திங்கள், 24 ஜூலை, 2023

'திங்க'க்கிழமை :  வெந்தய வெங்காய ரசம் - மனோ சாமிநாதன் ரெஸிப்பி 

ரசம் இல்லாமல் நம் தமிழ்நாட்டில் எந்த விருந்துமில்லை. பல வகைகளில் ரசங்கள் பரிமளித்தாலும் ருசியில் ஒன்றுகொன்று போட்டி போடும்.. குவித்த கையில் ரசம் வாங்கி உறிஞ்சிக்குடித்தாலும் சரி, இலையில் ஓட ஓட விட்டு சோற்றுடன் அள்ளி சாப்பிட்டாலும் சரி, அதன் சுவைக்கு ஈடில்லை. சிலர் ரசம் கொதிக்குமுன் நுரை கட்டி வரும்போதே நிறுத்தி விடுவார்கள். சிலர் ஒரு கொதி நன்கு கொதித்ததும் தீயை அணைப்பார்கள். இன்னும் சிலர் சில நிமிடங்கள் ரசம் நன்றாகக் கொதித்த பிறகே அடுப்பை விட்டு இறக்குவார்கள். இப்படி தயாரிப்பு முறைகளும் வேறுபட்டாலும் ஒன்றுக்கொன்று சுவையில் அவை சளைத்தவையல்ல! மிளகு ரசம், சீரக ரசம், பருப்பு ரசம், முருங்கைக்காய் ரசம், முள்ளங்கி ரசம், புதினா ரசம், கொட்டு ரசம், மைசூர் ரசம், வாழைத்தண்டு ரசம், நண்டு ரசம், பூண்டு ரசம், தக்காளி ரசம், கொள்ளு ரசம், முடக்கத்தான் ரசம், உடுப்பி ரசம், என்று நீண்டு கொண்டே போகும் ரசங்களின் தொகுப்பில் இன்றைக்கு நான் சொல்லப்போவது வெந்தய வெங்காய் ரசம் பற்றி! என் சினேகிதியிடமிருந்து நான் கற்றது.

வெந்தய வெங்காய ரசம்:

தேவையான பொருள்கள்:

சின்ன வெங்காயம்- ஒரு கை

பூண்டு பற்கள்- 10,

பழுத்த தக்காளி-2

கறிவேப்பிலை- ஒரு கொத்து

பொடியாக அரிந்த கொத்தமல்லி- ஒரு கை

சிறு எலுமிச்சம்பழ அளவு புளி

மஞ்சள் தூள் –அரை ஸ்பூன்

தேவையான உப்பு

நல்லெண்ணெய்- 2 மேசைக்கரண்டி

தாளிக்க:

கடுகு- 1 ஸ்பூன்

வெந்தயம்-1 ஸ்பூன்

வற்றல் மிளகாய்-2

சீரகம்- 1 ஸ்பூன்

கட்டிப்பெருங்காயம்- ஒரு துண்டு

செய்முறை:

புளியை ஒரு தம்ளர் வென்னீரில் ஊறவைத்து பிறகு கோது இல்லாமல் கரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.

மிதமான சூட்டில் நல்லெண்ணெயை ஊற்றி அது சூடானதும் கடுகைப்போட்டு பொரிய விடவும்.

பிறகு வெந்தயமும் சீரகமும் பெருங்காயமும் போட்டு இலேசாக அவை பொரிந்ததும் சின்ன வெங்காயங்களை அப்படியே முழுதாக பூண்டு, கறிவேப்பிலையுடன் சேர்த்து வதக்கவும்.

தக்காளிப்பழங்களை மசித்து மஞ்சள் தூளுடன் சேர்த்து குழைய வதக்கவும்.

எண்ணெய் மேலே தெளிய ஆரம்பித்ததும் புளித்தண்ணீருடன் 5 தம்ளர் நீர் சேர்த்து கொதிக்க விடவும்.

தேவையான உப்பை சேர்க்கவும்.

3 நிமிடங்கள் கொதிக்க விடவும்.



அதன் பின் அடுப்பை அணைத்து கொத்தமல்லியைத்தூவி, மூடி வைக்கவும்
.

32 கருத்துகள்:

  1. வெந்தய ரசம் வெகு அபூர்வமாக சாப்பிட்டிருக்கிறேன். ரசத்தில் வெங்காயத்தோடு சாப்பிட்டதே இல்லை.

    புதிய செய்முறை. நன்று

    பதிலளிநீக்கு
  2. பலவித ரசங்களை எழுதியிருக்கும்போது, பாரிஸில் ஒரு பாண்டிச்சேரி உணவகத்தில் சாப்பிட்ட ரசம் நினைவுக்கு வந்தது. புளியைக் கொதிக்கவிடாமல் செய்யும் ரசம். எனக்குப் பிடிக்கவில்லை.

    வெறும் வெந்தய ரசம்னு கடந்துபோகமுடியாது. விலை உயர்ந்த தக்காளி, சின்ன வெங்காயம் போட்டிருப்பதீல் (இன்றைய நிலைக்கு), இது ஸ்பெஷல் ரசம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைக்கு அன்பு நன்றி நெல்லைத்தமிழன்!
      நான் தஞ்சையில் சென்ற மாதம் இருந்த வரை தக்காளி விலை மிகவும் குறைவாகத்தானிருந்தது. இங்கு திரும்பிய பின் செய்தித்தாள்களில் விலை மிக மிக அதிகரித்திருப்பதைப்பார்த்தேன். துபாய்க்குக்கூட ஒருவர் 10 கிலோ தக்காளி தன் உடமைப்பொருள்களுடன் கொண்டு வந்ததாகவும் செய்தி வந்தது! இருந்தாலும் தக்காளி இல்லாமல் எப்படி சமைப்பது?

      நீக்கு
  3. ரசங்களில் எத்தனை விதம்.ரஸப் பட்டியலை ரசித்தேன். காலை காபிக்கு பதில் ரசம்!
    செய்முறை நன்று.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகரன்!

      நீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. புதிய ரசம் செய்முறை நன்று. தக்காளி விலை இறங்கும் போது பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டிற்கு அன்பு நன்றி கில்லர்ஜி! தக்காளி விலை இறங்கியதும் செய்து பாருங்கள்!

      நீக்கு
  6. வணக்கம் சகோதரி

    இன்றைய திங்களில் தங்கள் செய்முறையாக வெந்தய, வெங்காய ரசம் நன்றாக உள்ளது. ரசங்களின் பல வகைகளை குறிப்பிட்டு, ரசங்கள் தயாரிப்பதில் உள்ள பக்குவங்களை தாங்கள் சொன்னதும் ரசனையாக இருந்தது. இந்த ரசத்திற்கான குறிப்புகள் அனைத்தும் அருமையாக இருக்கின்றன.

    பல காய்களை போட்டு வைக்கும் சாம்பாரில், மேலே சற்று நீர்க்க இருப்பதை எடுத்து சிறிதளவு மிளகு சீரகத்தை பொடித்து நெய்யில் தாளித்து போட்டு ஒரு அவசர ரசமாகவும் பயன்படுத்தலாம். அதன் சுவையும் இப்படித்தான் நன்றாக இருக்கும். எல்லா காய்களும் ரசம் செய்யும் போது ஒரு சுவையை தர மறுப்பதில்லை. இன்றைய தங்களின் அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய பாராட்டிற்கும் கூடவே கொடுத்த அருமையான குறிப்பிற்கும் அன்பு நன்றி கமலா ஹரிஹரன்!!

      நீக்கு
    2. நான் கல்யாணம் ஆகி வரும்வரை என் மாமியார் வீட்டில் இதான் ரசம். என் மாமியாரும், நம்ம ரங்க்ஸும் மட்டும் ரசம் விட்டுப்பாங்களாம். ஆகவே தனியா ரசம் வைக்காமல் இப்படிப் பண்ணிடுவாங்களாம். நான் வந்தப்புறமாத் தனியா ரசம் வைப்பதன் ருசி மாறுபடுவதைக் கண்டு ஆச்சரியமா இருக்கும் அவங்களுக்கு.

      நீக்கு
  7. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    பார்க்க பார்க்க
    பாவம் பொடிபட..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  8. /// ரசம் கொதிக்குமுன் நுரை கட்டி வரும்போதே நிறுத்தி விடுவார்கள் ///

    இதுதான் சரி..

    பதிலளிநீக்கு
  9. உடல் பிரச்னைக்கென்று புளி மிளகாய் இவற்றை சமையலில் நிறுத்தி வைத்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகின்றது..

    தயிர் கூட புளிப்பு இருந்தால் ஒத்துக் கொள்வதில்லை..

    எலுமிச்சம் பழத்தை பார்த்தே மகிழ்வது..

    தக்காளி வீட்டுக்குள் வருவதேயில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் உடல் பிரச்சினையால் புளிப்பான பொருள்கள் சமையலில் சேர்ப்பதில்லை என்பதை படித்த போது வருத்தமாக இருந்தது சகோதரர் துரை.செல்வராஜ்! வயிற்றுப்பிரச்சினை உள்ளவர்கள் எல்லோரும் அனுபவிக்கும் சிரமம் இது! சீக்கிரம் இதிலிருந்து மீண்டு வருவீர்கள் என்று நம்புகிறேன்.

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
  10. இன்றைக்கு எனது ' வெந்தய வெங்காய ரசம்' குறிப்பு வெளியாகி இருப்பதைக்கண்டு மகிழ்ந்தேன். அன்பு நன்றி ஸ்ரீராம்!

    பதிலளிநீக்கு
  11. செய்முறை விளக்கம் அருமை...

    நன்றி அம்மா...

    பதிலளிநீக்கு
  12. /// பல காய்களை போட்டு வைக்கும் சாம்பாரில், மேலே சற்று நீர்க்க இருப்பதை எடுத்து சிறிதளவு மிளகு சீரகத்தை பொடித்து நெய்யில் தாளித்து போட்டு ஒரு அவசர ரசமாகவும் பயன் படுத்தலாம் ///

    திருமதி கமலா ஹரிஹரன் அவர்களது குறிப்பு அருமையானது.. ஆரோக்கியமானது.. சிறப்பு..

    பதிலளிநீக்கு
  13. @ மனோசாமிநாதன்..
    /// சீக்கிரம் இதிலிருந்து மீண்டு வருவீர்கள் என்று நம்புகிறேன்.///

    தங்களது அன்பின் கருத்திற்கு நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
  14. மனோ அக்கா நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ரசம் வகைகளில் ஒன்றே ஒன்றைத் தவிர மத்தது எல்லாம் செய்ததுண்டு.

    இன்றைய குறிப்பு செம குறிப்பு. உங்கள் செய்முறையையும் குறித்துக் கொண்டுவிட்டேன்.

    பாண்டிச்சேரியில் இருந்தப்ப, நட்பு வீட்டில் இப்படிச் செய்தாங்க. சின்ன வெங்காயம் பூண்டை வதக்கி விட்டுக் கொஞ்சம் எடுத்து கறிவேப்பிலையுடன் சின்ன உரல் உண்டே இப்பல்லாம் வருதே கல் உரல் அதில் போட்டு சிறிதாக இடித்து அதில் மிளகும் சேர்த்து தட்டிக் கொண்டு கலந்தாங்க. ரொம்ப நன்றாக இருந்தது. அங்கு கற்றதைச் செய்வதுண்டு.

    இப்ப உங்க முறையும் கற்றுக் கொண்டுவிட்டேன். இந்த வாரம் செய்துவிட வேண்டியதுதான் சூப்பாகக் கூட சாப்பிடலாமே என்று நினைத்துக் கொண்டே இருக்கையில் தலைல ஏதோ ஒன்று தட்டியது!!! சின்ன வெங்காயம் கிலோ 200....தக்காளி ஓகே....120, 100 என்று வந்து இப்ப 80...ரூ...

    சரி சின்ன வெங்காயம் விலை குறையட்டும்...இல்லைனா சின்ன வெங்காயம் நட்ட தொட்டியில் பார்க்க வேண்டும்.!!!!!

    ரொம்ப நன்றி மனோ அக்கா ...சூப்பர் குறிப்பு!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  15. கீதா! பின்னூட்டம் நீங்கள் எழுதியது எனது குறிப்பை விடவும் சுவாரஸ்யமாக இருந்தது! அன்பு நன்றி!!
    இந்த ரசம் பொதுவாக ஒரு கனத்த விருந்துக்குப் பிறகு மறுநாள் வயிறு இலேசாக இருக்க எப்போதும் செய்வேன். வீட்டில் சின்ன வெங்காயங்களை தனியாக எடுத்து வைத்துக்கொண்டு சாப்பிடுவார்கள். செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள்!

    பதிலளிநீக்கு
  16. வெந்தய ரசம் செய்முறை நன்றாக இருக்கிறது. செய்து பார்க்க வேண்டும். முன்னுரையும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி கோமதி அரசு! அவசியம் செய்து பாருங்கள்!

      நீக்கு
  17. சின்ன வெங்காய வெந்தய ரசம் அருமை.

    வெங்காயத்தை வதக்காமல் தட்டிப்போட்டு செய்வதுண்டு வதக்கினால் சுவையும் மணமும் கூடவே இருக்கும் செய்து பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  18. வாருங்கள் மாதேவி! என் குறிப்பை ரசித்து பாராட்டியிருப்பது மகிழ்வையும் ஊக்கத்தையும் தருகிறது! அவசியம் செய்து பார்த்து சொல்லுங்கள்! அன்பு நன்றி!

    பதிலளிநீக்கு
  19. வெந்தய ரசம் எனச் சாப்பிட்டிருக்கேன். மி.வத்தல், கொ.ம.விதை, வெந்தயம், ஜீரகம், தேங்காய்த் துருவல் தே.எண்ணெயில் வறுத்து அரைத்துக் கொண்டு புளி ஜலத்தில் தக்காளிச் சாறு சேர்த்தபின்னர் உப்புச் சேர்த்து மஞ்சள் பொடி போட்டுக் கொதி வந்ததும் பருப்பு ஜலம் விளாவி இந்தப் பொடியையும் சேர்க்க வேண்டும். தே.எண்ணெய் அல்லது நெய்யில் தாளிக்கலாம். கருகப்பிலை முக்கியம் இதுக்கு. ஆனால் வெங்காயம் சேர்த்துப் பண்ணியதில்லை.

    பதிலளிநீக்கு
  20. சவேரா ஓட்டல் செஃப் திரு நாராயணசாமி என்பவர் எங்களுக்குத் தெரிந்தவர். அவர் புதினா, வெங்காய ரசம்னு ஒண்ணு பண்ணுவார். சூப் மாதிரி நினைச்சுக் குடிக்கலாம் என்றே எனக்குத் தோன்றும். சாதத்தில் விட்டுப் பிசைந்து சாப்பிட்டால் அவ்வளவா நல்லா இல்லையோனு தோணும். மனோ சாமிநாதன் தாளித்துக் கொண்டு எல்லாவற்றையும் போட்டு வதக்கிய பின்னர் புளி ஜலம் சேர்த்திருக்கார். நாங்க ரசத்துக்கு மட்டும் அடியில் தாளிப்பதில்லை. இந்தச் சாமான்களைத் தாளித்துச் சேர்க்கணும்னால் தனிச் சட்டியில் எண்ணெயில் வதக்கிக் கொண்டு புளி ஜலத்தில் சேர்ப்போம். தொலைக்காட்சியில்/யூ ட்யூப் சானல்களில் எல்லாம் அடியில் தாளித்த ரசம் தான். அதுவும் எவர்சில்வர் அல்லது இன்டாலியம் அல்லது நான் ஸ்டிக் கடாயில். நான் ஈயச் செம்பில் தான் இன்று வரை ரசம் வைத்து வருகிறேன். சமைக்க ஆரம்பிச்சதில் இருந்தே ஈயச் செம்பு ரசம்/கல்சட்டிக் குழம்பு/கீரை மசியல் தான்.

    பதிலளிநீக்கு
  21. புதுமையான ரசக் குறிப்புக்கு நன்றி மனோ சாமிநாதன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!