செவ்வாய், 17 அக்டோபர், 2023

சிறுகதை : கோயில் - துரை செல்வராஜூ

 அற்புதமான கோயில் என்று  வந்ததைக் காணொளிச் சுருளில் கவனித்து விட்டு யோசித்தால் - எங்கேயோ பார்த்திருப்பதாகத்  தோன்றியது..  -

"_அட..   நமக்குப் பக்கத்தில தான்!.. அரை மணி நேரத்தில் போய்டலாம்.. என்னென்னமோ சொல்றாரே இந்தப் புரோ!.. இத்தனை நாள் கவனிக்காம விட்டுட்டோமே.. "

அபிஷேக் மனதில் வருத்தம்  மூண்டது..

" நீங்க பார்த்தீங்கன்னா புரோ இந்தக் கோயில் ல முருகனுக்கு நாலு கை இருக்குதுங்க.. முருகன் கையில வேல் வச்சிருக்கிறார்.. ங்க..
முருகனுக்கு நேர் எதிரே மயில் இருக்குதுங்க.. இந்தப் பக்கம் வள்ளி மேடமும் அந்தப் பக்கம் தெய்வானை மேடமும் இருக்காங்க.. ங்க..  நீங்க பார்த்தீங்கன்னா புரோ..  இது ரொம்பவே அதிசயமான அமைப்புங்க.. நீங்க பார்த்தீங்கன்னா ரெண்டாயிரம் வருசத்துக்கு முன்னால சோழர்கள் கட்டுனதா சொல்றாங்க.. இங்கே ஒருதரம் வந்துட்டுப் போனால் போதுங்க..  அதுக்கப்புறம் நீங்க பார்த்தீங்கன்னா உங்க லைப்புல நல்ல சேஞ்ச் எல்லாம் தெரியுமுங்க.. இந்தக் கோயில் எங்கே இருக்குன்னு
பார்த்தீங்கன்னா... "  -

அப்படி..ன்னு நெறய -  பார்த்தீங்கன்னா.. பார்த்தீங்கன்னா.. போட்டு, எதை எல்லாமோ சொல்லிட்டு - " இந்த வீடியோ புடிச்சிருந்தா லைக் பண்ணுங்க சேர் பண்ணுங்க... டேபிள் பண்ணுங்க... மறக்காம பெல் பட்டன  அமுக்குங்க.. " என்று முடிந்தது அந்தக் காணொளி..

அதை மீண்டும் மீண்டும் பார்த்து அகமகிழ்ந்து கொண்டிருந்தான் அபிஷேக்..

" அடடா.. அந்த புரோ யாரோ எவரோ தெரியலை.. ஜனங்க மேல எவ்வளவு அன்பு!.. " - மெய் சிலிர்த்தான் அபிஷேக்.. 

அதன் பின் சும்மா இருக்க மாட்டாமல் டார்லிங் கிருத்திகாவைக் கூப்பிட்டு சம்பந்தப்பட்ட காணொளியைக் காட்டியதும் அவளும் அவள் பங்கிற்கு தாம் தூம் என்று குதித்தாள்..

" இன்னைக்கு சஷ்டி தெரியுமா?.. " -  என்றாள்..

" .. அதுக்கு என்ன இப்போ?.."

" சஷ்டி அன்னிக்கு முருகன் கோயிலப் பத்தி சேதி வர்றது ரொம்ப நல்லது.. "

" உனக்கு இதெல்லாம் எப்படித் தெரியும்?.. '

சஷ்டி கார்த்திகை பஞ்சமி ஏகாதசி - இதைப் பற்றி எல்லாம் இவனுக்கு ஒன்றும் தெரியாது..

சஷ்டி என்று யாராவது சொன்னால் 'நமக்கு எதுக்குங்க சட்டி?... எங்க  Kitchen ல எல்லாமே Non sticky items தான் .. High quality materials..' என்பான்..

கிருத்திகாவுடன் கல்யாணம் முடிந்து ரெண்டு மாசம் தான் ஆகின்றது..  வேலையை முன்னிட்டு இந்த ஊரில் தனியாகக் குடித்தனம்.. 

கிருத்திகாவுக்கு கோயில் குளம் பற்றிய பட்டியல் எல்லாம் ஓரளவுக்குத் தெரியும்..  அவ அம்மாவுக்கு எல்லாமே அத்துப்படி.. மட்டையடி  தோக்கா (தொலைக்காட்சி) வுக்கு அவங்க நிரந்தர அடிமை.. 

எந்தெந்த கோயில்ல என்னென்ன பிரசாதம்.. எத்தனை தூண்.. எத்தனை வாசல்.. எத்தனை படிக்கட்டு.. எல்லாம் தெரியும்..

தக்காளி விலை ஏறாமல் இருப்பதற்கு என்ன பரிகாரம்?.. கத்தரிக்காய் சொத்தை இல்லாமல் கிடைப்பதற்கு எத்தனை விளக்கு ஏற்றுவது.. கட்டெறும்பு கடிக்காமல் இருப்பதற்கு என்ன செய்வது ?.. 

- என்பதெல்லாம் - நாக்கின்  நுனியில்..

" ரெண்டாயிரம் வருசத்துக்கு முன்னால ராஜராஜன் கட்டுன கோயிலாம்.. " - வியந்தான் அபிஷேக்..

சுள்ளென்று கோபம் கிருத்திகா முகத்தில்..

" ராஜராஜ சோழருடைய காலம் கை மேல இருக்கு.. கொஞ்சங்கூட பொறுப்பு இல்லாம அவன் தான் உருட்டி விடுறான்.. ன்னா நீங்களும் தலய ஆட்டிக்கிட்டு இருக்கீங்களே!.. "

" அட.. ஆமா.. இல்லே!.. " - அசடு வழிந்தான் அபிஷேக்..

" இந்த குழாயடியால வந்தது.. எல்லாம் டூப் நியூஸ்.. "

" நல்ல செய்திகளும் இருக்குடா.. நாம தான் கேக்கறது இல்லை!.. " - என்றவாறு காதருகில் குனிந்தாள் புன்னகையுடன்..

" நமக்கு மேரேஜ் ஆகி ரெண்டு மாசம் ஆச்சு.. நூறாவது நாள் அன்னைக்கு முருகன் கோயிலுக்குப் போய் அபிஷேகம் அர்ச்சனை செஞ்சா லைஃப் ரொம்ப ஹேப்பியா இருக்குமாம்.. "

" யார் சொன்னாங்களாம்?.. "

" மட்டையடி டீவியில  சொன்னாங்களாம்.. "

" ஒருத்தருக்கு ஒருத்தர் புரிஞ்சிக்கிட்டு விட்டுக் கொடுத்து நடந்தா ஹேப்பி இருக்காதாமா?.. "

எப்போதாவது இப்படி அறிவு பூர்வமாகவும் பேசி விடுவான் அபிஷேக்..

" ம்க்கும்.. எதுவானாலும் எடக்கு மடக்காத் தான் பேசறது!.. "

அபிஷேக்கின் உச்சந் தலையில் மென்மையாகக் குட்டினாள் கிருத்திகா...

சரி.. நூறாவது நாள கொண்டாட்டத்தை முருகன் கோயிலில் வைத்துக் கொள்ளலாம் என, இருவரும் விரும்பி - முன்னதாக சென்று  விசாரித்து விட்டு வரலாம் என்று புறப்பட்டு,

இரு சக்கர வாகனத்தில் வந்து இறங்கியதும் - கோயில் எல்லையில் நுழைந்ததற்குக் கட்டணம் வாங்கிக் கொண்டார்கள்..

கொளுத்தும் வெயிலில் வண்டியை நிறுத்தி வைப்பதற்கு கட்டணம்..

முடி இறக்கணுமா..
காது குத்தணுமா..
நெய் விளக்கு ஏற்றணுமா..
மா விளக்கு ஏற்றணுமா..
நின்னு சாமி கும்பிடணுமா..
உட்கார்ந்து கும்பிடணுமா..
அபிஷேகம் செய்யணுமா.
அர்ச்சனை செய்யணுமா..
காவடி எடுக்கணுமா.. பால்குடம் எடுக்கணுமா..
பொங்கல் வைக்கணுமா..
பூமாலை போடணுமா..
பொன்னூஞ்சல் ஆட்டணுமா..
தங்க ரதம் இழுக்கணுமா - "விடாதே பிடி!.. " - என்று எல்லாவற்றுக்கும் கட்டணம்!..

இவ்வளவு  இருந்தும் - முருகனுக்கு பக்கத்துல போய் கும்பிடுவதற்கும் சிறப்பு கட்டணம்..

உங்கள் காணிக்கைகளை இங்கே செலுத்தவும் - என்று பெரியதாய் உண்டியல்!..

இதுக்கும் மேல -  அன்னதான நன்கொடை அபிஷேக நன்கொடை அலங்கார நன்கொடை 
அதுக்கு நன்கொடை..
இதுக்கு நன்கொடை.!.
- என்று வசூல் ராஜா வாரிசுகள்..

அபிஷேகப்  பஞ்சாமிர்தப் பிரசாதம் தவிர்த்து, கோயில் விற்பனையில்
அதிரசம், முறுக்கு, ரவா லாடு - இன்னும் என்னவெல்லாமோ இருந்தன.. 

சாமியக் கும்பிட்டுட்டு - சும்மா  வரமுடியாது..

இதற்கிடையே இடத்திற்கேற்ப  இடைத் தரகர்கள்.. 

இடைத் தரகர்கள் என்று கூட சொல்லக் கூடாது.. 

அருள் பெற்ற - என்று சொல்லலாமா?..  

..ம்.. ஹூம்.. இதுவும் வேண்டாம்.. அவங்க அவங்க வசதிக்கு ஏத்தாப் போல அவங்களே ஏதாவது சொல்லிக் கொள்ளட்டும்.. 

நாம ஏதாவது சொல்லப் போக ஊர் வம்பாகி விடும்..

எங்கும் பணம்.. எல்லாத்துக்கும் பணம்!.. 

மேல்நிலை காணிக்கைகளுக்காக மின்னணுக் குறியீடுகளும் ஆங்காங்கே இருந்தன..

இப்படி இருந்தும் சிறப்புக் கட்டண வரிசையில் பெருங்கூட்டம்..  கோயிலுக்கு  உள்ளேயும் வெளியேயும் நெரிசல்..  

கோயில் முன் மண்டபத்தின் அகலத் திரையில்  அழகிகளின் குலுக்கல் ஆட்டங்களுடன் விளம்பரங்கள் ஓடிக் கொண்டு இருந்தன..

இடையிடையே இந்தக் கோயிலைப் பற்றிய செய்திகள்.. ஏதோ இவங்க தான் எல்லாம் .. ங்கற மாதிரி  ஜால்ராக்கள் - வேறு சத்தம்  போட்டுக் கொண்டிருந்தன..

கடைசியில் பார்த்தால் ஏதோ தனியார் நிர்வாகத்தின் கோயிலாம் இது!..

இப்படி - பண மழை பெய்கின்ற சூழலையும் மீறி இருட்டுக்குள் கிடக்கின்ற கோயில்கள் பற்பல என்பது யாருக்கும் தெரியாமல் இருந்தது.. 

முன் மண்டபம் பிரகாரம் எங்கும் பளபளப்பான கற்கள் பதிக்கப்பட்டு வழ வழப்பாக இருந்தது.. 

அதனால் கோயிலுக்குள் பக்தர்கள் விளக்கேற்றுவதற்கு அனுமதியில்லை.. அதற்கான பணத்தைக் கொடுத்து விட்டால் போதும் என்றார்கள்..

சந்நிதி பணியாளர்கள் கட்டை விரலில் கூட தங்க மோதிரத்துடன் அகலமான அலைபேசிகளில் பேசிக் கொண்டு இருந்தார்கள்..

கோயிலின் ஆடம்பரத்தைப் பார்த்துக் கொண்டே வந்த அபிஷேக் கிருத்திகா தம்பதியர் சிறப்புக் கட்டண வரிசையில் சென்று அரை மணி நேரம் கழித்து முருகனை தரிசித்தனர்.. 

எப்படியோ அழகான தரிசனம்.  முருகன் திருமேனி நன்றாக அலங்கரிக்கப்பட்டிருந்தது..  மஞ்சள் நிற பட்டும் வெள்ளி வேலும் கவசமும் தங்கக் கிரீடமும் பிரமிப்பாக இருந்தன.. வள்ளியும் தேவயானையும் அழகின் அம்சமாக இருந்தனர்..  முருகனின் கனிவான பார்வை எதையோ சொல்லாமல் சொல்லிற்று.. 

திருச்சுற்றில் வண்ணமயமாக ஆறுபடை வீடுகளின் சுதை சிற்பங்கள்.. கருங்கல் பலகைககளில திருப்புகழ் பாடல்கள் வண்ண எழுத்துக்களாக.. 

பிரமிப்புடன் கோயிலைச் சுற்றி நடந்து விட்டு வெளியே வந்தார்கள்..

வெயிலில் கொதித்துக் கிடந்த ஸ்கூட்டியை அபிஷேக் நகர்த்திய போது கிருத்திகா சொன்னாள்..

" நம்ம வீட்டுக்குப் பக்கத்தில் கொஞ்ச தூரத்துல  சிவன் கோயில் இருக்குது டா.. உண்மையிலயே பழைய கோயில்.. அங்கேயும் முருகன்  வள்ளி தேவயானை இருக்காங்க.. நாம அங்க போய் Celebarate செஞ்சிட்டு.. குருக்களுக்கு ஏதாவது Help பண்ணுவோம்.. "


***

53 கருத்துகள்:

  1. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. இன்று கதைக் களம் காண்பதற்கு வருகை தரும் அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் அன்பின் நல்வரவு..

    பதிலளிநீக்கு
  3. இன்று எனது கதையினைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும் கண் கவரும் படங்களுடன் எழிலூட்டிய சித்திரச் செல்வர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
  4. ஓ . இவுங்க தான் அவுங்களா!..

    இருக்கட்டும்.. இருக்கட்டும்..

    பதிலளிநீக்கு
  5. மட்டையடி டீவி..
    ரெண்டாயிரம் வருசம் ..
    ராஜராஜ சோழன்..

    யாராவது சண்டைக்கு வந்துடப் போறாங்க!..

    பதிலளிநீக்கு
  6. சமீபத்தில் வாசித்த செய்திகளின் பாதிப்பு போலிருக்கு. "சிறப்பு தரிசன சீட்டுக்கு ஏன் இப்படி முண்டியடிச்சு கூட்டத்திலே நிக்கிறீங்க?
    இப்படி வெளியே வாங்க.. நான் கூட்டிப் போறேன்.
    காசெல்லாம் பொறவு பாத்துக்கலாம்.. சாமி தரிசனம் தான் முக்கியம்.." என்று யாராவது அணுகுகிற வரிகள் தான் விட்டுப் போச்சு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜூவி அண்ணா அவர்களது வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. அன்பின் ஜூவி அண்ணா அவர்களது வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    3. சிறப்பு தரிசன சீட்டுக்கு ஏன் இப்படி முண்டியடிச்சு கூட்டத்திலே நிக்கிறீங்க?..

      சிறப்பு தரிசனத்துல போய்ப் பார்த்தால் தான் சிறப்பாம்!..

      ஆரு சொன்னது?..

      எல்லாம் மட்டையடி டீவியில தான்!..

      நீக்கு
    4. சிறப்பு தரிசன சீட்டுக்கு ஏன் இப்படி முண்டியடிச்சு கூட்டத்திலே நிக்கிறீங்க?..

      சிறப்பு தரிசன சீட்டு வாங்கிப் பார்த்தால் தான் சிறப்பாம்!!..

      யார் சொன்னது?..

      மட்டையடி டீவியில தான்!..

      நீக்கு
  7. சொல்ல வரும் கருத்து புரியுது. சிறுகதை வடிவம் வரவில்லைனு நினைக்கிறேன்.

    பொதுவா நம்ம எல்லோருக்கும் கோயிலுக்குப் போவதே கடவுளுக்கு நாம் செலுத்தும் காணிக்கையாகவும் பதிலுக்கு இறைவன் நமக்கு இது இது செய்யணும் என்று எதிர்பார்க்கும் இடமாகவும் ஆகிவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோய்லுக்குப் போறது எதுக்கு?..

      ஆளாளுக்கு ஒவ்வொரு மாதிரி கருத்து..

      அதுவா இதுவா எது சரி?..

      இன்றைய நாளில் அவுங்க சொல்ற மாதிரி பொழுதைப் போக்குற இடம்..

      காசு கொடுத்து பிரசாதம் வாங்குற் எடம்!..

      நீக்கு
  8. இறைவன் முன்பு அனைவரும் சம்ம்.

    இருந்தாலும் கோயில் என்பது ஒரு நிறுவனம் போன்றது அல்லவா? அதை நடத்துவதற்கான செலவை யார் அளிப்பது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோயிலை நிறுவுதல் ( கட்டுதல்)..
      அவ்வளவு தான்!..

      அவங்களாலும் இவங்களாலும் நிறுவனம் என்றாகி விட்டதோ..

      நீக்கு
    2. கோயில் என்பது ஒரு நிறுவனம் போன்றது..

      நிறுவனத்துக்கு முதல் போட்டது யார்?..

      ஆதாயத்தை அனுபவிப்பது யார்?..

      நீக்கு
    3. கோவில்களில் ஸ்வீட் ஸ்டால்கள் வைத்து, இனிப்புகள் வியாபாரத் தலமாக்கி, காசு பார்க்கிறது அரசாங்கம். வரும் 1ம் தேதியிலிருந்து கோவிலுக்கு மொபைல் எடுத்துச்செல்லக் கூடாது, ஐந்து ரூபாய் கொடுத்து பாதுகாக்கும் இடங்களில் வைத்துவிட்டுச் செல்லவேண்டும்.

      நீக்கு
  9. பழையாறையைச் சுற்றிலும் பல நிறுவனங்கள் ஆதாயம் இல்லாததால் ஆபத்தான நிலையில் இருக்கின்ற்ன..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் துரை செல்வராஜு சார். நாதன் கோவில் என்று அழைக்கப்படுகிற ந்ந்திபுர விண்ணகரத்திலிருந்து நடக்கும் தொலைவில் உள்ள பழையாறை கோவில், கோபுரம் சிதிலமடைந்த நிலையில், உள்ளே இறை என்னும் பவக்கிஷத்தோடு இருக்கிறது. இதுபோல பலப் பல கோவில்கள். இவற்றைச் சரி செய்வது அரசின் கையில் இருக்க, அவர்களோ பொருட்காட்சி சாலை போல டிக்கெட் வசூலித்து அதில் வேறு செலவுகள் செய்கிறார்கள்.

      நீக்கு
  10. அன்பின் நெல்லை அவர்களது வருகையும் சிந்தனைக்கு உரிய கருத்து களும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  11. //சந்நிதி பணியாளர்கள் கட்டை விரலில் கூட தங்க மோதிரத்துடன் அகலமான அலைபேசிகளில் பேசிக் கொண்டு இருந்தார்கள்//

    எல்லாம் உழைப்பு ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// எல்லாம் உழைப்பு ஜி.. ///

      உண்மை தான்..

      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  12. // எங்கும் பணம்... எல்லாத்துக்கும் பணம்... //

    சரிதான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பணம் .. பணம்..

      இது ஒன்று தான் குறிக்கோள்..

      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..

      நீக்கு
  13. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.

    இன்றைய கதை நன்றாக உள்ளது. கதை முடிவும் நன்றாக உள்ளது. இப்போதைய கால கட்டத்தின் நிலைகள், கோவில்களின் நிர்வாக நிலைமை பற்றி அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்.

    /தக்காளி விலை ஏறாமல் இருப்பதற்கு என்ன பரிகாரம்?.. கத்தரிக்காய் சொத்தை இல்லாமல் கிடைப்பதற்கு எத்தனை விளக்கு ஏற்றுவது.. கட்டெறும்பு கடிக்காமல் இருப்பதற்கு என்ன செய்வது ?./
    உண்மைதான்.. எதற்கென்று இல்லாமல் அத்தனைக்கும் பரிகாரம் தேடும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் மனித வர்க்கங்கள்.... இது இந்த கால கட்டத்தின் தறபோதைய நிலைமைகள்.

    /முருகனின் கனிவான பார்வை எதையோ சொல்லாமல் சொல்லிற்று../

    அந்தப் பார்வையின் ரகசியம் இதுதான். பழமையான சிதிலமடைந்த பல கோவில்களின் இருக்கும் இறைவனார்களின் நிலையை எண்ணும் போது வருத்தமாக உள்ளதென "அவனும்" வருத்தப்பட்டிருப்பதால் எழுந்த கனிவு.

    "ஆலயம் தொழுவது சாலவும் நன்று" என்றிருந்த ஆன்மிக காலம் போய் இப்போதெல்லாம் கோவில்களுக்கு செல்வது ஒரு பொழுது போக்காக மாறி விட்டது.வேறு வழியின்றி நாமும் அத்துடன் உடன்பட்டு செல்கிறோம்.

    மனமெனும் கோவிலில் அவரவர் இஷ்ட தெய்வங்களை பிரதிஷ்டை செய்து தினசரி தெய்வங்களின் பெயர்களை உச்சரித்து பாராயணம் செய்தாலே போதுமென என் உடல்நிலை நினைக்கிறது. சில சமயங்களில், இந்த ஆசை பேராசை கொண்டு கடிவாளம் இல்லாத குதிரையாக பயணித்து விடுகிறது. என்ன செய்வது? இந்த ஆசையெனும் மாயப்பேய் நம் உயிருடன்தானே மறையும்.

    கதை நன்றாக உள்ளது. பாராட்டுக்கள். சுருக்கமாக கருத்து கூற நினைத்தும், ஒரு பதிவாக கருத்து பெருகி வந்து விட்டது.. :))) மன்னிக்கவும். இதுவும் அந்த ஆசைப்பேயின் ஒரு விதமான ரகந்தான்.

    சகோதரர் கௌதமன் அவர்களின் ஓவியமும் கதைக்கேற்றபடி நன்றாக உள்ளது. பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமலாக்கோவ்!!! நேத்து என்னாச்சு கேக் சாப்பிட வரலை!!

      கீதா

      நீக்கு
    2. அவங்களுக்கு ஷுகர் இருக்கான்னு முதல்ல கேளுங்க. கேக் பண்ண நேரம் இருக்கான்னு இரண்டாவது கேள்வி.

      நீக்கு
    3. வணக்கம் சகோதரி

      /கமலாக்கோவ்!!! நேத்து என்னாச்சு கேக் சாப்பிட வரலை!!/

      ஹா ஹா ஹா கீதா சகோதரி நேற்று என்னவோ கொஞ்சம் கெடுபிடியான வேலைகள். ஆனால், படுக்கும் முன் இரவு உங்கள் பேரீச்சம் பழம் கேக் செய்முறையை முழுவதுமாக படித்து விட்டேன். நேற்றே அதன் நல்ல சுவையையும் உணர்ந்து சாப்பிட்டு விட்டேன். :)))) இன்று காலையில் கருத்திடலாம் என நினைத்து இந்த காலையும் இப்போது மதியமாகி விட்டது. இதோ இப்போதுதான் வந்தேன். தாங்களும் வந்திருக்கிறீர்கள் . நல்ல பொறுமையான செய்முறையுடன் கேக் செய்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள் தங்கள் கருத்தைப் பார்த்தவுடன் இதிலேயே பதிலும் தந்து விட்டேன். அங்கும் வந்து கருத்திடுகிறேன். நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    4. வணக்கம் நெல்லைத் சகோதரரே

      /அவங்களுக்கு ஷுகர் இருக்கான்னு முதல்ல கேளுங்க/

      அதெல்லாம் கைவசம் (கால் வசம்... கால்கள் எப்போதும் மரத்துத்தான் இருக்கிறது . ) நிறையவே இருக்கிறது. மற்றபடி கேக் செய்ய நேரமில்லை என்பதோடு, இந்த செய்முறைகளை நான் அறியேன். உண்மையை சொன்னால், சகோதரி கீதா ரெங்கன் மாதிரியெல்லாம் இந்த வெரட்டி கேக்கெல்லாம் எனக்கு செய்யத் தெரியாது. சாப்பிட்டதும் இல்லை. நார்மல் சாப்பாடு, அதுவும் பழங்கால உணவு வகைகள்தான் செய்யத் தெரியும்,. முட்டை இல்லாத கேக்கெல்லாம் இப்போதுதான் குழந்தைகளின் வறுப்புறுத்தலில் சாப்பிட ஆரம்பித்தேன். அதற்குள் உடலில் இனிப்பு ஆக்கிரமித்திருப்பதை கண்டு பிடிக்கப்பட்டதும் என் நேரந்தான்.... வேறு என்ன சொல்வது? நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    5. /// இப்போதைய கால கட்டத்தின் நிலைகள், கோவில்களின் நிர்வாக நிலைமை பற்றி அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்.. ///

      இது தனியார் கோயில் என்பதை மறக்க வேண்டாம்...

      மற்றவை சிறப்போ சிறப்பு..

      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  14. துரை அண்ணா, கதை இக்கால சூழல்களைச் சொல்லி, அனுபவங்கள் போன்று சொல்லிப் பயணிக்கிறது கதை அபிஷேக், கிருத்திகா வழியாகப் பயணிக்கின்றது.

    முடிவு கோயில் கோபுரம் இன்னும் முழுமை பெற்று கும்பாபிஷேகம் நடக்காதது போன்று பட்டது......உங்கள் ஆதங்கம் கதையில் தெரிகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னுடைய ஆதங்கம் தான்..

      மற்றபடி இங்குள்ள எல்லாமும் ஏகத்துக்கும் சிறப்பு..

      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நீக்கு
  15. சஷ்டி கார்த்திகை பஞ்சமி ஏகாதசி - இதைப் பற்றி எல்லாம் இவனுக்கு ஒன்றும் தெரியாது..//

    நானும் இந்த லிஸ்ட் தான்!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  16. துரை அண்ணா இங்கு இருக்கும் புது கோயில்களில் எல்லாம் விளக்கு ஏற்ற அனுமதிக்கறாங்க. ஆனால் அதற்கென்று தனி இடம். அதில் ஏற்றலாம். அருகில் உள்ள ஆஞ்சு கோயிலில் நவக்கிரஹ சன்னதியில் மக்கள் இஷ்டத்திற்கு விளக்கு ஏற்றி சுற்றி வரும் மக்களுக்கு சுற்றி வர முடியாமல் இருந்தது. இப்போது அங்கு ஏற்றக் கூடாது என்று அறிவிப்பு வைத்துவிட்டார்கள்.

    என் தனிப்பட்ட கருத்து...
    மற்றபடி விளக்கு ஏற்ற அனுமதி கொடுத்தால் எல்லா இடங்களிலும் ஏற்றிடுவாங்க. நாகருக்குப் பால் என்று பால் ஊற்றி ஓடி நாற்றம் அடிக்கும் இடங்கள் இங்கும் சில கோயில்களில் இருக்கின்றன. ஈக்கள்.
    கோயிலின் சுத்தம் கெடத்தான் செய்கிறது. அந்த இடங்கள் பல சமயங்களில் கால் வழுக்கும் இடமாக இருக்கிறது.

    சுத்தம் செய்ய ஆட்கள் வேண்டும். அல்லது வரும் பக்தர்கள் என்று ஒவ்வொரு ஊரிலும் சிறு குழு இருக்குமே மண்டலை என்றெல்லாம் இருக்கிறது அவங்க தங்களுக்குள் பேசிக் கொண்டு சுத்தம் செய்யலாம். நாம் பயன்படுத்தும் இடத்தை நாம் தான் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
    கோயிலும் பொது இடம் தானே. மக்கள் பொறுப்பாக இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு இடைஞ்சலாக இல்லாமல்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// நமது இடத்தை நாம் தான் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். கோயிலும் பொது இடம் தானே. மக்கள் பொறுப்பாக இருக்க வேண்டும்..///

      உண்மை தான்.. இதிலே நிறைய பிரச்சினைகளும் இருக்கின்றன..

      விரைவில் சொல்கின்றேன்

      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நீக்கு
  17. படம் நன்றாக இருக்கு கௌ அண்ணா

    கீதா

    பதிலளிநீக்கு
  18. நிசத்தை சொல்கிறது 'கோவில். ' கோவில்கள் எல்லாம் வியாபார தலங்களாகி விட்டது. படங்கள் நன்று.

    இன்னும் நம்நாட்டில் அரசியல் வாதிகள் தவிர்த்து பொதுமக்களுக்கு சிறப்பு தரிசனம் என்று வரவில்லை அதுவும் வந்து விடும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்து உன்மைதான்..

      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நீக்கு
  19. யதார்த்தத்தைப் பிட்டுப் பிட்டு வைத்தாலும் கதை மாதிரி வரலை. சொல்ல வந்த விஷயம் புரிகிறது. இந்தக் காலத்தில் இதை எல்லாமும் சகித்துக்க வேண்டி இருக்கே! நல்லபடியாக இருவரும் புரிஞ்சுக்கறாங்க. "இப்ப வந்து பார்த்தீங்கன்னா' இல்லாமல் எந்த யூ ட்யூபும் வரதில்லை. ;( யாருக்கும் பேசுவதில் சரளமோ, வார்த்தைப் பிரயோகமோ சொல்ல வந்த விஷயத்தைச் சொல்லுவதில் சாமர்த்தியமோ கொஞ்சம் கூட இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக் காலத்தில் இதை எல்லாமும் சகித்துக் கொள்ள வேண்டி இருக்கே!..

      உன்மைதான்..
      வேறு வழி இல்லை..

      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி அக்கா..

      நீக்கு
  20. கதை இப்போது ஆன்மீகம் படும் பாட்டை சொல்கிறது.
    எல்லாம் விளம்பர மயம். இறைவனுக்கும் விளம்பரம் இல்லையென்றால் மவுசு இல்லை.

    //நம்ம வீட்டுக்குப் பக்கத்தில் கொஞ்ச தூரத்துல சிவன் கோயில் இருக்குது டா.. உண்மையிலயே பழைய கோயில்.. அங்கேயும் முருகன் வள்ளி தேவயானை இருக்காங்க.. நாம அங்க போய் Celebarate செஞ்சிட்டு.. குருக்களுக்கு ஏதாவது Help பண்ணுவோம்.. //

    கதை முடிவில் கிருத்திகா சொன்னது சரி.
    பக்கத்தில் இருக்கும் சிவன் கோவிளுக்கு போய் வணங்கி அங்கு இருக்கும் விளக்குகளை ஏற்ற இறைவனுக்கு எண்ணெய் வாங்கி தரலாம். குருக்களுக்கும், அங்கு பணியாற்றும் மெய் காப்பாளர், கோவிலை சுத்தம் செய்யும் பணியாளர்களுக்கு ஏதாவது உதவலாம்.


    ஒரு பிரபலமான எண்ணெய் விளம்பரத்தில் ஒரு ஆண் குழந்தை பாட்டியிடம் கேட்கிறது "இந்த எண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றினால் என்ன கிடைக்கும்" என்று, பாட்டியும் சொல்கிறார் அது கிடைக்கும், இது கிடைக்கும் என்று.

    திருவெண்காடு கோவிலில் கூட்டமே இருக்காது.

    முன்பு சுவேதாரண்யேசுவரர் கோயில், அகோரமூர்த்தி கோவில் என்று சொன்னார்கள். இப்போது அது புதன் கோவில்.

    நவக்கிரக கோவில்களில் புதன் இருக்கும் கோவில், பரிகாரத்தலம் என்று விளம்பரபடுத்தியவுடன் கூட்டம் அலைமோதுகிறது.

    பூசலார் நாயனார் மாதிரி உள்ளத்தில் இறைவனுக்கு கோவில் கட்டவில்லை என்றாலும் முன்பு பார்த்த கோவிலை உள்ளத்தில் நினைத்து வணங்கி விடலாம்.

    மீனாட்சி அம்மன் கோவிலுக்கு இப்போது போகவே முடிவது இல்லை, அலைபேசியை கட்டணம் கட்டி பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து போக வேண்டும், உடமைகளை ஸ்கேன் செய்து வைக்க வேண்டும் .

    செருப்பு வைக்கும் இடத்தில் கூட்டம் அலை பேசி வைக்கும் இடத்தில் கூட்டம், கையில் கொண்டு போகும் பொருட்களை வைக்க கூட்டம்.

    கோவிலை கஷ்டபட்டு வரிசையில் நின்று (100 ரூபாய் கொடுத்து டிக்கட் வாங்கினாலும்) சில நிமிடத்தில் தரிசனம் செய்து நம் உடைமைகளை பெற்று வெளியே வரும் போது "அப்பாடா இனி வீட்டிலிருந்தே அம்மனை வணங்கி கொள்ளலாம்" என்ற எண்ணம் என் போன்றவர்களுக்கு வரும்.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /மீனாட்சி அம்மன் கோவிலுக்கு இப்போது போகவே முடிவது இல்லை, அலைபேசியை கட்டணம் கட்டி பாதுகாப்பு பெட்டகத்தில்// நாங்கள் சில மாதங்கள் முன்பு சென்றிருந்தோம். ஒரே கூட்டம். நீங்க சொல்றது மாதிரி பாதுகாப்புப் பெட்டகத்தில் ஒவ்வொரு கியூவிலும் நின்று வைத்துவிட்டு அப்புறம் எந்த கோபுரம் வழியாக உள்ளே நுழைந்தோம் என்று பார்த்துக்கொண்டு, எந்த எந்த இடங்களுக்குச் செல்லணும் என்பதற்கு விளக்கமில்லாமல்.... கஷ்டம்தான்.

      நீக்கு
    2. @ கோமதி அரசு..

      /// எல்லாம் விளம்பர மயம். இறைவனுக்கும் விளம்பரம் இல்லையென்றால் மவுசு இல்லை...///

      எண்ணெய் விளம்பரம் - அதுவும் கொடுமை..

      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

      நீக்கு
    3. @ நெல்லை..

      /// பாதுகாப்புப் பெட்டகத்தில் ஒவ்வொரு கியூவிலும் நின்று வைத்து விட்டு///

      நம் வீட்டுப் பொருளை வைத்து எடுப்பதற்கு நாம் தண்டம் கொடுக்கவேண்டும்..

      கைத்தலப் பேசிகளோடு வளர்கின்ற இக்காலத்தில்
      கொடுமை..

      தனியார் கோயில்களுக்கு வருமானம் தான்..

      ஆனால் வருடாந்திர குத்தகை ஒன்றரை அணா மட்டும் வசூலாவதில்லை

      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நெல்லை அவர்களுக்கு நன்றி ..

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!