வியாழன், 20 ஜூலை, 2023

"விளையாட வேற ஆள் கிடைக்கலையா?"

இன்னும் மூன்றாவது சம்பவம் பாக்கி இல்லையா...  வாருங்கள்..

வாருங்கள்..  அப்படியே வெளியில் செல்லலாம்!  வெளியில்தான் அரங்கேறியது அது.

மகனுக்கு லீவு கிடைக்காததால் 'லேட் லாகின்' என்று சொல்லி வைத்து, பதினோரு மணிக்கு விழா அரங்கிலிருந்து கிளம்பி விட்டான்.

ஏப்ரலின் இறுதி வார வெய்யில் மண்டபத்தில் சுழலும் மின்விசிறிகளை மீறி அனலாகத் தகித்தது.  ஏ ஸி க்கள் பலவீனமாக வேலை செய்து கொண்டிருந்தன.  அவ்வளவு பெரிய மண்டபத்தில் அதன் பாச்சா அப்படி ஒன்றும் பலித்ததாக தெரியவில்லை.  ஆங்காங்கே திறந்திருக்கும் கதவுகளை மீறி அதுதான் என்ன செய்யும், பாவம்...

மகனை வழியனுப்ப அவனுடன் கார் வரை வந்தேன்.  காருக்குள்ளும் தகித்துக் கொண்டிருந்தது.  அவன் கிளம்பி தெருமுனை சென்று மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்து விட்டு எதிர் வரிசையில் இருந்த மெடிக்கல் ஷாப் போக சாலையைக் கடக்க நின்றேன்.  ரோஸுவாஸ்ட், மெட்ஃபார்மின், லிபிகார்ட் வாங்க வேண்டும்..  நேற்றோடு தீர்ந்து விட்டது!

இரண்டு ஆட்டோக்கள் எதிரெதிராய் வழிமறித்தாற் போல நின்று பேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் பேசிக் கொண்டிருந்தது எழுபது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணிடம்.  அவரைப் பார்க்கும்போதே ஏழ்மை தெரிந்தது.  தாங்க முடியாத வெயில் காரணமாகவும், தள்ளாமை காரணமாகவும் சக்திக்கு மீறி ஆட்டோவை நாடி இருக்கிறார் என்பது புரிந்தது.

"பக்கம்தானேப்பா...  இதோ அந்த ரோடு திரும்பி ரெண்டாவது தெரு..."

"மினிமம் நூறு ரூவாக்கு குறைஞ்சு ஏத்தறதில்ல...  உனக்காக வேணும்னா எழுபது ரூவா...  வர்ரியா சொல்லு"

எதிர்பக்கமாய்ப் பார்த்து நின்ற ஆட்டோக்காரர் இவரை 'இங்க வாங்க' என்று அழைக்க, முதலிலிருந்து பெண்மணியுடன் பேசிக் கொண்டிருந்தவர் "இட்டுனு போ...  யார் வேணாம்னா?  நாப்பது ரூவா தருமாம் மாமி..." என்றார்.

"நாப்பதா?  இங்கணயே ஏத்தி, ஒரு ரவுண்டு அடிச்சு இறக்கி வுடு நைனா...  பாவம் ஆட்டோக்கு ஆசைப் படுது..." 

பைக்குள் கைவிட்டு ரூபாயை எடுத்தபடி அவர்களை நெருங்கிய சமயம் - 

பெரிதாக சிரித்தபடி இரண்டு ஆட்டோக்களும் எதிரெதிர் திசையில் நகர, மூன்றாவதாய் ஒரு ஆட்டோக்காரர் வந்து "ஏறும்மா." என்றார்.  மாமி தயங்க, "அட, உங்க கையில இருக்கறதைக் கொடுங்கம்மா...  வெய்யில் எல்லோருக்கும்தான்..  எல்லோருக்கும் வயசாகும்" என்றதும் அதில் ஏறிக்கொண்டார் அந்தப் பெண்மணி.  சொல்லாமல் இருக்க முடியவில்லை.  அவர் தலையில் குல்லா வைத்த ஒரு முஸ்லீம்.

நான் மெடிக்கல் ஷாப்பை அடைந்தேன்.  எனக்குத் தேவையான இரண்டு மாத்திரைகளை வாங்கி கொண்டு வெளியே வந்து சாலையைக் கடந்து மண்டபத்துக்குச் செல்ல முயன்றேன்.  கடக்க முடியாமல் வண்டிகள் இங்குமங்கும் பறக்க, என்னை நெருங்கினார் ஒரு ஆட்டோக்காரர்...  

"எங்க சார் போகணும்?  வாங்க..."

அந்தப் பெண்மணியை கிண்டல் அடித்த ஆட்டோக்காரர்.  அவரைப் பார்ப்பதையே தவிர்த்தேன். புறக்கணித்து கடந்து செல்ல முயன்றபோது மறுபடியும் ஆட்டோவை வழிமறித்து நிறுத்தினார் அவர்.  

"ஸார்..  எங்கே போகணும்?"

"வீட்டுக்கு"  என் புத்தி தலை தூக்கியது.  நானாக நாடிச் செல்லவில்லை.

"வாங்க... போகலாம்.  எந்த ஏரியா?"

சொன்னேன்.  "எவ்ளோ தருவீங்க?"

"நீங்களே சொல்லுங்க.."

வெயிலின் மயக்கத்தைத் தோற்கடித்தது அவர் கேட்ட தொகை.  மீறி நடக்க முயற்சிப்பது போல நடந்தேன்.

"எவ்ளோ தருவீங்க?"  சொன்னேன்.

"அதுக்கு டூ வீலர் கூட வரமாட்டான்...   சைக்கிள்காரன்தான் வரணும்.." என்றவர், கொஞ்சம் தொகையைக் குறைத்துச் சொல்லி "வாரீங்களா?" என்றார்.

கொஞ்சம் யோசிப்பது போல நின்றேன்.  "ஆனா அதுக்கு முன்னாடி இன்னொரு இடம் போகணும்"

ஆர்வமானார்.  "எங்கே?"

"ஒரு கல்யாண மண்டபம்.."

"எங்கே இருக்கு..  ஏறுங்க..."

எதிரே கைகாட்டினேன்.  ஏமாற்றம் அவர் முகத்தில் தெரிந்தாலும், எரிச்சலை மறைத்துக் கொண்டு, சரி எப்போ கிளம்புவீங்க?"

கொஞ்சம் கவலையை முகத்தில் காட்டி "Function முடிந்துதான்" என்றேன்.

"ஒன் அவர் ஆகுமா..  டூ அவர்னாலும் இங்கேயே காத்திருக்கேன்"

"இல்லை.  நாளை மாலைதான் முடியும்"

"என்ன..  நக்கல் பண்றீங்களா?  விளையாட வேற ஆள் கிடைக்கலையா?"

"நானா கூப்பிட்டேன்?  விலகிப்போனாலும் நீங்கதானே வந்து தொந்தரவு பண்ணீங்க?  நாற்பது ரூபாய் கேட்ட  அந்த வயசான அம்மா கிட்ட  நீங்க பேசினதை விடவா?"

விலகி திருப்தியாக மண்டபத்துக்குள் வந்து விட்டேன்!

=================================================================================================================




பக்கிம் சந்திரன் 1882ல் ஆனந்த மடம் என்னும் பெயரில் வங்கமொழியிலே நாவல் ஒன்றை படைத்தார்.  இது 1772 முதல் 1775 வரை வங்காளத்தில் நடைபெற்ற சன்யாசிகள் கலகத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.  வங்காளியர் இடையில் ஒருமைப்பாட்டையும் உரிமையுணர்வையும் ஏற்படுத்தும் வகையில் பக்கிம் சந்திரர் இந்த நாவலை படைத்தார்.  இதிலே வங்க மாதாவை கலகக்கார சன்னியாசிகள் வழிபடும் பாவனையில் 'வந்தே மாதரம்' என்னும் தலைப்பில் பாடல் ஒன்றையும் சேர்த்து வைத்தார்.

 தமிழகமும் தனது பங்குக்கு ஒருமைப்பாட்டு இலக்கியங்களை வழங்கியது.  நிலமற்ற உழுவோருக்கும் நிலம் படைத்த உழுவிப் போருக்கும் இடையிலான வர்க்கப் போராட்டத்தை உருவகப்படுத்திக் காட்டும் வகையில் பௌராணிகரான கோபாலகிருஷ்ண பாரதியார் 'நந்தனார் சரித்திர கீர்த்தனை' என்னும் நாடக இலக்கியத்தை படைத்ததும் இந்த காலத்தில்தான். 

திருத்தொண்டர் புராணத்தில் சேக்கிழார் படைத்த நந்தனார் புராணத்தில் அந்தண மிராசுதாரர் பாத்திரம் இல்லை.  அதிலே வரும் நந்தன் ஏர் பிடித்து உழும் உழவனும் அல்ல. சிவ பக்தனான நந்தனாரை மட்டும் சேக்கிழாரிடமிருந்து பெற்றுக் கொண்டு புதிய நந்தனார் கதையை கோபாலகிருஷ்ண பாரதியார் படைத்தருளினார். 

வங்கத்தில் பக்கிம் சந்திரன் 'ஆனந்தமடம்' நாவலை படைத்து தந்த அதே நேரத்தில் 'பிரதாப முதலியார் சரித்திரம்' என்னும் நவீன நாவல் ஒன்றை மாயூரம் நீதிபதி வேதநாயகனார் தமிழிலே படைத்துள்ளனர்.  இந்த நாவலிலே ஆங்கில மொழியின் ஆதிக்கத்தை எதிர்க்கும் உரையாடல்களை சேர்த்தார்.  இது தமிழுரிமைக் கிளர்ச்சிக்கு அடிகோலிய முதல் நூலாகும்.   சர்வ சமய சமரச கீர்த்தனைகள் என்னும் பெயரில் தேசிய ஒருமைப்பாட்டு பாடல்களையும் வேதநாயகனார் இயற்றி தந்தார். வள்ளல் பெருமானின் வருணாசிரமம் எதிர்ப்பு வறுமை எதிர்ப்பு மத எதிர்ப்பு கருத்துக்களைக் கொண்ட ஆறாம் திருமுறை பாடல் தொகுப்பு 1885 இல் தான் வெளியிடப்பட்டது.

- விடுதலைப் போரில் தமிழகம்' என்ற நூலில் ம பொ சி. -

========================================================================================

இணையத்தில் ரசித்தது ..



===========================================================================================

நியூஸ் ரூம்  

இப்போது தக்காளி விற்கும் விலை தெரியும்தானே? தக்காளி விற்றே ஒரு மாதத்தில் ஒரு விவசாயி கோடீஸ்வரர் ஆகியிருக்கிறார்.  சம்பவம் நடந்திருப்பது புனேயில்!

அம்பது நூறு தொலைச்சாலே எப்படி பதறிப்போவோம்?  எப்படித் தேடுவோம்?  நூறுகோடி பெறுமான  நிலக்கரி இரண்டு வருடங்களாய்க் காணோமாம்..  கவலை இல்லாமல் இலவச திட்டங்களில் மூழ்கி கம்முனு இருக்கிறது அரசு...

ஒரு கேமிரா ஆர்வலர் காஸ்ட்லி லென்ஸ் வாங்க ஆசைப்பட்டு ரூபாய் 90,000 அனுப்பினால் அமேசான் அவருக்கு சீமைத்தினை அனுப்பி மகிழ்ந்திருக்கிறது...

பூமி சூடாகிக்கொண்டே வருகிறது..  மனித கைங்கர்யம்!  பூமியின் சூடான பத்து நகரங்கள் எவை தெரியுமா?

அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி என்று எல்லா நாடுகளிலும் வெப்பம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.  இன்னும் அதிகமாகும் என்று உலக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  ஆனால் இதை 18 ஆம் நூற்றாண்டிலேயே கண்டித்திருக்கிறார் ஒரு பெண் விஞ்ஞானி.   அவருக்கு கூகுள் மரியாதை செய்திருக்கிறது.

=========================================================================================================


கீழ்க்காணும் கவிதையை நான் ஃபேஸ்புக்கில் பகிர்ந்தபோது கலைமகள் ஆசிரியர் "அழகிய ஹைக்கூ ஐ ஸே.." என்று பாராட்டி இருந்தார்!

வாடியதால்
வாசம் தொலைத்த
மலரொன்று
விழுந்து கிடக்கிறது
வற்றிய குளத்தில்
ஏற்கெனவே
விழுந்து கிடந்த
மஞ்சள் இலைகள்
காற்றில் நகர்ந்து
ஆதுரத்துடன்
அணைத்து மூடுகின்றன
மலரை                                                  SEP  19 2014 

===========================================================================================================

பொக்கிஷம் :   ஜோக்ஸ்...







69 கருத்துகள்:

  1. ஐயோ ஆட்டோக்காரங்கள் மிகவும் பொல்லாதவர்கள் ஆயிற்றே. அடித்து விடுவார்களே. தப்பித்தது உண்மையா??

    ஓடும் காரில் நிற்பது என்பது photoshop என்று தோன்றுகிறது.

    கவிதை நன்றாக உள்ளது. புதுக்கவிதை என்று கூறலாம். ஹைக்கூ இலக்கணங்களுக்கு பொருந்தவில்லை.

    உதிர்ந்த இலைகள்
    வீழ்ந்த மலரை
    அனைத்தன
    இலையுதிர்காலம்.

    இது ஹைக்கூ அல்ல.

    காந்தி ஜோக்கும் டிவி நாடக ஜோக்கும் டாப்

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவ்வளவு சீக்கிரத்தில் அடிக்க மாட்டார்கள்.  வார்த்தைகள் தடிக்கும். அதற்குள் நான் மண்டபத்துக்குள் புகுந்து விட்டேன்!  

      போட்டோஷாப்பாக இருக்கலாம்.  சொல்ல முடியாது!

      ஹைக்கூ என்று நான் சொல்லவில்லை.  சங்கரநாராயணன் என்று நினைவு, அவர் சொல்லி இருந்தார்.  ஹைக்கூ இவ்வளவு வரிகளுடன் அமையாது.

      நன்றி JKC  ஸார்.

      நீக்கு
  2. ... கலைமகள் ஆசிரியர் "அழகிய ஹைக்கூ ஐ ஸே.." என்று பாராட்டி இருந்தார்!//

    இந்தமாதிரி ஆசாமிகள்தான் பத்திரிக்கைகளின் ஆசிரியர்களாக இருக்கிறார்கள் இப்போதெல்லாம் தமிழ்நாட்டில் !

    பதிலளிநீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.. வணக்கம். நம்புவோம் நாராயணனை!

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    மூன்றாம் சம்பவம் திகிலாக உள்ளது. வெய்யலின் உக்கிரத்தைப் பற்றி சொன்ன விதத்தை ரசித்தேன். ஆனால், அதை விட மனிதர்களின் வக்கிரமான பேச்சும் தகிக்கிறது. அவர்களிடம் நீங்கள் தைரியமாக எதிர்த்து (எதிரில்) நின்று பேசியது சற்று திகிலாக இருந்தது. . நல்லவேளை..! மேலும் வம்பிழுக்காமல், வம்பிழுக்க விடாமல், நீங்கள் அங்கிருந்து நகர்ந்தது நல்ல செயல்.

    அந்த நல்ல மனம் கொண்ட ஆட்டோ ஓட்டுனர் எந்நாளும் நன்றாக இருப்பார். இப்படியான நேர்மையான ஓட்டுனர்களும் பலர் இருக்கிறார்கள். இவருக்காகவாவது சூரியன் தன் அனலை சற்று குறைத்து மனிதர்களை காக்க கூடாதா என்ற எண்ணம் வருவதை தவிர்க்க இயலவில்லை.

    நாங்கள் இங்கு அன்றொரு நாள் ஒரு அரை கி. மீட்டர் தூரத்திற்கு ஒரு ஆட்டோ ஓட்டுனருக்கு நாற்பது ரூபாயை தந்து விட்டு, "நடந்தே வந்திருக்கலாம்" என்று புலம்பியவாறு வீடு வந்து சேர்ந்த சம்பவத்தையும் நினைவு படுத்தியது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரைக்கிலோமீட்டருக்கு நாற்பது ரூபாய் எல்லாம் சென்னையில் ரொம்ப சீப்!!  ஆட்டோக்காரரிடம் பேசுவதில் திகில் எல்லாம் இல்லை.  பரபரப்பான சாலை.  அவர்களிடம் பேரம் பேசுவது எப்போதுமே இபப்டி ரணகளமாகத்தான் இருக்கும்.  இப்போது எங்கள் புதிய அலுவலகத்தின் வாசலில் அடித்துக் கொள்ளும் ஆட்டோக்காரர்களைப் பற்றியும் அந்த அனுபவங்கள் பற்றியும் கூட ஒரு பதிவு எழுதலாம்!

      நீக்கு
    2. நீங்கள் தைரியமாகத்தான் பேசி இருக்கிறீர்கள். திகில் என்பது எனக்காகக் சொன்னேன். எனக்கு இப்படி ஏதாவது பேசி சண்டையாகி போனால் மக்கள் கூடி விட்டால் என்ன செய்வதென்ற ஒரு பயம்.

      இங்கு மீட்டர் சார்ஜ் இப்போது 1கி.மீ முப்பது ரூபாய் என நினைக்கிறேன். அன்று அந்த 1 கிலோ மீட்டர் இல்லாத தூரத்திற்கு அதற்கு மேலேயே கேட்டு வாங்கியதை சொன்னேன். ஓலாவில் என்றால் அந்த தூரத்திற்கே கவலையே இன்றி ரூபாய் 60, 80 கூட கேட்பார்கள்.

      நீக்கு
    3. நியாயமாக கேட்கும் சில ஆட்டோக்காரர்கள் இருக்கிறார்கள்.  அநியாயம்தான் அதிகம்!

      நீக்கு
  5. சிறப்பான பதிவு..
    மனிதநேயம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  6. //சொல்லாமல் இருக்க முடியவில்லை//

    அவர் தலையில் குல்லா வைத்த ஒரு முஸ்லீம்.

    இது சொல்ல வேண்டிய இடம்தான் ஜி

    ஆட்டோக்காருக்கு பதில் சரியே...

    பதிலளிநீக்கு
  7. இந்த முறை வெயிலுக்கு ஏசி கூட சரியாக வேலை செய்திருக்காது என்றே தோன்றுகிறது, ஸ்ரீராம்...

    தாங்க முடியாத வெயில் காரணமாகவும், தள்ளாமை காரணமாகவும் சக்திக்கு மீறி ஆட்டோவை நாடி இருக்கிறார் என்பது புரிந்தது.//

    பாவம் அந்த மாமி. அந்த ஆட்டோக்காரர்கள் மீது கன்னாபின்னான்னு கோபம் வருது. காட்டுமிராண்டித்தனம். இப்படியா ஈவு இரக்கம் இல்லாம....சே!!

    பாருங்க உதவிய ஆட்டோக்காரரை!!! அவரை வாழ்த்துவோம். எந்த மதமாஇருந்தா என்ன 'மனிதர்'!!!! அவர். அதுதானே வேண்டும்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூன்று ஆட்டோக்காரர் கள்
      அதில் ஒரே ஒரு மனிதன்

      நீக்கு
    2. என்னை மாதிரி சிறியவர்களாலேயே வெயிலைத் தாங்க முடியவில்லை.  பாவம் அந்த வயதான மாமி..  பரிதாபமாகத்தான் இருந்தது.

      நீக்கு
  8. கடைசி வரிகளை ரொம்ப ரசித்தேன் ஸ்ரீராம்...அப்படிப் போடுங்க நல்லா!!! நல்லா கடுப்பேத்தினீங்க பாருங்க அந்த ஆளை!! உங்களுக்கு ஷொட்டு!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் முதுகில் ஒரு ஷொட்டு கொடுக்கும் முன் நான் எஸ்கேப் ஆகி விட்டேன்!

      நீக்கு
  9. விடுதலைப்போரில் தமிழகம் - மாபொசி அவர்களின் கட்டுரை நல்ல சுவாரசியமான தகவல்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  10. இணைய ஃபோட்டோ - சினிமா ஸ்டன்ட் போல இருக்கு!!!! அந்தக் கார் சரிந்து அதாவது தூக்கிய பக்கம் டக்குனு தரைக்கு அந்தால் நிற்பவர் என்ன ஆவார்?!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  11. தக்காளி வித்து கோடீஸ்வரர் னா விலை குறைத்து வித்து லாபம் பார்த்துட்டாரோ?

    நிலக்கரியைக்காணமா? எரிவாயு விலை கன்னாபின்னான்னு ஏறிருக்கே....அடுப்பெரிக்க யாராச்சும் தூக்கிட்டுப் போயிட்டாங்களோ என்னமோ?!!!!

    அமேசான் இந்தியா ரொம்பப் படுத்தல்.

    உலகிலேயே வெப்பம் அதிகமான நகரங்கள் லிஸ்ட் ல அமெரிக்கா டெத்வேலி (Death valley) ன்னு ஏதோ புள்ளிவிவரம் எல்லாம் வந்தது கூகுளில்....பெயரே பொருத்தமாத்தான் இருக்குல்ல?!!

    யூனிஸ் நியூட்டன் ஃபூட்...// கூகுள் மரியாதை செய்தது நல்ல விஷ்யம் என்றாலும் இத்தனை வருஷங்களாயும் யாரும் உணரவில்லையே....

    எல்லாவற்றிற்கும் சுட்டி கொடுத்திருப்பது சூப்பர்

    கீதா

    பதிலளிநீக்கு
  12. கவிதை ரொம்ப அருமை ஸ்ரீராம். ரசித்தேன்.

    வாழ்க்கைக்கும் பொருந்தும் போன்றுஇருக்கின்றன இரண்டுமே...முதியோர் என்று பார்க்கறப்ப..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா.  நானும் இரண்டுக்கும் பொருந்துமாறு எண்ணிதான் எழுதி இருந்தேன்.

      நீக்கு
  13. பொக்கிஷம் - தலைவர் ஜோக்ஸ் - டிவி ஜோக் சிரித்துவிட்டேன்..!!!!! செம...

    கடைசி ஜோக்கும்!!! புன்னகை வந்தது. அப்பவே இப்படியா? இப்போதைய க்விஸ் நிலையும் இப்படித்தான்...

    கீதா

    பதிலளிநீக்கு
  14. வயதான அம்மா, ஆட்டோ ரௌடிகள்.... பெங்களூர் சொர்கம்தான்

    ஓலா ஊபரில் இங்கும் முஸ்லீம் டிரைவர் அலாட் ஆனால் 99 சதம் கேன்சல் பண்ணமாட்டாங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்னை ஆட்டோக்காரர்கள் பேராசைக் காரர்கள்.  வேறெந்த ஊரிலும் இவ்வளவு அதிக காசு இருக்காது என்று சொல்லலாம்.

      நீக்கு
  15. கோமதி அரசு மேடம் போன்று பலர் எழுதியதைப் படித்தபின் கொஞ்சம் வயதானவர் யாரிடமும் பேரம் பேசுவதில்லை. விரைவில் (ஹிஹி ஒருசில வருடங்களில்) அனைவரிடமும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் பேரம் பேசுவதை நிறுத்தி ரொம்ப நாளாச்சு! மால்களில், பெரிய கடைகளில் கணினி ரசீது தருகிறார்களே, அதில் எவ்வளவு ஏமாற்றுதல் தெரியுமா?

      நீக்கு
  16. ஆட்டுக்காரருக்கு செமையாக கொடுத்தீர்கள்.

    கவிதை அருமை. நன்கு பிடித்தது.

    பொக்கிசம் ரசனை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​ஆட்டுக்காரர் என்றால் அர்த்தமே வேற மாதேவி. அண்ணாமலை

      நீக்கு
    2. ஆம்.  அண்ணாமலை ஆடு, வயக்காடு என்று தொழில் செய்து முன்னேறுபவர்.  அவருக்கு அப்படி ஒரு பெயர் உண்டு.  இவர்களுக்கெல்லாம் கொள்ளை அடித்து ஊரை அடித்து உலையில் போட்டு சம்பாதிப்பவர்கள் மேல்தான் மதிப்பு!

      நீக்கு
  17. ஆட்டோகாரரை நன்றாகவே வெறுப்பேற்றியிருக்கிறீர்கள்.

    பானுமதி வெங்கடேஸ்வரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி பானு அக்கா. அது ஏன் எபியில் மட்டும் உங்கள் ஐடி மக்கர் செய்கிறது?

      நீக்கு
  18. கவிதை சிறப்பு!

    நந்தனார் படத்தை பலமுறை பார்த்த என் தாத்தாவுக்கு பெரிய புராணத்தில் அந்த ஆண்டை ஐயர் பாத்திரம் கிடையாது என்று கூறியதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பெரிய புராணத்தில் நந்தனார் பெயர் திருநாளைப்போவார்.
    ராஜபார்ட் தங்கதுரை படத்தில் "நாளைப்
    போகாமல் இருப்பேனோ?" பாடலை டி.எம்.எஸ். மிக நன்றாக பாடியிருப்பார். அதற்கு சிவாஜியின் நடிப்பும் அற்புதமாக இருக்கும்.
    நான் அந்தப் பாடலை வெள்ளி விருப்பமாக கேட்டிருந்தேன்.

    பானுமதி வெங்கடேஸ்வரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் அந்தக் காட்சியை ரசிப்பேன்.  பாடலும் நன்றாய் இருக்கும்.

      நீக்கு
  19. இன்றைய நியூஸ் ரூம் செய்திகளை பகிர்ந்திருப்பது ஸ்ரீராம். நான் பயணத்தில் இருப்பதால் என்னால் பகிர முடியவில்லை.

    பானுமதி வெங்கடேஸ்வரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  நன்றி.  சென்ற வாரமும் நீங்கள் தொகுத்த செய்திகளோடு நான் தொகுத்தவையும் சேர்ந்து வந்தது!

      நீக்கு
  20. நியூஸ் ரூம் செய்திகளில் வித்தியாசம் தெரிகிறது. கீழே பார்த்ததும் தான் அது ஸ்ரீராம் எனப் புரிந்தது. ஜோக்குகள் இக்காலத்துக்கும் பொருந்துபவை. காரின் ஸ்டன்ட் மனிதன் கவரவே இல்லை. ம.பொ.சியின் இந்தப் புத்தகம் படித்த நினைவு. வீட்டில் இருக்கோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாக்கா..  நியூஸ்ரூம் செய்திகள் நான் பகிர்வது முதல்முறை அல்ல, இதுபோல லிங்க் கொடுப்பதும் முதல்முறை அல்ல!  சென்றமுறையே என் பங்கும் இருந்தது!

      நீக்கு
  21. http://sivamgss.blogspot.com/2009/07/blog-post_8190.html//http://sivamgss.blogspot.com/2009/07/2_16.html//http://sivamgss.blogspot.com/2009/07/1.html//http://sivamgss.blogspot.com/2007/02/212.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு எழுத்து விடுபட்டிருக்கிறதோ...  'மன்னிக்கவும் நீங்கள் தேடும் பக்கத்தைக் காணோம்' என்கிறது!

      நீக்கு
  22. 2007 ஆம் ஆண்டில் ஆரம்பிச்சுப் பின்னரும் 2009 ஆம் ஆண்டிலும் நந்தனார் பற்றி எழுதி இருக்கேன். பள்ளியில் சொல்லிக் கொடுத்தது என்னமோ வேதியர் நந்தனாரைத் தடுத்தார் என்று தான். அதே போல் சிதம்பரம் தெற்கு வாயிலில் உள்ள சின்ன வாசல் ஒன்று அடைக்கப்பட்டிருப்பது நந்தனார் அதன் வழியே புகுந்ததால் தில்லை வாழ் அந்தணர்கள் அந்த வழியையே அடைத்துவிட்டதாக ஒரு பொய்ச் செய்தி திரித்துச் சொல்லப்பட்டு வருகிறது. இரண்டு நாட்கள் முன்னர் ஒரு யூ ட்யூப் சானலில் கூட "சிதம்பர ரகசியம்" என்னும் பெயரில் வந்த ஒரு உரையில் அதைச் சொன்ன பெண்மணி இப்படித் தான் நந்தனார் கோயிலுக்குள் புகுந்த வழியைத் தில்லை வாழ் அந்தணர்கள் அடைத்துவிட்டதாகச் சொல்லிக் கொண்டிருந்தார். உண்மையில் அந்த வாசல் கோவிந்தராஜப் பெருமாளுக்குப் பிரகாரம், கோபுரம் எழுப்பும்போது கட்டுமான சாமான்களை முக்கிய வாசல் வழியே கொண்டு வராமல் இந்த வழியே கொண்டு வந்திருக்கிறார்கள். அதுவும் சமீப காலங்களில் எல்லாம் இல்லை. இன்னும் சொல்லப் போனால் கோவிந்தராஜப் பெருமாள் நடராஜரின் திருச்சுற்றில் கோஷ்டத்திலேயே இருந்திருக்கார் என்பதையும் பின்னர் அவருக்குத் தனி சந்நிதி எழுப்பப் பட்ட வரலாறையும் என்னோட "சிதம்பர ரகசியம்" நூலில் காணலாம். திருமங்கை ஆZவார் கோவிந்தராஜப் பெருமாளைத் தரிசனம் செய்ய வந்தப்போ அவர் கோஷ்டத்தில் ஓர் திண்ணையில் எழுந்தருளி இருந்ததைக் குறிப்பிட்டிருப்பார். அந்தப் பாசுரத்தை நெல்லை சொல்லுவார். இஃகி,இஃகி,இஃகி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் அலுவலகத்தில் திடீரென பதினைந்து தில்லை மக்கள் மாறுதலில் வந்திருக்கிறார்கள்.  இரண்டுநாள் முன்பு கூட இதுபற்றி (நந்தி - மூடிய சுவர்) பற்றி பெத்து வந்தபோது நந்தனார் கதைதான் சொன்னார்கள்.  இல்லை வேறு கதை இருக்கிறது..  இப்போது எனக்கு சரியாக நினைவில்லை என்றேன்.  இதோ..  நீங்கள் சமயம் பார்த்து சொல்லி விட்டீர்கள் மறுபடி.

      நீக்கு
  23. ஆட்டோ அனுபவம் எனத் தனியாப் புத்தகமே போடலாம். எல்லாவற்றையும் மிஞ்சியது நாங்க முதல் முதலாக மும்பை போனப்போ எங்களைப் பால்கரில் இருந்து கூட்டிச் சென்ற ஆட்டோக்காரருடன் ஆனது தான். மறக்க முடியாத ஒன்று. பயந்துண்டே போனோம். வழியெல்லாம் தெரியாது. நல்ல மழை. மலைப்பாதை. என்னவோ ஒரு தைரியத்தில் ஆட்டோவில் ஏறிட்டோம். அந்த ஆட்டோ ஓட்டுநர் எங்களை ஏமாற்றவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிட்டத்தட்ட இங்கும் அதே கதைதானே.. நான் ஆட்டோ பற்றி எழுதி இருப்பதைத் தொகுத்தாலே முதல் பாகம் புத்தகம் போடலாம்!!

      நீக்கு
  24. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு

  25. பைக்குள் கைவிட்டு ரூபாயை எடுத்தபடி அவர்களை நெருங்கிய சமயம் - //

    நீங்கள் உதவ நினைத்தீர்கள். இறைவன் நல்ல இதயம் கொண்ட ஆட்டோக்காரரை அனுப்பி விட்டார்.

    நல்லவர்களும் இந்த உலகில் இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம் உதவ நினைத்தால் நாலுபேர் உடனே உதவ வருவார்கள் போலும்!

      நீக்கு
  26. என்ன.. நக்கல் பண்றீங்களா? விளையாட வேற ஆள் கிடைக்கலையா?"//

    நல்ல விளையாட்டு, அவருக்கு புரிய வைத்தது நல்லது.
    இனி வயதானவரிடம் பேசும் போது தன்மையாக பேசினால் நல்லது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்.  ஆனால் அவர்கள் மாறமாட்டார்கள்...  சிச்சுவேஷன் சாங்...  "மாறாதய்யா மாறாது மனமும் குணமும் மாறாது!"

      நீக்கு
  27. இப்போது தக்காளி விற்கும் விலை தெரியும்தானே? தக்காளி விற்றே ஒரு மாதத்தில் ஒரு விவசாயி கோடீஸ்வரர் ஆகியிருக்கிறார். //

    இதுதான் முக்கிய செய்தி.

    உங்கள் கவிதை அருமை.


    பொக்கிஷபகிர்வில் பூங்கோதை மயிலாடுதுறையில் வசித்தார், எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் அண்ணன். தன் மனைவியின் பேரில் சிரிப்புகளை எழுதி அனுப்புவார். இப்போது சென்னையில் வசிக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே.. அவர் தொலைபேசி எண் இருந்தால் அவரை நினைவுகூரும் சந்தர்ப்பம் இன்று வந்தது என்று சொல்லலாமே...

      நீக்கு
    2. அவர் தம்பி மகள் என் மகனின் பள்ளி தோழி, எனக்கும் தோழியானாள். சிங்கப்பூரில் அவளையும் சந்தித்து வந்தேன். அவளிடம் சொல்கிறேன்.

      நீக்கு
  28. வணக்கம் சகோதரரே

    உங்கள் கவிதை நன்றாக உள்ளது. வாடினாலும், அந்த மலரின் வாசத்தின் அருமை உணர்ந்த பழுத்த இலைகள்.

    ரசித்த இணைய படம் தைரியமாகத்தான் உள்ளது. (நீங்கள் ஆட்டோகாரரிடம் தைரியமாக அவரின் தப்பை தட்டிக் கேட்டதைக் போன்று..:)). )

    செய்தி அறையில் பல விஷயங்களை அறிந்து கொண்டேன். இன்று தக்காளி, நாளை வெங்காயம்.

    பொக்கிஷ நகைச்சுவை பகுதி நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டுக்கும், ரசித்ததற்கும் நன்றி கமலா அக்கா.

      நீக்கு
  29. உதவிய ஆட்டோக்காரரின் மனிதம் பாராட்டுக்குரியது. அடாவடி ஆட்டோக்காரருக்கு தாங்கள் கொடுத்தது சரியான பதிலடி. கவிதை நன்று. ஆசிரியர் பெயர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன். நியூஸ் ரூம், ஜோக்ஸ் உட்பட தொகுப்பு சிறப்பு.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!