வியாழன், 24 மார்ச், 2022

முதல் போணி

 உங்களுக்கு இந்த 'நீங்கதான் முதல் போணி' என்ற சொல் பரிச்சயமானதா?  நிறைய பேர் அடிக்கடி கேட்கும் வசனம்தான்.

இது சமயங்களில் 'முதல் வியாபாரம், பேரம் பேசாதே' என்கிற மறைமுக பொருளை உங்களுக்கு கடத்த அந்த வியாபாரி செய்யும் தந்திரமாகவும் இருக்கும்.  

எவ்வளவு நேரம் கழித்து போனாலும் சில வியாபாரிகள் 'நீங்கள்தான் முதல்' என்பார்கள்.  அல்லது நீங்கள் கொடுக்கும் காசை கண்ணெதிரே இருக்கும் வியாபாரப் பொருட்களை பிரதட்சணமாக ஒரு சுற்று சுற்றி, கூடுதல் சம்பவமாக அதைக் கண்களில் ஒற்றிக்கொண்டு கல்லாவில் போடுவார்கள்.  சிலர் காசை வைத்து பொருட்களை சுற்றி விட்டு திருஷ்டி கழிப்பது போல கைகளை ஏதோ செய்து விட்டு கண்களில் ஒற்றிக்கொண்டோ, ஒற்றிக் கொள்ளாமலோ கல்லாவில் போடுவார்கள்.

உங்களுக்கு பேரம் பேசத்தோன்றுமா?  ஆனால் நான் சொல்ல வருவது பேரம் பேசுவது பற்றி அல்ல.

படம் :நன்றி இணையம்.

முதல் காரணம், நாம் பேரம் பேசுவது இனி செல்லாது என்று தெரிந்துவிடும்.  அதற்குக்காரணம் நாளை நமக்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டுமே...   இரண்டாவது அவர்களுக்கு இந்த வகையிலாவது இந்த நாள் நல்லதாக அமையட்டும் என்கிற எண்ணம்.

எனக்கு இந்த 'முதல் வியாபாரம்' என்பது எப்பவுமே அலர்ஜி!  நமக்கே தெரிந்து நாம்தான் முதல் வியாபாரமாய் இருக்கப் போகிறோம் என்று தெரிந்தால், ஒதுங்கி நின்று யாராவது வியாபாரம் செய்த உடன் கூட வியாபாரம் செய்வதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.  அல்லது அடுத்த கடைக்கு நகர்ந்து விடுவேன்!

தவிர்க்க முடியாத நேரங்களும் உண்டு.  அந்நேரங்களில் மனதுக்குள் ஒரு பயம் இருக்கும்,  "எந்த மகராஜன் முதலில் வாங்கினானோ, இன்று வியாபாரமே சரி இல்லை"  என்று பெயர் வந்து விடக்கூடாதே என்கிற அச்சம், தயக்கம்  மனதில் இருக்கும்.

சில வியாபாரிகள் என் அம்மா கையில் கொடுத்ததையும் சிறுவயதில் பார்த்திருக்கிறேன்.  பழைய வீட்டில் இருக்கும் போது சில கீரை வியாபாரிகள், சில பூ வியாபாரிகள் விரும்பி வந்து எங்கள் வீட்டில் முதலில் கொடுத்து விட்டுச் செல்வதுண்டு..   

"ராசியான கைம்மா..."

உண்மையில் அப்போதுதான் பயமே வரும்.  இது என்றாவது மாறினால் என்ன ஆகும் என்கிற அதீத எண்ணங்கள்...   'நேத்து வியாபாரமே ஆகலைம்மா' என்கிற பேச்சு காதில் விழுந்து விடக்கூடாதே என்கிற கவலை.
படம் : நன்றி இணையம் 

இது காலை வேலை என்றில்லை, விற்கப்படும் பொருளை பொறுத்து காலை மாலை என்று எந்த நேரமானாலும் இந்த முதல் போணி பிரஸ்தாபம் வரும்!

ஹோட்டல், மால், போன்ற பெரிய இடங்களில் இந்தக் கவலையும், தயக்கமும் வருவதில்லை.  வராது.  சிறு வியாபாரிகளிடம்தான்!

இதற்கு அவர்கள் மேல் நமக்கிருக்கும் அக்கறையா, இல்லை நமக்கு கெட்டபேர் வந்துவிடும் என்கிற பயமா?  ஆனால் இவர்கள்தானே இந்த முதல் போணி காசை வாங்கி சுற்றும் சாங்கியமெல்லாம் செய்கிறார்கள்!

சில ஹோட்டல்களில் பார்த்திருக்கிறேன்.  இட்லி, சட்னி, சாம்பார் வடை என்று ஒரு தட்டில் வைத்து கல்லாவுக்கு மேலே இருக்கும் ஸ்வாமி படங்களுக்கு காட்டி விட்டு வியாபாரம் தொடங்குவார்கள்.   அவர்களுக்கும் கவலையில்லை,  நமக்கும் பயமில்லை!

சமீபத்தில் கூட பாஸுக்கு உடம்பு சரியில்லாத ஒரு அசந்தர்ப்ப நாளில் காலை ஒரு சிறு கடையில் இட்லி வாங்கச் சென்றால் நான்தான் முதல் போணி என்று தெரிந்தது.  அடிக்கடி கண்ணில் படக்கூடிய கடை!  பக்கத்திலேயே இன்னும் இரண்டு டிஃபன் கடைகளும் உண்டு.  எனவே வியாபாரம் போட்டியாகத்தான் இருக்கும்.  

நன்றி: இணையம்.

என்னடா, மாட்டிக் கொண்டோமே என்று நினைத்தேன்...  சட்டென பின்வாங்கவும் முடியாத நிலை..  தலையாட்டி வரவேற்று விட்டார்கள்!

நேரம் நழுவிக் கொண்டிருக்க, இவர்கள் இங்குமங்கும் நடந்து கொண்டிருந்தார்கள்.  அங்கிருந்த மூன்று பேர்களில் யாருக்கு என்ன வேலை என்று இன்னும் அசைன் ஆகவில்லையோ...    

அல்லது ஒருவேளை முதல் வியாபார பிரச்னை இவர்களுக்கும் உண்டோ...   யாராவது குறிப்பிட்ட ஆள்தான் முதல் போணி செய்வார்களோ...  நம்மை எதிர்பார்க்கவில்லையோ...   அவர்களுக்காகக் காத்திருக்கிறார்களோ...

"என்னங்க ஆச்சு...  லேட் ஆவுது..."  நிஜமாகவே அலுவலகத்துக்கு நேரம் ஆகிக்கொண்டிருந்தது.

"இதோ..  ஒரே நிமிஷம்...   சாம்பார் கொதிக்கிறது..  இறக்க வேண்டியதுதான்...  பொட்டலம் போடவேண்டும்."

அப்பாடி..    நழுவ ஒரு சந்தர்ப்பம்...

"ஓகே ஓகே..   டியூட்டிக்கு நேரமாச்சு...   பத்து நிமிஷத்துல ரெடியாயிடுமா?  ஒரு கால் மணி நேரத்துல வர்றேன்..."

"கொஞ்சம் இருங்க ஸார்...   இதோ ரெடியாகிடும்...   வாங்கிட்டே போயிடுங்க..  முதல் போணி..."

!!!!!!

=====================================================================================================

நேற்று ஏதோ விவாகரத்து பற்றி எல்லாம் பேச்சு ஓடியது இல்லை...?

இது தினமலரிலிருந்து எடுத்தது.  அவர்கள் இதை எங்கிருந்து எடுத்தார்கள் என்று (வழக்கம்போல) போடவில்லை!

சமீப காலமாக விவாகரத்து அதிகரித்து வருவதாக கூறும் பிரபல வழக்கறிஞர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி: 


"தமிழகத்தில், விவாகரத்து தொற்று சமூகப் பரவலாக மாறி, பல ஆண்டுகளாகின்றன. சமீபத்திய சில ஆண்டுகளில், விவாகரத்து கோரும் வழக்குகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது உண்மை தான். மண விலக்கு கேட்டு வருவோரில், வயதானோரும் இருப்பது தான் ஆச்சர்யம்.

விவாகரத்துக்காக முடிவெடுத்து வழக்கறிஞரை அணுகுவோருடன், அவர்களின் குடும்ப உறுப்பினர்களோ, நண்பர்களோ துணைக்கு வருவது இயல்பு. அப்படி வருவோர், சில நாட்களில் தங்களுக்கும் வாழ்க்கையில் பிரச்னை என்றும், விவாகரத்து வேண்டும் என்றும் வருவதை அதிகம் பார்க்கிறோம்.

கணவன் - மனைவிக்குள் பிரச்னைகள் இல்லாத குடும்பங்களே இருக்க முடியாது. அப்படி பிரச்னை வரும்போது, வீட்டில் உள்ள பெரியவர்கள், உறவினர்கள், நண்பர்கள் சமாதானம் பேசி, சண்டைகளை தீர்த்து வைத்த காலம் இன்று இல்லை. 

மாறாக, அப்படி அறிவுரை சொல்பவர் விவாகரத்து செய்தவராக இருந்து விட்டால், தன் அனுபவத்தை அவர்களுக்கு உதாரணம் காட்டி, 'சரிப்படாத வாழ்க்கையில் எதுக்கு கஷ்டப்படணும்... 'நான், 'டைவர்ஸ்' பண்ணி, இன்னிக்கு சந்தோஷமா இல்லையா... இன்னிக்கு இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை' என்பது போன்ற வார்த்தைகளால் மனதை மாற்றுகின்றனர்.

மகளின் விவாகரத்து வழக்குக்கு துணைக்கு வந்த அந்த அம்மாவுக்கு, ௬௫ வயதிருக்கும். மகளின் வழக்கு முடிந்து விவாகரத்து உறுதியான நிலையில், தனக்கும் விவாகரத்து வேண்டும் என்றார். 

அவர் சொன்னதை என்னால் நம்பவே முடியவில்லை.'இந்த வயசுல ஏன் இப்படியொரு முடிவு...' என அதிர்ச்சியுடன் கேட்டேன். 'மகளோட வாழ்க்கைக்காகத் தான், இத்தனை ஆண்டுகள் பொறுமையாக இருந்தேன். 'இப்ப அவ வாழ்க்கையும் நல்லா இல்லை. இனி நான் யாருக்காக அமைதி காக்கணும்...' என்று அவர் சொன்னதைக் கேட்டதும் துாக்கி வாரிப் போட்டது.

பிரச்னையை அணுகும் விதம் என்பது, நபருக்கு நபர் வேறுபடும். சாதாரண விஷயத்தைக் கூட பூதாகாரமாக்கி, அதை விவாகரத்து வரை கொண்டு செல்ல நினைப்போரை பார்த்து, மற்றவர்களும், அதே முடிவை எடுப்பதைத் தான் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.

ஒரு பிரபலத்தின் விவாகரத்து, ஊடகங்களில் மீண்டும் மீண்டும் பேசப்படும் போது, மனக் கசப்பில் இருக்கும் தம்பதியர், அவர்களை அறியாமலேயே விவாகரத்து முடிவை நோக்கி நகரவும் வாய்ப்புண்டு.

விவாகரத்து வழக்குக்காக என்னிடம் வருவோரை, முதல் ஒன்றிரண்டு முறை மட்டுமே உறவினர்கள், நண்பர்களுடன் வர அனுமதிப்பேன். அடுத்தடுத்த சந்திப்புகளின் போது, சம்பந்தப்பட்ட தம்பதியை மட்டுமே அனுமதிக்கிறேன்.விவாகரத்தை தவிர்க்க ஒரே வழி, நம் வாழ்க்கையை மற்றவர்கள் வாழ்க்கையோடு பொருத்திப் பார்க்காமல் இருப்பது மட்டும் தான்!

=====================================================================================================


என்ன எழுதுவது, எதை எழுதுவது என்று தெரியாமல் ஒரு நிலை ஏற்படுமே...  அப்போது எழுதியது இது...  நாம் எழுதித்தான் ஆகவேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்தவில்லை.  ஆனாலும் சும்மா ஜாலிக்கு போட்டது..



அதற்கு வந்த ஜாலியான அரட்டை பதில்கள்...


============================================================================================================

கவிதை லா(மா)யம் 



எங்கே போயின 
கோர்த்துப் பார்த்துக் 
கட்டி வைத்திருந்த வார்த்தைகள்?
இப்படி கட்டவிழ்த்து காணாமல் போனால் 
எப்படி என் கவிதையை 
எழுதுவேன் நான்? 




============================================================================================================

ஃபேஸ்புக்கில் பார்த்த தகவல்...  நம் நண்பர் யாரோதான் பகிந்திருந்தார்.  ரிஷபன் ஸாரோ ....?


===========================================================================================

நல்லா இருக்கோ இல்லையோ...   நாலு ஜோக்ஸ் போட்டா நண்பர்கள் பார்ப்பார்களே....  


அப்போது அப்படி என்ன கோபமாம் 'அவரு'க்கு?  தெரிந்தால் சொல்லுங்களேன்...


நேயர் விருப்பம்...


இன்னொரு 'கிண்டல் ஸ்பெஷல்' அறிவிப்பில் நகைச்சுவை!


இதைப்போய் தப்புன்னு சொன்னா எப்படி...!


92 கருத்துகள்:

  1. எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்..

    தமிழ் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

    வாழ்க நலம்..
    நலமே வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க நலம்.

      வாங்க துரை செல்வராஜூ ஸார்...   வணக்கம்.

      நீக்கு
  3. எங்கள் அம்மாவிடம் நிறைய பேர்கள் கை ராசி என்று இப்படி முதல் போணி பண்ணச் சொல்வார்கள். இதில் ஒரு விஷயம் இப்படி கை ராசி கொண்டவர்களின் ராசி அவர்களின் குழந்தைகளுக்கு பலிக்காது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் அம்மாவிடமும்தான் சொல்வார்கள்.  குழந்தைகளுக்கு பலித்தால் ஒவ்வொரு விஷயத்திலும் ஜெயம்தான்!!

      நீக்கு
  4. விவாகரத்துகள் இப்போது அதிகமாகி கொண்டுதான் வருகின்றன. முன்பெல்லாம் பெரிய குடும்பங்கள், அனுசரித்து போவதற்கும், விட்டு கொடுப்பதற்கும், ஏமாற்றங்களை ஏற்றுக் கொள்ளவும் பழகியிருந்தோம். இப்போது பெரும்பாலும் ஒரே குழந்தை, நினைத்தபடி வாழ்ந்து பழகியவர்களுக்கு அனுசரிக்கும், விட்டு கொடுக்கவும் தெரியவில்லை, பொருளாதார சுதந்திரம் துணை நிற்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். வாழ்க்கை முறையும், வளர்ப்பு முறையும் மாறி வருகிறது!

      நீக்கு
  5. ஜோக்ஸ் செம. கடைசி ஜோக் ம்க்கும்! ரொம்பத்தான்!

    பதிலளிநீக்கு
  6. நிஜமாகவே கவிதை வரிகளை பிய்த்து போட்டிருக்கிறீர்களா? அல்லது எங்களை சுத்தி விட ஆசையா? தமிழ் wordle game என்று நினைத்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சும்மா இணையத்தில் கிடைத்த படம்!  கலைந்து கிடக்கும் எழுத்துகளை மறுபடி எப்படிக் கோர்ப்பது?!!

      நீக்கு
  7. அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    புதுத் தொற்றோ பழைய தொற்றோ
    இல்லா வாழ்வு ஆண்டவன் அருள வேண்டூம்.

    பதிலளிநீக்கு
  8. கமுதி ஜெயராமன் , மனைவியிடம் ரொம்ப எதிர்பார்க்கிறார் போல.:)
    ஸாமீயீயீயீயீயி!!!!

    பதிலளிநீக்கு
  9. மருமகளாகப் போகும் மகள். செம ஜாலி:))))))

    பதிலளிநீக்கு
  10. வேர்டில் போடும் போது எனக்கு வார்த்தைகளே அகப்படுவதில்லை. அதை நீங்கள் கவிதையாகவே சொல்லி விட்டீர்கள்.
    அருமை மா ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அம்மா.   நேற்றைய புது வார்த்தையை முதல் முயற்சியிலேயே போட்டு அசத்தி விட்டீர்கள்.  எனக்கு அந்த வார்த்தையே புதிது!

      நீக்கு
    2. சில நேரங்களில் சில வார்த்தைகள் இல்லையா ஸ்ரீராம்.
      மகனும் ஆச்சரியப் பட்டான்.:)

      நீக்கு
  11. ஒரு நாளும் இது போல அழுதவனல்ல"

    சிறப்பு படம் .சிறப்பு வசனம். அட்டகாசம் ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  12. முதல் போணி என்பது முதல் மரியாதை. மரியாதையாய் நான் சொல்ற விலைக்கு வாங்கிக்கோ. இல்லாவிட்டால் முதல் அர்ச்சனை உனக்குத்தான்.
     
    பாட்டுக்குப் பாட்டு.

    கவிதை என்பது உண்மையானால் 
    தானே அதுவும் திரும்பி வரும். 
    மடக்கிப் போட்ட வார்த்தைகள் எனில்
    ஓடி ஒளிந்து மறைந்து கொள்ளும்.
    நினைவில் நிற்பதே கவிதை எனலாம்!!!!!!!

    இங்கு நினைவு என்று குறிப்பிட்டது எழுதியவர் நினைவு. படிப்பவர் நினைவு அல்ல. ஹா ஹா ஹா 

    பத்திரிக்கைகளும் data entry ஐ எழுத்தாளர்களுக்கு விட்டு விட்டன. இனி தினப் பத்திரிகைகளும் செய்திகளை வாசகர்களைக்  கொண்டு நிரப்பும் காலம் வரும் என்று தோன்றுகிறது. 
    மாற்றம் முன்னேற்றம்???

    ஜோக் 1 (தமிழ்நாடு வழி போக வேண்டாம்) க்கு காரணம் தமிழ் நாட்டில் அவருடைய கட்சி தேர்தலில் தோற்று விட்டது தான். 

    ஜோக் 2 மருமகளாகப் போவதை குளிக்கும் போது தான் சொல்ல வேண்டுமா? அதுவும் பாதிக்கதவு பாத் ரூமிலிருந்து.

    ஜோக் 3 இரண்டு கண்கள் இரண்டு காட்சி காணமுடியும். 

    ஜோக் 4. காலத்தை தள்ள வேண்டாம். மனைவியை தள்ளி விடலாம். அதற்குத்தான் ஆதிலட்சுமி என்ற பிரபல விவாகரத்து  வழக்கறிஞரை ஸ்ரீராம் அறிமுகப்படுத்தி இருக்கிறாரே. 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொல்லும் விலைக்கு வாங்கிக்கோ சரி...   ஆனால் ராசி இல்லாதவன் என்கிற பட்டம் வந்து விடுமோ என்கிற பயம் வருகிறதே...

      எசப்பாட்டு நன்று.   ஏதோ ஒரு தருணத்தில் அந்த கணத்தில் உணர்வுக்குவியலில் எழுதப்படும் கவிதைகள் அப்படியே மறுபடி நினைவில் வருவது சற்றே சிரமம்!

      //பத்திரிக்கைகளும் data entry ஐ எழுத்தாளர்களுக்கு விட்டு விட்டன. //
      ராணிமுத்து தகவலுக்கு சொல்கிறீர்களா?

      ஜோஸ் பற்றிய கமெண்ட்ஸ் புதுரகம்.  சுவாரஸ்யம்!

      நன்றி JC ஸார்.

      நீக்கு
  13. என்ன எழுதுவது, எதை எழுதுவது என்று தெரியாமல் ஒரு நிலை ஏற்படுமே... அப்போது எழுதியது இது... நாம் எழுதித்தான் ஆகவேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்தவில்லை. ஆனாலும் சும்மா ஜாலிக்கு போட்டது.."


    எழுத்தாளர் ப்ளாக் block....சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  வார்த்தைகளே தடைப்படும் கருப்பொருள் தடைப்படுவதில் வியப்பேது?!

      :))

      நீக்கு
  14. ஆஹா. இந்த முதல் போணியோடு பட்ட பாடு. தாங்காது.
    அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்,.
    என்ன ஒரு ப்ளாக்மெயில்.
    அந்த இட்லிக் கடையில் ஜெனூயினாக மாட்டிக் கொண்டீர்கள்:)

    பதிலளிநீக்கு
  15. விவாஹரத்து செய்திகள் 55 வருடங்களுக்கு முன்பே
    கசிய ஆரம்பித்தன.
    சில சமயம் அறிவியல் ரீதியாக.
    சிலசமயம் உடல் ரீதியாக.

    பொறுமை இல்லாதவர்கள் சமாளித்துப் போவது
    சிரமம் என்று விலகுகிறார்கள்.
    பொறுமை உள்ளவர்கள் வேறு வழி இல்லாததால்
    பந்தத்தில் இருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.

    தன் காலில் நிற்க முடிந்தவர்கள், சொத்து இருப்பவர்கள்
    என்று காரணம் கூடினாலும் முன்னாட்களில்
    பெற்றோர்களின் மனதை சிதைக்க முடியாமல் பந்தம் நீடித்தது.
    இப்போது பெற்றோர்களே கண்டு கொள்வதில்லை
    போல.

    பதிலளிநீக்கு
  16. நான் வியாபாரம் செய்தது முதல் போடி என்று தெரிந்தவுடன் அன்று முழுவதும் நான் இறைவனை பிரார்த்தனை செய்வேன். இவருக்கு தலால் விதமாக இன்று இருக்க வேண்டும் என்று...

    ஆனால் அடுத்தமுறை என்னைக் கண்டு முகம் சுழித்தவர்கள் இதுவரை இல்லை. அதில் எனக்கொரு மகிழ்ச்சி உண்டு.

    65 வயது பெண்ணுக்கு விவாகரத்து கொஞ்சம் யோசிக்க வைக்கிறது, காரணம் இங்கு மறுமணமோ, கள்ளக்காதலோ இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னையும் மறுநாள் கண்டு இதுவரை யாரும் நல்லவேளையாக முகம் சுளிக்கவில்லை!  நம் மனதில் ஒரு தயக்கம், பயம்!

      சமீபத்தில் நெல்லை கூட பகிர்ந்திருந்த ஒரு விவாகரத்து.  வாய்பேச முடியாது என்று கணவர் 60 வருடங்களுக்கும் மேலாக மனைவியை ஏமாற்றி வந்திருக்கிறார்!

      நீக்கு
  17. பொருளாதாரம் தனக்கு இருக்கு, சைதந்திரம் இல்லை என்றால், விவாகரத்தை நோக்கிப் போவது தவிர்க்கமுடியாது, எத்தனை வயதானாலும்.

    சமீபத்தில் பார்த்த 55-60 வயதுப் பெண்மணி (வேலை பார்ப்பவள்), திருமணமாகி வீட்டை விட்டு எங்குமே போகாதவளாம். வேலை, வீடு, கணவன், மாமனார் மாமியார், குழந்தை என்று வாழ்க்கையை சிறையாக வாழ்ந்திருக்கிறார். கேட்கவே கொடுமையாக இருந்தது. வீட்டுக்கு வந்தவள் ஏமாளி என்றால் கணவன், அவர் பெற்றோர் என்று சுயநலவாதிகளாக மனிதர்கள் மாறிவிடுகின்றனர். என்னத்தைச் சொல்ல?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாரையும் சார்ந்து வாழ தேவை இல்லையென்றால் இதுபோன்ற சுதந்திரமான மனப்போக்கு வந்து விடுகிறது.  

      நீங்கள் சொல்லி இருப்பது போன்ற ஒரு பெண்மணியை எனக்கும் தெரியும்.  ஓய்வுபெறும் சமயம் அவர் மாத வருமானம் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் (பதினைந்து வருடங்களுக்கு முன்)  ஆனால் அவர் குடும்ப வாழ்க்கை இன்றும்  ஒரு கட்டுக்குள் அடங்கியே இருக்கிறது, பலவித ஏமாற்றங்களை சகித்துக்கொண்டு.

      நீக்கு
  18. எனக்குத் தெரிந்த, மனைவியை இழந்தவர் 70+, பசங்க அவர்கள் மனைவிகள் வற்புறுத்தியபோதும், முடிந்த வரை தனியா இருக்கேன், நினைத்தபோது உங்களில் ஒருவர் வீட்டுக்குச் சாப்பிட வர்றேன் , வெளில சாப்பிடத் தோணும்போது சாப்பிட்டுக்கறேன், படுக்கைல விழுந்துட்டா பாத்துக்கோங்க... என்று சொல்லிவிடுகிறார்.

    நிறைய உதாரணங்கள். நான் எப்படி இருக்கப் போகிறேன் என யோசிக்க வைக்குது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது நல்ல ஐடியாவாக இருக்கிறது.  என்னைப்பற்றிய கவலை, சந்தேகம் எனக்கும் உண்டு.

      நீக்கு
  19. முதல் போணி பிசினெசை நான் நம்புவதில்லை. எந்தக் கடையிலும் வேண்டாம், விலை ஜாஸ்தி போன்ற வார்த்தைகளை உபயோகிப்பதில்லை. இதோ வந்துடறேன், திரும்ப வரும்போது வாங்கறேன் என்றுதான் சொல்லுவேன்.

    பெங்களூரில் காய் அல்லது விற்பனைக்கு வைத்துள்ளதை தொடக்கூடாது. தொட்டுவிட்டு வாங்காமல் கோக்க்கூடாது.

    இன்னொன்று, திரும்பக் கொடுக்கச் சென்றால் அல்லது மாற்றச் சென்றால் 12 மணிக்கு மேல்தான் மாத்திக்குவாங்க, கேஷ் ரிட்டர்ன் பண்ணுவாங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், தொட்டு விட்டு தப்பி விட முடியாதுதான்!  முதல் போணி பிசினஸை நானும் நம்புவதில்லை.

      நீக்கு
  20. கடைசா ஜோக்கில்... மனைவி ரொம்ப சந்தேக புத்தி உள்ளவள் போலத் தெரியுதே.. இப்படிப்பட்டவல்ககூட எப்படி காலம் தள்ளறது?

    பதிலளிநீக்கு
  21. இங்க கே ஆர் மார்க்கெட்டுல காய்லாம் அனேகமா கிலோ 20, அதற்குக் கீழமான் விக்குது. எனக்கு அரைக்கிலோவுக்கு மேல் தேவையில்லை. பலர் முதலில் அரை கிலோ தரமாட்டாங்க. முதல் வியாபாரம் அரைகுலோ என்றால் எல்லாரும் அப்படியே வாங்கிவாங்க.. ஒரு வியாபாரமாவது ஆனப்பறம் வாங்க என்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்று நான் கத்தரிக்காய், கொத்தவரை, புடலை, பீன்ஸ் எல்லாமே அரைகிலோ 20 ரூபாய் என்று வாங்கினேன் (11 மணிக்கு) அங்கிருந்த பீட்ரூட், சௌசௌ, முள்ளங்கி என்று எல்லாமே ஒரே விலைதான்.   அரை கிலோ இருபது ரூபாய்.  கால் கிலோ எல்லாம் தர மாட்டார்!

      நீக்கு
  22. என் உறவினர் ஒருவர், நான் அவர் வீட்டுக்குச் சென்று ஒரு நாள் தங்கினால் அந்தத் தடவை எழுதும் எக்சாமில் பாஸ் பண்ணிடுவேன், இந்தத் தடவை நீங்க வந்திருக்கீங்க, அதனால நான் பாசாயிடுவேன் என்றார். எனக்கு அங்கிருந்து வந்த பிறகு, அதற்காகவே ப்ரார்த்தித்துக்கொண்டேன். அவரும் காசாகிவிட்டார்.

    வித வித சென்டிமென்ட்ஸ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எக்கச்சக்கமா எல்லாக் கருத்துரைகளிலும் எழுத்துப் பிழை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
    2. ஆம்..  இது மாதிரி சமயங்களில் நாமும் அவர்களுக்காக பிரார்த்திக்க வேண்டியதுதான்!!!

      :)))

      நீக்கு
    3. //எல்லாக் கருத்துரைகளிலும் எழுத்துப் பிழை!//

      மொபைலில் அவசரமாக பதிலளித்திருக்கிறார்.  அதுதான்!

      நீக்கு
    4. கீசா மேடம்... நானும் எழுத்துப் பிழைகளை வெறுக்கிறவன். ஆனால் ஐபேடில் தட்டச்சும்போது (என்னைவிட அது ஸ்லோ) எழுத்துப் பிழைகளைத் திரும்பப் படித்து சரி செய்ய இயலாது. லேப்டாப்பில் தட்டச்சும்போது பிழை வரவே வராது. வந்தாலும் சரி செய்துவிடுவேன். அதனால மன்னிச்சுக்கோங்க.

      நீக்கு
  23. இந்த முதல் போட்டியில் எங்களுக்கு ஒரு ஸ்வாரஸ்யமான அனுபவம் தி.நகர் குமரனில் கிடைத்தது. ஒரு தீபாவளிக்கு ஜவுளி வாங்குவதற்கு காலையில் கடை திறக்கும் பொழுதே செல்லலாம் என்று சீக்கிரம் சென்றோம். நாங்கள்தான் முதல் போணியாம், ரொக்கமாக தரச் சொன்னார்கள். நாங்கள் கொடுத்த பணத்தை அங்கிருந்த சாமி படத்திற்கு முன் வைத்து, எங்களுக்கு ரசீதை பூவோடு தந்தார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்க அநேகமாய் தீபாவளிக்குத் துணி எடுக்கும்போது இப்படி நடந்திருக்கிறது.

      நீக்கு
    2. பெரிய கடையிலுமா?  ஆனால் ரொம்பப் படுத்தவில்லை என்று தெரிகிறது!

      நீக்கு
  24. முதல் போணி - ஸ்ரீராம் ஹைஃபைவ். எனக்கும் தயக்கம் உண்டு. எனவே மெதுவாக நகர்ந்துவிடுவேன். நம்மால் அவர்களுக்கு எதுக்குக் கஷ்டம் என்று.

    அப்படி நகரும் போது மீண்டும் சொல்வார்கள். மனதில் தோன்றுவது, அப்புறம் ஒரு வேளை அன்று சரியாகப் போணி ஆகலை என்றால் என்னைத்திட்டாமல் இருக்க வேண்டுமே என்று ஆனால் அவர்களிடம் அதையும் சொல்ல முடியாதே நெகட்டிவ்...எனவே உங்களைப் போல்தான் நகர்ந்து விடுவேன்

    இருங்க போய்ட்டு வரேன் என்று சொல்லி நகர்வதும் உண்டு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தஞ்சை ஈவினிங் பஜாரில் நிறைய வரிசையாக கடைகள் இருக்கும்.  அருகில் செல்லாமல் சற்று பின் வரிசையில் அடைந்து எல்லாக் கடைகளையும் ஆராய்வதுண்டு - எங்கு, எதை வாங்கலாமென!

      நீக்கு
  25. இங்கு வந்த பிறகு சந்தையில்தான் வாங்கி வந்தோம். கொரோனா தொடக்கத்தில் ஒரு சிறு காய்கறிக் கடை புதியதாகத் தொடங்கினார் ஒரு பெண்மணி. கணவர் அங்கு வாங்கினார். அப்பெண்மணி சுவாமி முன் வைத்து கண்ணில் ஒற்றிக் கொண்டு வைத்தார். அதன் பின்னும் அங்கு வாங்கிய போது சில சமயம் நாங்கள் எடுக்கும் காய்களில் ஏதேனும் ஒரு காய் இலவசமாகக் கொடுப்பார். மலிவாகவும் இருக்கும். நாங்கள் ஏன் இப்படி ஃப்ரீ? அது சரியில்லை. பைசா வாங்கிக்கணும் என்று சொன்ன போதும் அவர் அப்போதுதான் சொன்னார், நீங்க முதல்ல வாங்கினதும் அப்புறம் முதலில்ல வாங்கிய அன்றெல்லாம் நல்ல பிஸினஸ் என்று. அதுக்காக நீங்க இப்படி எல்லாம் தர வேண்டாம் என்று மறுத்துக் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வதில்லை. இன்று வரை ஒரு நாளுக்கான மெயின் காய், உபகாய் (தக்காளி வெங்காயம் ) இப்படி மொத்தம் 10, 15க்குள் முடிந்துவிடும். கொஞ்சம் விலை கூடிய போது கூட 20, 25க்குள் முடிந்துவிடும். சமீபத்தில் 1/2 கிலோ தக்காளி 5 ரூ. கொஞ்சம் கூடுதலாகவே இருந்தது தக்காளி!!!!!!

    அவரிடம் எவ்வளவு சொன்னாலும் கேட்பதில்லை. சில சமயம் சோளம் ஃப்ரீயாகக் கொடுக்கிறார். மனசுக்குச் சங்கடமாக இருக்கும். ஃப்ரீயாக வாங்குவது. அதனால் நிராகரிப்பது வழக்கமாகிவிட்டது. எப்படி அவருக்கு உதவுவது என்று யோசித்தோம். யோசித்ததில் அவர் கடையைத் தவிர வேறு எங்கும் வாங்குவதில்லை என்றானது. சந்தைக்குப் போகத் தொடங்கவில்லை.

    அப்படியாக ஓட்டிக் கொண்டிருக்கிறோம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் நல்லவர் என்றும் சொல்லலாம். அதுவும் ஒரு வியாபார தந்திரம் என்றும் சொல்லலாம்!!!

      நீக்கு
  26. இந்த சம்பவம் எனக்குத் தோன்றியது...அப்படியாச்சும் நம்ம கை நமக்குத்தான் உதவவில்லை, அவர்களுக்கேனும் உதவுகிறதே என்று!!! தொட்டதெல்லாம் பொன்னாக வேண்டாம் அட்லீஸ்ட் கொஞ்சமேனும்....ஹூம் பரவால்ல நம்மளால நாலு பேர் நல்லாருக்காங்கனா மகிழ்ச்சிதான்!

    இப்படி என்னை அழைத்து தங்கள் குழந்தைகளுக்கு விஷ் செய்யச் சொல்லுவார்கள். எக்ஸாம், பிறந்தநாள்.....உன் விஷ்ஷஸ் ரொம்ப பாசிட்டிவ் என்பார்கள். (அப்பவும் இதற்கு முன் சொன்னது நினைவுக்கு வரும்) மனதில் மகிச்சியாக இருக்கும்....விஷ் செய்து கூடுதலாகப் பிரார்த்தித்துக் கொள்வதுண்டு அங்க்குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என்று.

    எத்தனைவிதமான செண்டிமென்ட்ஸ்!!! சிலருக்கு இந்தக் கலர் உடுத்திக் கொண்டு காரியம் தொடங்கினால் வெற்றி, யார் முகத்திலேனும் பார்த்துவிட்டுச் செல்வது என்று , இந்தப் பேனா, பென்சில், ஸ்வாமி படங்கள் இப்படி பல...ஆச்சரியமாக இருக்கும். ஏதோ ஒருவித பாசிட்டிவ் எண்ணம், எனர்ஜி!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ..   நிறைய நல்ல பெயர் வாங்கி வைத்திருக்கிறீர்கள் கீதா.

      செண்டிமெண்ட்ஸ் விஷயம் வேற...  கசிந்து கையெல்லாம் மையானாலும் ஒரு குறிப்பிட்ட பேனாவாலேயே பரீட்சை எழுதிய காலங்கள் உண்டு!  படித்த பாடம் மேல் இல்லாத நம்பிக்கை கசியும் அந்தப் பேனா மேல்!

      நீக்கு
  27. விவாகரத்து பற்றி வழக்கறிஞர் ஆதிலட்சுமி அவர்கள் சொல்லியிருப்பது அத்தனையும் யெஸ் யெஸ் அதே என்று சொல்ல வைக்கிறது.

    சப்பை மேட்டருக்கு விவார என்பது ரொம்ப ஒவர்தான்.

    ஆனால் எத்தனையோ பெண்கள் தங்கள் கஷ்டங்களை எங்கும் சொல்ல முடியாமல் பிரிந்து வாழவும் முடியாமல் தவிப்பதும் இருக்கிறதுதான். இது அவரவர் விருப்பம்.

    கூ கு வானாலும் த கு வானாலும் மனப்பக்குவம் வேண்டும். அதிலும் கூ கு வில் மனப்பக்குவம் நிறைய வேண்டும். பல ஒப்பீடுகள் இருக்கும். ஏற்றத் தாழ்வுகள் இருக்கும். இவை நம்மை புடம் போடும் என்று சொல்வதுண்டு. அதாவது வாழ்க்கையை எதிர்கொள்ள. ஆனால் அதே சூழல் ஒருவரின் மனதை முடமாக்குவதும் நடப்பதுண்டே. தகு வில் கூட குழந்தைகளை ஒப்பீடு செய்யும் போது...அல்லது ஏற்றத் தாழ்வுகள் காட்டும் போது. கூகுவோ, த குவோ - மனதைப் பக்குவப்படுத்த வேண்டும், டைவர்ட் செய்ய வேண்டும், தியானம் யோகா, என்றெல்லாம் பல அட்வைஸ்கள் சொல்லப்படுவதுண்டு. ஆனால் மனம் என்பது வேறு. ஒவ்வொருவரின் மனதின் உணர்ச்சி லெவல் அதாவது எமோஷனல் கோஷன்ட் வித்தியாசமானது.

    பிறந்த வீட்டில் கூகு விலும் கூட ஏற்றத் தாழ்வுகள் உண்டுதான். அப்படியிருக்க புவீ ல் கூகு என்றால், மருமகளின் நிலையை யோசித்துப் பார்த்தால் தெரியும்.

    கீதாக்காவுக்கு நிறைய உண்டு.

    எனக்கும் கூ கு மிகவும் பிடிக்கும் என்றாலும் அதில் இருப்பவர்களின் ஒருவருக்கான புரிதல்கள், மனப்பக்குவம் மிக மிக அவசியம்

    இந்த டாப்பிக், விவாகரத்து பற்றிப் பேசினால் நிறைய சொல்ல வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  விவாகரத்து பற்றி நிறைய நிறைய பேசலாம்.  கூட்டுக்குடும்பங்களில் நீங்கள் சொல்வது போன்ற ஒப்பீட்டு மனத்தாங்கல்கள் நிறையவே இருக்கும்.  இன்னும் சில பிரச்னைகளும் இருக்கும்.  ஆனால் இவற்றையெல்லாம் கடந்துதான் உறவு என்கிற பந்தம் என்று சொல்லிக்கொடுக்கும் அனுபவமும் அங்குதான் கிடைக்கும்.

      நீக்கு
  28. ஆனாலும் சும்மா ஜாலிக்கு போட்டது..//

    ஹாஹாஹாஹாஹா ஹையோ சிரித்துவிட்டேன் ஸ்ரீராம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த வசனத்தை வைத்துக்கொண்டு பள்ளிக்காலங்களில் என்னென்ன உல்ட்டா செய்திருக்கிறோம்!

      நீக்கு
  29. கவிதை லாயம்...//

    படத்தைப் பார்த்து பயந்து நடுங்கிட்டேன் ஸ்ரீராம்...யம்மாடியோவ் இதை வைச்சு கவிதை எழுதுங்க எங்கப் பக்கம் தள்ளிவிட்டீங்களோன்னு நினைச்சு ஒரு நிமிஷம் கதிகலங்கி போய் மூச்சு நின்னுடுச்சு! நல்ல வார்த்தைகளை வைச்சே கோர்க்க வராது இதுல இப்படியான்னு!

    தப்பிச்சோம்...

    உங்கள் கவிதை செம!! அதானே எப்படி எழுதுவது! நானும் சேம் போட்....கவிதைக்கு இல்ல பதிவுக்கு!!ஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா...  அங்கு காணப்படும் எழுத்துகளை வைத்து எத்தனை உருப்படியான வார்த்தைகள் கிடைக்கும்!

      நீக்கு
  30. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  31. பதிவின் நிறைவாக வந்திருக்கும் துணுக்கு மற்றவைகள் எல்லாவற்றையும் அடித்துக் கொண்டு போய் விட்டது..

    அந்தத் துணுக்கை அப்படியே திருப்பிப் போட்டால் நாட்டின் இன்றைய நடப்புக்கு ஒத்து வருகின்றது..

    சில நாட்களுக்கு முன் தொ.கா. நிகழ்ச்சியின் சிறு பகுதி ஒன்றைக் காண நேர்ந்தது Fb ல் ...

    இளம் பெண் ஒருத்தி கேட்கின்றாள்.. " எல்லாம் என்னுடையது ( இளமையான் உடம்பு, இருக்கின்ற பணம்).. என் வாழ்க்கை.. என்னை இப்படித்தான் வாழ வேண்டும் என்று சொல்வதற்கு யார் இந்த சமுதாயம்?.. " - என்று..
    அவளோடு கூட வால் அறுத்துக் கொண்ட சிலதுகள்..

    நிகழ்ச் "சீ " யை நடத்துபவன் ஏளனமாக சிரிக்கின்றான்..

    இதுகள் எல்லாம் அமைதியான வாழ்க்கைக்கு ஒத்து வரும் என்கின்றீர்களா?..

    தொ.கா. சாதனம் இருந்தும் இணைப்பு எடுத்துக் கொள்ள வில்லை.. Fb ல் இதைப் போன்ற கழிசடை நிகழ்ச்சித் துணுக்குகளைத் தடுக்கலாம் என்று முயற்சித்தால் - அது என்னைக் கேட்கிறது - இதனால் உனக்கு என்ன பிரச்னை என்று!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆ...   சிறு இடைவேளைக்குப் பின் உங்களிடமிருந்து பதிவு பற்றிய ஒரு கமெண்ட்..  அதுவும் சற்று நீளமாக...   நன்றி!

      கடைசித் துணுக்கு :  செய்கிற தப்பை எல்லாம் செய்வார்களாம்..  யாரும் கேட்கக் கூடாதாம்.  கேட்டால் கேட்பவர்கள் மேல்தான் தப்பாம்!

      நீக்கு
  32. முதல் போணி என்று சொன்னால் அவர்களுக்கு அன்று நல்ல வியாபாரம் ஆக வேண்டும் என்று வாங்கும் போது நினைத்துக் கொள்வேன்.

    எங்கள் வீட்டுக்கு வரும் கீரைக்காரர், பழக்கார அம்மா எல்லாம் மாயவரத்தில் எங்கள் வீட்டு திண்ணையில் தான் தங்கள் கூடைகளை இறக்கி வைப்பார்கள்.
    நேரத்திற்கு தகுந்தார் போல அந்த வயதான பழக்கார அம்மாவுக்கு மோர், டீ, காபி கொடுப்பேன். மனதார வாழ்த்தி போவார்கள்.

    இங்கு வெள்ளிக்கிழமை சந்தையில் அனைத்தும் வாங்கலாம். ஒரு பேஸினை நம் பக்கம் தூக்கி போடுவார்கள், அதில் நாம் காய்களை எடுத்து கொடுத்தால் அளந்து பார்த்து காசு சொல்வார்கள் கொடுக்க வேண்டும் அவ்வளவுதான். அன்பான மக்கள் மலர்ந்த முகத்தோடு வியாபாரம் செய்வார்கள், சில பேர் பேரம் பேசினால் அவர்களிடம் தாங்கள் படும் கஷ்டத்தை சொல்வார்கள், பேரம் பேசவே மனம் வராது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அக்கா..   கடைகளில் எவர்சில்வர் அல்லது பிளாஸ்டிக் பேசினை நம்மிடம் தருவார்கள்.  அதில் நாம் காய்களை பொறுக்கிக் கொடுக்கலாம்.  நான் பெரும்பாலும் எது எவ்வளவு விலை என்று கூட கேட்க மாட்டேன்.  எவ்வளவு தேவை என்பதை மட்டும் சொல்வேன்!

      நீக்கு
  33. // நிகழ்ச் "சீ " யை நடத்துபவன் ஏளனமாக சிரிக்கின்றான்..//

    நிகழ்ச் "சீ " யை நடத்துபவன்
    திருப்தியாக சிரிக்கின்றான்..

    பதிலளிநீக்கு
  34. //விவாகரத்தை தவிர்க்க ஒரே வழி, நம் வாழ்க்கையை மற்றவர்கள் வாழ்க்கையோடு பொருத்திப் பார்க்காமல் இருப்பது மட்டும் தான்!//

    நன்றாக சொன்னார்.

    ஜாலியாக எழுதிய கவிதையும், அதற்கு அரட்டை பதில்களும் நன்றாக இருக்கிறது.

    இப்படி கட்டவிழ்த்து காணாமல் போனால்
    எப்படி என் கவிதையை
    எழுதுவேன் நான்? //

    அதானே!

    கதை கைவசம் உள்லவர்கள் கலந்து கொள்ளலாம், கலந்து கொள்பவர்களை வாழ்த்துகிறேன்.

    நேயர் விருப்பத்தை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  35. ஜோக்ஸ் - எல்லாம் செம. ரசித்தேன் சிரித்தேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
  36. @ ஸ்ரீராம்...

    // ஆ... சிறு இடைவேளைக்குப் பின் உங்களிடமிருந்து பதிவு பற்றிய ஒரு கமெண்ட்.. அதுவும் சற்று நீளமாக... நன்றி!.. //

    நான் அவ்வப்போது என் மனதில் பட்ட கருத்துக்களை நீண்டதாக எழுதிக் கொண்டு தான் இருக்கின்றேன்.. பதிவுக்கு வரும் கருத்துக்கும் கருத்துகளை எழுதிக் கொண்டு தான் இருக்கின்றேன்..

    பல சமயங்களில் அவை யாராலும் கவனிக்கப் படுவதில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனம் புண்பட்டிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்.

      நீக்கு
  37. "முதலில் நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள்" என்று மனைவியிடம் வருபவர்களின் ஞாபகம் வந்தது...

    பதிலளிநீக்கு
  38. கவிதைக்கான படத்தைப் பார்த்தவுடன், செய்து கொண்டிருக்கும் ஆய்வும் கண்ணில் தெரிந்தது...!

    பதிலளிநீக்கு
  39. ‘முதல் போணி’ நானும் பல சமயங்களில் எதிர் கொண்டதுண்டு. தவிர்க்கவே முயன்றிடுவேன்.

    நல்ல தொகுப்பு.

    பதிலளிநீக்கு
  40. முதல் போணி என்று சொன்னால் அவருக்கு அந்த நாள் நல்லதாக இருக்க வேண்டுமே என்ற கவலை எனக்கும் வந்தது உண்டு.

    விவாகரத்து வழக்குகள் இப்பொழுது மிகவும் அதிகமாகி விட்டது மனதுக்கு வருத்தம் தரும் விஷயம் தான்.

    பதிவின் மற்ற பகுதிகளையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!