வியாழன், 6 ஏப்ரல், 2017

குமுதமும் விகடனும்











நண்பர்கள் அனைவரும் புஸ்தகாவில் மின் நூல் வெளியிடுவதை ஆங்காங்கே பார்த்துக் கொண்டிருந்தேன். 
திடீரென புஸ்தகா 'அட்மின்'னிடமிருந்து ஒரு மெயில் வந்திருந்தது.  நான்கு புத்தகங்கள் எனக்குப் பரிசாக அளிக்கப் பட்டிருப்பதாகச் சொன்னது மெயில்.




'என்னடா இது' என்று ஆச்சர்யத்துடன் அவர்கள் தந்த 'லிங்க்'கில் சென்று லாகின் செய்து உள் நுழைந்ததும் எழுத்தாளர் ஜீவி ஸார் எனக்குப் பரிசாக அளித்திருக்கும் நான்கு புத்தகங்கள் "என் ஷெல்பில்" வைக்கப்பட்டிருப்பதாய்ச் சொன்னது புஸ்தகா.




ஜீவி ஸாரின் நான்கு அருமையான புத்தகங்கள் அங்கு இருந்தன.  ஒவ்வொன்றும் அவ்வப்போது படித்து ரசிக்க வேண்டிய படைப்புகள்.  நான்கும் எனக்கே எனக்கு!







=======================================================================




1)  கனவில் நனைந்த நினைவுகள்
116 பக்கங்கள்.  நாவல்.



"இவன்" மாதவராவுக்கும் சேர்த்து ஒரு மாலை போட்டிருக்கலாம்!  "இவன்" துடிப்பு படித்தபோது தோன்றியது அதுதான்.  முன்னர் பூவனம் தளத்தில்  படித்தபோதும் அதுதான் தோன்றியது.  உணர்ச்சிகரமான கதையோட்டத்தில் கடைசியில் இனிய ட்விஸ்ட்கள்.
கதை எழுதுபவர் உணர்வோடு ஒன்றி எழுதுகிறார் என்றால், அதனோடு ஒன்றை சில வாசகர்களால்தான் முடியும், அதற்கு அவர்களுக்கும் அந்த உணர்வு சாத்தியம் இருக்க வேண்டும் என்கிற ராஜுவின் கருத்தில் எனக்கும் உடன்பாடு.  



அதாவது ராஜுவின் குரலில் வரும் ஆசிரியரின் கருத்து!  நம் அனுபவங்களோடு ஒத்துப்போகும் படைப்புகள் நம் மனதில் தங்கி விடுதல் இயற்கைதானே!


"யானை விரட்டற மாதிரி..."



என்னையே எனக்கு நினைவு படுத்திய வரி!  அட, அதற்கும் பலன் சொல்லியிருக்கப்படாதோ!



16 அத்தியாயங்கள்கொண்ட கதை. ஒவ்வொரு அத்தியாயத்தின் ஆரம்பத்திலும் கனவுகள் பற்றி சில விளக்கங்கள் தருகிறார்.  



பாடகரை ரகுவும் 'இவனு'ம் சந்திக்கும் இடங்கள் படித்து ரசிக்க வேண்டிய இடங்கள்.  



=====================================================================




2)  இருட்டுக்கு இடமில்லை 




468 பக்கங்கள்

இதுவும் பூவனம் தளத்தில் படித்திருக்கிறேன்.

60 அத்தியாயங்கள்.  முன்னுரையில் ஜீவி ஸார் சொல்கிறார் இந்தக் கதையில் எல்லோரும் நல்லவரே என்று.  விக்ரமனின் வானத்தைப் போல திரைப்படத்தில் எல்லோரும் நல்லவர்களாகவே காட்டப்படுவார்கள்.  கதைத்தலைப்புக்கு ஜீவி ஸார் சொல்லும் காரணம் சுவாரஸ்யம்.  



 

ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா என்கிற பாடல் நினைவுக்கு வருகிறதா?  வெளிச்சத்தின் இல்லாமையே இருட்டு.  வெளிச்சம் இருக்கிறது என்றால் இருட்டு இல்லை என்று அர்த்தம்.
ஆழமான உணர்வுகளால் ஆன வரிகள்.

எழுத்துப் பிழைகள் சிலவும், அலைன்மெண்ட் பிரச்னை சிலவும் கண்ணில் படுகின்றன. 



=======================================================================




3)  குமுதமும் விகடனும் 



88 பக்கங்கள்

இந்தப் புத்தகத்தில் முன்னுரை இல்லை!  



11 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு.  பதினோராவது சிறுகதைதான் புத்தகத்தின் தலைப்பும்.  அதுமட்டுமல்ல, இந்தக் கதையைத்தான் ஜீவி ஸார் நமது "கேட்டு வாங்கிப் போடும் கதை" ப் பகுதிக்கு கொடுத்திருந்தார்

ஆனால் பாருங்கள், அப்போது 'விகடனும் குமுதமும்' என்று இருந்த தலைப்பு ' குமுதமும் விகடனும்' ஆகி விட்டது!

நாவல் படிப்பது ஒரு சுவை.  சிறுகதைகளைப் படிப்பது ஒரு சுவை.  நான் சிறுகதைகளின் ரசிகன்.



=========================================================================





4)  காதலினால் கதையுமுண்டாம் 




10 கதைகள்.  116 பக்கங்கள்.  பத்தாவது கதையின் தலைப்புதான் புத்தகத் தலைப்பு. 




ரதிக்கு காதல் என்பது கல்யாணம் செய்து கொண்டால் காணாமல் போய்விடும் என்று பயம்.  ப்ரியன் அவளை எப்படி கன்வின்ஸ் செய்கிறான் என்று சுவாரஸ்யமான உரையாடலில் சொல்கிறார் ஆசிரியர்.  வருடக்கணக்கில் வைத்திருக்கும் தனது அந்த அபிப்ராயத்தை ஒரு உரையாடலில் மாற்றிக் கொள்கிறாள் ரதி!


 ========================================================================



பொதுவாக இந்த நூல்கள் பற்றிச் சொல்லவேண்டுமென்றால் 





ஜும் வசதி ஒன்று ஒரேயடியாக வருகிறது.  இல்லாவிட்டால் பழைய நிலைக்குச் செல்கிறது.  தேவையான அளவு கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாக்கிக் கொள்ளும் வசதி இருந்தால் நலம்.


விரும்பும் பக்கத்துக்குச் செல்லும் வசதி இருப்பதைச் சற்று தாமதமாகத்தான் கவனித்தேன்.  கீபோர்டில் வலது இடது அம்புக்குறி பட்டன்களைத் தட்டியும் படிக்கலாம். மௌஸ் ஸ்க்ராலிங்கிலும் பக்கத்தைத் திருப்பலாம்!   (ஹிஹிஹி... நான் கண்டுகொண்டதை சொல்லணும் இல்லை!)




சில வரிகள் தொடர்ந்து வரவேண்டியவை ஒன்றன் கீழ் ஒன்றாய் வந்திருக்கின்றன.  சில சமயங்களில் வர்ட் ஃபைலிலிருந்து காபி செய்து பிளாக்கில் போடும்போது எனக்கும் எப்படி நேர்ந்திருக்கிறது.  வரும் காலங்களில் இது போன்ற சிறு குறைகளைத் தவிர்க்கலாம்.


டேபிள்மேட் மேலே வைத்துப் படிப்பது போல இருக்கிறது அந்தப் பக்கத்தின் தோற்றம்.


குறைந்த விலையில் நிறைய புத்தகங்கள் படிக்கலாம்.  நம் நண்பர்கள் பலர் எழுதிய புத்தகங்கள் அங்கு இருக்கின்றன.  வைகோ ஸார் சடசடவென பத்து புத்தகங்கள் வெளியிட்டார்.  கரந்தை ஜெயக்குமார், வெங்கட் நாகராஜ் என்று நண்பர்களின் புத்தகங்கள் கண்ணில் படுகின்றன.


ஜீவி ஸார் இந்தத் தளம் பற்றி கலையரசி மேடம் தளத்தில் படித்தபோதுதான் அறிந்ததாகச் சொல்கிறார்.


புத்தகங்களின் விலை என்ன என்று கேட்டேன்.  பரிசளிக்கப் பட்டதாலோ என்னவோ புத்தகத்தில் விலை கண்ணில் படவில்லை.


"அங்கேயே இருக்குமே ஸ்ரீராம்"  என்றார்.  "ஐந்து புத்தகங்கள் இருக்கும் பாருங்கள்"

ஆமாம்..... 








 
"மேலும் புஸ்தகாவில் ஒரு ஆஃபர் ஒன்று தருகிறார்கள்.  மாதம் நூறு ரூபாய் கட்டினால் அந்த மாதம் முழுவதும் எவ்வளவு புத்தகங்கள் வேண்டுமானாலும் படிக்கலாம்"  என்றார்.



"முதலில் வரும் (கையெழுத்திட்டு அனுப்ப வேண்டிய) அக்ரிமெண்ட் காபியிலேயே விவரம் எல்லாம் இருக்கும், விற்பனையாவதில் ஐம்பது சதவிகிதம் நமக்கு" என்றார்.



'இங்கு வெளியிடுவதால் காப்பிரைட் பிரச்னை ஏதும் இருந்து, இதையே காகிதப் புத்தகமாகக் கொண்டுவருவதில் சிரமம் இருக்குமா' என்கிற என் கேள்விக்கு "இல்லை" என்று பதிலளித்தார்.



"எவ்வளவு ஸார் செலவு?"



"ஒரு செலவுமில்லை ஸ்ரீராம்.  கொஞ்சம் நேரம் செலவு.  அவ்வளவுதான்.  உங்கள் படைப்புகளை நீங்கள் வர்ட் ஃபைலாக அனுப்ப வேண்டும்.  அவ்வளவுதான்"என்றார்.



"அங்கு உங்கள் புத்தகம் வெளியானதும் உங்களுக்கு பத்துப் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும்.  அவற்றை உறவு, நண்பர்களுக்குப் பரிசளிக்கலாம்" என்றார்.



"பொதுவாக புஸ்தகா பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன?" என்று கேட்டேன்.



"வலைப்பதிவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் ஸ்ரீராம்.  இங்கும் பிரபல எழுத்தாளர்கள் வந்து இடம் பிடித்திருக்கிறார்கள்தான்ஆனால் அது வாசகர்கள் பார்வையில் உற்சாகமாக இருக்கும்..." என்றார்.  எழுத்துப் பிழைகள், அலைன்மெண்ட் பிரச்னைகள் பற்றி அவரும் குறிப்பிட்டார்.



புத்தகங்கள் வாங்க விரும்புபவர்கள், படிக்க விரும்புபவர்கள் மேலே முதல் வரியில் இருக்கும் புஸ்தகா வரியை க்ளிக் செய்து அங்கு சென்று படித்து இன்புறலாம்.


38 கருத்துகள்:

  1. அட அட. எத்தனை மகிழ்ச்சி தரும் செய்தி ஸ்ரீராம். ஜீவி அவர்களுக்கு நன்றி.
    எல்லாவற்றையும் படித்து விட்டீர்களா....... புஸ்தகா தரும் சலுகை பற்றித் தெரிந்துகொண்டேன்.
    மிக மிக நன்றி.

    பதிலளிநீக்கு
  2. ஐயா அவர்களின் எழுத்துக்களைப் படித்து ரசித்திருக்கிறேன்
    உண்மையிலேயே வலைப் பதிவர்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பு புஸ்தகா
    நன்றி நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
  3. நல்ல விளக்கம் பயன் பெறட்டும் பலரும்.

    பதிலளிநீக்கு
  4. இனிய பதிவில் பயனுள்ள விளக்கங்கள்..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  5. தான் பார்த்த படித்த நூல்களைப் பற்றி வாசிப்போருக்கும் விவரமாகச் சொல்லி இதுவரை இது பற்றித் தெரியாதோருக்கு இவ்வளவு விளக்கமாக தான் அறிமுகப்படுத்துகிற ஒரு விஷயத்தைச் சொல்ல முடியுமா?.. முடிந்திருக்கிறது. அதான் ஸ்ரீராமின் திறமை என்று வியக்கிறேன்.

    புஸ்தகா அறிமுகப்படுத்தியிருக்கும் மின் நூல் திட்ட்டம் நம் பதிவுலக புத்தகப் பிரியர்களுக்கு தங்கள் நூலை வெளியிட்டு ஆனந்திக்கவும், பிறரது ஆக்கங்களை வாசித்தறியவும் ஒரு வரப்பிரசாதம் என்பது உண்மை தான்.

    தங்கள் படைப்பாற்றலுக்கும் வாசிப்பு இன்பதற்கிற்கும் புஸ்தகா குழுமத்தை உபயோகாப்படுத்திக் கொள்ள இருப்போருக்கும் உயபோகப்படுத்திக் கொண்டோருக்கும் என் வாழ்த்துக்கள்.

    மிக்க அன்புடன்,
    ஜீவி

    பதிலளிநீக்கு
  6. இரண்டு நாளைக்கு முன்புதான் புச்தகாவில் 99 ரூபாய் ஒருமாத சந்தா செலுத்தினேன். பத்து புத்தகங்கள் இறக்கிக்கொள்ளலாம். கொண்டேன். எட்டு படித்துவிட்டு பதிலுக்கு வேறு எட்டு இறக்கினேன். அதைப் பற்றி எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஒரு முப்பது புத்தகங்களாவது படித்துவிட்டு அனுபவத்தை எழுதலாம் என்றிருக்கிறேன்.ஜீவி அவர்களின் புத்தகங்களும் படிப்பேன்.

    - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

    பதிலளிநீக்கு
  7. ’புஸ்தகா’பற்றிய அறிமுகத்திற்கு மனமார்ந்த நன்றி. பலருக்கும் பயன்படும் எனத் தோன்றுகிறது.

    பொதுவாக மின்னூல் வாசகர்களின் வரவேற்பை எந்த அளவிற்குப்பெற்றுள்ளது என நான் தெளிவாக அறிந்திருக்கவில்லை. நல்ல எழுத்துக்கள் நிறைய வாசகர்களை சென்றடைந்தால் அதனைவிட ஒரு படைப்பாளிக்கு வேறென்ன வேண்டும்?

    பதிலளிநீக்கு
  8. உடனேயே படித்துப்பார்த்து நல்ல விளக்கமாகப் பதிவு செய்திருக்கிறீர்கள். GOOD JOB DONE எங்கள் பிளாக் ஸ்ரீராம்.

    ஜீவி சாரும் ரொம்ப பிஸி என்று எழுதியபோதே நினைத்தேன். 'புஸ்தகா' புத்தகத் தயாரிப்பில் இருப்பார் போலிருக்கிறது என்று (எப்படி? கோபு சார் எழுதிய பதிவை வைத்துத்தான்.. ஜீவி சாரும், 'உங்களையும் உள்ளடக்கிய' ஒரு வேலை என்று சொல்லியிருந்தார். அப்படின்னா, வாசகர்களுக்குரித்தான வேலைனா புத்தகம் பதிவு செய்வதுதானே இருக்கமுடியும்?). ஜீவி சாருக்குப் பாராட்டுகள்.

    "புஸ்தகா"வில் நான் APPRECIATE செய்வது, புத்தகங்களுக்கான அட்டைப்படம். இதில் கொஞ்சம் முனைப்புடன் ஈடுபட்டிருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன். அவர்களின் PLANS நல்லாவே இருக்கு. இன்னும் நிறைய புத்தகங்களும், பத்திரிகைகளும் சேர்ந்துவிட்டால், நல்ல தளமாகிவிடும். அதுக்குள்ள, 'ராய செல்லப்பா' மாதச் சந்தா கட்டி, 10 புத்தகம் படித்துவிட்டாரே...

    பதிலளிநீக்கு
  9. ஜீவி நூல்கள் அறிமுகம், புஸ்தகா அறிமுகம் என்று நண்பர்களுக்கு நல்ல உதவி செய்துள்ளீர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  10. புஸ்தகா பற்றிய தகவல்களும் விளக்கங்களும் அருமை ..நானும் கோபு அண்ணா பதிவில்தான் பார்த்தேன் இதைப்பற்றி ..புத்தக அட்டைகள் அழகா வடிவமைத்திருக்காங்க ,பகிர்வுக்கு நன்றி ஸ்ரீராம்

    பதிலளிநீக்கு
  11. மிகவும் நன்றாக இருக்கிறது தகவல்மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  12. வோட்டுப் போட்டிட்டேன்ன்ன் . ஆஹா நீங்கள் கொடுத்து வச்சவர் சகோ ஸ்ரீராம்ம்.. இப்படிப் பரிசுகள் கிடைத்திருக்கு வாழ்த்துக்கள்.

    மூன் க்குப் போய் முடிஞ்சு, செவ்வாய்க்கிரகம் போகிறோம் என பீதியைக் கலக்குவதுபோல, புளொக்கில் எழுதி முடிஞ்சு இப்போ மின்னூல் என எல்லோரும் முன்னேறிக்கொண்டிருக்கினம், மிக மகிழ்ச்சியான செய்தி. ஆனா இதில் ஒரு துக்கமான செய்தி என்னண்டால்.. புளொக்கில்கூட, எழுதுவதில்தான் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.. கொமெண்ட் போடுவதில் எல்லோரும் ஆர்வம் காட்டுவதில்லை..

    அதேபோல, மின்னூல் வெளியிடுவதில் ஆர்வம் காட்டினால் போதாது, அதை வாங்கிப் படிக்கவும் ஆர்வம் ஏற்படுத்திக் கொள்ளோனும் நாங்க... நான் இதுவரையில் வாங்கிப் படித்ததில்லை[தப்புத்தான், ஆனா இப்போதானே இது நம்மவர்களிடையே பிரபல்யம் ஆகிறது], நாம் வாங்கிப் படித்தால்தானே வெளியிடுவோருக்கு மகிழ்ச்சி, ஆனா ஏனோ எனக்கு ஓரிடத்தில் இருந்து மின்னூல் படிப்பது கஸ்டமாக இருக்கும்.

    முன்பு என் ஃபோனில்.. பொன்னியின் செல்வனும், பார்த்தீபன் கனவும் எடுத்து வச்சிருந்தேன்... அது படிக்க முடியவில்லை... இப்போ பொன்னியின் செல்வன் புத்தகமாக 5 பாகமும் பரிசாக கிடைச்சு வச்சிருக்கிறேன்.. படித்து முடித்திட வேண்டும். நான் சின்னனாக இருக்கும்போது எங்கட அம்மா படிச்சு முடிச்சவ, அப்போ தொடங்கி எனக்கும் ஆசை முடிக்கோணும் என:)..

    பதிலளிநீக்கு
  13. கிடைத்த புத்தகங்கள் பற்றி ஒன்றும் விடாமல் மிக அழகாக.. மனதால ரசிச்சு எழுதியிருப்பது புரிகிறது உங்கள் எழுத்துக்களில்..

    ///ஜும் வசதி ஒன்று ஒரேயடியாக வருகிறது. இல்லாவிட்டால் பழைய நிலைக்குச் செல்கிறது. தேவையான அளவு கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாக்கிக் கொள்ளும் வசதி இருந்தால் நலம்.///

    ஃபோனில் எனில் இவ்வசதி உண்டுதானே, கொம்பியூட்டரில் எனில் ஃபொண்ட் ஸைஸ் போட்டிருந்தார்கள் புத்தகப் பகுதியில் என நினைவு..

    பதிலளிநீக்கு
  14. புஸ்தகா.. பற்றியும் மின் நூல்கள் பற்றியும் சகோ ஸ்ரீராம் கேட்டிருக்கும் கேள்விகளைப் பார்க்கப் புரிஞ்சுபோச்சூஊ... அரசியலில் குதிக்க ரெடியாகிட்டார்ர்ர்ர்ர்ர்ர்:).... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் நான் சத்தமா பேசமாட்டேன் ஜாமீஈஈஈஈஈ:).

    பதிலளிநீக்கு
  15. ///நெல்லைத் தமிழன் said...
    உடனேயே படித்துப்பார்த்து நல்ல விளக்கமாகப் பதிவு செய்திருக்கிறீர்கள். GOOD JOB DONE எங்கள் பிளாக் ஸ்ரீராம்.

    ஜீவி சாரும் ரொம்ப பிஸி என்று எழுதியபோதே நினைத்தேன். 'புஸ்தகா' புத்தகத் தயாரிப்பில் இருப்பார் போலிருக்கிறது என்///

    ஹா ஹா ஹா.. இப்பூடித்தான் கோபு அண்ணனும் பிஸி என்றார்ர்.. பார்த்தால் மின்னல் வேகத்தில் மின்னூல்கள்...

    இன்னும் கொஞ்ச நாளில் எங்கட ஸ்ரீராமும்.. நான் பிஸி எனச் சொன்னாரே எனில்.. ஹையோ வழி விடுங்கோ வழி விடுங்கோ.... நல்ல விஷயத்துக்காக பிஸியாவதில் மகிழ்ச்சிதானே அதைத்தான் சொல்ல வந்தேன்ன்.. ஆனா என்ன பிஸி எனினும் என்பக்கம் வராவிட்டால்ல்.. ........................... ஸ்ஸ்ஸ்ஸ் ஒண்ணும் பண்ணா மாட்டேன் எனச் சொல்ல வந்தேன்ன்:)).

    இண்டைக்கு என்னை அந்தப் புளியடி வைரவராலகூடக் காப்பாற்ற முடியாது போலிருக்கே.. மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்:).

    பதிலளிநீக்கு
  16. இந்த ஜுரம் எனக்கும் வந்திருக்கிறது பார்க்கவேண்டும் ஜீவி சாருக்கும் ஸ்ரீராமுக்கும் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  17. ஏற்கெனவே வெங்கட் நாகராஜின் தளத்தில் இந்தப் "புஸ்தகா" பற்றிப் படித்த நினைவு இருக்கு. உங்கள் மூலம் இன்னும் விபரமாகத் தெரிந்தது. உங்களுக்குக் கிடைத்த பரிசுக்கு வாழ்த்துகள். மேன்மேலும் ஜீவி சாரின் புத்தகங்கள் வெளியீடாகவும் வாழ்த்துகள். சுடச் சுட அருமையான விமரிசனத்துக்கும் பாராட்டுகள். உண்மையில் எப்படித் தான் நேரம் கிடைக்கிறதோ என்றே எண்ணத் தோன்றுகிறது. :))))

    பதிலளிநீக்கு
  18. புஸ்தகா ராக்ஸ்!! அருமையான தகவல்க அதுவும் விளக்கமாகச் சொல்லிவிட்டீர்கள் ஸ்ரீராம். ஜூவி சாரின் வரிகள் நா.பா வை நினைவுறுத்துகிறது. சாருக்கு வாழ்த்துகள்!!! துளசியும் ஒரு நாவல் கொண்டுவருகிறார். அவரையும் புஸ்தகாவில் போடலாம் என்று சொல்லத் தோன்றுகிறது. 10 புத்தகங்கள் கிடைக்கிறதே ஃப்ரீயாக நண்பர்களுக்குக் கொடுக்க...வலைப்பதிவர்களுக்கு நிச்சயமாக வரப்பிரசாதம்தான்....புஸ்தகாவில் ஸ்ரீராம் ராக்ஸ் என்று வரும் விரைவில்!!! அப்பாவின் புத்தகங்களைக் கூடப் போடலாமோ!!? மாதம் லைப்ரரி போன்று சந்தா கட்டி வாசிக்கலாம் என்பது மேலும் நல்ல விஷயம். இதை முத்துநிலவன் அவர்களின் தளத்திலும் வாசித்த நினைவு....அருமை...

    கீதா

    பதிலளிநீக்கு
  19. என்ன அதிசயம் இன்று உங்கள் தமிழ்மண வாக்குபெட்டி கண்ணில் பட்டது ஓட்டும் விழுந்துவிட்டதே!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  20. கனவுகள் பற்றி ஜீவி சார் சொல்லியிருப்பது போல எனது கதையிலும் சொல்லியிருக்கிறேன்....கனவுகள் எப்படி இயக்குகிறது என்று சார் சொல்லியிருப்பது எனது இப்போதைய கதையிலும் வருகிறது. எல்லாம் என் மகன் வாங்கி வைத்திருக்கும், சிக்மன்ட் ஃப்ராய்ட் எழுதிய கனவுகள் புத்தகத்தை வாசித்து ஏதோ புரிந்ததை வைத்து, நம் மூதாதையர் சொல்லிச் சென்றது என்பதை வைத்து....

    கீதா

    பதிலளிநீக்கு
  21. வெங்கட்ஜியும் புஸ்தகா பற்றி எழுதியிருந்தார்....முதலில் நான் வாசித்தது முத்துநிலவன் அண்ணா அவர்களின் தளத்தில்தான்...அவர்கள் அங்கு புதுக்கோட்டையில், அப்புறம் சென்னையில் புஸ்தகாவுடன் இணைந்து வெளியிடுவது பற்றிய நிகழ்வுகள் நடத்தினார்கள். சென்னையில் எனக்கு அதில் பங்கு கொள்ள விருப்பம் இருந்தது ஆனால் ஒரு சில பிரச்சனைகளால் கலந்து கொள்ள இயலவில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
  22. ஜுவி சாரைப் பற்றிய விவரங்களையும் அறிய முடிந்தது. மிக்க நன்றி ஸ்ரீராம்...(ஆசிரியரைப் பற்றி என்ற குறிப்பில்)

    கீதா

    பதிலளிநீக்கு
  23. ஸ்ரீராம் ஜீவி சார் என்று வந்திருக்க வேண்டியது தட்டும் போது ஜூ அல்லது என்று ஆகி விட்டது...ஜீவி சார் ஸாரி சார் இப்படி ஜீனியஸ் ஒருவரை ஜூனியர் ஆக்கி இங்கு டைப்பியதற்கு..

    கீதா

    பதிலளிநீக்கு
  24. மின்நூல் அறிமுகங்கள் உள்ளத்தைத் தொடுகின்றது.
    மின்நூல் வெளியீட்டாளர்களைப் பாராட்டுவோம்.

    பதிலளிநீக்கு
  25. ஜூவி ... நல்ல பல நண்பர்களை பெற்றவர் !உண்மைதான் ,அதில் நீங்களும் ஒருவர்தானே ஸ்ரீராம் ஜி :)

    பதிலளிநீக்கு
  26. அன்பு பகவான்ஜி,

    நீங்களும் அந்த அன்புச் சங்கிலியில் பிணைக்கப்பட்டவர்களுள் ஒருவர் தானே?.. அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்?..

    பதிலளிநீக்கு
  27. //தான் பார்த்த படித்த நூல்களைப் பற்றி வாசிப்போருக்கும் விவரமாகச் சொல்லி இதுவரை இது பற்றித் தெரியாதோருக்கு இவ்வளவு விளக்கமாக தான் அறிமுகப்படுத்துகிற ஒரு விஷயத்தைச் சொல்ல முடியுமா?.. முடிந்திருக்கிறது. அதான் ஸ்ரீராமின் திறமை என்று வியக்கிறேன்.



    நானும் ஜீவி சார் சொல்வது போல் ஸ்ரீராமின் திறமைகளை கண்டு வியக்கிறேன்.
    நேரம் ஒதுக்கி இவற்றை விவரமாய், விரிவாய் விளக்கியதற்கு நன்றி ஸ்ரீராம்.

    புஸ்தகா அறிமுகப்படுத்தியிருக்கும் மின் நூல் திட்ட்டம் நம் பதிவுலக புத்தகப் பிரியர்களுக்கு தங்கள் நூலை வெளியிட்டு ஆனந்திக்கவும், பிறரது ஆக்கங்களை வாசித்தறியவும் ஒரு வரப்பிரசாதம் என்பது உண்மை தான்.//

    சார் சொல்வது உண்மை.
    பயணம் செய்யும் போது நிறைய புத்தகங்களுடன் பயணம் செய்வோம். நல்ல நூலை தேடி படிக்கும் புத்தகப் ப்ரியர்களுக்கு
    மின் புத்தங்கள் வரப்பிரசாதம் தான்.

    வாழ்த்துக்கள் ஜீவி சார்.

    பதிலளிநீக்கு
  28. அன்பு நெல்லை,

    'உங்களையும் உள்ளடக்கிய' என்று சொன்ன பொழுதே நீங்கள் கரெக்டாக கண்டு கொண்டு என் பதிவிலும் புத்தகப் பிரசுரமோ என்று யூகித்துச் சொன்னதும் சரி தான். உங்கள் அந்த பின்னூட்டத்தை என் பதிவில் பிரசுரித்து, இந்த பிரசுர விஷயத்தைச் சொல்லலாம் என்றிருந்தேன். அதற்குள் நம் ஸ்ரீராம் முந்திக் கொண்டு விட்டார். என்னைப் பற்றி நானே சொல்வதைத் தாண்டி அதைப் பற்றி இன்னொருவர் விமரிசன ரீதியாய் சொல்வதில் இன்னும் அழகு கூடியிருப்பது தெரிந்தது.

    அந்த 'ரொம்ப பிஸி' இன்னும் வேறு சில விஷயங்களையும் உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது. பின்னால் தெரிவிக்கிறேன்.

















    பதிலளிநீக்கு
  29. @ வல்லிசிம்ஹன்

    வ்ல்லிம்மாக்கு நன்றி. நீங்களும் புஸ்தகா பக்கம் தலைக்காட்டிப் பாருங்கள். இன்னும் இன்னும் நிறைய எழுத்தாளர்கள் புஸ்தகாவில் ஐக்கியமாகும் பொழுது பிரமாதமாக இருக்கப் போகிற சம்சயங்கள் தெரிகின்றன. நம் பதிவுல வாசகர்களின் ரசனைகள் பட்டைத் தீட்டப்பட இது ஒரு நல்ல வாய்ப்பாகவும் வடிகாலாகவும் இருக்கும் என்பது என் எண்ணம். பார்க்கலாம். தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. நூலகளை வாசித்து விட்டுச் சொல்ல வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  30. @ Chellappa Yagyasamy

    //ஜீவி அவர்களின் புத்தகங்களும் படிப்பேன்.//

    ஆஹா.. படித்து விட்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன், ஐயா.

    பதிலளிநீக்கு
  31. எத்தனை பின்னூட்டங்கள், ஆதிரா?.. அத்தனையும் அட்டகாசம்.
    கரந்தையார், துரை செல்வராஜ், கில்லர்ஜி அனிவருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  32. @ Dr.B. Jambulingam

    நிறைய நிறைய ஆசை. உங்களையும் 'அங்கே' பார்த்து ரசிக்க ஆசை ஐயா.

    பதிலளிநீக்கு
  33. @ கீதா சாம்பசிவம்

    நன்றி, கீதாம்மா. வாழ்த்துக்களுக்கு நன்றி. 'புஸ்தகா' பக்கம் தங்கள் பார்வையும் 'எண்ணங்களும்' பதியட்டும்.

    பதிலளிநீக்கு
  34. தில்லையகத்து கீதா அவர்களுக்கு நன்றி. நிறைய சொல்லியிருக்கிறீர்கள். நன்றி.
    ஜூரம் வந்த ஜிஎம்பீ ஐயாவுக்கும் நன்றி. நல்லதுக்காகத் தான் இந்த ஜூரம்.
    Angelin அவர்களுக்கு நன்றி.
    அதைவிட படைப்பாளிக்கு வேறு என்ன வேண்டும் என்று அருமையாக விண்டு சொன்ன அநேகன் ஐயாவுக்கு நன்றி.
    யாழ்ப்பாணன், ஹென்றி மார்க்கர், அசோகன் குப்புசாமி-- அருமை நண்பர்களுக்கு நன்றி.
    நன்றி, கோமதிம்மா. பயணம் செல்லும் பொழுது இனி கையடக்கமாக மின்நூலகளை எடுத்துச் செல்லும் காலம் கனிந்து வருகிறது. என் நூல்களைப் படித்து விட்டுச் சொல்ல வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  35. 'எங்கள் பிளாக்'கின் இந்தப் பதிவையும் புஸ்தகாவின் சமீபத்திய லிங்கில் பார்த்ததில் சந்தோஷம். ஸ்ரீராமிற்கு வாழ்த்துக்கள். ஸ்ரீராமையும் 'புஸ்தகா'வில் பார்க்க ஆசை, இப்பொழுது அரும்பு விட்டிருக்கிறது.

    இதோ, 'புஸ்தகா'வின் Links:

    Links:
    ------
    [1]
    http://www.pustaka.co.in/sendy/l/xuNsku763GZiQfzIMUKVCTpA/Ad763G2FP6fP763n892gKWYWEWig/I8yqBhQdyKz5C4Et892kaezQ
    [2]
    http://www.pustaka.co.in/sendy/l/xuNsku763GZiQfzIMUKVCTpA/lZPk8892g3LePzE892Xy2SoD9g/I8yqBhQdyKz5C4Et892kaezQ
    [3]
    http://www.pustaka.co.in/sendy/l/xuNsku763GZiQfzIMUKVCTpA/hoASTO2w48ysgPhReFQAhA/I8yqBhQdyKz5C4Et892kaezQ
    [4]
    http://www.pustaka.co.in/sendy/l/xuNsku763GZiQfzIMUKVCTpA/4R7Y7638FM9glPm2dqSrWtOA/I8yqBhQdyKz5C4Et892kaezQ
    [5]
    https://engalblog.blogspot.com/2017/04/blog-post_6.html?showComment=1491568033862#c1196507807506128009

    பதிலளிநீக்கு
  36. /ஒவ்வொரு அத்தியாயத்தின் ஆரம்பத்திலும் கனவுகள் பற்றி சில விளக்கங்கள் தருகிறார். ///எனக்கும் கனவுகள் அடிக்கடி வரும் :) ஜிவி சார் நான் அந்த புத்தகத்தை கட்டாயம் வாசிக்கணும்

    பதிலளிநீக்கு
  37. @ Angelin

    //ஜிவி சார் நான் அந்த புத்தகத்தை கட்டாயம் வாசிக்கணும்//

    நன்றி. நிச்சயம் வாசித்து விடுங்கள். அந்தப் புத்தகம் மட்டுமில்லை. என்னுடைய எல்லாப் புத்தகங்களையுமே. ஒவ்வொன்றும் வெரைட்டியாக ஒவ்வொரு விதத்தில் இருக்கும்.

    மாத சந்தா கட்டினால், நூல் நிலையம் போலவே உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.


    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!