திங்கள், 2 அக்டோபர், 2023

"திங்க"க்கிழமை : மெதுவடை, மசால்வடை - ஸ்ரீராம்

 நாக்கு நாலுமுழம்!

மாளயபட்சம் ஸ்பெஷல்!

வடை எப்படி செய்தேன் என்று சொல்லப் போகிறேன் என்று படிக்க உட்கார்ந்தவர்கள் உடனே உள்ளே சென்று ஒருமுறை முகத்தைக் கழுவிக்கொண்டு வந்து படிக்க ஆரம்பிக்கவும்.

வந்தாச்சா...   ம்ம்ம்....  அதாவதுங்க...

கடைகளில் சூடாக வடை போட்டுக் கொண்டிருந்தால் தாண்டிச் செல்வது  கஷ்டமாயிருக்கிறது.

யாருங்க அங்க...  'இதெல்லாம் உடம்புக்கு ஆகாது'ன்னு சொல்றது...  அது என் காதில் விழவில்லை!

அப்பாவிடமிருந்து எனக்கு வந்திருக்கும் குணங்களில் - பலவீனங்களில் - ஒன்று இந்த வடை மோகம்.  சூடாக  வாணலியிலிருந்து ஜாரணியில் எடுத்து, எண்ணெயை வடித்து, பேசினில் கொட்டி, அருகிலேயே நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு காத்திருக்கும் நம்மிடம் சிறிய வாழைஇலை போர்த்திய  தட்டில் இரண்டு வடையை கொரகொர என்று வைத்து ஒரு பக்கமாக சட்னிகளை ஊற்றிக் கொடுத்தால்  பாதி வடையை மொறுமொறு என்றும் மீதியை சட்னியில் நனைத்தும் அடிக்கலாம்.  


வெள்ளிக்கிழமை காலை பாஸின் சுகவீனம் காரணமாக வெளியில் டிஃபன் வாங்க வேண்டிய நிலை.  ஒரு மாறுதலுக்கு பூரி வங்கச் சென்ற இடத்தில் ஆவிபறக்க இப்படி வடை கண்ணில் பட்டால் ஒரு மனுஷனால் என்ன செய்ய முடியும்?  சொல்லுங்கள்! பத்து ரூபாய்.  இது எங்கள் கேண்டீன்காரர் கையில் கிடைத்தால் ஒரு வடை இருபத்தைந்து ரூபாய்க்கு விற்பார். எனில் அவர் பத்து ரூபாய்க்கு தரும் வடை சைஸ் எப்படி இருக்கும் என்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்!

மறுநாள் முதல் மாளயபட்சம்.  அடுத்த 15 நாட்களுக்கு இதெல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாது.  எனவே உடனடியாக வடை வாங்கி அங்கேயே நின்று சுவைத்து விட்டேன்.

பொன்னிறமான வடையின் மேற்புற மினுமினுப்பின் உள்ளே கிடைக்கும் மிளகும், சிறு வெங்காயத் துணுக்கும் எக்ஸ்டரா கவர்ச்சி.  அந்த எண்ணெய்க்கு பயந்து சிலர் அதை தினத்தந்தி பேப்பரில் வைத்து அமுக்கிப் பிழிந்து அழகான வடையை பாறையில் நசுங்கிய தேரை போல வைத்து சாப்பிடுவார்கள்.  நான் அதை விரும்புவதில்லை.

சோடா உப்பு போடுகிறார்கள் என்பார்கள்.  ரவை சேர்க்கிறார்கள் என்பார்கள்..  என்னவோ போங்க..  அதையெல்லாம் இந்தக் காதில் வாங்கி கொண்டே (பொது அறிவு முக்கியம்...  நாலு விஷயத்தைத் தெரிந்து கொள்வதில் தப்பு இல்லை பாருங்க..) வடையைப் பிய்த்து வாயில் போட்டு வழியும் புகையை வெளியில் விடுவது சுகம்.

சமயங்களில் தொட்டுக்கொள்ள இல்லாமல் சும்மாவே சாப்பிடலாம் இந்த மெதுவடையை.  இதை உளுந்து வடை என்றும், ஓட்டை வடை என்றும் அழைப்பார்கள்.  எனக்கு மெதுவடை என்று சொல்வதில்தான் விருப்பம் - மொறுமொறு பகுதிகள் இருந்தாலும்!  இதனுடன் கொடுக்கும் சட்னியும் சுவையாக அமையவேண்டும்.  பெரும்பாலும் சிவப்பு நிறத்தில் சிரிக்கும் காரசட்னியைவிட, நல்ல தரமான தேங்காய் சட்னி மேல்.   நல்ல ஜோடி.  அது என்ன தரமான தேங்காய் சட்னி....?   அதை இன்னொரு நாள் தனியாகப் பார்ப்போம்.  

சாம்பார் அந்தக் கடையில் எப்படி இருக்கிறது என்று பார்த்து, பிறகு வடையை அதில் நனைப்பது உத்தமம்.  சமீபத்தில் இப்படிதான் பாருங்கள், VR மாலில் refrigerator  வாங்கச் சென்று (அது தனி கதைங்க...  அதை ஒரு வியாழனில் பார்க்கலாம்) நம்ம வீட்டு வசந்த பவனில் சாப்பிட்டேன்.  தோசை, இட்லி, சப்பாத்தி, எல்லாம் நல்லாத்தான் இருக்கு...  குருமாவும், சாம்பாரும், சட்னியும்தான் சுவையில்லை.  

ஏனோ இந்த மெதுவடை வீட்டில் செய்தால் கஞ்சி போட்டு அயன் செய்யப்பட்ட கர்ச்சீஃப் மாதிரி வரும்.  முன்னர் ஒருமுறை வடை செய்யும் மெஷின் மார்க்கெட்டுக்கு வந்துள்ளது என்றதும் எங்கே கிடைக்கும் என்று பாய்ந்தவர்களில் நானும் ஒருவன்.  குறையொன்றுமில்லை தளத்தில் என்று நினைவு.  எங்களுக்குத்தான் வடை சரியாக, நல்ல ஷேப்பில் வராது என்று நினைத்தால் இன்னும் சில நண்பர்களும் 'எனக்கும்' என்று சொல்லி இருந்தார்கள்!  ஊ..ஹூம்..  யார் யாரென்று நான் காட்டிக் கொடுக்க மாட்டேன்.  கடைசியில் நான் மெஷின் வாங்கவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள்!


ஒரு நிமிஷமுங்க...   இன்னிக்கி அக்டோபர் ரெண்டுங்களா...  காந்தி ஜெயந்தி..  லால்பகதூர் சாஸ்திரி பிறந்த நாள் (இதை மட்டும் ஏன் ஜெயந்தின்னு சொல்றதில்லை?)  பெருந்தலைவர் நினைவுநாள்.

எபி ஒண்ணும் சொல்லலைன்னு யாராவது வருத்தப்பட  போறாங்க..  காந்தி நாமம் வாழ்க...  சாஸ்திரி போல ஒரு துணிவுள்ளவரை இனி நாம் காண்போமா?  பெருந்தலைவர் மாதிரி ஒரு தலைவரை தமிழகம் இனி காணுமா?

சரியா..   வாங்க வடைகிட்ட போவோம்..  அப்புறம் வடைபோச்சேன்னு வடிவேலு மாதிரி வருத்தப்பட வேண்டியிருக்கும்.  எங்க விட்டேன்...  ஆ..  முந்தின பாராவுக்கு முந்தின பாராவுக்கு படத்துக்கு மேலே முந்தின பாரா...

மெதுவடை சாப்பிடும்போது மசால் வடை சாப்பிட மாட்டேன்.  அது பிறிதொரு நாள்!  தனித்தனியாகத்தான் ரசிக்கணும்!  ஆனால் நல்ல கடையைக் கண்டு விட்டால் (அதுதானே சிரமம்!) விடக்கூடாது.  அந்த 'பிறிதொரு'நாளில் சுவைத்துவிட வேண்டும்!  நிச்சயமாக நம்ம ஏரியாவில் அமையாது.  கஷ்டகாலம்.  ஒரு வடைக்காக எவ்வளவு தூரம் போகமுடியும், சொல்லுங்கள்!  இதில் என்னென்ன சிரமங்கள் எல்லாம் இருக்கிறது என்பது உங்களுக்குத் புரிய வேண்டும் என்பதால் சொல்கிறேன்.

அதிலும் மசால் வடை இரண்டாம் பட்சம்தான் எனக்கு.  அதற்கு தொட்டுக்கொள்ள தேவையே இல்லை.  மசால் வடையைப் பொறுத்தவரை சூடாகச் சாப்பிட்டாலும் ரசிக்கலாம், ஆறி சாப்பிட்டாலும் ரசிக்கலாம்.  ஆனா ஒண்ணுங்க...  என் செல்லம் மெதுவடையை ஆறிப்போய் மட்டும் சாப்பிடவே சாப்பிடாதீங்க...  அது ரொம்ப வருத்தப்படும்.  Insult ஆக நினைக்கும்!  நான் மாட்டேன்.   சூட்டில் இருக்கு சூட்சுமம்.  ஆனா நிறைய பேருக்கு ஏனோ மசால் வடைதான் முதலிடம்.

அலுவலகத்தில் தயிர்சாதம் அல்லது சாம்பார்சாதம் மதிய சாப்பாடு கொண்டு வருபவர்கள் மசால்வடையை வாங்கி ஆறிப்போயிருந்தாலும் பரவாயில்லை என்று கடிப்பார்கள்.  இதை ஆமைவடை என்று அழைப்பதில் எனக்கு விருப்பமில்லை!  ஆனால் வீட்டு விசேஷங்களில் செய்யும்போது இதை அப்படிதான் சொல்வார்கள்.  கைக்கு அடக்கமாக குட்டியாக ஒரு வடை கல்லு போல, பரிமாற ஆரம்பிக்கும்போதே மூன்றாவது அல்லது நான்காவது ஐட்டமாக இலையில் வந்து விழும்.  அதை கடமையே என்று சாப்பிட்டு விடவேண்டும்.  வேண்டுமானால் ஒன்று செய்யலாம்.  ரசத்தை ஒரு கப்பில் வாங்கி அதில் அதை ஊறப்போட்டு சாப்பிடலாம்.

நாம் எல்லோருமே நம் சுவைகளுக்கு ஒரு ஒரு... ஒரு...  ஏதோ ஒரு மார்க்.... என்ன சொல்ல..  சரியான வார்த்தை சிக்கவில்லை.  மனதில் இருக்கிறது வெளியே வரமாட்டேன் என்கிறது அந்த வார்த்ததை!  ஒரு ஒரு..  அடையாளச்சுவை வைத்திருப்போம்.  அந்த வகையில் நந்தம்பாக்கத்தில் கடை வைத்திருந்த நடராஜன் கைமணத்துக்கு ஈடாகாது..  அது மெதுவடையானாலும், மசால் வடையானாலும்.

அதுபோல புளிக்காய்ச்சலுக்கு நான் சுகுமாரைத்தான் சொல்வேன். 76 வயது சுகுமாரால் இப்போது அதே கைமணத்துடன் செய்ய முடியவில்லை என்பது என் மெகா சோகம்.

சிலர் மசால் வடையை காய்ந்து போன வரட்டி போல செய்திருப்பார்கள்.  லேசான ஈரப்பதத்துடன் வெங்காயம், மசால் வாசனையுடன் கிடைக்கும் மசால் வடையே மசால் வடை.  இதை பக்கோடாவுக்கும் சொல்லலாம்.  முன்பு மாதிரி தரமான ஆனியன் பகோடா எங்குமே கிடைப்பதில்லை.

ஆனா அடிக்கடி தோணும்ங்க..  யாருங்க இதை எல்லாம் கண்டு பிடிச்சது?  நேற்று கூட பாருங்கள்... மதுரையில் கொட்டாங்கச்சியில் இட்லி மாவு ஊற்றி சிரட்டை இட்லி என்று விற்கிறார்களாம்.  மதுரைக்காரர் சுவையைப் பற்றி தனியா நிறைய எழுதலாம்.

ஆமாம்...  கீரைவடை சாப்பிட்டிருக்கிறீர்களோ....

66 கருத்துகள்:

  1. சுவையான பதிவு. நான் சமீபத்தில் சாப்பிட்டது பெங்களூர் நிர்மலா டிபன் சென்டரிலிருந்து ஸ்விக்கி மூலமாக வரவழைக்கப்பட்ட இட்லி வடை . இரண்டும் நன்றாக இருந்தது. சைட் டிஷ் இரண்டும் வேஸ்ட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு விதத்தில் யோசித்தால் வடையோ, தோசையோ ஸ்விக்கியில் ஆர்டர் செய்து சாப்பிடக் கூடாது.  சுடச்சுட அங்கேயே சென்று சாப்பிட வேண்டும்.

      நீக்கு
  2. வடை மட்டும் சாப்பிட ஆசை வந்தால் MTR VADA MIX வாங்கி வடை செய்து சாப்பிடுவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒழுங்காக நல்ல ஷேப்பில் வருகிறதா?  சுவையும் சரியாய் இருக்கிறதா?

      நீக்கு
    2. ஒழுங்காக, நல்ல ஷேப்பில் செய்வது நம் கையில்தான் உள்ளது. சுவை நன்றாக இருக்கிறது.

      நீக்கு
    3. எங்கே..   நாம் தயார் செய்யும் மாவிலேயே சரியாய் வரவில்லை!!!

      நீக்கு
  3. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    பார்க்க பார்க்க
    பாவம் பொடிபட..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆ...  கமலா அக்கா..  வாங்க...  வாங்க...  நீண்ட நாட்களுக்குப் பின் உங்களை பார்ப்பது மிக்க மகிழ்ச்சி.  சரியாகி விட்டதா தொந்தரவுகள் எல்லாம்?    சந்தோஷமாக இருக்கிறது உங்களை இன்று இங்கு காண்பதில்..

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      வந்து விட்டேன். வீட்டில் எல்லோரும் இறைவனருளால் நலமாகி வருகிறார்கள். அதுவே மனம் மகிழ்வாக உள்ளது. எனக்கும் இங்கு வந்து உங்கள் அனைவருடனும் பேசுவது சந்தோஷமாக உள்ளது. என் வருகை கண்டு நீங்களும் சந்தோஷமடைந்ததற்கு உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. சமீப காலங்களில் இதுதான் உங்கள் நீண்ட நாள் ஆப்சென்ட் என்று நினைக்கிறேன். விரைவில் அனைவரும் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

      நீக்கு
    4. ஆம். உங்கள் அன்பான பிரார்த்தனைகளுக்கு மிக்க நன்றி.

      நீக்கு
    5. கமலா ஹரிஹரன் நீங்கள் வந்தது மகிழ்ச்சி. வீட்டில் எல்லோரும் நலமாகி வருவது அறிந்து மகிழ்ச்சி. பூரண நலம் பெற இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்.
      எனக்கும் ஒரு வாரமாய் உடல் நலம் சரியில்லை. மதியம் மட்டும் வீட்டு உணவகத்திலிருந்து வரவழைத்து சாப்பிடுகிறேன்.

      நீக்கு
    6. வணக்கம் கோமதி அரசு சகோதரி

      உங்கள் அன்பான விசாரிப்பு மனதிற்கு இதமளிக்கிறது. என் வருகையினால் உங்கள் மகிழ்ச்சி கண்டு நானும் மனம் மகிழ்கிறேன். இந்த மாதிரி அன்பான சகோதர, சகோதரிகள் வலைத்தள உறவாக கிடைத்தமைக்கு இறைவனுக்கு எப்போதும் என் மனமார்ந்த நன்றியையும் கூறிக் கொள்கிறேன்.

      தங்களுக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது மனதிற்கு வேதனையளிக்கிறது. உடல் நிலையை கவனித்துக் கொள்ளுங்கள். உங்களால் இயன்ற வேலைகளை மட்டும் செய்து அடிக்கடி ஓய்வு எடுத்து வாருங்கள். விரைவில் தாங்களும் பரிபூரணமாக குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். இறைவனின் துணை நம் அனைவருக்கும் என்றும் கூடவே இருக்கவும் நானும் வேண்டிக் கொள்கிறேன். தங்களின் அன்பிற்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    7. இயன்ற வேலைகளை மட்டும் செய்து வருகிறேன். வெகு நேரம் நிற்க வேண்டாம் என்று மதிய சாப்பாடு வெளியில் வாங்க சொன்னார்கள், எனக்கு ஒத்துவரமாட்டேன் என்கிறது. அது வேறு தொந்திரவுகளை தருகிறது. மீண்டும் நானே எனக்கு வேண்டியதை செய்து கொள்வேன்.

      உங்கள் பிரார்த்தனைக்கும், வேண்டுதலுக்கும் நன்றி.

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    நலமா? பதிவு அருமை. வடை வாசனை அற்புதமான எழுத்துடன் இன்று என்னை இழுத்து வந்து விட்டது. அப்புறம் நானும் வடை போச்சேன்னு புலம்ப கூடாதில்லையா?

    நன்றாக (வடைகளின் சுவையை விட) எழுதியுள்ளீர்கள். திங்களுக்காக நீங்கள் வீட்டில் செய்த வடைகளின் விபரந்தான் போலும் என படிக்க வந்தேன் ஆனால் தங்களுக்கே உரிய பாணியில் எழுதிய கடை வடைகளின் விபரங்கள் சாப்பிடும் ஆவலை தூண்டுகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அக்கா..  உங்கள் சுருக்கமான கமெண்டினால் (ஹா..  ஹா..  ஹா..) நீங்கள் இன்னும் முற்றிலும் குணமாகவில்லை என்று தெரிகிறது.  பாராட்டுக்கு நன்றி.

      // அப்புறம் நானும் வடை போச்சேன்னு புலம்ப கூடாதில்லையா? //

      :)))

      நீக்கு
    2. ஹா ஹா ஹா சுருக்கமான கமெண்ட்ஸ்.. /சரியாகி விட்டதா தொந்தரவுகள் எல்லாம்? /

      அதுதான்.. வந்தவுடனேயே நிறைய பேசி என்னால் உங்கள் அனைவருக்கும் தொந்தரவுகள் வந்துவிட கூடாதென்பதற்காக இப்படி சுருக்கமான கமெண்ட். :)))

      ஆனாலும், இனி இது (விபரமான நீண்ட கமெண்ட்ஸ்கள்) ஒரு தொடர்கதையாக மாறி விடும் அபாயமும் உள்ளது. ஹா ஹா ஹா.

      நீக்கு
    3. சுவாரஸ்யமான அந்த அபாயத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    ரசனையான எழுத்துக்கள். மறுபடியும் ரசித்துப் படித்தேன்.

    /மறுநாள் முதல் மாளயபட்சம். அடுத்த 15 நாட்களுக்கு இதெல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாது. /

    ஆனால், மளாயபட்சத்தில் எங்கள் அனைவரையும் பாரபட்சமின்றி சுவையான வடைகளை நினைக்க வைத்து விட்டீர்கள். :)))

    ஆம். பருப்புகள் அனைத்தும் சேர்த்து செய்யும் வடையை ஆமை வடை என்றுதான் சொல்வோம். மெதுவடையை போல் முயல் வேகத்தில் விழுங்க முடியாமல், பற்களால் கடித்து நிதானமாக சாப்பிடுவதால், இதற்கு ஆமை வடையென பெயர் வந்திருக்குமென நினைக்கிறேன். :)))

    அடுத்து கீரை வடை தயாரிப்பை சுவைபட எழுதுங்கள். படிக்க ஆவலாக இருக்கிறோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    அறுவை இன்றே ஆரம்பமாகி விட்டது.:)))

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமைவடைக்கான பெயர்க்காரணம் கற்பனை சூப்பர்.  உங்களுக்குதான் இப்படி எல்லாம் தோன்றும்!

      நீக்கு
  7. முந்தாநாள் பெருமாளூக்குச் சிறப்பு நிவேதனம் செய்தப்போ உளூந்து வடை தட்டினேன். பின்னர் அதைத் தயிரிலும் போட்டு வைச்சேன். நேற்றூ மதியம் சாப்பிட்டோம். சில/பல சமயங்கள் உளூந்து வடை எனக்கும் விரைப்பாக வருது. :( உளூந்தின் தரம் காரணமோனு அதை மாத்தி எல்லாம் பார்த்தாச்சு. அதே ஆமவடை/எங்க ஊர்த் தமிழில் முப்பருப்பு வடை பிரமாதமாய் வரும். வெங்காயம் போட்டு மசால் வடை தட்டும்படியான நாளாக அமையாது. அம்புடுதேன். மத்தபடி வடை நல்லாவே வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்களும் இப்படிதான்க்கா...   அந்த சமயம் யாராவது வந்துட்டாங்கன்னா  எப்பவுமே உளுந்து மேல பழியைப் போட்டுடுவோம்!!

      நீக்கு
  8. கீரை வாங்கும்போதெல்லாம் கட்டுப் பெரிதாக இருந்தால் நறூக்கிய கீரையை எடுத்து வைச்சுக் கொஞ்சமாக இருந்தால் கீரை வடை தட்டுவதும் உண்டு. கீரை வடைக்கெனக் கீரை வாங்கியது இல்லை. இப்படித் தட்டினால் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடையில் வாங்கும் கீரை வடை மசால்வடை டைப்பில் மொறுமொறுவென்று இருக்கும்.

      நீக்கு
  9. ரொம்ப நாளைக்கு (மாதங்களுக்கு) அப்புறம் பாகசாலா ஹோட்டலில் மெதுவடை சாப்பிட்டேன். பெரிதாக முறுமுறுவென மேல்பாகம் இருந்தாலும் பெங்களூர் சைட் டிஷ்கள் எனக்குப் பிடிப்பதில்லை.

    வடையைப் பற்றிய ரசனையான பதிவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வடையைப் பிரிந்து என்னால் மாதக்கணக்கில் எல்லாம் இருக்க முடியாது...  பாகசாலா என்பது புகழ்பெற்ற ஹோட்டலா?  இட்லி தோசைதான் சைட் டிஷ் இல்லாமல் சாப்பிடுவது கடினம்.  வடை ஆபத்பாந்தவன்.

      நீக்கு
  10. நானும் வடை செய்யும் அந்த மிஷினை வாங்கணும் என்று ரொம்பநாளாக நினைத்துக்கொண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேண்டாம் என்றுதான் தோன்றுகிறது. சப்பாத்தி ப்ரெஸ்ஸரில் வைத்த்து அனலூட்டப்படும் சப்பாத்தி எனக்கு பிடிப்பதில்லை. கல்லில் திரட்டி, தவாவில் விட்டு, ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு ,திருப்பி எடுக்கும் சப்பாத்திதான் பிடிக்கும்...அதுபோல மெஷின் வடை இயற்கையாக இருக்காது.

      நீக்கு
  11. ஓட்டல்களீல் கேட்டீங்கன்னா மயிலையில் பாரதீய வித்யா பவன் எதிரே உள்ள கற்ப்காம்பாள் மெஸ்ஸீல் தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்தமுறை செல்லும்போது முயற்சிக்கிறேன்.  சென்ற முறை மயிலை சென்றபோது நித்ய அமிர்தம் என்கிற ஹோட்டலில் சாப்பிட்டேன்.  இப்போது அதற்கு நுங்கம்பாக்கத்தில் ஒரு கிளை திறந்திருக்கிறார்கள் என்று விளம்பரம் பார்த்தேன்.

      நீக்கு
  12. சுஜாதா லாண்டரி கணக்கு, ஸ்ரீராம் வடை மஹாத்மியம். அப்படித்தானே?
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதை இந்தப் பதிவிற்கான பாராட்டாக எடுத்துக் கொள்ளலாமா?!

      நீக்கு
  13. சாலையோர கடைகளில் சுடச்சுட மணக்கும் ஆமவடை எனக்கு சாப்பிட ஆசையாக இருக்கும்.

    ஆனால் வடையை சுடும் இடங்களை மட்டுமல்ல, அவரது மாவு குழைக்கும் கையையும் பார்ப்பேன்.

    வடையே வேண்டாம் என்று வந்து விடுவேன் எனக்கு சுத்தம் முக்கியம் நமது ஊர்களில் இதை எதிர் பார்ப்பது கஷ்டம்தான்.

    கீழக்கரை, சாயல்குடி போன்ற ஊர்களில் வடை கடைகள் அதிகம்.

    அதிலும் சாயல்குடியில் அதிகாலை இரண்டு மணிக்கே வடை வியாபாரம் தொடங்கி விடும்.

    சகோ கமலா ஹரிஹரன் அவர்கள் நலமாகி பதிவுலகம் வந்ததில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கில்லர்ஜி சகோதரரே

      நலமா? என் வலையுலக வருகை கண்டு மகிழ்ச்சியடையும் தங்கள் கருத்து கண்டு நானும் மகிழ்வடைந்தேன். (நானும் மகிழ்"வடை" ந்தேன்... அட..! இங்கேயும் வடை வந்து விட்டதே..!! இதன் காரணம் நம் சகோதரர் ஸ்ரீராம் அவர்களின் அழகான எழுத்தாகிய சேர்மான பொருட்களுடன், அவரது எண்ணங்களான கற்பனை ஊற்று எண்ணெயில் பொரித்தெடுத்த வாசத்துடன் பரிமளித்த இந்த வடை பதிவின் மகாத்மியந்தான். :))) ) தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. சென்னையிலும் அதிகாலை வடைபோடுகிறார்கள்.  என்ன காரணமோ...  ஆனால் பெரும்பாலான கடைகளில் உங்கள் கண்முன்னே மாவு தயாராகும்.

      நீக்கு
  14. வடை மகாத்மியம் அருமை..

    பொதுவாக
    பச்சை மிளகாயைக் குறைத்து

    மிளகை சேர்த்துக் கொள்வது நல்லது..

    பதிலளிநீக்கு
  15. வடை புராணம் படிக்கப்படிக்க அதையும்விட சுவையாக இருந்தது. உளுந்து நல்ல உளுந்தாக இருந்து, பொங்கப்பொங்க அரைத்து எடுத்து வடை சுட்டால் அதன் சுவையே சுவை தான்! எனக்கு எப்போதும் சும்மா தான் வடையை சாப்பிட வேண்டும். கணவருக்காகவும் மகனுக்காக மட்டுமே தேங்காய் கெட்டிச்சட்னி! பொதுவாய் வெளியில் வடை வாங்குவதில்லை. கடைகளில் பல தரம் பொரித்து பொரித்த எண்ணெயில் மறுபடியும் சுட்டிருப்பார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மனோ அக்கா..  ஆம்.  நேரம் கேட்ட நேரத்தில் சில கடைகளுக்கு போனால் அரை வாசி சுட்டு வைத்திருக்கும் வடையை எடுத்து மறுபடி எண்ணெயில் போட்டு முழுசுடு சுட்டுக் கொடுப்பார்கள்.  அந்தக் கடைகளை, நேரத்தை அடையாளம் கண்டு அந்த நேரத்தில் அண்டக்கூடாது!

      நீக்கு
    2. இல்லை ஸ்ரீராம்! பொதுவாக கடைகளில் வடைகளை இரண்டு முறைகள் எண்ணெயில் போட்டு எடுக்கும் வழக்கம் இருக்கிறது. நானும் பல சமையல் நிபுணர்களை காரணம் கேட்டு விட்டேன். ' இது தான் பழக்கம். இப்படித்தான் செய்யணும்' என்கிறார்கள். எங்கள் உணவகத்திலும் இப்படித்தான் வடைகளை இருமுறை எண்ணெயில் போட்டெடுக்கும் வழக்கம் இருந்தது. நான் அந்த பழக்கத்தை மாற்றி விட்டேன். தீயைக்குறைத்து வீட்டில் வடை சுடுவது போல பொன்னிறமாக போட்டெடுக்கிறார்கள்.

      நீக்கு
    3. ஓ... தெரிந்து கொண்டேன். சமோசா வேக எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறது தெரியுமா?

      நீக்கு
  16. பல இடங்களில் சிரிக்க 😆, சில இடங்களில் சிந்திக்க நேர்ந்தது. BTW எனக்கும் மெது வடை தான் favourite

    பதிலளிநீக்கு
  17. வடை பிரியர் வடையைப்பற்றி சொன்னது அருமை.
    எல்லோருக்கும் எண்ணெய் குடிக்காத மொறு மொறு வடை தான் இஷ்டமாக இருக்கும். கடையில் விற்பது எண்ணெய் குடித்து மொறு மொறு என்று தான் இருக்கும். மதுரையில் எப்போதும் வீதியோர கடைகளில் வடைகள் கிடைக்கும் .

    எப்போதாவது சப்பிடலாம்.

    //மதுரையில் கொட்டாங்கச்சியில் இட்லி மாவு ஊற்றி சிரட்டை இட்லி என்று விற்கிறார்களாம். மதுரைக்காரர் சுவையைப் பற்றி தனியா நிறைய எழுதலாம்.//

    நானும் பார்த்தேன் இன்ஸ்டாகிராமில் . இட்லி தட்டில் சிரட்டைகளை வைத்து மாவை ஊற்றி வேக வைத்து பொடி தூவியதை காட்டினார்கள்.
    மதுரை மக்கள் நல்ல ரசனையானவர்கள்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாடல்களை கேசட்டில் கோர்பபதிலாகட்டும், உணவுப்பொருள்கள் விஷயத்தில் ஆகட்டும், மதுரைக்கு காரர்கள் ரசனை தனிதான் கோமதி அக்கா..    உடல் நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.  அனாவசிய அலைச்சல்களைத் தவிருங்கள்.

      நீக்கு
    2. வீட்டிலே தான் ஓய்வில் இருக்கிறேன் ,எங்கும் போகவில்லை.
      உடல் நலத்தை கவனித்து கொள்கிறேன். உங்கள் அக்கறைக்கு மிகவும் நன்றி. உறவுகள் வந்து உதவி செய்கிறார்கள்.

      நீக்கு
  18. ஆஹா நம்ம ஃபேவரிட் வடை!

    எனக்கு மெதுவடையும் பிடிக்கும், மசால் வடையும் பிடிக்கும். நம் வீட்டில் மெதுவடை குண்டாக வரும். இங்கு சொல்ல வந்த குறிப்புகளை எங்கள் பகுதியில் சொல்கிறேன். அதை வைச்சு செஞ்சு பாருங்க கண்டிப்பா நல்லா வரும்.
    வேறு ஒரு பதிவு எழுத நினைத்து பிள்ளையார் சுழி போட்டு முடியவில்லை வேலைப் பளுவினால்....உங்க வடையைப் பார்த்ததும் எழுதிடுவோம்னு...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா.  மாவு எப்படி வந்தாலும் அதை எடுத்து வாணலியில் போடும்போது ஷேப் மாறிவிடுகிறது!!

      நீக்கு
    2. அதுதான் அதுக்கு எப்படின்னு சொல்றேன்.....

      கீதா.

      நீக்கு
  19. என் பிறந்த வீட்டில் கருப்பு தொலி உளுந்தை ஊற வைத்து களைந்து அதில்தான் வடை, தோசை இட்லி எல்லாமே செய்வாங்க அப்போ. திருவனந்தபுரத்திலும் அப்படித்தான். இப்போது அங்கு முழு உளுந்தும் பரவலாகக் கிடைக்கிறது. அந்த வருடங்களில் தொலி உளுந்துதான்.
    எனக்குத் திருமணம் ஆன பிறகு சென்னைக்கு வந்தப்பதான் வெள்ளை முழு உளுந்து பயன்படுத்துவதைப் பார்த்தேன்.

    இரண்டு பருப்புகளிலுமே நன்றாக வருகிறது. தயிர்வடையும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  20. இங்கு பங்களூரில் பொதுவாகவே வடைகள் இரு வகையுமே நன்றாக இருக்கின்றன. வடையை மட்டும்தான் சொல்கிறேன்.

    ஆமாம் ஸ்ரீராம் இடையில் மிளகு, வெங்காயம் அது ஆஹா....! மெது வ்டையில் வெங்காயம் போடுவது ரொம்பப் பிடிக்கும். அதிலும் கொஞ்சம் பொரிந்து அந்தச் சுவை!

    கீதா

    பதிலளிநீக்கு
  21. நான் எழுத பிள்ளையார் சுழி போட்ட பதிவும் தீனி குறித்த பதிவுதான்!!!

    ஆமை வடைன்னுதான் எங்க வீட்டிலும் சொல்வோம் அதாவது பிறந்த வீட்டில். புகுந்த வீட்டில் ஆமை வடை/ பருப்பு வடை செய்து பார்த்ததில்லை.

    அது ஆமை வடைன்னு ஏனென்றால், என் மகன் சின்ன வயசுல - இதை முதலை வடைன்னு சொல்லுவான்...ஹாஹாஹா மேல் பகுதியில் பருப்புகள் முழித்துக் கொண்டு கர கர என்று இருக்கும்...கெட்டியாக ஆனால் உள்ளே மென்மையாக...அதனால்தான் ஆமை வடை என்பேன் நான்...என் மகன் சொல்வான் ஆமை ஓடு மேல சொர சொரன்னு இருக்காது....அப்படினா வீட்டு விசேஷத்துல செய்யறத அப்படிச் சொல்லலாம் ஆனா மசால்வடையா பண்றது மேல பருப்பு இருக்குமே ஸோ முதலை வடைம்பான்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா.  எல்லா முயற்சிகளிலும் உங்கள் கையும் இறங்கி இருக்கிறது.  ஆனால் நகராமல் நின்று விடுகிறது!

      நீக்கு
  22. பதிவை ரசித்து வாசித்தேன் ஸ்ரீராம்.

    மொறு மொறு வடை!

    கீதா

    பதிலளிநீக்கு
  23. காந்தி, காமராசர். சாஸ்திரி போற்றுவோம்

    பதிலளிநீக்கு
  24. ரசனையான ருசியான பதிவு:)! உளுந்த வடைக்குதான் எனது ஓட்டும். மசால் வடை அடுத்துதான். ஆமை வடை என்றே பெரும்பாலும் குறிப்பிடுவோம். பெயர்க்காரணம் என்னவாக இருக்கும் எனத் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!