல்கிறது. மனசில் தோன்றுவதை எழுத்தில் வடிப்பது உங்களுக்கு நன்றாக வருகிறது. நன்றாக எழுதுகிறீர்கள். எதிர்காலத்தில் இதை விட நன்றாக எழுதவும் செய்வீர்கள்.

    இந்தக் கதை ஆசிரியர் பெரும்பாலும் உரையாடலில் கதையை நகர்த்தியிருக்கிறார். பாருங்கள்.

    இன்றைய பிரபல எழுத்தாளர்கள் கூட இப்படி உரையாடலில் கதையைச் சொல்லத் தெரியாமல் எழுத்தாளரே தன் கருத்தாய் வளவளவென்று நிறைய எழுதி இன்றைய எழுது முறை இதான் என்கிற மாதிரி போலியான ஒரு தோற்றத்தைக் கொடுத்திருக்கின்றனர். உரையாடலில் தான் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் உணர்வுகளையும் வடித்தெடுக்க முடியும். எழுதுவதை பல புதுச் சோதனைகளுக்கு உட்படுத்தி இந்தக் கலையில் தேர்ந்து ஜொலிப்போம்.

    தங்களுக்கு வாழ்த்துக்கள்.

    அன்புடன்,
    ஜீவி

    பதிலளிநீக்கு
  44. அன்பின் ஜீவி அவர்களுக்கு..

    தாங்கள் சொல்வது சரி..
    உரையாடல் வழியாக கதையை நகர்த்துவதே இனிமை..

    நானும் ஒருவரியாக - குமரவேள் மறைந்து சேவியர் பிறந்தார் என்பதாக சொல்லிவிட்டேன்..

    இனி கவனத்தில் கொள்வேன்..

    ஆயினும் - இங்கே இணைய தள இணைப்பு சரியாக இல்லாததால் ஆர அமர எழுதவது வெகு சிரமமாக இருக்கின்றது. சட்டென்று பதில் எழுதிவிட வேண்டும் என்ற பதற்றமே முன்னிற்கின்றது..

    இனிய கருத்துரை கண்டு மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  45. கதை நன்றே நகருகிறது
    கதை சொல்லும் பாங்கும் நன்று

    பதிலளிநீக்கு
  46. நன்றி, நண்பர் துரை செல்வராஜூ.

    தாங்கள் சொலவது புரிகிறது. எனக்கும் அந்த இடர்பாடு உண்டு. என் கணினியில் வேறு மாதிரியான சிக்கல்.

    நண்ப்ர்களுக்கு www.pustaka.co.in என்னும் இணைய நூல்நிலயத்தை அறிமுகம் செய்ய விரும்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  47. நல்லதொரு சிறுகதை....
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  48. கதையும் அருமை. அதற்கு வந்த பின்னூட்டங்களும் அருமை.
    திரு ரெங்கசுப்பிரமணி பதிவுகள் பார்த்ததில்லை.
    ஜீவி சாரின் விளக்கங்கள் தேர்ந்த முத்துகள்.
    நறுக்குத் தெரித்தாற்போல முழுக்காட்சிகளும் கண் முன் வந்து போயின.
    இது போல ஒருவருக்காக மற்றவர் மாறியும் சேரவில்லை என்பதே துயரம்.

    மதம் மாறுவது பற்றி எனக்குத் தெளிவில்லை.
    இறைவன் அனைவரையும் காக்கட்டும். மனசைக் கிலேசப்படுத்திய கதை.
    வாழ்த்துகள் கதாசிரியருக்கும், எங்கள் ப்ளாகிற்கும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!