செவ்வாய், 4 ஜூன், 2019

கேட்டு வாங்கிப் போடும் கதை : இதில் ஒன்றுமில்லை - ஜீவி

                         இதில் ஒன்றுமில்லை   
                                                                                    ஜீவி

ப்யூன் கொண்டு வந்து தந்த விஸிட்டிங் கார்டை ஹரிஹரன் மேலோட்டமாகப்  பார்த்தான்... 'ரகுபதி.  பி.எஸ்ஸி.  அக்ரி டிபார்ட்மெண்ட்' என்று அழகாக அச்சடிக்கப் பட்டிருந்தது.  ஒரு அக்ரி இலாகா ஆளுக்கு  பெரிய விளம்பர நிறுவன  பொதுஜனத் தொடர்பு அதிகாரி தன்னிடம்  என்ன வேலை இருக்கும் என்று புருவம் உயர்ந்தாலும், "உள்ளே வரச்சொல்" என்ற அவன் உத்திரவை சுமந்து கொண்டு ப்யூன்  வெளியேறினான்.

ஆளைப் பார்த்தவுடனேயே எப்படிப்பட்டவன் என்று எடைபோடும் அலாதியான  திறமை ஹரிஹரனுக்கு உண்டு.   அந்த அனுமானம் இதுவரை பொய்த்ததில்லை.

உள்ளே நுழைந்தவன் இளைஞனாக இருந்தான்.  பரந்த நெற்றிக்குக் கீழே தங்க பிரேமிட்ட கண்ணாடி.  அளவான மீசை.  சுமாரான உயரம்.    காஸ்ட்லி சட்டையை நுழைத்துக் கொண்டு தொப்புளிடத்தில் பெல்ட்டிட்ட பளபள பேண்ட்.  கையில் கருப்பு நிறத் தோல்பை.

ஏஸி,  அறையை  ஜிலுஜிலுப்பாக்கிக் கொண்டிருந்தது.

வந்தவன் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் நோக்கத்துடன், "என் பெயர் ரகுபதி.." என்று  ஆரம்பித்தான்.

"விஸிட்டிங் கார்டைப் பார்த்து விட்டேன்." என்று ஹரிஹரன்  சொன்னதும் ரகுபதிக்கு என்னவோ போலிருந்திருக்க வேண்டும்.  லேசாக அவன் முகம் சுருங்கியது.  அதை மறைக்கவோ என்னவோ புன்னகைக்கிற மாதிரி வெளிக்குக் காட்டிக் கொண்டான்.   ஹரிஹரினை ஆழமாக ஒரு பார்வை பார்த்தபடி, "உங்களோடு தனிமையில் கொஞ்சம் மனம் விட்டுப் பேசவேண்டுமே.." என்றான்.

"உங்களுக்கு  ஏதாவது ஆவி உபாசனை தெரியுமா?" என்று ஹரிஹரன் சிரிக்காமல் கேட்டான்..

"ஏன்?"

"இல்லை.  என் கண்களுக்கு இந்த அறையில் நாம் இரண்டு பேரும் இருப்பது தான் தெரிகிறது.  ஆவிகீவி ஏதாவது எனக்குப்  புலப்படாமல் உங்கள் கண்களுக்கு..." 

ரகுபதியின் காதோரங்கள் ஜிவுஜிவுப்பதைப் பார்த்தவுடன் ஹரிஹரன் சொல்ல வந்ததை பாதியிலேயே நிறுத்திக் கொண்டு விட்டான்

"நான் நேரடியாகவே ஆரம்பித்து விடுகிறேன்" என்று படபடப்புடன் சொன்ன ரகுபதி,, கையிலிருந்த தோல்பையைத் திறந்தான்.  ஒரு பழுப்பு நிறக் கவரை வெளியே எடுத்தான்.

ஒரு  வினாடி அவன் கண்கள் அந்த உறையின் மேல் லயித்தன.  அதைத் தொடர்ந்து ஏதோ ஒரு பிரேமையுடன் அவன் அந்த உறையை முத்தமிட்டது  பைத்தியக்காரத்தனமாகப் பட்டது.

ஹரிஹரன்  நாசூக்காக கைக்கெடியாரத்தைப் பார்த்துக்  கொண்டான்.

"நீங்கள் எனக்கு ஐந்து நிமிடங்கள் ஒதுக்கினால் போதும்.  நான் வந்த வேலை  முடிந்து போய் விடுவேன்" என்ற ரகுபதி கர்சீப்பை  எடுத்துக் கழுத்துப் பட்டையைத் துடைத்துக்   கொண்டான். "இந்தக் கவரைப் பிரித்துப் பாருங்கள்," என்று  ஹரியிடம் அந்தப்  பழுப்பு நிற உறையை  நீட்டினான்.

உறை ஒட்டப்படாமல் இருந்தது.  பிரித்துப் பார்த்த பொழுது உள்ளே கார்டு ஸைஸில் இரண்டு போட்டோக்கள்.

"அந்தப் பெண்ணை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா?"

ஹரிக்குத் தெரிந்தது.  அவள் அவன் மனைவி.  நான்கு மாதங்களுக்கு முன்
அவன் கல்யாணம் செய்து கொண்ட அவனது இரண்டாவது  தாரம்.

"முதல் போட்டோவில் தன் வளையல் கரங்களால் அவன் கழுத்தைச் சுற்றிக் கொண்டும், இரண்டாவது  போட்டோவில் அவன் மார்பில் முகத்தைப் புதைத்துக்  கொண்டும் இருக்கிறாளே அவளைத் தெரிந்து கொண்டு விட்டீர்கள். ரொம்ப  சரி.  அவனை-- அவள் காதலனை -- உங்களுக்கு  இப்போது புரியும் என்று நினைகக்கிறேன்.." ரகுபதி லேசாகச் செருமிக் கொண்டான்.

ஹரி தலை நிமிர்ந்த பொழுது.  புகைப்படத்தில் இருப்பதைப் போலவே ரகுபதி லேசாகப் புன்முறுவல் பூத்துக் கொண்டிருந்தான்.

ஹரிக்கு லேசாக நெஞ்சு எரிவது போலிருந்தது.

"அந்த இரண்டு போட்டோக்களின் நெகட்டிவ்களும் அந்தக் கவருக்குள்ளேயே இருக்கின்றன.  இருக்கற மார்க்கெட் நிலவரப்படி அந்தக் கவரின் விலை ஐம்பதாயிரம்.." ரகுபதியின் உதடுகளில் கோல்ட்பிளாக் நர்த்தனமிட்டது. லைட்டரின் தீ.

சிகரெட் பாக்கெட்டை ஹரியின்  பக்கம் நகர்த்தினான்.

"பழக்கமில்லை.." என்றான் ஹரி, கரகரத்த குரலில்.

"தட்ஸ் ஆல்ரைட்!" என்று எழுந்த ரகுபதி மிக லாவகமாக அந்தக் கவரை ஹரியின் விரல்களுக்கிடையிலிருந்து  பறித்துக் கொண்டான்.

ரொம்ப சாவதானமாக அந்த அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடக்கத் தொடங்கினான்.... ஏதோ கனவுலகில் சஞ்சரிக்கிற தோரணாயில் அரைக் கண்களை மூடியபடி, "எனக்கும் அவளுக்கும் காலேஜ் பழக்கம்.  சாத்தனூர், இல்லை, சாத்தனூர்?.. அங்கே தான்  ஒரு டிரிப் போய் வர வேண்டுமென்று ஒற்றைக்காலில் நின்றாள்.  எல்லாம் இந்த சினிமாக்களால் வந்த வினை.  என்ன செய்யறது, ஸார்?.. ஆசையோடு ஒரு காதலி கேட்கும் பொழுது எந்தக் காதலனாவது ....." மேடை நாடக தோரணையில்  ரகுபதி இரண்டு கைகளையும்  பரக்க விரித்தான்.

இதெல்லாம்  ஏற்கனவே தன் மனைவி சொல்லி ஹரிக்குத் தெரிந்தது தான்.  பெண் பார்க்கப் போன சமயத்தில் பெண்ணுடன் தனித்துப் பேச அவன் விரும்பிய பொழுது  எதையும் மறைக்காமல் அவளே சொன்னவை தான்.  ஒரு அபலைப் பெண்ணை கை கழுவியது மட்டுமல்லாமல் அதை வைத்து காசு பார்க்க நினைக்கும்  இந்தக் கயவன் காதலனாமே!..

வந்த ஆத்திரத்தில் ஹரிக்கு படபடப்பாக இருந்தது.  நெற்றியில் படிந்த வியர்வையை கைக்குட்டையால் துடைத்துக் கொண்டான்..

"புழுக்கமாக இருக்கிறதா?  ஏஸி கூலிங்கை அதிகப்படுத்தலாமா?.."  என்று புன்னகைத்தான் ரகுபதி.   மீதி சிகரெட்டை ஆஷ் டிரேயில் நசுக்கினான்.

ஹரிக்குப் பற்றிக் கொண்டு வந்தது.

வலது கையைத்  திருப்பி மேஜை மேல் வைத்துக்  கொண்டான் ரகுபதி. "உங்களுக்கு ஐந்து நிமிடம் அவகாசம் போதுமா? சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாருங்கள்.. இப்போ மணி 3-15.. 3.20-க்குள்".  அவன் பார்வை கடியாரத்தில் பதிந்திருந்தது...  பச்சை பிளாக் மெயில்!....

ஹரியின்  கண்களுக்கு டெலிபோன் தட்டுப்பட்டது.  போலீசைக் கூப்பிடலாமா என்ற எண்ணத்தை ஒதுக்கித் தள்ளினான்.

எரிச்சல் கலந்த  வேதனையுடன் அறைச் சுவரை அவன் கண்கள் வட்டமடித்தன.. ரோஜாப்பூவுடன் சிரித்துக் கொண்டிருக்கும் குழந்தை படம்;  பொக்கை வாய்  காந்தித் தாத்தா,  நயாகராவின் சட்டமிட்ட இயற்கை வண்ணப்படம்,

ஒரு நிமிடம் தான்..  ஒரே ஒரு நிமிடம் தான்.  ஹரி ஒரு முடிவுக்கு வந்து விட்டான்.

"ஸார்.. மணி 3-30 என்றான் ரகுபதி.  "கரன்ஸியாகத் தருகிறீர்களா?.. இல்லே, செக்கே வெட்டி விடுகிறீர்களா?"

'யூ,  கெட் அவுட்.."  ஹரி சீறியதைப் பார்த்து ரகுபதி பதறிப் போய் விட்டான்.  "என்ன சொல்கிறீர்கள்?" என்று தடுமாறினான்.

"உன்னை வெளியே போகச் சொல்கிறேன்,"

"ஸார்.. நான்  வெளியே போனால் என் வாய் சும்மா இருக்குமா?  இந்தக் கைதான் இந்தப் போட்டோக்களை யாரிடமாவது... ஸார், உங்களுக்கு 'பந்து பாசன்'  பத்திரிகை தெரியாது,  மஞ்ச மஞ்சேரென்று இருக்குமே?  அவன் கிட்டே மட்டும் இந்தப் படம் போயிட்டதுன்னா..."

"பரவாயில்லை..." என்றான் ஹரி அமைதியாக.  "ரகுபதி,  'பந்துபாசன்' பத்திரிகை  கிடக்கட்டும்...  நீ செய்த அயோக்கியத்தனம் எல்லாமே எனக்குத் தெரியும்"

"ஸார்..." என்றிழுத்த ரகுபதியின் முகம்   லேசாக வெளிறியது   வெளிப்படையாகத் தெரிந்தது.

"எத்தனை பேரை இப்படி ஏமாத்தியிருக்கே?.. பொம்பளைன்னா அவ்வளவு கிள்ளுக் கீரையா போயிடுச்சாடா, உங்களுக்கு?..  காதலிக்கற மாதிரி நடிச்சே;  கை கழுவினே.. அதுவே படு  கேவலம்.  அதை போட்டோ எடுத்து காசு பாக்க வேறே நினைக்கறையே, ஏண்டா நீயெல்லாம் ஆம்பளையாடா?" என்று  ஹரி கர்ஜித்தான்.

ஒன்றுமே தெரியாத மாதிரி "என்ன ஸார் சொல்றீங்க? அப்போ அந்த போட்டோவை...." என்று  ரகுபதி  இழுத்த பொழுது 'பளார்' என்று அவன் கன்னத்தில் அறையலாம் போல இவனுக்கு இருந்தது.

"ரகுபதி, நன்னாத் தெரிஞ்சிக்கோ...  என்னோட மனைவி உன்னோட காலேஜ் வாழ்க்கைலே சாத்தனூர் போனானா, அந்த சமயத்திலே--- அவளுக்கு நான் கணவன் ஆகாத அந்த சமயத்திலே--- அவ உன்னை நம்பி காதலிச்சிருக்கலாம்.... போயிருக்கலாம்.. உன்னோட அவளுக்கு பழக்கம் ஏற்பட்டதே ஒரு விபத்து;  அவ்வளவு தான்!.." என்று பதட்டமில்லாமல் அவன் குரல் ஸ்பஷ்டமாக வெளிப்பட்டது..

"இப்போ என்னையே எடுத்துக்கோ... இறந்து போன என்னோட முதல் மனைவியோட நான் சேர்ந்து இருக்கற மாதிரி, இதே மாதிரி,   எத்தனை  புகைப்படங்கள் எங்க வீட்லே இருக்கு?  ...அதுலே ஒண்ணை எடுத்து வைச்சிண்டு  என்னோட பழைய வாழ்க்கையை நெனைச்சிண்டு அவ அழுதிண்டு இருந்தா அது எத்தனை பைத்தியக்காரத்தனம்?...   இன்னும் சொல்லப் போனா தன்னோட முந்தைய வாழ்க்கைலே அவ எத்தனை தவறுகள் செஞ்சிருந்தாலும் அதை மன்னிக்கற அளவுக்கு அவளை நா காதலிக்கறேன்.. அதனாலே...   ஆல்ரைட்... நீ  போகலாம்.." என்று வாசல் பக்கம் ஹரி   கை காட்டினான்..   இவ்வளவு அமைதியாக இந்த விஷயத்தை இவன் டீல் பண்ணுவான் என்று ரகுபதி கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.

இப்பொழுது இவனை சீண்டிப் பார்க்க வேண்டும், அதான் முக்கியம் என்ற தீர்மானத்தில் ரகுபதி  கேலியாகச் சிரித்தான்.. "ஸார்.. ஆம்பளையாடான்னு என்னைக் கேட்டுட்டீங்க.... சரி.. எனக்கு என்னவோ   உங்களைப்  பார்த்துத் தான் இப்போ அப்படிக் கேக்கணும் போல இருக்கு.." என்று அவன்  கேட்டு முடிக்கவில்லை...

"சரித்தான்  போடா!..   "என்று அலட்சியமாக உறுமினான் ஹரி..  "எவன் ஆம்பளைன்னு ஊர் உலகத்துக்கெல்லாம்  தெரியும்டா... நீ புதுசா சொல்ல வேண்டாம்..  தெரிஞ்சிக்கோ..  தன்னை நம்பி வந்த  பொண்ணை மதிக்கறவன்  தாண்டா, ஆம்பளை...  அதாண்டா ஆம்பளைக்கு  மரியாதை.. தெரிஞ்சிக்கோ." என்று ஹரி சீறியதைப் பார்த்து ரகுபதியின் முகம் வெளிறிப் போனது.

அந்த பழுப்பு நிறக் கவரையும் பொருட்படுத்தாமல் மேஜை மேலேயே போட்டு விட்டு அவன் வெளியேறியது பார்க்கப் பரிதாபமாக இருந்தது.

67 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா மற்றும் எல்லோருக்கும்..

    ஹை ஜீவி அண்ணா கதையா வருகிறேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  2. அன்பின் ஸ்ரீராம்..
    கீதாக்கா / கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்வரவு துரை செல்வராஜூ ஸார்,

      உங்களுக்கும் இனி வரப்பொப்பினும் அனைத்து நட்புறவுகளுக்கும்...

      நீக்கு
    2. வரவேற்ற துரைக்கும், வந்திருக்கும் நண்பர்களுக்கும் இனி வரப்போகும் அனைவருக்கும் நல்வரவு, வணக்கம், வாழ்த்துகள்.

      நீக்கு
    3. அனைவருக்கும் காலை வணக்கம். முதல்ல ஜீவி சார் கதையைப் படிக்க ஆரம்பித்தேன். கொஞ்சம் வரிகள்ல கதை எதை நோக்கிப் போகிறது என்று எண்ணினேன். நான் அவள் காதலன் என்றதும் கதை வேகம் எடுக்க ஆரம்பித்துவிட்டது. முழுவதும் படித்துவிட்டுக் கருத்திடுகிறேன்.

      நீக்கு
    4. நெல்லை, கதை வேகமெடுத்த தருணத்தில் நிறுத்தி பின்னால் தொடர்ந்தீர்களா?..

      நீக்கு
  3. இந்த மாதிரி கிறுக்குப் பயலுங்க இன்னுமா இருக்குறானுங்க!?...
    கர்சீப்பால் துடைத்துக் கொண்ட அந்தக் கழுத்துப் பட்டையை உடைத்து அனுப்பியிருக்கலாம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிறுக்குப் பயல்களா?.. வினைப் பயல்கள் சார்! இன்றைக்கு பெண்களின் சுதந்திரத்திற்கு பெரிய அச்சுறுத்தலாக இருப்பது இந்த பயல்கள் தான்!

      நீக்கு
  4. சாமக் கோழிகளின் சங்கத் தலைமை/ தங்கத் தலைமை இன்னும் காணலையே!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை அண்ணா சாமக் கோழிகளின் சங்கத் தலைமை/தங்கத்தலைமை?!!!! யார் அவர்!! கீதாக்காவா?ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ கீதாக்கா சீக்கிரம் தூங்கிடுவாங்க...ஞானி பூஸானந்தாவா?!! அவர் மெதுவாத்தான் வருவார்...

      கீதா

      நீக்கு
  5. இரண்டாம் மனைவி என்னும்போது கொஞ்சம் நெருடியது. ஆனால் கதையின் போக்கு மாறிவிடவே புரிய ஆரம்பித்தது. இப்போதும் மட்டுமல்ல, எப்போதுமே இப்படியான ஆண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
    ஆண்களாக மனசு மாறினால் தான் உண்டு போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆண்களாக மனசு மாறினால் தான் உண்டு போல! //

      எந்த ஆண்கள் என்று சொல்லவில்லையே! ரகுபதி மாதிரியான ஆண்கள் தானே! :)) நன்றி, கீதாம்மா. மின்சாரம் தயவில்
      மேற்கொண்டான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

      நீக்கு
  6. இன்னிக்கு இங்கே காலை ஒன்பது மணியில் இருந்து மாலை ஆறு வரை பராமரிப்புக்கான மின் வெட்டு என நேற்றே எஸ்.எம்.எஸ். அனுப்பி இருந்தாங்க. ஆகவே மத்தியானமெல்லாம் வர முடியாது. மாலை ஆறுமணிக்குப் பின்னர் வரதும் கஷ்டம்! மின்சாரம் சீக்கிரம் வந்துவிட்டால் வருவேன். இல்லைனா நாளைக்குத் தான்!

    பதிலளிநீக்கு
  7. கதையில் எதிர்பாராத வகையில் நல்ல திருப்பம். உள்ளே அறையில் நடக்கும் நிகழ்வுகளையும், உணர்வு வெளிப்பாட்டினையும் எழுத்தாக வடித்த விதம் அருமை. நடப்பகதாசிரியருக்கு பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் ரசனைக்கும் ரசித்துப் படித்தமைக்கும் நன்றி, ஐயா

      நீக்கு
  8. முதலில் இரண்டாம் மனைவி என்றதும் கொஞ்சம் என்னடா இது கதை எப்படிப் போகப் போகிறது என்று தோன்றியது...அப்புறம் தொடர்ந்து வாசித்ததும்...தான் புரிந்தது...

    ரகுபதி போன்ற ஆண்கள் இருக்கும் சமுதாயத்தில் ஹரிஹரன் போன்ற ஆண்களும் இருக்கிறார்கள்தான்.

    ஹரிஹரனுக்கும் முன்னரேயே ரகுபதி மற்றும் அவன் தற்போதைய மனைவி பற்றித் தெரிந்திருந்தது நல்லதாப் போச்சு. இல்லைனா இந்த சந்தேகம் என்பது வந்து தொலைத்துவிட்டால்....

    கதையின் முடிவு நன்றாக இருக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /இல்லைனா இந்த சந்தேகம் என்பது வந்து தொலைத்துவிட்டால்....// - அதான் கல்யாணம் செய்துகொண்டாச்சு இல்லையா? அதுக்கு அப்புறம் என்ன 'சந்தேகம்' என்பதெல்லாம். பரஸ்பர நம்பிக்கை இல்லாமல் இருப்பவர்களுக்கு 'கல்யாணம்' என்ற சடங்கு எதுக்கு?

      நீக்கு
    2. அதான் கல்யாணம் செய்துகொண்டாச்சு இல்லையா? அதுக்கு அப்புறம் என்ன 'சந்தேகம்' என்பதெல்லாம். //

      நெல்லை அதைத்தான் சொல்லிருக்கேன் முன்னமேயே தெரிந்திருந்ததால் என்று...இல்லைனா...ஹரிஹரன் மெச்சூர் ஆணாக இல்லாமல் இருந்திருந்தால்.....இதுக்கு அடுத்த உங்கள் வரிக்கு பதில்...

      //பரஸ்பர நம்பிக்கை இல்லாமல் இருப்பவர்களுக்கு 'கல்யாணம்' என்ற சடங்கு எதுக்கு?//

      ஹா ஹா ஹா நெல்லை நீங்க ரொம்ப ஐடியலாகத் திங்க் பண்றீங்க....பரஸ்பர நம்பிக்கை? அப்படித்தான் பெரும்பான்மையோர் கல்யாணம் பண்ணிக்கறாங்கனு நினைக்கறீங்களா நெல்லை. அதுவும் தற்போதைய காலத்தில்?!!

      பெண் விஷயம், அல்லது ஆண் விஷயம் என்றில்லை...பொதுவாகவே பரஸ்பர நம்பிக்கை இருந்தால்தான் கல்யாண வாழ்க்கையே இனிக்கும் ...

      அப்படி நம்பிக்கை இல்லாததால் தான் பல ஆண்கள் தங்கள் மனைவியிடம் பல விஷயங்களை மறைக்கிறாங்க...அதே போல பெண்கள் கணவனிடம் பல விஷயங்களை மறைக்கறாங்க....கொடுக்கல் வாங்கலிலிருந்து ஃப்ரென்ட்ஷிப் வரை. அதனால்தானே கோர்ட்டில் குடும்ப நல நீதிமன்றத்தில் அத்தனை கேஸ்கள் வருகிறது...

      கீதா

      நீக்கு
    3. பரஸ்பர நம்பிக்கை இருந்தால் ஒளிவு மறைவு என்பதே இருக்காது இல்லையா?

      ஒரு சில விஷயங்களை மனைவி அல்லது கணவன் வைஸ் வெர்சா...மற்றவர் எமோஷனலாக வாய்ப்புண்டு என்று சொல்லாமல் இருக்கலாம் ஒரு சில பிரச்சனைகளை அது எழுப்பும் அல்லது ஒரு குடும்ப சச்சரவைத் தவிர்க்க வேண்டி சொல்லாமல் மறைக்கலாம்...அது விஷயத்தைப் பொருத்து இருக்கிறது.

      ஆனால் அந்தப் புரிதலும் இல்லாததால் தான் பல பிரச்சனைகள் குடும்பத்தில் எழுகிறது.

      நெல்லை நான் சென்னையில் இருந்த வரை ஒரு கப்பிள் ஃபேமிலி கவுன்சலிங்க் செய்து கொண்டிருந்தாங்க நானும் சும்மா அங்கு சென்றதுண்டு. அங்கு வர கேஸ்ல பெரும்பாலும் கிட்டத்தட்ட 90 % ஆண் பெண் விஷ்யம...அதுவும் ஜஸ்ட் ஃப்ரென்ட்ஷிப் தான் கள்ளத்தனம் கூட எதுவும் இல்லை...அதுவே சந்தேகமாகி.....மொபைல் மறைத்தல்...அதாவது ஒரு கணவர் தன் மொபைலை தன் மனைவி தொடக் கூடாது என்று. அதில் கால் வந்தால் கூட கணவன் கவனிக்கலைனாலும் மனைவி அதை எடுத்துக் கொடுக்கக் கூடாது. மனைவிக்கு சந்தேகம்....இதில் பார்த்தால் கணவனிடம் எந்தக் கள்ளத்தனமும் இல்லை...அவனும் மனைவியின் ஃபோனைத் தொடமாட்டான். கால் வந்தாலும் சரி...

      இந்தக் கேசை என்னை கொஞ்சம் டீல் செய்யச் சொன்னார்கள் அந்தக் கப்பிள். நல்ல காலம் அவர்கள் இளம் வயதினர்...

      இதில் நம் வயதை ஒத்தவர்களும் உண்டு. நம்மை விட வயதானவர்களும் உண்டு.

      அது போல பல கேஸ்கள் பண விஷயத்தில்...செலவு செய்வதில் மறைத்தல் சந்தேகம் என்று...நம்பிக்கை இல்லாமல்....இதில் கல்யாணம் ஆகி 25 வ்ருடம் ஆனவர்களும் உண்டு...

      ஒரு சிலவற்றிற்கு எந்த கவுன்சலிங்கும் வொர்க் அவுட் ஆகாமல். சிலர் ஏதோ டிடெக்டிவ் ஏஜன்சி எல்லாம் வைத்து துப்பறிய...அப்புறம் கோர்ட்...

      கீதா

      நீக்கு
    4. நெல்லை அம்மா அப்பாக்களே தங்கள் குழந்தைகளின் நடவிக்கைகளைக் கண் காணிக்க டிடெக்டிவ் நாடும் நிலையையும் பார்திருக்கோம். பெற்றோர், குழந்தைகள் வருவாங்க....இதை டீல் செய்வதும் ரொம்பக் கஷ்டமாக இருந்ததுண்டு...

      கீதா

      நீக்கு
    5. நெல்லைக்கும் உங்களுக்குமான உரையாடல் வேறு சில கதைகளுக்குத் தோற்றுவாயாக இருக்கட்டும்.

      எந்தக் கதையும் முடிவதில்லை என்பார் ஜெயகாந்தன்.

      இந்தக் கதையும் அப்படித்தான். தொடர்வதற்கு வாகாகத் தான் அப்படி கடைசி வரியை விட்டு வைத்திருக்கிறேன்.

      கதைகள் ருபத்தில் எழுத்தாளன் அந்தந்த நேரத்து சமூக உற்பாதங்களுக்கு தீர்வு காண முயற்சிக்கிறானே தவிர, அவனது பரிந்துரை எதுவும் எந்த நிரந்தரத் தீர்வுக்கானதும் அல்ல.

      நீக்கு
  9. வந்திருக்கும் வரப்போகும் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    வணக்கம் ஜீவி சார்.
    மிக விறிவிறுப்பான கதை.
    சட் சட்டென்று சீன்கள் மாறும் சுவாரஸ்யமான நாடகம்.
    ஒரு அயோக்கியனுக்கு விட்டுக்கொடுக்காத நல்ல ஆண்மகன்.

    ஒரு நல்ல அறை அந்தப் பழைய காதலனுக்குக் கொடுத்திருக்கலாமோ.

    அவன் வெறும் வார்த்தைகளில் பயந்து வெளியேறியது
    நல்ல திருப்பம்.
    சிறுமை கண்டு பொங்கிய கணவனுக்கு வெற்றி.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல ஆண்மகன், சிறுமை கண்டு பொங்கிய கணவன் --

      போன்ற வெளிப்பாடுகளுக்கு நன்றி, வல்லிம்மா.

      நீக்கு
  10. அனைவருக்கும் காலை வணக்கம். பின்னர் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  11. ஹரி நல்லாவே டீல் செய்திருக்கிறார். என்ன...கொஞ்சம் ஸ்டிராங்கான ஆளா இருந்தால், ரகுபதிக்கு நாலு அரை கொடுத்திருக்கலாம்...ஆனால் சொற்களிலேயே அதைச் செய்துவிட்டாரே...

    நல்ல நிறைவான கதை

    வித்தியாச வித்தியாசமான கரு, சிறுகதைப் பகுதிக்கு வளம், பலம் சேர்க்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் நினைத்தேன் நெல்லை அடி கொடுக்கலைனாலும் சட்டையப் பிடிச்சு எகிறியிருக்கணும்னு!! ஹா ஹா...

      கடைசி வசனம் ஹரிஹரனின் மெச்சூரிட்டியைக் காட்டுது.

      கீதா

      நீக்கு
    2. ////ரகுபதிக்கு நாலு அரை கொடுத்திருக்கலாம்.../////
      ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன் அவரிடம் இருப்பதே ஒரு அரை:) தானே:) நாலுக்கு எங்கின போவார்ர் ஹா ஹா ஹா அதிரா கண்ணுக்கு... அவசத்திலும் எல்லாம் தெரியுமெல்லோ:)... எனக்குப் பாருங்கோ டமில்ல பிழை விட்டால் பொயிங்கிடுவேனாக்கும்:)... ஹையோ மீக்கு பெல் அடிக்குதே கர்ர்ர்ர்ர்ர்:)

      நீக்கு
    3. மூளை ஸ்ட்ராங் தானே தேவை, நெல்லை?..
      காலாதி காலத்திற்கு வேதனைப் படுத்தும் ஒரு விஷயம், முளையிலேயே கிள்ளி கடாசியாயிற்று!
      இனி ஹரியின் பாடு எனக்கு நீ, உனக்கு நான் தான்!
      (ஹரியின் மனைவிக்கு ஒரு பேர் கொடுத்திருக்கக் கூடாதோ?
      ஆவ்வ்வ்வ்வ்.. அதிரா வந்து விட்டார்! அவர் நல்ல பெயராய் நாமகரணம் செய்யட்டும்!

      நீக்கு
    4. @ நெல்லை
      //வித்தியாச வித்தியாசமான கரு, சிறுகதைப் பகுதிக்கு வளம், பலம் சேர்க்கிறது.//

      அம்மாடி!.. சந்தோஷம் நெல்லை...

      நீக்கு
  12. டீலிங் சிம்பிளாக முடிந்து விட்டதே...

    எதையும் சாதரணமாக நினைத்தால் சாதாரணம். பெரிதாக நினைத்தால் நெஞ்சுவலிதான் மிச்சம்.

    பதிலளிநீக்கு
  13. ரகுபதி போன்றோருக்கு நல்ல அடி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ மாதேவி

      எம்ஜிஆர் படங்கள் மாதிரி வில்லனை கடைசிக் காட்சியில் தண்டித்தால் தான் திருப்தி ஏற்படுகிறது.. உண்மை தான்.

      நீக்கு
  14. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  15. ஜீவி சார் கதை நன்றாக இருக்கிறது.

    //தன்னை நம்பி வந்த பொண்ணை மதிக்கறவன் தாண்டா, ஆம்பளை... அதாண்டா ஆம்பளைக்கு மரியாதை.. தெரிஞ்சிக்கோ."//

    ரகுபதி போன்ற ஆம்பளைகளுக்கு நல்ல அடி.

    நன்றாக சொன்னீர்கள்.

    காலத்துக்கு ஏற்ற கதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி, கோமதிம்மா.

      இன்றைய செய்தித்தாளைப் பார்த்தும் கூட--

      'காலத்துக்கு ஏற்ற கதை' என்று தெரிந்தது. வழிமொழிகிறேன்.
      எல்லாம் ஹரி போன்றவர்கள் கையில் தான் இருக்கிறது என்பதும் உணரப்படுகிறது. ஆக, ஹரிகளை உருவாக்குவோம்!

      நீக்கு
  16. அந்தக் காலத்தில் பத்திரிக்கை, இப்போ வாட்ஸப், முகநூல் என்று பயமுறுத்தல்.

    பதிலளிநீக்கு
  17. கதை சுவாரஸ்யமாக சென்றது. கணவன், மனைவி இருவருக்கிடையே உண்மையான புரிதலும் நேர்மையும் இருக்கும்போது வெளியிலிருந்து வரும் எந்த ஒரு குறுக்கீடும் எந்த துன்பத்தையும் தராது என்பதை அழகாகச் சொல்கிறது.

    பதிலளிநீக்கு
  18. //இதில் ஒன்றுமில்லை//
    ஹா ஹா ஹா உண்மைதான் இதில் ஒன்றுமில்லை:)

    அழகிய கதை.... பொறாமையின் விளைவால் வெளிவரும் வார்த்தைகள்... ஒரு பொருள் தன்னோடிருக்கும்வரை அருமை தெரியாது... அடுத்தவர் கைக்குப் போய் அதுவும் நல்லா இருப்பதைப் பார்க்கும்போது புகைப் புகையா போகுது ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா இதில் பொறாமை இருப்பதாகத் தெரியவில்லையே அந்தாள் அதான் ரகுபதி அவளை ஏமாற்றியிருக்கிறான் இப்போது அவனுக்குப் பணம் வேண்டும்...அவ்வளவே அல்லாமல் அவள் மீதான அன்பில்லையே...ஸோ அடுத்தவன் கைக்குப் போனாலும் பிரச்சனை அதுவல்ல...அவனுக்கு சும்மா ப்ளாக் மெயில் செய்து பணம் பறிப்பது அவ்வளவே...இல்லைஎன்றால் அவன் ஏன் அவளை ஏமாற்ற வேண்டும்...

      கீதா

      நீக்கு
    2. கொஞ்சம் மாத்தி ஓசிச்சேன் கீதா:)) எல்லோரையும் போல ஓசிக்காமல் ஹா ஹா ஹா:).

      நீக்கு
  19. @ கில்லர்ஜி

    //எதையும் சாதரணமாக நினைத்தால் சாதாரணம். பெரிதாக நினைத்தால் நெஞ்சுவலிதான் மிச்சம்.//

    அருமையான பொன்மொழி, கில்லர்ஜி!

    பதிலளிநீக்கு
  20. @ மனோ சாமிநாதன்

    வழக்கம் போல அருமையான புரிதல், மனோஜி.

    //கணவன், மனைவி இருவருக்கிடையே உண்மையான புரிதலும் நேர்மையும் இருக்கும்போது...//

    இந்த விஷயத்தில் வெற்றியடைந்திருக்கிறார்களே என்று சில தம்பதிகளைக் கண்டு வியந்திருக்கிறேன்.

    பல நேரங்களில் வெளிப்பார்வைக்குத் தான் இப்படிக் காட்டிக் கொள்கிறார்களோ என்று சம்சயப்பட்டதும் உண்டு.

    இந்தப் புரிதலுக்காக 'விட்டுக் கொடுத்தல்' என்பதை பலர் பரிந்துரைக்கிறார்கள். ஆனால் நடைமுறையில் அப்படியான விட்டுக் கொடுத்தல் பல நேரங்களில் எதிர் விளைவுகளைத் தான் தோற்றுவிப்பதையும் கண்டிருக்கிறேன்.

    என்னவோ போங்கள்! விதவிதமான வாழ்க்கை அனுபவங்கள்! எதுவும் எல்லா நேரங்களிலும் சாத்தியப்படாதது தான் வாழ்க்கையின் விசித்திரமாகவும் தெரிகிறது!

    பதிலளிநீக்கு
  21. @ அப்பாவி அதிரா

    //ஹா ஹா ஹா உண்மைதான் இதில் ஒன்றுமில்லை:)//

    எப்படிச் சிரிக்கிறீர்கள்?.. நீங்களா அப்பாவி?

    //பொறாமையின் விளைவால் வெளிவரும் வார்த்தைகள்... ஒரு பொருள் தன்னோடிருக்கும்வரை அருமை தெரியாது... அடுத்தவர் கைக்குப் போய் அதுவும் நல்லா இருப்பதைப் பார்க்கும்போது புகைப் புகையா போகுது //

    என்ன ஒரு மாறுபட்ட பார்வை?.. யோசிக்கிறேன், யோசிக்கிறேன்..
    புரியாத பொருள் பொதிந்ததாய் இருக்கிறதே!

    ஹரியின் மனைவிக்கு ஒரு பெயர் வையுங்களேன், ப்ளீஸ்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் கதையின் ஆரம்பமே அவவுக்கு “வள்ளி” எனப் பெயர் வச்சிட்டேன் ஜீவி ஐயா:)) ஆனா உங்களுக்குச் சொல்லேல்லை:)) ஹா ஹா ஹா.... ஹரி.. முருகனைப்போல அன்பே உருவாகி உருகி நிற்கிறாரெல்லோ:))

      நீக்கு
  22. வணக்கம் ஜீவி சகோதரரே

    நல்ல கதை. இந்த மாதிரி குறுக்கு வழியில் பணத்திற்கு ஆசைப்பட்டு கேவலமான காரியங்களை செய்யும் ரகுபதி போன்றோருக்கு இறுதியில் சாட்டையடியாய் நல்ல கருத்துக்களை சொல்லிய விதம் நன்று.

    இப்படி ஒவ்வொருவரும் தம் மனைவியை நல்லபடியாக புரிந்து கொள்ள வேண்டும். அவரின் மனைவியும், தம் திருமணத்திற்கு முன்பே கணவரிடம் எதையும் ஒளிவுமறைவின்றி கூறி விட்டதால், பிரச்சனைகளை எதிர் கொள்ளும் நேரத்தில், தொந்தரவு ஏதுமின்றி கணவரும் சமாளிக்க முடிந்து விட்டது. பொதுவாக வாழ்வில் வரும் எந்த பிரச்சனைக்கும், கணவன் மனைவி இருவருக்குள்ளும், ஒருவருக்கொருவர் இவ்விதமாக புரிதல் இருந்து விட்டால் சுமூகமாக பிரச்சனைகள் கடந்து விடும் என்பதற்கு இந்த கதை ஒரு அத்தாட்சி. அருமையாக எழுதிய உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      இன்று தாமதமான வருகையாக வந்து விட்டேன். நாளை எங்கள் வீட்டுக்கு உறவுகள் வருகை. இனி வரும் தினங்களில் இன்னமும் தமாதமாகுமோ என்னவோ? ஆனால் எப்படியும் இரவுக்குள் வந்து பதிவுகளை படித்து விடுவேன். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. அன்புள்ள சகோதரிக்கு,

      வணக்கம். உங்கள் வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி.

      தேர்ந்த வாசகர்கள் எழுத்துக்களை வாசித்து தங்கள் மனத்தில் படியும் கருத்துக்களைச் சொல்வது எழுதுபவர்களுக்கு கொடுப்பினை.

      எழுதியதின் இம்பாக்ட் என்னவென்ற எதிர்பார்ப்பில் தான் எழுதுபவனும் இருக்கிறான். அந்த ஆசையைப் பூர்த்தி செய்து வைத்தமைக்கு நான் தான் நன்றி சொல்ல வேண்டும் சகோதரி!

      கணவன்--மனைவி புரிதல் சென்ற காலத்தில் இருந்ததை விட இப்பொழுது தீர்க்கமாகவே இருப்பதாகத் தெரிகிறது. இந்தத் தலைமுறையினர் பிழைத்துக் கொள்வார்கள் என்றே தோன்றுகிறது.

      சென்ற காலத்தில் நாலு பேர் முன்னாடி கணவர் பக்கத்தில் நிற்கவே மனைவி தயங்குவார். மாமியார்-- நாத்தனார் பிடுங்கல்கள் ஜாஸ்தி. புருஷனுக்கு முணுக்குன்னா மூக்கு மேலே கோபம்..

      இந்தக் காலத்திலேயோ.. அவர்கள் ஒருத்தருக்கொருத்தர் புரிதலுக்கு சாட்சியா ஒரு காட்சி பாருங்கள்:

      "ஏண்டி, உன்னவர் அப்படி இருக்கிறார்?"

      "ஏல்லாம் காரணமாத்தான், அம்மா.."

      "அதான் என்ன காரணம்ன்னு கேக்கறேன்.."

      "உனக்குச் சொன்னால் புரியாதும்மா.."

      "அப்படி என்னடீம்மா எனக்குப் புரியாத ரகசியம்.."

      "ரகசியம்ன்னு தெரியுதுல்லே.. அப்ப ஆளை விடு.."
      ----

      "ஏண்டா உன்னவள் எப்பப்பாத்தாலும் மூஞ்சியைத் தூக்கி வைச்சிண்டு அப்படி இருக்கா?"

      "அவ பழக்கம் அது. அதைப் பத்தி என்னப்பா?"

      "அது சரி.. எதுக்காக அப்படி இருக்கணும்ன்னு கேக்கறேன்.."

      "ஏல்லாம் காரணமாத்தான் அப்பா.. உனக்குச் சொன்னால் புரியாது.."

      "புரியாதபடி அப்படி என்னப்பா.. இல்லே, உனக்கே புரியாதா?"

      "ஏன்'ப்பா. இப்படி நை..நை..ன்னு.. அவ எப்படி இருந்தாலும் எனக்கு ஓக்கே.. சரியா?.. பொழுது போகலேன்னா எதையாவது யோசிச்சு யோசிச்சு மனசை கோணலாக்கிக்காதேப்பா..
      அவ காதுலே விழுந்திடப் போறது.. சரியா?"

      "நீ சொல்றதும் சரிதான்ப்பா.."

      நீக்கு
    3. வணக்கம் ஜீவி சகோதரரே

      தங்கள் பதிலில் நிறைய உண்மைகள் இருக்கின்றன.காலம் மாறி விட்டது. காலம் என்று சொல்வதை விட இன்றைய தலைமுறைகள் விட்டுக் கொடுத்தலின் மூலம் மாற்றத்தை கொண்டு வந்து விட்டனர்.

      /சென்ற காலத்தில் நாலு பேர் முன்னாடி கணவர் பக்கத்தில் நிற்கவே மனைவி தயங்குவார். மாமியார்-- நாத்தனார் பிடுங்கல்கள் ஜாஸ்தி. புருஷனுக்கு முணுக்குன்னா மூக்கு மேலே கோபம்./

      உண்மையான எழுத்துக்கள்...

      அந்த காலப் பெண்கள் பாதிபேர்கள். ஒரு வட்டத்திலேயே சுழன்று கொண்டிருந்தார்கள். "நான் வாழ்ந்தது போல நீயும் இருக்க வேண்டும்" என மகளிடமும், மருமகளிடம் முறையே அறிவுரை,எதிர்பார்ப்பு இவ்விரண்டையும் தக்க வைத்துக்கொண்டு வாழ்ந்து வந்தார்கள். இதற்கு சரியாக அனுசரித்து போகும் ஆண்களுக்கு பொறுமை சிதையும் போது கோபங்கள் வேறு வழியின்றி வெளி வருவது இயல்புதானே.!

      இப்போது நிறைய பெண்கள் வெளியுலகை சந்திப்பதால், கணவர், மனைவி, மாமியார், மருமகள் புரிதல்களும், வலுப்பட்டு வருகின்றன. ஆனாலும் சில இடங்களில் இத்தகைய மாறுதல்களுக்கு அவர்கள் மனம் உடன்படாததால் பிரச்சனைகள், சுழன்றபடி உள்ளன.

      நீங்கள் சுட்டிக் காட்டியுள்ள புரிதலுக்கு சாட்சியாக சில காட்சிகள் ரசிக்கும்படி இருந்தன.

      இரண்டு இடங்களிலும் காரணம் புரியாமலேயே கேட்பவருக்கு புரிதல் வர வேண்டும்.அந்த புரிதலில் அவரும் ஒதுங்கி விட்டால் காரணம் தெரியாத கண்ணுக்குப் புரியாத விஷயங்கள் விசிறி விடப்படாமல், காற்றுடன் மடிந்து விடும். சொல்பவரும் நாசூக்காக இப்படி சொல்லி வில(க்)கி விட்டால், பிரச்சனை படராமல் படிந்து சென்று விடும்.தாங்கள் எழுதியதை படித்து மிகவும் ரசித்தேன்.

      எந்தவொரு பிரச்சனை வீட்டில் எட்டிப்பார்க்கும் போதும், எதிலும் தட்டிக் கேட்காமல், விட்டுக் கொடுத்ததிலும் ஈகோ இல்லாமல்,"சரி.! ஒரு தடவை நீ.! இந்த தடவை நான்.! என்ற ரீதியில் ஒருவர் முழுதாக விட்டுக் கொடுத்தால், கருத்தில் வேறுபாடின்றி சந்தோஷம் முழுமையாகி போகும். எப்போதுமே இரு கைகள் பலமாக தட்டினால் ஓசை எழுவது சகஜந்தான்! ஆனால் அந்த ஓசையையே சிறந்த பாராட்டாக உருவகப்படுத்தி ஒருவர் மற்றவருக்கு தந்து விட்டால், சந்தோஷம் அங்கு சத்தமில்லாமல் சப்பணமிட்டு அமருமே.!
      பகிர்வுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    4. //கணவன்--மனைவி புரிதல் சென்ற காலத்தில் இருந்ததை விட இப்பொழுது தீர்க்கமாகவே இருப்பதாகத் தெரிகிறது. இந்தத் தலைமுறையினர் பிழைத்துக் கொள்வார்கள் என்றே தோன்றுகிறது. //

      அப்படியா நினைக்கிறீர்கள் ஜீவி ஸார்? முன் காலத்தைவிட இப்போதுதான் எல்லாமே அவசரக் கல்யாணங்களாக, அவசரக் கோலங்களாக இருக்கிறது என்கிற அபிப்ராயம்தானே பார்த்துக் கொண்டிருக்கிறோம்...

      நீக்கு
    5. அருமை கமலா அக்கா... அருமையா விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள்.

      //அந்த காலப் பெண்கள் பாதிபேர்கள். ஒரு வட்டத்திலேயே சுழன்று கொண்டிருந்தார்கள். "நான் வாழ்ந்தது போல நீயும் இருக்க வேண்டும்" என மகளிடமும், மருமகளிடம் முறையே அறிவுரை,எதிர்பார்ப்பு இவ்விரண்டையும் தக்க வைத்துக்கொண்டு வாழ்ந்து வந்தார்கள்.//

      எப்படி தொடர்கதையாய் வந்தது என்கிற காரணம். உண்மைதான். அதிலிருந்து பெரியவர்கள் மனம் நோகாமல் ஆனால் இயல்பாய் வெளிவந்திருக்கிறார்கள் தற்கால இளைய சமுதாயம் என்று புரிகிறது.

      நீக்கு
  23. கதை மிக நன்றாக இருக்கிறது. ரகுபதியின் மிரட்டலுக்கு ஹரிஹரன் பயப்படாமல் நிதானமாக ஆணித்தரமாக, அழுத்தமாக, பக்குவமாக முகத்தில் அறைவது போல் பதில் உரைத்து வெளியே தள்ளுவது அருமையான முடிவு.

    வாழ்த்துகள் ஜீவி சார்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  24. நன்றி, துளசிதரன்.

    இரண்டாம் தாரம் என்றாலே புருஷனிடம் சலுகைகள் அதிகம் என்று சிலர் நினைப்பார்கள்.

    அந்த போட்டோவைப் பார்த்தவுடனேயே ஹரி மனசில் வேறே மாதிரி எண்ணம் ஓடுகிறது.. தன் முதல் மனைவியோடு தான் இருக்கும் இதே மாதிரியான போட்டோக்களை அவள் பார்க்கும் பொழுது.. என்று..

    மூத்தாளுக்கு மனைவி என்ற அந்தஸ்த்து இருக்கத்தான் செய்கிறது.
    ஆனாலும் ஒரு பெண்ணுக்கு தன் கணவனோடு இன்னொரு பெண் என்று தான் நினைக்கத் தோன்றும் என்று அவனுக்காக ஒரு நியாயம் கற்பித்துக் கொண்டு அதை ரகுபதியிடம் வெளிப்படுத்துகிறான்.

    அந்தளவுக்கு ஹரி தனக்கும் தன் மனைவிக்குமான உறவு நிலையை சீர் தூக்கிப் பார்க்கிறான்.

    பதிலளிநீக்கு
  25. /நான் வந்த வேலை முடிந்து போய் விடுவேன்" என்ற ரகுபதி கர்சீப்பை எடுத்துக் கழுத்துப் பட்டையைத் துடைத்துக் //
    இந்த இடத்திலேயே பிடிச்சிட்டேன் :) ரகுபதி எப்படிப்பட்ட ஆசாமி என்பதை .

    தற்போதைய சூழலுக்கு ஏற்ற கதை .ஒருவர் தனது முதல் காதலனையோ காதலியையோ எதோ ஒரு காரணத்தால் பிரிகிறார் என்றால் 1,தவிர்க்க இயலா குடும்ப சூழல்
    2, சிலரின் அழுக்கு மெதுவாத்தான் வெளியே தெரியும் அந்த அழுக்கோடேயே கஷ்டப்பட்டு பாடுபட்டு வாழ்வதை விட தூக்கி எறிவதில் நல்லதொரு புதிய வாழ்க்கையை ஏற்பதில் தவறேயில்லை .
    எல்லா ஆண்களும் ஹரி போலிருப்பார்களா என்றால் 80-90% நல்லவர்கள் புரிதலுள்ளவர்கள்தான் .எனக்கு மகன் இருந்தா எந்த பெண்ணையும் கஷ்டப்படுத்தாதே புரிந்து ஏற்றுக்கொள்னு சொல்லியே வளர்ப்பேன் .
    வாழ்க்கையில் தவறே செய்யாதவர்கள் அதற்கேற்ற சந்தர்ப்பம் சூழல் அமையாதவர்கள் மற்றும் பயம் காரணமாகவும் எந்த வம்புக்கு போகாதவர்களாகவும் இருக்கக்கூடும் .அப்படி தவறி தவறு செய்தாலும் அதிலிருந்து வெளியே வரும் வழியை மேற்கொள்ளணும் மீண்டும் குப்பையை திரும்பவும் பார்க்கக்கூடாது .பெண்கள் எளிதில் அன்புக்கு வசப்படும் வகை அதனாலேயே எளிதில் ஏமாந்துடுவாங்க .இங்கே ஹீரோயின் சரியான நேரத்தில் விட்டு விலகியதும் நல்லது

    ரகுபதி என்ற குப்பையை அறைவதைவிட சொல்லால் கொல்வதே சிறந்தது .ஆனாலும் மனசு கேக்கலை ரகுபதியை மானஸீகமா விஜயசாந்தி /ஜோதிகா போலீஸ் காஸ்ட்யூம் போட்டு மிதிச்சிட்டேன் :)

    மிக மிக அருமையான காலத்துக்கேற்ற கதை ஜிவி சார் . பெண்களுக்கும் இது ஒரு அவெர்னெஸ் ஹரி போன்றோர் வாழும் பூமியில் ரகுபதி போன்ற கேவலங்களும் இருக்கு அதனால் கவனமாக இருக்கணும்னும் உணர்த்திட்டீங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ரகுபதி என்ற குப்பையை அறைவதைவிட சொல்லால் கொல்வதே சிறந்தது //

      ஸூப்பர் ஏஞ்சல்... கல்லால அடித்த அடி வலிக்கவில்லை ராசா ... சொல்லால அடிச்சுப்புட்டே தொடச்சி விடு லேஸா... இந்த வரிகள் நினைவுக்கு வருகின்றன!

      //ஆனாலும் மனசு கேக்கலை ரகுபதியை மானஸீகமா விஜயசாந்தி /ஜோதிகா போலீஸ் காஸ்ட்யூம் போட்டு மிதிச்சிட்டேன் :)//

      ஹா... ஹா... ஹா... இயல்பான அறச் சீற்றம்.

      நீக்கு
  26. @ அதிரா

    ஹரியின் மனைவிக்கு வள்ளி என்று பெயர் வைத்து விட்டீர்களா? ஓக்கே.

    'ரகுபதி என்ற குப்பையை அறைவதை விட..' இந்த வார்த்தைத் தொடர் நெடுநாள் மனத்தில் நிற்கும். எங்காவது உபயோகித்துக் கோள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  27. //இரண்டு இடங்களிலும் காரணம் புரியாமலேயே கேட்பவருக்கு புரிதல் வர வேண்டும்.அந்த புரிதலில் அவரும் ஒதுங்கி விட்டால் காரணம் தெரியாத கண்ணுக்குப் புரியாத விஷயங்கள் விசிறி விடப்படாமல், காற்றுடன் மடிந்து விடும். சொல்பவரும் நாசூக்காக இப்படி சொல்லி வில(க்)கி விட்டால், பிரச்சனை படராமல் படிந்து சென்று விடும்.//

    ஐடியல் வரிகள். அமுல் படுத்துவது தான் கொஞ்சம் என்ன, ரொம்பவே சிரமம்.

    நிறைய மன நோய்கள் அதிகரித்திருக்கிற காலம் இது. அது யாருக்கும் எதைப் பற்றியும் யாரைப் பற்றியும் லட்சியமில்லை என்ற குணாம்சத்தை உற்பத்தி செய்திருக்கிறது.

    'நான் இப்படித் தான் இருப்பேன்; அதான் என் ஸ்பெஷாலிட்டி' என்று
    எதற்கும் தன்னை மாற்றிக் கொள்ள விரும்பாத நபர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

    பார்க்கலாம். நன்றி.



    பதிலளிநீக்கு
  28. ஓ.. பூந்தோட்டக் கவிதைக்காரர்! படித்தது அதைப் பற்றிப் பேச (எழுத) வைக்கவில்லையா?..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!