செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

கேட்டு வாங்கிப்போடும் கதை - சத்யா - கீதா ரெங்கன் 

சத்யா
கீதா ரெங்கன் 


சத்யா! பெயருக்கு ஏற்றார் போல் சத்தியவதி என்றெல்லாம் சொல்லிட
முடியாது. என்றாலும் கருணை உள்ளவள்! யாருக்கு உதவி என்றாலும் ஓடி
வருபவள்.

நான் என் வேலை காரணமாக அந்தச் சிறிய ஊரில் குடியேறிய போது என்
அடுத்த வீட்டில்தான் இந்த சத்யா இருந்தாள். அந்தச் சிறிய ஊரில்தான் ஓர்
அடித்தட்டு வர்கத்தின் வாழ்வு நிலையைக் கண்கூடாக நேரில் காணும்
அனுபவமும் கிடைத்தது.

நான் நல்ல சம்பளத்துடனான வேலையில் இருப்பவன். ஊர் ஊராக,
வெளிநாடுகள் வரை பயணம். கூடவே என் ஆத்ம திருப்திக்காக அவ்வப்போது
கதைகள் கட்டுரைகள் என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதுவதுமுண்டு.
என் பெற்றோரும் பாட்டியும் என்னுடன்தான். எனக்கு அலுவலக வேலைப்பளு
அதிகம் என்பதால் அம்மாவிற்கு உதவியாக, பாட்டி கொஞ்சம் நடமாடும்
நிலைதான் என்றாலும், பாட்டியைக் குளிப்பாட்டி, டயஃபர் போட்டு அவரது சிறு
தேவைகளைக் கவனிக்க ஆள் தேவையாக இருந்தது.

இந்த சத்யாதான் அப்போது ஆபத்பாந்தவளாக வந்தாள். அவளை அப்பாயின்ட்
செய்வதற்கு முன் அவளைப் பற்றித் தெரிந்து கொள்ள அவள் குடும்பம் பற்றி
மட்டுமே கேட்டேன். ஆனால் வந்ததோ பெரிய ஃப்ளாஷ் பேக். எழுதும்
ஆர்வத்தில் கொஞ்சம் கூர்ந்து கேட்டேன் என்றே சொல்லலாம்.

மிகவும் ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்தவள். இரண்டாம்தாரமாக ஒரு
குடிகாரனுக்கு 20 வயது வித்தியாசத்தில், அவளது 23 வது வயதில்
வாழ்க்கைப்பட்டவள். அந்த அளவிற்கு அவளது வறுமை. இப்போது வயது 35.
முதல் மனைவியின் முதல் பையனுக்கு பார்வை கிடையாது. நரம்பு
சம்பந்தப்பட்ட நோயும் இருந்தது. அதற்குப் பல தீர்வுகள் இருந்தாலும்
அவர்கள் என்னவோ ஓர் அறைக்குள்ளேயே முடக்கி வைத்திருந்தார்கள்.

அடுத்து ஒரு பெண், ஒரு பையன் என்ற குடும்பத்துள் சத்யா நுழைந்தாள்.
அவள் குடிகாரக் கணவன் ஊர் முழுக்கக் கடன் வைத்திருந்தான். அவனுக்கு
இருந்த ஒரே சொத்து அவன் இருந்த வீடு மட்டுமே ஆனால் அந்த வீட்டின்
மேலும் கடன். சத்யா ஒரு ஃபோன் பூத் வைத்தாள். கூடவே ஒரு சிறிய
உணவகம் வைத்தாள். உழைத்தாள். காசு சம்பாதித்தாள். கடனை எல்லாம்
அடைக்கத் தொடங்கினாள்.

குடிகாரனுக்கு ராத்திரியானால் அவனது தேவையைப் பூர்த்தி செய்ய, சட்ட
ரீதியான தாலி என்ற உரிமத்துடன் ஒரு பெண் இருக்க, விடுமா? இவளும்
கருவுற்றாள். பெற்றாள். முதல் குழந்தை பெண் குழந்தை. அது வளரும் முன்
அடுத்ததாய் ஒரு கரு. கலைந்தது. அவள் உடலும் நலிந்தது. அதற்குள் முதல்
மனைவியின் பெண்ணுக்குக் கல்யாணம். அவளும் குழந்தை பெற்றாள்.
மறுவருடமே வேறு ஒருவனுடன் ஓடியும் போனாள்.

இவள்தான் காரணம் என்று அந்தக் குடிகாரக் கணவன் சத்யாவை அடித்தான்.
இவள் ஒதுங்கினாளா? அடுத்து ஒரு ஆண் குழந்தை. அது வளரும் முன்
அடுத்து ஒரு இயற்கை அபார்ஷன். சத்யாவின் உடல்நலன் நலிந்தது. கடை
மூடப்பட்டது. குடிகாரன் ஒரு நாள் வேலைக்குச் சென்றால் பல நாள்
வேலைக்குச் செல்ல மாட்டான். சத்யாவிற்கு மட்டுமா குழந்தைகள்? கடனும்,
வட்டியும் குட்டியுமாய் தன் குடும்பத்தைப் பெருக்கியது.

அந்தச் சமயத்தில்தான் நான் அந்தத் தெருவில் குடியேறியிருந்தேன். அவள்
கொஞ்சம் அசடுதான் என்றாலும் கருணை உள்ளம் கொண்டவள். உழைக்க
அஞ்சாதவள். எல்லோரிடமும் அண்ணே, அக்கா என்று யார் என்ன
சொன்னாலும் கண்டு கொள்ளாமல் வேலை செய்பவள். நானும் அந்த
அண்ணன்களுள் ஒருவனானேன். இவளின் கருணையைப் பார்த்து உதவிக்கு
வைத்துக் கொள்ளலாம் என்று பேசிய போது நான் தெரிந்து கொண்டதுதான்
மேலே சொன்ன ஃப்ளாஷ் பேக்.

சத்யாவிற்குப் புத்திசாலித்தனமான நல்ல சாமர்த்தியம் இல்லை. அசட்டு
வகை சாமர்த்தியம்தான் இருந்தது. சம்பளமும் கூடவே இலவசமாக
அறிவுரைகளும் வழங்கினேன். பாட்டியின் தேவைகள் குறைவுதான் என்பதால் சத்யாவை அருகில் இருக்கும் ஒரு கம்பெனிக்குப் பார்ட்டைமாக வேலைக்குப் போகச் சொன்னேன்.

நான் அவளை வேலைக்குச் சேர்த்துக் கொண்டதை அறிந்த தெரு மக்கள்
என்னிடம் அக்குடும்பம் பற்றி சொல்லத் தொடங்கினார்கள். எனக்கு நேரமும்
இல்லை. நாட்டமும் இல்லை இருந்தாலும் புதிதாகக் குடியேறியிருந்ததால்
தெரு மக்களை புறக்கணிக்கக் கூடாது என்று அம்மாவைக் கை காட்டினேன்.
அம்மா என்னை முறைத்தாள் என்பது வேறு விஷயம்.

தெருவில் அவள் குடிகாரக் கணவனின் முதல் மனைவி பற்றி பல கதைகள்
இருப்பதாக அம்மா சொன்னாள். மூத்தாளை அவள் கணவன் பைத்தியம்
என்று அடைத்துப் போட்டிருந்தான் என்று ஒரு கதை. இவன் குடித்துக்
குடித்தே குடியைக் கெடுத்தான் என்பதால் மனநிலை சரியில்லாமல் போக,
அதனால் தற்கொலை செய்துகொண்டாள் என்று ஒரு சாராரும், அவன் 
கொலை செய்துவிட்டான் என்று மற்றொரு சாராரும் சொன்னார்களாம்.
போலீஸ் கேஸானது என்றும் சொல்லப்பட்டது.

எப்பவும் சிரித்துக் கொண்டே நகைச்சுவையுடன் கலகலப்பாக இருப்பவளின்
சிரிப்பிற்குப் பின்தான் எத்தனை சோகம்? ஆனால், அவள் அதைப் பற்றி
எல்லாம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. வந்தது வரட்டும் பார்ப்போம்
என்று ஒரு ஓட்டையிலிருந்து எடுத்து மற்றோரு ஓட்டை பெரிதாகும் போது
அதை அடைப்பவள். அதைவிடப் பெரிது வரும் போது அதை இதிலிருந்து
அடைப்பவள் என்றுதான் போகுமே ஒழிய எந்த ஓட்டையும் அடையாது.
இந்த மாதிரியான மக்களின் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் தைரியமும்
அசால்டாக இருப்பதும் படித்த நம்மைப் போன்றவர்கள் சிறு
பிரச்சனைகளுக்குக் கூடத் தீர்வு காணப் பலவகையில் யோசிக்கிறோமோ
என்றும் தோன்றியது

ஒரு வேளை அவர்களுக்குப் பிரச்சனைகளே வாழ்க்கையாகிப் போனதால் எழுந்த மனநிலையாகக் கூட இருக்கலாம்.

முதல் மனைவியின் இரண்டாவது பையன், தான் காதலித்த பெண்ணைத்
திருமணம் செய்து கொண்டு அப்பனுடன் இருக்க முடியாது என்று
தனிக்குடித்தனம் போய்விட்டான். வீட்டில் சத்யா, குடிகாரக்கணவன்,
மூத்தாளின் நோய்வாய்ப்பட்ட பையன், சத்யாவுக்குப் பிறந்த இரு குழந்தைகள்
என குடும்பம் இழுபறியில் ஓடிக் கொண்டிருந்தது.

ஒரு தினம் சத்யாவின் வீட்டிலிருந்த பாத்திரங்கள் எல்லாம் வெளியில் பறந்து
வந்தன. தெருவில் உள்ளோர் என்னிடம் வந்து சொல்லவும், சென்றேன்.
அண்ணே இங்க பாருண்ணே இந்த ஆளு செய்யறத. குடிக்கக் காசு
கேக்குறான். நான் கொடுக்க மாட்டேனு சொன்னேன். மீனு சமைச்சுக்
கொடுக்கணுமாம், கையில காசில்ல. வீட்டில உள்ளத சமைச்சுக்
கொடுக்கறேன்னு சொன்னா கேக்க மாட்டேன்றான்கோபத்துல இப்படிச்
செய்யுறான் ண்ணேஎனக்குக் கோபம் வந்தது.

சுந்தரம் என்ன இது கூத்து? உங்களுக்கு எத்தனை முறை சொன்னாலும்
கொஞ்சம் கூட உரைக்கவே இல்லை?” சுந்தரம் பதிலே சொல்லாமல் இறங்கி
வெளியில் உட்கார்ந்தான். குடிகாரனிடம் என்ன பேச முடியும்?

அண்ணே, குடிச்சுட்டு வந்து நேத்து பிரியாணி வைச்சுக் கொடுன்னு ஒரே
தொல்லண்ணே. வேலைக்கும் போக மாட்டேங்கிறான். இந்த மாச சம்பளத்துல
கடன அடைக்கறதா? வீட்டுச் செலவுக்கு என்னா செய்யுறதுனு தெரியாம
இருக்கேன். இந்தாளு குடிக்க காசு கேட்டுராத்திரியானா ஒரே தொல்லைண்ணே…..அவன் பையன் வேற இந்த வீட்ட பிரிக்கச் சொல்லி சொத்து கேக்குறான். ஏற்கனவே இந்த வீடு மேல லோனு இருக்கு. அண்ணே எனக்கு இந்தச் சனியன விட்டு போயிடலாமானு தோணுது

நீ சொல்லுவியே தவிர அடுத்த நிமிஷம் கடன் வாங்கியாவது வக்கணையா
சமைச்சுப் போடுவ. அவனும் திருந்தப் போறதில்லை. நீயும் திருந்தப்
போறதில்ல அப்புறம் என்ன பேச்சு வேண்டிக் கிடக்கு

திருந்தாத ஜென்மங்களுக்கு என்ன அறிவுரை கொடுத்து என்ன பயன்? பேசிப்
பயனில்லை என்ற கோபத்தில் வீட்டிற்குச் சென்று விட்டேன். அம்மாவும்
அப்பாவும் சத்யாவிற்கு எந்த வகையிலேனும் உருப்படியாக உதவ முடியுமா
என்று யோசித்தனர். ஆனால் பயனில்லை என்பதுதான் நிதர்சனம்.

சம யோசிதமாக, புத்திசாலித்தனமாக வாழ்ந்தாலே, வாழ்க்கை சிக்கல்கள்
நிறைந்தது எனும் போது, மனதில் தோன்றுபவற்றை எல்லாம், அதுவும்
நியாயமற்ற உணர்வுகளைப் பற்றியும், எண்ணங்களைப் பற்றியும் சிந்திக்காமல் அசட்டுத்தனமாக முடிவெடுத்து செயல்படுத்தவும் செய்தால் வாழ்க்கை இன்னும் சிக்கல்கள் நிறைந்ததாகத்தானே மாறும்? அப்படித்தான் இந்தக் குடும்பத்தின் வாழ்க்கை முடிச்சுகள் நிறைந்த வாழ்க்கையாகிப் போனது.

அதுவும் ஒரூ முடிச்சு அவிழத் தொடங்கினாலும் விடுபடாமல் கூடவே
வேறொரு முடிச்சைத் தன்னுடன் கொண்டு வந்துவிடுவதாக இருந்தது.
திடீரென்று ஒரு நாள் சத்யா, “அண்ணே நீ ஏண்ணே கல்யாணம்
செஞ்சுக்கலை? ஒன்னை மாதிரி ஆளுங்களுக்கு படிச்ச பொண்ணுங்க வரிசை
கட்டி நிக்குமே!”

ஏனோ தோணலை.. செஞ்சுக்கலை.”

பாட்டி சொல்லிச்சு ஒனக்கு ஒரு அக்கா, ஒரு தங்கச்சி இருக்காங்களாமே.
அண்ணே, அம்மா, நா ஒண்ணு கேட்டா தப்பா நினைச்சுக்கிடாதீங்க. உங்க
வீட்டுப் பொண்ணுங்கள்ல யாருக்காச்சும் என் புருஷன் மாதிரி ஒண்ணு
இருந்தா என்னா செஞ்சுருப்பீங்க?”

இதற்கு டக்கென்று என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் நானும்
அம்மாவும் பார்த்துக் கொண்டோம்.

சமூகம், வாழ்க்கை முறை வேற வேற. என் அக்காவும், தங்கச்சியும் நல்ல
வேலைல இருக்காங்க. நீ கேட்டாப்ல ஒரு வேளை அவங்களுக்கு உன்
புருஷன் மாதிரி அமைஞ்சுருந்தா நாங்க வீட்டுல கலந்து பேசியிருப்போம்.
மாப்பிள்ளைய திருத்த முயற்சி எடுத்திருப்போம். சேர்ந்து இருக்க முடியுமா
இல்லையான்னு கேட்டு முடியலைன்னு சொன்னா, நல்ல வேலைல
இருக்கறதுனால தன்னைக் காப்பாத்திக்க முடியும்ன்றதுனால பிரிஞ்சுருப்பா.

வேலை இல்லைனாலும் நாங்க ஏதாவது வேலைக்கு ஏற்பாடு செஞ்சு
ஆதரவும் கொடுத்திருப்போம். நாங்க எங்க மனுஷங்க, சமூகம் என்ன
சொல்லுவாங்கன்னு கவலைப்படறதில்லை சத்யா.”

எங்க இதிலயும் விட்டுப் போறதுங்க இருக்குதான். ஆனா என் சனங்க
விடாது. கல்யாணத்துக்கு முன்ன, நான் திருப்பூர்ல ஒரு பனியன் கம்பெனில
வேலைக்குச் சேர்ந்திருந்தேன் எனக்கு எங்க வீட்டுலயும் எந்த சப்போர்ட்டும்
இல்லை. இல்லேனா இப்படியொரு ஆளுக்குக் கெட்டி வைச்சுருப்பாங்களா?
இல்ல இப்ப எங்க சனங்ககிட்ட என் கதையத்தான் ஏதாச்சும் பேச முடியுமா?
இப்ப நீங்கல்லாம் உதவுறதுனால எனக்குப் புத்திமதி சொல்றதுனால ஓடுது
எனது சிந்தனைகளையோ, முடிவையோ சத்யாவின் மீது நான் திணிக்க
நினைக்கவில்லை. அது போன்ற ஆலோசனைகளை வழங்கியதும் இல்லை.
முடியவும் முடியாது என்பதே யதார்த்தம். அவளது வேலை எதுவும் நிரந்தரம்
இல்லை. பொருளாதார ரீதியாகக் கூட எந்த ஒரு ஊன்றுகோலும் இல்லாத
நிலையில் அவளுக்கு இது போன்ற முடிவுகள் சரியாகாது. அல்லது அவள்
தன் காலில் நின்று, தன் ஜனங்களையும், ஊர் வாயையும் தைரியமாக
எதிர்கொண்டு, வெளியே வந்தால்தான் உண்டு.

குடியும், கடனும் என்று 3 வருடங்கள் கடந்தன. அந்த நோய்வாய்ப்பட்ட
பையனும் ஒரு நல்ல நாளில் கண்ணை மூடினான். அவன் இருப்பதை விட
அதுவே மேல். மூத்தாள் பையன் ரூபாய் திரட்டி வீட்டின் மேலுள்ள கடனை
அடைத்துவிட்டு வீட்டைப் பிரித்து ஒரு சின்ன போர்ஷனை சத்யாவிற்கும்
அப்பனுக்கும் கொடுத்துவிட்டுத் தன் மனைவியுடன் பெரிய இடத்தில் குடி
வந்துவிட்டான். அவனும், அவன் மனைவியும் கொஞ்சம் படித்தவர்கள். நான்
பேசிய வரையில் நல்லவர்களாகத்தான் தெரிந்தார்கள்.

அப்பையனை நான் குறை சொல்ல மாட்டேன். சத்யாவிற்குக் குடித்தனம்
நடத்தும் சாமர்த்தியம் போதாது. ஒரு குடும்பத்தில் யாரேனும்
ஒருவருக்கேனும் மனப்பக்குவம் வேண்டும் யாருக்கும் இல்லை என்றால்
என்ன செய்ய முடியும்? வின் வின் சிச்சுவேஷன் என்பது நிறுவனங்கள்,
வியாபாரத்தில் மட்டுமல்ல. குடும்பத்திற்கும் மிக அவசியமான ஒன்று
என்பதை நான் எனது கம்பெனியில் கொடுக்கும் ட்ரெய்னிங்கிலும்
சொல்லுவதுண்டு. இவர்களிடம் சொல்ல முடியுமோ?

அவளுக்கும், அந்தப் பையனுக்கும் பேச்சுவார்த்தை இல்லாமல் போனது.
சத்யாவின் கணவன் தன் பையனுடன் அந்த போர்ஷனில் இருந்தான். சத்யா
தனியாக அவளுக்கு என்று பிரித்துக் கொடுக்கப்பட்ட சைட் போர்ஷனில் தன்
குழந்தைகளுடன் வாழத் தொடங்கினாள். கொஞ்சம் நன்றாகவே சென்றது.

மகன் வீட்டில் மருமகளுக்கு குடிகார மாமனார் ஒத்துவரவில்லை. தவறே
இல்லை. கஷ்டப்பட்டு வைத்துக் கொண்டாள். குடிகாரன் நினைக்கும்
சாப்பாடும், குடிக்கக் காசும் கிடைக்காமல் மீண்டும் சத்யா இருந்த
போர்ஷனுக்குள் ஒட்டகம் புகுந்த கதையாக வந்துவிட்டான். சத்யாவும்
முதலில் விடவில்லை. அவன் குழந்தைகளின் தலையின் மீது சத்தியம்
செய்தான். சத்தியா மன்னித்து வீட்டிற்குள் வர அனுமதித்தாள். முதல்
மன்னிப்பு

குடிகாரனின் சத்தியம் நிலைக்குமா? குடிக்கத் தொடங்கினான். செலவைச்
சமாளிக்க, சத்யா தான் இருந்த பகுதியை பேச்சுலர் பையன்களுக்கு
வாடகைக்கு விட்டு தன் குடும்பத்துடன் மொட்டை மாடியில் கூரை போட்டு
வாழத் தொடங்கினாள்.

நான் நேரம் கிடைத்த சமயத்தில் அக்குழந்தைகளுக்குப் படிப்பும் சொல்லிக்
கொடுத்து, படிப்பதற்குப் பண உதவியும் செய்துவந்தேன். குழந்தைகள் படிக்கக்
கஷ்டப்பட்டார்கள். சூழல் சரியாக இருந்தால்தானே எல்லாம் சரியாக
இருக்கும்? சத்யா தன் மகனை தனக்குத் தெரிந்த ஒரு ஆசிரியர் பார்த்துக்
கொள்வதாகச் சொன்னதும் அவரிடம் விட்டுவிட்டாள். பெண்ணை மட்டும்
தன்னுடன் வைத்துக் கொண்டாள்.

குடிகாரக் கணவனோ இவள் வேலைக்குப் போயிருந்த போது வீட்டிலுள்ள
பாத்திரங்களை ஒவ்வொன்றாக விற்று குடிக்க ஆரம்பித்தான். வீட்டுக்
குத்துவிளக்கு கூட விலைக்குப் போயிற்று! மப்பிலேயே கிடந்தான்.
இவளைப் போல் எத்தனையோ பெண்கள் இருக்கிறார்கள். எத்தனையோ
குடும்பங்கள் இருக்கின்றன. நேரில் கண்டேன். இந்தக் குடி தான் எத்தனைக்
குடிகளைக் கெடுத்து தொலைக்கிறது? படித்தவர்களும் குடிக்கிறார்கள்.

படிக்காதவனும் குடிக்கிறார்கள். வித்தியாசம் ஒன்றுமில்லை. படித்த,
வேலைக்குச் செல்லும் சில பெண்கள், சத்யாவைப் போன்ற சில பெண்கள்
தைரியமாகப் பிரிந்து தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள்.
எனக்கும் வேறு ஊருக்கு மாற்றலாகியது. எத்தனையோ ஊர்களில்
இருந்திருக்கிறேன். அங்கும் இப்படியானவர்களுக்கு உதவியிருக்கிறேன்.

ஆனால் எங்குமே இந்த சத்யாவைப் போல் அன்புடனும், பாசத்துடனும் எங்கள்
எல்லோரையும் உறவு சொல்லி அழைத்து எங்கள் குடும்பத்தில் ஒருவாராகி,
எங்களையும், பாட்டியைத் தன் பாட்டி போன்று அக்கறையுடனும்
கவனித்தவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம்.. அதுவும் பணத்தின்
பின் ஓடும் இன்றைய உலகில். அப்படி எங்களுடன் எங்கள் மனதில் ஒட்டிக்
கொண்டுவிட்டாள். எனவே தொடர்பில் இருக்கிறோம் என்று சொல்லிப்  
பிரிந்தோம். எங்கள் எல்லார் மனதிலும் இவள் ஒட்டிக் கொண்டதாலோ
என்னவோ இவளைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

இரு ஊர்களுக்கும் 4 மணி நேரப் பயண இடைவெளிதான் என்பதால் ஓரிரு
முறை எங்கள் வீட்டிற்கு அவள் வந்து சென்றாள். நானும் அந்த ஊரைக்
கடந்து சென்ற போதெல்லாம் அவளைச் சந்தித்து எப்படி இருக்கிறாள் என்று
அறிந்தும் வந்தேன். அவளுக்காக வங்கியில் ஒரு தொகை சேமித்தும்
வந்தேன். அவள் கையில் கொடுப்பதை விட இது அவளுக்குப் பின்னாளில்
உதவும் என்பதால்.

ஒரு நாள் சத்யா என்னை மொபைலில் தொடர்பு கொண்டு, “அண்ணே,
ஏதாவது வழி சொல்லேன். முன்னாடி என்னமோ சொல்லுவியே ஏதோ
குடிப்பழக்கத்த நிறுத்தற ஆஸூத்திரின்னு அது இங்க எங்கருக்குனு கொஞ்சம்
சொல்லேன் எவ்வளவு ஆகும் சொல்லுண்ணே. இந்தாள அங்க கொண்டு
சேர்த்துடலாம்……”

அதுக்கு 12 ஆயிரத்துலருந்து 15 ஆயிரம் வரை ஆகும். அவங்களே சாப்பாடு,
மருந்து எல்லாம் கொடுத்துருவாங்க. நீ அப்பப்ப அவங்க கவுன்சலிங்க்
கூப்பிடும் போது போகணும்….ரூபாய்க்கு என்ன பண்ணுவ நீ?”

தெரிலண்ணே என்னா பண்ணுறதுனு……கடன் தான்.”

நான் கொடுத்திருப்பேன். ஆனால், அவன் திருந்துவானா என்ற உறுதி
இல்லாததால் உதவுவதில் தயக்கம் இருந்தது. அக்குழந்தைகளின் எதிர்காலம்,
படிப்பு என்றால் கொடுத்திருப்பேன்.

சரி யோசிப்போம்எங்க அம்மா அப்பாகிட்டயும் பேசிட்டு சொல்றேன். நீ
வேலைக்குப் போ….உன்ன சாயந்திரம் கூப்பிடறேன்…”

மதியம் எனக்கு திடீரென்று சத்யாவிடமிருந்து அழைப்பு. என்னால் அட்டெண்ட் செய்ய முடியவில்லை. அம்மாவை அழைத்திருக்கிறாள். ஒரே
அலறல்…”அம்மா இந்தக் கேடுகெட்ட குடிகார நாயி என் பொண்ணை....ஹையோ அதை நான் எப்படிச் சொல்லுவேன்............கூப்பிட்டு படுத்தியிருக்கான்ம்மா. தே……..மவன்அவன் உருப்படுவானா……..நாசமா போணும்.  என் பொண்ணு அவங்கிட்டருந்து தப்பிச்சு நான் வேலை செய்யுற கம்பெனிக்கே வந்து அழுதுகிட்டுருக்கு. எப்படிம்மா இனி நான் தனியா விட்டுட்டுப் போவேன் என் மவள?” அம்மா ஆடிப் போய்விட்டாள்.

அம்மா என்னிடம் விஷயத்தைச் சொன்னதும், என் மனமும் நொந்து போனது.
.
சத்யாவை அழைத்தேன்.

சிவகாமிக்கு ஸ்கூல் இல்லியா?”

இல்லண்ணே பரீட்சை நடக்குதுவீட்டுல இவன் குடிச்சுட்டு படுத்து
கிடந்துருக்கான். சிவாமி மதியம் வீட்டுக்கு வந்ததும் இப்படி…..” என்று
சொல்லுவதற்குள் அவள் குரல் உடைந்தது.

நீ முதல்ல சிவாமிய கூட்டிட்டு என் ஃப்ரென்ட் வீட்டுக்குப் போ. என் ஃப்ரென்ட
கூப்பிட்டுச் சொல்லறேன். உனக்குத்தான் வீடு தெரியுமே. நீ இங்க
இருக்காதநாம யோசிக்கலாம் அடுத்து என்ன செய்யறதுனு….”

நாயிபொறம்போக்கு நாயி…..அண்ணே ஏதாவது ஐடியா கொடு. அண்ணே நீ
சொல்லுண்ணே அவன நான் விஷம் வைச்சுக் கொன்னுரட்டுமா..யாருக்கும்
தெரியாம…”

ஏய்! உணர்ச்சிவசப்பட்டு அந்த மாதிரி எதுவும் செஞ்சு வைச்சுராத. அது
உனக்கு ஆபத்து. உன் பிள்ளைங்களுக்கு நல்லதில்லை. நீ பக்கத்துல இருக்கற
போலீஸ் ஸ்டேஷன்ல போயி கம்ப்ளெயின்ட் கொடுநான் வந்து
பார்த்துக்கறேன்.”

அண்ணே ஏற்கனவே சிவாமி கொடுத்துருச்சு……அவங்க வந்து பார்த்துட்டு
சும்மானாலும் இந்தாள மிரட்டிட்டுப் போனாங்க அம்புட்டுதான் ண்ணே

சரி நான் நாளைக்கு அங்க கிளம்பி வரேன்….யோசிக்கலாம்….என் ஃப்ரென்ட்
வீட்டுக்குப் போவேற எதுவும் பண்ணி வைச்சுராதஎன்ன?”

சத்யா சிவாமியை அழைத்துக் கொண்டு பக்கத்து ஏரியாவில் இருக்கும் என்
அலுவலகத் தோழி வீட்டிற்குச் சென்றாள். மறு நாள் நான் அங்கு சென்று
சுந்தரத்திடம் பேசலாம் என்று நினைத்தால் அவன் மப்பிலேயேதான்
இருந்தான். தற்காலிகமாக, சத்யாவுக்கு வேறு வீடு பார்த்துக் கொடுத்து,
அவர்களைக் குடித்தனம் வைத்துவிட்டு அந்த வார இறுதியில் வந்து அவனை,
குடிபோதை மீட்பு மையத்தில் விசாரித்துச் சேர்க்க முடிவு செய்யலாம் என்று
சொல்லிவிட்டு ஊருக்கு வந்துவிட்டேன். என் தோழியிடமும் அவள்
கணவரிடமும் கலந்தாலோசித்தேன். இப்படியான பெண்களுக்கு ஒரு
மறுவாழ்வு மையம் ஏதாவது தொடங்கிச் செய்யலாமா என்று பிள்ளையார்ச்
சுழியும் போட்டோம்.

இரண்டு நாட்களில் மீண்டும் சத்யாவிடமிருந்து அழைப்பு.

அண்ணே, சுந்தரம் மப்புல மாடிப்படிலருந்து உருண்டு கீழ விழுந்துட்டான்.
அந்த வீட்டுல குடியிருக்கற பசங்க ஃபோன் போட்டுச்சுங்க. இடுப்பெலும்பு
முறிஞ்சு ஆஸுத்திரில பெட்ல சேர்த்துருக்கானுங்க. ஐசியு
வைச்சுருக்காங்க……நான் இப்ப ஆஸுத்திரிலருந்துதான் பேசுறேன் ண்ணே….”.

எனக்குப் பெருமூச்சுதான் வந்தது. “ம் அவன் எப்படி இருக்கான் இப்ப?
அப்படியே அந்த டாக்டர்கள்கிட்ட கேட்டு அவனை குடியிலிருந்து மீட்க
அங்கேயே ஏதேனும் செய்வாங்களா, என்ன செய்யலாம்னு கேளு“ உளறிக்கிட்டுருக்கான் அவன். மூளை பேதலிச்சுருச்சாம். டாக்டருங்க இடுப்புல ஏதோ ஆப்பரேஷன் பண்ணனும்னு சொல்லுறாங்க. கெவெர்மென்டு
ஆஸுத்திரிதான். அவங்க அண்ணன் கொஞ்சம் காசு கொடுத்துருக்காரு…..”

நீ என்ன பண்ணப் போற

ஒன்னும் வேண்டாம்ண்ணே நீயே ஊர் ஊரா சுத்திட்டு பிஸியா இருக்க.
சும்மா உனக்கு செய்திதான் சொன்னேன்அம்மா அப்பா பாட்டி எல்லாரும்
நல்லாருக்காங்களா? நீங்க எல்லாரும் இங்க இருந்த வரை எனக்கு நிறைய
சொல்லிக் கொடுத்து உதவி செஞ்சுருக்கீங்க. நல்லாருந்துச்சுண்ணே. உங்களை என்னால மறக்கவே முடியாது. இப்ப என்ன செய்யறது?…இவனை .பாத்துகிட வேண்டியதுதான்…”

10 நாள் கழித்து மீண்டும் சத்யாவிடமிருந்து அழைப்பு..

அண்ணே, திரும்ப எங்க வீட்டு மொட்டைமாடிக்கே வந்துட்டேன் ண்ணே.…..”

! சுந்தரமுமா? எப்படி அவனை மேல கொண்டு போன? பத்திரமா இரும்மா.
பொண்ணை பத்திரமா பாத்துக்க. கடைசில நீ எடுத்த வீர சபதத்துக்கு எத்தனை
சோதனைகள் பாரு.”

இங்க கீழ குடியிருக்கற பையனுங்க சுந்தரத்தை மேல கொண்டு வர ஹெல்ப்பு செஞ்சானுங்க. இப்ப அவனால ஒன்னும் செய்ய முடியாது….அசையக் கூட முடியாது….இடுப்பு போச்சு……. இன்னும் எம்புட்டு நாளோ தெரியலை....போனா போகுதுனு கோபத்த விட்டு .வந்துட்டேன்ண்ணே…..”

சரி, உடனே ஏதாச்சும் உதவி வேணும்னா என் ஃப்ரெண்டையும் கான்டாக்ட்
பண்ணு, எனக்கும் சொல்லு. என்ன?”

ஏண்டா சிவா! ஃபோன்ல சத்யாவா? என்னவாம்?” அம்மா, பாட்டி, அப்பாவுக்கு
சத்யாவைப் பற்றி அறியும் ஆர்வம். நான் அவள் சொன்னதை சொன்னேன்.

கொஞ்ச நேரத்தில் அம்மா காஃபியுடன் வந்தாள்.

என்னவோ ஒன் ஃப்ரென்ட் சீதை ராமனை மன்னித்தாள் னு முடியணும்னு
கதை எழுதக் கேட்டிருந்தார்னு சொன்னியே. அடித்தட்டு வர்கத்தின் மன்னிப்பு
பத்தி எழுதனும்னியே எழுதிட்டுருக்கியோ

அதெல்லாம் ரெண்டு வருஷத்துக்கும் மேல ஆகுது. அதுக்கு எழுத முடியலை.
இது இப்ப சும்மா இவ கதைய இது வரைக்கும் எழுதிட்டேன்.”

போறும் போ. சத்யா சீதையாக்கும்? சுந்தரம்-ராமனை??!! மன்னிச்சுட்டாளாக்கும். அது சரி அவன் என்ன ராமனா? அம்புட்டுத்தானா கதை

ஹா ஹா ஹா ஹா. பாட்டி அவ கதையெல்லாம் சுபம் போட்டு முடியற
கதையா என்ன? தொடர்கதை தான்

என்னவோ போ. அந்த அசடுக்கும்தான் ஒரு விடிவு காலம் பொறக்காதோ?”

65 கருத்துகள்:

  1. பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம்.அன்பு துரை,அனபு ஶ்ரீராம். இறைவன் அருள் என்றும நிறைந்திருக்கட்டும்.

      நீக்கு
    2. இனிய காலை வணக்கம் வல்லிம்மா...   வாங்க.

      நீக்கு
    3. ஆ! இன்று இக்க்தையா!!? வெளியாகும் தேதி நினைவிலேயே இருப்பதில்லை
      ஹிஹிஹி

      நான் ஹாயா வந்தா இப்ப பொறுப்பு வந்துருச்சே!! ஹாஹாஹாஹாஹா

      நன்றி ஸ்ரீராம் மற்றும் எபி ஆசிரியர்களுக்கு

      வருகிறேன். நெட் படுத்துகிறது. கொஞ்சம் வேலைகளும்ஸோ அப்பப்ப வந்து டக்கு பக்குனு கருத்து போட்டு ஓடுகிறேன்.

      கீதா

      நீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரார்த்தனைகள் நிறைவேற இறைவனை வேண்டுவோம்.  வாங்க கமலா அக்கா...  வணக்கம்.

      நீக்கு
  3. சத்யாவின் சரித்திரம்.
    ஒரு வழியாக மொட்டை மாடிக்கு வந்து விட்டது.

    பல வருடங்களாகச் சேர்ந்த அழுக்கு இனி கரைகிறதா பார்க்கலாம்.
    குடி ஒரு வியாதி என்றுதானே சொல்கிறார்கள்.

    அவள் நினைத்திருந்தால் கதை சொல்பவரின் குடும்பத்தோடயே
    போயிருக்கலாம்.

    அவர்களுக்கும் உதவி.
    அவளுக்கும் பாதுகாப்பு.
    அந்த மட்டத்தில் அவர்கள் எண்ணங்கள் லேசில் மாறாது.

    நன்றி கீதாமா. நீண்ட கதையை பிசிறு விழாமல் எழுதி இருக்கிறீர்கள்.
    வாழ்த்துகள் மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அவர்களுக்கும் உதவி.
      அவளுக்கும் பாதுகாப்பு.
      அந்த மட்டத்தில் அவர்கள் எண்ணங்கள் லேசில் மாறாது.//

      வல்லிம்மா இப்படியானவர்களில் டக்கென்று அவங்க எண்ணம் மாறுவதில்லை. பெரும்பான்மையோர் அப்படியேதான் வாழ்க்கையை ஓட்டுகிறார்கள்.

      மிக்க நன்றி வல்லிம்மா

      கீதா

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    சகோதரி கீதா ரெங்கன் எழுதிய கதை நன்றாக உள்ளது. சத்யாவின் பொறுமையும், உழைப்பும், அந்த குடிகார கணவன் மேல் கொண்ட அக்கறையான கரிசனமும் வியக்க வைக்கிறது. அடித்தட்டு வர்க்க மக்கள் என்றில்லை... நடுத்தர வர்க்கத்தில் இப்படியான பெண்கள் என்றாவது கணவன் (வேறு பழக்கங்களுக்கு அடிமையானவன்) திருந்தி விடுவான் என்ற நம்பிக்கையில் இருந்தார்கள்... இப்போதும் இருக்கிறார்கள். அதற்கும் மேல் கொஞ்சம் வசதியான சூழ்நிலைகளில் பிறந்து வளர்ந்த பெண்கள்தான் இப்படியான சூழல்களை சமாளிக்க இயலாமல் உடனே மணமுறிவுக்கு ஏற்பாடு செய்து கொள்ளும் காலங்கள் இன்றல்ல.. அன்றே வந்து விட்டன. ஆக இறுதியில் கதை முடித்த விதத்தில் எழுந்த உரையாடல் நன்றாக உள்ளது. இந்த சீதை (சத்யா) அவன் இறப்பு வரை மன்னிக்க தயாராகி விட்டாள்..என்னும் விதத்தில் இவள் புராண காலத்தை விட சிறந்தவளாக காட்டிய சகோதரி கீதா ரெங்கன் அவர்களுக்கு பாராட்டுக்கள். இது தொடர் கதையாக வேறு பாகம் என்று தொடருமா? அதை சகோதரி கீதா ரெங்கன் நினைத்தால் சுலபமாகலாம். இப்போதைய சமூக சூழலை அழகாக விவரிக்கும் எழுத்தாற்றல் கொண்ட சகோதரிக்கு வாழ்த்துக்கள். பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமலாக்கா வசதியான பெண்கள் கண்டிப்பாக ஓடிவிடுவார்கள்.

      நடுத்தரம் இப்படியும் செய்ய முடியாமல் அப்படியும் செய்ய முடியாமல் பிறந்த வீட்டு ஆதரவும் இல்லை என்றால் கஷ்டப்பட்டுத்தான் போவார்கள்

      இப்படியானவர்களில் சிலர் தன் வாழ்க்கையைப் பார்த்துக் கொண்டு போவார்கள் தான் ஆனால் எல்லோரும் அப்படி இல்லை.

      இது முன்பு ஸ்ரீராம் கொடுத்த சீதை ராமனை மன்னித்தாள் என்று முடிய வேண்டும் நு கதை எழுத சொல்லியிருந்த போது ஓர் அடித்தட்டு வர்கத்தினைச் சொல்ல எழுதி முடிக்காமல் அப்புறம் அதன் சீராம சீசன் முடிந்ததும் கிடப்பிப் போட்ட கதை. அதை ஸ்ரீராமிடம் இடையில் பேசிக் கொண்டிருந்த போது இதைச் சொல்லி அனுப்பினேன்.

      மிக்க நன்றி கமலாக்கா

      கீதா

      நீக்கு
  5. சிலரின் வாழ்க்கை இப்படி ஆகிவிடுகிறது. இதற்கு அவரவர்கள் எடுக்கும் முடிவுதான் காரணம்.

    இந்த மாதிரி வாழ்க்கையில் 'சுபம்' என்பது குடிகாரன் இறந்தால்தான் வரும். இந்த மாதிரி அடிமட்டத்தில் உள்ள பலர், கணவன் குடித்தாலும், குடித்துத் தொலைகிறான், லிமிட் ஆக குடிப்பழக்கத்தை வைத்துக்கொண்டால், வாழ்க்கை ரொம்பவுமே அல்லாடாது என்ற மனநிலைக்கு வந்துவிடுகிறார்கள்.

    கேள்விப்பட்ட சம்பவங்களை கதை வடிவில் கொண்டுவந்திருப்பதற்காக பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த மாதிரி வாழ்க்கையில் 'சுபம்' என்பது குடிகாரன் இறந்தால்தான் வரும். //

      ஹா ஹா ஹா ஆமாம் ஆனால் அப்பவும் சுபம் இல்லாமல் இப்படியான சூழலில் வளர்ந்த அக்குழந்தைகளினால் வரும் பிரச்சனைகள் தொடர்வதையும் காண நேரிடுகிறது நெல்லை.

      //கேள்விப்பட்ட சம்பவங்களை கதை வடிவில் கொண்டுவந்திருப்பதற்காக பாராட்டுகள்.//

      ஆம் கேட்டதும் பார்த்ததும்தான் இதோ பக்கத்துவீட்டிலும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  6. இப்படி பல பெண்களின் வாழ்க்கை தமிழகத்தில் ஊசலாடிக் கொண்டு செல்கிறது. அரசுதான் மூலகாரணம் மதுக்கடைகளை மூடாதவரை இது தொடர்கதைதான்.

    கதையை "சீதை ராமனை மன்னித்தாள்" என்பதாக இணைத்தது ஸூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் கில்லர்ஜி. தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே என்று சொல்லலாம்.

      கதை அப்படி முடிந்ததன் காரணம் மேலே கமலாக்காவுக்குச் சொன்னதுதன கில்லர்ஜி

      மிக்க நன்றி கில்லர்ஜி

      கீதா

      நீக்கு
  7. // சிறு பிரச்சனைகளுக்குக் கூடத் தீர்வு காணப் பலவகையில் யோசிக்கிறோமோ // உண்மையும், இன்னொரு பிடித்த வரியும் : // சமயோசிதமாக, புத்திசாலித்தனமாக வாழ்ந்தாலே, வாழ்க்கை சிக்கல்கள்
    நிறைந்தது எனும் போது... ... ... ... ... சிக்கல்கள் நிறைந்ததாகத்தானே மாறும்...? //


    கிட்டத்தட்ட உறவுகளில் நடத்த நிஜங்கள் மனதில் வந்தன... ஒருவர் குடியால் இறந்து விட்டார்... இன்னொருவர் சற்றே திருந்தி, பல கோடி சம்பாதித்து விட்டார்... ஆனால், இப்போது மீண்டும் தள்ளாட்டம் ஆரம்பம்... எங்கு போய் முடியுமோ...?

    // குடிகாரர்கள் தானாக திருந்த வேண்டும்... ஆனால், வீட்டுப்பெண்கள் - தாய், மனைவி, சகோதரிகள் யாரேனும் ஆரம்பத்திலேயே திருத்த முயற்சித்திருந்தால், திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு... //

    சற்று முன் தான் வெங்கட்ஜி தளத்தில் கருத்துரை இட்டேன்... அது இங்கும் பொருந்தும் போல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி பிடித்த வரிகள் என்று கோட் செய்து சொல்லியதற்கு

      ஆம் வெங்கட்ஜி தளத்திலும் குடி பற்றி ஆதி சொல்லியிருக்கிறார். உங்கள் கருத்தும் கண்டேன். தானாகத் திருந்தினால்தான் உண்டு டிடி. ஒரு சிலர் வேண்டுமானால் அன்புடனான அறிவுரை கேட்டுத் திருந்துவார்கள்.

      மிக்க நன்றி டிடி

      கீதா

      நீக்கு
  8. அனைவருக்கும் தாமதமாக வணக்கம். அனைவருக்கும் ஈ பாஸ் எளிதாகக் கிடைப்பதால் அவரவர் இஷ்டப்பட்ட இடங்களுக்குச் செல்ல ஆரம்பித்து விட்டதாய்ச் செய்திகள். இது சரியா என மனம் பதறுகிறது. ஆனாலும் கேட்பவர் யார்? உலக நன்மைக்காகவும், நாட்ட்டின் நன்மைக்காகவும், நம் மாநிலத்தின் நன்மைக்காகவும் பிரார்த்திப்போம். விடாமல் பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் பார்த்தேன் கீதாக்கா. எனக்கும் இது தோன்றியது. பிரார்த்திப்போம் கீதாக்கா

      கீதா

      நீக்கு
    2. //உலக நன்மைக்காகவும், நாட்ட்டின் நன்மைக்காகவும், நம் மாநிலத்தின் நன்மைக்காகவும் பிரார்த்திப்போம். விடாமல் பிரார்த்திப்போம்.//

      மலேசியாவில் அதிக வீரியமுள்ள ஒரு கொரோனாவைக் கண்டுபிடித்துள்ளார்களாம்.  அது இந்தியர் மூலமாகத்தான் வந்துள்ளதாம்.  இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள மருந்துகள் அதற்குமுன் வேஸ்ட்டாம்!  இன்றைய செய்தித்தாள் சொல்கிறது.  என்னவோ போங்க...   பிரார்த்திப்போம்.

      நீக்கு
    3. ஆ ஸ்ரீராம் இது பெரிய அணு குண்டு போல இருக்கிறதே! நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமா செய்திகள்...நானும் அதையே சொல்றேன் என்னவோ போங்க

      கீதா

      நீக்கு
    4. மலேசியாக் கொரோனா பற்றிய செய்தி நானும் பார்த்தேன், எதுக்குனு தான் கவலைப்படுகிறது! இந்த அழகிலே ஏஎம் ஆர் நவம்பரோடு கொரோனா முற்றிலும் அழியும்னு சொல்லி இருப்பதாக ஒரு வீடியோ சுற்றோ சுற்றுனு சுற்றுகிறது. வரேன் அப்புறமா!

      நீக்கு
  9. கீதா ரங்கனின் கதை கதையாகத் தெரியாமல் நடந்த நிகழ்ச்சிகளைச் சொல்வதாகவே அமைந்து விட்டது. இப்படியும் பல பெண்கள் இருக்கிறார்கள் தான். ஆனால் இது உடல் நலனுக்குக் கேடு எனத் தெரிந்தும் பலரும் குடியில் ஆழ்ந்திருக்கும்படி இதில் நாற்றத்தைத் தவிர வேறே என்ன இருக்கிறது? அந்த போதை தெளிந்தபின்னர் நிகழ்காலத்துக்கு வரத்தானே வேண்டும்? இப்போத் தமிழ்நாட்டில் சென்னையில் மதுக்கடைகளைத் திறக்க உத்தரவு போட்டிருப்பதற்கும் இந்தக் கதை இப்போது வந்திருப்பதற்கும் பொருத்தமாக இருக்கிறது. சத்யா போன்றவர்கள் என்றும் எப்போதும் மாற மாட்டார்கள். கணவன் மேல் பதி பக்தி எனச் சொல்ல முடியாது. கணவனைத் தவிர்த்த யாராக இருந்தாலும் சத்யா போன்றவர்களால் இப்படித் தான் இருக்க முடியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாக்கா நடந்த கேட்ட சம்பவங்கள் தான் கொஞ்சம் இடையில் சில கருத்துகள்.

      இது ஸ்ரீராம் அப்ப சீராம கேட்டதற்கு எழுதத் தொடங்கியது. அடித்தட்டு வர்கம் தான் ஆனால் அது கொஞ்சம் வேறு அதையேதான் கொஞ்சம் மாற்றி அனுப்பினேன்.

      அக்கா மதுக்கடை ஒழிந்து சில வலுவான சட்டங்களும் வர வேண்டும்.

      இது பதி பக்தியெல்லாம் கிடையாது கீதாக்கா. வேறு வழி தெரியாமல் நீங்கள் சொல்லியிருப்பது போல் சத்யா போன்றவர்கள் இப்படித்தான் இருக்க முடியும்.

      ஏன், பணக்கார இடங்களிலும் கூடச் சிலர் கௌரவம் கருதி இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் சிலருக்குக் கொஞ்சம் வசதிகள் இருக்கலாம். சிலர் கஷ்டப்பட்டே கூட வாழ்க்கையைத் தள்ளுகின்றார்கள்தான்.

      இது எந்த வர்கத்திலும் இருக்கு. பெண் கையில் தான் முடிவு இருக்கிறது. பிறந்த வீட்டு சப்போர்ட் கொஞ்சம் இருந்தால் டக்கென்று எடுக்கலாம். அது இல்லாத பொது பெண்ணிற்கு வேலை இருந்தால் யோசித்து முடிவு எடுக்கலாம்.

      மிக்க நன்றி கீதாக்கா

      கீதா

      நீக்கு
    2. //இப்போத் தமிழ்நாட்டில் சென்னையில் மதுக்கடைகளைத் திறக்க உத்தரவு போட்டிருப்பதற்கும் இந்தக் கதை இப்போது வந்திருப்பதற்கும் பொருத்தமாக இருக்கிறது.//

      அடடே...   ஆமாம்ல...   நல்ல பொருத்தம்தான்.  ஆனால் தமிழ்நாட்டில் இல்லை, சென்னையில்.  தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் ஏற்கெனவே திறந்து வசூல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

      நீக்கு
  10. வசதியான பெண்களோ, நடுத்தர வர்க்கத்துப் பெண்களோ யாராக இருந்தாலும் அவர்களின் மனோநிலையைப் பொறுத்தே அவர்கள் பொறுத்துப் போகவும், எதிர்த்துப் போராடவும் செய்வார்கள். எத்தனையோ வசதியான குடும்பங்களில் குடும்ப கௌரவம் கருதி வாய் மூடி இருப்பவர்கள் உண்டு. பொறுக்க முடியாமல் போகும்போது எதிர்த்துத் தனியே வாழ்ந்தவர்கள். வாழ்பவர்கள் உண்டு. ஆனால் என்னதான் இருந்தாலும் சீதை ராமனை மன்னிக்கும் நோக்கத்தோடு கூடிய கருவுக்கான கதை இது அல்ல. தன் சொந்தப் பெண்ணையேப் பெண்டாளத் துணிந்தவனுக்கும் ராமனும் ஈடா என்ன? சீதை ராமனை மன்னிப்பது என்பது முற்றிலும் வேறு! சத்யா இங்கே கணவனை மன்னித்து ஏற்றிருப்பது வேறு. இனி அவனால் எதுவும் செய்ய இயலாது. வேறொருவர் உதவியை எதிர்பார்த்துத் தான் இருந்தாக வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டே, தனக்கோ, தன் பெண்ணுக்கோ ஆபத்து இல்லை என்பதைப் புரிந்து கொண்டே ஏற்றிருக்கிறாள். இதற்கு அவள் மனோபாவம் தான் காரணம்! தொலைந்து போகட்டும் எப்படியோ! இருக்கும்வரை நம் பொட்டிற்கும் தாலிக்கும் பங்கம் இல்லை என்னும் எண்ணமும் காரணமாக இருக்கலாம். சத்யா மாதிரிப் பெண்கள் தாலிக்கும், பொட்டுக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்களாகவே இருப்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாக்கா இது எல்லா வர்கத்திற்கும் பொருந்தும்தான் னீங்கள் சொல்லியிருப்பது போல அவர்களின் மனோநிலையைப் பொறுத்தே. கௌரவம் கருதி// இதை மேலே சொல்லியிருக்கிறேன் முதல் கருத்தில்.

      ஆமாம் அக்கா அதான் அந்த பாட்டி கேட்பதாக முடிந்திருக்கிறது கதை அவன் ராமனாக்கும் நு? லாஸ்ட் சில வரிகளில் அந்த அர்த்தம் தான்.

      ஏற்றுக் கொண்டதன் காரணமும் அதுதான். ஆனால் வேறும் நடந்தது. அது ஒரு தொடர்கதை.

      சத்யா சீதையும் இல்லை, அந்த சுந்தரம் ராமனும் இல்லை.

      சத்யாவிற்கு எந்த சப்போர்ட்டும் இல்லை அந்த ஊரிலும் சரி அவள் பிறந்த வீட்டிலும் சரி.

      மிக்க நன்றி கீதாக்கா

      கீதா

      நீக்கு
  11. முதலில் "சத்யா"னு படிச்சதும் சமீபத்தில் தான் ராகிர.வின் "படகு வீடு" படிச்சிருந்தேனா! அந்தக் கதாநாயகி "சத்யா" தான் நினைவுக்கு வந்தாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிஹி...   நான் இன்னமும் படிக்கவில்லை!

      நீக்கு
    2. ஓ ராகிர வின் படகு வீடு கதையில் கதாநாயகி சத்யாவா!!

      நான் இணையத்திலிருந்து டவுன்லோட் செய்ய நினைத்தால் கொஞ்சம் தான் டவுன்லோட் ஆனது. மீண்டும் ஒவ்வொரு நாளும் முயற்சி செய்கிறேன். புக் டவுன்லோட், நல்ல வீடியோக்கள் பார்ப்பது எல்லாமே இப்ப கடினமா இருக்கு இணையப் பிரச்சனையால்.

      நெட் ரொம்பப் படுத்துகிறது.

      ஒவ்வொரு கருத்து போடவும் காத்திருக்க வேண்டியுள்ளது.

      வேலைகள் ஒரு புறம். நல்லா லயித்து பதில் கருத்தும் போட முடியலை. ஏதோ போட்டு ஓடுகிறேன்.

      கீதா

      நீக்கு
    3. தி/கீதா, டவுன்லோட் செய்ய முடியாது. உங்க இமெயில் ஐடி தெரிந்தால் நான் நெல்லை அனுப்பி இருக்கும் பிடிஎஃபை அனுப்பி வைப்பேன்.

      நீக்கு
    4. டவுன்லோட் செய்துவிட்டேன் கீதாக்கா. இன்றும் முயற்சி செய்தேன். ஹப்பா இப்போதுதான் இறங்கி முடிந்தது இன்று காலையிலிருந்து முயன்று நெட் படுத்தல். நெட்வொர்க் ஃபெயில்ட் நு ஆகிக் கொண்டே இருக்க இப்ப ஒருவழியா இறங்கிவிட்டது.

      மிக்க நன்றி கீதாக்கா

      கீதா

      நீக்கு
    5. !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      நீக்கு
  12. காலையிலேயே கதையை வாசித்து விட்டேன்..
    நன்றாக எழுதியிருக்கின்றீர்கள்..

    ஆனாலும் -
    சீதை மன்னித்தாள்..
    சிந்தாமணி மன்னித்தாள் - என்பதெல்லாம்
    இனி வரும் காலத்துக்கு ஆகாது என்பது எனது எண்ணம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி துரை அண்ணா...

      //சீதை மன்னித்தாள்..
      சிந்தாமணி மன்னித்தாள் - என்பதெல்லாம்
      இனி வரும் காலத்துக்கு ஆகாது என்பது எனது எண்ணம்...//

      ஹா ஹா ஹா ஹா உண்மைதான் அண்ணா

      ஆனால் விளிம்பு நிலை மக்களை இப்படியான மக்களை இதோ இங்கும் கண்டு வருகிறேன். வீட்டு ஆண்கள் குடி. மனைவியை அடித்தல். அடுத்த தலைமுறைக்கு நல்ல வழிகாட்டல் இல்லை. அக்குழந்தைகளே வந்து எங்களிடம் சொல்லி அம்மாக்கு தலை நோவு. அப்பா குடிச்சு அடிச்சதுனாலனு..மருந்து இருக்கான்னு கேக்குதுங்க....அதுவும் இப்போது பள்ளி இல்லை ஆன்லைன் வகுப்புகள் என்றாகிவிட இக்குழந்தைகள் பள்ளிக்கு ஏதோ பேருக்காகச் செல்வது கூட இப்போது இல்லை. புத்தகத்தைத் தொட்டார்களில்லை. அரசுப்பள்ளி! ஜாலியாக இருக்கிறார்கள். ஊர் சுற்றினார்கள் இதுவரை. இப்போது பெண் குழந்தைகளை வீட்டு வேலைக்கு அனுப்புகிறார்கள். ஆண் குழந்தைகள் கூலி வேலைக்கு.கூடவே ஊர் சுற்றலும். எழுத்து படிப்பு எதுவும் இல்லை.

      மனது வருத்தமாகத்தான் இருக்கிறது இதை எல்லாம் பார்க்கும் போது.

      நன்றி துரை அண்ணா.

      கீதா

      நீக்கு
  13. அடித்தட்டு வேகத்தைப் பற்றிய கதையே நல்ல நிலையில் உள்ள நம்மை இப்படி கதி கல௩்க அடிக்கிறது என்றால் அவர்கள் ஒவ்வொருவரின் நிஜ வாழ்க்கையும் எவ்வளவு பெரிய சுமையாக இருக்கும்.
    நாம் தெய்வத்திடம் நம் நல்வாழ்விற்கு நன்றி செல்வதோடு நிறுத்தி விடாமல் நம்மால் முடிந்த உதவியை அவர்களுக்கு செய்யவும் வேண்டும்.
    அருமையான கதை.
    மனரீதியாகவும் என்னை மிகவும் பாதித்து விட்டது.
    என்னுடைய கருத்தில் முயன்று பலனலிக்கவில்லையென்றால் பேசாமல் ஒதுக்கி விட வேண்டியதுதான். ஊரின் ஊர். அந்த ஊரா அவளுக்கு சோறு போட்டது அல்லது உதவி செய்தது. வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ரமா கருத்திற்கு.

      அடித்தட்டு வர்க மக்களின் வாழ்க்கையைக் கண்டால் மனம் பல சமயங்களில் நொந்துவிடும் ரமா. நாம் எவ்வள்வோ மேல்னு தோன்றும் தத்துவம் எல்லாம்.

      ஆம். நம்மால் முடிந்த உதவி என்பதை பொருள் என்றில்லாமல் நல்ல கதைகள் சொல்லி நல்லொழுக்கம் கற்பித்தல் நம்மால் முடிந்தால் அதை அடுத்த தலைமுறைக் குழந்தைகளூக்குச் செய்வது நல்லது. ஏனென்றால் பொருள் கொடுத்து அது அவர்களின் பொறுப்பின்மையைத் தூண்டுகிறது.

      //என்னுடைய கருத்தில் முயன்று பலனலிக்கவில்லையென்றால் பேசாமல் ஒதுக்கி விட வேண்டியதுதான். //

      ஆமாம் ரமா. ஆனால் அவர்கள் அப்படிச் செய்பவர்கள் வெகு குறைவே.

      நாம் அட்லீஸ்ட் குழந்தைகளுக்கு நல்ல கல்வி நாம் போதிக்க முயற்சி செய்யலாம். ஊர் வேடிக்கைதான் பார்க்கும் கண்டிப்பாக. வம்பு பேசும். திரித்துச் சொல்லும். அறியாமை இருக்கும் வரை இதுவும் தொடரும்.

      மிக்க நன்றி ரமா

      கீதா

      நீக்கு
  14. அன்றைக்கு எழுதியது/
    “என்னவோ ஒன் ஃப்ரென்ட் சீதை ராமனை மன்னித்தாள் னு முடியணும்னு
    கதை எழுதக் கேட்டிருந்தார்னு சொன்னியே. அடித்தட்டு வர்கத்தின் மன்னிப்பு
    பத்தி எழுதனும்னியே எழுதிட்டுருக்கியோ”/ எனக்கு அண்ட சந்தேகம் வந்தது என்னவானால் என்ன எபி யில்கே வா போ கதையாகிவிட்டது

    பதிலளிநீக்கு
  15. கதை நீண்டுவிட்டது. சீதை ராமனை மன்னித்தாள் எனக் கருவை நினைத்து எழுத ஆரம்பித்தால் ராமாயணம்போல வளர்வதை எப்படித் தவிர்ப்பது?

    ஏழைகளின் பிரச்னைகளுக்கு என்றும் விடிவில்லை. அழிச்சாட்டியம் செய்கிறவன் அருகில் சாவும் சாவகாசமாகத்தான் வரும். சத்யாக்களின் கதை நித்யகதையாகிப்போனதே விளிம்புநிலை மக்களின் தொடரும் சோகம். தமிழ்ச் சமூகத்தின் ஒரு இருண்ட பகுதியின் சுயசரிதம் படித்ததுபோல்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஹா ஏகாந்தன் அண்ணா கீதா ஏற்கனவே நீ...........ளமா எழுதுவா...

      //சீதை ராமனை மன்னித்தாள் எனக் கருவை நினைத்து எழுத ஆரம்பித்தால் ராமாயணம்போல வளர்வதை எப்படித் தவிர்ப்பது?//

      அதானே!!!!!!!! ஹா ஹா ஹா ஹா

      முதலில் எழுதியதில் கரு இதே என்றாலும் கொஞ்சம் வேறு.

      அதே அண்ணா அறியாமையிலும், இருளிலும் இருக்கும் விளிம்புநிலை மக்களை நிறைய நிறைய கண்டு வருகிறேன்.

      மிக்க நன்றி அண்ணா.

      கீதா

      நீக்கு
  16. ப்ச்ச் :(  இந்த குடி தான் எத்தனை மக்களின் வாழ்க்கையை கெடுக்கிறது . குடியினால் கேடு வராம இருக்கணும்னா பெண்களின் மனநிலை மாறனும் . இந்த குடிகாரனை விலங்கிற்குக்கூட தன உடன்பிறப்பை /தனது வாரிசை தெரியும் அந்த உணர்வுகூட இல்லாத ஜென்மத்தை ராமன் கதையில் ஏற்க முடியலை. நல்ல வேலை சீராம என்று தலைப்பு வரலை  .அடித்தட்டு பெண்களுக்கு  குடியின் கேடு பற்றிய விழிப்புணர்வு மிக அவசியம் .அந்த சிறு பெண்ணுக்கு மகளுக்கு  எத்தனை மனா உளைச்சல் ..இதெல்லாம் வாழ்நாளெல்லாம் தொடருமே :( கணவனை வேறொரு பெண் வீட்டுக்கு கூடைல சுமந்த கதையெல்லாம் கேட்டு இப்பெண்கள் கெட்டுப்போறாங்க .அன்பு பாசம் எல்லாம் அவசியம்தான்  அது தகுதியானவர்களுக்கு பொருந்தும் ஆனால் கண்மூடித்தனமான இப்படி  சத்யா போல் இருப்பது நல்லதில்லை 

    பதிலளிநீக்கு
  17. வாங்க ஏஞ்சல்! இது சீராம வுக்கு வேறு விதத்தில் எழுதியது. அப்புறம் அந்த சீசன் முடிந்ததால் ஜஸ்ட் இப்படியானவங்களும் இருக்காங்களேன்னு நான் கேட்டு, பார்த்ததை எழுதினேன்...அதான் அந்த கடைசி வரிகள் எல்லாம்.

    //“அதெல்லாம் ரெண்டு வருஷத்துக்கும் மேல ஆகுது. அதுக்கு எழுத முடியலை.
    இது இப்ப சும்மா இவ கதைய இது வரைக்கும் எழுதிட்டேன்.”//

    அப்புறம் அந்த பாட்டியின் டயலாக் ....

    ஆமாம் ஏஞ்சல் //நல்ல வேலை சீராம என்று தலைப்பு வரலை // அதான் முதலில் இருந்த இந்தத் தலைப்பை எல்லாம் எடுத்துட்டேன்.

    //அன்பு பாசம் எல்லாம் அவசியம்தான் அது தகுதியானவர்களுக்கு பொருந்தும் ஆனால் கண்மூடித்தனமான இப்படி சத்யா போல் இருப்பது நல்லதில்லை //

    ஆமாம் ஏஞ்சல் ஆனா சத்யா மட்டுமில்ல, ஏஞ்சல். படிச்சவங்களுமே நல்ல வேலைக்குப் போறவங்களுமே இருக்காங்களே இப்படி. என்ன சொல்ல?

    மிக்க நன்றி ஏஞ்சல்

    கீதா

    பதிலளிநீக்கு
  18. கீதா கதை மிகவும் அருமை.
    கேட்ட பார்த்த செய்திகளை தொகுத்து ஒரு அருமையான கதை சொல்லி விட்டீர்கள்.
    இப்போது நடக்கும் அவலங்கள் அனைத்தும் இந்த கதையில் இருக்கிறது.

    குடியால் ஏறபடும் கஷ்டங்களை எத்தனை குடும்பங்கள் அழிந்து போய் இருக்கிறது என்று கதை அருமையாக சொல்கிறது.

    //கருணை உள்ளவள்! யாருக்கு உதவி என்றாலும் ஓடி
    வருபவள்.//
    கதை நாயகியின் குணத்தை முன்பே சொல்லி விட்டீர்கள் முடிவு இப்படித்தான் இருக்கும் என்று தெரிந்து விட்டது.
    யாருக்கு உதவி என்றாலும் கருணை மிக்கவள் தன் கணவனுக்கு உதவ வந்தது ஆச்சிரியம் இல்லை.

    மன்னிக்கும் இயல்பும் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதிக்கா மிக்க நன்றி

      ஆமாம் கோமதிக்கா நான் செல்லும் ஒவ்வொரு ஊரிலும் இப்படி மக்களை சந்திக்கும் அனுபவம் இருக்கு. அதைப் பார்த்ததும் அப்புறம் கேட்டதும்தான் கதையாக...

      அவள் யாருக்குமே உதவுபவள் என்பதால் வேறு எந்த சென்டிமென்டும் இல்லாமல்தான் கணவனை சரி போனா போகுது என்று பார்த்துக் கொண்டதும்.

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  19. எங்க வீட்டில் வேலை பார்த்த ஒரு பெண் கதை இந்த சத்யாவின் கதை போன்றதுதான். அவள்  கணவன் ஒவ்வொரு வருடமும் சபரி மலைக்குச் செல்வதற்கு மாலை போட்டுக் கொள்வான்.  அப்பொழுது மட்டும் குடிக்க மாட்டான். அவள் சந்தோஷமாக. "இனிமே குடிக்க மாட்டேன்னு சொல்லியிருக்கார்மா" என்று கூறுவாள். பின்னர் பழைய குருடி கதவைத் திறடி கேஸ்தான். //பாட்டி அவ கதையெல்லாம் சுபம் போட்டு முடியறகதையா என்ன? தொடர்கதை தான்”// நிதர்சனமான வரிகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பானுக்கா உண்மையே இதோ இங்கு பக்கத்திலும் பார்த்து வருகிறேன்.

      ஆமாம் சபரி மலைக்குப் போகும் போது குடிக்காதவர்கள் அப்புறம் மீண்டும் குடிக்கத் தொடங்கிவிடுவார்கள். அப்போது மட்டும் எப்படி இருக்க முடிகிறது அப்புறம் தொடங்குவது ஏன் என்று எனக்குத் தோன்றும் அதற்காகவே கூட நினைப்பேன் சரி அப்படியேனும் வருடம் முழுவதும் ஐயப்பன் விசேஷம் என்று வந்திடாதோ என்று. ஹா ஹா

      மிக்க நன்றி பானுக்கா

      கீதா

      நீக்கு
  20. //ஹா ஹா ஹா ஹா. பாட்டி அவ கதையெல்லாம் சுபம் போட்டு முடியற
    கதையா என்ன? தொடர்கதை தான்”//

    உண்மைதான் கீதா இந்த மாதிரி உள்ளவர்களின் கதை முடியும் கதையா?
    மகள் வளர்ந்து படித்து நல்லபடியாக வரும் வரை அவளின் உழைப்பு தேவை படுகிறது ஓடி கொண்டே இருப்பாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கோமதிக்கா

      ஆனால் பாருங்க இவர்கள் குழந்தைகள் படிப்பதில் மிகவும் சிரமப்படுகிறார்கள் ஆர்வமும் விரல் விட்டு எண்ணும் அளவிலான குழந்தைகளுக்கு மட்டுமே இருக்கிறது. பானுக்கா சொல்லியிருந்த ஒரு கிராமத்துப் பெண் அப்படியான தேடல்கள் ஆர்வம் எதுவும் 99% ற்கு இல்லை என்றே சொல்லலாம்.

      இவள் குழந்தை நல்லபடியாக வர வேண்டும்..பார்ப்போம் அதற்கும் ஒரு க்தை பிறக்கலாம் ஹா ஹா ஹா ஹா

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  21. ஏழைகளின் குடிப்பழக்கம்.. அதெல்லாம் அறியாமை அல்ல... திமிர்..

    கையில் காசு இல்லாவிட்டால் கொள்ளையடிக்கும் அளவுக்கு வக்கிரம்..
    இங்கே சென்ற வாரம் வரை எனக்கு எதிரில் இருந்தவன் குடிகாரன்.. மொடாக் குடியன்...
    ரெண்டு நாள் வேலைக்குப் போவான்.. மூன்று நாட்களுக்குப் போகமாட்டான்...

    அவன் மீது இரண்டு முறை நேரிடையான குற்றப்பதிவு... ஜூன் மாதத்தில் ஒருநாள் குடி வெறியில் பங்களாதேஷி ஒருவனை அடித்து விட்டான்... காக்காய்கள் ஒன்று சேர்ந்து விட்டன..

    மேலிடத்தில் கூப்பிட்டு சீட்டைக் கிழித்து விட்டார்கள்.. கொரானா புண்ணியத்தால் விமானப் போக்குவரத்து இல்லை..

    சீட்டுக் கிழிக்கப்பட்ட நாளில் இருந்து சம்பளம் இல்லை.. இங்கே போடப்படும் சோற்றைத் தின்று கொண்டு இருக்கிறான்.. செலவுக்குக் காசு இல்லை. எனவே சாராயம் வாங்கி அதை விற்றுப் பிழைக்கிறான்..

    விமான சேவை தொடங்கியதும் இங்கிருந்து விரட்டப்படுவான்...

    இவனுக்கு ஒருதடவை நல்லபுத்தி சொன்னேன். ஏதோ உலக கோடீஸ்வரர்களில் ஒருவன் மாதிரி பேசினான்... அத்துடன் நிறுத்திக் கொண்டேன்...

    அவன் தமிழ்நாட்டுக்காரன் என்பது சொல்லத் தக்கது..

    இப்போது அந்த அறையை விட்டு வேறிடம் வந்து ஐந்து நாட்கள் ஆகின்றன..

    ஆறு மாதத்தில் இரண்டு தடவை அறை மாற்றம்...

    நல்லவன் யாருக்கு வேண்டும்!..
    யார் அவனைச் சேர்த்துக் கொள்கிறார்கள்?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜூன் மாதத்தில் ஒருநாள் குடி வெறியில் பங்களாதேஷி ஒருவனை அடித்து விட்டான்... காக்காய்கள் ஒன்று சேர்ந்து விட்டன..//

      அடக் கடவுளே! துரை அண்ணா ஒரு காணொலி பரிவை சே குமார் பகிர்ந்த நினைவு. ஒரு ரூமில் கேரளத்தவர் என்று நினைக்கிறேன் ஒருவன் குடி வெறியில் மற்றொருவனுடன் சண்டையிட அடியில் அந்த மற்றவன் இறந்தே விட்டான்.

      பார்த்து மனது நொந்துவிட்டேன்.

      கீதா

      நீக்கு
  22. கதையாக அல்லாமல்
    நடந்த நிகழ்வாகவே கண் முன் தோன்றுகிறது

    பதிலளிநீக்கு
  23. சரியாக தமிழகத்தில் டாஸ்மாக் திறக்கப்படும் நன்னாளில் (!) இப்படி ஒரு குடிகாரன் கதை! Oh! what a coincidence!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஆமாம்ல! கீதாக்காவும் சொல்லிருக்காங்க அதுக்கு அப்புறம்தான் எனக்கும் தோன்றியது அட! என்று.

      மிக்க நன்றி கௌ அண்ணா

      கீதா

      நீக்கு
  24. வாத்துக்கள், சகோதரி! உங்களது கதை எழுதும் ஆற்றல் என்னைக் கவர்ந்தது. அதுவும் நமக்குத் தெரிந்த எழுத்தாளர்களாலேயே எழுதுவதற்கு நாதியற்றுப் போன ஒரு சமூகச் சூழலை மனதில் வரித்துக் கொண்டு அது பற்றித் தெரிந்த அனுபவபூர்வமான தகவல்களை கதைக்களமாகக் கொண்டு எழுதுவதற்கு ஒரு சமூக பிடிப்பு வேண்டும்.
    அது உங்களது வார்த்தைகளில் வெளிப்பட்டதை வாசிக்கும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது என்பது தான் இந்தக் கதைக்கான வெற்றி.

    ஒரே நபர் சொல்லும் கதையாக இருப்பதை உரையாடலில் கொஞ்சம் கொஞ்சம் நகர்த்தி (நீங்களும் சத்யாவுடனான உரையாடலில் அங்கங்கே முயற்சித்திருந்தாலும்)
    அந்த ஒரு நபர் விவரிப்பை தவிர்த்திருக்கலாமோ என்று தோன்றியது. இது அடுத்து எழுதப் போவதற்கான ஒரு சஜஷனே தவிர எழுதிய வரை இந்தக் கதையைப் பிரமாதப்படுத்தியிருக்கிறீர்கள் என்றே சொல்ல வேண்டும். அதற்காக ஸ்பெஷலான வாழ்த்துக்கள்.

    இத்தனைக்கும் இடையே அந்தக் கதை சொல்பவரை ஆணாக படைத்திராமல் ஒரு பெண்ணாக ஆக்கியிருந்தால் கதையோடு வாசிப்பவருக்கு இன்னும் கூடுதலான நெருக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்று ஒரு எண்ணம். இந்த மாதிரியான கதைகளில்
    ஆண்-- பெண் உதவுதல்கள் வேறு வகையில் கொச்சைப்படுத்தப்படாமல் தவிர்க்கப்படுவதே பெரிய காரியமாகிப் போகும். அதற்காகச் சொன்னேன்.

    உங்களது அடுத்த கதையை ஆவலோடு இதே பகுதியில் எதிர்பார்க்கிறேன். அன்பான வாழ்த்துக்கள், சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரே நபர் சொல்லும் கதையாக இருப்பதை உரையாடலில் கொஞ்சம் கொஞ்சம் நகர்த்தி (நீங்களும் சத்யாவுடனான உரையாடலில் அங்கங்கே முயற்சித்திருந்தாலும்)
      அந்த ஒரு நபர் விவரிப்பை தவிர்த்திருக்கலாமோ என்று தோன்றியது. இது அடுத்து எழுதப் போவதற்கான ஒரு சஜஷனே தவிர எழுதிய வரை இந்தக் கதையைப் பிரமாதப்படுத்தியிருக்கிறீர்கள் என்றே சொல்ல வேண்டும். அதற்காக ஸ்பெஷலான வாழ்த்துக்கள்.//

      மிக்க நன்றி ஜீவி அண்ணா. உங்கள் வார்த்தைகள் மிகவும் ஊக்கப்படுத்துவதாக இருக்கிறது. உங்கள் சஜஷனையும் நோட் செய்து கொண்டேன்.

      முதலில் பெண் சொல்வது போல்தான் எழுதியிருந்தேன் ஜீவி அண்ணா. அதன் பின் அது கீதாவாகி அது அனுபவ விவரணம் போலத் தோன்றிவிடுமோ என்பதால் ஆணாக மாற்றினேன். இதையும் குறித்துக் கொண்டேன் உங்கள் கருத்தை.

      இதோ இங்கும் அடுத்த வீட்டில் ஒரு குடும்பம். கொஞ்சம் தள்ளி மற்றொரு குடும்பம். எல்லாம் விளிம்பு நிலை மனிதர்கள். குடிகாரர் உள்ள வீடு. அந்த மற்றொரு குடும்பத்தில் உள்ள ஒரு பெண் அவரைப் பார்த்தால் மனது நொந்து விடும். பார்த்தாலே தெரியும் கொஞ்சம் மனநிலை பாதிப்பு உள்ளவர் என்று. இக்குழந்தைகளுடன் பழகி நாங்கள் முடிந்த அளவு கல்வி, நல்ல விஷயங்கள் செய்கைகள் எத்தனை முக்கியம் என்பதைக் கதைகளால் விளையாட்டுப் போக்கில் சொல்லி வருகிறோம். ஒரு பாக்கியம் அவர்களுக்குத் தமிழ் புரிகிறது எனக்குக் கன்னடம் இன்னும் பேசவரவில்லை!!!!!!!!!!! அவர்களிடம் எனக்குக் கன்னடம் கற்றுத் தரும்படி சொல்லி வருகிறேன்!!

      மிக்க நன்றி ஜீவி அண்ணா

      கீதா

      நீக்கு
  25. சத்நிபா போன்று பல பெண்களின் வாழ்க்கை தொடர்கதைதான். நல்லதொரு கதைக் கரு.

    பதிலளிநீக்கு
  26. கீதா குறை நினைச்சிட வேண்டாம், தாமதமானாலும் கதை படிச்சதும் பதில் போடுவேன் விரைவில்.

    பதிலளிநீக்கு
  27. சத்யா சீதாவானாலும் சுந்தரம் ராமனாக முடியாது! :)

    நல்ல கதை. பல குடும்பங்கள் இப்படி சீரழிந்து போவது இந்த போதையினால்! எத்தனை முறை தான் சீதா மன்னித்துக் கொண்டே இருப்பாள்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!