வியாழன், 27 ஜூலை, 2023

வானார்ந்த பொதியின்மிசை ...

 எச்சரிக்கை :  நான் ஏற்கெனவே ஃபேஸ்புக்கில் படித்து விட்டேன் என்று சொல்பவர்களுக்கு  :  அங்கு படித்ததன் கூட வேறு சில பகுதிகளும் இங்கு சேர்க்கப்பட்டிருக்கின்றன!



மேலே ஏறி உள்ளே செல்கையில் அந்தக் காட்சி என்னை நிறுத்தியது.  இலவச புத்தகங்களா?  ஆ..

ஆனால் அருகில் சென்றதும் போத்தீஸில் பர்ச்சேஸ் செய்த பில் வேண்டும் என்று போட்டிருப்பதைப் படித்ததும் விளங்கியது.

சமீப காலத்தில் போத்தீஸ் பக்கம் சென்றதில்லை.  அன்று க்ரோம்பேட் போத்தீஸ் செல்ல வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது.  அப்போதுதான் இதைப் பார்த்தேன்.  எல்லா கிளைகளிலும் இப்படி புத்தக ஆஃபர் வைத்திருக்கிறார்களா என்று தெரியவில்லை.  

உண்மையிலேயே பிரம்மாண்டமாய் கட்டி வைத்திருக்கிறார்கள்.  வழக்கம் போல ஒவ்வொரு மாடியிலும் ஒவ்வொரு ரகம் என்று வைத்து, ஒவ்வொரு மாடிக்கு செல்ல நான்கு பக்கமும் ட்ரான்ஸ்பரண்ட் கண்ணாடியாலான மின்தூக்கி, மற்றும்  உங்கள் முழு உருவம் தெரியும் கண்ணாடிக்கு அருகே ஏறும்படி எஸ்கலேட்டர் வைத்திருக்கிறார்கள்.  ஒவ்வொரு மாடியிலும் ஏராள கலெக்ஷன் என்பது மட்டுமல்லாமல் ஆர்ப்பாட்டமான அலங்காரம் செய்திருக்கிறார்கள்.  மக்கள் அனைவரும் ஜவுளி வாங்குகிறார்களோ இல்லையோ, செல்ஃபோன் கேமிராவை ஆன் செய்தே அலைகிறார்கள்! நம்மை நாம் முழுவதும் பார்க்கும் பெரிய கண்ணாடிகள் ஒரு அட்ராக்ஷன்.

உள்ளேயே நாம் பொருள் வாங்கிய பில்லை காட்டினால் ஒவ்வொரு மூலையிலும் அமர்ந்திருக்கும் பெண்மணி கையில் மெஹந்தி வைத்து விடுகிறார்.

காசிருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்!  நான் அந்தக் கடைக்கு செல்வதற்கு முதல் நாள்தான் 2,000 ரூபாய் நோட்டு செயலிழந்திருந்தது.  இருக்கும் நேரத்தில் அதைக் கொடுத்துச் செலவழிக்க மக்கள் கிளம்பி  சாரி சாரியாய் வந்து விட்டார்கள் போல...  நல்ல கூட்டம்.  யார் சொன்னார்கள், இந்தியா ஏழை நாடு என்று!

புடைவை செக்ஷனில் கைக்குட்டை போல மடித்து வைத்திருக்கும் புடைவையை எதையாவது கைகாட்டினால் அதை எடுத்து விசிறி மடிப்பு பிரிப்பது போல சர்ரென்று விசிறி ஒரு முழு புடைவையாக காட்டுகிறார்கள்.

GRT உட்பட நிறைய கடைகளில் இத்தனை ரூபாய்க்கு மேல் வாங்கினால் பரிசு என்று சொல்லி சின்னச்சின்ன குண்டு சட்டிகள் கொடுப்பார்கள்! அதுவும் நீங்கள் கூகுள் பே செய்தால்தான்! இவர்கள் காசை எப்படி கொடுத்திருந்தாலும் பில் சரிபார்த்து டோக்கன் வழங்கி புத்தகங்கள் கொடுக்கிறார்கள்.

நீங்கள் வாங்கும் மதிப்புக்கு தக்கவாறு A1 முதல் E வரிசை வரை...  வெளியே வரும்போது உங்கள் பில்களை சரிபார்த்துவிட்டு இந்த வரிசையில் ஏதாவது ஒன்று அச்சிட்ட டோக்கனை கையில் கொடுத்து விட்டால் நீங்கள் அங்கே போய் அந்த வரிசையில் இருக்கும் உங்களுக்குத் பிடித்த ஒரு புத்தகம் தெரிவு செய்து கொள்ளலாம்.  எனக்கு D2 வந்தது. 

என்ன நீங்கள் விரும்பும் புத்தகங்கள் வாங்க முடியாது.  அங்கிருப்பவவற்றில் பார்த்து தெரிவு செய்து கொள்ள வேண்டியதுதான்.  முன்னரே வந்து மற்ற நல்ல புத்தகங்களை லாவிக் கொண்டு சென்று விட்டார்களா என்றும் தெரியவில்லை.  அதாவது நான் அந்த D2 வரிசையில் இருப்பவற்றில் மட்டும்தான் செலெக்ட் செய்யலாம்.  நிறைய உதவாத புத்தகங்கள்தான் கண்ணில் பட்டன என்றாலும் நல்ல முயற்சி.  

நான் என்ன புத்தகம் தெரிவு செய்திருப்பேன்?.


படத்தில் வலது கோடியில் ஒரு கறுப்புப்பெண் நிற்கிறார் அல்லவா,  அவர் உள்நாடா, வெளிநாடா தெரியவில்லை.  அவர் தலையில் கிரீடம் போல ஒரு வளையம் வைத்திருக்கிறார் பாருங்கள்..  அதை வாங்க அவர் சுமார் ஒரு மணிநேரம் எடுத்துக் கொண்டார்.

பாஸ் உறவினர்களுடன் அவர்கள் விசேஷத்துக்கு புடைவைகள் எடுக்க வந்திருந்தார்.  நானும் கூட வந்திருந்தேன். 

இவர்கள் புடைவை வாங்கும்போது அங்கு ஓரமாய் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது இந்தப் பெண் ஒரு கோடியிலிருந்து ஒவ்வொரு வளையமாக எடுத்துக் கொண்டு இந்தக் கோடிக்கு வந்து - இங்குதான் முழு உயர கண்ணாடி இருந்தது - தலையில் வைத்து அழகு பார்த்து சென்றார்.  கடையில் உள்ளவர்களும் அவரை வேடிக்கை பார்க்க, அவர் கவலைப் படாமல் அவர்களை பார்த்து ஒவ்வொரு முறையும் களுக்கென்று ஒரு சிரிப்பு சிரித்தபடி தன் வேலையில் மும்முரமாக இருந்தார்.  அப்புறம் அவரை இங்குதான் பார்த்தேன்.  எப்போது எடுத்தாரோ...

வாசலில் அட்டையால் செய்த சில பொருட்களை விற்றுக் கொண்டிருந்த சுமார் பத்து வயதுச் சிறுவன், நடுநடுவே ஓய்வெடுக்கும்போது அங்கு வந்து விளையாடிக் கொண்டிருக்கும் தன்னொத்த குழந்தைகளை பார்த்தபடி இருந்தது வருத்தமாக இருந்தது.  வாழ்க்கையின் விளையாட்டு.  சற்றே நிழலில் அமர்ந்திருந்த அந்த ஏழைத்தாய் மகனை விற்பனைக்குச் செல்ல சத்தம் கொடுத்துக் கொண்டே இன்னும் சில அட்டைகள் தயாரிப்பதில் ஈடுபட்டிருந்தார்.  அவர் மடியில் சில மாத வயதுடைய குழந்தை ஒன்று..  அப்பன் எந்த டாஸ்மாக்கில் கிடக்கிறானோ...

காரை எடுத்து வந்து தரும் நபருக்கு கொடுக்கும் பத்து ரூபாயை இந்தப் பையனுக்கு கொடுக்கலாம் என்று பார்த்தால்.  பையன் வாங்க மறுத்து விட்டான்.  தாயைப் பார்த்தால் அவரும் 'வேண்டாங்க' என்று மறுத்து விட்டார்.  ஏழ்மையில் நேர்மை.  உழைப்பின் மேன்மை.

வாலெட் பார்க்கிங்கில் காரைக் கொடுத்து விட்டு வேலை முடிந்து வந்து ஹைடிராலிக்சில் அது வரிசையில் வந்து இறங்கும் வரை காத்திருப்பது ஒரு Bore.

சரி, இப்போது நான் தெரிவு செய்த புத்தகம் இது..  உங்களில் ஒருவன் என்று ஒரு புத்தகம் இருந்தது.  அதை எடுக்கப் பிடிக்கவில்லை.  கல்கி, ஜெயகாந்தன் என்னிடம் ஏற்கெனவே இருக்கின்றன.  எனவே இதை செலெக்ட் செய்தேன்.


இதை வாங்கி கொண்டு கிளம்பும்போது அவர்களாக அழைத்துக் கொடுத்தது..


இதில் தலாய்லாமாவும் என்னிடம் ஏற்கெனவே இருக்கிறது.  அதற்கு பதில் அவர்கள் வேறு எதுவும் தரமாட்டேன் என்று சொல்லி விட்டார்கள்!

================================================================================================
ராமலக்ஷ்மி அவர்களின் 'முத்துச்சரம்' பக்கத்தில் வெளியிட்ட ஒரு கருத்துரையே கவிதையாய் இந்த வாரம்....

சில எதிர்பார்ப்புகள் 
ஏமாற்றமேற்படுத்தலாம்.
சில நிதர்சனங்கள் 
சலிப்பேற்படுத்தலாம் 
அந்த நிமிட அற்புத உணர்வோடு 
அப்பால் நகர்ந்துவிட்டால் 
நினைவுகளாவது 
சாசுவதமான இருக்கும் 
இனிமையாய் 

================================================================================================



நடிகர் திலகம் சிவாஜி கணேசனை 1967 ம் ஆண்டு பொம்மை சினிமா இதழுக்காக, அன்றைய முன்னணி நாயகி ஜெயலலிதா ஒரு நேர்காணல் செய்துள்ளார். ஒரு தேர்ந்த பத்திரிகையாளரைப் போல ஜெயலலிதா எழுப்பிய கேள்விகளுக்கு, தனக்கே உரிய பாணியில் பதிலளித்துள்ளார் நடிகர் திலகம்.

சுவாரஸ்யமான அந்தப் பேட்டி...

ஜெயலலிதா: உங்க பெயருக்கு முன்னாலே சிவா‌ஜின்னு ஒரு பட்டம் சேர்ந்திருக்கிறதே, அது எப்படி வந்தது?
சிவா‌ஜி: அதுதான் ஊர் அறிஞ்சதாச்சே.
ஜெயலலிதா: எனக்குத் தெ‌ரியாதே. அதனாலே...
சிவா‌ஜி: அப்போ ச‌ரி. சொல்லிட வேண்டியதுதான். ஏழாவது சுயம‌ரியாதை மகாநாட்லே சத்ரபதி சிவா‌ஜி நாடகம் நடந்தது. பெ‌ரியார் அவர்கள் மகாநாட்டுக்கு தலைமை வகிச்சாங்க. நாடகத்திலே சிவா‌ஜியாக நடிச்ச என்னைப் பார்த்து பாராட்டிவிட்டு, சிவா‌ஜிங்கிற பட்டத்தையும் கொடுத்தாங்க. அன்னேலேர்ந்து சிவா‌ஜி கணேசனாயிட்டேன்.
ஜெயலலிதா: லைலா - ம‌ஜ்னு, ரோமியோ - ஜுலியட் போன்ற இலக்கியங்கள்ளே வரும் காதலர்களைப் பற்றி படிச்சிருப்பீங்க. அந்த மாதியான காதலருங்க இருந்திருப்பாங்கன்னு நீங்க நினைக்கறீங்களா?
சிவா‌ஜி: காதலிச்சா அந்த மாதி‌ரி காதலிக்கணும் என்கிறதுக்காகத்தான் எழுதியிருக்காங்க. கொஞ்ச நாள் காதலிச்சிட்டு, கைவிட்டுட்டுப் போகக் கூடாது. காதல் என்பது கடைசிவரைக்கும், உயிர் போனா கூட இருக்கணும்னு சொல்றதுக்காகதான் இது. நாடகமும், சினிமாவும், இந்த மாதி‌ரி கதைகளும் வெறுமே படிச்சிட்டு விடறதுக்காக இல்லே.
ஜெயலலிதா: அம்மாதி‌ரியான காதலர்களை இப்போதுள்ள உலகத்திலே காண முடியும்னு நம்பறீங்களா?
சிவா‌ஜி: நான் காதலிச்சது கிடையாது. இப்போ நீ தனி ஆள். இனிமேதான் நீ காதலிக்கப் போறே. நீதான் சொல்லணும்.
ஜெயலலிதா: வேறு வழியே கிடையாது என்ற நிலைக்கு வரும்போது, தற்கொலையைத் தவிர, வேறு நிலை இல்லை என்ற சூழ்நிலைக்கு வரும் போது ஒருவர் தற்கொலை செய்து கொள்றது பற்றி என்ன சொல்லுறீங்க?
சிவா‌ஜி: தற்கொலை கோழைத்தனம் மட்டும் இல்லே, அது பெ‌ரிய தவறும்பேன்.
ஜெயலலிதா: நான்தான் வேறு வழியே இல்லேன்னு சொல்லிட்டேனே. உதாரணமா ஒரு பெண் இருக்கா. அவ கணவனால் கைவிடப்பட்டு விடறா... அவளுக்கு படிப்பும் கிடையாது, என்ன செய்வாள்?
சிவா‌ஜி: பாத்திரம் தேய்க்கிறது, மூட்டைத் தூக்கறது, ஏதாவது நாணயமா வேலை செஞ்சு பிழைக்கிறது. வேலை இல்லாதவங்க, படிக்காதவங்க எல்லாரும் செத்தாப் போயிட்டாங்க?
ஜெயலலிதா: சின்ன வயசிலே நீங்க நாடக மேடையில் நடிக்க ஆரம்பிச்சீங்க-இல்லையா?அப்போ ஏதாவது நினைச்சதுண்டா.அதாவது எதிர்காலத்தை பற்றி.இப்படி ஒரு நடிகரா வருவோம்னு நினைச்சதுண்டா?
சிவாஜி: இப்படி ஒரு நடிகனாகிவிடுவேன்னு கனவுகூட கண்டதில்லை. நடிக்க வேண்டும்கிற ஒரே ஆர்வம் தான் என்னை மேடைக்கு துரத்திச்சு. தவிர, வருங்காலத்தைப் பற்றியோ,எதிர்காலத்தைப் பற்றியோ நினைக்க முடியாத நிலை. அப்போது அடுத்தவேளை சோத்துக்கே என்ன செய்யறது? எங்கே போறது என்ற நிலையில் எதிர்காலத்தைப் பற்றி நான் நினைக்கலே. அதுக்கு நேரமே கிடைக்கலேன்னு சொல்வேன்.
ஜெயலலிதா: தமிழ் படங்கள் இப்போ முன்னேறியிருப்பதா நினைக்கிறீங்களா?அல்லது தரம் குறைந்து விட்டதாக எண்ணுகிறீர்களா?
சிவாஜி: எல்லாத் துறையிலும் நிச்சயமாக முன்னேற்றம் அடைஞ்சிருக்கு. அதேசமயம் சில படங்கள் மக்களது ரசனையை குறைச்சிடும் போலிருக்கு. இந்த மாதிரிப் படங்கள் நூற்றுக்கு இருபத்தஞ்சு இருக்கும்.ஆக நாம் மேலே ஏறினால்,இந்தப் படங்கள் கொஞ்சம் நம்மை கிழே இழுத்து விட்டுடுது.
ஜெயலலிதா: எப்படி?
சிவா‌ஜி: இப்ப நீங்கள்ளாம் கால் சராய் போட்டு நடிக்க வந்துட்டதனாலேதான்.
ஜெயலலிதா: தயா‌ரிப்பாளர்கள் அப்படி போடச் சொல்றாங்களே.
சிவா‌ஜி: ஜனங்களோட வீக்னஸை தயா‌ரிப்பாளர்கள் பயன்படுத்திக்கிறாங்க. நீங்க இன்னும் கொஞ்சம் பிகு வாக இருக்கலாம்.
ஜெயலலிதா: பிகுவாக இருந்தால், நீங்க வேண்டாம்னு சொல்லிவிடுவீங்களே. புதுசா வரும் நடிகைங்க என்ன செய்வாங்க? எதிர்க்க முடியுமா?
சிவா‌ஜி: தப்பு. கால்சராய் போட மாட்டோம்னு சொன்னோம். வேண்டாம்னு தயா‌ரிப்பாளர் சொல்லிட்டாருன்னு வெளியே தெ‌ரிஞ்சா, தயா‌ரிப்பாளரைத்தான் திட்டுவாங்க.
ஜெயலலிதா: மிகுந்த திறமைசாலிகளுக்கும் சிலசமயம் அவங்க மேற்கொண்டு இருக்கும் தொழிலிலேயே சவாலாக சில விசயங்கள் முளைச்சிடும். அதுபோல சிறந்த நடிகரான உங்களுக்கே,சவாலா இருந்த வேஷம் எது?
சிவாஜி: நல்ல கேள்வி. கப்பலோட்டிய தமிழனாக நடிச்சேனே, அதுதான் உண்மையிலேயே எனக்கு சவாலாக இருந்த வேடம். ஏன்னா கப்பலோட்டிய அந்த பெருமகனாரை நேரில் பார்த்த பலர் இன்னைக்கும் நம்மோடயே இருந்துக்கிட்டிருக் காங்க. கதைக்குள்ள வரும் பாத்திரங்களை ஏற்று நடிப்பது சுலபமான காரியம். ஆனால் நமது வாழ்க்கையில் சந்தித்த, அதுவும் சமீப காலம் வரைக்கும் இருந்த ஒரு பெரிய மனிதரைப் போல நடிக்கிறோம் என்று சொல்றபோது, அந்த நடிப்பை எல்லோரும் ஏத்துக்கணும். அதிலே மாறுபாடு எழக்கூடாது. பெரியார் அவங்களைப் போல நடிக்கிறோம் என்றால், பாக்கிறவங்க 'பெரியாரைப் பார்ப்பதுபோலவே இருந்ததுன்னு சொல்லணும். அப்போதான் நடிப்பு பூரணத்துவம் பெறும். அந்த மாதிரியான ஒண்ணுதான் இந்தக் கப்பலோட்டிய தமிழன் வேஷம். இதில் நான் நடிச்சதைப் பார்த்துட்டு, அந்தப் பெரியவர் வ.உ.சி.யின் மகன் 'என் அப்பாவை நேரில் பார்த்ததுபோல இருந்தது' என்று சொன்னார். ஒரு வெற்றியாகத்தான் நான் இதைக் கருதுகிறேன்.
ஜெயலலிதா: சில நாவல்கள் படிக்கிறோம், கதைகளைக் கேட்கிறோம். ஆஹா!அந்த மாதிரி வேஷம் நமக்கு வரக் கூடாதா? கிடைக்காதா? என்று நினைக்கிறோம். அந்த மாதிரி நீங்க எதிர்பார்த்து நடிச்ச வேஷம் ஏதேனும் இருக்கா?
சிவாஜி: கட்டபொம்மன் வேஷம் அப்படிப்பட்டது. கட்டபொம்மன் கதையை தெருக்கூத்தா நான் பார்த்தேன். நான் வீட்டை விட்டு நாடகத்தில் போய்ச்சேர தூண்டுதலாக இருந்ததே இந்த கட்டபொம்மன் கதைதான்.
ஜெயலலிதா: இப்போ புதுசா ஒரு பிரச்சினை தலை தூக்கியிருக்கு.முத்தக் காட்சிகளை அனுமதிப்பதா இல்லையான்னு? நீங்க என்ன சொல்றீங்க?
சிவாஜி: சே..சே..வெட்கக்கேடு. முத்தம் கொடுக்கிறதை காட்டவே கூடாது. முத்தம் கொடுக்கிறது மாதிரி நடிக்கணும். மூடிக்காட்டுவதுதான் கலை. பச்சையா உள்ளதை அப்படியே காட்டினா அது கலையாகாது. அதனால் முத்தம் கொடுப்பதையெல்லாம் திரையிலே காட்டக்கூடாது என்பதுதான் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.
ஜெயலலிதா: உங்களுக்கு எவ்வளவோ விசிறிகள் இருக்காங்க.நீங்க யாருக்காவது விசிறியாக இருந்ததுண்டா?
சிவாஜி: ஓ!இப்பவும் நான் விசிறியாக இருக்கேன். பி.ஆர்.பந்துலு மேடையில் நடிச்சு வந்தபோது, நான் அவருடைய விசிறிகளில் ஒருவன். ஹிந்தி நடிகை நர்கீஸின் விசிறி நான். சார்லஸ் போயர் (Charles Boyer) ரசிகன் நான்.
ஜெயலலிதா: உங்களுக்கு லதாவின் பாட்டு என்றால் ரொம்பவும் பிடிக்கும் போலிருக்கே?
சிவாஜி: என் தங்கையாச்சே.. பிடிக்காம இருக்குமா. அது மட்டுமா? சமீபத்திலே நான் ஒரு நியூஸ் கேள்விபட்டேன். இண்டர்நேஷனல் லெவல்லே உலகம் பூராவும் ஒலிபரப்பப்படட பாடகர்களின் வரிசையில், லதாவின் பாட்டுக்கள் நாள் ஒன்றுக்கு இருபது மணிக்கும் மேலே ஒலிபரப்பாகுதுன்னு சொன்னாங்க. உலகிலேயே எந்தப் பாடகிக்கும் இல்லாத தனி கவுரவம் என் தங்கச்சிக்கு இருக்கு.
ஜெயலலிதா: நீங்க நாடகங்களிலே நடித்து வந்த காலத்தில் சினிமாவுக்கு அடிக்கடி போவதுண்டா?
சிவாஜி: அப்ப மட்டும் என்ன?இப்பவும்ந்தான். மெட்ராஸ் சிட்டியிலே நான் பார்க்காம படமே ஓடாது. நேத்து ராத்திரிகூட ஒரு குப்பை படத்துக்கு நான் போயிட்டு வந்தேன்.
ஜெயலலிதா: அந்த மாதிரியான நாளிலே நீங்க ரொம்ப விரும்பி பலமுறை பார்த்த படம் எது?
சிவாஜி: ருடால்ப் வாலண்டினோ நடித்த 'தி ஷீக்' என்ற படம்.
ஜெயலலிதா: ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் சில சம்பவங்கள் மறக்கமுடியாததாக அமைந்துவிடும். அந்த மாதிரி உங்க வாழ்க்கையிலே ஏதாவது நடந்திருக்கா?
சிவாஜி: எகிப்தின் தலைநகரான கெய்ரோவில் ஆசிய ஆப்பிரிக்க படவிழாவின் போது நடந்தது. அன்னிக்கு விழாவுக்கு வந்த படங்களின் ரிசல்ட் சொல்றாங்க. நான் பின்னாலே உட்கார்ந்திருந்தேன். அங்கிருந்தவங்க எல்லாம் என்னை ஏதோ டெக்னீசியனு நினைச்சிருந்தாங்க. அங்கே வந்திருந்தவங்களெல்லாம் பெரியவங்க, உயரத்திலும் ஏழடி. அங்கே பல பெரிய நாடுகளிலிருந்து பல கலைஞர்கள் கூடியிருந்தாங்க. நீதிபதிகள் எல்லோரும் வந்தாங்க. கட்டபொம்மன்தான் சிறந்த படம். கட்டபொம்மனா நடிச்ச நான்தான் சிறந்த நடிகன்னு சொன்னாங்க. என் பேரைச் சொல்லி கூப்பிட்டாங்க. நான் எழுந்து நின்னேன். வாழ்க்கையில் நான் எதற்கும் சாதாரணமா மசிஞ்சு கொடுக்காதவன். நடுக்காட்டில் புலி துரத்தி வந்தபோதுகூட அசையாமல் இருந்தவன். ஆனா அன்னிக்கு கெய்ரோவில் நடந்த அந்த சம்பவம் என்னை அசத்திட்டது. என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பத்மினி என்னை தாங்கிப் பிடிச்சிட்டாங்க. இல்லாட்டி நான் நிச்சயம் விழுந்திருப்பேன். நான் என்னையே மறந்து உணர்ச்சி வசப்பட்டது அந்த ஒரு நாள்தான்.

நன்றி இணையம்.

=============================================================================================

இணையத்தில் ரசித்த படங்கள் இரண்டு..



==============================================================================================


நியூஸ் ரூம்
பானுமதி வெங்கடேஸ்வரன்

வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனுமதிக்கப்பட்ட அளவு தங்கத்தை விட அதிகமாக எடுத்து வந்து கோவிலுக்கு செல்வதற்காக எடுத்து வந்திருக்கிறோம் என்று சொல்வது அதிகரித்திருக்கிறது - சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தகவல்.

நள்ளிரவில் நடுரோட்டில் பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடிய ரவுடிகள், வழி விடச் சொல்லி கேட்ட ஆட்டோக்காரரையும், அவரது சகோதரரையும் வெட்டிக் கொலை.

விருதுநகரில்​ டாஸ்மாக்கில் கொள்ளையடித்தவர்கள் கஞ்சா விற்பனையில் மாட்டிக் கொண்டனர்.

பீகார்ல ஒரு கிராமத்துல கடந்த ஒரு வாரகாலமா தினமும் ராத்திரி குறிப்பிட்ட நேரத்துல தொடங்கி பலமணி நேரத்துக்கு மின்தடை ஏற்பட்டதாம்.  பொறுத்துப் பொறுத்துப் பார்த்து மக்கள் ஒரு குழு அமைச்சு தேடினப்ப சந்தேகப்படும்படி சிக்கின ஒருத்தனைப் பிடிச்சு உதைச்சா, 'அடிக்காதீங்க... அவன..  அவர  அடிக்காதீங்க..  யானே கள்வன்... ச்சே கள்வி" ன்னு ஒரு பொண்ணு வந்துச்சாம்...  அந்த கிராமத்துப் பொண்ணுதான்.  காதலனை ரகசியமா சந்திக்க இப்படி ஒரு ஏற்பாடாம்...  காலம்டா சாமி!


போன வாரம் ஒரு தக்காளி நியூஸ் சுட்டிக் காமிச்சேனா...   இந்த வாரம் ஒண்ணு...  இந்த காலகட்டத்தில் இந்த வருடம் தக்காளி விலை உயரும்ன்னு அஞ்சாங்கத்துலயே போட்டிருக்காம்...    ஆற்காடு சீதாராமையர் பஞ்சாங்கம்தான் அது.  கேட்டா என்னமா விளக்கம் சொல்றாங்கன்னு போய்ப்படிச்சுப் பாருங்களேன்...

பிரம்மோஸ் ஏவுகணையை தாக்குப்பிடிக்க முடியலைன்னு உக்ரைன் ராணுவம் சொல்லி இருக்காம்.  ரஷ்யா - உக்ரைன் போர்ல ரஷ்ய-இந்திய கூட்டுத்தயாரிப்பான பிரமோஸ் (ரஷியால அதற்கு வேறு பெயர்) உபயோகபப்டுத்தியபோது நடந்ததைச் சொல்லி இருக்காங்க...  உண்மைல இந்தியா கிட்ட அதைவிட அதிக தூரம் பாயக்கூடிய பிரமோஸ் இருக்காம்...

==================================================================================================

பள்ளி வயதில் மனப்பாடப்பகுதி! இதைப் பார்த்ததும் பள்ளி நாட்கள் நினைவுக்கு வந்தது!


====================================================================================

பொக்கிஷம் :-


பீரங்கி மூக்கர்!


கேக்கிலேயே எறும்பா?

என்னவாம்?


ஹிஹிஹி....

ஹா.. ஹா.. ஹா...

125 கருத்துகள்:

  1. இன்றைய கதம்பம் ரசிக்கும்படி இருக்கிறது

    பதிலளிநீக்கு
  2. போத்தீசில் விலை மலிவா இல்லை சென்னை சில்க்ஸா? ஏன் அவ்வளவு தூரம் சென்றீர்கள்? மாட மாளிகைகள் அதனருகே ஏழைக் குடிலை நினைவுபடுத்தியது, மக்களும் ஏழைப் பணிப் பெண்களும் பகுதி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரிய காரணம் எதுவும் இல்லை.  கார் பார்க்கிங் வசதி, சட்டென நாம் செல்லுமிடத்தின் அருகே அமைந்திருப்பது, இங்கும் நிறைய நிறைய வெரைட்டிஸ் கிடைப்ப்பது..  எல்லோருமே கொள்ளைக்காரர்கள்தான்!  ஆனால் எந்த விலை வகையிலும் நாம் எடுக்கலாம்.  எல்லாம் கிடைக்கும்!

      ஆம்..  அந்த நகைமுரண்தான் எனக்கும் நினைவுக்கு வந்தது!

      நீக்கு
  3. போணியாகாத புத்தகங்களைத் தலையில் கட்டிவிடுகிறார்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏனோ எனக்கும் அப்படித் தோன்றியது.  ஆனாலும் நான் வாங்கி இருப்பது ஓரளவு சுவாரஸ்யமான புத்தகம்.  என்ன, இன்னும் பிரிக்கத்தான் இல்லை!

      நீக்கு
  4. கிளியைத் தங்கக்கூண்டில் வைத்தால் அதற்கு சந்தோஷமா? வீட்டில் விலையுயர்ந்த விளையாட்டுச் சாமான்களோடு இருப்பதைவிட தெருவில் புழுதியில் அளைவதைத்தானே குழந்தை விரும்பும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி வளரும் குழந்தைகள்தான் ஆரோக்கியமாக வளர்கின்றனர் என்று எனக்குத் தோன்றும்.

      நீக்கு
  5. சிவாஜி பேட்டி ரசிக்கும்படி இருந்தது

    பதிலளிநீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா... வணக்கம். காக்கும் கடவுளுக்கு நன்றி சொல்வோம்.

      நீக்கு
  7. இலவசம் என்றால் தேவையோ இல்லையோ எதையும் கேட்டு வாங்கி கொள்வது தமிழர்களுடைய பிறவிக்குணம். புத்தகங்கள் கொடுக்கப்படுவது நல்லதே. ஆனால் உபயோகம் உள்ள அல்லது ஒவ்வொருவரும் வைத்திருக்க வேண்டிய புத்தகமாக இருப்பது நல்லது.

    சொந்தக்கவிதை போய் இந்த வாரம் அடுத்தவர் கவிதை! கருத்து சரியானாலும் கவிதை கவிதையாக இல்லை என்பது என் கருத்து.

    நினைவுகளே இனிமை
    எதையும் நினைக்காதபோது.

    மனப்பாட செய்யுள் மனோன்மணீயம் சுந்தரனார் எழுதியதா?

    புகைபோக்கி ஜோக் மட்டும்தான் ஜோக்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெ கே அண்ணா அது ஸ்ரீராம் எழுதிய கவிதைதான். அதைச் சொல்லியிருக்கிறாரே! அங்கு அவர் கருத்தில் இட்டதை கவிதையாய் என்று...

      கீதா

      நீக்கு
    2. நீங்கள் சொல்வது சரி.  ஆனால் எல்லோர்க்கும் உபயோகமான புத்தகம் என்றால் என்ன?  பிரச்சார புத்தகங்கள்தான் அதிகம்!

      அடுத்தவர் கவிதை அல்ல, என் கவியே..  கீழே கீதா ரெங்கன் சொல்லி இருப்பது சரி!

      எதையும் நினைக்காதபோது நினைவுகள் ஏது?!

      மனப்பாட செய்யுள் பற்றி கீழே கரந்தையார் கருத்தை காண்க!

      நீக்கு
  8. யோசிக்க வைக்கும் ஒரு கேள்வி உங்களுக்கு:

    பூமி தோன்றியதிலிருந்து இன்று வரை என்றால்
    அந்தப் புத்தகம் குறிப்பிடும் 'இன்று வரை'
    என்று வரை?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் என்றைக்கு அதை எழுத்தினாரோ அன்று வரை.

      நீக்கு
    2. வாங்க ஜீவி ஸார்..  மகிழ்ச்சிக்குள்ளாக்கும் வரவு... பூமி தோன்றியபோது திரேதா யுகம் த்வாபர யுகம் என்றெல்லாம் பெயரிடப்பட்டதோ இல்லையோ,  இந்த கலிகாலம் வரை என்று சொல்லலாம்.  KGG சொல்லி  சொல்லலாம்.

      நீக்கு
    3. அந்தப் புத்தகம் வெளியான வருடம் பாருங்கள். அது வரை என்று எடுத்துக் கொள்ளலாம் அல்லவா?

      நீக்கு
    4. எழுதி முடித்து முயற்சிகள் தடைகள், தாமதம் காரணமாக இரண்டு வருடங்கள் தாமதமாக புத்தகம் வெளியாகி இருந்தால்...?!

      நீக்கு
  9. ஹப்பா நான் ஃபேஸ்புக்கில் இல்லை!!!!! இருந்தாலும் இங்கும் வாசிப்பேன் என்பது வேறு விஷயம்!!!!!! ஹிஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அங்கு சுருக்கமாக கொடுத்திருந்தேன்..  இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்.

      நீக்கு
  10. போத்தீஸ் பிரம்மாண்டமாய்தான் கட்டி வைக்கிறாங்க. திருவனந்தபுரத்திலும் கூட பிரம்மாண்டம்.

    இலவச புத்தகங்கள் ஈர்க்கிறதே. ஒரு வேளை சந்தையில் விற்கப்படாத புத்தகங்களை இப்படிப் போட்டிருப்பாங்களோ? எழுதியவர்களுக்கு ஏதேனும் கிடைக்குமா?

    கீதா

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    இன்றைய கதம்பம் அருமையாக உள்ளது. முதல் பகுதியில் போத்தீஸின், தளத்தை அமர்க்களமாக விமர்சித்த விதத்தை ரசித்தேன்.

    இப்போதுதான் இந்தச் சலுகைகள் வந்திருக்கிறது போலும்..இங்கும் போத்தீஸின் உதயம் ஆரம்பமாகியிருக்கிறது எங்கள் மகன், மருமகள் வெளியில் சென்று விட்டு வந்த போன மாதம் அன்றொரு நாள் கூறினார்கள். பல அடுக்கு மாடிகளை உள்ளே சென்று பார்த்து விட்டு வந்துள்ளார்கள். மேல் விபரங்கள் நானும் கேட்கவில்லை. நான் நெல்லையில் போத்தீஸுக்கு அங்கு செல்லும் போது போயிருக்கிறேன். அப்போது இந்த புத்தக இலவசம் இல்லையென நினைக்கிறேன்.

    /புடைவை செக்ஷனில் கைக்குட்டை போல மடித்து வைத்திருக்கும் புடைவையை எதையாவது கைகாட்டினால் அதை எடுத்து விசிறி மடிப்பு பிரிப்பது போல சர்ரென்று விசிறி ஒரு முழு புடைவையாக காட்டுகிறார்கள். /

    ஹா ஹா ஹா.. ஒரு புடவை கைக்குட்டையாக மாறியிருப்பதை ரசித்தேன்.

    அந்த ஏழைச்சிறுவனையும், அவரைப்பற்றி நீங்கள் சொல்லியிருப்பதையும் அவர்களது நேர்மையையும் நினைத்தால் மனம் இளகுகிறது. எவ்வளவு நல்ல மனிதர்கள்.

    கடையில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக அலைந்து தலை கீரிடம் வாங்கிய பெண் புகைப்படத்தில் பார்த்தால் வெளிநாடு போலத்தான் தோன்றுகிறது. அவருக்கும் ஒரு புத்தகம் இலவசமா? சரி.. அவர் எதை தேர்வு செய்திருப்பார்?

    நீங்களும் அங்கிருக்கும் / அங்கு நடைபெற்ற எத்தனை விஷயங்களை கண்களாலும், மனதாலும் கிரஹித்து கைக்குட்டையாய் மடித்து எடுத்து வந்து இங்கு விசிறியாய் உதறி, உங்கள் அனுபவங்களை ஒரு புத்தகமாக்கி தந்துள்ளதைப் பார்த்தும், உங்கள் எழுத்தாற்றல் கண்டும் பிரமிக்கிறேன். பாராட்டுக்கள்.

    நீங்கள் எடுத்த நல்ல புத்தகங்களுக்கு வாழ்த்துகள். ஆனால், என்னவோ இப்போதெல்லாம் புத்தகம் படிக்கவே நேரம் என்ற ஒன்று அமைய மாட்டேன் என்கிறது. இப்போதைக்கு உங்கள் அனைவரின் பதிவுகள்தான் என் புத்தக வாசிப்புக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அங்கு நடைபெற்ற எத்தனை விஷயங்களை கண்களாலும், மனதாலும் கிரஹித்து கைக்குட்டையாய் மடித்து எடுத்து வந்து இங்கு விசிறியாய் உதறி, உங்கள் அனுபவங்களை ஒரு புத்தகமாக்கி தந்துள்ளதைப் பார்த்தும்//

      சூப்பர் வர்ணனை அக்கா..   நீங்கள் எல்லாம் மனம் வந்து உற்சாகமாய் எழுதினால் யாரே உங்கள்முன் நிற்க முடியும்?

      நீக்கு
  12. ஏனோ கண்ணாடியில்
    என் உருவத்தைப் பார்ப்பதில்லை
    என் மனக் கண்ணாடி பிம்பத்தை
    உடைத்துவிடுமோ என்ற பயத்தில்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கப்ஸா. பொட்டு வைக்க?

      நிஜம் இருந்தால் தான் நிழல்
      மனக்கண்ணாடியில் பிம்பம்
      எங்கிருந்து வந்தது??
      Jayakumar

      நீக்கு
    2. ஹாஹாஹாஹா....அண்னா, முதலில் நாம் ஒரு கருத்து போடுகிறோம் என்றால் அதுவும் ஒரு கற்பனையில் )கவிதை!!!????) என்று போடும் போது அதில் 100% உண்மையை எதிர்பார்க்கக் கூடாது.

      இப்ப உண்மைக்கு வருகிறேன்.

      கப்ஸா இல்லை அண்ணா. நான் எதுக்கு கப்சா விடணும்?!!!!!!! உண்மை. பொட்டு வைக்கக் கூட கண்ணாடி பார்பதில்லை. சிறு வயது முதலே. எல்லாருக்குமே ஒரு பருவ வயது வரும் போது கண்ணாடி பார்க்கும் பழக்கம் வரும்....எனக்கும் வந்ததுதான் ஆனால்....என் வீட்டுச் சூழல் வேறு. அப்படிக் குட்டுப் பட்டு வளர்ந்த விதம் அப்படி. நான் வளர்ந்த சூழலே வேறு. சிறு வயதில் கேட்ட கமென்ட்ஸ்...அசிங்கமான அட்டாக்... அதுவும் கண்ணாடி, பௌடர் எதுவும் பயன்படுத்தியது கிடையாது, வீட்டுக்குத் தெரியாமல் நடிக்கும் நாடகத்துக்காக மேக்கப் போடுறப்ப....மட்டுமே...

      ஒவ்வொருவரின் வாழ்க்கைச் சூழலும் ஒவ்வொரு விதம். அது ஒவ்வொருவரையும் எப்படி பாதிக்கும் என்பது மற்றவருக்குத் தெரியாது..

      நம்மைப் பற்றிய ஒரு எண்ணம் நம் மனதில் இருக்கும்....

      உதாரணத்திற்கு....கூன் இருப்பவருக்கு அல்லது முகத்தில் வடு இருப்பவருக்குத் தெரியும்....தனக்குக் இப்படி இருக்கிறது என்று என்றாலும் அதை மறந்து அதைப் புறம் தள்ளி இயங்கிக் கொண்டிருப்பார். அவருக்குத் தன் உருவத்தைக் கண்ணாடியில் பார்த்தால் எங்கேனும் மனம் தளர்ந்துவிடுமோ என்று...

      அப்படி இது ஒரு உளவியல் ரீதியில் தோன்றிய வரிகள் அவ்வளவே.

      கீதா

      நீக்கு
    3. JKC Sir.. மனக்கண்ணாடியில் பிம்பம் வர என்ன தடை?  நான் என்னை யாராக வேண்டுமானாலும் மனதில் பார்க்கலாமே..!

      நீக்கு
    4. கீதா.. உங்களுக்கு யார் பெயர் ரொம்பப் பிடிக்கும் என்று கேட்டால் நான் என்ன சொல்வேன் தெரியுமா? என் பெயர்தான் என்று!

      நீக்கு
    5. ஸாரி லேட்டா க்ப் பார்க்கிறேன், ஸ்ரீராம். கொஞ்சம் வேலைப் பளு.

      ஆமாம் ஸ்ரீராம் மனக்கண்ணாடியில் பிம்பம் வரும்...

      //கீதா.. உங்களுக்கு யார் பெயர் ரொம்பப் பிடிக்கும் என்று கேட்டால் நான் என்ன சொல்வேன் தெரியுமா? என் பெயர்தான் என்று!//

      சூப்பர் ஸ்ரீராம்....இது மிக அருமையான பாசிட்டிவ் விஷயம்.

      எனக்கும் என் மீது நம்பிக்கை உண்டு. பள்ளிக்காலத்திலிருந்தே எதிர்நீச்சல் போட்டு போட்டு....சமீபகாலமாகக் கொஞ்சம் தளர்ந்திருக்கிறது. அதுசரியாகிவிடும் என்னை நானே தட்டிக் கொடுத்து எனக்கு நானே Positive Regards கொடுத்துக் கொண்டு வருகிறேன்.

      கீதா

      நீக்கு
  13. இந்தியா ஏழை நாடு என்று!//

    அதானே!

    ஸ்ரீராம், நாம கூட வாங்க யோசிக்கும் பொருட்களை ஏழை மக்கள் வாங்கிடறாங்க....செலவு செய்யறாங்க என்பது நான் கண்டது. எனக்குத் தெரிந்து அவர்கள் வாங்கும் உடைகள் அதிகம். அலங்காரப் பொருட்கள் அதிகம். அதாவது பிள்ளைகளை அரசுப் பள்ளிக்கு அனுப்புவது கூடச் செலவு என்று யோசிக்கும் மக்கள். ஆனால் கடன் வாங்கி கல்யாணத்தை ஆடம்பரமாகவும் செய்யும் ஒரு பகுதி.

    ஒரு சர்வே எடுக்க வேண்டி வந்தது சென்னையில் இருந்தப்ப. சின்ன சின்ன வேலைகள் செய்வதுண்டே அப்ப...அதில் ஒரு பகுதியாய். அப்ப அவர்களின் பொருளாதாரச் சிந்தனைகளுக்கும் நம்மைப் போன்றவர்களின் பொருளாதாரச் சிந்தனைகளுக்கும் வித்தியாசம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விண்டோ ஷாப்பிங் என்கிறார்கள்.  ஆனால் எதையுமே வாங்க நினைக்காமல் கடைக்கு சென்றால் கூட எதையாவது வாங்கி கொண்டே திரும்புகிறோம்.  பெரிய நாள்களுக்கு அல்லது கடைகளுக்கு நாம் வாங்க நினைத்துப் போகும் பொருள்களை விடுத்து அல்லது அதோடு வேறு சில அனாவசிய பொருள்களையும் சேர்த்தே வாங்குகிறோம்!

      நீக்கு
    2. இந்த அநாவசியப் பொருட்கள் வாங்குவதில் நம்மவரை யாரும் மிஞ்ச முடியாது. நேற்றுக் கடைத்தெருவுக்குப் போயிட்டு வரும்போது வெஜிடபிள் பிரியாணி அரிசினு ஒண்ணு வாங்கிட்டு வந்தார். ஏற்கெனவே வீட்டில் பாஸ்மதி அரிசி இந்தியா கேட் இருக்கு. பிரியாணி அரிசியே இரண்டு ரகம் இருக்கு. இதை ஏன் வாங்கி வந்தீங்க என்றால் பார்த்தேன், நன்றாக இருந்தது வாங்கிட்டேன் என்கிறார்! :( இன்னிக்கு அதை வெறும் சாதமாக வைத்தால் பொங்கல் கெட்டது! அவ்வளவு குழைவு. :(

      நீக்கு
    3. நல்ல வேளையா இப்போக் கண் அறுவை சிகிச்சை ஆனதில் இருந்து தொடர்ந்து காடரிங் சாப்பாடு. இல்லைனாக் காய்கள் வாங்கி வந்தார் எனில் வெஜிடபிள் ட்ரேயைத் தூக்க முடியாது. என்ன சமைப்பது என முழி பிதுங்கும். :)

      நீக்கு
    4. சரிதான் அக்கா.. பாசுமதி அரிசியில் சாதம் வடித்தாலும் முழிச்சான் முழிச்சான்னு இருக்கும்!

      நீக்கு
    5. அது என்னவோ, எனக்கும் காய்கறிக கடைக்குள் நுழைந்து விட்டால் மாட்டேன் என்கிறது!

      நீக்கு
    6. அது என்னவோ, எனக்கும் காய்கறிக கடைக்குள் நுழைந்து விட்டால் தலைகால் புரிய மாட்டேன் என்கிறது!

      நீக்கு
    7. ஹாஹாஹா மீக்கும் ஸ்ரீராம்.

      கீதாக்கா உங்க கருத்து பார்த்து சிரித்துவிட்டேன்...ஸாரி உங்க பிரச்சனைக்கு நடுல நான் சிரித்தேன் என்று சொல்றதுக்கு!!

      ஆமாம் ஸ்ரீராம் கடைக்குள் நுழைந்தால் எது வாங்கப் போகிறோமோ அதைத் தவிர்த்து வாங்குவதும் நடக்கிறதுதான்...

      கீதா

      நீக்கு
  14. இலவச புத்தகங்கள் நல்லவையாக இருக்க வேண்டுமே நாம வாசிக்கும் ஆர்வத்துக்கு ஏற்ப....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதைச் சொல்லுங்க...  என் அப்பா எல்லோருக்கும் புத்தகங்கள் பரிசளிப்பார்.  ஆனால் அவர்கள் ஆர்வம் பார்த்து அல்ல, இவர் ஆர்வத்துக்குத் தக்கவாறு!

      நீக்கு
    2. சிரித்துவிட்டேன்!!!

      கீதா

      நீக்கு
  15. முன்னரே வந்து மற்ற நல்ல புத்தகங்களை லாவிக் கொண்டு சென்று விட்டார்களா என்றும் தெரியவில்லை//

    அதுவும் இருக்கலாம் ஸ்ரீராம். உங்களுக்கு அங்கு போன பிறகுதான் தெரிந்ததோ?!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  நான் பார்த்ததை பகிரங்கப்படுத்தினேன்.  வேறு யாரும் அபப்டிக் செய்யவில்லை போல..  அதேபோல போத்தீஸின் மற்ற கிளைகளில் கூட இந்த ஆபர் இல்லை போல...

      நீக்கு
    2. மாதவன் வந்து விளம்பரப்படுத்தினாரே..?

      நீக்கு
    3. போத்தீஸில் புத்தகங்கள் இலவசமாக கொடுப்பதை மாதவன் விளம்பரப்படுத்தினாரே?

      நீக்கு
    4. ஓ.. அப்படியா? நான் பார்க்கவில்லை பானு அக்கா.

      நீக்கு
  16. ஜெயலலிதா சிவாஜியை எடுத்ததுபோல, ஒரு சரோஜாதேவியோ, மஞ்சுளாவோ எடுத்திருக்கிறாரா எம்ஜிஆரை பேட்டி ?
    ஒருவேளை, அடுத்தவார அதிர்ச்சியோ அது !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை, பயப்படாதீர்கள்!!!   ஆனால் மஞ்சுளாவோ, லதாவோ அலலது வேறு  யாரோ உ சு வா வுக்குப் பிறகு அப்படி ஒரு பேட்டி எடுத்ததாக ஞாபகம்!

      நீக்கு
    2. லதா, தான் எம்.ஜி.ஆரை பேட்டி எடுத்ததாக ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். எந்த பத்திரிகையில் அது வந்தது என்று தெரியாது.

      நீக்கு
  17. கரந்தையாரைத் தலைப்பில் பார்த்ததில் சந்தோஷம்.
    தமிழ்த்தாய் வாழ்த்தாக இருந்திருக்க வேண்டிய
    கவிதை வரிகள்.

    பதிலளிநீக்கு
  18. ஜெ -- சிவாஜி பேட்டி ரொ..ம்..ப நீளம்.

    யதேச்சையாய் பேசிக் கொள்வது வாழ்க்கையிலேயே நடந்து விடுவது பற்றி சிந்தனை ஓடியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பாடி..  அதை வெளியிட்டதன் நோக்கம் சிறிய அளவிலாவது நிறைவேறி விட்டது போலவே...

      நீக்கு
  19. ஹி..ஹி..ஹி... யும்
    ஹா..ஹா.. ஹா...வும்
    இடம் மாறி போனதை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  20. இப்படி ஒரு ஆஃபர் இருக்கு என்று?

    க்டைசியில் இருக்கும் கிரீடம் அணிந்திருக்கும் பெண் வெளிநாடு போலதான் தெரிகிறார். வெளிநாட்டுப் பெண்ணேதான்....//அவர்களை பார்த்து ஒவ்வொரு முறையும் களுக்கென்று ஒரு சிரிப்பு சிரித்தபடி தன் வேலையில் மும்முரமாக இருந்தார். //

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​"நீ என்ன வேணும்னா நினைச்சுக்கோ.. எனக்கு என் வேலை முக்கியம்.. எனக்குப் பிடித்ததை நான் செய்கிறேன்" என்பது போல..!

      நீக்கு
  21. சிறுவன் பற்றிய பத்தி - மனதை வேதனை அடைய வைத்தது. கையில வேற இன்னொன்னு சின்னது கைக்குழந்தை! என்ன சொல்ல? என்னதான் கஷ்டப்பட்டாலும், கட்டினவன் எவ்வளவு மோசமா இருந்தாலும் இந்த இயற்கை நியதிக்கு ஆட்படாதவங்க யாருமே இல்லை போல!!!!!!!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறப்பான கருத்து ..மனதின் வேதனை பிரதிபலிக்கின்றது சகோதரியின் வார்த்தைகளில்..

      நீக்கு
    2. துரை அண்ணா மிக்க நன்றி. இப்படியானவங்களைப் பார்த்து நான் ரொம்ப வேதனை அடைவதுண்டு. என்ன வாழ்க்கை என்று. பாவம்...அதுவும் நாலஞ்சு...நடைபாதை வாழ்வியல்....பெற்றோர் கவனிப்பின்மை...அதுங்க போகும் பாதை தவறி...சமூகக் குற்றங்கள். சிறாற் குற்றங்கள். இதுவும் உளவியல், பெற்றோர் வளர்ப்பு என்று ஒரு சிறு ஆய்வு செய்ததுண்டு. ஒருவருக்கு உதவியாக.

      கீதா



      நீக்கு
    3. இப்படியான வாழ்வியலுக்கு எந்த அரசும் தீர்வு காண்பது இல்லை..

      அப்படியே கண்டு அதைக் கொடுத்தாலும் உளவியல் பிறழ்வு உடையோர் அதனை ஏற்றுக் கொள்வதில்லை!..

      நீக்கு
    4. எப்படி லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்கள் திருந்துவதற்கு விரும்புவதில்லையோ.. அப்படி!..

      நீக்கு
    5. நியாய விலைக் கடையில் நியாயம் கிடைக்காததைப் போல!..

      நியாயம் என்பது தமிழ்ச்சொல் அல்லவே!..

      மன்னிச்சுடுங்க ஷாமியோவ்!..

      நீக்கு
    6. கஷ்டம்தான்.. வேதனைதான்...

      நீக்கு
  22. பையன் வாங்க மறுத்து விட்டான். தாயைப் பார்த்தால் அவரும் 'வேண்டாங்க' என்று மறுத்து விட்டார். ஏழ்மையில் நேர்மை. உழைப்பின் மேன்மை.//

    மகிழ்ச்சி அடையச் செய்தது ஸ்ரீராம். அப்படினா நல்ல வழக்கங்கள் உள்ள குடும்பம் குழந்தைக்கும் அதைக் கற்பித்திருக்கும் தாய்!!!!! அவங்க நல்லா முன்னுக்கு வரணும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். கீழே கோமதி அக்கா சொல்வது போல பொருளாக வாங்கி இருக்கலாம்!

      நீக்கு
  23. ஸ்ரீராம் புத்தக வரிசையில் பொன்னியின் செல்வன், பாரதி பாரதிதாசன், உலகவரலாறுன்னு ஒரு புத்த்கம் எல்லாம் இருக்கு....உங்கள் கண் இதில் பட்டிருக்கும் இந்தப் புத்தகம் ...

    இந்தக் கருத்தை மேலே போட்டு போகலை....கருத்து எல்லாம் மாறி மாறிதான் வருது...பிந்தைய கருத்தைப் போட்டு பார்த்தா முந்தைய கருத்து போகலைன்னு தெரியுது....மீண்டும் இதை இங்கு போடுறப்ப நீங்க இந்தப் புத்தகம்தான் செலக் பண்ணிருக்கீங்கன்னதைப் பார்த்ததும் எனக்கு அப்படியே ஆச்சரியம், ஸ்ரீராம்!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் இணையம் படுத்துகிறது. எனக்கு என் கருவியில் பிரச்னை. அந்தப் புத்தகத்தைத் தவிர வேறு ஆப்ஷன் இல்லையே...!

      நீக்கு
  24. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    பார்க்க பார்க்க
    பாவம் பொடிபட..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துரை செல்வராஜூ அண்ணா... முருகன் நம்மைக் காக்கட்டும்.

      நீக்கு
  25. கவிதை அருமை, ஸ்ரீராம். யதார்த்தமான கவிதை. இனிய நினைவுகள் எப்பவுமே இனிமைதான் அசை போட! அங்கும் நான் வாசித்த நினைவு!

    கீதா

    பதிலளிநீக்கு
  26. வானார்ந்த பொதியின் மிசை எனும் இப்பாடல், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதல் செயலாளராக இருந்த, கரந்தைக் கவியரசு அரங்க.வேங்கடாசலம் பிள்ளை அவர்கள் எழுதியது. தமிழ் நாட்டு அரசானது 1971 இல் அன்றைய முதல்வர் அண்ணாதுரை அவர்கள், தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவிக்க இந்தப் பாடலையும், நீராருங் கடலுடுத்தப் பாடலையும்தான் பரிசீலனை செய்து, நீராருங் கடலுடுத்த பாடலில், திராவிட நற்திருநாடும் என்ற வார்த்தைகள் வரும் இதற்காகவே, நீராருங் கடலுடுத்தப் பாடலைத் தேர்வு செய்தார்.
    நீராருங் கடலுடுத்த பாடலைத் தமிழ்த்தாய் வாழ்த்தாகஇ, 1913 ஆம் ஆண்டிலிருந்தே அறிமுகம்செய்து பாடி வந்த பெருமைக்கு உரியது கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுதியவர் யார் என்ற எனது குழப்பத்துக்கு விடை கிடைத்தது. நன்றி
      Jayakumar​

      நீக்கு
    2. நன்றி நண்பரே... நீராருங்கடலுடுத்த பாடலிலும் சில வரிகளை நீக்கியே தெரிவு செய்தார்.

      நீக்கு
  27. சிவாஜியின் பேட்டி அதுவும் ஜெயலலிதா கேள்விகள் கேட்டிட....வெகு சுவாரசியமாக இருந்தது வாசிக்க.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா. புத்தகங்களின் வியாபார டெக்னிக்.

      நீக்கு
  28. இரு படங்களுமே ரசித்தேன்..

    பாத்ரூம் படம் பார்த்ததும் முதல்ல ஆஹா அழகான வீட்டு ஹால்ன்னு நினைச்சேன்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  29. பிரம்மோஸ் - பிரம்மாஸ்திரம்பெயர்தான் இப்படி வைச்சிருக்காங்கன்னு நினைக்கிறேன். எப்ப ரஷ்யா நிறுத்துமோ...

    கீதா

    பதிலளிநீக்கு
  30. ஆமாம் ஸ்ரீராம், பள்ளியில் மனப்பாடப் பகுதி!!! நினைவுக்கு வந்தது.

    புகைபோக்கி ஜோக்!! ஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படித்தான் சில நாட்களுக்கு முன் கையில் ஊமன் கண்ணில் காக்கும் பார்த்தேன்!

      நீக்கு
  31. திருமாலின் குன்றம், தென்குமரி, நற்செங்கோல் இதையெல்லாம் காதில் கேட்டாலே ஒவ்வாமை ஆகின்றது..

    திராவிடம் என்பதில் தான் எத்தனை தித்திப்பு!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சனாதனம் என்கிற வார்த்தைக்கே புது அர்த்தம் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

      நீக்கு
  32. மன்னிய மூவேந்தர் என்பதை மன்னிய முவேந்தர் என்று பிழையாக தட்டச்சு செய்திருக்கின்றனர்..

    அதை சரி பார்க்க யாரும் இல்லாமல் நீங்களும் அப்படியே சுட்டெடுத்திருக்கின்றீர்களே ஸ்ரீராம்!..

    வாழ்க தமிழ்!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது நம்மால் மாற்றமுடியாது. புகைப்படம். மேலும் மூ என்பதில் அந்த கொம்பின் கடைசி அப்பகுதி சற்றே உப்பி இருபிப்பது போல தெரிகிறது. அப்போ மூ தான்!

      நீக்கு
  33. பதில்கள்
    1. ஆம். அதுவும் அந்தக் கிளையில் மட்டும்!

      நீக்கு
    2. போத்தீஸ் விளம்பரத்தில் கூடப் புத்தகங்கள் அவரவர் விருப்பத்துக்கேற்றாற்போல் கொடுப்பதாகக் காட்டுகின்றனர். அம்மாவுக்கு ஆன்மிகம், மனைவிக்கு சமையல் கலை, மகனுக்கு ஸ்போர்ட்ஸ், அப்பாவுக்கு அரசியல், மகளுக்கு ஃபாஷன் டிசைனிங் எனப் போத்தீஸில் துணிகளோடு புத்தகமும் வாங்கி வருவதாகக் காட்டிட்டு இருந்தாங்க. இப்போக் காணோம்.

      நீக்கு
    3. அது சும்மா விளம்பரம். நான் போட்டிருக்கும் படத்தைப் பாருங்கள். நீங்கள் செலவு செய்திருக்கும் பணத்திற்கேற்ப உங்களுக்கு என்ன வரிசைகொடுக்கப்படுகிறதோ அந்த வரிசையில் அமையும் புத்தகங்கள் மட்டும்தான்!

      நீக்கு

  34. ×× மன்னிய முவேந்தர் ××

    எழுத்துப் பிழை இயல்பு தான்.. இப்படியிருக்கும் ஒன்று இன்னும் எத்தனை காலத்துக்குத் தான் இப்படியே சுற்றி க் கொண்டிருக்கப் போகின்றதோ!...

    இந்தப் பிழை இதுவரை இங்கு யாருடைய கண்களிலும் படாதது அதிசயம் தான்!..

    பதிலளிநீக்கு
  35. கலைஞர் கருணாநிதி அவர்கள் முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் பாட வேண்டும் என, அரசாங்கப் பொதுத் துறையின் சார்பில் 23.11.1970 அன்று அரசாணையாக வெளியிடச் செய்தார்..

    நன்றி: இந்து தமிழ் (https://www-hindutamil-in.cdn.)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புக்கும் மதிப்புக்கும் உரிய கரந்தை ஜெயக்குமார் அவர்களது கருத்தில் பிழை இருத்தல் ஆகாது என்பதற்காக இந்த மேலதிக விவரம்..

      நீக்கு
    2. அவர் சொல்வது, கரந்தை தமிழ்ச்சங்கம் வானார்ந்த பொதியை புறக்கணித்து நீராருங் பாடலை 1913 லிருந்தே தமிழ்த்தாய் வாழ்த்தாக வரித்து விட்டார்கள் என்பது.

      நீக்கு
  36. நோய் வாய்ப்பட்டிருந்த அண்ணா 03.02.1969-ல் மறைந்தார்..

    தமிழ்த் தாய் வாழ்த்திற்கு

    முதல்வர் கருணாநிதி
    23.11.1970 அன்று அரசாணை வெளியிடச் செய்தார்..

    நன்றி : இணையம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. MSV இசை அமைத்தார். சில வரிகள் நீக்கபப்ட்ட பிறகு!

      நீக்கு
  37. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  38. போத்தீஸில் துணிகள் வாங்கினால் புத்தகம் கொடுப்பது நல்ல செயல். நாம் வாங்கும் துணிகளின் பில் தொகைக்கு ஏற்ப புத்தகம் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

    //வாசலில் அட்டையால் செய்த சில பொருட்களை விற்றுக் கொண்டிருந்த சுமார் பத்து வயதுச் சிறுவன்,//

    விளையாடும் வயதில் தொழில் செய்வது வருத்தம் தான்.
    அவனுக்கு உதவி செய்ய நினைத்தால் அவன் விற்கும் பொருளை வாங்கினால் அவனுக்கு செய்யும் உதவிதான். உழைத்து வாழ நினைப்பது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // பில் தொகைக்கு ஏற்ப புத்தகம் கிடைக்கும் என்று நினைக்கிறேன். //

      அதை பதிவில் சொல்லி இருக்கிறேன் என்று நினைக்கிறேன். சொல்லி இருக்கிறேன்.


      ஆம், அந்தச் சிறுவனிடம் அவன் விற்ற பொருளை வாங்கி இருக்கலாம். தோன்றாமல் போயிற்று.

      நீக்கு
  39. //அந்த நிமிட அற்புத உணர்வோடு
    அப்பால் நகர்ந்துவிட்டால்
    நினைவுகளாவது
    சாசுவதமான இருக்கும்
    இனிமையாய் //

    கவிதை வரிகள் அருமை.

    பதிலளிநீக்கு
  40. நியூஸ் ரூம் வாசித்தேன்.

    பள்ளிபருவ நினைவு பாடல், பொக்கிஷபகிர்வு, ஜெயலலிதா பேட்டி ஆகியவை நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  41. வரேன் அப்புறமா. இப்போப் போய்க் காஃபி கலக்கணும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா. காஃபியில சர்க்கரை சும்மா ஒரு கால் சிட்டிகை மட்டும்...

      நீக்கு
  42. புத்தகத்தின் நிலைப்பாடு இப்படி ஆகிவிட்டது.

    சிவாஜி கணேசன் - ஜெயலலிதா பேட்டி சிறப்பு.

    மேடம் பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களின் செய்தி தொகுப்பு நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // புத்தகத்தின் நிலைப்பாடு இப்படி ஆகிவிட்டது. //

      ஆம்.

      நன்றி ஜி.

      நீக்கு
    2. நன்றி கில்லர்ஜி! இதில் ஸ்ரீராமுக்கும் பங்கு இருக்கிறது.

      நீக்கு
  43. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் 'ஆரியம் போல் உலகு வழக்கு அழிந்து ஒழிந்து சிதையா' என்ற வரிகள் பிற்காலத்தில் தான் நீக்கப்பட்டன. ஆரம்ப கால தமிழ் பாடப்புத்தகங்களில்
    செய்யுள் பகுதியில்
    முதலில் கடவுள் வாழ்த்து இருக்கும். பெரும்பாலும்
    'உலகம் யாவையும் தாமுள வாக்கலும்' என்ற கம்பர் வாக்கு.
    அடுத்து தமிழ்த்தாய் வாழ்த்து என்று நீக்கப்படாத வரிகளோடு
    'நீராருங் கடலுடுத்த'..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்று காலை கூட 'அன்னவர்க்கே சரண் நாங்களே' என்று வரிகள் மனதில் ஓடியது!

      நீக்கு
  44. சேக்க்கிழாரின் பெரிய புராணம் கடவுள் வாழ்த்துப் பாடலும் 'உலகெலாம்..' என்ற வார்த்தையோடு ஆரம்பிப்பது எண்ணி மகிழத் தக்கது..

    சிவபெருமானே இந்த முதலடியை எடுத்துக் கொடுத்து சேக்கிழாருக்கு
    தொடர்ந்து பாட உத்வேகம் கொடுத்ததாகச் சொல்வர்.

    பதிலளிநீக்கு
  45. உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்
    நிலவுலாவிய நீர்மலி வேணியன்...

    ஒன்றைத் தொட்டு ஒன்றாய் எவ்வளவு நினைவுகள்?..

    'பிஞ்சுமதி அணிந்த செஞ்சடை ஈசனும்'..

    ஞாயிறு திருக்கோயில்கள் தரிசனங்களில் பிறவா யாக்கைப் பெரியோனின் திருக்கோயில்களை வலம் வரமாட்டோமா என்றிருக்கிறது..

    தம் எழுத்திலேயே சுற்றுலாவைத் திறம்படச் செய்யத் தகுதிசால் சிவத்தொண்டர்..

    தம்பி துரை செல்வராஜ்..

    மனதில் விதையாய் ஊன்றிய எண்ணம்.

    எழுதிச் சொல்லத் தோன்றியது.

    சொல்லி விட்டேன்.

    பதிலளிநீக்கு
  46. நெல்லையும் தன் பணியை. தன் பாணியில் தொடரட்டும்.

    மாற்றி மாற்றி பிரசுரிக்கலாம்.

    பதிலளிநீக்கு
  47. கவிதை, பொக்கிஷம் எல்லாம் அருமை. இந்த வாரமும் நீங்கள் ஒரு செய்தியைக் கொடுத்திருக்கீங்கனு நினைக்கிறேன். ஜிவாஜி/ஜெயலலிதா பேட்டியை ஏற்கெனவே படிச்சிருக்கேன். பாத்ரூமைப் பார்த்ததும் படுத்துத் தூங்கலாம் போல இருக்குனு சொல்வாங்க. அது போல் இதுவும். இணையத்துப் படங்களும் அருமையாக இருக்கு. அந்த வெளிநாட்டுப் பெண் கடைசியில் கிரீடம் சூட்டிக் கொண்டு விட்டார் போலவே!

    பதிலளிநீக்கு
  48. வாடிக்கையாளர்களைக் கவர கடைகள் கையாளும் உத்திகளில் இது புதிது. கவித்துவமான கருத்துரை கவிதையாக மீண்டும்.. அருமை! பேட்டி சுவாரஸ்யம். தொகுப்பு நன்று.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!