புதன், 5 ஆகஸ்ட், 2020

கட் அவுட்டுகளுக்கு பாலபிஷேகம் செய்வதில் என்ன தவறு?


பானுமதி வெங்கடேஸ்வரன் : 

ஒரு கலைஞனை நாம் வணங்கும் பொழுது அந்த தனி மனிதனை வணங்குவதில்லை, அவனுக்குள் இருக்கும் இறை சக்தியைத்தான் வணங்குகிறோம் என்பார்கள். அதன்படி பார்த்தால் சினிமா நடிகர்களின் கட் அவுட்டுகளுக்கு பாலபிஷேகம் செய்வதில் என்ன தவறு?



# கடவுளுக்குப் பால் அபிஷேகம் செய்வது நமக்கு மகிழ்ச்சி என்பதில் கருத்து வேறுபாடு இல்லை என்று நம்மில் பலர்  நினைக்கலாம். 

என்னை உட்காரவைத்து பாலபிஷேகம் செய்தால் அவர்களை நான் சபிப்பது உறுதி. பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தால் அடிக்கப் போய் விடுவேன். நான் மட்டும் தானா? 

அப்படி இருக்கும் போது, பாலை கட்டவுட் மேல் கொட்டி தெருவை நாற அடிப்பது எதிர்க்க அல்ல தண்டிக்கப் பட வேண்டிய நடவடிக்கை என்பது என் நினைப்பு.

கலைஞனை வணங்க வேண்டிய அவசியம் இல்லை.  ரசிக்கலாம், பாராட்டலாம், பட்டம் - பரிசளித்து கௌரவிக்கலாம்.  

கலையை வியாபாரமாக்குபவர் உண்மையான கலைஞர் அல்ல. அவர் வணிகர், கலை அவரது விற்பனைக்கான சரக்கு.

& என்னைக் கேட்டால் - கட்டவுட்டுகளுக்கு பால் அபிஷேகம் செய்வதைவிட, ரசிகப் பட்டாளங்கள், அந்தக் கட்டவுட்டுக்கு கீழே, ஒரு பெரிய பால் பாத்திரம் வைத்துக்கொண்டு, காய்ச்சிய பாலை அந்தப் பகுதிகளில் வாழ்கின்ற ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கலாம். சுற்றுச் சூழல் பாதிக்கப்படாது. பால் வீணாகாது, அந்த நடிகரை, ஏழை மக்கள் மனமார வாழ்த்துவார்கள். 


நெல்லைத்தமிழன்: 

கண்ணனைப் பெற்றதால் தேவகிக்குப் பெருமை அதிகமா இல்லை வளர்த்து அதை அனுபவித்ததால் யசோதைக்கு அதிகப் பெருமையா?

# யசோதையைக் குறித்து வழங்கும் பாடல்கள் அடிப்படையில் நாம் இப்படி நினைக்கிறோம்.  கண்ணனை வளர்த்து அவனது விளையாட்டு  "சேஷ்டிதங்கள்" முதலானவற்றை ரசிக்கும் பாக்கியம் தேவகிக்குக் கிட்டாமல் போயிற்றே எனும் ஆதங்கத்தில் வந்த பாடல்கள் இவை. 

ஈன்ற போதில் பெரிதுவக்கும் என்ற தொடர் இருக்கிறதே தவிர வளர்த்ததன் மேலும் உவந்ததாக சொல்வதில்லை.

பெற்றதால் வந்த பெரும் பேறோ பின் வளர்க்க உற்றாமை தந்த சலிப்போ இரண்டினுள் எற்றாலும் எஞ்சியதெதுவோ அறியோம் பராபரமே. 

கண்ணன் வளர்ந்த நாட்களில் தேவகி வசுதேவர் என்ன செய்தார்கள் எப்படி இருந்தார்கள் என்பன குறித்து இலக்கியச் செய்தி உண்டா, இருப்பின் அது என்ன என்று தெரியவில்லை.

& பட்டிமன்ற கேள்வி போல இருக்கு. வாசகர்கள், தேவகியா அல்லது யசோதையா யாருக்கு கண்ணனால் பெருமை என்று வாதிடலாம். தீர்ப்பு அப்புறம் சொல்கிறேன்.

நீங்கள் இந்தியாவில் பார்க்கணும் என ரொம்ப ஆவலாக நினைத்து இன்னும் பார்க்காமல் இருக்கும் இடம்(ங்கள்) என்ன?

# சிம்லா டார்ஜிலிங் முதலான இமயமலை சார்ந்த க்ஷேத்திரங்கள். அஜந்தா எல்லோரா, ஹம்பி, பாதாமி, மானசரோவர்....

& எந்த இடத்தையும் பார்க்க வேண்டும் என்று பெரிய ஆவல் எதுவும் இருந்ததாக / இருப்பதாகத் தோன்றவில்லை. ஆனால் தமிழ்நாட்டுக் கோயில்கள் பலவற்றிற்கும் சென்று தரிசனம் செய்துள்ளேன். ஒரு பயிற்சி வகுப்புக்காக அகமதாபாத் சென்று நான்கு நாட்கள் தங்கியிருந்தேன். காந்தியின் ஆஷ்ரமம் சென்று பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன். நேரமின்மை, மொழிப்பிரச்சனை காரணமாக பார்க்காமல் திரும்பிவிட்டேன். 

பணி ஓய்வுக்குப் இவைகளைச் செய்தால் வாழ்க்கையில் தொய்வு இருக்காது என எவைகளைச் சொல்லுவீர்கள்?

# ஆன்மீகத் தேடல், மனதிற்குப் பிடித்த பாராயணங்கள், ஸ்டாக் மார்கெட் நுட்பங்கள், ஏழைச் சிறுவர் சிறுமியருக்கு இலவச டியூஷன், பணித்தேடலில் இருப்போர்க்கு இலவச ஆலோசனை, அரசுப் பள்ளிகளில் இலவச ஆசிரியப் பணி, ஆர்வம் இருந்தால் அருகில் உள்ள ஆலயங்களில் இலவசப் பணி...
செய்வதற்கான விஷயங்கள் நிறைய உண்டு. ஆர்வம், வாய்ப்பு, அருகிலிருந்து ஆட்சேபம், ஆரோக்கியம், கூச்சம் இவை தடைகள்.

& தியானம், சமூக சேவை, blog எழுதுதல். 

=======================

மின்நிலா 011 எல்லோரும் படித்துவிட்டீர்களா? 

இல்லையேல் - இதோ உள்ளது சுட்டி, மீண்டும் உங்களுக்காக! 

======================
நீங்க கேட்ட கேள்விகள் அதிகம் இல்லாததால், இதோ நாங்க கேட்கிறோம் உங்களிடம். பதில் சொல்லுங்கள்:

1)  சமீபத்தில் நீங்கள் விலை கொடுத்து வாங்கிய, உங்களுக்குப் பிடித்தமான பொருள் எது?

2) வாழ்க்கையில், இதுவரை உங்களுக்கு வந்த பரிசுப் பொருள்களில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது, ஏன்?

3)  உங்கள் உயிர் நண்பர் ஒருவருக்கு ஐநூறு ரூபாய் பெறுமானமுள்ள ஒரு பொருளை நீங்க பரிசளிக்க விரும்பினால், அது எதுவாக இருக்கும்? 

====================

மீண்டும் சந்திப்போம்!

====================

109 கருத்துகள்:

  1. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்..

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
  2. ஒன்றுக்கும் உதவாத ஒருவனைத் திரைக் கலைஞனாக வடிவமைத்துக் கொடுப்பவர்களும் கலைஞர்கள் தானே!...

    அவர்களை ஏன் வணங்கி வழிபடுவதில்லை?..

    பதிலளிநீக்கு
  3. அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    நன்மையே எல்லோருக்கும் கிடைக்க இறைவனிடம் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  4. சத்தான கேள்விகள். ஆராய்ந்து சொன்ன பதில்கள்.

    நடிகர்களுக்கு செய்யும் பாலபிஷேகம் நான் மிகமிக வெறுப்பேன். இது என்ன அனாகரீகம் என்று தோன்றும்.
    பதிலில் சொல்லி இருப்பது போல,
    அந்தப் பாலைக் குழந்தைகளுக்குக்
    கொடுத்தால் நன்மைதான்.

    அதே போல பிடித்த நடிகருக்காகப்
    பணத்தை திரையின் மீது விட்டெறிவதைச் சாந்தினி
    என்ற படத்தில் பார்த்தேன்.

    ஏன் இந்த மோகம் என்று இன்று வரை புரிந்ததில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேலை இல்லாத இளைஞர்களின் நேரத்தை வேஸ்ட் செய்யும் வழி ரசிகர் மன்றம். அந்த ரசிகர்களை ஊக்குவிக்க நடிகர் போடுகின்ற சில எலும்புத்துண்டுகளுக்கு ஆசைப்பட்டு, அவரிடம் பணம் வாங்கி, கட்டவுட்டுக்கு பாலூற்றுவது இதெல்லாம்! தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்கும் இவ்வளவு முட்டாள்தனமான சம்பிரதாயம் இருக்கிறதா என்று தெரியவில்லை.

      நீக்கு
    2. நான் தீவிர ரஜினி ரசிகையென்றாலும் இந்த பாலாபிஷேகம் என்பது அபத்தம் என்றுதான் தோன்றுகிறது. நடிகர்கள் சமுதாயப் பொறுப்புணர்ந்து இச்செயலை அறவே ஒழிக்க வேண்டும் என்பது என் கருத்து.

      நீக்கு
  5. முதல் கேள்விக்கு ,எதுவும் வாங்கவில்லை
    என்பதே பதில். வாங்க நினைப்பது
    நல்ல தமிழ்ப் புத்தகங்களை.

    இரண்டாவது கேள்விக்குப் பதில்
    அது என் கணவர் எனக்காக வாங்கிய ரேடியோ,மற்றும் இசைத்தட்டுகள்.

    மூன்றாவது கேள்விக்கு,
    நண்பருக்குப் பரிசளிப்பதைவிட, அவரை அழைத்துச் சென்று அவருக்குப் பிடித்ததை வாங்கிக்
    கொடுக்கலாம் என்றே நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. ஜெய்ஸ்ரீராம்! இன்றைய தினத்திலிருந்தாவது கொரோனா என்னும் கொடிய அசுரன் ஒழிந்து போகப் பிரார்த்திப்போம். ஸ்ரீராமனும் அவன் சகோதரர்களும் நம்மைக் காத்து ரக்ஷிக்குமாறு பிரார்த்திப்போம். ஜெய்ஸ்ரீராம்!

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் நல்வரவு, வணக்கம், வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவரின் வாழ்விலும் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் பொங்கப் பிரார்த்தனைகள். நேற்றைய செய்தியில் தாக்கம் குறைந்து வருவதாகப் பார்க்க நேர்ந்தது. அது உண்மையாக இருக்கவும் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  9. என்னைப் பொறுத்தவரை நடிகரோ, எழுத்தாளரோ யாராக இருந்தாலும் அவர்களும் நம்மைப் போன்ற ஆசாபாசங்கள் நிறைந்த மனிதர்களே! ஆகவே அவர்களை வணங்குவது, குருவாக எடுத்துக்கொண்டு ஆலோசனைகள் கேட்பது எல்லாம் என்னைப் பொறுத்தவரை பிடிக்காத விஷயம். இந்தப் பாலபிஷேஹத்துக்குப் பதிலாக திரு கௌதமன் சொல்லி இருக்காப்போல் பாலைக் குடிசைகளுக்கும் நடைமேடை வாசிகளுக்கும் இலவசமாக விநியோகிக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆசாபாசங்கள் (அப்படீன்னாக்க என்ன மேடம்?) இல்லாத மனிதர் எங்கு உண்டு? நாம துடைப்பத்தில் உள்ள அழுக்கைப் பார்க்கக்கூடாது, அது சுத்தம் செய்கிறதா, நமக்குத் தேவையான வேலையைச் செய்யுதா என்றுதான் பார்க்கணும். சுத்தமான துடைப்பம் போன்ற ஒரு குரு தான் அமையணும் என்று நினைத்தால் நம் வாழ்க்கையில் அப்படிப்பட்ட குருவை காண இயலாது போகும் வாய்ப்பு உண்டு.

      நீக்கு
    2. //நம்மைப் போன்ற ஆசாபாசங்கள் நிறைந்த மனிதர்களே!// ஒழுங்காப் படிக்க வேண்டாமோ? எல்லோருக்கும் ஆசாபாசங்கள் இருப்பதாகத் தான் சொல்லி இருக்கேன். ஆனால் குரு என்பவர் தனி! நீங்க சொல்ற மாதிரி குரு நிச்சயம் இருப்பார்/இருக்கார்/கிடைப்பார்/கிடைத்தார்.

      நீக்கு
  10. தேவகி, யசோதை பற்றி எழுத ஆரம்பித்தால் பதிவாகிவிடும். இந்தியாவில் சிம்லா, டார்ஜிலிங் போனதில்லை. இத்தனைக்கும் அவற்றுக்கு வெகு அருகே பிரயாணங்கள் செய்தும்! அதே போல் கர்நாடகாவில் பல இடங்கள் சுற்றியும் ஹம்பியும், பதாமியும் போக நேரவில்லை. ஹம்பிக்குக் கிட்டவே பிரயாணம் செய்திருக்கோம். ஆனால் ஹம்பி போக முடியவில்லை. இது ஓர் நிறைவேறாத ஆசை.

    பதிலளிநீக்கு
  11. சபர்மதி ஆசிரமம் 2,3 முறை போனோம். ஆனால் நாங்க அங்கிருந்து வந்த பின்னர் கட்டப்பட்ட அக்ஷர்தாம் போனதில்லை. சமீபத்தில் 2,3 வருடங்கள் முன்னர் அஹமதாபாத் போனப்போ ஏற்பட்ட சில மனக்கசப்பான நிகழ்வுகளால், மனிதர்களின் நடத்தையால் எங்கும் சுற்றிப் பார்க்கும் மனோநிலை இல்லை. திரும்பிட்டோம். அந்தப் பயணம் குறித்து எழுதவும் இல்லை. :(

    பதிலளிநீக்கு
  12. 1. சமீபத்தில் எதுவும் விலை கொடுத்து/விலை கொடுக்காமல் புதிய பொருள் வாங்கவே இல்லை. தேவை இருக்கணுமே! அதற்கான பயன்பாடும் இருக்கணும். இல்லைனா எந்தப் பொருளையும் வாங்கச் சம்மதிக்க மாட்டேன்.

    2. என் கணவர் 80களின் கஷ்டமான சமயத்தில் வாங்கிக் கொடுத்த ஹெச்.எம்.டி. கைக்கடியாரம். கீ கொடுக்கும் கடியாரம். இன்னமும் வைச்சிருக்கேன். ஓடுகிறது.

    3. 500 ரூபாயைக் கொடுத்து என்ன வேண்டுமோ வாங்கிக்கோங்க என்று சொல்லிடுவேன். நமக்குப் பிடித்தது அவங்களுக்கும் பிடிக்கணுமே.

    பதிலளிநீக்கு
  13. பானுமதி மேடத்தின் கேள்விக்கான பதில் அருமை ஜி.

    //சினிமா நடிகர்களின் கட் அவுட்டுகளுக்கு பாலபிஷேகம் செய்வதில் என்ன தவறு ?//

    மேடம் இந்தக்கேள்வி நியாயம்தானா ? இறையும், கூத்தாடியும் ஒன்றா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் சும்மா வம்புக்காகத்தான் கேட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்!

      நீக்கு
    2. தனக்கு பிடித்தமான கூத்தாடியின் பதாகைக்கு பாலாபிஷேகம் செய்யும் வெறியர்கள்.

      அதே பணத்தை டிக்கெட் எடுத்து கொடுத்து படம் பார்க்க சொல்லலாமே....

      இவனுகளை பிடித்து துபாய்க்கு அனுப்பணும் வாழ்க்கை புரியும்.

      நீக்கு
    3. அன்பின் ஜி..

      இந்த மட்டுக்கு சந்தோஷம்.. ஆனாலும்,
      திருக்கை வாலை எடுத்து வீசி அடிப்பீர்கள் என்று நினைத்தேன்...

      கூடிய விரைவில் தங்கள் தளத்தில் சாட்டியடிப் பதிவு ஒன்றைப் போடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.. நன்றி..

      நீக்கு
    4. //அவர் சும்மா வம்புக்காகத்தான் கேட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்!// எஸ், நோ. கட் அவுட்டுகளுக்கு பால் அபிஷேகம் செய்பவர்களின் மனோ நிலையை என்னால் புரிந்து கொள்ள முடிந்ததில்லை. அதைத் தெரிந்து கொள்ள  ஆசை.  பாடகர் ஜேசுதாஸிடம் ஒரு முறை," கச்சேரி முடிந்தவுடன் உங்கள் கால்களில் விழுபவர்களை நீங்கள் ஏன் தடுப்பதில்லை?" என்று கேட்டபொழுது "அவர்கள் என்னை வணங்கவில்லை, எனக்குள் இருக்கும் தெய்வீகத்தை வணங்குகிறார்கள்" என்றார்.  எனக்கு ஒரு தெளிவு கிடைக்கவே இதை கேள்வியாக்கினேன்   

      நீக்கு
    5. நடிகர்களுக்கும், சங்கீதத்தால் ராகதேவதையை மகிழ்விக்கும் சங்கீத மேதைகளுக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் இருக்கு. ஜேசுதாஸ் போன்றவர்களை வணங்குவது வேறு. நடிகர்களை வணங்குவது வேறு.

      நீக்கு
    6. கீதா சாம்பசிவம் அவர்களின் கருத்து ஸூப்பர் உண்மையான வார்த்தை.

      சங்கீத உணர்வு பெறுவதற்கு இறையின் கிருபை வேண்டும்.

      திரைப்படக் கூத்தாடி ஆவதற்கு பணிருந்தால் போதும்.

      நீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    வழக்கம் போல் கேள்வி பதில்கள் சிறப்பு.

    திரைப்படங்கள் மக்களின் மனதில் ஏற்படும் சோர்வையகற்றி மனம் உற்சாகமுறும் பொழுது போக்கிற்காக உண்டாக்கப்பட்டவை. அதில் நடிப்பவர்கள் அனைவருமே திறமைசாலிகள்தான். ஏனெனில் நடிப்பு என்பது ஓர் கலை. அந்த கலை எல்லோருக்கும் எளிதில் வந்து விடாது. அதற்கும் அதிர்ஷ்டம் என்ற ஒன்றை பெற்றிருக்க வேண்டும். நாம் அவர்களின் நடிப்புத்திறனை புகழ்ந்து மனமாற பாராட்டி வாழ்த்த வேண்டும். ஆனால், போற்ற வேண்டுமென்பதில்லை. பாலாபிஷேகம் என்பது அந்நாளிலிருந்து கடவுள்களுக்கு மட்டுமே செய்து வருவது. உணவுப் பொருளை வீணாக்காமல் நீங்கள் பதிலில் கூறுவது போல் அனைவருக்கும் பசியாற கொடுத்தால் அந்தந்த நடிகர்களின் புகழும் பரவுமே..! ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  15. கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வதில் என்ன தவறு? யார்மேலோ கோபம் கொண்டு சேகரித்த பால் அனைத்தையும் தெருவில் கொட்டுவதில் என்ன தவறு (கிராமத்துல சொல்லுவாங்க.. குளத்து மேல கோபிச்சுக்கிட்டு கு கழுவாம போனான் என்று). பக்திப்படம் போட்டபோது (ராகவேந்திரா) மதுரைல படம் பார்க்க வரும் அனைவரும் பெரிய தாம்பாளத்தில் வைத்திருந்த பாலில் காலை நனைத்தாலொழிய தியேட்டருக்குள் செல்லமுடியாது என்பதுபோல் வைத்தது........... - அவங்க அவங்களோட எண்ணத்தை இந்தச் செயல்களின் மூலம் செய்யறாங்க. அன்பை வெளிப்படுத்துவதா நினைக்கறாங்க...... நம்மில் பலர் கடவுளுக்கு பாலாபிஷேகம், போட்டோவுக்கு புடவை கட்டிவிடுவது போன்றவைகளைச் செய்வது போன்று.

    எதைச் செய்தாலும் ஒவ்வொருவருடைய அடிப்படைக் கடமைகளை மறக்காதவரை, அடிப்படை மனித உணர்வை வெளிப்படுத்தும்வரை, பிறகு தங்கள் அன்பு, பக்தியைச் செய்தால் அதில் நாம் குறைகாண முடியாது.

    பெற்றோர்களை விரட்டியடித்துவிட்டு, வீட்டருகிலோ இல்லை நாம் பார்க்கும்படியாக வரும் ஏழை ஏதிலிகளை, ஏழைக் குழந்தைகளைக் கண்டுகொள்ளாமல் கடந்துவிட்டு பாலாபிஷேகம், தேனாபிஷேகம் பண்ணுவதால் என்ன திருப்தி கிடைத்துவிடும்?

    பதிலளிநீக்கு
  16. எனக்கும் இமயமலை, பத்ரி அதற்கும் மேலே உள்ள கோவில்கள், ஆன்மீக இடங்களைத் தரிசிக்கணும் என்ற எண்ணம் உண்டு. காலம் கடக்கும் வேகத்தைப் பார்த்தால் இந்தப் பிறவியில் அமையுமா என்ற சந்தேகம் வருகிறது. வெங்கட்டுக்கு, நான் செல்ல விரும்பிய சில தலங்களைத் தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது என் ஆவலை இன்னும் தூண்டுவதாக உள்ளது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட் அவர்களின் பயண அனுபவக் கட்டுரைப் புத்தகங்கள் அந்த இடங்களைப் பற்றி அறிந்துகொள்ள உதவுவதோடு, அங்கு செல்ல திட்டமிடுபவர்களுக்கும் ஒரு வழிகாட்டியாக உள்ளன. அவர் எழுதிய வைஷ்ணோ தேவி ஸ்தல யாத்திரை புத்தகம் தற்போது படித்துக் கொண்டிருக்கிறேன்.

      நீக்கு
  17. நண்பனுக்கு பரிசளிக்க நினைத்தால், நான் படித்து இன்புற்ற ஆன்மீகப் புத்தகம் (அவங்க எண்ணவோட்டம் தெரியும் என்பதால்) அல்லது ரசனைக்கேற்ற புத்தகம் பரிசளிப்பேன்.

    பதிலளிநீக்கு
  18. நானும் அத்தகைய புத்தகப் பரிசையே (நினைவிருக்கட்டும்... கச்சா முச்சான்னு அவங்க அவங்க எழுதின புத்தகங்களை அல்ல). மிகவும் விரும்புவேன். ஒரு புத்தகம் படிக்க என் நேரத்தைச் செலவு செய்கிறேன். அது எனக்கு பன்மடங்கு நேரத்துக்கான அனுபவத் துளிகளைத் தரணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! அகல்ப அனுபவ பூர்வானாம் மகா ஷ்ரேயஸ் ஆத்மானுபவ சிந்தானாம் லோகோனாம் பரமம் பவித்ரம்.

      நீக்கு
  19. என்னது கலைஞனுக்குள் இறை சக்தியெல்லாம் கண்டுபிடித்து விட்டார்களா...? அருமை :- ரசிகன் வேறு; வெறியன் வேறு...

    1) 2) 3) :-
    வாழ்வதற்கு பொருள் வேண்டும்...
    வாழ்ந்ததற்கும் பொருள் வேண்டும்...

    அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
    இவ்வுலகம் இல்லாகி யாங்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வாழ்வதற்கு பொருள் வேண்டும்...
      வாழ்ந்ததற்கும் பொருள் வேண்டும்...// ரைட்! வாழ்க்கையின் பொருள் தெரியாதவர்கள்தான் இப்படி கட் அவுட் வைத்து சீரழிவார்கள், சரியா?

      நீக்கு
    2. அநேகமாகப் பெற்றோரை நச்சரித்துப் பணம் வாங்கித் தான் கட் அவுட்டுகளுக்குப் பாலபிஷேஹம் பண்ணுவார்கள்/பண்ணுகிறார்கள்/பண்ணினார்கள். பொருளாதாரக் கஷ்டம் தெரியாதவர்களே இப்படி எல்லாம் நடந்துப்பார்கள்.

      நீக்கு
  20. 1. எதுவுமில்லை. வீட்டுக்குத் தேவையான வெஞ்சன சாமான்கள்தான்!!!!!!!! பொதுவாக நான் பொருள் வாங்குவதற்கு ரொம்பவே யோசிப்பேன். தேவையில்லாமல் அதுவும் எனக்கென்று வாங்கும் வழக்கமும் இல்லை.

    2. பொதுவாகப் பரிசுப் பொருட்கள் பெறுவதைத் தவிர்ப்பது வழக்கம். கூடியவரை மறுப்பேன். அழுத்திச் சொல்ல முடியாத இடங்களில் கூச்சம் எழும் பெறுவதில். தர்மசங்கடமா இருக்கும். புத்தகங்கள் என்றால் மறுப்பு சொல்வது டைல்யூட் ஆகிடும் ஹா ஹா ஹா. ஸ்ரீராம், வெங்கட்ஜி, பானுக்கா, ரஞ்சனி அக்கா, ஜி எம் பி சார், கில்லர்ஜி, ராயசெல்லப்பா சார், இன்னும் இரு வலைப்பதிவர்கள் கொடுத்த புத்தகங்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஶ்ரீராம் புத்தகம் கொடுத்தாரா? அவர் எதை வேணும்னாலும் கொடுப்பார், புத்தகங்களை கண்ணில் காண்பித்துவிட்டு பிறகு பீரோவில் வைத்துப் பூட்டிவிடுவார் என்பதுதான் அவர்மீது நான் கொண்டிருக்கும் அபிப்ராயம். (பொதுவா புத்தகம் அப்புறம் இன்னொண்ணு... வெளில போனா நமக்கு மீண்டும் கிடைக்காது என்பார்கள்)

      நீக்கு
    2. நாராயணா...   நாராயணா...   கீதா...  என்ன இது?  நானென்ன புத்தகம் கொடுத்தேன்?  சொல்லுங்கள்...   அப்பா எழுதிய புத்தகம்தானே அது?

      நீக்கு
    3. தி/கீதா, நீங்க மேலே சொன்ன யாரும் எனக்கு எந்தப் புத்தகங்களும் (க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) பரிசளிக்கவில்லை. எங்கள் ப்ளாக் போட்டி ஒன்றில் கிடைத்த பரிசாக கௌதமன் சார் ஒரு புத்தகம் ரேவதி மூலம் அனுப்பி வைத்தார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அம்பத்தூர் தூரக்க இருக்காம். வர முடியாதுனுட்டார். அநியாயம்! அதைத் தனியா வைச்சுப்போம். இன்னொரு புத்தகம் எங்கள் ப்ளாக் சார்பாக ஸ்ரீராம் அப்பா எழுதினது ஸ்ரீராமோட அண்ணா மதுரையிலிருந்து அனுப்பி வைச்சார். ஸ்ரீராம் வீட்டுக்குப் போனப்போ அவர் நூலகத்திலிருந்து 2,3,4? பழைய புத்தகங்களைத் தூக்கி வந்தேன். இன்னும் என்னிடம் தான் இருக்கு! பொழுது போகாதப்போத் திரும்பத் திரும்பப் படிச்சு மனப்பாடம் பண்ணுவேன். மத்தபடி வெங்கட்ஜி, பானுக்கா, ரஞ்சனிக்கா, கில்லர்ஜி, ராய.செல்லப்பா ஆகியோர் எந்தப் புத்தகமும் கொடுக்கலை. ஜி.எம்.பி. அவரோட புத்தகம் ஒண்ணு கொடுத்திருக்கார். அதைவிடப் பெரிதாக அவர் வரைந்த குட்டிக் கிச்சா படம் எனக்குக் கூரியரில் அனுப்பி வைச்சார். அதுவும் ஏதோ கதை எழுதினதுக்குக் கிடைச்ச பரிசு. இன்னிக்கு ஏடிஎம் ஒரு பரிசு அனுப்பி வைச்சிருக்காங்க!

      நீக்கு
    4. கொடுத்துக் கொடுத்து கை சிவந்தவர், நம்ம வை.கோ. சார் தான். இந்த மாதிரி பரிசளிப்பு பற்றி பேச்சு வரும் பொழுதெல்லாம் அவர் ஞாபகம் வர வேண்டாமா?..
      ஜனங்க பழசையெல்லாம் மறந்திடறாங்க, பாருங்க...

      நீக்கு
    5. //பழைய புத்தகங்களைத் தூக்கி வந்தேன். இன்னும் என்னிடம் தான் இருக்கு!// - அப்புறம் எப்படி ஸ்ரீராம் புத்தகங்கள் தருவார்? எனக்கு பைண்ட் செய்யப்பட்ட பழைய குமுதம் தொடர்கதையோ விகடன் தொடர்கதையோ வேணும். பழைய குமுதம் இதழ்கள் எங்க கிடைக்கும்னும் தகவல் சொன்னா நல்லது (70-80)

      நீக்கு
    6. ஜீவி சார்... கோபு சார், பணத்தைக் கொடுப்பதைவிட, அதை விசிறியாகச் செய்து அழகாகத் தருவார். உண்மையாகவே இந்த மாதிரி பரிசு கொடுத்து மகிழ்வதில் அவர் தனிதான். அதுமட்டுமல்ல, நல்ல உபசரிப்பாளர்.

      இப்போ என்னவோ வானப்ப்ரஸ்தம் போன மாதிரி இணையம் பக்கமே வருவதில்லை. நானும் நிறைய தடவைகள் சொல்லிப்பார்த்துவிட்டேன்.

      நீக்கு
    7. ஆமாம் ஜீவி சார், அவர் பரிசளிப்பு மிகச் சிறப்பானது தான். எனக்கும் நிறையப் பரிசுகள் வழங்கி உள்ளார். அவர் ஞாபகம் வரலைனு இல்லை. இங்கே குறிப்பிட்டவர்களைப் பற்றி மட்டும் சொன்னேன்.

      நீக்கு
    8. நெல்லை, அதுக்கப்புறமா ஸ்ரீராமை நான் பார்த்தப்போப் புத்தகங்கள் பற்றி நினைவில் இல்லை. உண்மையில் எனக்குக் கொடுக்க எடுத்து வர வேண்டிய புத்தகம் பற்றியும் அதை மறந்துட்டது பற்றியும் பேசிக் கொண்டார்கள்.அதன் பின்னர் சந்திச்சப்போ எங்க குட்டிக் குஞ்சுலுவின் காது குத்து அன்று. அன்னிக்கு இதெல்லாம் நினைப்பிலேயே இல்லை. ஆனால் ஸ்ரீராம் எப்போ வந்தாலும்/பார்த்தாலும் எடுத்துக் கொடுக்கிறாப்போல் வைச்சிருக்கேன்.

      நீக்கு
    9. //குட்டிக் குஞ்சுலுவின் காது குத்து // - இதை என்னால் மறக்க முடியாது. நான் பஹ்ரைன்ல. என் மனைவியை அட்டெண்ட் பண்ணச் சொல்லலாம்னு நினைத்தேன். ஆனா ஒரு அர்ஜெண்ட் விஷயமாக-என் ஹெல்த் பிரச்சனைனால, மனைவியை உடனே பஹ்ரைன் வரச்சொன்னேன். திரும்ப நாங்க இருவரும் வருவதற்கு ஒரு மாதமாகிவிட்டது. அவள் பஹ்ரைன் வந்த அடுத்த வாரம்தான் கு கு வின் காதுகுத்து.

      நீக்கு
    10. ////குட்டிக் குஞ்சுலுவின் காது குத்து // //

      நான், என் பாஸ் சென்று வந்தோம்.   அநியாயம் என்ன என்றால் கீதா அக்கா என்னை கவனிக்காமல் (அடையாளம் தெரியாமல்) தாண்டிச் சென்று விட்டு, என் பாஸை பார்த்ததும், பெயர் சொல்லிக் கூப்பிட்டு ஸ்ரீராம் எங்கே என்று கேட்டதுதான் ஹைலைட்!   கீதா ரெங்கனும் வந்திருந்தார்.  ஒரு பாடல் பாடினார்.

      நீக்கு
  21. பானுக்காவின் கேள்விக்குப் பதில்கள் சூப்பர் இரண்டுமே.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கட் அவுட் சமாசாரம் மனோ தத்துவம் சம்பந்தப்பட்டது என்று நினைக்கிறேன். Attention seeking disorder? கீதா ரெங்கன் மனோ தத்துவப்படி விளக்குவார் என்று எதிர்பார்த்தேன்.  

      நீக்கு
    2. எதுக்குத் தான் மனோதத்துவம் என்று ஒரு விவஸ்தை கிடையாதா?..

      படம் ஓடுவதற்கான பந்தாக்கள் இவை. சம்பந்தப்பட்ட நடிகர்கள் சம்பந்தப்படாத ஏற்பாடுகள் இவை என்பதை மட்டும் ஓரளவு யூகிக்கலாம்.

      நீக்கு
    3. //கட் அவுட் சமாசாரம் மனோ தத்துவம்// - சோழியன் குடுமி சும்மா ஆடுமா? இவங்க ரசிகர் மன்றம் என்ற போர்வையில், ஒன்று நடிகர் கிட்ட இருந்து கறப்பாங்க. இல்லைனா, மன்றத்துக்கான முதல் காட்சி என்ற பெயரில் டிக்கெட்டுகள் நிறைய வாங்கி, அதை விற்று பணம் பார்ப்பாங்க.

      முன்னமாதிரி கட்சித் தொண்டர்கள், நடிகர்களுக்கு ரசிகக் குஞ்சுகள்லாம் இந்தக் காலத்துல கிடையாது. டப்பு வெட்டு, செலவழிப்போம், அல்லது 500 ரூபாய்/பிரியாணி என்று லாபம் இல்லாமல் ஒரு வேலையும் செய்ய மாட்டாங்க. எதிலும் இருப்பதுபோல எக்ஸெப்ஷன் உண்டு.

      நீக்கு
    4. Attention seeking disorder? கீதா ரெங்கன் மனோ தத்துவப்படி விளக்குவார் என்று எதிர்பார்த்தேன். //

      ஸாரிக்கா....இப்படித்தான் சில நாட்கள் ஆகிறது. சொல்ல நினைப்பதைச் சொல்லாமல் செல்வது என்பது!!!! பானுக்கா நீங்கள் சொல்லியிருப்பதில் ஓரளவு சரியே. இன்று இதற்கு இன்னும் சில எழுத நினைத்து எழுதாமல் போய்விட்டேன்.

      அதே போல வெங்கட்ஜி தளத்திலும். ஹிஹிஹி என்னவோ

      கீதா

      நீக்கு
    5. அது ASD இல்லை - ASS ! Attention Seeking Syndrome! Ass தான் பொருத்தமான சுருக்கம்!

      நீக்கு
  22. சுற்றுலா என்பது எனக்கு மிக மிகப் பிடித்த விஷயம். ஒரு கேமராவும், சுற்றிப்பார்க்க வாவ்ய்ப்பும் கிடைத்தால் போதும்!!! உடையோ, நகையோ எனக்குத் தேவையே இல்லை. அதில் ஆசையும் சுத்தமாக இல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
  23. எனக்கு ரிஷிகேஷும் பார்க்க வேண்டும். ஹம்பி யும் பார்க்க வேண்டும். என் பெண்கள் இருவரும் அவர்கள் பள்ளி காலத்திலேயே சென்று வந்து விட்டார்கள். அவர்கள் புகழ்ந்த புகழ்ச்சி மேலும் ஆர்வத்தை தூண்டுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் இன்னும் சென்னையையே முழுசாகப் பார்க்கவில்லை!

      நீக்கு
    2. நான் இன்னும் குரோம்பேட்டையையே முழுவதுமாகப் பார்க்கவில்லை!

      நீக்கு
    3. நான் இன்னும் இந்தக்குடியிருப்பு வளாகத்தையே முழுதுமாகச் சுற்றிப் பார்த்தது இல்லை. உண்மையாகவே! :))))))))

      நீக்கு
    4. நான் இன்னும் எங்கள் வீட்டையே சுற்றிப் பார்க்கவில்லை  என்று யாராவது சொல்லுங்கப்பா. 

      நீக்கு
    5. நான் இன்னும் எங்க வீட்டையே சுற்றிப்பார்க்கவில்லை. (ஆமாம் - வீட்டை ஒட்டி இரண்டு பக்கங்களிலும் மற்ற வீடுகள் இருந்தால், எப்படி நம் வீட்டை மட்டும் சுற்றிப்பார்க்க முடியும்!)

      நீக்கு
    6. ஹாஹா நான்  இன்னும்  attic /loft பக்கம் ஏறிபார்த்ததில்லையே :) 

      நீக்கு
  24. இந்தியாவுக்குள் நான் பார்க்க விரும்பும்  இடங்கள் பத்திரிநாத், காஷ்மீர், கோனார்க், உடுப்பி, தர்மஸ்தலா, தலைக்காவேரி, கூர்க், திருவாரூர், சிக்கல், எட்டுக்குடி, எண்கண், திருமீயச்சூர் என்று ஒரு பெரிய லிஸ்ட் இருக்கிறது. வெளிநாடுகள் என்றால் கனடாவுக்குச் செல்ல விரும்புகிறேன்.  லண்டன், பிரான்ஸ், ஸ்விடச்சர்லாண்ட்,ரோம்,ஆம்ஸ்டர்டாம்  போன்ற ஊர்களுக்கு ஒரு சுற்றுலா போக ஆசை.   

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஷ்மீர், தலைக்காவிரி, கூர்க் தவிர்த்த மற்ற இடங்களுக்கு எல்லாம் போயிட்டு வந்தாச்சு. அஜந்தா, எல்லோரா அனுபவங்கள் எல்லாமும் எழுதிட்டேன். லண்டன் போக ஒரு ஆசை! ஆனால் கிடைக்குமானு சந்தேகம். எங்க பையர் ஐரோப்பியச் சுற்றுலாவில் மேற்கண்ட இடங்கள் எல்லாம் போயிட்டு வந்துட்டார். உங்களுக்குச் சாப்பாடுப் பிரச்னை இருக்கும்னு சொன்னார்.

      நீக்கு
    2. கீசா மேடம்.. முதன் முதல்ல லண்டன் ஹீத்ரூல காலடி வச்சபோது, எங்களை ஆண்ட மண்ணுக்கே நான் வந்திருக்கிறேனே என்ற ஒரு பெருமிதம் மனசுல தோன்றியது. அங்கு நமக்கு சாப்பாட்டுப் பிரச்சனை இருக்காது. நான் ஒரு வாரம்லாம் பலமுறை தங்கியிருக்கேன். பழம் (ஸ்ட்ராபெர்ரி, ஆரஞ்சு, ஆப்பிள்), ப்ரெட், ஃப்ளேவர்ட் மில்க் இவைகளை வைத்து காலம் ஓட்டியிருக்கேன். மி.பொடி தடவின இட்லி கொண்டுபோனேன்னா, அங்க போய்ச் சேரும்போது ரொம்பக் குளிர்ந்து ருசியே இருக்காது. ஆனால் அரிசி உப்புமா ரொம்ப நல்லா இருக்கும். நான் எப்போதும் முதல் நாள் திகைக்கக்கூடாது என்று கொண்டு போயிடுவேன். நிச்சயம் ஒரு ஊறுகாய் பாட்டில் வைத்துக்கொள்வேன் (காரம் வேணும்னு தோணும்போது ப்ரெட்டுடன் எலுமி ஊறுகாய் வைத்துச் சாப்பிட்டுக்கொள்வேன்).

      மற்றபடி சீதா டிராவல்ஸ் என்று பல, இந்தியர்களுக்காக வெஜ், ஜெயின் உணவு எல்லாம் தர்றாங்கன்னு படித்திருக்கிறேன்.

      லண்டன்ல நிறைய இடங்களைப் பார்த்திருக்கிறேன், அவங்க ராஜ்யசபை முதல்கொண்டு. ஆனா அங்க மட்டும்-ராஜ்யசபையில் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை :((

      நீக்கு
  25. நான் சமீபத்தில் வாங்கிய பொருள்: பேத்தியின் பிறந்தநாளுக்கு frock! அமேசானில் வாங்கினேன். 

    பதிலளிநீக்கு
  26. நான் பெரும்பாலும் புத்தகங்கள்தான் பரிசளிப்பேன். புத்தகங்களை விரும்பாதவர்கள் என்றால் பணத்தை கவரில் போட்டு கொடுத்து விடுவேன். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாராவது பணத்தை வாங்கிப்பாங்களா? இது தெரியாமல், நான் உபநயனத்தின் போது, வாங்கின வேஷ்டி புடவைகள் பத்தவில்லை என்று கவரில் பணம் போட்டுக் கொடுத்தேன். ரொம்ப ஆசாரமான என் கஸின், என்னிடம், எப்போதுமே பணம் தரக்கூடாது, வேஷ்டியோ புடவையோ பிறர் தரும்போது வாங்கிக்கொள்ள சாஸ்திரம் அனுமதிக்கிறது என்றார்.

      நீக்கு
    2. பணமும் வைச்சுக்கொடுக்கிறது உண்டே நெல்லை. ஏதேனும் செலவுக்கு ஆகும், அல்லது அவங்களுக்குப் பிடிச்சதை வாங்கிக்கலாம்னு வைச்சுக் கொடுப்பது உண்டு. நான் அநேகமாகப் புக்ககத்து உறவினர்களுகுப் பணமாகவே கொடுப்பது வழக்கம். நாம துணி வாங்கினால் பிடிக்கணும்.

      நீக்கு
  27. கேள்விகள், அதற்கு பதில்கள் எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு
  28. சமீபத்தில் விலை கொடுத்து வாங்கிய பொருள் என்றால் என் மகனுக்கு இங்கு வருவதற்கு வாங்கிய ஃப்ளைட் டிக்கெட்.

    அன்பளிப்பு என்பது அவரவர்க்கு என்ன தேவை என்பதைத் தெரிந்து கொண்டு வாங்கிக் கொடுப்பதுண்டு. பணம் தேவை என்றால் பணமாகக் கொடுப்பதுண்டு. பொதுவாக எங்கள் பக்க கல்யாணங்களில் அன்பளிப்பு கொடுக்கும் பழக்கம் இல்லை.

    கேள்விகளுக்கான பதில்கள் அருமை. அதுவும் முதல் கேள்விக்கான பதில்களை மிகவும் ரசித்தேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  29. //ஒரு கலைஞனை நாம் வணங்கும் பொழுது அந்த தனி மனிதனை வணங்குவதில்லை, அவனுக்குள் இருக்கும் இறை சக்தியைத்தான் வணங்குகிறோம் என்பார்கள்.//

    ஸ்ஸ்ஸ்ஸ் எல்லா சாமிகளும் எனக்கு பொறுமையை சாந்த குணத்தை தரணும்னு வேண்டிக்கிறேன் :))))@பானுக்கா இப்போ உங்க கேள்வி எனக்கு ஒரு கேள்வியை கொடுத்திருக்கு :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீழே கேட்டுட்டேன் :)
      நிறைய ஏக்குமாக்கா வந்தது அதில் பாதியை விட்டுட்டேன் :)

      நீக்கு
  30. 1, கலைஞன் என்பவன் (ர் ) யார் ?
    2, இறைசக்தி எப்படிப்பட்ட கலைஞர்களுக்குள் வரும் ?
    3,நின்டென்டோ switch இந்தியாவில் வந்திருக்கா ? விளையாடி இருக்கீங்களா ?
    4,நமக்கு பிடிச்சவங்க நல்லவர்களாகவும் பிடிக்காதவங்க கெட்டவர்களாகவும் இருக்கிறார்களே இது எப்படி ?


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 4வது கேள்விக்கு, இந்தியாவில் இருந்தீங்கன்னா, 'வேண்டாத மருமகள் கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம்' என்று ஏன் சொல்றாங்கன்னு கேட்டிருப்பீங்களோ?

      நீக்கு
    2. எங்க மாமியார் கல்யாணத்துக்கு முன்னாடியே சாமிகிட்ட போய்ட்டாங்களாம் ..ஆனாலும் அவர் ரெம்ப அமைதின்னு கேள்வி :)அதுவும் அவர் பிள்ளைங்களுக்கு அவர் குணம் வந்திருக்கு ஹஆஹாஆஆ .ஆகவே மாமியார் கேள்வி கேட்க மாட்டேனே 

      நீக்கு
    3. கேள்விகள் கேட்டதற்கு நன்றி. பதில்கள் அளிப்போம்.

      நீக்கு
    4. இந்த மாமியார்-மருமகள் விரோதம் தமிழ்நாட்டில் மட்டும் தான் அதிகமோ? மற்ற மாநிலங்கள்/நாடுகளில் இருந்தாலும் பெரும்பாலும் அங்கெல்லாம் மாமியார்-மருமகன் பிரச்னையே அதிகம்னு தோணுது.நீங்க என்ன சொல்றீங்க?

      நீக்கு
    5. இதற்கும் பதில் அளிப்போம்.

      நீக்கு
  31. 1)  சமீபத்தில் நீங்கள் விலை கொடுத்து வாங்கிய, உங்களுக்குப் பிடித்தமான பொருள் எது?
      விலை கொடுத்து வாங்கினேன் நின்டென்டோ ஸ்விட்ச் ஆனா அது மகளுக்கு :) அவள் சந்தோஷமா இருந்ததால் எனக்கு பிடிச்சிடுச்சி .விலை  சொல்லனுமா ??  எனக்கே ஏற்புடையதில்லாத விலை அது :) 
     2) வாழ்க்கையில், இதுவரை உங்களுக்கு வந்த பரிசுப் பொருள்களில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது, ஏன்?
         ஒரு பைபிள் வசன போட்டோ பிரேம் . அது என் கணவர்  கணவராகுமுன் கொடுத்தது எங்கள் என்கேஜ்மென்ட் நேரத்தில் .ஏனென்றால் அதில் இருந்த வசனம் // I will never leave thee, nor forsake thee//

     3)  உங்கள் உயிர் நண்பர் ஒருவருக்கு ஐநூறு ரூபாய் பெறுமானமுள்ள ஒரு பொருளை நீங்க பரிசளிக்க விரும்பினால், அது எதுவாக இருக்கும்?
    ஐநூறு ரூபாய் பெருமானம்னா நம்மூர் பொருட்கள் என்ன கிடைக்கும்னு எனக்கு தெரில .அத்துடன் உயிர் நட்புல்லாம் எனக்கில்லை எல்லாருமே நட்புதான் :)          500 ரூபாயை பவுண்ட்ஸில் மாத்தினா 5 பவுண்ட் 8 பென்ஸ் வருது வேணும்னா ஒரு பாட்டில் நிறைய ஜெல்லி பீன்ஸ் மிட்டாய் வாங்கி எங்கள் பிளாக் வர எல்லாருக்கும் கொடுக்கிறேன் :))))))))))))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுவையான பதில்களுக்கு நன்றி! (ஜெல்லி பீன்ஸ் வெஜிடேரியன் சமாச்சாரம்தானே?)

      நீக்கு
    2. Jelly Belly beans are vegetarian-friendly. They do not contain gelatin, dairy, or eggs

      இது ராஜ்மா ஷேப்புக்கு இருக்கும் அதே ஸைசில் இங்கே பிரிட்டிஸ்காரங்களே வீகன் தான் :) நிறைய வீகன் ஆப்ஷன் இருக்கு ஸ்வீட்ஸ் கேக் பிஸ்கட் எல்லாத்திலையும் .

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!