செவ்வாய், 13 ஜூன், 2023

பச்சை மட்டை யும் பழுத்த மட்டையும் ....... சிறுகதை :: சியாமளா வெங்கட்ராமன்

 

 
இன்று மாலை மூன்று மணிக்கு அம்புஜம் மாமி போன் செய்து, " ஏண்டி பிரியா எப்போ நீ லட்சுமி பெண் கல்யாணத்துக்கு போக போறே?" என்று கேட்டாள். 

" இதில் என்ன சந்தேகம்? காலை ஏழரை மணிக்கு முகூர்த்தம் அதற்கு போகலாம் என்று எங்க ஆத்துக்காரர் சொன்னார். என்று பிரியா கூறினாள்.அது சரி நீங்க எப்ப போக போறதாக இருக்கேள் ?" 

" அதாண்டி ஒரே குழப்பமா இருக்கு...."   என்று இழுத்தாள் மாமி. 

 இப்படியாக பேச்சு அங்கும் இங்கும் போச்சு. 

" ஆமாம் நேற்று சாயங்காலம் வீடு பூட்டி இருந்தது எங்கே போனீர்கள்?"  என்று மாமியை கேட்க.. " என் தம்பி வீட்டிற்கு போனேன். அங்கு போய் மாச கணக்கா ஆச்சு. அடுத்த வாரம் எனக்கு வெட்டிங் ஆனிவர்சரி அதுக்கு முன்னால போய் நமஸ்காரம் பண்ணிட்டு வரலாம்"  என்று போனேன் என்று மாமி கூறினாள். 

 உடனே பிரியா கலகலவென்று சிரித்தாள். 

" என்னடி சிரிக்கிறே" என்று மாமி கேட்க, "அதானே பார்த்தேன் அம்புஜம் மாமியா கொக்கா ?"  என்றாள். 

மாமி, "என்னடி பொடி வைத்து பேசறே ?"  என கேட்க, அம்மாவிடமிருந்து வெட்டிங் டே சீரை கறந்துண்டு வரப்போயிருப்பேள்" என்று கூறி சிரித்தாள்.

"சரி சரி அம்மா எப்படி இருக்கிறார்கள்?"  என பிரியா கேட்க.... 

" என் அம்மாவுக்கு என்ன? நல்லா இருக்கா" என்று நக்கலாக மாமி கூற,,, " அது சரி,  உங்க அம்மாவுக்கு என்ன வயசு?" என பிரியா கேட்க...
" 94 வயசு ஆகுது.  அதுக்கேத்த பக்குவம்தான் இல்லை"  என்றாள்மாமி

வம்பு ஏதாவது கிடைக்குமா என்று அலைந்து கொண்டிருந்த பிரியாவிற்கு மாமியின் பேச்சு சூடு பிடிக்க, "ஏன் என்ன விஷயம்?" என்று கேட்டாள். 

" அதை ஏன் கேக்கேறே.... என் அம்மா 22,000 ரூபாய்கொடுத்து, +1 என்ற ஆண்ட்ராய்டு போன் வாங்கி  அத்தனை சீரியலையும் விடாம பார்க்கறா"  என்று கூறி பெருமூச்சு விட்டாள் மாமி!!!

" ஏன் டிவி இல்லையா உங்க தம்பி வீட்டில்?" என பிரியா கேட்டாள். 

" ஏன் இல்லாம ? ஒன்றுக்கு மூன்று டிவி இருக்கு..." 

" பின்ன ஏன் போனில் சிரியல்பார்க்கிறா?" 

அதற்கு அம்புஜம் மாமி, "என் தம்பியின் மருமகள் டிவி போட்டால் குழந்தைகள் படிப்பு கெட்டுவிடும் என்று போட மாட்டாள் . ஆனால் என் அம்மா ஒரு சீரியல் கூட விடாம பாக்கணும் என்று அடம் பிடிக்கிறார்" 

" அது சரி இந்த வயதில் எந்த சீரியல் என்று ஞாபகம் இருக்கிறதா? பாக்குறதுக்கு"  என பிரியா கேட்க....... 

" அது ஏன் கேட்கிற! நமக்கு கூட மறந்து போயிடும் - எது எங்க வச்சோம் என்று தெரிய மாட்டேங்குது. நேத்து என்ன சாப்பிட்டோம்னும் மறந்து போறது. ஆனால் என் அம்மா ஒரு அச்சாரம் பிசகாமல் அத்தனையும் ஞாபகமா சொல்றா " என்று சொல்லி பெருமூச்சு விட்டாள் மாமி!

"மாமி அதுக்கு சந்தோஷப்படத்தானே வேணும் நீங்கள் ஏன்அலுத்துக்கிறீர்கள்?"  என்றாள் பிரியா .

" ஆமாண்டி உனக்கு என்ன அவஸ்தை? படறாவாளுக்குத்தானே தெரியும்? என் தம்பிக்கு 74 வயதாகிறது. சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் அவஸ்தை படுகிறான் பாவம்!!! இது மாதிரி எதுக்கு தான் இருக்காளோ? தெரியவில்லை"  என்ன மாமி அலுத்துக் கொண்டாள்.

இதைக் கேட்டதும் பிரியாவிற்கு சுள் என்று கோபம் வந்தது " உங்கள் அம்மா யாருக்கும் தொந்தரவு தராமல் தன்னறையில் youtube இல் பார்க்கிறார்கள். இதில் என்ன தப்பு? அவர்களும் மனிதர்கள்தானே? உங்களை எல்லாம் பெற்று வளர்த்து படிக்க வைத்து கல்யாணம் செய்து கொடுத்திருக்கிறார்கள். பிரசவம் பார்த்திருக்கிறார்கள் அனைத்து கடமைகளையும் செய்துவிட்டு இன்று துணையின்றி தனி மரமாக நிற்கிறார்கள்   அதை மறக்க youtube பார்க்கிறார்கள், நாளைக்கு இதே நிலைதான் உங்களுக்கும் மறக்காதீர்கள்!!! நாம் நினைத்த மாதிரி (இறந்து )போக,  'டி .நகரா' போவதற்கு?" என பிரியா போனில் பொரிந்து தள்ளினாள். 

இதைக் கேட்ட அம்புஜம் மாமி, 'ஏண்டாப்பா சொன்னோம்' என்று  நினைத்துக் கொண்டு, போனை கட் பண்ணுவதற்கு, "சரி சரி யாரோ காலிங் பெல் அடிக்கிறார்கள் நான் போனை வைக்கிறேன்"  என்று கூறி போனை 'அப்பாடா' என்று கட் செய்தாள்!!!

 அப்போதுதான் உள்ளே வந்த ராகவன், " யாரை வெளுத்து வாங்கினாய் போனில்?" என சிரித்துக் கொண்டே கேட்க, "இப்போதெல்லாம் பெற்ற குழந்தைகளே வயதான அம்மா அப்பாவை உதாசீனப்படுத்துவது அதிகமாகிவிட்டது. 


*பழுத்த மட்டையை பார்த்து பச்சை மட்டை சிரித்தது * என்ற பழமொழிக்கு ஏற்ப வயதானவர்களை சிறியவர்கள் கேவலமாக பேசுவது சர்வ சாதாரணமாகிவிட்டது. அவர்களுடைய உணர்ச்சிக்கு மதிப்பு கொடுப்பதில்லை. நாளைக்கு நமக்கும் இதுதான் கதி" என்று கூறி பேச்சை மாற்றினாள். 

= = = = = =

22 கருத்துகள்:

  1. தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது..

    வாழ்க தமிழ்

    பதிலளிநீக்கு
  2. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    நோக்க நோக்க
    நொடியில் நோக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. நிதர்சனம்...

    ஒரு அளவுக்கு மேல் படிக்க இயலவில்லை..

    இதற்கு முழுக்க முழுக்க இந்த சமுதாயமே காரணம்..

    பதிலளிநீக்கு
  4. இன்றைய வாழ்க்கை முறை..

    கம்பளி என்று எடுக்கப் போய் கரடியிடம் சிக்கியாயிற்று..

    யார் வந்து மீட்பது?..

    பதிலளிநீக்கு
  5. இன்று எல்லா இடங்களிலும் பெரியவர்களுக்கு மதிப்பு இல்லை. ஆகவேதான் முதியோர் இல்லங்கள் பெருகி விட்டது.

    இவ்வகையில் இஸ்லாமிய குடும்பங்கள் தனிக்குடித்தனம் போவதும் குறைவு, பெற்றோர்களை விரட்டி விடுவதும் குறைவு.

    பதிலளிநீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. //வயதானவர்களை சிறியவர்கள்// - இதைத்தானே நாமும் செய்தோம், அப்படி இல்லாமல் நாமும் மதித்திருந்து, அப்படி மதிப்பதை அடுத்த தலைமுறை அறிந்துகொள்ளும்படிச் செய்திருந்தால், நமக்கும் இப்படி நேர்ந்திருக்காதோ என வயதானவர்கள் மனதில் நினைப்பார்களோ?

    பதிலளிநீக்கு
  8. @ கில்லர்ஜி..

    /// இவ்வகையில் இஸ்லாமிய குடும்பங்கள் தனிக்குடித்தனம் போவதும் குறைவு, பெற்றோர்களை விரட்டி விடுவதும் குறைவு... ///

    வளைகுடா நாடுகளில் வயதானவர்களைத் தனியாக்கி பிலிப்பினோக்களைக் கோர்த்து விடுவது தங்களுக்குத் தெரியாது போல் இருக்கிறது..

    பதிலளிநீக்கு
  9. நன்றாக சொன்னீர்கள். உண்மை.

    பதிலளிநீக்கு
  10. பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால்
    பேரா இடும்பை தரும்.

    பதிலளிநீக்கு
  11. வீட்டுக்கு வீடு வாசப்படி தான்.

    பதிலளிநீக்கு
  12. கதை ஓகே. பிரியா சொல்வது புரிந்தது ஆனால் முடிவு கடைசியில் எனக்குப் புரியவில்லை.

    பொதுவாகவே நமக்கு வயதாக வயதாக, நாவடக்கம் வேண்டும் உணவிலும் சரி, பேச்சிலும் சரி.

    எனக்குத் தெரிந்து என் நெருங்கிய நட்பு அவர்களின் நெருங்கிய சொந்தம் அவருக்கே வயது 70க்கும் மேல்...அவர் மாமியாருக்கு 90 க்கும் மேல்.....இந்த வயதிலும் மருமகளின் சமையலை குறை சொல்லுதல், கோபித்துக்கொள்ளுதல் மூஞ்சியைத் தூக்கி வைத்துக்கொள்ளல்....(அவர் எப்போதுமே அப்படித்தானாம்!!!!) வயதான மருமகள் இப்பவும் பயந்து பயந்து பணிவிடை.....பாவம் மருமகள்...என் பாட்டியும் மரணம் அடையும் போது 92 என்னுடன் தான் இருந்தார்.
    என் மாமியாரும் 95 வயதில் ஆனால் இருவருமே நல்ல அட்ஜஸ்ட் செய்து கொண்டார்கள். இப்போது என் அப்பா....அவரும் அப்படித்தான்.....அது போல சிறியவர்கள் நாங்களும்...எனவே இரு புறமும் இது தேவை.

    கீதா

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    கதை தலைப்புக்கேற்றபடி நன்றாக உள்ளது. பெரியவர்களின் உணர்வுகளை சிறியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதுபோல் சிறியவர்களின் கடமைகளுக்கு பெரியவர்கள் அனுசரித்தும், போக வேண்டும். அது இல்லாத இல்லங்களில் ஒவ்வொருரின் மேல் மற்றவர்கள் குற்றச்சாட்டுகள் கூறிக் கொண்டே இருக்க வேண்டியதுதான் என்பதை கதை புரிய வைக்கிறது. இது இயல்பாக அனைத்து வீடுகளிலும் உள்ளது. என்ன செய்வது? கதைப் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதைப் படித்து கருத்து எழுதிய அனைவருக்கும் நன்றி. இதன் மூலம் பெரியோர்களை மதிக்க வேண்டும் என்ற கருத்து என்ற எண்ணம் வர வேண்டும் என்பதே என் எண்ணம். வயதான காலத்தில் மன நிம்மதியை தவிர வேறு ஒன்றும் வேண்டியது இல்லை பெரியவர்களுக்கு அதை நாம் தருவதற்கு இளைய தலைமுறைக்கு நாசுக்காக சொல்லித் தர வேண்டும்

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!