செவ்வாய், 10 டிசம்பர், 2019

கேட்டு வாங்கிப் போடும் கதை : கூடா நட்பு... கேடாய் முடியும்..’ - TBR ஜோஸப்



கூடா நட்பு... கேடாய் முடியும் - 
டிபி ஆர் ஜோஸப் 
-----------------------------------------

 மேசை மீது கிடந்த செல்பேசி தொடர்ந்து அதிர்வதை (vibrate) கவனித்த பத்மா அதை எடுத்து பார்த்தாள். 

 குறுந்தகவல்கள்! 

 அவற்றை வாசித்ததும் அதிர்ந்து போனாள். 

 ’ஒன் செகண்ட் கேர்ள்ஸ்’ என்றாள் தன் மாணவிகளிடம். 

 அறையிலிருந்து வெளியேறி தன் கணவனை அழைத்தாள். 

 எதிர்முனையில் எடுக்கப்பட்டதும், ‘எதுக்குங்க திடீர்னு இவ்வளவு பணம்?’ என்றாள். 

 ’என்ன சொல்ற?’ 

 ‘அக்கவுண்ட்லருந்து அம்பதாயிரம் எடுத்திருக்கீங்களே?'

‘நானா? எப்ப?’ 

 ‘இதோ இப்பத்தான்..  பேங்க்லருந்து sms வந்துது...  அதான் ஒடன கூப்ட்டேன்...’

‘என்ன சொல்ற? நா எப்படி எடுக்க முடியும்? எங்கிட்ட செக்கும் இல்ல.... ஏடிஎம் கார்டும் இல்லையே?’ 

 பத்மாவின் முகம் வெளிறியது. ‘அப்படியா.... அப்ப யார் எடுத்திருப்பா?’

வராந்தாவில் தன்னை நோக்கி கல்லூரி முதல்வர் வந்து கொண்டிருப்பது தெரிந்தது. 

 ‘சரி... நீங்க எதுக்கும் ஃபோன் பண்ணி கேளுங்க... பிரின்ஸி வராங்க... நா க்ளாசுக்கு போறன்.’  செல்பேசியை அணைத்து தன் வகுப்பறைக்கு திரும்பிய பத்மாவுக்கு பாடம் எடுப்பதில் கவனத்தை செலுத்த முடியாமல் திணறினாள்.

 **** 

அவள் எடுத்துக்கொண்டிருந்த வகுப்பு முடிந்ததும் தன் வாட்சை பார்த்தாள்.

பகல் 12.30. உணவு இடைவேளை முடிந்ததும் இன்னும் இரண்டு வகுப்புகள் இருந்தன.... வங்கியிலிருந்து யார் பணத்தை எடுத்திருப்பார்கள் என்ற நினைப்பு அவளை எதிலும் கவனத்தை செலுத்த முடியாமல் தடுத்தது... 

ஏடிஎம் கார்ட் இல்லேங்கறாரே... அதெப்படி?  அக்கவுண்ட் துவங்குறப்பவே குடுத்துருப்பாங்களே... ?  இவருக்கு ஞாபக மறதி ரொம்பவே ஜாஸ்தி....  கார்ட எங்கயாச்சும் வச்சி மறந்துருப்பாரோ...? வேற யார் கையிலயாவது கிடைச்சி... அத யூஸ் பண்ணி....அப்படியே இருந்தாலும் பின் நம்பர் தெரியணுமே.....? யாருக்கு தெரியும்?  அதயும் கார்டு பின்னாலயே எழுதி வச்சிருபபாரோ என்னவோ? 

என்ன சொன்னாலும் புரியாது.... ஆஃபீஸ்ல எப்படித்தான் மேனேஜ் பண்றாரோ... இதுல பெரிய ஜிஎம்னு பேரு... பத்மாவின் கணவர் ராஜசேகர் சென்னையில் இயங்கிவந்த பிரபலமான ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தின் பொது மேலாளர்.  சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பு குமாஸ்தாவாக பணியில் இணைந்தவர் படிப்படியாக உயர்ந்து பொது மேலாளர் பதவியை அடைந்தவர். 

இன்னும் இரண்டு வருடங்களில் ஓய்வு பெற்றுவிடுவார். பத்மா சென்னையிலுள்ள பெண்கள் கல்லூரி ஒன்றில் ஆங்கில பேராசிரியை. 

இரண்டு பிள்ளைகள். மூத்தவள் உமா. மருத்துவ பட்டம் இறுதி ஆண்டில்... இளையவன் கார்த்தி பி.எ. பொருளாதாரம் இரண்டாம் ஆண்டு. மூத்தவள் படிப்பில் சுட்டி என்றால் இளையவன் மிக, மிக சுமார் ரகம். ஒவ்வொரு வகுப்பிலும் பாஸ் செய்தாலே போதும் என்ற அளவுக்கு புத்திசாலி. 

பத்மாவின் ஊதியம் குடும்ப தேவைகளுக்கும் ராஜசேகரின் ஊதியம் வீட்டுக் கடன், நாற்சக்கர வாகன கடன், மகனின் இரு சக்கர வாகன கடன் ஆகியவற்றை அடைத்தது போக மீதியை தன் வங்கி சேமிப்பு கணக்கில் மிச்சம் வைப்பார். 

ஆறு மாதங்களுக்கு முன்புதான் இருபது ஆண்டுகளாக அடைத்துவந்த வீட்டுக் கடன் முழுவதுமாக அடைக்கப்பட்டிருந்தது. நாற்சக்கர வாகனக் கடன் இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் முடிந்துவிடும். 

ஐந்தாறு மாதங்களாக அவருடைய ஊதியத்தில் கணிசமான தொகையை மாதா மாதம் தன்னுடைய சேமிப்பு கணக்கில் விட்டு வைத்திருந்தார். அந்த சேமிப்பில் இருந்துதான் அவருடைய மகளின் படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்ற நினைப்பில் ஆறு மாதங்களுக்கு முன்பு புதிதாக ஒரு சேமிப்பு கணக்கை தன் பெயரிலும் பத்மாவின் பேரிலும் ஒரு ஜாயிண்ட் அக்கவுண்டை துவக்கி மாத இறுதியில் தன்னுடைய தனிப்பட்ட கணக்கில் மீதமிருக்கும் தொகையை புதிதாக துவக்கப்பட்ட கணக்கிற்கு மாற்றிவிடுவார். 

 அந்த கணக்கு இருவர் பெயரிலும் இருந்தால் அந்த கணக்கில் பத்மாவின் செல்பேசி எண்ணைத்தான் பதிவு செய்து வைத்திருந்தார். ஆகவே அவர்களுடைய கணக்கில் செலுத்தப்படும் தொகையின் விவரங்கள் முழுவதும் அவளுடைய செல்பேசிக்கே குறுந்தகவலாக சென்றுவிடும். அந்த கணக்கில் அவர் செலுத்திய தொகைகள் மட்டுமே குறுந்தகவல்களாக பத்மாவின் செல்பேசிக்கு வருவது வழக்கம். அதிலிருந்து பத்மாவுக்கு தெரியாமல் பணம் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை. 

இதுதான் முதல் தடவை. அதுவும் சுளையாக ஐம்பதாயிரம் ரூபாய் எடுக்கப்பட்டிருந்தது. சிறுக சிறுக சேமித்த பணத்தில் சுமார் நான்கில் ஒரு பங்கு! பத்மாவால் ஜீரணிக்க முடியவில்லை. 

 'நம்ம ரெண்டு பேருக்கும் தெரியாம யார் எடுத்திருப்பா?' என்ற கேள்வி அவளை துளைத்துக்கொண்டே இருந்தது. 

 பகல் உணவை உண்ணவும் பிடிக்காமல் பேருக்கு டிபன் டப்பாவிலிருந்ததை லேசாக கொறித்துவிட்டு கையை கழுவினாள் 


கார்த்திக்கு ஃபோன் பண்லாமா? அவன போயி பாங்க்ல கேட்டுட்டு வரச் சொல்லலாம்.... அவனுக்கு டயல் செய்தாள். எதிர்முனையில் எடுக்கப்பட்டதும். 'டேய் ஒனக்கு விஷயம் தெரியுமில்ல...?’  தன்னுடைய கணவர் அவனிடம் தெரிவிக்காமல் இருக்கமாட்டார் என்று நினைத்தாள். 

‘ஆமாம்மா.  சொன்னார்...  நா இப்பத்தான் பேங்குக்கு ஃபோன் செஞ்சி கேட்டேன்...’ 

 ‘என்ன சொன்னாங்க?’ 

 ’பதறாதம்மா...நம்ம பணம் எங்கயும் போவலை.... நம்ம அப்பா அக்கவுண்ட தப்பா இன்னொருத்தருக்கு குடுத்த கார்டோட லிங்க் பண்ணிட்டாங்களாம்... அவர் அக்கவுண்ட்லருந்து எடுக்கறதா நினைச்சி எடுத்துருக்கார்... ஆனா அது நம்ம அப்பா அக்கவுண்ட்ல டெபிட் ஆயிருக்கு.... நா ஃபோன் பண்ணதும் அஞ்சி நிமிஷத்துல வெரி ஃபை பண்ணிட்டு அவங்களே கூப்டாங்க... இன்னிக்கி சாயந்தரத்துக்குள்ள அவர் கிட்டருந்து ரிக்கவர் பண்ணிருவோம்.. டோண்ட் ஒர்றின்னு சொன்னாங்க...’ 

 பத்மாவுக்கு புரியவில்லை...’அதெப்படிடா..? நீ சரியா கேட்டியா?’ 

 ‘ஆமாம்மா’ என்றான் கார்த்தி எரிச்சலுடன்... ‘நா என்ன சின்ன கொழந்தையா? எதுக்கெடுத்தாலும் ஒனக்கு டென்ஷந்தான்.... அவங்கதான் தப்பா பண்ணிட்டோம்னு சொல்றாங்க இல்ல? இன்னைக்கி சாயந்தரம் வரைக்கும் வெய்ட் பண்ணுவோம்.. இல்லன்னா நா நேர்லயே போயி வெரிஃபை பண்ணிட்டு சொல்றன்... நீ டென்ஷனாகாம இரு...’ 

 ஆனாலும் பத்மா சமாதானமாகவில்லை... ‘அப்பாகிட்ட சொன்னியா?’ 

 ‘ரொம்ப நேரம் ட்ரை பண்ணேன்... எடுக்கவே இல்ல....’ 

‘சரி வை..  எனக்கென்னவோ பயமா இருக்கு....’ ’நீ எதுக்குத்தாம்மா பயப்படாம இருந்துருக்கே...?  அதான் சொல்றேனே... சாயந்தரம் வரைக்கும் பாக்கலாம்... அக்கவுண்ட்ல பணம் வரலன்னா... இந்த ஏரியா போலீஸ் ஸ்டேஷன்ல என் ஃப்ரெண்டோட அப்பாதான் இன்ஸ்பெக்டர்...  அவர் கிட்ட சொல்லி கேக்க சொல்லலாம்.. சரியா...? நீ போயி க்ளாஸ கவனி...’ 

இணைப்பு துண்டிக்கப்பட்ட செல்பேசியையே பார்த்தவாறு ஒரு சில நிமிடங்கள் அமர்ந்திருந்த பத்மா உணவு இடைவேளை முடிந்து கல்லூரி மணி ஒலிப்பதை கவனித்தாள்.  ஒரு நீண்ட பெருமூச்சுடன் எழுந்து தன்னுடைய வகுப்பறையை நோக்கி நடந்தாள்... 

இவன் என்னத்தையோ ஒளர்றான்.... அவங்க என்ன சொன்னாங்களோ..? இவன் என்ன கேட்டானோ...? சாயந்தரம் வரைக்கும் காத்துருந்துட்டு பணத்த எடுத்தவன் அப்படியே ஓடிட்டான்னா?  வேணாம்.  எதுக்கும் நாமளே நேரா பேங்குக்கு ஒரு நடை போய்ட்டு வந்துருவோம்.... 

வகுப்பறையை நோக்கி நடந்துக்கொண்டிருந்தவள் பாதி வழியிலேயே திரும்பி முதல்வர் அறை இருந்த திசையில் நடந்தாள். அவரிடம் நடந்ததை விவரித்துவிட்டு...  ‘இந்த டென்ஷன்ல என்னால மீதி இருக்கற ரெண்டு க்ளாசையும் எடுக்க முடியாது மேடம்...  எனக்கு ஹாஃபடே லீவ் வேணும்...’ என்றாள்.. 

கல்லூரி முதல்வர் ஒரு சில நிமிடங்கள் பதிலளிக்காமல் தன்னையே பார்ப்பதை உணர்ந்த பத்மா ‘ப்ளிஸ் மேடம்... அம்பதாயிரம்.. பேங்க் வரைக்கும் போய்ட்டு வந்தாத்தான்......’ என்று கெஞ்ச.... ‘சரி.. போய்ட்டு வாங்க....’ என்று வேண்டா வெறுப்புடன் அனுமதித்தார் முதல்வர். 

‘தாங்ஸ் மேடம்...’ என்று பதிலளித்துவிட்டு அங்கிருந்து வெளியேறி அடுத்த அரை மணி நேரத்தில் வங்கியை அடைந்தாள்.    

வங்கிக்குள் நுழைந்ததுமே மேலாளர் அறையை பார்த்தாள்.  

அறையில் மேலாளர் அமர்ந்திருந்தது தெரிந்தது. 

போன தடவ வந்தப்போ ஒரு ஆம்பள மேனேஜர் இருந்தாரே?   இப்ப என்ன ஒரு லேடி ஒக்காந்துருக்கா?     

தயக்கத்துடன் சென்று கதவை தட்டினாள்.  

உள்ளே வாங்க என்பதுபோல் மேலாளர் தலையை அசைக்க கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்து இருக்கையில் அமர்ந்தாள். 

 தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு வந்த விவரத்தை கூறினாள். மேலாளர் ஒன்றும் விளங்காததுபோல் தன்னை பார்த்ததை கவனித்த பத்மாவுக்கு கோபம் வந்தது. 

‘என்ன மேடம் நா எவ்வளவு சீரியசா சொல்லிக்கிட்டிருக்கேன்.. நீங்க ஒண்ணும் தெரியாதது மாதிரி ஒக்காந்திருகீங்க?’ 

 ‘நீங்க சொல்றது புரியாமத்தான் மேடம் ஒக்காந்துருக்கேன்... எனக்கு தெரிஞ்சி நீங்க சொன்னா மாதிரி இன்னைக்கி எதுவும் நடக்கலையே...? ஒங்க சன் ஃபோன் பண்ணார்னு சொன்னீங்க.... எனக்கு அந்த மாதிரி ஃபோன் எதுவும் வரலேங்கறது ஒன்னு.... இன்னொன்னு அந்த மாதிரி ஒரு அக்கவுண்ட்ல குடுத்த டெபிட் கார்ட இன்னொரு அக்கவுண்ட்டோட லிங்க் பண்ற மிஸ்டேக் எல்லாம் எங்க பேங்க்ல நடக்காது மேடம்... இங்க எல்லாமே கம்ப்யூட்டரைஸ்ட்... அத்தோட நாங்க எதையும் செய்யிறதில்ல.. எல்லாம் செண்ட்ரலைஸ்ட் டேட்டா செண்டர்லதான் செய்வாங்க... ஒங்கக்கிட்ட யாரோ தப்பான இன்ஃபர்மேஷன குடுத்துருக்காங்க...’ 

 பத்மாவின் கோபம் இன்னும் ஏறியது. 

 ‘அப்போ என் பையன் எங்கிட்ட பொய் சொல்லியிருக்கான்னு சொல்றீங்களா?’

‘அது எனக்கு தெரியாது மேடம்... நீங்க சொல்றா மாதிரி இங்க எந்த இன்சிடெண்ட்டும் நடக்கலேன்னு சொல்றேன்...’ 

‘அப்போ இது என்ன?’ என்று தன் செல்பேசியில் வங்கியிலிருந்து வந்திருந்த குறுந்தகவலை காட்டினாள். 

’இது ஒங்க ப்ராஞ்சுலருந்து வந்த sms தானே?’ 

மேலாளர் பார்த்துவிட்டு ‘ஆமா... இது நார்மலா அக்கவுண்ட்லருந்து வித்ட்ரா பண்ணா வர்ற மேசேஜ்தான்...’ 

‘நாங்க எடுத்தாத்தான வரும்?’ ‘நீங்கன்னு இல்ல... ஒங்க அக்கவுண்ட்லருந்து யார் எடுத்திருந்தாலும் வரும்....ஏடிஎம் கார்ட யூஸ் பண்ணி எடுத்துர்க்காங்க...’ 

‘ஆனா நா எடுக்கலேன்னு எங்க ஹஸ்பெண்ட் சொல்றாரே?’ ‘அப்படியா? அப்போ விசாரிக்க வேண்டிய விஷயம்தான்...’ என்ற மேலாளர் ‘ஒரு நிமிஷம் வெய்ட் பண்ணுங்க?’ தன் அறையிலிருந்து வெளியேறிய மேலாளர் அலுவலகத்திற்குள் நுழைந்து அங்கிருந்த அதிகாரியிடம் பேசிவிட்டு திரும்பி அறைக்குள் வந்து இருக்கையில் அமர்ந்தார். 

‘நீங்க ஒரு பத்து நிமிஷம் வெளியில வெய்ட் பண்ணுங்க... இந்த அக்கவுண்ட்டோட கார்ட் எப்ப டெலிவரி ஆச்சின்னு வெரிஃபை பண்ண சொல்லியிருக்கேன்...’ 

 வேறு வழியின்றி பத்மா இருக்கையிலிருந்து எழுந்து வெளியேறி வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் பகுதிக்கு சென்று அமர்ந்தாள். பத்து நிமிடம் என்பது கால் மணிக்கு மேலானது. மேலாளர் அறைக்கு ஒரு இளம் அதிகாரி - அவரும் பெண்தான் -கையில் சில காகிதங்களுடன் செல்வதை கவனித்தாள். 

அவர்கள் இருவரும் மும்முரமாக விவாதித்தவாறே அவள் அமர்ந்திருந்த திசையை பார்ப்பதும் தெரிந்தது. அதற்கு மேல் பொறுக்க முடியாமல் எழுந்து விடுவிடுவென்று அறைக்கதவை திறந்துக்கொண்டு நுழைந்தாள். 

‘என்னங்க பத்து நிமிஷம்னு சொன்னீங்க... கால் மணிக்கு மேலாயிருச்சி...’என்று படபடத்தவளை அமருங்கள் என்று மேலாளர் சைகை காட்டினாள். 

 அமர்ந்தாள். ஆனாலும் நெஞ்சு படபடவென அடித்துக்கொள்வதை அவளால் தடுக்க முடியவில்லை. 

ஒரு சில நொடிகளுக்குப் பிறகு அறைக்குள் இருந்து அந்த இளம் அதிகாரி வெளியேறியதும் மேலாளர் அவர் விட்டுச் சென்ற காகிதத்தை பத்மாவிடம் காட்டினாள். ‘இங்க பாருங்க... நீங்க அக்கவுண்ட் ஓப்பன் பண்ணப்போ எந்த அட்ரஸ ரெஜிஸ்டர் செஞ்ருந்தீங்களோ அதே அட்ரசுக்கு அக்கவுண்ட் ஓப்பன் பண்ணதுலருந்து பத்தாம் நாள் எங்க சிபிசிலருந்து வெல்கம் கிட் டெலிவிரி ஆயிருக்கு. அதுக்குள்ள ஒங்க ஏடிஎம் கார்ட், அதோட பின் மெயிலர் அப்புறம் செக் புக், இண்டெர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங்... அத ஆப்பரேட் பண்றதுக்குண்டான பின், பாஸ்வேர்ட் எல்லாம் இருக்கும்... அத வாங்குனவங்க கையெழுத்து, டேட்.. செல்ஃபோன் நம்பர் எல்லாம் இதுல ரெக்கார்ட் ஆயிருக்கு பாருங்க....’ 

பத்மா தன் முன்னால் வைக்கப்பட்ட காகிதத்தில் இருந்த கையொப்பத்தை பார்த்ததும் மேற்கொண்டு என்ன பேசுவது என தெரியாமல் ஒரு விநாடி திகைத்துப்போனாள். 

 ஆனாலும் உடனே சமாளித்துக்கொண்டு ஒரு முடிவுக்கு வந்தாள். Attack is the best form of defense என்பார்களே.... சரியோ தப்போ அடிச்சி விடுவோம்.... ரியாக்‌ஷன் எப்படி இருக்குன்னு பார்ப்போம்... 

‘இது என் ஹஸ்பெண்டோட கையெழுத்து இல்ல மேடம். அதெப்படி இவ்வளவு முக்கியமான டாக்குமெண்ட்ஸ் இருக்குற ஒரு கவர நேரா அவர் கிட்ட குடுக்காம வேற யார் கிட்டயோ குடுப்பீங்க? அதனாலதான் எங்க ஹஸ்பெண்ட் இந்த மாதிரி எதுவும் வரலைன்னு எங்கிட்ட காலையில சொன்னார்.;’ 

பத்மாவின் ஊகம் சரியாக இருந்தது. 

மேலாளர் அவளுடைய இந்த கேள்வியை எதிர்பார்த்திருக்கவில்லை என்பது அவர் முகம் போன போக்கிலிருந்தே தெளிவாக தெரிந்தது. 

ஆனாலும் அவரும் சமாளித்துக்கொண்டு எதிர்கேள்வி ஒன்றை வீசினார். ‘அப்ப இத வாங்குனது ஒங்க வீட்டு மெம்பர்ஸ் யாரும் இல்லையா?’ 

பத்மா விடவில்லை. ‘வீட்டுல யார் இருந்தாலும் குடுத்துடுவீங்களா? யார் எவர்னு விசாரிக்க மாட்டீங்களா?’ ‘இங்க பாருங்க மேடம்... இத டெலிவரி பண்றது நாங்க இல்லை... தேர்ட் பார்ட்டி குரியர் மூலமாத்தான் இது நடக்கும்... அவங்க சாதாரணமா ஐடி வெரிஃபை பண்ணாம டெலிவிரி பண்ண மாட்டாங்க.... இத வாங்குனது ஒங்க வீட்டுல இருக்கற யாராவதாத்தான் இருக்கும்....’ 

‘I don't agree...'என்றவாறு எழுந்து நின்றாள் பத்மா... 'If the money is withdrawn by anyone other than by my husband I will hold you responsible for the loss.’ 

மேலாளரும் எழுந்து நின்றார். ‘நீங்க கம்ப்ளெய்ண்ட் வேணும்னா எழுதிக் குடுங்க... We will conduct a detailed enquiry and let you know.' 

'அது வரைக்கும் எங்க பணத்துக்கு என்னங்க கியாரண்டி...?’ என்று இரைந்தாள் பத்மா. 

வங்கியில் அமரந்திருந்த பலரும் தன்னை நோக்கி பார்ப்பது தெரிந்தது.

‘உண்மையிலேயே வேற யாராவது அந்த கணக்குலருந்து எடுத்தது ப்ரூஃப் ஆச்சின்னா... we will refund the money.' 

 'எப்போ?’ 

‘அத இப்ப சொல்ல முடியாது மேடம்... It may take about a week's time...' 

 அதற்கு மேலும் அங்கு வாதாட விரும்பாமல் அங்கிருந்து கிளம்ப முயன்றாள்... 

‘நீங்க ரைட்டிங்ல குடுத்தாத்தான் எங்க என்க்வயரிய ஆரம்பிக்க முடியும் மேடம்.. இப்ப குடுக்க விரும்பறீங்களா?’ என்ற மேலாளரின் கேள்வி அவளை சிந்திக்க வைத்தது. 

மொதல்ல வீட்ல போயி விசாரிப்போம்... அதுக்கப்ப்புறம் அவர் கிட்டயும் டிஸ்கஸ் பண்ணிட்டு புகார் குடுப்போம் என்று முடிவெடுத்தாள். 

 ‘வீட்ல போயி டிஸ்கஸ் பண்ணிட்டு கம்ப்ளெய்ண்ட் தரேன்.’ என்று பதிலளித்த பத்மா மேசை மீது கிடந்த காகிதத்தை பார்த்தாள். 

‘இதுல ஒரு காப்பிய குடுக்க முடியுங்களா?’ 

 ‘இதையே எடுத்துக்குங்க... நல்லா விசாரிச்சிட்டு வாங்க....' 'Ok' என்றவாறு மேலாளர் நீட்டிய காகிதத்தை வாங்கி தன் கைப்பையில் வைத்துக்கொண்டு ஒரு மெல்லிய சங்கடமான புன்னகையையும் உதிர்த்துவிட்டு அங்கிருந்து கிளம்ப, கிளையிலிருந்த அனைத்து கண்களும் தன்னையே பின் தொடர்வதை உணர்ந்து.... ச்சே.. ரொம்பத்தான் ரியாக்ட் பண்ணிட்டோம் போலருக்கு.. என்று தனக்குள்ளே முணகியவாறு விரைந்து வெளியேறினாள்.. 


 ******* 

பத்மா வாசலை விட்டு வெளியேறியதும் வங்கி மேலாளர் தன் இரு அதிகாரிகளையும் தன்னுடைய அறைக்கு அழைத்தாள். 

அவர்கள் வந்ததும் ‘இவங்க கார்ட உடனே ப்ளாக் பண்ணிறலாமா? ஃபர்தரா வித்ட்றாயல் ஆவறது ஸ்டாப் பண்லாமே? என்ன சொல்றீங்க?’ என்றார் இருவரையும் பார்த்து. 

அவர்களில் ஒருவர் ‘சரி மேடம்..’ என, இன்னொருவர் ‘வெறும் ஓரல் கம்ப்ளெய்ண்ட வச்சி ப்ளாக் பண்ணணுமா மேடம்?’ என்றார். 

‘அதுலயும் இவங்க ஒன் ஆஃப் தி ஜாயண்ட் அக்கவுண்ட் ஹோல்டர்தான்... இவங்க ஹஸ்பெண்டையும் கூப்ட்டு விசாரிச்சிட்டு செஞ்சா நல்லதுன்னு தோணுது...’ 

மேலாளர் சரி என்பதுபோல் தலையை அசைத்தார். ‘யெஸ்.. நீங்க சொல்றதும் சரிதான்... அவரோட செல்ஃபோன் அக்கவுண்ட்ல இருக்கும்... நீங்க டயல் செஞ்சி பாருங்க.’ 

இருவரும் அறையை விட்டு வெளியேறி சில நிமிடங்களிலேயே ஒருவர் திரும்பி வந்து ‘மேடம் அந்த கார்ட ஏற்கனவே யாரோ ப்ளாக் செஞ்சிருக்காங்க.’ என்றார். 

‘அப்படியா? ஹவ்?’ 

‘நெட் பேங்கிங் வழியா செஞ்சிருபபாங்க போல.... இன்னைக்கி வித்ட்ராயல் நடந்து ஆஃபனவருக்குள்ளவே ப்ளாக் செஞ்சா மாதிரி தெரியுது...’ 

மேலாளர் சில நொடிகள் சிந்தனையில் ஆழ்ந்தார்....

’அப்போ நாம அனுப்பன வெல்கம் கிட் அவங்களுக்கு கிடைச்சிருக்கு.... அதுலதான் நெட் பேங்கிங் மெயிலருக்கும் இருந்துருக்கும்....? ‘ 

‘யெஸ் மேடம்.’ 

 ‘சரி... நீங்க போயி ஒரு வேல பண்ணுங்க... ஏடிஎம் செண்டருக்கு ஃபோன் பண்ணி இந்த கார்ட மறுபடியும் யூஸ் பண்ண அட்டெம்ப்ட் பண்ணியிருக்காங்களா? அப்படீன்னா அது எத்தன மணிக்கின்னு டீட்டெய்லா கேளுங்க... அத்தோட இனிமே ஏதாச்சும் அட்டெம்ப்ட் நடந்தா நமக்கு ஒடனே இன்ஃபோ குடுக்க சொல்லுங்க... ஓக்கேவா?’ 

‘ஓக்கே மேடம்’ என்றவாறு அவர் வெளியேற, மேலாளர் தன் அலுவல்களை கவனிக்க துவங்கினார். 


[தொடரும்]  



45 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்தநாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை மனப்பூர்வமாக பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...    காலை வணக்கம்.  இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      நீக்கு
  2. எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்...

    வாழ்க நலம்....

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. வணக்கம் துரை செல்வராஜூ ஸார்...  வாங்க...என்னாச்சு லேட்?

      நீக்கு
    2. இரண்டு நாட்களாக இரவில் தூக்கம் சரியாய் அமையவில்லை...

      இன்றைக்கு சற்றே கண்ணயர்ந்து விட்டேன்...

      3:30 க்குத் தான் விழிப்பு வந்தது..

      குளித்து முடித்து விளக்கேற்றி விட்டு தளத்துக்கு வருகிறேன்...

      நீக்கு
  4. நன்றக எழுதியிருக்கின்றார்கள்....

    தற்கால நடப்பைக் காட்டுகிறது கதையின் போக்கு....

    இனி என்ன நடக்கும் என்பதில் ஆவல் மேலிடுகிற்து...

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் காலை வணக்கம். இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். ரொம்பவே சுவாரசியமான நிகழ்வு. சரியான இடத்தில் நிறுத்தி இருக்கார். அடுத்த வாரம் வரை காத்திருக்கணும். விறுவிறுனு போகிறது. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா...   வணக்கம்.

      இது போன்ற பல கதைகள் மிக மிக மிக சுவாரஸ்யமாக சஸ்பென்ஸ் குறையாமல் எழுதி இருப்பவர் ஜோஸப் ஸார்.   வங்கிப்பணியிலிருந்து ஒய்வு பெற்றவர்.  கேட்கவும் வேண்டுமா?

      நீக்கு
    2. உங்கள் பாராட்டுக்கு நன்றி ஸ்ரீராம். இந்த பதிவின் லிங்கை என்னுடைய தளத்தில் இடலாமா!

      நீக்கு
    3. பதிவு செய்து விட்டேன். நன்றி.

      நீக்கு
  7. அநேகமாக அந்தப் பையர் கார்த்திக்கின் வேலையாக இருக்கும். அவர் தான் அப்படிப்பட்டவராகத் தெரிகிறார். அவருக்குக் கூடா நட்புகள் இருக்கவும் வாய்ப்புகள் உள்ளன.

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    எல்லோருக்கும் இனிய நாளாக இருக்கட்டும்.
    திரு ஜோசஃப் சார் கதை விறிவிறுப்பாக ஆரம்பித்திருக்கிறது. விவரங்கள் கச்சிதம். கலக்கமும் தருகிறது. நல்ல படியாக முடிய வேண்டும். நன்றி.

    பதிலளிநீக்கு
  9. என்னுடைய சிறுகதையை 'எங்கள் தளத்தில்' பதிந்தமைக்கு மிக்க நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜோஸப் ஸார்.

      கதை அனுப்பி எங்களை கௌரவித்ததற்கு நன்றி.  உங்கள் ஆதரவும், நம் நட்பும் தொடரட்டும்.

      நீக்கு
    2. உங்கள் ஆதரவும், நம் நட்பும் தொடரட்டும்.//

      நிச்சயமாக. நன்றி.

      நீக்கு
  10. விருவிருப்பாக கதை எழுதுவதில்வல்லவர் ஜோசப்

    பதிலளிநீக்கு
  11. சுவாரஸ்யமாகப் படித்துக்கொண்டே வந்தால் ....... தொடரும் என்று போட்டுவிட்டாரே!

    பதிலளிநீக்கு
  12. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  13. கதை நன்றாக இருக்கிறது. ஜோசப் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    நிறைய தெரிந்து கொள்ள் வேண்டிய விஷயங்கள் இருக்கிறது.
    கார்த்திக் தான் பணத்தை எடுத்து இருப்பரோ!
    அடுத்த பதிவை படிக்க ஆவலுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலைப்பு கார்த்திக்கை நினைக்க சொல்லுது, ஆனால் எழுத்தாளர் இன்னொரு கோணம் வைத்து இருந்தாலும் வைத்து இருப்பார்.

      நீக்கு
    2. உங்கள் வாழ்த்துக்கு நன்றிங்க.

      நீக்கு
  14. கதை விறுவிறுப்பாகச் செல்கிறது
    காத்திக்கிறேன் அடுத்த பதிவிற்கு

    பதிலளிநீக்கு
  15. கேடு விளைவித்த அந்த நட்பை கொண்டவர், யாரென்று அறிய ஆவலாய் உள்ளது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வரவுக்கும கருத்துரை க்கும் மிக்க நன்றி டிடி.

      நீக்கு
    2. இதுவரை எ.பி.யில் வராத புதிய நிலை களம். ஆசிரியருக்கு அந்த தளத்தில் அனுபவம் இருப்பதால் இயல்பாக எழுத வந்திருக்கிறது. சுவாரஸ்யமாக செல்கிறது. நான் எந்த யூகத்தையும் செய்ய விரும்பவில்லை. காத்திருக்கிறேன். 

      நீக்கு
    3. உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

      நீக்கு
  16. மகன் மீதுதான் எனது ஐயம் விழுகிறது.
    சரியான இடத்தில் தொடரும் போட்டு விட்டீர்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. சரியான இடத்தில் தொடரும் போட்டு விட்டீர்கள்//

      எங்கேயாவது போடணுமே!

      உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜி!

      நீக்கு
  17. ஒரு மர்மக்கதை போல அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவலை தூண்டி, வங்கியில் கணக்கு வைத்திருப்போருக்கு விழிப்புணர்ச்சியூட்டும் வகையில் தொடரை கொண்டு செல்லும் கதாசிரியாருக்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வங்கி உலகம் ஒரு மர்மமான புரிந்து கொள்ள முடியாத உலகம் என்று ஓட்டுபவர்களுக்கு அது அப்படி அல்ல என்பதை உணர்த்தவே இனி இது போன்ற புனைவுகளை படைப்பது என்று முடிவெடுத்தேன்.

      உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்.

      நீக்கு
    2. ஓட்டுபவர்களுக்கு அல்ல எண்ணுபவர்களுக்கு ..

      நீக்கு
  18. அருமையான கதை.... முடிவு என்னவாக இருக்கும் என்ற ஆவலுடன் அடுத்த செவ்வாய் வரை காத்திருக்க வேண்டுமே...

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!