சனி, 24 ஜூன், 2023

மழை மனிதர்கள் மற்றும் நான் படிச்ச கதை

 










=========================================================================================================




==========================================================================================================





=====================================================================================================





============================================================================================================================

 

நான் படிச்ச கதைகள் (JKC)

ஏட்டில் இல்லாத மஹாபாரதக்  கதைகள்.

7

இந்தப்பதிவு கொஞ்சம் பெரியது. 3 பதிவுகளுக்கு உள்ள கதை அடக்கம். ஆனால் மூன்று பகுதிகளாக வெளியிட்டால் கதையின் சுவாரசியம் குறைந்து விடும். ஒரே கதை எப்படி நான்கு விதமாக வடிவம் மாறுகிறது என்பதற்கு உதாரணம் இந்தக் கதை. இப்படித்தான்  பல பழைய கதைகளும்  உரு மாறுகின்றன..   

சகதேவனின் தரும நீதி - கோவேந்தன் 

ஒரு காட்டில் ஒரு அதிசய விலங்கு வாழ்ந்திருந்தது. இதன் பாதிப் பகுதி விலங்கு வடிவம். மறு பாதி மனித வடிவம். ஆதலால் அது புருடமிருகம் என்று அழைக்கப்பட்டது. அளவில்லாத வலிமை  படைத்த அது அக்காட்டையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. வேற்றாளோ வேற்று மிருகமோ அக்காட்டில் புகுந்தால் உடனே அவை அதற்கு இரையாகி விடும். 

ஒரு நாள் வீமசேனன் எப்படியோ அக்காட்டில் நுழைய நேர்ந்தது. அதனைக் கண்ட புருட மிருகம்  “இன்று நமக்கு நல்ல விருந்து கிடைத்தது.” என்று மகிழ்ந்து வீமனைப் பிடிக்க விரைந்தது. புருடமிருகத்தைக் கண்ட வீமன் தன் நாட்டை நோக்கி ஓடலானான். 

அவனைத் துரத்திய புருடமிருகம் அவனைப் பிடித்து விட்டது. ஆனால் அது பிடித்தபோது அவனது வலது கால் அவனுடைய நாட்டில், இடது கால் காட்டில் இருந்தது. 

“நீ என்னைப் பிடித்தது தவறு. நான் என் நாட்டைத் தொட்டுவிட்டேன். என்னை விட்டு விடு” என்றான் வீமன்.  

“இல்லை இல்லை , நீ ஏன் காட்டினுள் தான் பிடிபட்டாய். ஆதலால் நான் உன்னை உண்பதில் தவறில்லை.” என்று வாதிட்டது புருடமிருகம். 

“நம் வழக்கை நாமாகத் தீர்க்க முடியாது. இந்நாட்டு அரசரிடம் சென்று நீதி கேட்போம். அவர் சொற்படி நடப்போம்” என்றான் வீமன். யோசனையை புருடமிருகம் ஒப்புக் கொண்டது. இருவரும் தருமன் சபையை அடைந்து வழக்கை எடுத்துரைத்தனர். 

உம் வழக்கில் தீர்ப்பு உரைப்பதற்கு முன் வீமன் பிடிபட்ட இடத்தைப் பார்க்க வேண்டும் என்றான் தருமன். உடனே தருமனும், அமைச்சரும், வீமனும், புருடமிருகமும் அந்த இடத்தை அடைந்தனர். 

இடத்தை ஆராய்ந்த தருமன் தன் தீர்ப்பை வழங்கினான். “புருடமிருகமே உன் பிரதிவாதி என் தம்பி என்பதற்காக பார பட்சமாக தீர்ப்பு வழங்க மாட்டேன். உன் காட்டில் வீமன் உடலின் ஒரு பகுதி இருந்துள்ளது. மறு பகுதி எங்கள் நாட்டில் இருந்துள்ளது. ஆகையால் உன் காட்டில் இருந்த வீமன் உடலில் சரிபாதியை நீ உண்ணலாம்.” என்றான் தருமன். 

தண்டனை பெறுபவன் தம்பி என்று கூடப் பாராமல் நீதி வழுவாமல் தீர்ப்பு வழங்கிய தருமனை புருடமிருகம் பாராட்டியது. 

தீர்ப்பின்படி வீமன் உடலின் பாதியை உண்ணத் தொடங்கியது புருடமிருகம். 

அப்போது சகாதேவன் முன்னே வந்தான். பாண்டவர்களில் அனைத்து நீதி நூல்களையும் அறிந்தவன். பகை என்று வெறுப்பதும், உறவு என்று விரும்புவதும் செய்யாத சமத்துவ அறிஞன். அத்தகைய சகாதேவன் தன அண்ணனை நோக்கி “அண்ணா நீங்கள் நீதி தவறாமல் தீர்ப்பு வழங்கினீர்கள். ஆனால் அந்த தீர்ப்பை நிறைவேற்றுவது எப்படி என்று நிர்ணயமாகக் கூறவில்லையே.” என்றான். 

“தம்பி சகாதேவா, அந்தத் தீர்ப்பை நிறைவேற்றுவது எப்படி என்பது சகல கலா வல்லவனாகிய உனக்குத் தான் நன்கு தெரியும். அதை நீயே சொல்.” என்றான். 

“அண்ணா புருடமிருகம் வீமன் உடலில் பாதி உண்ணும்போது மறுபாதியில் சிறு இரணமோ, வலியோ ஏற்படலாகாது. அந்த வகையில் புருடமிருகம் உண்ணட்டும்.” என்றான் சகாதேவன். 

தருமன் சொன்ன தீர்ப்பைக் கேட்டு அவனைப் பாராட்டிய புருடமிருகம் சகாதேவன் வழங்கிய திருத்தம் கண்டு மிகவும் மகிழ்ந்தது. 

புருடமிருகம் தருமனை நோக்கி “அரசே நான் அறக்கடவுள். உன் அற நீதியைப் பரிசோதிப்பதற்காக இப்படி ஒரு சோதனை மேற்கொண்டேன். இந்த சோதனையில் நீ வெற்றி பெற்று விட்டாய். வீமன் தன வலிமையால் என்னைக் கொல்ல முடியும். ஆயினும் அறத்திற்கு கட்டுப்பட்டு தண்டனை பெற முன்வந்தான். சகாதேவன் தான் கற்ற களைத்த திறத்தாலும், சமயோசித புத்தியாலும் அற நுணுக்கத்தை உணர்த்தினான். 

“அறம் காப்பதே கடனாகக் கொண்ட நீவிர் நெடும்காலம் வாழ்க” என்று வாழ்த்தி புருடமிருகம் உருவம் நீக்கி மறைந்தது. 

இந்தக் கதை சில திரிபுகளோடு கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவராத்திரி அன்று “சிவாலய ஓட்டம்” என்ற பெயரில் நடைபெறும் யாத்திரையை சம்பந்தப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. முகநூலில் இருந்து பெறப்பட்டது.


புருஷா மிருகம்

-----------------------------

இடுப்புக்கு மேலே மனித வடிவமும், கீழே புலி வடிவமும் கொண்டது புருஷா மிருகம். வேகமாக ஓடக்கூடிய புருஷாமிருகத்தை வெல்வதற்கு, அதன் பலவீனத்தை அறிந்துவைத்திருந்தான் பீமன்.

புருஷாமிருகம் மிகச்சிறந்த சிவ பக்தன். எங்கேயாவது சிவலிங்கத்தைப் பார்த்துவிட்டால், சிவ பூஜையை முடித்துவிட்டுத்தான் அது பயணத்தைத் தொடரும்.

மகாபாரதத்தில் இந்த உத்தியை பீமன் எப்படிக் கையாண்டான் என்பது குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தர்மர் ராஜசூய யாகம் செய்யத் தொடங்கினார்.யாக சாலையைத் தூய்மை செய்வதற்காக, அவர் பீமனை அழைத்து, ‘பீமா! நீ போய் புருஷாமிருகத்தை அழைத்து வா!’ என உத்தரவிட்டார்.

புருஷாமிருகம் என்பது, அந்தக் காலத்தில் வாழ்ந்த ஒரு விலங்கு. புதுமனை புகுவிழாவின்போது பசுவையும், கன்றையும் புதுமனையில் உலாவரச் செய்வதைப் போல,    யாக சாலையில் புருஷாமிருகத்தை உலா வரச்செய்வார்கள். அதை முன்னிட்டே தர்மர் அந்த மிருகத்தை அழைத்து வருமாறு பீமனிடம் சொன்னார்.

பீமனும் சென்று புருஷாமிருகத்தை அழைத்தான். அது வருவதற்கு ஒப்புக்கொண்டது. என்றாலும், ஒரு நிபந்தனை விதித்தது. ‘பீமா! நான் உன் பின்னால் வருகிறேன். ஆனால், உனக்கும் எனக்கும் எப்போதும் நான்கு காத தூரம் இடைவெளி இருக்க வேண்டும். இந்த இடைவெளி குறைந்தால், நான் உன்னைப் பிடித்துக் கொன்று தின்றுவிடுவேன். இதற்கு நீ ஒப்புக்கொண்டால், உன்னுடன் வருகிறேன்என்றது.

பீமன் ஒப்புக்கொண்டான்.

புருஷாமிருகம், ‘அப்படியென்றால் சரி, நீ முன்னால் ஓடு!நீ நான்கு காத தூரம் தாண்டியதும், நான் இங்கிருந்து புறப்படுவேன்என்றது.

மிருகமாக இருந்தாலும், என்னவொரு நீதி, நியாயம்?!ஓட்டம் துவங்கியது.

வேக வேகமாக ஓடிய பீமனைப் பின்தொடர்ந்து ஓடிய புருஷாமிருகம், ஒரு கட்டத்தில் பீமனை நெருங்கிவிட்டது. உடனே பீமன், புருஷாமிருகத்தின் பார்வையில் படும்படியாக ஒரு சிவலிங்கத்தை வைத்துவிட்டு, மேலே ஓடினான்.

புருஷாமிருகம் சிவலிங்கத்தைப் பார்த்ததும், தனது வழக்கப்படி சிவபூஜையைச் செய்துவிட்டு, மீண்டும் ஓட்டத்தைத் தொடங்கியது.

அதற்குள் பீமன் வெகு தூரம் ஓடிவிட்டான். எனினும், சற்று நேரத்துக்குள்ளாகவே புருஷாமிருகம் பீமனை நெருங்கிவிட்டது.

பீமன் மீண்டும் ஒரு சிவலிங்கத்தை வைத்துவிட்டு, ஓட்டமாய் ஓடினான்.புருஷாமிருகமும் சிவ பூஜையை முடித்துவிட்டு, பிறகு ஓட்டத்தைத் தொடர்ந்தது.

இதே உத்தியைக் கையாண்டு வேக வேகமாக ஓடிய பீமன், தனது எல்லைக்குள் ஒரு காலை வைத்தான். அடுத்த கால், எல்லைக்கு வெளியே இருந்தது.

புருஷாமிருகம், பீமனின் அந்தக் காலைப் பிடித்துக்கொண்டு, ‘பீமா! உன்னைப் பிடித்துவிட்டேன். இனி நீ, எனக்கு உணவாக வேண்டிதுயதான்என்றது.

பீமனோ அதை மறுத்தான். ‘இல்லை, இல்லை! என் எல்லைக்குள் நான் காலை வைத்துவிட்டேன்என்று வாதாடினான்.

முடிவாக, ‘தர்மரிடம் போய்ச் சொல்லலாம். தர்மம் தவறாத அவர் என்ன தீர்ப்பு சொல்கிறாரோ, அதன்படி செய்யலாம்என்று ஏகமனதாக முடிவானது.

பீமனும் புருஷாமிருகமும் தர்மரிடம் போய், நடந்ததைச் சொன்னார்கள். பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த தர்மர்,

பீமா! உன்னுடைய ஒரு கால் புருஷாமிருகத்தின் எல்லையில் இருக்கும்போது,அது உன்னைப் பிடித்துவிட்டதால், உன் உடலில் சரிபாதியை புருஷாமிருகத்திடம் கொடுத்து விடுவதுதான் நியாயம்!’ என்று தீர்ப்பு வழங்கினார்.

சொந்தத் தம்பியாக இருந்தாலும், அவனுக்குச் சாதகமாக பாரபட்சமாகத் தீர்ப்பு வழங்காமல், தர்ம நெறிப்படி நடந்துகொண்ட தர்மரை அனைவரும் பாராட்டினார்கள். புருஷா மிருகமும் தர்மரைப் பாராட்டி விட்டு மறைந்தது.

தர்மரின் நடுநிலை தவறாத தன்மை, பீமனின் உயிரைக் காத்தது. தந்திரத்தோடு இயங்குவதற்கு பீமனும், தந்திரம் தோற்கும்போது நியாயமே வெல்லும் என்பதற்கு தர்மரும் உதாரணமாகிறார்கள்.

சிவ பக்தரான வியாக்ரபாத மகரிஷியே புருஷாமிருகமாக ஆனதாக வரலாறு உண்டு.

இப்படி எழுதிய இவர் சில மாற்றங்களோடு உள்ள வேறு ஒரு மாறுபட்ட கதையையும் தருகிறார். 

புருஷா மிருகம் விஷ்ணு நாமத்தை கேட்க விரும்பாத ஒரு வினோத ஜந்து.

தர்மர் நடத்திய ராஜஸீய யாகத்திற்கு புருஷமிருகத்தின் பால் தேவைப்பட்டது. அதை எடுத்து வர பீமனுக்கு தர்மர் உத்தரவிட்டார்.

பீமரிடம் 12 ருத்ராட்ச கொட்டையை மிருகத்தை நோக்கி வீசி எறியும் படி ஸ்ரீகிருஷ்ணன் கூறினார்.

அவர் கொடுத்த ருத்ராட்ச கொட்டையுடன் காட்டிற்கு சென்றான் பீமர்.

புருஷாமிருகம் திருமலையில் ஒரு பாறையின் மீது அமர்ந்து சிவனை நோக்கி தவம் புரிந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த பீமன் கோவிந்தா, கோபால என்று உரக்க கூறினார்.

தவம் கலைந்த புருஷா மிருகம் பீமனை துரத்தியது. அப்போது பீமன் ஒரு ருத்ராட்சத்தை தூக்கி எறிந்தான். அது சிவ லிங்கமாக மாறியது. உடனே புருஷாமிருகம் சிவனை பூஜிக்க தொடங்கியது.

மீண்டும் பீமன் கோவிந்தா, கோபாலா என உரக்கக் கூறினார். மீண்டும் தவம் கலைந்த புருஷாமிருகம் பீமரை துரத்தியது. மீண்டும் ருத்ராட்ச கொட்டையை எறிந்தான். அது சிவலிங்கமாக மாறியது. புருஷாமிருகம் பூஜித்தது.

இப்படி 11 ருத்ராட்ச கொட்டைகளை எறிந்து அவை சிவலிங்கமாக மாறிய பின் அதை புருஷாமிருகம் பூஜிப்பதும் பின்னர் துரத்துவதுமாக இருந்தது.

12–வது இடத்தில் திருநட்டாலத்தில் ருத்ராட்சத்தை எறிய விடாமல் புருஷா மிருகம் பிடித்து பீமரை தாக்க முற்பட்டது.

அப்போது அங்கு தோன்றிய ஸ்ரீகிருஷ்ணன் பீமருக்கும், புருஷாமிருகத்திற்கும் ஹரியும், சிவனும் ஒன்று என்ற தத்துவத்தை உணர்த்தினார்.

வைணவ வழி தோன்றலான பீமரும், சைவ வழி தோன்றலான புருஷா மிருகமும் ஸ்ரீகிருஷ்ணரை வழிபட்டனர்.

தர்மரின் யாகத்திற்கு பால் தந்து உதவியது புருஷாமிருகம்.

இதை உணர்த்தும் வகையில் சைவ, வைணவ ஒற்றுமையை உணர்த்தும் கோவிந்தா! கோபாலா!! கோஷத்துடன் மாசி மாதம் கிருஷ்ணபட்ச ஏகாதசியன்று மாலை யணிந்து சிவபக்தர்கள், கையில் விபூதியுடன் கூடிய மஞ்சள் பை மற்றும் பனை ஓலை விசிறியுடன் 12 சிவாலயங்களுக்கும் ஓடி வருகின்றனர்.

குமரி மாவட்டத்தில் கல் குளம் தாலுகா, விளவங்கோடு தாலுகாவிற்குட்பட்ட 12 சிவாலயங்களையும் 112 கிலோ மீட்டர் தூரம் ஓடியும், நடந்தும் சென்று தரிசிக்கின்றனர்.

 

முதல் சிவாலயமான, முஞ்சிறை அருகே திருமலை மகாதேவர் கோவில்,

திக்குறிச்சி மகாதேவர் கோவில்,

திற்பரப்பு மகாதேவர் கோவில்,

திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவில்,

பொன்மனை தீம்பிலாங்குடி மகாதேவர் கோவில்,

திருபன்னி பாகம் சிவன் கோவில்,

கல் குளம் நீலகண்ட சுவாமி கோவில்,

மேலாங்கோடு சிவன் கோவில்,

திருவிடைக்கோடு மகாதேவர் கோவில்,

திருவி தாங்கோடு சிவன்கோவில்,

திருபன்றிகோடு மகாதேவர் கோவில்,

திருநட்டாலம் சங்கர நாராயணர் கோவில்

ஆகிய 12 சிவாலயங்கள் ஆகும்.


மேற்கூறிய கதை மேலும் சில மாற்றங்களோடு சின்னு ஆதித்யா தளத்தில் விஜிகுமாரி எழுதியிருக்கிறார்.

சுட்டி

ஹரியும் சிவனும் ஒன்றல்லவா

APRIL 11, 2023

VIJIKUMARI

மகாபாரதத்தில் ஒரு கதை உண்டு, சிவனிடம் இருந்து பாசுபத அஸ்திரம் அர்ஜூனன் பெற்று வந்தாலும் அவன் அதை பயன்படுத்தாமலே யுத்தம் முடிந்தது. கண்ணன் அவர்களின் கண் கண்ட தெய்வமானான், சிவன் மேல் பெரும் அபிமானமெல்லாம் அவர்களுக்கு இல்லை, அது போக, யுத்தம் முடிந்த வெற்றியில் இருந்தார்கள். இதெல்லாம் மிகபெரிய பரம்பொருளின் நாடகம் என அவர்கள் எதையும் நினைக்கவில்லை, சிவனை அடியோடு மறந்திருந்தார்கள்

யுத்தத்தில் துரியோதனனை அடித்து கொன்று அதை முடித்து வைத்தவன் என பீமனும் ஒரு கர்வத்தோடு அலைந்தான், காட்சிகளை கவனித்து கொண்டிருந்த கண்ணன் அவர்களின் மாயை அறுக்க ஒரு நாடகம் நடத்தினான். யுத்தம் என்பது பாவங்களின் முடிவு, அதற்கு யாரும் தப்ப முடியாது, செய்த பாவங்களுக்கு பரிகாரமாக ஒரு யாகம் நடத்த நினைக்கும் தர்மனிடமும் அகங்காரம் மிகுந்தது, இதுவரை யாரும் கொடுக்காத பொருளை கொண்டு யாகம் நடத்த விரும்பினான். அங்கே தான் தன் விளையாட்டை ஆரம்பித்தான் கண்ணன், விளையாட்டு அந்தணர்கள் உருவில் வந்தது.

தர்மனிடம் யாகம் செய்ய வந்த அந்தணர்கள் யாரும் இதுவரை பயன்படுத்தாத யாக பொருள் புருஷ மிருகத்தின் பால் என்றார்கள். மானிட உருவும் சிங்க உடலும் கொண்ட புருஷா மிருகத்தின் பால் அபூர்வமானது என சொல்ல அதை கொண்டுவர விரும்பினான், ஆனால் அந்த கொடிய மிருகம் பற்றி தகவலேதும் அவனிடம் இல்லைஅதை தொடர்ந்து காட்சிக்கு வந்தான் கண்ணன். அந்த புருஷா மிருகம் பற்றி தனக்கு தெரியும் என்றும் ஆனால் அது பொல்லாதது என்றும் கோபாலன் பெயரை சொன்னால் ஓடும் ஆனால் சிவன் பெயரை சொன்னால் அப்படியே உருகி நிற்கும், அந்நேரம் பாலை கறக்கலாம். ஆனால் சிறிது நேரத்தில் விரட்டும் என்றும் அதன் இயல்பை சொன்ன கண்ணன் ஒரு உத்தியும் சொன்னான்.

12 ருத்திராட்சங்களை பீமனிடம் கொடுப்போம், அவன் நாழிக்கு ஒன்றாக இரவு முழுக்க அதை கொண்டு அந்த மிருகத்தை ஓடவைத்து நிறுத்தி பால் கறக்கட்டும் என 12 ருத்திராட்சங்களை கொடுத்து பீமனை அனுப்ப சொன்னான். ஆம், அகம்பாவத்தில் இருந்த பீமனின் கர்வம் ஒழிய  அவனையே கிளம்பச் சொன்னான் கண்ணன். அந்த ருத்திராட்சத்தை தரையில் வைத்தால் அது லிங்கமாகிவிடும், அதை கண்டு உருகும் மிருகம் அப்படியே பூஜை செய்யும். அப்பொழுது பால் கறக்கலாம். ஆனால் பூஜை முடியும் பொழுது லிங்கம் மிருகம் சீறும் என சொல்லியும் அனுப்பினான் கண்ணன். அன்று மகா சிவராத்திரி நாளாய் இருந்தது, கண்ணனின் கணக்கு அதில் சரியாய் இருந்தது

பீமன் காட்டுக்குள் சென்று கோபாலா கோபாலா என்றதும் அந்த மிருகம் விரட்டியது பீமன் ஒரு ருத்திராட்சம் வைக்க அது லிங்கமாகும். கொஞ்சநேரம் மெய் மறக்கும் மிருகத்திடம் பீமன் பால் எடுப்பான். பின் அவன் கோபாலா கோபாலா என ஓட மிருகம் விரட்டும். இப்படி 12 ருத்திராட்சங்களும் லிங்கமாகி பீமன் தப்பிய பின்னும் மிருகம் அவனை விரட்டியது. அடுத்து ருத்திராட்சம் இல்லா பீமன் யாகசாலையினை நெருங்கியிருந்தான், அது விடியும் பொழுதாய் இருந்தது காலை 6 மணி ஆகியிருந்ததுஆனாலும் மிருகம் விரட்ட யாக சாலைக்குள் ஒரு காலை அவன் வைத்த நிலையில் இன்னொரு காலை மிருகம் பற்றியது. இப்பொழுது யாகசாலைக்குள் இருக்கும் கால் அவனுக்கு, வெளியில் தான் பிடித்த கால் தனக்கு என அது வாதிட்டது. அங்கு வந்தான் தர்மன் ஏ மிருகமே 12 சிவலிங்கத்தை உனக்கு காட்ட ஓடிய புண்ணிய பாதத்தையா கடித்து விழுங்கப் பார்க்கின்றாய் என உருக்கமாக அவன் கேட்கவும் மிருகத்துக்கு தன் தவறு விளங்கிற்று.

அய்யய்யோ ஆமாம், லிங்கத்தரிசனம் காட்டிய புண்ணிய காலையா கடித்தேன் என அவனை விடுவித்த மிருகம் பின் ஏன் அவன் கோபாலா கோபாலா என கத்தினான் என்பதை யோசித்து சொன்னது. கோபாலா கோபாலா என இவன் அழைத்து ஓடினாலும் அவன் ருத்திராட்சம் வைத்தவுடன் சிவலிங்கம் வந்ததென்றால் “ஹரியும் சிவனும் ஒன்றல்லவா”..

அந்த வார்த்தை தர்மனுக்கும் பீமனுக்கும் சுட்டது, அதுவரை குழம்பியிருந்த அவர்கள் இரண்டும் ஒரே சக்தி என்பதை உணர்ந்து அகந்தை ஒழிந்து நின்றனர். இரவெல்லாம் ஓடி அரியும் சிவனும் ஒன்று என பீமன் ஞானம் பெற்ற கதை இப்படி உண்டு, அதை நினைவு கூறும் விதமாக முன்பு சிவராத்திரியில் 12 சிவாலங்களுக்கு ஓடும் நிகழ்ச்சியும் இருந்தது.

புராணக் கதை இப்படி இருந்தாலும் 12 லிங்கம் என்பது  12 ராசிகளை குறிப்பது என்றும், எல்லா ராசிகளின் அருளும் அந்நாளில்  கிடைக்க 12 லிங்கங்களை வணங்க வேண்டும் என்பதும் ஏற்பாடு என்பார்கள். இன்னும் அழுத்தமாக சொன்னால் சிவராத்திரி இரவில் தூங்காமல் லிங்க தரிசனம் செய்ய இந்த ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அதில் ஹரியும் சிவனும் ஒன்று எனும் மாபெரும் தத்துவமும் இருந்தது. இதனை பாரதத்தின் பல பாகத்தில் வாழ்ந்த இந்துக்கள் ஒரு காலத்தில் செய்தனர்.  சிவராத்திரி அன்று “கோபாலா கோபாலா” என கத்திய படியே 12 லிங்கங்கள் இருக்கும் ஆலயத்துக்கு ஓடுவார்கள்.

ஒரே கதை நான்கு வடிவங்கள்!. புருஷா மிருகமும் பீமன், தர்மர் ஆகியோர், நான்கிலும் முக்கிய கதா பாத்திரங்கள். 

முதலில் உள்ள கோவேந்தன் கதையில் பீமன் தவறுதலாக காட்டில் நுழைந்து புருஷா மிருகத்திடம் மாட்டி பின் ஓடி மீண்ட கதை, யாகம் இல்லை. ருத்ராட்சம் அல்லது சிவலிங்கம் இல்லை. கடைசியில் மிருகம் அறக்கடவுள் ஆக மாறி மறையும். புருஷா மிருகத்தின் வடிவம் மனித தலை, மிருக உடல். 

இரண்டாவது முகநூல் கதையில் யாகத்திற்குப்  புருஷா மிருகத்தை அழைத்து வர பீமன் 12 ருத்ராட்சங்களுடன் அனுப்பப்படுகிறான். மிருகமும் ஒப்புக்கொண்டு வருவதாக கதை உள்ளது. வடிவம் மனித தலை, புலி உடல். கடைசியில் வியாக்ரபாத முனிவரின் முன் ஜென்ம வடிவம் புருஷா  மிருகம் என்று கூறப்படுகிறது. 

மூன்றாவது கதையில் யாகத்திற்கு புருஷா மிருகத்தின் பால் தேவைப்படுகிறது என்று பீமன்  ருத்ராட்சங்களோடு அனுப்பப்படுகிறான். கன்னியாகுமரி மாவட்டத்தில் நடக்கும் சிவாலய ஓட்டத்தையும் உட்படுத்தி, கடைசியில் ஹரியும் சிவனும் ஒன்று என்ற தத்துவத்துடன் கதை முடிகிறது.  வடிவம் மனித தலை, மிருக உடல். 

நான்காவது விஜிகுமாரி கதையிலும் புருஷா மிருகத்தின் பால் தேவைக்காகத்தான் பீமன் செல்வதாகக் கதை உள்ளது. கதை மேற்கூறிய மூன்றாவது கதை வழியாகச் சென்றாலும் கடைசியில் ஒரு அறிவுரையாக “12 லிங்கம் என்பது  12 ராசிகளை குறிப்பது என்றும், எல்லா ராசிகளின் அருளும் அந்நாளில்  கிடைக்க 12 லிங்கங்களை வணங்க வேண்டும் என்பதும் ஏற்பாடு” என்று முடிக்கிறார். வடிவம் மனித தலை, சிங்க உடல். 

வித்தியாசங்களைப் புரிந்து கொண்டீர்கள் என்று நம்புகிறேன். 

புருஷா மிருகம் எகிப்து நாட்டில் பிரமிட் காக்கும் sphinx ஆகவும் பண்டைய கிரேக்க கதைகளில்  centaur ஆகவும் சித்தரிக்கப்படுகிறது 

SPHINX  மனித தலை சிங்க உடல். 


12 கருத்துகள்:

  1. இன்றைக்கு அனைத்துப் பகுதிகளுமே very interesting, புருஷா மிருகம் உட்பட. பிறகு வருகிறேன்.

    உண்மையான, ஏழைகளுக்கு உதவும் அறக்கட்டளைகளுக்கு கோடியில் பணம் செல்லாமல், வெறும் வசிப்பிடத்திற்கு 130 கோடி செலவழிக்க மனது வருகிறதே என்ற வருத்தமும் ஏற்படுகிறது

    பதிலளிநீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. யாசகம் செய்து பள்ளிகளுக்குக் கொடுக்கும் பாண்டியன் கொள்ளையடிக்கும் பலரையும் நினைவுக்குக் கொண்டு வருகிறார்!

    செல்வி - சம்பவம் வாசிக்கும் போது மனம் நெகிழ்ந்து அந்த ஆசிரியர்களை மனதாரா வாழ்த்தினேன். என் கண்களில் என்னை அறியாமல் நீர். இப்படி எத்தனைக் குழந்தைகள்?! செல்வியின் அம்மா எடுத்த முடிவு மிகவும் சரியானதே.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    இன்றைய கதை பகிர்வு அருமை. இக்கதையை நானும் படித்துள்ளேன். ஹரியும், ஹரனும் ஒன்றே என்ற தத்துவத்தை முன்வைத்து பகிர்ந்த இந்தக்கதைகளை ஏட்டில் இல்லாத மஹாபாரத கதைகளில் படித்திருக்கிறேன். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சிவாலயத்தில் இந்த சிவராத்திரி வழிபாடு பற்றியும் படித்திருக்கிறேன்.

    இங்கும் புருஷா மிருகம் பற்றிய இக்கதையை படிக்க வைத்து விபரமாக சொன்ன சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. ஆனந்தம் கல்வி அறக்கட்டளை உதவி செய்யும் மாணவ மாணவிகளின் பின் புலம் மனதை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்தது. உதவி பெறும் மாணவ மாணவியர் மனதைச் சிதறச் செய்யாமல் (ஏனென்றால் இப்போதெல்லாம் மனதைச் சிதறடையச் செய்யும் சூழல் நிறைய) அந்த உதவித் தொகைக்கு justify செய்வதாகப் படிப்பில் முனைப்புடன் இருந்து முன்னேற வேண்டும் என்பதையும் இங்கு சொல்ல வேண்டும் என்பதையும் சொல்லி வாழ்த்துவோம்

    மற்ற செய்திகளும் அருமை

    கீதா

    பதிலளிநீக்கு
  6. புருஷா மிருகம் கதையும் எங்கள் ஊர் நிகழ்வும் அறிந்ததே.

    இதன் பின் இருக்கும் பொருள் நான் புரிந்துகொண்டது....வாழ்க்கையில் நம் இலக்கை நோக்கிப் பயணிக்கும் போது எத்தனையோ இடையூறுகள் நம் காலைப் பின்னிழுக்கத் தயாராக இருந்து உருவாகும். மனதை அலைபாய வைக்கும் சூழல்களும் வரும். திசை மாற்றவும் செய்யும்....அத்தனையையும் புறம் தள்ளி, நம் குறிக்கோளில் குறியாக இருந்து நம்பிக்கையுடன் இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்பதே.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. முதியவர் பாண்டியனின் செயல் பாராட்டுக்குரியது

    பதிலளிநீக்கு
  8. அனைத்து நல்ல செய்திகளுக்கும் நல்லவர்களுக்கும் மிக்க நன்றியும் பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  9. புருஷாமிருகம் கதை தெரிஞ்சது தானே! சிவராத்திரி ஓட்டம் பற்றியும் தெரிஞ்சது தான். சுவாரசியமான பதிவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. சின்னு ஆதித்யா தளக் கதை கேட்டதில்லை.

    எகிப்து நாட்டில் பிரமிட் காக்கும் sphinx ஆகவும் பண்டைய கிரேக்க கதைகளில் centaur ஆகவும் சித்தரிக்கப்படுகிறது //

    இந்த விஷயம் தெரிந்தாலும் ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றியதில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!