திங்கள், 10 ஏப்ரல், 2017

"திங்க"க்கிழமை :: கேரட் பீட்ரூட் அல்வா - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி


கேரட் அல்வா ஓகே. பீட்ரூட் அல்வா ஓகே. இது என்ன கேரட் பீட்ரூட் அல்வா? சமீபத்தில் என் ஹஸ்பண்ட், பசங்க ஆசைப்பட்டாங்கன்னு கேரட் அல்வா பண்ணினேன் என்று சொன்னாள். 



நானும் அதற்குப் பத்து நாட்களுக்கு அப்புறம் சென்னை செல்ல நேர்ந்ததால்,  பசங்களுக்கு இரண்டு அல்வாவையும் பண்ணிக்கொண்டு வருகிறேன் என்று சொன்னேன். அப்புறம், இரண்டு அல்வா பண்ணுவதற்குப் பதிலாக, கேரட் அல்வாவில் சிறிது பீட்ரூட்டையும் சேர்த்தால் கலர்ஃபுல்லாக வருமே என்று எண்ணி, கேரட் பீட்ரூட் அல்வாவாகச் செய்துவிட்டேன். 




நான் எதிர்பார்த்தது, ஆரஞ்சு வண்ண கேரட் அல்வாவில், ஆங்காங்கு வயலட் நிற பீட்ரூட் துருவல்கள் இருக்கும் என்று. ஆனால், பீட்ரூட் துருவலைத் தண்ணீர் விட்டு அலம்பியபின் போடும் எண்ணம் இல்லாததால், பீட்ரூட்டின் வயலட் நிறம் கொஞ்சம்Dominate பண்ணிவிட்டது.



இதுக்கு கேரட் 3 கப், ½ கப் பீட்ரூட் துருவினது.  பால், 2 ½ கப் உபயோகித்தேன். இங்கு, இயற்கையான ஜீனி என்று வெள்ளை நிறமாக்காத ஜீனி வாங்கினேன்.(சிங்கப்பூரில் தயாரானது). ஜீனி எதுவாக இருந்தாலும் 1 கப். நெய் 3 ஸ்பூன் போதும். கொஞ்சம் முந்திரி, ஏலக்காய் பவுடர் தேவை.  என்கிட்ட உப்பு சேர்த்த பாதாம் பருப்பு இருந்தது.. அதனையும் உபயோகித்தேன்.



கேரட்டையும் பீட்ரூட்டையும் துருவி வைத்துக்கோங்க. முந்திரியை நெய்யில் சிவக்க வறுத்துத் தனியாக வைத்துக்கொள்ளவும்.



கடாயில கேரட் மற்றும் பீட்-ரூட் துருவலைப் போட்டு வதக்கிக்கொள்ளவும். வதங்கினபின்பு, பாலைச் சேர்த்துக் கிளறவும். இதோடயே ஏலக்காயையும் போட்டுவிடலாம். பால்ல கேரட்/பீட்ரூட் நல்லா வேகணும். பாலே தெரியாமல் ஓரளவு வெந்து கெட்டியாயிடும். அப்போ, ஜீனியைச் சேர்த்துக் கிளறவும். கொஞ்சம் கட்டியானபின்பு, அதில் நெய் சேர்த்துக் கிளறினால், கேரட் அல்வா சுருள் பதத்துக்கு வந்துடும். அதோட முந்திரியைச் சேர்த்துக் கலந்தால் கேரட் அல்வா ரெடி.



நான் எப்போதும், கேரட் அல்வாவுக்கு, துருவிய கேரட்டை பாலில் கொஞ்சம் ஏலக்காயுடன் வேகவைத்து (குக்கரில்), அதனைக் கடாயில் போட்டு, அதில் ஜீனி சேர்த்துக் கிளறுவேன். இந்தத் தடவை கடாயிலேயே கேரட்டை வதக்கிவிட்டுப் பால் சேர்த்தேன். முதலிலேயே குக்கரில் பாலுடன் வேகவைப்பது நேரத்தை மிச்சப்படுத்தும். அப்படிப் பண்ணுவது சுலபம்.



பசங்க, சாப்பிட்டுட்டு என்ன சொன்னாங்கன்னு கேட்டீங்கன்னா... ஒண்ணுமே சொல்லலை. நான்தான், வீட்டுல எப்போப் பார்த்தாலும் நொறுக்குத்தீனி வாங்கி வைப்பேன். எதைப் பார்த்தாலும் பிடிச்சதுன்னா வாங்கிடுவேன். எனக்கு வேணும்னு நினைக்கிற எல்லா நொறுக்குத் தீனிகளையும் இங்க வச்சிருப்பேன். அதுக்காக ரொம்ப சாப்பிடமாட்டேன் (அதீத வெய்ட் போட்டுவிடும் என்று). வீணாப்போறதைப் பத்தி ரொம்ப அலட்டிக்கமாட்டேன். என் ஹஸ்பண்ட், தேவையில்லாமல் இந்தமாதிரி நொறுக்குத்தீனிகள்லாம் வெளில வாங்கமாட்டா. பசங்க கேட்டா செய்துகொடுத்துடுவா. 




அதுனாலதான் திடும் என்று பசங்க, கேரட் அல்வாவைக் கேட்டிருக்காங்க. நான் இங்கிருந்து போகும்போது, அவங்களுக்குப் பிடிச்ச பல ஐட்டங்களை வாங்கிச்செல்வேன் (ஜூஸ், வட இந்தியக் கடைகளிலிருந்து முந்திரி ஸ்வீட், இந்த ஊரில் கிடைக்கும் பிரத்யேக அல்வா, சிப்ஸ் இன்ன பிற..) எல்லா ஐட்டங்களும் ஒரே சமயத்தில் வந்து சேர்ந்துடறதுனால, ‘ஓகே’ என்பதைத் தவிர வேறு ஒண்ணும் சொல்லலை. பசங்க நிர்தாட்சண்யமா reject செய்யக்கூடாதுன்னு, நான் ஜீனி குறைவாகப் போட்டிருந்தேன். நல்ல நெய் விட்டிருந்தேன். (எனக்குன்னா இன்னும் ஜீனி போடுவேன். நெய்யைக் கம்மியாக்குவேன்). இருந்தாலும் அவங்க feedback ஒண்ணும் இல்லை.

நீங்களும் செய்துபாருங்கள்.

அன்புடன்,

நெல்லைத்தமிழன்.




[ கல்யாணமானதும் தலை தீபாவளிக்கு அப்புறம் வந்த முதல் தீபாவளி சமயம் தனிக்குடித்தனம் செய்துகொண்டிருந்த நாங்கள் ரொம்ப ஆர்வமாக ஏகப்பட்ட பட்சணங்கள் செய்தோம்.  என் கைவண்ணம்தான். அதில் கோதுமை அல்வாவும் ஒன்று.  நன்றாக வந்திருந்தது.  ஆனாலும் ரொம்பப் பொறுமை வேண்டியிருந்தது.  

நெல்லைத்தமிழன்...  நீங்கள் இருட்டுக்கடை அல்வா சாப்பிட்டிருப்பீர்கள்..  மதுரை ஹேப்பிமேன் முந்திரி அல்வாவும், பிரேமாவிலாஸ் (சுடச்சுட வாழையிலையில் தளதளவென) அல்வாவும் சாப்பிட்டிருக்கிறீர்களோ - ஸ்ரீராம் ]

54 கருத்துகள்:

  1. கேரட் அல்வா சாப்பிட்டிருக்கிறேன்
    ஆனால் கேரட் பீட்ரூட்
    சுவைத்துப் பார்க்கவேண்டும் நண்பரே
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  2. வடமாநிலங்களில் இருந்தவரைக்கும் காரட் அல்வாவுக்குச் சர்க்கரை போடாத கோவா வாங்கிச் சேர்ப்பேன். அல்லது மில்க் மெயிட்/ எனக்கும் சர்க்கரை நிறைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ப் போட்டால் தான் தித்திப்பாகத் தெரியும். :) மற்றபடி நெ.த. ரெசிபி ஓகே! :))))) இப்போக் கடைசியாக் காரட் அல்வா சாப்பிட்டது மைத்துனரோட பையர் கல்யாணத்தில் நெய் தனியாக அருவியாக ஓட, ஒரு பக்கம் அதில் சேர்த்த மாவா எனப்படும் கோவா ஆங்காங்கே வெள்ளிப்பனி மலை போல் தெரிய அதில் தெரிந்த சிகரங்களாக முந்திரி, பிஸ்தா, பாதாம், திராக்ஷை காட்சி அளிக்கக்கொஞ்சம் போல் அல்வாவைச் சுவைப்பதற்குள்ளாகத் திகட்ட ஆரம்பிக்க மனசில்லாமல் விட்டு விட்டு வர நேர்ந்தது. :)

    பதிலளிநீக்கு
  3. இங்கேயும் பையர் வெள்ளைச் சர்க்கரை வாங்குவதில்லை. ஆர்கானிக் பழுப்புச் சர்க்கரை தான்! அதில் தான் இன்று வந்த விருந்தினருக்குப் பாயசம் செய்தேன்.

    பதிலளிநீக்கு
  4. // நெய் தனியாக அருவியாக ஓட, ஒரு பக்கம் அதில் சேர்த்த மாவா எனப்படும் கோவா ஆங்காங்கே வெள்ளிப்பனி மலை போல் தெரிய அதில் தெரிந்த சிகரங்களாக முந்திரி, பிஸ்தா, பாதாம், திராக்ஷை காட்சி அளிக்க//

    ஆஹா... அக்கா.. என்னவொரு வர்ணனை!

    பதிலளிநீக்கு
  5. இவைகளை எல்லாம் பார்க்க மட்டும் தான் எனக்கு அனுமதி...!

    பதிலளிநீக்கு
  6. .....சூப்பர் ரெசிப்பி நெல்லை....இரண்டும் சேர்த்து செய்ததுண்டு. இதே தான். பாலில் வேகா வைத்து....இல்லைன்னா ஸ்வீட்ல்ஸ் கோவா/மாவா சேர்த்து....

    பீட்ரூட் சேர்த்தா..கலர் மாறும்தான்...நான் இரண்டும் ஒரே அளவு போட்டும் செய்ததுண்டு....அப்பப்ப என்ன தோணுதோ... அப்படி
    உங்க ரெசிப்பி செம டெம்பட்டிங்.... ஹும்}...சாப்பிட முடியாதே....

    பதிலளிநீக்கு
  7. சூடான கேரட் அல்வாவுடன் டூட்டுபுருட்டி ஜஸ்க்ரீம் சேர்த்து சாப்பிட புடிக்கும் வீட்டில் இப்போது பலகாரங்கள் செய்வதில்லை கடையிலே வாங்கிவிடுவேன்.......நேற்று இரவு ரெஸ்டராண்ட் சென்று சாப்பிட்டோம் அங்கே எனக்கு பிடித்த சூடான கேரட் அல்வாவுடன் டூட்டுபுருட்டி ஜஸ்க்ரீம் சேர்த்து இரண்டு கப் சாப்பிட்டேன்

    பதிலளிநீக்கு
  8. மொபைல்ல அடிச்சதுனால...கீதான்னு போடருத்துக்குள்ள ஓடிருச்சது.. மேளா கமெண்ட் பை கீதா

    பதிலளிநீக்கு
  9. மதுரைத் தமிழன் இப்படி புகைய கிளப்பறீங்களே...நான் நெல்லையின் படங்களைப் பார்த்து ஐயோ சாப்பிட முடியாதேனு...வீட்டில் செஞ்சாலும் ..ஸ்வீட்டி நான்...சாப்பிட முடியாதேனு நினைச்சுட்டுருக்க நீங்க என்னடான்னா....ஸ்வீட் பையனா (அதிரா, ஏஞ்சல் நோட் திஸ் பையன்!!!) இருந்துகிட்டு ரெண்டு கப் சாப்பிட்டுருக்கீங்க...

    கீதா

    பதிலளிநீக்கு
  10. நன்றி எங்கள் பிளாக் ஸ்ரீராம். மதுரை, திருநெவேலிக்காரங்க அல்வாவைப் பத்திப் பேசலைனாத்தான் ஆச்சர்யம். எங்க அப்பா, அந்தக் காலத்திலேயே (1973.. நான் 4வது படிக்கும்போது) வீட்டுல, கோதுமையை ஊறவைத்து பாலெடுத்து அல்வாவும், அப்புறம், மைதாமாவை ஊறவைத்து இன்னொரு வகை அல்வாவும் செய்திருக்கிறார். எனக்கும் அதுனாலதான் சமையல் செய்யறதுல ஆர்வம் (சாப்பிடுவதில் அவ்வளவு இல்லை.. அதாவது நான் சமைத்து அப்புறம் நானே உட்கார்ந்து சாப்பிடுவதில்). அல்வா நான் இன்னும் செய்ததில்லை. அது கஷ்டமான வேலை (கிளறி கிளறி கைவலி வந்துவிடும்). சாப்பிடற ஆசையும் அவ்வளவு இல்லை.

    எங்க அப்பா, கல்வித்துறையில் இருந்ததுனால, மதுரை வழியா வந்தா, அங்கேயிருந்து, வாழை இலையில் தரும் அல்வா பாக்கெட் (1 ரூ?) எங்கள் எல்லோருக்கும் வாங்கிவருவார். நெல்லைல இருந்தபோது, அப்போ அப்போ இரவு வெளியில் போகும்போது, அல்வா சாப்பிடாமல் வரமாட்டேன். 'மதுரை ஹேப்பிமேன் முந்திரி அல்வா' சாப்பிட்டதில்லை.

    இப்போவும், யாராவது நெல்லை, நாகர்கோவிலிலிருந்து லீவு முடித்துத் திரும்பிவந்தால் கண்டிப்பாக எனக்கு இருட்டுக்கடை அல்வாவும், நெல்லை பஸ்ஸ்டாண்டில் உள்ள ஒரிஜினல் சாந்தி ஸ்வீட்ஸ் அல்வாவும் வாங்கிவரச் சொல்லுவேன். சின்ன வயதுல சாப்பிட்ட கெப்பாசிட்டி இப்போ இல்லை. ரெண்டு ஸ்பூன் சாப்பிட்டாலே, போதும் என்று தோன்றுகிறது.

    கேரளாவின் அரிசி அல்வா ரொம்ப நல்லாயிருக்கும். கராச்சி அல்வா, பாம்பே அல்வான்னு கொஞ்சம் ரப்பர் மாதிரி இழுவையான அல்வாவும் எனக்குப் பிடிக்கும்.

    'நாங்கள் ஆர்வமாகச் செய்தோம்... எல்லாம் என் கைவண்ணம்தான்' என்றால் என்ன அர்த்தம்? செய்தது நீங்க. டேஸ்ட் பார்த்தது பாஸா? நீங்க விரைவில் ஒரு ஸ்வீட் செய்து செய்முறையை எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  11. மிகவும் நன்றாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
  12. பார்க்க சூப்பரா வந்திருக்கு கரட்டூட் அல்வா.... இதுவரை அல்வா செய்ய றை பண்ணவில்லை... கச்சான் அல்வா செய்ய வெளிக்கிட்டு பதத்தில கோட்டை விட்டிட்டேன்.
    அல்வா சரியான பதமாக இறக்கினால் மட்டுமே இறுக்கமா வரும் இல்லையெனில் சக்கரப் புக்கை போலாகிடும்... அந்தப் பயத்திலதான் செய்வதில்லை.

    பதிலளிநீக்கு
  13. இம்முறை இதனை செய்து பார்ப்போம், பீற்றூட்டுக்குப் பதில் கரட்டையே போடலாம்தானே? பிறகு கலர் ஒழுங்கா வராவிட்டால்ல்.... " கோழி குருடாயினும் குழம்பு ருஷிதானே முக்கியம்" கண்ணை மூடிச்சாப்பிட்டு, சுவையைச் சொல்லுங்கோ எனத்தான் மிரட்டோணும் வீட்டில்:).

    பதிலளிநீக்கு
  14. ஆவ்வ்வ்வ்வ் நெ. த நின் இந்த அல்வா ரெசிப்பியால , சும்மா இருந்த சகோ ஸ்ரீராமின் முதேல்ல்ல்ல் தீபாவளி நினைவுகள் எல்லாம் கிளறுப்பட்டுப் போச்சே...
    வாழை இலை தெரியும் /////சுடச்சுட வாழை இலை//// எங்காவது கிடைக்குமோ ?? சரி சரி எனக்கெதுக்கு ஊர்வம்பு:)....

    பதிலளிநீக்கு
  15. கீதா ... இப்போ சுவீட்டா முக்கியம்ம்ம்ம்ம்ம் .... அதிரா கண்ணுக்கு எல்லாம் தெரியுமெல்லோ... ஆவ்வ்வ்வ்வ்
    //// ஆச்சர்யம். எங்க அப்பா, அந்தக் காலத்திலேயே (1973.. நான் 4வது படிக்கும்போது///////
    மீ கரெக்காட்ட் கண்டு பிடிச்சிட்டேன்ன்ன்ன்ன்ன் ஹா ஹா ஹா.....
    இனி என் அடுத்த எயிம்.. மம்முட்டியைப் பார்ப்பதுதான்:) ஹையோ இண்டைக்கு எனக்கு சந்திராஷ்டமமாமே... தெரியாமல் வாய் திறந்திட்டேன்ன்ன்ன் எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்:).

    பதிலளிநீக்கு
  16. அல்வா செய்ய கடைகளில் கிடைக்கும் சாதாரண காரட் உபயோகிப்பதில்லை அதற்கென்றுபிங்க் நிறத்தில் தள தள வென இருக்கும் காரட்தான் உபயோகிப்போம் திருச்சி ஆல் இந்தியா ரேடியோவில் பூவையர் பூங்கா நிகழ்ச்சியில் என் மனைவி பீட் ரூட் அல்வா செய்முறை சொன்னது நினைவுக்கு வருகிறது

    பதிலளிநீக்கு
  17. இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
    Tamil News | Latest News | Business News

    பதிலளிநீக்கு
  18. தொட்டா ஒட்டிக்கும் பீட்ரூட்டின் கலரிலேதான் ஹல்வா வரும். எப்படியானால் என்ன குறைந்த நெய்யில் உடலுக்கு தொந்திரவு கொடுக்காத இனிப்பு. ரஸிக்க முடிந்த இனிப்பு.

    பதிலளிநீக்கு
  19. அஆவ் !! அல்வா பார்க்க நல்லா இருக்கு ..சின்ன வயதில் இருந்தே இனிப்பு மட்டும் எனக்கு அவ்ளோ பிடிக்காது :) காபிக்கே சுகர் சேர்க்காம குடிக்க பழகிட்டேன் :)
    இது வரைக்கும் நான் பல் சொத்தை பிரச்னைலாம் மாட்டிக்காம இருக்க இந்த ஸ்வீட் சேர்த்துக்காததும் ஒரு காரணம் :)
    அதே மாதிரி மகளும் வந்திட்டா .எங்க வீட்ல இனிப்பு சாப்பிடும்ஒரே ஸ்வீட் boy என் கணவர் மட்டுமே அவருக்காக செய்து பார்க்கணும் ..ஆமா !!பிள்ளைங்க ஏன் ஒன்னும் சொல்லலை ?

    பதிலளிநீக்கு
  20. @நெல்லை தமிழன் ..கேரளாவின் அரிசி அல்வா ..இது தொதொல் தனே ..எங்க உறவினர் ஒருவர் செய்யவனாக வீட்டில் கருப்பு அரிசி தேங்காய் பாலில் போட்டு செய்வாங்க நான் பார்த்திருக்கேன் ..உரப்பம் ,தொதொல் ,இதெல்லாம் ஈஸ்டர் ஸ்பெஷல் எங்க வீட்ல

    பதிலளிநீக்கு
  21. /ங்கே எனக்கு பிடித்த சூடான கேரட் அல்வாவுடன் டூட்டுபுருட்டி ஜஸ்க்ரீம் சேர்த்து இரண்டு கப் சாப்பிட்டேன்//

    ஹாஹா :) பரவால்ல சாப்பிடுங்க ..எனக்கு ஐஸ்க்ரீம் ஸ்வீட் லாம் பிடிக்காதே :)

    பதிலளிநீக்கு
  22. ஹலோ ஏஞ்சல் நீங்க எதுவுமே சாப்பிடாமல் வாழ்க்கையை ரொம்ப வேஸ்ட் பண்ணுறீங்க ஹும்ம்ம்ம்

    பதிலளிநீக்கு
  23. கீதா நேற்று எங்க வீட்டம்மா இந்தியாவில் இருந்த வந்த பெண்ணை அழைத்து கொண்டு இங்குள்ள பாலாஜி கோயிலுக்கு சென்று அங்கிருந்து லட்டு வாங்கி வந்தார் ஒரு முழு லட்டையும் நானே சாப்பிட்டுவிட்டேன்......எனக்கு ஆயுசு கம்மியாகிவிடுமோ?

    பதிலளிநீக்கு
  24. அது உங்களுக்கு ஒன்னும் பண்ணாது ஏனென்றால் நீங்க தான் த்ரீ டைம்ஸ் நடக்கறீங்களே அதனால் சாப்பிட்ட சர்க்கரை ஓடிடும் உங்கள விட்டு

    பதிலளிநீக்கு
  25. @avargal truth சாப்பிட கூடாதென்றில்லை ஆனா சுவீட்டுக்கு பதில் நேந்திரம் சிப்ஸ் பலாக்கா சிப்ஸ்லாம் கிடைச்சா சாப்பிடுவேன் :)

    பதிலளிநீக்கு
  26. ஏனோ பொதுவாகவே, கையில் ஒட்டக்கூடிய அல்வா என்பதே எனக்குப் பிடிப்பது இல்லை.

    காய்கறிகளில் எனக்கென்னவோ இந்த பீட்ரூட் என்பதைப் பார்த்தாலே பிடிப்பது இல்லை. என் இலையில் இதனை
    எந்த ரூபத்தில் வைக்கவும் நான் அனுமதிப்பது இல்லை.

    கேரட் மட்டும் அதுவும் பொடிப்பொடியாக, சுண்டிவிரல் சைஸுக்கு, ஜில்லுன்னு (துபாய் ஷாப்பிங் மாலில் விற்குமே அதுபோல) இருந்தால் அப்படியே வாங்கி பச்சையாக கடித்துக் கடித்து சாப்பிட மட்டும் பிடிக்கும்.

    எனினும் பொதுவாக அனைவரும் ஆசைப்படும் இந்த அல்வாவை வழங்கியுள்ளதற்கு .. ’அனைவருக்கும் அல்வா கொடுத்துள்ளதற்கு’ப் என் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  27. ஹஸ்பண்ட், பசங்க ஆசைப்பட்டதால் இந்த டூ இன் ஒன் அல்வாவா :)

    பதிலளிநீக்கு
  28. அருமை. செய்முறை இதுதான் என்றாலும் கேரட், பீட்ரூட் சேர்த்து செய்ததில்லை. நீளமான சிகப்பு கேரட் (அதையேதான் பிங்க் கேரட் என GMB sir குறிப்பிட்டிருக்கிறார் என நினைக்கிறேன்) சீஸனின் போது, கண்டிப்பாக செய்யப்படும்.

    பதிலளிநீக்கு
  29. நன்றி கீதா சாம்பசிவம் மேடம். நீங்கள் செய்முறையை ACKNOWLEDGE பண்ணவேண்டும் என்பதற்காகவே அவ்வப்போது உங்கள் ரெசிப்பி பிளாக்கில் பார்த்துக்கொள்வேன். சமீபத்தில் ருசித்த கேரட் அல்வா பற்றிய உங்கள் விவரணையே சாப்பிடும் ஆவலைத் தூண்டுகிறது.

    நானும் இங்கு ஆர்கானிக் சர்க்கரையை வாங்கிவைத்திருக்கிறேன் (வெள்ளை ஜீனியும், ஏகப்பட்ட வெல்லமும் எப்போதும் ஸ்டாக் வைத்திருப்பேன்.. எப்போ என்ன பண்ணணும்னு மனதில் தோணும்னு சொல்லமுடியாது).

    பதிலளிநீக்கு
  30. நன்றி திண்டுக்கல் தனபாலன். கொஞ்சம் சாப்பிட்டால் ஒன்றும் ஆகிவிடாது.

    பதிலளிநீக்கு
  31. நன்றி கீதா ரங்கன். நீங்கள் பெயர் போடாவிட்டாலும் யார் எழுதியிருக்கார் என்று கண்டுபிடிப்பது கஷ்டமா என்ன? பீட்ரூட்டோ அல்லது கேரட்டோ, அதனுடைய நிறத்தை மழுங்கடிப்பதற்கு ஒரு முறை தண்ணீரில் (துருவினபிறகு) அலசினால்போதும்.

    என்ன.. எல்லாரும் 'சாப்பிடமுடியாதே' ன்னு சொல்றீங்க. கொஞ்சம் இனிப்பு சேர்த்துக்கொண்டால் என்ன ஆகிவிடும்? அரிசி, கோதுமை இப்படி பலவற்றிலும் இனிப்பு இருக்கிறதே.. ஒருவேளை, நான் வந்துவிட்டால், ஸ்வீட் தராமல் இருக்க இப்படி ஒரு சாக்கு வைத்திருக்கிறீர்களோ?

    பதிலளிநீக்கு
  32. வாங்க.. மதுரைத் தமிழன். கேரட் அல்வாவும், ஐஸ்கிரீமும் செம காம்பினேஷன். அதுவும் ஐஸ்கிரீமில், வெனிலா, எல்லா இனிப்புகளுடனும் (ஜாமூன், ஜிலேபி, கேரட் அல்வா போல) நல்லா சேரும். அட்டஹாசமா இருக்கும். ஒரு நாள் இதை வீட்டில் செய்து உங்கள் மனைவிக்குக் கொடுங்களேன். (ஒரு வேளை கோதுமை அல்வா கிளறிக்கொடுத்தால், அவர்கள் கொஞ்ச நேரம் பேசாமல் இருக்க வாய்ப்பு இருக்கிறது)

    பதிலளிநீக்கு
  33. வாங்க ஆதிரா... அதிரா... 'கச்சான் அல்வா'ன்னு எழுதினீங்கனா, எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும்? நாங்கள் வேர்க்கடலை மிட்டாய் என்றுதான் சொல்வோம். அது அல்வாவில் சேர்த்தியில்லை. ஆனால் நிறைய முந்திரி போட்டு, கொஞ்சம் கோதுமையில் செய்வது முந்திரி அல்வா.

    எங்கள் ஊர் கோவிலில், 'சர்க்கரை புக்கையை' (சர்க்கரைப் பொங்கல்) வருடா வருடம் அல்வா பதத்தில் செய்வார்கள். ஒரு வருடம், சர்க்கரைப் பொங்கல் அல்வா (?) கொஞ்சம் கருகி விட்டது. அந்த வருடம் அவர்களது வீட்டில் ஏதோ கெடுதல் நடக்கப்போகிறது என்று பயந்துகொண்டே இருந்தார்கள். அதற்கு அடுத்தவருடத்திலிருந்து அதனை கோவிலில் செய்வதில்லை.

    கேரட் அல்வாவோ பீட்ரூட் அல்வாவோ, செய்வது சுலபம். கலர்ல பிரச்சனை ஏதும் வராது. செய்துபாருங்கள்.

    1973ல் 4வது என்றுமட்டும்தானே எழுதியிருக்கிறேன். ஒவ்வொரு வகுப்பும், தெளிவாகப் புரிந்து படிக்கவேண்டும் என்பதற்காக, எத்தனை வருடங்கள் படித்தேன் என்று எழுதவில்லையே.

    பதிலளிநீக்கு
  34. வாங்க ஜி.எம்.பி சார். என்னைப் பொறுத்தமட்டில் எல்லாக் கேரட்டும் நல்லாத்தான் இருக்கும். நீங்கள் குறிப்பிடும் கேரட், பாகிஸ்தான் கேரட் என்று இங்கே விற்கும். அதனை உபயோகப்படுத்தியதில்லை (தேச பக்தி அப்படின்னெல்லாம் சொல்லமாட்டேன். ஆஸ்திரேலியா கேரட் அழகா ஒரே சைஸில் இருக்கும். அதனால் அதனைத்தான் பாவிப்பேன்)

    பதிலளிநீக்கு
  35. வருக ஏஞ்சலின். உங்களுக்கு, முதல் வகுப்பு (PERIOD), தமிழாசிரியர் CLASS போலிருக்கிறது. 'உள்ளேன் ஐயா' கேட்டு எத்தனை வருடங்களாகிவிட்டன.

    பதிலளிநீக்கு
  36. காமாட்சி மேடம்... நல்லா இருக்கீங்களா? பல மாதங்கள் கழித்து உங்களைக் காண்பதில் மிக்க மகிழ்ச்சி. இன்னும் நீங்கள் எழுத ஆரம்பிக்கலையே.. வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  37. ஏஞ்சலின்.. உங்களாலும் அதிராவாலும் அப்பப்போ சில இலங்கைத் தமிழ் வார்த்தைகளைக் கற்றுக்கொள்கிறேன். நீங்கள் சொன்னபின், 'தொதல்'னா என்னன்னு பார்த்தேன். கிட்டத்தட்ட நான் சொல்லும் அரிசி அல்வாதான். தமிழர்களைவிட, மலையாளிகளின் உணவு கொஞ்சம் கூடுதலாக (பல மலையாள வார்த்தைகளும்) ஈழத்தில் கலந்திருக்கிறது. 'உரப்பம்'தான் கண்டுபிடிக்க முடியலை.

    உங்களைச் சாக்கிட்டு உங்கள் கணவருக்கும் ஸ்வீட்டுக்குப் பெப்பேதானா?

    பதிலளிநீக்கு
  38. மதுரைத் தமிழன் - "ஒரு முழு லட்டையும் நானே சாப்பிட்டுவிட்டேன்......எனக்கு ஆயுசு கம்மியாகிவிடுமோ?" - வாங்கிட்டு வந்தவர்களுக்கு எதுவும் கொடுக்காமல் முழுசாச் சாப்பிட்டா... 'செரிமானத்துக்குத்தான் பிரச்சனை'. தராததுனால் மனைவிக்குக் கோபம் வந்தால், உங்கள் உடம்புக்குப் பிரச்சனை. ஆயுசுக்கென்ன.. அதுவாட்டு இருக்கும்.

    பதிலளிநீக்கு
  39. வாங்க கோபு சார். உங்களை விட, உங்களுக்கு எது எது பிடிக்காது என்பது உங்கள் பதிவுகளைப் படிப்பவர்கள் எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும். யாராவது வற்புறுத்தி கேரட், பீட்ரூட் அல்வா சாப்பிடவைத்தால், அப்புறம் உங்களுக்கு அவைகளும் பிடிக்க ஆரம்பித்துவிடும். உங்களுக்குத்தான் இனிப்பில் ரொம்ப இஷ்டமே. கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  40. 'பசங்களுக்குப் பிடிக்கும்'னு தெரிஞ்சாலே, நாமே செய்துகொண்டு போவதில் ஒரு சந்தோஷம் இல்லையா பகவான்ஜி.

    பதிலளிநீக்கு
  41. கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி மேடம்.

    பதிலளிநீக்கு
  42. ஹாஹா :)அதிராவால் ப்லாகர்ஸ் எல்லாருமே தெனாலி ஆகப்போறாங்க சகோ :)
    எனக்கு 2011 லருந்து இந்த கச்சான் சுண்டல் எல்லாம் பழகிடுச்சி முந்தி அடிக்கடி டவுட் கேட்டுக்கேட்டு இப்போ எல்லா வார்த்தையும் தெரியுமே ..
    ம்ம் அப்புறம் அந்த தொல் தொல் என்றுதான் எங்க பாட்டி வீட்ல சொல்வாங்க அதே தான் ஆங்கிலோ இந்திய நண்பர்களும் சொல்வாங்க ஆனா தொதொல் நான் ஒரு ல் // விட்டு தெரியாம எழுதினது சரியா வந்திருக்கு
    கல் கல் தொல் தொல் கொக்கிஸ் இதெல்லாம் ஆங்கிலோ இன்டியன்ஸும் ஸ்பெஷலா செய்வாங்க

    உரப்பம் அது ஓரப்பம் ..சிங்கிளா ஒரே இட்லி ஸ்வீட் இட்லி தான் அது கேக் மாதிரி அப்புறம் இன்னொன்னு விவிக்கா :)
    orappam vivikka எல்லாமே kerala திருவனந்தபுரம் நாகர்கோயில் ஸ்பெஷல்ஸ்

    பதிலளிநீக்கு
  43. கோதுமை அல்வா சாப்பிட நிரம்ப பிடிக்கும்,கேரட் அல்வா போன வாரம் சாப்பிட்டேன். நம்ம ஹோட்டலில் நார்த் இந்தியன் குக் செய்திருந்தார்.அவர்கள் ஸ்டைலில் எங்கள் பக்கம் போல் இறுக்கமாக இல்லாமல் தளதளவென பொங்கல் போல் இருந்தது. வெட்டிக்கொடுக்கும் படி இல்லாமல் கரண்டியால் அள்ளி சாப்பிடும் படி பதத்தில் செய்திருந்தார்கள். நன்றாகவே இருந்தது.

    இப்போதெல்லாம் இனிப்பு பிடிக்குதோ இல்லையோ.. குக் சமைத்ததும் ஒரிரு துண்டுகள் அல்லது கரண்டிகள் நான் சுவை பார்த்தே ஆக வேண்டும் எனும் நிர்ப்பந்தம் இருப்பதனால் ஸ்விட்டுக்கு காப்பி டீக்கு மட்டும் தடா போட்டிருக்கேன்.அம்மா,அபபவுக்கு சுகர் இருபப்தனால் 30 வயதிலிருந்தே காப்பி டீ முதல் அனைத்து ஸ்வீட்டுக்கும் தடா தான். இப்போது அது தளர்த்தப்பட்டது.

    அடுத்த தடவை கேரட் அல்வா செய்யும் போது கொஞ்சம் பீற்றூட்டும் சேர்க்க சொல்லி விடுகின்றேன். நாம் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நெய் அள்ளி கொட்டி விடுவார்கள்.

    பதிலளிநீக்கு
  44. உண்மையில் இந்த தொதல் என்பது எங்கள் பக்கம் நிரம்ப விஷேசமான ஸ்வீட். பச்சை அரிசியை உறவைத்து உரலில் இடித்து வறுத்து உடனே செய்வார்கள். தேங்காய்ப்பால் அதிலும் கட்டித்தேங்காய்ப்பாலை விட்டு அரிசி மாவில் கலந்து பெரிய கல்லடுப்பில் விறகுகள் அடுக்கி.. பெரிய இரும்புத்தாச்சி சட்டி, உளவாரம் எனும் இரும்புக்கரண்டியால் இரண்டு ஆண்கள் கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும். எங்கள் ஊரில் தொதல் கிண்டுவதே திருவிழா போல் வீட்டில் ஆண்கள் உதவிக்கு இருக்கும் நாட்களில் தான் செய்வார்கள். அல்லது உதவிக்கு சொல்லி அழைப்பார்கள்.அரிசிமா,தேங்காய்ப்பால்,சீனி,வறுத்த பயறு என சேர்த்து இறுக்கமாக கிண்டி எடுப்பார்கள்.சில பகுதிகளில் தளதளவெனவும் எங்கள் பக்கம் இறுக்கமான பதத்திலும் இருக்கும். இலங்கையில் பிரதான ஸ்வீட் தொதல்.வட்டிலப்பம், உழுத்தங்களி போன்றவை என நினைக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  45. சின்ன வயதில் என் குழந்தைகள் பீட்ரூட் சாப்பிட மாட்டார்கள் அதனால் பீட்ரூட், காரட் பால் சேர்த்து அல்வா , பர்பி என்று அடிக்கடி செய்வேன்.உங்கள் செய்முறைபடங்களுடன் அருமை.

    பதிலளிநீக்கு
  46. 'நன்றி நிஷா உங்கள் கருத்துக்கு.

    "குக் சமைத்ததும் ஒரிரு துண்டுகள் அல்லது கரண்டிகள் நான் சுவை பார்த்தே ஆக வேண்டும் எனும் நிர்ப்பந்தம்" - எனக்கு ரொம்ப வருடங்க்ளுக்கு அப்புறம்தான் WEIGHT CONSCIOUSNESS வந்துள்ளது (காலம் போன காலத்தில்). துபாயில், ஒரு பெரிய SPECIALITY இந்தியன் ரெஸ்டாரன்டில் சாப்பிடச்சென்றிருந்தபோது (நான் முதலில் சென்றுவிடுவேன்), எல்லா ஐட்டங்களும் கிச்சனிலிருந்து வந்து அடுக்கிக்கொண்டிருந்தார்கள். அப்போது ரெஸ்டாரன்ட் மேனேஜர் (?) வந்து, ஒவ்வொரு ஐட்டமாக 1 ஸ்பூன் சாப்பிட்டார். ஏதாவது அவருடைய எதிர்பார்த்த டேஸ்ட் இல்லையென்றால் திருப்பி அனுப்பிக்கொண்டிருந்தார் (ஒரு டிரே திருப்பி அனுப்பினார்). அதைப் பார்த்த எனக்கு, எப்படி இத்தனை ஸ்வீட்ஸ், ஐட்டங்களை சாப்பிடுகிறாரே.. எல்லா நாளும், எல்லா வேளையும் இப்படி சுவை பார்த்தால், எவ்வளவு WEIGHT அவருக்குப் போட்டுவிடும் என்று நினைத்தேன்.

    தொதல் நன்றாகத்தான் இருக்கும் (அரிசி அல்வா).

    பதிலளிநீக்கு
  47. நன்றி கோமதி அரசு மேடம். இந்தப் பசங்களை சமாளிக்க என்ன என்னவெல்லாம் வித்தை காண்பிக்க வேண்டியிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  48. மீள்வருகைக்கு நன்றி ஏஞ்சலின். இப்போது நீங்கள் ஒரப்பம் என்று சொல்வது என்னவென்று தெரிந்துவிட்டது. இங்கு லுலு ஹைப்பர் மார்க்கெட்டில் (பல வருடங்களுக்கு முன்), பெரிய (இலுப்பச்சட்டி தோசைபோல்) சைஸில் இருக்கும் வெள்ளை இட்லி போன்றதைப் பார்த்து, அது இட்லிதான் என்று நினைத்து வாங்கிவந்தேன். ஹஸ்பண்டை சட்னி பண்ணச்சொல்லி, இதைச் சாப்பிட்டால் ஒரே இனிப்பு (ரொம்ப இல்லை.. ஆனால் இட்லி மாவுல ஜீனியைக் கலந்து வார்த்தா எப்படி இருக்கும்). அத்தோட அந்தப் பதார்த்தத்துக்கு ஒரு பெரிய குட்-பை. இதுபோல, 'பத்ரி' என்று செய்யும் அரிசிமாவு அடை/சப்பாத்தி போன்றதும் எனக்குப் பிடித்தமானதாக இல்லை.

    பதிலளிநீக்கு
  49. ஆமாம், தட்டில் பரிமாறி அனுப்பப்படும் உணவு முதல் பவ்வே வகை வரை அனைத்தும் சுவை பார்த்தே அனுப்ப வேண்டும், ஒன்றில் ஏதேனும் குறைந்தால் அல்லது அலங்கரிப்பில் குறை இருந்தால், அதை அனுப்ப கூடாது. அதை விடபல பார்ட்டிகளில் வேகமாக பிளேட்டுகளில் சாப்பாடு பரிமாறும் போது சொல்லப்ப்ட்ட முறைகளில் கறிகள் வைக்கப்படாமல் தட்டில் எங்கேனும் சிதறினால் அவைகளை அப்படியே கொட்டி விடுவேன். எங்கே பார்ட்டி, எத்தனை பேர் எனினும் கடைசி பிளேட் வரை என் மேற்பார்வையில் தான் செல்லும். எங்கள் கருத்துக்கள்..சுவையும்,தரமும் குறைந்த உணவை பரிமாறி கெட்ட பெயர் எடுப்பதை விட.. அச்சூழலில் நடந்த உண்மை சொல்லி அதற்காக காசை குறைத்து கொள்வது எதிர்கால வியாபார வளர்ச்சிக்கு நல்லது என்பதே!

    பதிலளிநீக்கு
  50. கேரட் பீட்ரூட் அல்வா
    இன்று தான் கேள்விப்படுகிறேன்.
    சுவைப்போம்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!