வியாழன், 24 ஆகஸ்ட், 2017

உன்னைப்போல் ஒருவன் - பழசும் புதுசும் - வெட்டி அரட்டை


     உன்னைப்போல் ஒருவன்
     இந்தப் பெயரில் இரண்டு தமிழ்ப்படங்கள்.  

     முதலாவது 1965 இல் வெளியானது.  ஜெயகாந்தனின் முதல் திரைப்படைப்பு.   டிபிகல் சினிமாக் காரர்கள் மேல் நம்பிக்கை வைக்காத ஜெயகாந்தன் தானே தன் படைப்பைத் திரைப்படமாக்கத் துணிந்தார்.  அவருக்கு ஃபைனான்ஸ் செய்ய முன்வந்தவர் அவரது எழுத்தின் தீவிர ரசிகர் வீனஸ் கிருஷ்ணமூர்த்தி.  ஆனால் ஜேகே எழுதிய திரைக்கதையை ஒப்புக்கொள்ள மறுத்த வீனஸ் கிருஷ்ணமூத்தி அதில் செய்யச் சொன்ன மாற்றங்களை செய்ய மறுத்த ஜேகே தானே பணம் போட்டு, மேலும் தன் நண்பர்களின் உதவியுடன் படத்தை எடுத்தார்.  வீணை சிட்டிபாபு இசை என்றாலும் படத்தில் பாடல்களே கிடையாது.


      பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாத படத்துக்கு ஆதரவு காட்ட விநியோகஸ்தர்கள் மறுக்க,  தானே சொந்தமாகத் திரையிட்டு நஷ்டப்பட்டார் ஜேகே.




     காமராஜர் உட்பட அனைவரும் பார்த்துப் பாராட்டிய படம்.  பத்திரிகைகள் பாராட்டின.  ஏவிஎம் செட்டியார் படத்தை பெரும் விலை கொடுத்து வாங்க முயற்சித்தார்.  ஆனால் அவரது நோக்கம், இந்தப் படத்தை அறிமுகமான பிரபல நடிகர்களை வைத்து மறு ஆக்கம் செய்வது என்று அறிந்துகொண்ட ஜேகே  உரிமையை அவருக்கு விற்க மறுத்து விட்டார். 




     இந்தப் படம் தந்த தோல்வியால் ஜேகே கலங்கி விடவில்லை என்பதற்கு அப்புறமும் அவர் உருவாக்கிய 'யாருக்காக அழுதான்?'  'புதுக் செருப்புக் கடிக்கும்',  'சில நேரங்களில் சில மனிதர்கள்',  'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' போன்ற படங்கள் உதாரணம். 
    அவர் ஏன் தனது 'பாரிசுக்குப் போ' நாவலைத் திரைப்படமாக்க முனையவில்லை என்று தெரியவில்லை!  எழுதிய எல்லாவற்றையும் படமாக்கத்தான் முடியுமா என்ன!



    2009 இல் வந்த கமல் நடித்த உன்னைப்போல் ஒருவன் படம் பற்றிச் சொல்லப் பெரிதாக ஒன்றுமில்லை.  ஹிந்தியில் வந்த A Wednesday என்கிற படத்தின் தழுவல்.  கமலின் வெற்றி படங்களில் ஒன்று.  இசை அவர் மகள் ஸ்ருதி ஹாசன்.  கிட்டத்தட்ட இந்தப் படத்திலும் பாடல்கள் இல்லை- படம் முடிந்த உடன் வரும் அந்த ஒரு பாடலைத் தவிர!  சுவாரஸ்யமான படம்.







     'என்னைப்போல் ஒருவன்' என்று ஜிவாஜி நடித்த திரைப்படம் ஒன்று உண்டு.  1978 வெளியீடு.  எம் எஸ் வி இசையில் 'வேலாலே விழிகள், 'தங்கங்களே நாளைத் தலைவர்களே' என்று இரண்டு நல்ல பாடல்கள் உள்ள திரைப்படம். .


     இனிதான் வரவேண்டும் 'நம்மைப்போல் ஒருவன்' என்று ஒரு திரைப்படம்!!









42 கருத்துகள்:

  1. hihihi உங்களுக்கும் "ஜிவாஜி" ஆனது குறித்து சந்தோஷம். இந்த வெட்னஸ்டே படம் ஹிந்தியில் நஸ்ருதீன் ஷா நடிச்சு வந்ததா? மும்பை ரயிலில் குண்டு வெடிப்பு குறித்த படம்? ஹிந்தியில் அருமையா இருக்கும். நல்லவேளையாத் தமிழில் பார்க்கலை. உல(க்கை)க நாயகன் நடிச்சிருக்கார்னு சொன்னீங்களே, நன்ன்ன்ன்னீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

    பதிலளிநீக்கு
  2. ஜெயகாந்தன் அவர்கள் ஒரு தனி கேரக்டர். அவருடைய அதீத Self Confidence, மற்றும் தன்னைப் பற்றி அவர் கொண்டிருந்த கம்பீரமான அனுமானம், அவரது மீசையைப் போன்று மிளிர்ந்த ஒன்று. அப்படி உள்ளவர், கொஞ்சம் வளைந்துகொடுத்திருந்தால் நிறைய சம்பாதித்திருக்கலாம், ஆனால் நம் எல்லோரிடமும் உள்ள அந்த பிம்பம் வந்திருக்காது.

    கமலின் 'உன்னைப்போல் ஒருவன்' சுமாராத்தான் ஓடுச்சு. எனக்குத் தெரிந்தவர் (அந்தத் தியேட்டரில் நான் போனபோது 6 பேர் இரவுக் காட்சி பார்த்துக்கொண்டிருந்தார்கள், படம் வந்து 10-20 நாட்கள் என ஞாபகம்) சொன்னார், ஒவ்வொரு காட்சிக்கும் 'க' இத்தனை ரூபாய் தந்துவிடுகிறார் என்றும் படத்தை இத்தனை நாட்கள் ஓட்டவேண்டும் என்றும் சொன்னார். எனக்கு மிகவும் பிடித்த படம். கமல், கம்பீரம் குறையாத மோகன்லால், மற்ற துணை பாத்திரங்கள் என்று படம் நல்லா இருந்தது. (எல்லோரும் இந்தில இன்னும் நல்லா இருந்தது என்று சொல்வார்கள். என் ஆருயிர் நண்பனும், வசூல்ராஜாவை விட முன்னாபாய் அட்டஹாசம் என்பான். மொழிதெரியாம எப்படி படத்தைப் பார்த்து ரசிக்கமுடியும்?)

    எதுக்கு சம்பந்தமே இல்லாமல் 'சிவாஜி' படத்தை இங்கு கொண்டுவந்திருக்கிறீர்கள்? பெயர்க் காரணத்துக்காக மட்டும்தான் என்று நினைக்கிறேன்.

    த ம காலையிலேயே

    பதிலளிநீக்கு
  3. ஜெயகாந்தன் ஒரு idealist. Idealist to the core. No question of compromise. அப்படித் தன் லட்சியங்களுடன் ஒத்துவராததுடன் சமரசமின்றி தன் போக்கில்போனதால்தானே அவர் ஜெயகாந்தன்! எழுத்து எப்படியோ அப்படியே செயலும், கடைசிவரை. அவருடைய சினிமா அனுபவங்களை ‘ஒரு இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்’ என்னும் நூலில் தந்திருக்கிறார்.(பதிப்பகம் நினைவில்லை). அதில் குறிப்பாக, சந்திரபாபுபற்றி அவர் எழுதியிருப்பது படிக்கவேண்டிய விஷயம். சந்திரபாபுதான் தன்னை முதன்முதலாக ’மிஸ்டர். ஜேகே!’ என்று அழைத்துப்பேசியது என்றும் குறிப்பிட்டுள்ளார் ஜெயகாந்தன்.

    நீங்கள் குறிப்பிட்டுள்ள மூன்றையும் நான் பார்க்க நேரவில்லை. பாலசந்தர் இயக்கிய கமல்ஹாசனின் ‘உன்னால் முடியும் தம்பி’ ஏனோ நினைவுக்கு வந்தது.

    சிவாஜியின் மேற்குறிப்பிட்ட படத்தில் ஹீரோயின் யார்? உஷா நந்தினியா ?

    பதிலளிநீக்கு
  4. வாங்க கீதாஅக்கா... ஜிவாஜி என்று உங்கள் திருப்திக்காகத்தான் போட்டேன். மற்றபடி நான் அவர் ரசிகன்தான்! ஹிந்தியில் நஸ்ருதீன் ஷா நடித்ததுதான். நாம் எதை முதலில் பார்க்கிறோமோ, அது முதல் இடத்தில் மனதில் அமர்ந்து விடுகிறது. மனித மனம்! நான் ஹிந்தியில் பார்த்ததில்லை.

    பதிலளிநீக்கு
  5. வாங்க தனபாலன். ஜேகேயை விட்டு விட்டு BIGG Boss ஐ மட்டும் சொன்னா எப்படி!!

    பதிலளிநீக்கு
  6. வாங்க நெல்லை...

    // அவர் மீசையைப் போல் மிளிர்ந்த ஒன்று //

    ஹா... ஹா...ஹா.. ரசனைகள் அபிமானங்களால் ஆனது! கமல் என்று இல்லை, நிறைய படங்கள் அப்படி ஓட்டப்படுபவைதான். பவர் ஸ்டார் தான் நடித்த லத்திகா என்கிற படத்தை அப்படித்தான் ஓட்டினாராம்! ஆனால் கமலின் இந்தப் படத்தை நானும் ரசித்தேன்.

    கீதா அக்காவுக்கு சொல்லியிருப்பதைப்போல First is the best ! அது வசூல் ராஜாவாகட்டும், வெட்னஸ்டே ஆகட்டும். மேலும் எனக்கு சஞ்சய் தத்தைப் பிடிக்காது!

    பதிலளிநீக்கு
  7. வாங்க ஏகாந்தன் ஸார்.

    //அப்படித் தன் லட்சியங்களுடன் ஒத்துவராததுடன் சமரசமின்றி தன் போக்கில்போனதால்தானே அவர் ஜெயகாந்தன்! எழுத்து எப்படியோ அப்படியே செயலும், கடைசிவரை.//

    உண்மை. ஆனால் கடைசி காலங்களில் கொஞ்சம் காம்ப்ரமைஸ் ஆனார் என்று நினைக்கிறேன். சாவியின் பழைய கணக்கும் சரி, ஒரு இலக்கியவாதியின் திரையுலக அனுபவங்களும் சரி என்னிடம் பைண்ட் செய்யப்பட்டு இருக்கின்றன. ஆனால் தேடவேண்டும்!! ஜேகேயின் சில நேரங்களில் சில மனிதர்கள் நான் ரொம்ப ரசித்த படம். நடிகை நாடகம் பார்க்கிறாள் போர்!!!

    பதிலளிநீக்கு
  8. எனக்கும் ஏனோ சிவாஜி படங்கள்தான் பிடிக்கும்.. சண்டை குறைவாக இருக்கும்.. பாடல்கள் சூப்பரா இருக்கும்.. கதை இருக்கும்... என்பது என் நம்பிக்கை.

    ஆனா நீங்க சொன்ன எந்தப் படமும் பார்க்கவில்லை.

    இப்போ வெளிவந்த “தனிஒருவன்” தான் 2 தடவை பார்த்திட்டேன்ன்... சிரிச்சு சிரிச்சு முடியாது..

    பதிலளிநீக்கு
  9. // இனிதான் வரவேண்டும் 'நம்மைப்போல் ஒருவன்' என்று ஒரு திரைப்படம்!!//

    ஹா ஹா ஹா பன்மையில் ஒருமையைக் கண்டு பிடிப்பது என்பது கஸ்டமான ஒன்றாச்சே:).

    பதிலளிநீக்கு
  10. வாங்க அதிரா... சிவாஜி படங்களிலும் அதைவிட எம் ஜி ஆர் படங்களிலும் ஆட்டுக்கல் நன்றாகத்தான் இருக்கும்!

    நீங்கள் கமல் நடித்த உன்னைப்போல் ஒருவன் ஒருதரம் பார்க்கலாம். ஜேகேயின் சில நேரங்களில் சில மனிதர்கள் பார்த்திருக்கவில்லை என்றால் அதையும் பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  11. ஜெயகாந்தனின் உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்துடன் மற்ற இரு திரைப்படங்களும் ஒப்புநோக்குமளவு உள்ளதாக எனக்குத் தோன்றவில்லை.

    பதிலளிநீக்கு
  12. //இனிதான் வரவேண்டும் 'நம்மைப்போல் ஒருவன்' என்று ஒரு திரைப்படம்!!

    ஹா.. ஹா.. ஹா... ஸூப்பர் நக்கல்ஸ்.

    பதிலளிநீக்கு
  13. நீங்க சொல்லித்தான் “சதிலீலாவதி” பார்த்தோம் ஸ்ரீராம்.. நன்றாகவே இருந்துது.

    இவற்றையும் பார்த்திட்டால் போச்சு.. எனக்கு அரசியல், புராணக்கதை, சண்டை இப்படியானதெனில் பார்க்க விருப்பமில்லை.

    விஜய்சேதுபதியின் படங்கள் எல்லாம் விரும்பிப் பார்ப்பேன் ஆனா இப்போ வந்திருக்கும் விக்ரம் வேதா பிடிக்கவில்லை எனக்கு.. சண்டை அதிகமாக இருக்கு.

    சிலநேரங்களில் சில மனிதர்கள் கதைப்புத்தகம் படித்த நினைவாக இருக்கு கதை மறந்து போச்ச்ச்ச்:) பார்க்கிறேன்.

    ////சிவாஜி படங்களிலும் அதைவிட எம் ஜி ஆர் படங்களிலும் ஆட்டுக்கல் நன்றாகத்தான் இருக்கும்!///
    ஆட்டுக்கல்லா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் எனக்குப் புரியவே இல்லையே இதுக்குத்தான் என் செகரட்டரியைக் கையோடு வைத்திருக்கிறனான்:).. இப்போ ஆரிடம் கேட்டுப் புரிவேன் இதை?:)..

    பதிலளிநீக்கு
  14. ஆட்டுக்கல் என்று வந்துவிட்டதா? ஹையோ.... ஹையோ.... பாட்டுகள்!

    பதிலளிநீக்கு
  15. வாங்க முனைவர் ஜம்புலிங்கம் ஐயா... ஒப்பு நோக்கல் அல்ல. ஜஸ்ட் விவரங்கள்! அஷ்டே! ஜேகேயின் உன்னைப்போல் ஒருவன் நான் பார்த்ததில்லை ஜம்புலிங்கம் ஐயா.. அது மட்டுமல்ல, ஜேகேயின் யாருக்காக அழுதான் நான் ரசித்த ஒரு கதை. அதை நாகேஷை வைத்து திரைப்படமாக எடுத்திருப்பார். அந்தப் படத்தையும் நான் பார்க்கவில்லை. நாகேஷ் அந்தப் படத்தில் ஜோசப் கதாபாத்திரத்துக்காக செயற்கையாகச் சிரித்தவண்ணம் இருப்பார்!

    பதிலளிநீக்கு
  16. ஜெயகாந்தனின் உன்னைப் போல் ஒருவன் பார்த்ததில்லை. கமலின் உன்னைப் போல் ஒருவன் நல்ல படம். நான் ஹிந்தி, தமிழ் இரண்டும் பார்த்தேன். எனக்கு என்னவோ தமிழ் பிடித்திருந்தது. குறிப்பாக மோகன்லாலின் நடிப்பு. கொஞ்சம் கொஞ்சமாக அவர் டென்ஷனை ஏற்றிக்கொண்டே போகும் அழகு...!

    கமலைப் பொருத்தவரை ரீ மேக் மிக நன்றாக செய்வார். மூலத்திலிருந்து அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்று விடுவார். அது குருதிப் புனலாகட்டும், பாபநாசமாகட்டும், உன்னைப் போல் ஒருவனாகட்டும். கோவிந்த் நிஹ்லானியால் இயக்கப்பட்ட குருதி புனலின் மூலம் த்ரோகால் கொஞ்சம் rawவாக இருக்கும், குருதி புனல் பாலிஷ்டாக இருந்தது. அதே போல மலையாள திருஷ்யம், தமிழ் பாபநாசம் இரண்டும் பார்த்தேன். கமலை விட அதிகமாக மோகன்லால் நடிப்பு பிடிக்கும், இருந்தாலும், திருஷ்யத்தை விட பாபநாசம் பிடித்திருந்தது.

    நீங்கள் குறிப்பிட்டிருந்த ஜெயகாந்தன் படங்கள் எல்லாவற்றையும் அவரேவா இயக்கினார்? சில நேரங்களில் சில மனிதர்கள்,மற்றும் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் இரண்டையும் இயக்கியது பீம்சிங்.
    ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் போர் என்று கூறியிருக்கிறீர்கள். போர் கிடையாது, பார்க்க கொஞ்சம் பொறுமை வேண்டும். அந்த படத்தில் நாகேஷின் நடிப்பை பார்த்து நான் அசந்து போனேன். அந்த நாவலை படிக்கும் பொழுது கல்யாணி கதாபாத்திரத்தை நாம் எப்படி கற்பனை செய்வோமோ அப்படியே நடித்திருப்பார் லட்சுமி. ஆனால் கதையில் கொஞ்சம் கூட முக்கியத்துவம் இல்லாத அந்த வக்கீல் கதாபாத்திரத்தை மெருகேற்றி நாகேஷ் நடிக்கும் அழகை ஜெயா டி.வி.யில் போடும் பொழுது பாருங்கள்.

    ஜெயகாந்தனின் ஒரு கதையை எஸ்.வி.சுப்பையா படமாக எடுத்தாரே, அதில் கூட சிவாஜியின் நடிப்பை பார்த்து விட்டு ஜெயகாந்தனே "செங்கோடனைக் கண்டேன்" என்று பாராட்டினாரே..? அது என்ன படம்? பத்மினி ஹீரோயின். சிவாஜி பெரிய மீசையெல்லாம் வைத்துக் கொண்டு தென்னை மரத்தில் ஏறுவது போல போஸ்டர் பார்த்த ஞாபகம்..

    மற்றபடி உங்கள் முத்தாய்ப்பு அருமை!!

    பதிலளிநீக்கு
  17. எஸ்.வி.சுப்பையா தயாரித்த படம் 'காவல் தெய்வம்', கதை வசனம் ஜெயகாந்தன் அவர்கள். சிவாஜி நடித்த பாத்திரம் 'சாமுண்டி கிராமணி'. சிவாஜியின் அந்தப் பாத்திரம்தான் எனக்கு நினைவில் வந்தது. கூகிளாண்டவரிடம் கேட்டேன்.

    பதிலளிநீக்கு
  18. எதிலும் காம்ப்ரமைஸ் செய்யாத மனிதர் ஜெயகாந்தன் இத்தனை பெயர் எடுத்தது நம்பமுடியாதது அதிர்ஷ்டம் என்று சொல்லவா காலத்தின் கோலம் என்று சொல்லவா

    பதிலளிநீக்கு

  19. உன்னைப் போல் ஒருவன்
    என்னைப் போல் ஒருவன்
    கடவுளைப் போல ஒருவன்
    வரவில்லையே!

    தாங்கள் https://seebooks4u.blogspot.com/2017/08/blog-post.html இல் வெளியிட்டுள்ள மின்நூல்களை 10,000,000 வாசகர்களுக்குப் பகிர்ந்து உதவுங்கள். என்னங்க... இந்த உதவியைத் தானே கேட்கிறேன்.

    பதிலளிநீக்கு
  20. ஜெயகாந்தனின் படங்கள் அப்போது பள்ளியில், கல்லூரியில் படித்த போது பார்த்திருக்கிறேன்...சில நேரங்களில் சில மனிதர்கள்...எல்லாம் ஆனால் உன்னைப் போல் ஒருவன் பார்த்ததில்லை,கமலின் படம் பார்த்திருக்கிறேன். பாலக்காட்டில் ஃபேமஸ் நடிகர்களின் படங்கள் வந்துவிடும். ஜெகே லட்சியவாதி என்று அப்போது பத்திரிகைகள் மூலம் அறிந்ததுண்டு. எம்ஜிஆரும் பிடிக்கும் சிவாஜியும் பிடிக்கும்...

    கீதா: ஜெ கா வின் உன்னைப்போல் ஒருவன் பார்த்ததில்லையே!! நெட்டில் கிடைத்தால் பார்த்துவிட வேண்டும். கமலின் படமும் பார்க்கவில்லை. சான்ஸ் கிடைக்கலை...ஜெ கா வின் சிநேசிம, ஒநநாபா க்பார்த்திருக்கிறேன்...கல்லூரிக்காலத்தில்..ஆனால் புசெக, யாஅ பார்த்த்தில்லை...

    ஜெகா வின் ஆளுமை அவர் எழுத்திலும் அது தெரியுமே!! எழுத்துலகையும் ஆண்டவர்! யுனிக் பெர்சன். அவரது பேட்டியில் அது வெளிப்படும். காம்ப்ரமைஸ் பண்ணாததினால்தான் கையைச் சுட்டும் கொண்டார்.

    எனக்கும் ஜிவாஜி யின் நடிப்பு பிடிக்கும். ஒரு சில இடங்களில் கொஞ்சம் ஓவர் ஆக்டிங்க் என்றாலும் கூட..

    பதிலளிநீக்கு
  21. சிநேசிம, ஒநநாபா கதை ஜெகா. இயக்கியது அவரா? அது போல முதல் படம் உன்னைப் போல் ஒருவனும் அவரேவா இயக்கினார்? அல்லது தயாரிப்பு மட்டுமா..

    நான் வியந்தது.... அப்போதே...பொதுவாகப் பத்திரிகைகள் கொஞ்சம் கமர்ஷியல் ஜனரஞ்சகமாக இருப்பவை...ஜெகா வின் எழுத்துகளோ வித்தியாசமாக இருக்கும். அப்படியிருந்தும் பத்திரிகைகளில் வெளி வந்து அவர் ஃபேமஸாக இருக்கிறார்/இருந்தார் என்றால் மிகப் பெரிய விஷயம் என்று நினைத்ததுண்டு, நினைப்பதுமுண்டு. அதே போன்று சினிமா உலகை குறிப்பாகத் தமிழ் சினிமா உலகை மிகவும் விமர்சித்தவர்...ஒரு வேளை அதை நேர்ப்படுத்தலாம், மக்களின் ரசனையை மாற்றலாம் என்று நினைத்துத் தனது கதையை சினிமாவாக எடுக்க நினைத்திருக்கலாம்...

    கடைசியாகச் சொன்னீங்களே "நம்மைப் போல் ஒருவன் " ஹாஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  22. வெட்டி அல்ல உருப்படியான பதிவு.

    ஜே.கே.யின் 'உன்னைப் போல் ஒருவன்' ஆனந்த விகடனில் குறுநாவலாக அதே பெயரில் வந்தது.
    ஆனந்த விகடனில் அவரது முதல் குறுநாவலும் அதே. குறுநாவலாக வந்த காலத்து இந்தக் கதையின் முடிவைப் பற்றி ஜெயகாந்தனிடம் அன்புச் சண்டை போட்டிருக்கிறேன். இந்தப் படத்தைத் தன் சொந்தப் பொறுப்பில் தயாரித்த ஜெ.கே. படப்பெட்டியுடன் ஒவ்வொரு ஊராகச் சென்று அந்த ஊரின் தியேட்டர் ஒன்றைப் பிடித்து காலைக்காட்சியாக போட்டுக் காண்பித்தார்.
    வழக்கமாக தியேட்டர்களில் போடப்படும் படங்கள் போல ரிலீசாகாத ஒரே தமிழ்ப்படம் இது தான். பின்னால் குடியரசுத் தலைவரின் பாராட்டும் பரிசும் பெற்ற படம்.

    ஜெயகாந்தனின் 'கைவிலங்கு' கதை தான் காவல் தெய்வம் படமாக வந்தது.

    பதிலளிநீக்கு
  23. இந்தியாவின் மிகச்சிறந்த இயக்குனர்கள் (ரே, ம்ருணாள் சென், அரவிந்தன், ஆடூர் கோபாலகிருஷ்ணன், ஷ்யாம் பெனெகல்) இயக்கிய பிறமொழிப் படங்களைப் பார்த்திருக்கிறேன் டெல்லியில். ஆனால் தமிழின் ஆகச்சிறந்த ஆளுமைகளுள் ஒருவரான ஜெயகாந்தன் ஒரு சவாலாக ஏற்று இயக்கிய, தமிழின் புதிய அலை சினிமாவின் முன்னோடியாகக் கருதப்பட்ட உன்னைப்போல் ஒருவனைப் பார்க்கக்கொடுத்துவைக்கவில்லை. அவருடைய கதைகள் படமாக்கப்பட்ட எந்த ஒருபடத்தையும் நான் பார்க்க இயலவில்லை என்பது எனக்கே ஒரு அயர்வைத் தருகிறது.

    1964-ஆம் ஆண்டிற்கான தேசியவிருதுக்காக ஜேகேயினால் அனுப்பிவைக்கப்பட்ட ‘உன்னைப்போல் ஒருவன்’, வங்காள இயக்குனர் சத்யஜித் ரேயின் 'சாருலதா'வை கடும் போட்டியில் சந்தித்தது. ரேயின் படத்திற்கு ஆண்டின் மிகச்சிறந்த படத்துக்கான விருதும், ஜேகேயின் படத்திற்கு மிகச்சிறந்த தமிழ்ப்படத்துக்கான விருதும் அதே ஆண்டில் கிடைத்தன. தமிழன் நினைத்துப்பார்த்துப் பெருமைப்படவேண்டிய விஷயம். இத்தகைய சிறப்புப்படைப்பின் பிரதியோ, டிவிடி-யோகூடக் கிடைப்பதில்லை இப்போது என்பது நமது துரதிர்ஷ்டம். தமிழின் கலைப் பொக்கிஷங்களை எந்த லட்சணத்தில் நாம் பார்க்கிறோம், பாதுகாக்கிறோம் என்பதற்கான இது ஒரு உதாரணம். ஜெயகாந்தனின் படங்களை, சராசரித் திரைப்படங்களோடு, கேளிக்கை நோக்கில் சேர்த்துக்கடந்துவிட முடியாது. அவை அடித்தட்டு மக்களின் வாழ்வியல், பெண் சுதந்திரம், ஆண்-பெண் உறவுநிலைகளின் சிக்கல்கள், ஜேகேயின் சமூகப்பார்வை ஆகியவற்றைத் தாங்கி வந்தவை. ஜெயகாந்தன் திரைப்பாடலும் எழுதியிருக்கிறார் என்பது அனேகருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ’பாதை தெரியுது பார்’ என்னும் படத்தில் வரும் ‘சிட்டுக்குருவி பாடுது...தன் பெட்டைத் துணையைத் தேடுது..’ எனும் பாடல் அவரால் எழுதப்பட்டதுதான். இந்தப்படத்தின் காப்பியும் இன்று கிடைப்பதில்லையாம். என்னத்தைச் சொல்ல..

    நடிகை லட்சுமி முக்கியபாத்திரங்களில் ஜேகேயின் சிலபடங்களில் நடித்திருக்கிறார். 1977-ல் ஜெயகாந்தனின் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்துக்காக (லட்சுமியுடன் ஸ்ரீகாந்த் என நினைவு), லட்சுமிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.

    பின்னூட்டம் என்கிற சாக்கில் பதிவுபோல் வந்துவிட்டதோ !

    பதிலளிநீக்கு
  24. பதிவுக்கு நல்ல சிந்தனை...பெண்மையில் கூட படங்கள் வரலாம்...என்னைப் போல் ஒருத்தி...உன்னைப் போல் ஒருத்தி...

    பதிலளிநீக்கு
  25. வாங்க பானுமதி மேடம். நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி.

    கமல், மோகன்லால் பற்றி நீங்கள் கருத்துக்கு என் ஆதரவும்! ஜெயகாந்தன் இயக்கியது, பீம்சிங் இயக்கியது பற்றிய தகவல்களுக்கு நன்றி. நான் அதை ஆராய்ந்து சொல்லாமல் விட்டுவிட்டேன்!

    சில நேரங்களில் சில மனிதர்கள் பிடித்த அளவு ந நா பா பிடிக்கவில்லை. நாகேஷ் கேரக்டர் நினைவுக்கும் வரவில்லை! உங்கள் கேள்விக்கு நெல்லைத்தமிழன் உடனடியாக பதில் சொல்லி விட்டார்.

    :)))

    பதிலளிநீக்கு
  26. மீள் வருகைக்கும், பதிலுக்கும் நன்றி நெல்லைத்தமிழன்.

    பதிலளிநீக்கு
  27. நன்றி ஜி எம் பி ஸார். காலத்தின் கோலம், அதிருஷ்டம் என்பதை விட ஜேகேயின் தனித்தன்மைதான் காரணம்.

    பதிலளிநீக்கு
  28. நன்றி நண்பர் யாழ்ப்பாவாணன்.

    பதிலளிநீக்கு
  29. நன்றி துளஸிஜி, கீதா ரெங்கன். விகடனில் வந்த ஜேகேயின் கதைகள் பலவற்றை அப்பா பைண்ட் செய்து வைத்திருக்கிறார். உன்னைப்போல் ஒருவன் திரைப்படம் எங்கும் கிடைக்காது! பார்ப்பது சிரமம்!!!

    :)))

    பதிலளிநீக்கு
  30. நன்றி ஜீவி ஸார்... பதிவு சிறப்போ இல்லையோ.. ஜேகேயுடன் நேரில் பழகிய உங்கள் பின்னூட்டம் சிறப்பு. கைவிலங்கு கதை மிகச் சிறு வயதில் படித்தது. மறுபடி தேடி எடுத்துக் படிக்க வேண்டும்!

    பதிலளிநீக்கு
  31. மீள் வருகைக்கு நன்றி ஏகாந்தன் ஸார். ஜெயகாந்தன் எழுதிய இன்னொரு பாடலும் எனக்கு நினைவுக்கு வருகிறது. புதுச்செருப்பு கடிக்கும் படத்தில் எஸ் பி பி பாடிய 'சித்திரப்பூ சேலை... சிவந்த இதழ்... சிரிப்பரும்பு...' என்கிற பாடல்! மேலாதிக்கத் தகவல்களும் தந்திருக்கிறீர்கள். சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
  32. 'வேலாலே விழிகள் பாடல் மிகவும் ரசிக்க வைக்கும் ,நடிகை ஆலத்துக்காக மட்டுமல்ல ,நல்ல சீனரி காட்சிக்காக :)

    பதிலளிநீக்கு
  33. ’சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தைத் தொடர்ந்து, ஜெயகாந்தனின் ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ நாவலும் திரைப்படமானது. அதை இயக்கிக் கொண்டிருந்தபோதே, டைரக்டர் ஏ.பீம்சிங் இறந்துவிட்டார். பிறகு அவரது உதவியாளர்களான திருமலை-மகாலிங்கம் படத்தை முடித்து வெளியிட்டார்கள். டைட்டிலில் ‘டைரக்‌ஷன் ஏ.பீம்சிங்’ என்று போடுகிறபோது ஒரு காலி நாற்காலியைக் காட்டினார்கள். உருக்கம்.

    ’காவல் தெய்வம்’ படத்தில் வருகிற சாமுண்டி, ஒரிஜினல் கதையில் தனக்குத் துரோகம் செய்த மனைவியைக் கொலைசெய்துவிட்டு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு சிறைவாசம் அனுபவிப்பதாக இருந்தது. படத்தில், மகளை பலாத்காரம் செய்தவனைக் கொலை செய்ததாகக் காட்டியிருந்தார்கள். காரணம், மனைவி துரோகம் செய்வதுபோல கதையிருந்தால் அந்தக் காலத்தில் ‘ஏ’ சான்றிதழ்தான். ஆனால், பலாத்காரம் செய்வதுபோன்ற காட்சிகளைப் பற்றிப் பெரிதாகக் கவலைப்படாமல் ‘யூ’ சான்றிதழை அள்ளி அள்ளி வழங்கிக் கொண்டிருந்தார்கள். அது ஒரு காலம். :-)

    பதிலளிநீக்கு
  34. என்னைப்போல் ஒருவன் டி.ஆர்.ராமண்ணா சிவாஜியை வைத்து இயக்கிய கடைசிப்படமென்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாகத் தயாரிப்பில் இருந்து தாமதமாக வெளிவந்து அதனாலேயே தோல்வியடைந்தபடம். ‘தங்கங்களே நாளைத் தலைவர்களே’, ‘ஆணாட்டம் பெண்ணாட்டம் ஆட வேணும்’ போன்ற பாடல்களும் இருந்தன. படத்தில் சிவாஜிக்கு உஷா நந்தினி, சாரதா மற்றும் ஆலம் ஜோடி. ‘மவுனம் கலைகிறதே மயக்கம் வருகிறதே’ பாடலை எடுத்துவிட்டு, என்ன தோன்றியதோ தெரியவில்லை, ஆலத்தின் உடல் தெரியும் பகுதியைச் சிவப்பாக்கி மறைத்திருந்தார்கள். படம் வெளிவருவதற்கு முன்னரே ‘வேலாலே விழிகள்’ பாடல் மிகப் பிரபலமாகியிருந்தது. அனேகமாக சிவாஜி- உஷா நந்தினி டூயட்டாக இருக்குமென்று போனால், சிவாஜி-ஆலம் இருவரையும் வைத்துப் படமாக்கியிருந்தார்கள். கஷ்டம்! :-)

    பதிலளிநீக்கு
  35. அருமையான தகவல்களை அள்ளித்தந்த தற்கு பாராட்டுகள்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!