வியாழன், 22 ஜூன், 2023

அடக்கு... இல்லையேல் அடங்கு!

 மனைவியிடம் கூட எப்படி பேசுவது என்பதில் இப்போதெல்லாம் வரைமுறை பார்க்க வேண்டி இருக்கிறது...

சிலருக்கு அவர்களை பாராட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.  குறையாக ஏதாவது சொன்னால் போச்..  முகம் சுருங்கி விடும்.  அல்லது விலகி நிற்பார் சில காலமாவது    மனதளவில்!

அதனால் சிலரது குறைகள் தெரிந்தாலும் வெளிப்படையாக சொல்ல முடியாத நிலை வரும்.  சம்பந்தப்பட்டவரைத் தவிர மற்றவர்களுக்கு அது தெரியும்.  பூனைக்கு யாரும் மணி கட்டமாட்டார்கள்.

சிலசமயம் சில போலிப் பேச்சுகளில் அதற்கான போலி செயல்களில் மயங்கி நின்று விடவும் கூடாது.  அப்படி நின்று விட்டால் அப்புறமான உண்மை நிகழ்வுகளில் சலிப்பாகலாம்.  ஆனால் இதுபோன்றவர்கள் அந்த போலி பேச்சைதான் விரும்புவார்கள், ரசிப்பார்கள்.

நல்லவேளை எனக்கு இந்த போலி பேச்சுகளும், அனாவசிய அதட்டல் அரட்டல் உருட்டல்களும் பழகவில்லை.  என்றாவது உண்மை முகம் வெளிப்படும்போது நம் நிலை என்ன ஆகும் என்று முதலிலேயே தோன்றி விடும்.  

ஆனால் அதற்கெல்லாம் கவலைப்படாமல் தன் அக்கற்பனை உலகத்திலேயே வாழும் மனிதர்களை எனக்குத் தெரியும்.  நீங்களும் பார்த்திருக்கலாம்.

அபூர்வ சகோதரர்கள் படத்தில் ஒரு காட்சி நினைவுக்கு வருகிறது.  அம்மாவான ஸ்ரீவித்யா தன் மகனான குள்ள அப்பு பற்றி குள்ளம் என்பதைக் குறிப்பிட்டு பேசுவதைக் கேட்கும் அப்பு தற்கொலை செய்து கொள்ளும் அந்த அல்டிமேட் முடிவுக்கு போவார்.  

இந்தக் குறைகளை ஒரே மாதிரி வரிசைப்படுத்த முடியாது.  தவறாக நினைப்பது ஒருவகை என்றால், வேறொரு வகையில் தவறாக நினைத்து ஆர்ப்பாட்டம் செய்வது ஒரு வகை.

பணியில் திடீரென அடுத்த நிலை பதவி உயர்வு கிடைத்த நண்பன்.  பதவி உயர்வு கிடைக்கப் போகிறது என்ற நிலைவரை கூட சரியாய்ப் பேசிக்கொண்டிருந்தவன் அந்த அடுத்த சீட்டில் அமர்ந்ததும் மாறிப்போனான்! 

சிரிப்பதா, சீறுவதா என்று தெரியாத நிலை எனக்கு.  என்னையும் சேர்த்தே படுத்தினான்.  அவனுக்கு தனக்கு வானளாவிய அதிகாரம் கைக்கு வந்தது போன்ற ஒரு உணர்வு.  அதுவரை அந்தப் பதவியில் இருந்தவர்களை பற்றி இதே போல சொல்லிக் கொண்டிருந்தவன், தானே அப்படி மாறிப்போனான்.  அதுவரை நாங்கள் எல்லோரும் ஒரே கேடரில் ஒருவரோடொருவர் பணியாற்றிக் கொண்டிருந்த நிலை மாறி அவன் ஒரு கிரேடு உயர்ந்ததும் அவனுக்கு கீழே அவன் சொல் கேட்டு நடக்க பத்து பேர் என்ற நிலை வந்தபோது தலையில் கனம் வந்து விட்டது.

இந்தப் பதவிக்கே இவ்வளவு கனம் தலைக்கு ஏறினால், அரசியல்வாதிகள் ஏன் ஆடமாட்டார்கள்?  ஏன் இவர்களால் இந்த கனத்தையே தாங்க முடியவில்லை?

குரலை உயர்த்தி ஆர்ப்பாட்டமாக அடக்கிப் பேசுவதுதான் மற்றவர்களுக்கு பயத்தைக் கொடுக்கும் என்று எண்ணிக்கொண்டான்.  தன்னைப் பார்த்து அனைவரும் நடுங்க வேண்டும் என்று எதிர்பார்த்தான்.  நடுங்குகிறார்கள் என்று நம்பினான்.  சிறுசிறு எதிர்ப்புகள் வந்தபோது மட்டமான பிளாக்மெயில் வேலைகளில் இறங்கினான்.  அவனைப் பற்றி மற்ற அனைவருக்கும் என்ன அபிப்ராயம் என்று எனக்கு அல்லது எங்களுக்குத் தெரியும்.  அவன் அதை உணர முடியாத நிலையில்,  தான் உயரத்தில் இருப்பதாக நம்பினான்.  அவனிடம் உண்மையை உரைக்க முடியாத நிலை.  உரைத்தாலும் தேவையற்ற வியாக்யானங்களும், விளக்கங்களும், தற்பெருமைகளும்தான் பதிலாய்க் கிடைத்தன.

இன்டெர்ன்ஷிப் ட்ரைனிங் வந்தவர்களிடம் அராஜகமான நடந்து கொண்டான்.  கைநீட்டும் அளவு இறங்கினான்.  புகார் வந்துவிடுமோ என்று பயந்து உயர் அதிகாரிகளிடம் போய் அந்த வளர வேண்டிய மாணவர்கள் பற்றி குறை கூறினான்.  உங்கள் வாழ்க்கையைக் கெடுத்து விடுவேன் என்று பச்சையாக அவர்களை மிரட்டினான்.

எனக்கு இது போன்றவர்கள்தான் பாடமாய் அமைகின்றனர்.  நாம் எப்படி மற்றவர்களிடம் நடந்துகொள்ள வேண்டும் என்று மறைமுகப் பாடம் நடத்துகிறார்கள்.  மற்றவர்கள் நம்மைப் போற்ற வேண்டாம்.  தூற்றாமல் இருந்தால் போதும்.  மற்றவர்கள் வாயில் விழாமல், வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளாமல் இருந்தால் போதும்.  உங்கள் நண்பனுக்கு அல்லது நம்மிடையே இருப்பவர்களுக்கு - அது நட்பாய் இருந்தாலும் சரி, உறவாய் இருந்தாலும் சரி - பயப்படாமல் உண்மையை உரைக்கும் நிலை இருந்தால்தான் உண்மையான நட்பு நிலவும்.  குறை நிறைகளை உரிமையாய் சுட்டிக் காட்டும் நிலை இருக்க வேண்டும்...... அதுவே நம் குறைகளை நாம் உண்மையாக உணரும் நிலையைக் கொடுக்கும்.    (அடுத்த வாரம்...)

=======================================================================================================

படித்ததிலிருந்து...




சென்னை அமைந்த கரையில் தான் நிறுவியிருக்கும் ண்டே மருத்துவமனைக்கு நேரம் தவறாமல் பணிக்கு செல்வதை வழக்கமாகக் கொண்ட டாக்டர் ஹண்டே, 95 வயது, வாழும் முறை குறித்து சொல்கிறார். சத்தான உணவு, முறையான உடற்பயிற்சி, எளிமையான வாழ்க்கை முறை இந்த மூன்றும் தான் நம் வாழ்க்கை தரத்தையும் ஆயுளையும் அதிகப்படுத்தும்.

T  கேசவலு என்று ஒரு வாத்தியார் காலையில் 7:30 மணிக்கு எல்லாம் பள்ளிக்கு வரச் சொல்லி விடுவார், தெருவில் நடந்து போகும்போது வழியில் இருக்கும் வீட்டில் உள்ள பசங்களுக்கு எல்லாம் குரல் கொடுத்துக்கிட்டே போவோம். 50 பேர் ஒண்ணா சேருவோம்.

பள்ளி வளாகத்தில் கொஞ்ச நேரம் ஓடிட்டு பஸ்கி, தண்டால் எடுக்கச் சொல்வார். அன்னைக்கு அப்படி எடுத்த பயிற்சிகள் தான் இன்னைக்கும் என்னை யார் தயவும் இல்லாமல் நடக்க வைக்கிறது. அடுத்து ஆசனங்கள். பலவித ஆசன பயிற்சிகள்.

சிரசாசனம் செய்வதற்கு முதலில் கஷ்டப்பட்டாலும் பின் பழகிக் கொண்டேன். அந்த சிரசாசனத்தால் தான் இன்றைக்கும் என் மூளை நன்றாக வேலை செய்கிறது என்று நினைக்கிறேன்.

சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் படித்தபோது அரும்பாக்கத்தில் குடியிருந்தோம். அங்கிருந்து நடந்தே கல்லூரிக்கு வந்து விடுவேன். அதற்குப்பின் டியூட்டராக இருந்தபோது சைக்கிளில் வருவேன்.

சைக்கிள் ஓட்டுவதும் நல்ல உடற்பயிற்சி தான். 1958 ல் மெடிக்கல் பிராக்டிஸ் செய்யத் துவங்கினேன். குறிப்பிட்ட இடத்துக்கு சரியான நேரத்தில் செல்ல வேண்டும் என்பதற்காக 1960 இல் கார் வாங்கினேன்.

'மினிஸ்டரா'க இருந்தபோது குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு 'வாக்கிங்' போவேன்னு தெரிஞ்சுகிட்டு நிறைய பேர் என்னோட நடந்துக்கிட்டே வந்து அவங்களோட தேவைகளை சொல்லுவாங்க..

முக்கியமாக நிறைய படிப்பேன். அதுதான் இன்றைக்கும் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கிறேன். இளைஞர்களுக்கு மட்டுமல்ல, எல்லாருக்கும் நான் ஒன்று சொல்ல நினைக்கிறேன். நிறைய படிங்க; குறுகிய வட்டத்துக்குள்ளே இருக்காதீங்க; முக்கியமாக யாரைப் பார்த்தும் பொறாமை படாதீர்கள்.

நம்மாலே வளர்ந்த ஆளு இன்னைக்கு நம்மளை திரும்பி கூட பார்த்ததில்லை என்று நான் என்னிக்குமே நினைச்சதில்லை. அவனுடைய சாமர் த்தியம் சம்பாதிக்கிறான், வளர்ந்துட்டான் என்று தான் நினைப்பேன்.

அதேபோல எதுக்கும் கோபப்பட மாட்டேன். சட்டுன்னு வார்த்தைகளை விட்டு விட மாட்டேன். வயசான காலத்தில் இயலாமையால் கோபம் வரத்தான் செய்யும். அதை அடக்க பழகிக் கொள்ளுங்கள்.

ரயிலில் பயணம் செய்யும்பொழுது, சீட் நல்லா இருக்கா, தூங்குறதுக்கு வசதியாக இருக்குமானுதான் நினைப்போம். இறங்கும் இடம் வந்தால் இறங்க வேண்டியதுதான். இப்படித்தான் வாழ்க்கையும். எதையும் எடுத்துக்கிட்டு போகப்போறதில்லை. இதை புரிஞ்சுகிட்டு வாழப்பழகினால் பிரச்சனையே இல்லை.

டாக்டர் ஹண்டே

===============================================================================================


The finest, ultimate advice to a husband is being submissive to his better half.
ஒரு இலக்கியக் கழகத்தில், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் உரையாற்றிய போது கூறிய நகைச்சுவை சம்பவம்...
நான் ஒரு திருமணத்தை நடத்தி வைத்தேன். மூன்று மாதங்கள் கழித்து அந்த மாப்பிள்ளையிடமிருந்து ஒரு கடிதம் எனக்கு வந்தது. அதில் தன் மனைவி தன்னை மதிப்பதில்லை என்றும், மிகவும் அதிகாரத் தோரணையில் நடந்து கொள்வதாகவும், தன்னால் அவளோடு ஒத்துப்போக முடியவில்லை என்றும், தக்க அறிவுரை தர வேண்டும் என்றும் எழுதிக் கேட்டிருந்தார்.
நான் உடனே எட்டு எழுத்துக்கள் கொண்ட ஓர் அறிவுரையை அவருக்கு எழுதி அனுப்பினேன். அவர் அந்த அறிவுரை வேலை செய்யவில்லை என்று பதில் எழுதி அனுப்பினார். நான் உடனே ஏழு எழுத்துக்கள் அடங்கிய ஓர் அறிவுரையை எழுதி அனுப்பினேன். அதுவும் பயனில்லை என்று அவர் மறுமொழி எழுதி அனுப்பினார்.
சரி, வேறு வழியில்லை என கடைசியாக ஆறு எழுத்துக்கள் அடங்கிய ஓர் அறிவுரையை எழுதி அனுப்பினேன்.
"ஆஹா... இது பிரமாதமான அறிவுரை அய்யா...இப்போது அதைத்தான் கடைப்பிடித்து வருகிறேன். இப்போது எங்களிடையே எந்தப் பிரச்சினையும் இல்லை" என்று மகிழ்ச்சியாக அந்த மாப்பிள்ளை பதில் அனுப்பி இருந்தார்.
சரி, அந்த அறிவுரைகள் என்னென்ன என்று அறிந்து கொள்ள ஆவலாய் இருப்பீர்கள்! அந்த எட்டு எழுத்து அறிவுரை என்பது "அரவணைத்துப் போ", ஏழு எழுத்து அறிவுரை என்பது "அடக்கிக் பார்". இந்த இரண்டும் தான் பயன்படவில்லையே ! மூன்றாவதாய் அனுப்பிய அறிவுரை "அடங்கிப் போ" இதுதான் உள்ளபடியே பிரச்சினையை தீர்த்த அறிவுரை!

(அரங்கில் கரவொலி அடங்க வெகு நேரமானதாம்!)

Face Book ல் திரு.பரதன் வெங்கட் அவர்கள் செய்த பதிவு.

==========================================================================================



வெளிப்படையாய் எங்கும் பேசி 
வென்றவர் 
எவரையும் நான் கண்டதில்லை.
நட்பில் மட்டுமல்ல 
உறவிலும்.. 
ஒப்புக்கு வெளியே பேசி 
எதிராளி பற்றிய எண்ணங்களை 
ஒன்றிரண்டாக உள்ளே மறைத்த 
உண்மைகள் யாவும் 
இத்தனை வருடங்களில் 
மனம் நிரம்பி 
ரத்தத்திலும் நரம்பிலுமாய் 
ஓடி 
உடம்பே ஊதிப் போனமாதிரி 
உணர்வாயிருக்கிறது 
என்றைக்கு எவர்முன் 
அது வெடித்து வழியுமோ...

================================================================================================

நியூஸ் ரூம் 

வடநாட்டில் ஒரு எட்டு  வயதுச் சிறுவன் தன் பாட்டியை தன்  மனைவி என்றும், தாய் மாமன்களை தனது மகன்கள் என்றும் சொல்கிறானாம்.  அதாவது அவன் பிறப்பதற்கு சில நாட்கள் முன்பு இறந்துபோன தாத்தாவின் மறுஜென்மம் அவன் என்று சொல்கிறார்கள்.

ஆனால் யாருடைய  மறுஜென்மம் செய்தியில் இடம்பெற்ற இந்த எலி  என்று தெரியவில்லை.  திருப்பூரில் ஒரு பழக்கடைக்காரர் தினமும் கல்லாவில் வைக்கும் பணம் காணாமல் போய்க்கொண்டிருக்க, சிசி டிவி வைத்துப் பார்த்ததில் ஒரு எலி தினமும் கல்லா பெட்டியிலிருந்து பணம் கவ்விச் செல்வது தெரிந்தது.  அது போகும் வழி பார்த்து அதன் வலையை அகழ்ந்து பார்த்தபோது சேதாரமுமின்றி இதுநாள் வரை காணாமல் போன ரூபாய் நோட்டுகள் அங்கு இருந்ததாம்!

ராக்கி சாவந்த் எனும் பாலிவுட் நடிகை தன் இரண்டாவது கணவரிடமிருந்து தனக்கு விவாகரத்து கிடைத்ததை பார்ட்டி வைத்துக் கொண்டாடினாராம்.  பிரேக்கப் ஆனதில் அவ்வளவு சந்தோஷம்.

டைட்டானிக்தான் மாயம் ஆனது என்றால் அதைப் பார்க்கச் சென்ற நீர்மூழ்கி கப்பலும் மாயமாகி விட்டது.  ஐந்து தொழிலதிபர்கள் டைட்டானிக்கைப் பார்த்து வர அந்த நீர்மூழ்கியில் புறப்பட்டவர்கள் என்ன ஆனார்கள் என்று உலகம் தேடுகிறது.  இவர்கள் சென்ற கப்பலின் பெயர் டைட்டன். அதில் ஒருவர் பெயர் தாவூத் என்று தெரிகிறது.

பயணிகளுக்கு கிச்சுகிச்சு மூட்டி சோதனை செய்யும் முறை விரைவில் முடிவுக்கு வருகிறது.  பயணிகள் உடலை மில்லி மீட்டர் மில்லி மீட்டராக சோதனை செய்யும் ஸ்கேனர் கருவிகள் விரைவில் நிறுவப்பட உள்ளனவாம்.  முதலில் டெல்லியில்.

கடலுக்கடியில் பதிக்கப்படும் கேபிள்கள் உதவியால் பிற நாடுகளுடனும், உள் நாட்டிலும் தகவல் தொழில் நுட்பம் சேவை விரிவடைவதால், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், சர்விஸ் வசதிகளை பலப்படுத்த வேண்டும்,  என்று டிராய் கேட்டுக் கொண்டிருக்கிறது.  கடலுக்கடியில் பதிக்கப்படும் கேபிள்கள் மற்றும் கடலில் கேபிள்கள் உள்ள மையங்களை முக்கிய சொத்தாக கருதி, இதை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் மற்றும் முன்னுரிமை அளிக்கும் வகையிலும், இந்திய தொலைதொடர்பு மசோதா 2022 ன் ஒரு பிரிவில் இதைச் சேர்க்க வேண்டும். மேலும், இச்சேவைகளை தேசிய முக்கிய தகவல் உள்கட்டமைப்பு பாதுகாப்பு மையத்துடன் ஒருங்கிணைத்து, முக்கிய தகவல் உள்கட்டமைப்பாக அறிவிக்க வேண்டும் என்றும் டிராய் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.  கடலில் பேனா வைப்பதற்கு இது தேவலாம் என்கிறார் கடற்கரையில் வாக்கிங் செல்லும் ஒருவர்!

ஊட்டியில் இரண்டு நாட்களுக்குமுன் ஏற்பட்ட மழை காரணமான நிலச்சரில் ஏற்பட்ட மண் சரிவை போக்குவரத்து போலீசார் சரி செய்து வரும் நேரத்தில் அங்கு பல வீடுகள் அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கின்றனவாம்.  மக்கள் அச்சமடைந்திருப்பதாக தகவல்!

=================================================================================================================================


இணையத்தில் ரசித்தது...  இது ரொம்பப் பழசு..  ஆனால் பார்க்கும்போது இப்போதும் காலில் குறுகுறு என்றும் முதுகுத்தண்டில் சில்லென்றும் இருக்கும்!



இது சமீபத்தைய பழசு...  சுவாரஸ்யம்!



======================================================================================================

என்ன செய்வார்கள்?  எப்படி செய்வார்கள்?!




============================================================================================================

பொக்கிஷம் 

ஹிஹிஹி..  கேள்விக்கான பதிலை அவர்கள் முகத்தில் படிக்கலாம்!

ஹிஹிஹி  பதிலுக்கான விளைவை பின்னால் திரும்பி அவர் முகத்தில் படிக்கலாம்!

ஷாம்பு போட லட்ச ரூபாய் வேணுமா..   பெட்டரா யோசிச்சிருக்கலாமோ!

ஹிஹிஹி..  கம்ப்ளெயின்ட்டுக்கான பதிலை.....

டகால்ட்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல்!


92 கருத்துகள்:

  1. காலை வணக்கம் அனைவருக்கும். இந்த நாள் இனிய நாளாகவே அமையும்.

    பதிலளிநீக்கு
  2. கூடவே பழகிய சம நிலையல் இருந்தாலும், அவனுக்கு பதவி உயர்வு வந்து நம் பாஸாக ஆகிவிட்டால் அந்தப் பதவியின் காரணமாக அவனுக்கு ரிப்போர்ட் செய்வது, புது ஆள் அந்த இடத்திற்கு வந்தால் நாம் எப்படி நடப்போமோ அதேபோல நடப்பதில் நமக்கு என்ன தயக்கம் வந்துவிடுகிறது? இதைப் பற்றி முடிந்தால் இன்று எழுதுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. When i became division in-charge, turbulance இருந்தது. எனக்கும் அந்த பொசிஷனுக்கு வந்ததும் குறுகிய காலத்தில் வித்தியாசம் காண்பிக்கணும் என்ற அதீத ஆர்வம் இருந்தது. முக்கியமானவர்கள் ரிசைன் பண்ணினார்கள், என் கெடுபிடி தாங்காமல் கம்ப்ளெயின்ட் பண்ணிவிட்டுக் கிளம்பினார்கள். ஆனால் என் பாஸ் stood with me. ஆனால் அரசு வேலைகளுக்கு இது பொருந்தாது

      நீக்கு
    2. ஒன்று நமக்கு மேலே ஒருபடி என்பது தவிர, அவன் எனக்கு பாஸ் அல்ல!  மேலும் ஆக்கபூர்வமான செயல்களை செய்தால் சரி, யாரும் ஒன்றும் சொல்லப்போவதில்லை.  புதிதாக ஒருவர் வந்தாலும் அவரிடம் கட்டாயம் இந்தப் போலித்தனம் இருக்காது.  ஏன், இதோ என்னை வேறு இடத்துக்கு மாற்றி விட்டார்கள்.  இங்கு அதே நிலையில் இருக்கும் தெரியாத நபர் சாதாரணமாக நட்புடன் பழகுகிறார்.  அனாவசியமாக என் வேலையில் குறுக்கிடுவது இல்லை.  சில விஷயங்களை ரொம்ப விளக்கமாக பதிவில் எழுத முடியாது!

      நீக்கு
    3. கெடுபிடி என்பது வேறு, அடாவடி என்பது வேறு..அந்த நாற்காலிக்கு சென்றதும் வித்தியாசம் காட்ட வேண்டும் என்கிற அதீத ஆர்வத்தில் நீங்கள் கெடுபிடி செய்தால் அது சரியல்ல என்றுதான் சொல்வேன்.  அனாவசிய மிரட்டலில் வேலை வாங்க முடியாது.  

      நீக்கு
    4. உங்கள் நிலையும் புரிகிறது. எனக்கும் பலவற்றை எழுதுவது கடினம். இருந்தாலும் சிறுகதையாகவாவது எழுதணும் எனத் தோன்றுகிறது

      நீக்கு
    5. அந்தச் சிறுகதை ஒரு பக்கச் சார்பாக இருக்கும்.  உங்கள் நிலையிலிருந்து காட்டபப்டும்!

      நீக்கு
    6. பொதுவா நம் எல்லோருக்கும் அவரவர் நியாயங்கள் உண்டு. வெகுசில நேரங்கள் தவிர நாம் நமக்கு நியாயமாகவே நடந்துகொள்வோம். ஆனால் பொது நியாயம் அடிபட்டுப் போகும் வாய்ப்பு இருப்பதால் ஒருபக்கச் சார்பாகத் தோன்றும் வாய்ப்புகள் உண்டு

      நீக்கு
  3. நீங்கள் எழுதியுள்ளதுபோல, நம் முகம் காட்டும் கண்ணாடிகளாக சிலர் வேண்டும். நம் பாதை தவறு என்றால் உடனுக்குடன் திருத்திக்கொள்ளலாம். ஆனால் பதவி, அதிகாரம் என்று வரும்போது சிறிது தலைக்கனம், நாம் சொல்வதைக் கேட்கணும் என நினைப்பதைத் தவிர்க்க முடியாது. தவறுகள் (அதாவது கம்பெனிக்காக சிலரை வேலையிலிருந்து நீக்குவது, நல்லா வேலை பண்ணினாலும் சில காரணங்களுக்காக நியாயமா கொடுக்க வேண்டிய உயர்வைக் கொடுக்காமலிருப்பது, காஸ்ட் கட்டிங் என சிலத் தவறுகள் நேர்வது) செய்துவிடுவோம். ரிடையர் ஆனபின் நமக்கு அவைகள் பளிச் என்று தோன்றும்.

    பதிலளிநீக்கு
  4. மேரேஜ் இன்விடேஷன்.. மூன்றாவது.... கடுப்படிக்கிறது. ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பணிகள் இடத்துக்கேற்றவாறு மாறுபடும்.  தனக்கு ஒரு நியாயம், அடுத்தவருக்கு ஒரு நியாயம் என்று ("முடிந்தால், நீயும் அப்படி இரு..  மேலதிகாரி குடுமி என் கையில்..  அவன் ரகசியம் எல்லாம் எனக்குத் தெரியும்) என்று இருப்பது முதல்...  ஸாரி, விவரிக்க முடியாது நெல்லை!

      நீக்கு
    2. மேரேஜ் இன்விடேஷன். அநேகமாக இந்த வாரத்தோடு சரி..! உங்களுக்கு சுவாரஸ்யமில்லா விட்டாலும் ராசிபபவர்கள் ஓரிரண்டு பேர் இருப்பார்கள் என்றுதான்...   ஹிஹிஹி...

      நீக்கு
  5. கூகுளில் தலைப்பைக் கொடுத்து சிறுகதை.... ஓ.. இனி தி பதிவு, செ. பதிவுக்கெல்லாம் மெனெக்கிட வேண்டியதில்லைனு சொல்லுங்க. வரலைனா இருக்கவே இருக்கு ஆஸ்தான கூகுள்.

    பதிலளிநீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. சிலருக்கு அவர்களை பாராட்டிக் கொண்டே இருக்க வேண்டும். குறையாக ஏதாவது சொன்னால் போச்.. முகம் சுருங்கி விடும். அல்லது விலகி நிற்பார் சில காலமாவது மனதளவில்!//

    ஆமாம்.....அதே...

    இதில் ஒன்று உண்டு. தனிப்பட்ட முறையிலும் கூட சிலர் இப்படி இருப்பாங்க...

    ஆனால் சொல்பவர்களைப் பொருத்தும் இருக்கோ ஸ்ரீராம்? நமக்கு மிக நெருங்கியவர்கள் என்றால் நமக்குத் தனிப்பட்ட முறையில் சொல்வாங்க. பொதுவெளியில் எல்லோர் முன்னிலும் சொல்லும் போது அது பாதிக்கும்தான். குடும்பங்களிலும் சரி அதுவ்வும் அலுவலகங்களில் ரொம்பவே பாதிக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கணவன் மனைவியையோ, மனைவி கணவனையோ, சொன்னாலும் அதே கதைதான் கீதா. விதிவிலக்குகள் சொற்பம்.

      நீக்கு
  8. அதனால் சிலரது குறைகள் தெரிந்தாலும் வெளிப்படையாக சொல்ல முடியாத நிலை வரும். சம்பந்தப்பட்டவரைத் தவிர மற்றவர்களுக்கு அது தெரியும். பூனைக்கு யாரும் மணி கட்டமாட்டார்கள்.//

    அதே.

    ஆனால் தனிப்பட்ட முறையில் சொல்லிப் பார்க்கலாமோ....என்று தோன்றும். அதாவது நான் சொல்வது குடும்பங்களில், நட்புகளுக்கிடையே..

    அலுவலகங்களில் கூடச் செய்யலாம், ஆனால் அப்படிச் செய்வாங்களா, செய்ய முடியுமா என்று தெரியலை எனக்கு அனுபவம் இல்லையே.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செய்து பார்க்காமல் இருப்பது? நோ ரிஸல்ட். ஜென்மத்தோடு பிறந்தது உடனே போகுமா?!

      நீக்கு
    2. குறைகள், சம்பந்தப்பட்டவருக்கே தெரியும். மத்தவங்க என்ன சொல்லறது? பொதுவா பாஸ் குறையைச் சொல்லிப் பிரயோசனமில்லை, for that matter, யாரிடமுமே. வீண் மனக்கசப்பு வந்து சேரும் 5இவன் என்ன யோக்கியமோ என்பதுதான் முதல் ரியாக்‌ஷனாக ருக்கும்)

      நீக்கு
    3. பாஸ்களோ மத்தவங்களோ, எதுனாலும் ஃப்ராங்கா சொல்லுங்க என்பார்கள். உடனே குறைகளை அடுக்கினால் ஆப்பு நிச்சயம். உங்களைப் பார்க்கும்போது, எப்படி இருக்கீங்க என்று கேட்பீர்கள். நீங்கள் எதிர்பார்க்கும் பதில், நல்லா இருக்கேன், so far so good மாதிரியான பதில்கள். அதைவிட்டு விட்டு இதுதான் சாக்குன்னு என் பிரச்சனைகளை உங்களிடம் அடுக்கினால்....

      நீக்கு
    4. சம்பந்தப்பட்டவர் 'ஒரு மயக்க நிலை'யில் தன் குறைகளை அறியா நிலையும் இருக்கிறது!  குறை சொல்ல வேண்டும் என்பது நோக்கமில்லை.  ஒரு செயல் நடக்கும்போது அதன் உள்ளபடி நிலையை சொல்ல முடியாது!

      நீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் நன்றாக உள்ளது.

    முதல் பகுதியில் தங்கள் அலுவலக சார்ந்த பிரச்சனைகளின் வலிகள், மன வேதனைகள் அனைத்தையும் புரிந்து கொண்டேன்.

    /அவனுக்கு தனக்கு வானளாவிய அதிகாரம் கைக்கு வந்தது போன்ற ஒரு உணர்வு. அதுவரை அந்தப் பதவியில் இருந்தவர்களை பற்றி இதே போல சொல்லிக் கொண்டிருந்தவன், தானே அப்படி மாறிப்போனான். அதுவரை நாங்கள் எல்லோரும் ஒரே கேடரில் ஒருவரோடொருவர் பணியாற்றிக் கொண்டிருந்த நிலை மாறி அவன் ஒரு கிரேடு உயர்ந்ததும் அவனுக்கு கீழே அவன் சொல் கேட்டு நடக்க பத்து பேர் என்ற நிலை வந்தபோது தலையில் கனம் வந்து விட்டது./

    வரிகள் உண்மை. இதே போல் என் கணவரும் அவர் வேதனை தாளாமல் என்னிடம் அடிக்கடிச் சொல்லி வருத்தப்பட்டுள்ளார். என்ன செய்வது? சிலருக்கு இப்படிபட்ட நேரங்கள் வந்து தானாகவே அமைந்து விடுகிறது. மனதை தளர விடாமல் இருங்கள் என நானும் ஆறுதலாக சொல்லியுள்ளேன். ஆனால் மனவுளைச்சல் என்பது அவரவர் மன சம்பந்தபட்டதுதானே.!

    ஒரு நாளின் முக்கால்வாசி நேரம் ஒருவரின் அலுவலகம் சார்ந்த செயலை, மனதை ஆக்கிரமித்து விடுகிறதே.! அதுதானே அலுவலகவாசிகளின் கட்டாய நிர்பந்தம். நாம் அதற்கு ஆறுதல் சொல்வது சுலபம். தொல்லைகளை படும் போதும் மீண்டும் வலிகளை உணர்வது அவரவர் மனங்கள்தானே..! என்பதையும் உணர்ந்திருக்கிறேன். கஸ்டந்தான்...! மனதில் கவலை கொள்ளாமல் இருங்கள். நானும் உங்களுக்காக பிரார்த்திக்கிறேன்.நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னைப் பொறுத்தவரை முதல் ஓரிரு நாட்கள்தான் அயர்ச்சி. அப்புறம் பழகி, சமாளிக்கக் கற்று, சௌஜன்யமாகி விடுவேன்!

      நீக்கு
  10. நல்லவேளை எனக்கு இந்த போலி பேச்சுகளும், அனாவசிய அதட்டல் அரட்டல் உருட்டல்களும் பழகவில்லை. என்றாவது உண்மை முகம் வெளிப்படும்போது நம் நிலை என்ன ஆகும் என்று முதலிலேயே தோன்றி விடும். //

    டிட்டோ.....

    சம்பந்தப்பட்டவரைத் தவிர மற்றவர்களுக்கு அது தெரியும். //

    சுய அலசல் இருந்துவிட்டால் நம் ப்ளஸ், மைனஸ் தெரிந்து உணர்ந்து விட்டால் நல்லது. அப்போ போலியாகப் பேச்சும் வராது..

    ஸ்ரீராம், உங்கள் முதல் பகுதி புரிந்து கொள்ள முடிகிறது!!! உங்களின் டென்ஷன்...அதன் பின்னணி!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் இன்றைய நிலையில் அதெல்லாம் கடந்த காலம்!

      நீக்கு
  11. இந்தப் பதவிக்கே இவ்வளவு கனம் தலைக்கு ஏறினால், அரசியல்வாதிகள் ஏன் ஆடமாட்டார்கள்? ஏன் இவர்களால் இந்த கனத்தையே தாங்க முடியவில்லை?//

    இதுக்குத்தானே ஒரு பொன்மொழி உண்டு, ஸ்ரீராம். Boss ஆக இல்லாமல் நல்ல Leader ஆக இருக்க வேண்டும் என்று. அதிகாரத் தோரணை இல்லாமால் மேல் பதவியிலிருந்து தன் கீழ் பணிபுரிவோரை நல்ல விதத்தில் வழிநடத்துபவராக இருக்க வேண்டும் என்று. இது அலுவலகம், சங்கங்கள், மன்றங்கள், குழுக்கள் என்று குடும்பம் வரை பொருந்தும். கண்டிப்பு என்பது வேறு அதிகாரத் தோரணை அதிலும் அடாவடி அதிகாரத் தோரணை என்பது வேறு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சினிமாவில் வருவது போல காட்சிகள் இருந்தாலும், நிஜம்!

      நீக்கு
  12. இந்தப் பதவிக்கே இவ்வளவு கனம் தலைக்கு ஏறினால், அரசியல்வாதிகள் ஏன் ஆடமாட்டார்கள்? ஏன் இவர்களால் இந்த கனத்தையே தாங்க முடியவில்லை?/

    இதற்கு அப்புறம் வரும் மிரட்டினான் என்பது வரையிலான பத்திகள் முழுவதும் அப்படியே நடக்கிறது அலுவலகங்கள், கல்லூரிகள் மருத்துவமனைகள் பலவற்றிலும்...

    கண்டிப்பாக ஸ்ரீராம் இதெல்லாம் நமக்குப் பாடங்கள்.

    // மற்றவர்கள் நம்மைப் போற்ற வேண்டாம். தூற்றாமல் இருந்தால் போதும். மற்றவர்கள் வாயில் விழாமல், வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளாமல் இருந்தால் போதும். //

    ஆமோதிக்கிறேன்.

    //அது நட்பாய் இருந்தாலும் சரி, உறவாய் இருந்தாலும் சரி - பயப்படாமல் உண்மையை உரைக்கும் நிலை இருந்தால்தான் உண்மையான நட்பு நிலவும். குறை நிறைகளை உரிமையாய் சுட்டிக் காட்டும் நிலை இருக்க வேண்டும்...... அதுவே நம் குறைகளை நாம் உண்மையாக உணரும் நிலையைக் கொடுக்கும். //

    கண்டிப்பாக, ஸ்ரீராம்....அதை ஏற்கும் மனநிலையும் வேண்டும். அப்போதுதானே திருத்திக் கொள்ள முடியும் இல்லையா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு கீழ் வேலை செய்பவர்கள் என்னிடம் உள்ள குறைகளை என்னிடமே சொல்வார்கள்.  நான் அதற்கு முடிந்தவரை காரணம் சொல்வேன், என்னால் முடிந்தால் மாற்றிக் கொள்ளப் பார்ப்பேன். அவர்கள் பெரும்பாலு என்னிடம் காணும் குறை அலுவலக நேரம் முடிந்த உடன் சட்டென நான் வீட்டுக்கு கிளம்பி விடுகிறேன் என்பதும், அவரைத்தவிர மற்றவர்களுக்கு கேட்கும்போதெல்லாம் நான் லீவு கொடுத்து விடுகிறேன் என்பதும் (இது எல்லோருமே மற்றவர்களை பற்றி சொல்வது) என்பது போன்றும் குறைகள்.  இந்த என் நண்பன் சொல்வது "அவர்களுக்கெல்லாம் பேச நிறைய இடம் கொடுக்கிறாய்.."

      நீக்கு
  13. //பதவி வரும்போது பணிவு வரவேண்டும்//

    என்று கவிஞர் சரியாகத்தான் எழுதி இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  14. டாக்டர் ஹண்டே - சொல்லியது அனைத்தும் மிகவும் பயனுள்ளவை. வாழ்க்கை வாழ்வதற்கே!

    அதுவும் பொறாமை கூடாது என்று சொன்னதும் அதன் பின் சொல்லியிருப்பதும் நிஜம். இவை மனதில் புகுந்து கொண்டால் நம் குணங்களே மாறிவிடும். மனச்சிதைவு நோய் வரை கொண்டு செல்லும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதை நானே வேறொரு விஷயத்தில் அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன்!

      நீக்கு
  15. முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களின் உரை நகைச்சுவைக்காக ஓகே.

    ஆனால், கணவன் மனைவி இருவருமே புரிதலுடன், தராசு மாதிரி அதாவது ஒரு பக்கம் சில சமயம் உயரும். மற்றொன்று சில சமயம் உயரும்...இந்த உயர்தல் தாழ்தலை சமப்படுத்தத் தெரிந்துவிட்டால் பிரச்சனையே இல்லை கணவனும் அடங்கியே இருக்க வேண்டாம்...மனைவியும் அடங்கியே இருக்க வேண்டாம்....

    ஸ்ரீராம், இதற்கு முதல் பகுதியில் கடைசியில் நீங்கள் சொல்லியிருப்பது மிகவும் பொருந்தும். கணவன் மனைவிக்குள்ளும் நல்ல நட்புறவு இருந்துவிட்டால் நல்லதே!

    கீதா

    பதிலளிநீக்கு
  16. ஓ! இன்றைய பகுதிகள் எல்லாமே கிட்டத்தட்ட ஒரே கருத்தானதோ...கவிதையும்...

    ரத்தத்திலும் நரம்பிலுமாய்
    ஓடி //

    இதை வாசித்து வந்தப்ப...இது வெடிக்குமே ஒரு நாள் என்று நினைத்ததும் அடுத்த வரிகள் வந்து விழுந்துவிட்டன!!!!!

    கவிதையை ரசித்தேன் ஸ்ரீராம். உண்மையான

    வெளிப்படையாய் எங்கும் பேசி
    வென்றவர்
    எவரையும் நான் கண்டதில்லை.//

    ஸ்ரீராம், இதில் என் தனிப்பட்டக் கருத்து.....வெளிப்படையாகப் பேசுவதில் தவறே இல்லை ஆனால் அதில் வெளிப்படும் வார்த்தைகள் மிக மிக மிக முக்கியம். அது மற்றவரின் மனதைப் பாதிக்காமல் இருக்க வேண்டும்.

    நேர்மை, வெளிப்படை என்று சொல்லி கன்னபின்னா என்று பேசக் கூடாது. இது அலுவலங்களுக்கும் குடும்பத்துக்கும் பொருந்தும். சிலர் இதை அழகாகக் கையாள்வார்கள்.

    சொல்லும் விதம் என்று ஒன்று இருக்கு. இது ஒரு மனவளக் கலை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குணமாய் பதமாய்ச் சொன்னாலும் முகம் தூக்கிக் கொள்வது நடக்கிறதே...!!!

      நீக்கு
  17. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    நோக்க நோக்க
    நொடியில் நோக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  18. இன்றைய பதிவு தஞ்சாவூர் ரயிலடி மிக்ஸர் போல நன்றாக இருக்கின்றது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே..  அவ்வளவு சிறப்பா அதற்கு?  சாந்தி ஸ்வீட்ஸ்?

      நீக்கு
    2. நெல்லை ஜங்ஷன் சாந்தி ஸ்வீட்ஸ் மிக்சரை அடித்துக்கொள்ள இனி யாரேனும் செய்தால்தான் உண்டு. தஞ்சாவூர் ரயிலடி விபரம் எழுதுங்கள். நல்லா இல்லை என்று எனக்குத் தோன்றிவிட்டால், உங்களிடம்தான் refundக்கு வருவேன்

      நீக்கு
    3. முன்பு தஞ்சை ரயிலடியில் சாந்தி ஸ்வீட்ஸ் தவிர தமிழகம் எண்ணெய் பலகாரக்கடையோ எதுவோ ஒன்று இருக்கும்.  அதுவும் பேமஸ்.

      நீக்கு
  19. கட்டுரையிலும் "தொடரும்" போடுகிறீர்கள்?

    மற்றவர்களை பற்றிய கருத்துக்கள் தற்போது உங்கள் கட்டுரைகளில் அதிகம் வர ஆரம்பித்து விட்டது போல் தோன்றுகிறது. சப்ஜெக்ட் மாற்றலாம்.

    ஹண்டே நல்ல மனிதர்தான். ஆனால் கர்ணனைப் போல் சேராத இடம் சேர்ந்து தேர்தலில் தோல்வியுற்றார். அவருடைய புகழ் MGR காலத்தில் ஓங்கி இருந்தது.

    உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார்
    உறவு கலவாமை வேண்டும்!

    ​//ஒப்புக்கு வெளியே பேசி
    எதிராளி பற்றிய எண்ணங்களை
    ஒன்றிரண்டாக உள்ளே மறைத்த
    உண்மைகள் யாவும்
    இத்தனை வருடங்களில்
    மனம் நிரம்பி
    ரத்தத்திலும் நரம்பிலுமாய்
    ஓடி
    உடம்பே ஊதிப் போனமாதிரி
    உணர்வாயிருக்கிறது ​//

    ​உங்களுக்கு உண்மை என்பது
    மற்றவர்களுக்கு பொய்யாகலாம்.
    உண்மையோ பொய்யோ
    வேண்டாதவை என அவற்றை
    ​அவ்வப்போது நீக்கினால்
    ​மனமும் உடலும் சுத்தம் ஆகும். ​

    ​wedding invitation ஆக வியாழன் பதிவுகளில் தொடர்கிறீர்கள். விசேஷம் வருதா? ​

    ​இந்த வாரம் ஜோக்குகளில் தலை முக்கிய இடம் பிடித்து விட்டது. ஒன்று வழுக்கை தலை அல்லது காடு. கடைசி ஜோக் போல் எனக்கு நடந்தது. ​

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொஞ்சம் நீண்டால் தொடரும் போடவேண்டியதுதான்!  முன்னரே செய்ததுதானே!  மற்ற பகுதிகளையும் இனிக்க வேண்டுமே!
      மாதவர்களைப் பற்றிய கருத்துகளை...   அப்படிநினைக்கவில்லை.  என் சம்பந்தப்பட்டு, பொதுவான கருத்துகளும் இருக்கின்றனவே..  நடுவில் சினிமா விமர்சனம், அலுவலக அனுபவம்..  எல்லாம் வருகிறதே...
      ஹண்டே சேர்ந்த இடம் முதலில் நல்ல இடமாகத்தான் இருந்தது.  இன்றளவும் ஒப்பீட்டளவிலும் அது நல்ல இடம்!

      இங்கு உண்மை பொய் பிரச்னை இல்லை.   எல்லோரும் தான் செய்வது / சொல்வது  சரி என்றே நினைக்கிறார்கள்.  மாறுபட்டால் முறைக்கினார்கள்!
      உங்கள் வாக்கு பலித்து விசேஷம் வந்தால் சந்தோஷம்தான்.

      நீக்கு
  20. //ஜென்மத்தோடு பிறந்தது உடனே போகுமா?!//

    செருப்பால் அடித்தாலும் போகாது..

    பதிலளிநீக்கு
  21. ஒரு பழக்கடைக்காரர் தினமும் கல்லாவில் வைக்கும் பணம் காணாமல் போய்க்கொண்டிருக்க, சிசி டிவி வைத்துப் பார்த்ததில் ஒரு எலி//

    ஹாஹாஹாஹாஹா..எலிக்குக் சில பழங்கள் பிடிக்குமே....அந்தப் பழக்கடைக்காரர் பழங்களைப் பாதுகாத்து வைச்சிருக்கார் போல...எலிக்குக் கிடைக்கலை....இல்லை அந்தப் பழக்கடைக்காரர் மசால் வடை சாப்பிட்டுக்கிட்டே ரூபாய் நோட்டை வாங்கிருப்பார்.....எலி பார்த்திருக்கும் இந்த ஆளு பழமும் தர மாட்டேன்றார்...னு வடை வாசனை பார்த்து எடுத்துட்டுப் போயிருக்குமோ!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா...  ஹா..  நல்ல கற்பனை!  ஆனால் அதைத் துண்டுகளாக்காமல் பத்திரமாக வைத்திருந்ததே..  அதுதான் ஆச்சர்யம்!

      நீக்கு
  22. மில்லிமீட்டராக சோதனைக்குப்பதில் பயணிகளை ஸ்கானர் செய்துவிட்டால் போதாதோ? எதுவாக இருந்தாலும் அதிகக் கதிர்வீச்சு நல்லதில்லைதானே..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லைதான்.  மொபைல் பார்பபது கூட கண்ணுக்கு கெடுதல்தான்.  சட்டைப்பையில் வைத்திருந்தால் இதயத்தை பாதிக்கும்.  எல்லாவற்றிலும் மைனஸ்களும் உண்டே...

      நீக்கு
  23. இணையப்படம்! ஆஆஆ..........ஆஹா!

    ஸ்ரீராமிற்குத் தலை சுத்துமே!! இவ்வளவு உயரம்!

    கீதா

    பதிலளிநீக்கு
  24. /// சிலருக்கு அவர்களை பாராட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.  குறையாக ஏதாவது சொன்னால் முகம் சுருங்கி விடும்.  விலகி நிற்பர்..///

    இது மாதிரி எத்தனையோ.. பார்த்துப் பார்த்து அலுத்து விட்டது..

    பதிலளிநீக்கு
  25. நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
    மேற்சென்று இடித்தற் பொருட்டு

    பதிலளிநீக்கு
  26. /// இந்த எலி யாரின் மறுஜென்மம் என்று தெரிய வில்லை... ///

    /// இந்த எலி யாருடைய மறுஜென்மம் என்று தெரியவில்லை... /// என்று இருக்க வேண்டும்..

    கோயில்களைப் பற்றி எழுதி கல்லா கட்டும் பத்திரிக்கை ஒன்று இப்படித்தான் சிவனாரின் என்று எழுதும்..

    ஸ்ரீராம் அவர்களும் நவீனத் தமிழுக்கு மாறி விட்டாரோ!..

    இங்கே குழாயடியில் மருத்துவக் குறிப்பு சொல்லும் பெண் ஒருத்தி - " உங்க ரைட் ஹேண்டை எடுத்துக்கோங்க.. " - என்கின்றாள்..

    ரைட் ஹேண்ட் என்ன பரண் மேல் கிடக்கின்றதா?..

    என்னே தமிழ்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  எழுதும்போதே நினைத்தேன்.  எலியார் என்று சேர்த்துப் படிக்கலாம் என்றும் தோன்றியது.  எனினும் மாற்றி விட்டேன்!  வரி அமைப்பையே மாற்றி விட்டேன்!

      நீக்கு
  27. அரவணைத்துப் போ
    அடக்கிக் பார்
    அடங்கிப் போ

    எனக்கு மூன்று எழுத்துக்கள் மட்டும் தெரிகிறது....!

    பதிலளிநீக்கு
  28. Chat GPT/ பார்ட் தமிழில் கதைகள், கட்டுரைகள் தருமா?!!!!!!!!!!!!!!!!!!!!ஹாஹாஹாஹா ...Ghost எழுத்தாளர்கள் நிறைய உருவாகிடுவாங்க!
    அது plagiarism செய்யாதில்லயோ?

    கீதா

    பதிலளிநீக்கு
  29. இந்த நாகவல்லி சம்பிரதாயங்கள், உங்கள் அண்ணன் மகன் கல்யாண நிகழ்வுகள் படங்களில் போட்டிருந்த நினைவு.

    நாகவல்லி - என்ற பெயரைக்கேட்டாலே எனக்கு மணிச்சித்திரத்தாழ் படம் தான் நினைவுக்கு வரும்.

    கீதா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சந்திரமுகி?  ஆம்.  எங்கள் இல்லங்களில் திருமணங்களில் நடைபெறும் நிகழ்வு நாகவல்லி.

      நீக்கு
  30. மத்தபடி சௌக்கியம்தானே!!//

    ஹாஹாஹாஹாஹா நல்லா கேட்டாருயா கேள்வி!!!!

    வழுக்கைத்தலை - ஹாஹாஹா பின்னாடி - பாவம் அந்தாளு....

    ஷாம்பு - அர்த்தராத்திரியில்.......

    கடைசி ஜோக் பார்த்ததும் சமீபத்தில் ஓடிடி? திரையரங்கு எதில் வந்திருக்கு தெரியலை.....தமிழரசன் ன்னு ஒரு படம் வந்திருக்காமே! மருத்துவத்துறையில் நடக்கும் பணம் பறிப்பது பத்தி....ஸ்ரீராம்...நீங்க பார்த்திட்டீங்களா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விஜய் ஆன்டனி படம்.  சுரேஷ் கோபியும் நடித்திருக்கார்.  பார்த்து விட்டேனாக்கும்!

      நீக்கு
  31. இன்றைய பதிவில் இருக்கும் அத்தனை விஷயங்களும் ரசித்தேன். கூடவே, ஒரே நிலையில் இருந்து விட்டு பதவி உயர்வு பெற்றதும் மாறிவிடும் தோழர்கள் - இப்படியானவர்கள் இங்கேயும் உண்டு.

    ஜோக் அனைத்து ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வெங்கட்.  உங்களுக்கும் அந்த அனுபவம் உண்டு போலும்!

      நீக்கு
  32. ஆஆஆஆஆஆ இண்டைக்கு எந்தாப்பெரீய போஸ்ஸ்ட்ட்ட்ட்:))..

    அதுசரி அடக்கிட்டீங்களோ இல்ல அடங்கிட்டீங்களோ ஜொள்ளவே இல்லை ஹா ஹா ஹா..

    //பூனைக்கு யாரும் மணி கட்டமாட்டார்கள்.//
    இது கீழ விழுந்தாலும் மீஈஈ.. இல் மண் ஒட்டவில்லை எனும் கதையேயெல்லோ இருக்குதூஊஊஊஊ ஹா ஹா ஹா

    பூனைக்கு ஆராலும் மணி கட்டமுடியாது.. இதுதானே உண்மை:)).. நமக்கெதுக்கு ஊர்வம்ஸ்ஸ் வந்தமா படிச்சமா கொமெண்ட் போட்டமா எனப் போய்ட்டிருப்போம்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடங்கவில்லை. நண்பன் இப்போது பழைய மாதிரி என்னுடைய நட்பில்..

      நீக்கு
  33. டொக்டர் ஹண்டே சொல்லியிருப்பது மிக அழகாக இருக்கிறது.

    ஹா ஹா ஹா ஆறெழுத்து.. "அடங்கிப்போ" நல்லதுதான், ஆனா எல்லோராலும் முடியாதென நினைக்கிறேன், அடங்கிப்போகும் மனநிலை வருவதற்கு முதலில் ஆராவது அதிராபோன்ற ஒரு ஞானியாரிடம் உபதேசம் பெற்றால் மட்டுமே முடியுமாக்கும் ஹா ஹா ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடக்கம் அமரருள் உய்க்குமாம்!  கர்வம் அழிந்தால் அடங்கிப் போகலாம்!

      நீக்கு
  34. இம்முறை கவிதைபோல இல்லை, கதை வசனம்போல இருக்கிறது , ஆனாலும் நன்றாக இருக்கு..

    //வெளிப்படையாய் எங்கும் பேசி
    வென்றவர்
    எவரையும் நான் கண்டதில்லை.//

    உண்மைதான் ஆனால் வெளிப்படையாகப் பேசுவது நல்லதுதான், அதேநேரம் சிலர் இருக்கினம், நான் வெளிப்படையாகப் பேசிவிடும் ரைப், மனதில் ஒறும் வைத்திருக்க மாட்டேன், எனச் சொல்லிக்கொண்டு... அடுத்தவர்களைக் காயப் படுத்தி விடுவார்கள்.

    வெளிப்படையாகப் பேசுவது நல்லவிசயம் தான், அதேநேரம் அடுத்தவர் காயப்படாதபடியும் பார்த்துப் பேசப் பழக வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதேதான்.  மனம் நோகாதபடியும் அதைவிட அநியாயமாய் நடக்காமலும் இருக்க வேணும்!

      நீக்கு
  35. நியூஸ் ரூம் படிக்க ரசனையாக இருக்கிறது:))

    ஹா ஹா ஹா பொக்கிஷம்.. கடசிதான் சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // நியூஸ் ரூம் படிக்க ரசனையாக இருக்கிறது:)) //

      அவசரத்தில் தயாரித்தது!  வழக்கமாய் பானு அக்கா பிரசண்ட் செய்வார்.  அவர் வேறு வேலை இருந்ததால் இதை கவனிக்க முடியவில்லை என்றார்.  இரண்டு நாட்களாய் பார்த்துச் சிரித்திருந்த செய்திகள் நினைவிருக்க, அவற்றைப் பகிர்ந்து விட்டேன்!

      நீக்கு
  36. தஞ்சை ரயிலடி மிக்ஸர்!..

    சாந்தி ஸ்வீட்ஸ்
    பாம்பே ஸ்வீட்ஸ்
    தமிழக எண்ணெய் பலகாரம் - இவற்றில் எதுவும் இல்லை..

    நாற்பது ஆண்டுகளுக்கு முன்பான பாரம்பரியக் கடை....

    இப்போது அது இல்லை..

    பதிலளிநீக்கு
  37. படிச்சுட்டேன் ஸ்ரீராம். உங்கள் நண்பர் பற்றி எழுதி இருப்பதை நேற்றே முகநூல் மூலம் படிச்சேன். மற்றதையும் இப்போப் படிச்சுட்டேன். தொடர்ந்து திருமண அழைப்பிதழ்கள் வருவதன் காரணம் தெரியலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழைப்பிதழ்கள் பகிர்வு சும்மா ஒரு சுவாரஸ்யம்தான் கீதா அக்கா.  நன்றி.அழைப்பிதழ்கள் பகிர்வு சும்மா ஒரு சுவாரஸ்யம்தான் கீதா அக்கா.  நன்றி.

      நீக்கு
  38. ஜோக்குகள் எல்லாம் ஸோ, ஸோ! கவிதையும் ஏனோ/தானோ! : கி.ஆ.பெ. சொன்னதை வேறே எங்கேயோ துணுக்குச் செய்தியாப்படிச்சேன்/அல்லது கேட்டேன். நியூஸ் ரூம் மறுபடி சுறுசுறுனு கிளம்பி விட்டது போல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதெல்லாம்தான் ஜோக்ஸ் என்று அந்தக் காலத்தில் பத்திரிகையில் வந்திருந்திருக்கிறது!  நாமும் அப்போது ரசித்திருக்கிறோம்!  நியூஸ் ரூம் வியாழக்கிழமைகளில் வந்து கொண்டுதானே இருக்கிறது கீதா அக்கா?

      நீக்கு
  39. டாக்டர் ஹண்டேயின் கருத்துக்கள் அருமை.

    பலவித செய்திகளுடன் இன்றைய பகிர்வு நன்று.

    ஜோக்ஸ் ரசனை.

    பதிலளிநீக்கு
  40. மனிதர்களின் மனோபாவம் குறித்த பார்வை நன்று. தொடருங்கள். கவிதை, சுடும் உண்மை. பொக்கிஷம் சித்திரங்கள் ரசிக்க வைத்தன. சிறப்பான தொகுப்பு.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!