திங்கள், 18 மார்ச், 2019

"திங்க"க்கிழமை : பாலக் பனீர் - சாந்தி மாரியப்பன் ரெஸிப்பி


எங்கள் ப்ளாகுக்கு வணக்கம், 


திங்கற கிழமைக்கு, ஒரு டேஸ்ட்டான பாலக் பனீர் அனுப்பியிருக்கேன். 
------------------------

சந்தையில் கொஞ்சம் மலிவாகக்கிடைத்ததென்று இரண்டு பாலக் கீரைக்கட்டுகள் வாங்கி வந்தேன். ஆய்ந்து, உப்பு போட்ட தண்ணீரில் நனைத்து சுத்தம் செய்து தண்ணீரை வடிய விட்டு, இப்பொழுதெல்லாம் கிடைக்க ஆரம்பித்திருக்கும் டிஷ்யூ பைகள் ஒன்றில் போட்டு ஃப்ரிஜ்ஜில் வைத்தாயிற்று. கடைந்த கீரை போரடித்து விட்டதென்றதால் பாலக் பனீர் செய்யலாமென எண்ணம். குளிர் இன்னும் விலகாத இப்பொழுதில் சப்பாத்தியுடனோ அல்லது ஃபுல்காவுடனோ சாப்பிட உகந்தது.

ஒரு கட்டுக் கீரையை கொஞ்சம் அகன்ற ஒரு பாத்திரத்தில் பரத்தி, அதன் மேல்  ஐந்து பூண்டுப்பற்கள், ஒரு அங்குல அளவில் இஞ்சி, மூன்று பச்சை மிளகாய்கள், இரண்டு தக்காளிகள், எல்லாவற்றையும் வைத்து கூடவே ஒரு வெங்காயத்தை நறுக்கித்தூவி, குக்கரில் வைத்து குழைய வேக விட்டு எடுத்துக்கொண்டு நன்கு ஆற விடவும். ஆறிய பின் எஞ்சிய தண்ணீரை வடித்தெடுத்துக்கொண்டு கீரையை மிக்ஸியிலிட்டு மைய அரைத்துக்கொள்ளுங்கள். தண்ணீரைக் கொட்டி விட வேண்டாம், தேவைப்படும்.

ஒரு கடாயில் கொஞ்சம் எண்ணெய்யைச்சூடாக்கி, அரை ஸ்பூன் ஜீரகத்தைப்போட்டுப் பொரிய விடவும். பொதுவாக பஞ்சாபி சமையலுக்கு கடுகும், ஜீரகமும்தான் தாளித்துக்கொட்டுவார்கள். சில அயிட்டங்களில் மட்டுமே கடுகு மைனஸாகும். சீரகம் பொரிந்ததும் பொடியாக நறுக்கி வைக்கப்பட்ட வெங்காயத்தை அதில் போட்டு பொன்னிறமாகும் வரை வறுத்தபின் அத்துடன் அரைத்து வைத்த கீரையைச் சேர்த்து, கால் டீஸ்பூன் மஞ்சட்பொடியும், அரை ஸ்பூன் கரம் மஸாலாவும் சேர்க்கவும். எவெரெஸ்ட் கரம் மசாலா சேர்த்தால் நன்றாக இருக்கிறது என்ற டிப்ஸ் இங்கே கவனிக்கத்தக்கது. 

பச்சை வாடை போக அது வேகட்டும். அதற்குள் பனீரை ஆயத்தப்படுத்துவோம்.

ஒரு வாணலியில் கொஞ்சம் எண்ணெய்யைச் சூடாக்கி, பனீர் துண்டங்களை அதில் போட்டு லேசாகச் சிவக்க வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். வறுக்காமலும் போடலாம், பாதகமில்லை. வறுத்த பனீர் துண்டங்களை கொதிக்கும் பாலக் க்ரேவியில் போட்டு சில நொடிகள் வேக விடவும். எடுத்து வைத்த கீரைத்தண்ணீரை வேண்டிய அளவுக்கு கொஞ்சமாகச் சேர்த்துக்கொள்ளலாம். க்ரேவி கெட்டியாகவும் இருக்கக்கூடாது, குழம்பு போல் ஓடவும் கூடாது, அரைப்பதம் நன்று. ஒரு சொட்டு எண்ணெய்யைக்கூட வீணாக்க விரும்பாத புத்திசாலிகள், இரண்டு அயிட்டங்களையும் பக்கத்துப்பக்கத்து அடுப்புகளில் வைத்துக்கொண்டு, வறுத்த பனீர் துண்டங்களை நேரடியாக பாலக் க்ரேவியில் போட்டு விடுவார்கள். சில நொடிகள் கொதித்ததும் பரிமாறும் பாத்திரத்துக்கு மாற்றிக்கொண்டு, டைனிங் டேபிளுக்கு கொண்டு செல்லவும். 

விரும்பினால் க்ரேவியின் மேலாக கொஞ்சம் க்ரீம் சேர்த்துக்கொள்ளலாம். இதில் கறிவேப்பிலை, கொத்தமல்லி என எதையும் சேர்த்து ருசியைக் கெடுத்து விடாமல், சாதம், சப்பாத்தி, ரோட்டி, மற்றும் ஜீரா ஃப்ரைட் ரைஸ் அல்லது சிம்பிள் புலாவுடன் பரிமாறலாம். 



அன்புடன்,
சாந்தி மாரியப்பன்.

44 கருத்துகள்:

  1. மகிழ்வான வணக்கம் எல்லாருக்கும்!

    அட! இன்று சாந்தி மாரியப்பன் அவர்களின் சமையல் குறிப்பா!!

    எங்கூர் பக்கமாச்சே!! அவங்க ரெசிப்பிஸ் அவங்க தளத்துல பார்த்திருக்கேன் நல்லாருக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன். அமைதிச்சாரலை நீங்கள் அறிவீர்கள்தானே?

      நீக்கு
    2. ஆமாம் ஸ்ரீராம் அறிவேனே!!

      கீதா

      நீக்கு
  2. அன்பின் ஸ்ரீராம்,
    கீதாக்கா/ கீதா, நல்லதொரு குறிப்பினை வழங்கிய சாந்தி மாரியப்பன் மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
  3. >>> சில நொடிகள் கொதித்ததும் பரிமாறும் பாத்திரத்துக்கு மாற்றிக்கொண்டு, டைனிங் டேபிளுக்கு கொண்டு செல்லவும்.<<<

    நேரத்தை வீணாக்காமல் உடனடியாக திருப்தியாக சாப்பிட்டு மகிழவும்!..

    அருமை... அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேரத்தை வீணாக்காமல் உடனடியாக திருப்தியாக சாப்பிட்டு மகிழவும்!..//

      ஹா ஹா ஹா அதானே!!!

      கீதா

      நீக்கு
  4. இதே போலத்தான்....ஆனால் குக்கரில் வேக வைக்காமல் நேரடியாக வேக வைத்து அரைப்பதுண்டு.

    சில சமயம் பன்னீரை பொரித்து போடுவதுண்டு சில சமயம் அப்படியே...

    சூப்பர் குறிப்பு உங்க பாலக் பனீர் படம் சூப்பரா இருக்கு...

    கீதா

    பதிலளிநீக்கு
  5. இங்கே Amul பனீர் தாராளமாகக் கிடைக்கின்றது..

    அவ்வப்போது பனீர் குருமா... Veg Biriyaani with Paneer என்றெல்லாம் சாப்பாட்டு நேரம் ஓடிக் கொண்டிருக்கின்றது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பனீர் வைத்துச் செய்யப்படும் பதார்த்தங்கள் பிடிக்கும் எனக்கும். ஆனால் இங்கு அடிக்கடி செய்வதில்லை!

      நீக்கு
    2. எனக்கும் பனீர் போட்டுச் செய்யப்படும் எல்லாமும் பிடிக்கும்.

      கீதா

      நீக்கு
  6. முருங்கைக் கீரையுடன் கொஞ்சம் பாசிப்பயறும் பனீரும் சேர்த்து ஒருமுறை செய்து பாருங்கள்...

    அப்புறம் சொல்லுங்கள்...

    பதிலளிநீக்கு
  7. ஆஹா... பாலக் பனீர்! நானும் இங்கே செய்வதுண்டு. சுவையான, சத்தான உணவு.

    பகிர்ந்து கொண்ட சாந்தி மாரியப்பன் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  8. பாலக் பனீர்... அருமையான ரெசிப்பி. வீட்டில் இதுவரை செய்ததில்லை. விரைவில் செய்துவிட வேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
  9. பாலக் கீரை பசுமையாக கிடைக்க மாட்டேன் என்கிறது.
    கிடைக்கும் போது வாங்கி செய்வேன்.

    சாந்தி, உங்கள் செய்முறை விளக்கம் அருமை.

    //எவெரெஸ்ட் கரம் மசாலா சேர்த்தால் நன்றாக இருக்கிறது என்ற டிப்ஸ் இங்கே கவனிக்கத்தக்கது. //

    கிடைக்கும் எவெரெஸ்ட் கரம் மசாலா.

    அமைதிச்சாரலை இப்போது முகநூலில் மட்டும் பார்த்துக் கொண்டு இருந்தேன்.
    மீண்டும், உங்கள் கதை, கட்டுரை, கவிதை, சமையல் குறிப்பு என்று உங்கள் தளத்தில் வலம் வர வேண்டும்
    என்று விரும்புகிறேன்.
    வாழ்த்துக்கள் சாந்தி.

    பதிலளிநீக்கு
  10. எனக்கு பிடித்தமானது படமே அழகாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  11. பாலக் பன்னீர் செய்யும் போது கீரையை குக்கரிலோ அல்லது மூடிபோட்டோ வேக வைக்க கூடாது கீரையை சிறிது உப்பு போட்டு மூடி போடாமல் வேக வைக்க வேண்டும் இல்லையென்றால் கீரை க்ரேவி கரும் பச்சையாக மாறிவிடும் பாலக் பன்னிருக்கான கீரை இளம் பச்சை கலரில் இருக்க வேண்டும் இது பஞ்சாபி லேடியிடம் இருந்து நான் கற்றுக் கொண்டது..

    கலரைபற்றி பிரச்சனை இல்லை சுவை மட்டும் போதும் என்றால் உங்கள் செய்முறையும் சரிதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதுரை சகோ பொதுவா எந்த வகைக் கீரையையும் குக்கரிலோ, மூடி போட்டோ வேக வைக்கக் கூடாதுனு எங்க பாட்டி, அம்மா எல்லாம் சொல்லுவாங்க. ஸோ எனக்கும் அப்படியே பழகிவிட்டது.

      கீதா

      நீக்கு
    2. கீரையை மட்டும் மூடி வேக வைக்க கூடாது. நானும் முன்பே இத் தளத்தில் சொல்லி இருக்கிறேன்.

      நீக்கு
    3. இப்பொத் தான் பதிவில் எழுதிட்டு வந்தேன். எந்தக் கீரையையும் மூடி போட்டு மூடி வைத்து வேக விடக் கூடாது என்று. ஏற்கெனவே உணவே மருந்து தொடரில் கீரை வகைகள் பற்றி எழுதியப்போவும் சொல்லி இருந்தேன். இங்கேயும் சொல்ல வந்தால் எல்லோரும் சொல்லிட்டீங்க! :)))) கீரையை எப்போதுமே திறந்து வைத்தே வேக வைக்கணும். மதுரைத் தமிழன் சொல்லி இருப்பது போல் தான் நானும் வேக வைப்பேன். அதிலும் பாலக் அதிகம் நீர் விட்டுக்கொள்ளும் என்பதால் கடாயிலோ, உருளியிலோ போட்டாலே போதும். நீர் வந்து நன்கு வெந்து விடும்.

      நீக்கு
  12. நான் கீரையைத் தனியாக வேகவைத்து அரைத்துச் சேர்ப்பேன். இப்படியும் செய்து பார்க்கிறேன்.

    சாந்தியின் சமையல் குறிப்புகளை அவர் எழுத்து நடைக்காக எப்போதும் இரண்டு முறை வாசித்து ரசிப்பது வழக்கம். அருமை சாந்தி :)!

    பதிலளிநீக்கு
  13. எளிதான குறிப்புகள், அழகாக ஒரே ஒரு படம்!! கண்டிப்பாக செய்து பார்க்கிறேன், நன்றி!

    பதிலளிநீக்கு
  14. பதில்கள்
    1. படமும், விளக்கமும் நன்றாக இருக்கிறது. பாலக் கீரையில் இரும்புச்சத்து அதிகம் உண்டு. வாங்கியவுடன் சேமித்து விட வேண்டும்.

      நீக்கு
    2. மன்னிக்கவும், என்னுடைய பின்னூட்டத்தில் வாங்கியவுடன் சமைத்து விட வேண்டும் என்று வாசிக்கவும்.

      நீக்கு
  15. வணக்கம் சகோதரரே

    படம், செய்முறை நன்றாக உள்ளது. பால கீரையில் இதுவரை இப்படிச் செய்ததில்லை. இனி கிடைக்கும் போது இம்முறையில் செய்கின்றேன். அருமையான பதிவு. சாந்தி மாரியப்பனுக்கு நன்றிகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  16. பாலக் பனீரும், பாலம் மடரும் சாப்பிட்டு அலுத்து விட்டது! ஆனால் இப்போதெல்லாம் பனீர் வாங்குவதில்லை. மறுபடி வாங்கணும்! இங்கேயும் அமுல் பனீர் நிறையவே கிடைக்கிறது. ஆவினிலும் பனீர் கிடைக்குது! ஒரு முறை வாங்கிச் செய்யணும்

    பதிலளிநீக்கு
  17. //பாலம் மடரும்// பாலக் மடர்! "ம"டருக்குப் போடவேண்டிய "ம" முன் கூட்டியே அங்கே வந்து விட்டது! :))))

    பதிலளிநீக்கு
  18. மண்சட்டியில் செய்தால் நன்றாக இருக்கும் என்பார்கள்

    பதிலளிநீக்கு
  19. எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.
    அனைவருக்கும் மாலை வணக்கம்.
    சுற்றி வரும் உஷ்ண மாறுதலால் பலவகையில் பெண்ணும், சின்னவன், பெரியவன் பாதிக்கப் பட்டு
    வேலைகள் தடை படுகின்றன.
    அன்பு சாந்தியின் பாலக் குறிப்பு மிகவும் அழகாக்க் கொடுத்திருக்கிறார்கள். கச்சிதன். இங்கே நான் ,பட்டர்,பாலக்,பன்னீர்
    வாரத்தில் இரண்டு நாட்கள் உண்டு.

    மகள் ருசியாகச் செய்வாள்.
    மிக நன்றி ஷாந்தி மா.

    பதிலளிநீக்கு
  20. பாலக் பனீர் செய்முறை விளக்கம் மிகவும் அருமை சாந்தி மாரியப்பன்!

    பதிலளிநீக்கு
  21. பாலக் பனீர் குறிப்பு அருமை

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!