சனி, 28 அக்டோபர், 2023

வயசானாலும் வீரம் குறையாத தாத்தா... மற்றும் 'நான் படிச்ச கதை'

 



======================================================================================================



============================================================================================================


====================================================================================================


========================================================================================================


======================================================================================================================



==========================================================================================================================================================================================================================


நான் படிச்ச கதை (JKC)


இன்றைய ஸ்பெஷல்

கூழாங்கற்கள்

கதையாசிரியர்: அன்பழகன்ஜி


தலைப்பு வித்தியாசமாக இருக்கிறதா. இந்த தலைப்பினால் கவரப்பட்டு தான் நான் இக்கதையை வாசிக்க முடிவு செய்தேன். ஆனால் இது ஒரு துறவியின் கதை. இடலாக்குடி ராசா கதையை இப்பகுதியில் முன்பே வாசித்து இருப்பீர்கள். ராசா ஒரு இரண்டும் கெட்டான். அநாதை. 10 15 நாட்களுக்கு ஒரு தடவை தெருவில் தென்படுவான். ஏதோ ஒரு வீட்டில் சென்று ‘ராசா வந்திருக்கேன்” என்று குரல் கொடுப்பான். அந்த வீட்டில் இருப்போர் தரும் பழைய சோறு உட்பட எதையும் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவான். “அப்போ நான் வண்டிய விட்டிருகேன்” என்று சொல்லி போய்விடுவான். எங்கிருந்து வந்தான், எங்கே போகிறான் என்பது யாருக்கும் தெரியாது. அது போன்ற ஒரு மனிதரின் கதை தான் இன்று காணப்போவது. சித்தர் என்றோ, பிச்சைக்காரன் என்றோ, துறவி என்றோ சொல்ல முடியாத ஒரு சந்நியாசி. 

எல்லாம் சரி. சந்நியாசியின் கதைக்கு கூழாங்கற்கள் என்ற தலைப்பு ஏன்? 

இதற்கு ஆசிரியரின் பதில்.

//சூன்யத்திலிருந்து ஞானம் தோன்றுகிறது.  அவர் ஞானசூன்யம். அவர் அருவா? அருவுருவா? அதெல்லாம் ஆழமாக எனக்குத் தெரியாது.

ஆனால், எப்போதேனும் உருவில் வருவார்.

நாளையோ;  மறுநாளோ; பத்து ஆண்டுகள், நூறு ஆண்டுகள், ஆயிரம் ஆண்டுகளானாலும். ஏனெனில்; அவர் ஒரு கூழாங்கல்.// 

என்று சமாளிக்கிறார். 

கூழாங்கல் சரி, கூழாங்கற்கள் ஏன்? விடையில்லை.

சரி கதையைப் பார்ப்போம். கதை முழுதும் தரப்பட்டுள்ளது. Sirukathagal.com இல் இருந்து எடுக்கப்பட்டது.


கூழாங்கற்கள்

கதையாசிரியர்: அன்பழகன்ஜி


அவரை நொண்டிச் சாமியார் என்பார்கள்.   சிலர் சாமியார் என்பார்கள்.  நான் அவரை  பாபா என்பேன்.

பாபாவை ஒரு யாசகன்  என்று  சொல்லவே முடியாது.  போஜனத்திற்காக எல்லா வீடுகளுக்கும் செல்ல மாட்டார். குறிப்பிட்ட சில வீடுகளுக்கு காலையில் ஒரு வீடு, மதியம் ஒரு வீடு என போய்  உணவு உண்பார். பத்து பதினைத்து நாட்களுக்கு ஒரு முறை எங்கள் ஊருக்கு வருவார். இரண்டு வீடுகளோடு சரி. ஒரே வீட்டிற்கு உடனே அடுத்த முறை வர மாட்டார். திருவோடு  அவரிடம் இருக்காது. ஒரு எவர்சில்வர் தட்டும் உயரமான ஒர் அலுமினிய குவளையும் நீலநிற ஜோல்னா  பையில் வைத்திருப்பார்.   எண்ணி வைத்தாற் போல  எங்கள் ஊரில் ஏழெட்டு வீடுகள்தான். அதில் எங்கள் வீட்டிற்கு அதிகமாக வருவார். அவர் செல்லும் வீட்டில் யாரும் அவரை கண்டு முகம்  சுழிப்பதோ வித்தியாசமாக பார்ப்பதோ இல்லை. அப்படிப்பட்ட வீட்டைத்தான் அவர் தேர்வு செய்து வைத்திருந்தார். அன்பான பேச்சு. வரும்போது எல்லோரையும் விசாரிக்கும் விதம்  நெருங்கிய, உண்மையான உறவினர்கள் விசாரிப்பதுபோல ஒரு கரிசனம்  இருக்கும். தொடர்ந்து வருவதால் அனைவரைப் பற்றியும் அவர் தெரிந்து வைத்திருப்பார்.   பாபா காவி வேட்டி கட்டியிருப்பார். மேலே பெரிய காவித் துண்டால் உடலை போர்த்தி இருப்பார். சுத்தமான உடையுடன் பளிச்சென்று இருப்பார்.  நெற்றியில் விபூதியை நான் பார்த்ததே இல்லை.   இடது காலை சற்று தாங்கித் தாங்கி மெல்ல நடப்பார். அவர் மீது எனக்கு ஒரு தனி பிரியம். 

ஒரு நாள் காலை எங்கள் வீட்டில் எல்லோரும் சாப்பிட்டு முடித்திருக்க  நான் மட்டும் காலை உணவாக பழைய சாதம் கொண்டு வந்து திண்ணையில் அமர்ந்த போது பாபா வந்துவிட்டார்.

‘நீ சாப்புடுடா அவருக்கு உப்மா பண்ணி கொடுக்கிறேன்’ என்றார்  அம்மா. அவரை வைத்து எப்படி சாப்பிடுவது.   வேண்டாமென்று நானும் பாபாவும் அந்த பழைய உணவையே பகிர்ந்து உண்டோம். அவருக்கும் அரை வயிறுதான் நிரம்பி இருக்கும். பழைய சாதத்தை உண்ட சிறிது நேரத்தில் கிளம்பினார்.  மதிய உணவு சாப்பிட்டுச் செல்லலாமென வற்புறுத்தி அவரை இருக்க வைத்தேன். இடைப்பட்ட நேரத்தில் எதிரே விழுந்து கிடந்த வேப்ப மர நிழலுக்குச் சென்று பொழுதை கழித்தார். 

சிறிது நேரத்தில் நானும்  அம்மர நிழலுக்குப் போனேன். புழுக்கத்தை விரட்ட அப்போது அதுதான் வழி.

பாபாதான் ஆரம்பித்தார்.

“மருதூரில் உங்க மாமாவ பாத்தேன் தம்பி” என்றார்.  மாமாவை இவருக்கு எப்படித் தெரியும்.

நான் ஆச்சர்யப்பட்டதை முகபானையில் தெரிந்து கொண்டவர்  “நான் அடிக்கடி அவங்க வீட்டுக்கு போவேன்.  போன வாரம் போனேன்” என்றார். தொடர்ந்து; “இந்த வருடம் விளைச்சல் சரியில்லையாம்.  வருத்தப்பட்டாங்க”

“ம்”

“உங்களுக்கு இன்னும் வேலை கிடைக்கலையா?” வருத்தமும் ஆவலும் கலந்த கேள்வி அது. இதை மாமா சொல்லியிருக்கிறார் என்பதை புரிந்துகொண்டேன்.

“கெடச்சிடும்.  பிரிலிமினரியில பாஸாயிட்டேன்.  மெயின்ல பாஸ் பண்ணினா  கிடைச்சிடும்.”

“அப்டின்னா”

“ரென்டு எக்ஸாம். பஸ்ட்ல பாஸ் பண்ணிட்டேன்.  சகேன்ட் நல்லா எழுதி இருக்கேன். பாஸாயிடுவேன். வேலை கிடைச்சிடும்ன்னு நம்பிக்கையில இருக்கேன்”

“நல்லது.  கெடக்கணும். ஆனா பாருங்களேன் கட்டாயம் கிடைச்சிடும்” மகிழ்ந்த மனத்தோடு எதையோ உள்வாங்கிக் கொண்டு அந்த வார்த்தைகளை பிரவேசித்தார்.  அது என்னை ஆசிர்வதிப்பதுபோல பட்டது.

பத்து நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் நான் மட்டுமே வீட்டில் இருந்தபோது காலையில் பாபா வந்தார். வீட்டில் யாரும் இல்லையென்று சொல்ல வில்லை. சொன்னால் உடன் போய்விடுவார். அடுப்படிக்குப் போய் மிளகு போங்கல் தயாரித்துக் கொண்டிருந்தேன்.   முற்றத்தில் அமர்ந்திருந்த பாபா, “தம்பி தம்பி” என்றார். வெளியில் வந்ததும் “அம்மா இல்லையா நான் வேற வீட்டிற்கு போறேன்” என்றார்.

“அம்மா இல்ல.  ஆனா உங்களுக்கும் சேத்து பொங்கல் வச்சிட்டேனே.  சாப்பிடலாம் தானே?”

நான் மட்டும் வீட்டில் இருப்பதால் என்னை சிரமப்படுத்தக் கூடாதென்று  சற்று தயங்கிய பின் “ஏதுன்னான்ன சாப்டா போச்சி” என்றார்.

முதலில் பாபாவுக்குத்தான் கொடுத்தேன். பிறகு நான் உண்ட போதுதான் தெரிந்தது. பொங்கலில் உப்பே போடவில்லை என்று. மனுஷன் வாய் திறக்க வில்லையே.

பின்னர், அன்று ஏனோ கொஞ்சம் அதிகமாக வாயை திறந்தார்.

“மருதூர் மாமா உங்களுக்கு பொண்ணு பாத்துருக்காங்களாம்”

“சொன்னாரா?”

“சனிக்கிழமை போயிருந்தேன். சொன்னாங்க”

“நான் இப்ப கல்யாணம் பண்ணலயே.  அவரு பாத்து என்ன பண்ணுறது”

“வயதாவுதுள்ள தம்பி.  காலத்துல கல்யாணத்த பண்ணிடுங்க.   அம்மாவுக்கும் ஒத்தாசையா இருக்கும்” இது என் மீதான ஈடுபாடு. கரிசனம்.

“அம்மாவுக்கு உதவிங்குறத்துக்காக என்ன கல்யாணம் பண்ணிக்கச் சொல்ரீங்களா பாபா”.

பாபா என்றதும் பாபாவுக்கு ஒன்றும் புரியவில்லை. பாபா திகைத்தார்.

“ஆமாம் பாபா. உங்களுக்கு பாபான்னு பேரு வச்சிருக்கேன். அப்படித்தான் நான் உங்கள எல்லார் கிட்டேயும் சொல்வேன்”

“எப்படின்னாலும் நீங்க வச்சிக்கிடுங்க தம்பி”

“ஆமா . . . உங்க பேரு என்ன பாபா ?”

“பாபா . . “

“அது நான் வச்ச பேரு பாபா”

“எனக்கு பேரு இல்லயே. அனாமிகா”

“அனாமிகான்னு பெயரில்லாத பெண்களைத்தான் சொல்லுவாங்க”

“பேரே இல்ல.  ஆணு பெண்ணு.  பேரு இல்லாத எல்லாமே அனாமிகாதான் தம்பி.   நாம பாக்குற எல்லாரோட பேருமா நமக்குத் தெரியுது.  தெரியாத எல்லாம் அனாமிகா.”

“சரி பாபா”

அதற்கு மேல் நான் அதை பற்றி விவாதிக்க விரும்பவில்லை.  பாபா என்றால்  பாபாதானே!

தட்டை கழுவி ஜோல்னாப் பைக்குள் வைக்கும்போது எதேச்சையாக பையை பார்த்து விட்டேன். அதில் அலுமினிய குவளையைத் தவிர சில அழகிய கூழாங்கற்கள் கிடந்தன.   இல்லை. இருந்தன என்று சொல்ல வேண்டும்.

கூழாங்கற்களின் வாழ்க்கையை பற்றி அறிவியலில் ஒரு சாரார் கூறுவது சரிதானா என எனக்குத் தெரியவில்லை. ஆறுகளால் மலையிலிருந்து, இடையில் சந்திக்கும் பாறைகளில் இருந்து அடித்து வரப்படும் கரடு முரடான கற்கள் நதியின் ஓட்டத்தில் உருண்டு, புரண்டு, மழுங்கி  இறுதியில் அழகிய வடிவத்திற்கு வந்தடைகின்றனவாம்.   ஆறு இல்லாத பொட்டல் பகுதியில் கூட காண முடிகிறதே! ஒருவேளை, ஒரு காலத்தில் அந்த இடத்தில் ஆறு ஓடியிருக்குமோ.  ஏன் நடந்தும் இருக்கலாம். ஒரு காலமென்றால் நான்கு ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் இருக்குமோ? இருக்கலாம்.  அப்படியானால் கூழாங்கற்களின் வயது என்னவாக இருக்கும்?   நேற்று பிறந்து இன்று மறைந்து போகிற மனிதர்களின் கருத்து  உண்மையாகவும் இருக்கலாம்.  மனிதனை ரசிக்க வைக்க திவ்யமான இந்த உருவம் பெற எவ்வளவு வலிகளை அதன் ஆன்மா  தாங்கி இருக்கும். எத்தனை கோடை, எவ்வளவு மழை, எவ்வகையான குளிரை சந்தித்திருக்கும். அதன் வாழ்க்கை ஒரு சமுத்திரம் போன்றது என்றால் நான் நதியில் பயணிக்கும் பரிசல்காரன். பாபா ஒரு கூழாங்கல்லா? இருக்கலாம். ஆனால் அது எவருக்காகவோ தன் ஆன்மாவை சிதைத்துக் கொண்டதாக இருக்க கூடாது என்பது என் விருப்பம்.

எங்கள் கிராமத்திற்கு அப்போது பேருந்து வசதி கிடையாது.  பத்து கிலோ மீட்டர் தூரத்தில்  உள்ளது ஒரு சிறு நகரம்.   அது தாலுக்கா தலைமையிடம். அங்கும் குறிப்பிடும் படியான வசதிகள் எதுவும் இல்லை.  ஒரு கல்லூரி கூட அப்போது இல்லை. ஆனால் பெரும்பாலும் எல்லா அலுவல் நடவடிக்கைகளுக்கும் அங்கேதான் போக வேண்டும்.  ஆலையில்ல ஊருக்கு அது இலுப்பைப்பூ.  அங்கிருந்து என் வீட்டிற்கு வர வேண்டுமானால் எட்டு கிலோ மீட்டர் பேருந்தில் பயணித்து அங்கிருந்து நான்கு கிலோ மீட்டர் நடந்து வர வேண்டும். என்னிடம் சைக்கிள் இல்லாத காலம் அது.  வீடு திரும்ப இரவு நேரமாகுமென்றால் எனக்காக திண்ணையில் எடுத்து வைக்கப்பட்ட இரவு உணவை உண்ட பிறகு அங்கிருந்து  சற்று தூரம் தள்ளி நான் எனக்காக கட்டி வைக்கப் பட்டிருந்த கீற்றுக் கொட்டகையில் படுத்து உறங்க வந்து விடுவேன். அதுதான் என் சாகை. படிப்பறை. படுக்கையறை. நண்பர்களோடு இலக்கிய விவாதம் நடத்துதல், அரசியல் சண்டை போடுதல் எல்லாமே. அது என் தனி உலகம்.

ஒரு  நாள்  அந்த மினி நகரத்திற்கு சென்று இரவு பத்து மணிக்கு வீடு திரும்ப பேருந்தில் ஏறும் போதே மழை பெய்யத் தொடங்கி விட்டது.  அது நீண்ட நாட்களுக்கு பிறகு அதிசயமாக பெய்த கோடை மழை. இறங்கும் இடத்திலும் மழை பொழிந்த வண்ணம் இருந்தது. நான் மட்டுமே இறங்கினேன் ஓடிப்போய் அருகில் உள்ள கீற்றுக் கொட்டகையில் ஒதுங்கினேன்.

பக்கத்தில் உள்ள பயணிகள் நிழலக கட்டடத்தில் இரு வழிப்போக்கர்களின் சப்பாஷணைகள் மழை சத்தத்தோடு அரை குறையாகக்  கேட்டது.  பயணிகள் நிழலகத்திற்கு பக்கமாக வந்து காதுகளை கூராக்கி கேட்டேன். அதில் ஒன்று பாபாவின் குரல்.

“உடல் சூட்டுல காஞ்சி பூடும்பா”

“துண்ட கட்டிகிட்டு வேஷ்டிய புழுஞ்சாவது கட்டிக்கயேன்”

“வேண்டாப்பா”

“நீ சொன்னா கேக்கவா போறே. அப்புறம் சளி புடிச்சி தெணறிகிட்டு இருப்பே”

“ஜலதோஷம் வந்தா ரெண்டு நாள்ல போப்போவுது.  விடுறியா”

“க்கும்”

“பூமி வறண்டு போச்சி. மாடு தண்ணி  குடிக்கக்கூட கொளம் குட்டையெல்லாம் வத்திப்போச்சி.  இந்த மழை ஒரு பத்து நாளைக்கு தாங்குமா?” என்றார் பாபா.

“என்ன இதுவரை பேஞ்சதே பத்து சேய் இருக்குமா?”  எங்கள் பகுதியில் பன்னிரெண்டு மில்லி மீட்டர் மழையை ஒரு சேய் என்பார்கள்.

“இருக்கும்  இன்னமும் விடுறதா இல்லையே”.

“பேயட்டும். ரொம்ப நாளக்கி பொறவு இன்னக்கிதான் நின்னு பேயுது”

“ஜூலை மாதமும் பொறந்துட்டுது.  காவெரியில இன்னம் தண்ணி விடல”

“கன்னடகாரன் நல்ல நாள்லயே தண்ணி விட மாட்டான்.  அங்கேயும் தண்ணி இல்ல.  எப்படி விடுவான்.”

“கிருஷ்ணசாகர் அணை வேகமா ரொம்புதாம்.  அது புல்லாச்சிதுன்னா கொஞ்சம் தண்ணி விடுவான்”

“ஹச்” பாபா ஒரு தும்மல் போட்டார்.

“ஏம்பா சொன்னா கெக்கமாட்டா.  வேட்டிய புழுஞ்சி கட்டு.  மொதல்ல.”

அதற்கு மேல் நான் அவர்களின் பேச்சை ஒட்டு கேட்கவில்லை. பாபா நனைந்த நிலை  இருப்பது என்னை வருத்தத்தில் நனைய வைத்தது. நான் மழையில் நனைந்து கொண்டே ஊரை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

இது என்ன வாழ்க்கை.   மாற்றாய் மற்றொரு உடை வைத்துக் கொண்டால் என்ன?   ஏதாவது ஒரு கொள்கையை இழுத்து பிடித்துக்கொண்டு தொங்குவதா? அவருக்கென்று ஒரு பெயர் இருக்கிறதா? ஒரு தங்கும் இடம் இருக்கிறதா?  தினம் இரண்டு வேளை உணவு கிடைக்கும் என்பதற்கான எந்த உத்தரவாதமும் இல்லையே. யாராவது ஒருவர் ஓர் அழைப்பிதழில் இவரது பேயரை எழுதி விசேஷத்திற்கு அழைத்திருப்பார்களா?  விருந்தென்று பந்தியில் மற்றவர்களைப்போல அமர்ந்து உண்டிருப்பாரா?  எல்லாம் வேண்டாம் என்று  வேண்டு மென்றே  ஒதுங்கி விட்டார்.   சரி.     ஒரு மாற்று உடை கூடவா வைத்துக் கொள்ளக் கூடாது.  இல்லறத்தை வெறுத்து வந்தாரா?. இளமையிலேயே விரும்பி வந்தாரா?  அவர் பிரமச்சசாரியா? துறவியா? இவரை இப்படி ஆளாக்கியது வறுமையா? ஞானமா?. பதப்படுத்தப்பட்ட வாழ்வின் முறையைத்  தாண்டி எப்போது வந்தார்?  அல்லது யாரேனும் தள்ளி விட்டார்களா? இவை பற்றி எனக்கு எதுவும் தெரியாது.   ஆனால் அவர் ஒரு சாந்த சொருபி.  அதற்கு மட்டும் என்னால் சான்று வழங்கமுடியும். அவர் எல்லாவற்றையும் உதறி விட்டார்.  அவரது பாதை  மற்றவர் காலடிபடாத நெருஞ்சி வெளி.  பூக்களோடு பெரிதாய் கால்களை காயப்படுத்தாத முட்களும் காய்த்துக் கிடக்கின்றன.

உணவிற்காக வீட்டிற்கு செல்லாது நேரே எனது கொட்டகைக்குப்போய்  ஈர உடையை கூட மாற்றாமல் கயிற்றுக் கட்டிலில் விழுந்தேன். விழித்தபோது விடிந்திருந்தது.

நீண்ட காலமாக பாபாவை காணமுடிய வில்லை. அவரை பார்த்து கிட்டத்தட்ட  ஒரு வருடம் இருக்கலாம்.  தூக்கமும் விழிப்புமற்ற வேளைகளில் எப்போதேனும் வருவார். தம்பி என்பதற்குள் நான் பாபா என அழைத்து முந்திக்கொள்வேன். விழிப்பு வந்துவிடும்.

ஒர் அரை தூக்கதில் பாபா வந்து அதிசயமாக “ஒரு கத்தரிக்கோல் வாங்கி தாரிங்களா?” என்றார்.

“மீண்டும் எப்ப பாபா வருவீங்க?  வாங்கியாந்து வச்சிருக்கேன்.  இல்லன்னா பணம் தாறேன் வாங்க கிடுறீங்களா?” என்றேன்.

“பணமெல்லாம் வேண்டாம் வரும்போது வாங்கிக்கிடுறேன்.  பத்து நாள்ல வாரேன்” என்றார்.

எனக்கு ஒரே ஆனந்தமாக இருந்தது.  பூனை ஒன்று கூரையிலிருந்து என் மீது குதித்து தலை தெறிக்க ஓடியதில் விழித்துக் கொண்டேன். அதிசயமாய் பாபா ஏன் கனவில் வந்து கத்தரிக்கோல் கேட்டார்.  வாங்கி கொடுத்தால் அது எனக்கு கிடைத்த பேரு தானே.  நீண்ட நாள் பார்க்காததும் இன்று கனவில் வந்ததும் ஒரு கொதிப்பை ஏற்படுத்தியது.   கருக்கல் நேரம்.  எங்கிருந்தோ காற்றில் கலந்து வந்த பாலமுரளியின் ‘மானஸ சஞ்சரரே ப்ரஹ்மணி மானஸ சஞ்சரரே’ என்னை சாந்தப்படுத்தியது.

பிறகு நான் ஒரு சைக்கிள் வாங்கி விட்டேன். புதியது அல்ல. சகேன்ட் ஹேன்ட்.  நகருக்கு செல்வதென்றால் பேருந்து நிறுத்தம் வரை சைக்கிளில் செல்வேன்.   ஒரு நாள் மாலை சைக்கிளில் போகும்போது வழியில் உள்ள ஒரு கோவில் திடலில் நாடோடி குழு ஒன்று வெட்ட வெளியில் உணவு தயாரித்துக் கொண்டிருந்தது.  ஐம்பது அறுபது பேர் இருக்கும். கசமுச வென்று சத்தம். தெம்புள்ள குழந்தைகள் அங்குமிங்கும் ஓடியாடி விளையாடின.  பசியெடுத்த குழந்தைகள் மணலில், பாயில், கிழிந்த துணியில், போர்வையில் சோர்ந்து கிடந்தன.  சில உறங்கின.  வாழ்வென்பது துயரம் என்பதை நிருபிக்கும் வகையில் எங்கிருந்தோ காற்றால் தள்ளப்பட்ட மேகங்கள் ஒன்றுகூடி சோவென மழையடிக்கத் தொடங்கியது.  நான்  சைக்கிளை வேகமாக மிதித்தும் லேசாக நனைந்து விட்டேன். அந்த நாடோடிக் குழு என்னவாயிருக்கும்.   அங்கலாய்த்த மனதோடு பேருந்து நிலையத்தில் நுழைந்தேன். அங்கே ஒரு  காவி சாமியார் உட்கார்ந்திருந்தார்.  கேட்கலாமா? வேண்டாமா?

பலத்த யோசனைக்குப் பின் கேட்டேன்   “ஏன் சாமி இங்க ஒரு சாமியார் எப்போதும் வருவார்.  ஒரு வருடமா காணும். உங்களுக்கு தெரியுமா?”

“யாரு. . .   தெரியாதே”

“இடது கால விந்தி விந்தி நடப்பார்.”

“ஓ. . . அவரா.  ஒரு பத்து  மாதம் இருக்கும் அவர பாத்து”

“என்ன ஆனார்?”

“காணாமல் போய்ட்டார். ஒரு நாள் இன்னக்கி ராத்திரி தகட்டூர் பஸ்டான்ல தங்குவோம்ன்னார். நான் நைட் போனேன். அவரு வரல. ஏன்னு தெரியல. அதுதான் நான் கடைசியா பாத்தது.”

“அவரு யாரு அவர பத்தி எதாவது தெரியுமா? “

“அது யாருக்கும் தெரியாது.   யார் கிட்டேயும் அவர் காசு வாங்க மாட்டார். வேஷ்டி துண்டு கிழியுற நிலமை வந்துதுன்னா தெரிஞ்சவங்க கிட்டே கேட்டு ஒன்று வாங்குவார்.  ஒண்ணுக்கு மேல வாங்கிக்கமாட்டார். அத வாங்கக்கூட  காசா வாங்க மாட்டார். வேஷ்டிய ஒரு நாள் துண்ட ஒரு நாள்னு மாத்தி மாத்தி தொவச்சி கட்டுவார். என்ன ஆனாலும் குளிக்கும இருக்கவே மாட்டார். யார்கிட்டேயும் அதிகமா பேசமாட்டார்.

“என் கிட்ட பேசுவாரே”

“உங்களப் பத்தி  பேசிருப்பார்.  தன்னப்பத்தி எதுவும் சொல்லிருக்க மாட்டார்.  ரொம்ப வருஷமா எனக்கு அவர தெரியும். ஆரம்பத்துல பேர கேட்டதுக்கு ஞானசூன்யம் என்றார். தானே வச்சிகிட்டதுன்னார். பிறகு ஒருநாள் ‘நான் பாபா’ன்னு சொன்னார்.  ஆமா அவரப் பத்தி கேக்குறிங்க.   நீங்க யாரு?”

பாபா எங்கே?  அவர் ஏன் என்னிடம் வேஷ்டி வாங்கி கேட்டதே இல்லை.  அதற்கான தகுதியை நான் இன்னும் பெறவில்லையா? அப்படி சொல்ல முடியாது.  கத்தரிக்கோல் வாங்கிக் கேட்டது,  தானே முடிவெட்டிக் கொள்வதற்காக இருக்கலாம்.

சூன்யத்திலிருந்து ஞானம் தோன்றுகிறது.  அவர் ஞானசூன்யம். அவர் அருவா? அருவுருவா? அதெல்லாம் ஆழமாக எனக்குத் தெரியாது.

ஆனால், எப்போதேனும் உருவில் வருவார்.

நாளையோ;  மறுநாளோ;

பத்து ஆண்டுகள், நூறு ஆண்டுகள், ஆயிரம் ஆண்டுகளானாலும் . . .

ஏனெனில்; அவர் ஒரு கூழாங்கல்.

பின்னுரை

கதையின் முடிவை தெளிவாக கூறாமல் வாசகர்களின் ஊகத்திற்கு விட்டு விடுவது தற்போதைய வழக்கம் என்றாகி விட்டது.  சென்ற வாரம் பவா செல்லத்துரையின் கதைகளான நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை மற்றும் ஏழுமலை ஜமா இரன்டும் அப்படித்தான். இந்த வாரக் கதையும் அப்படியே முடிவை சரியாக சொல்லவில்லை.

வெளியான விபரம் : படைப்பு பதிப்பதில் வெளியிடப்பட்ட ‘பாதியும் மீதியும்’ என்ற  சிறுகதை  தொகுப்பில்  வெளியான சிறுகதை. 

அன்பழகன்ஜி


தமிழ்நாடு சிறைத்துறையில் அலுவலக கண்காணிப்பாளராக பணிபுரிந்து  ஓய்வு பெற்றவர். சொந்த ஊர் வேதாரணியம் தாலுக்கா கடிநெல்வயல் என்ற கிராமம்.  தற்போதைய வாழிடம் திருச்சி.  இதுவரை மூன்று புத்தகங்கள் வெளிவந்துள்ளன. முகநூல் பக்கத்தில் நிறைய புதுக்கவிதைகள் ஹைக்கூ கவிதைகள் பதிவிட்டுள்ளார்.

பல சிறுகதை போட்டிகளில் இவரது சிறுகதைகள் தேர்வுபெற்றுள்ளன.

நாற்பதாண்டுகளுக்கு மேலாக நல்ல வாசிப்பு அனுபவம் கொண்ட வாசகர்.

இவரது படைப்புகள்: பாதியும் மீதியும்

(சிறுகதைத் தொகுப்பு) : விலை ரூ. 120/-

வெளியீடு : படைப்பு பதிப்பகம், # 8 மதுரை வீரன் நகர், 

கூத்தப்பாக்கம், கடலூர் – 607 002, தமிழ்நாடு

94893 75575

எட்டி மரக்காடு - (சிறுகதைத் தொகுப்பு)

வெளியீடு : Free Tamil Ebook

பதிவிறக்க முகவரி : http://freetamilebooks.com

அறைக்குள் அகப்பட்ட வானம் - (குறு நாவல்கள்)

வெளியீடு : Free Tamil Ebook

பதிவிறக்க முகவரி : http://freetamilebooks.com 

நன்றி : sirukathaigal.com


37 கருத்துகள்:

  1. கதையின் முடிவைத் தெளிவாகக் கூறாமலா?
    இதை விடத் தெளிவாக எப்படிச் சொல்வது? இதென்ன கட்டுரையா?
    கதை தானே?..

    கூழாங்கல் சரி என்றால் கூழாங்கற்கள் எப்படி சரியில்லாமல் போகும்?
    சொல்லுங்கள்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூன்யத்திலிருந்து ஞானம் தோன்றுகிறது. அவர் ஞானசூன்யம். அவர் அருவா? அருவுருவா? அதெல்லாம் ஆழமாக எனக்குத் தெரியாது.

      ஆனால், எப்போதேனும் உருவில் வருவார்.

      நாளையோ; மறுநாளோ; பத்து ஆண்டுகள், நூறு ஆண்டுகள், ஆயிரம் ஆண்டுகளானாலும். ஏனெனில்; அவர் ஒரு கூழாங்கல்.//

      //கூழாங்கல் சரி என்றால் கூழாங்கற்கள் எப்படி சரியில்லாமல் போகும்?

      சொல்லுங்கள்.//

      ஒரு கூழாங்கல் இங்கே. அந்த இன்னொன்னு கூழாங்கல் எங்கே?

      Jayakumar

      நீக்கு
    2. ஜெ கே அண்ணா, கூழாங்கல்/கற்கள் என்பது இங்கு , இந்த பாபாவை போன்று பலர் இருக்கிறார்கள் இந்த உலகில் என்பதைத்தான் ஆசிரியர் கூழாங்கக்ற்கள் என்று சொல்கிறார் என்பதுதான் நான் புரிந்துகொண்டது

      கீதா

      நீக்கு
    3. சரியான அவதானிப்பு சகோதரி..

      நீக்கு
  2. இப்பதிவு எழுதும்போது ஏகாந்தன் சாரின் வலைப்பக்கம் உள்ள கூழாங்கற்கள் படம் மனதில் தோன்றியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கூழாங்கற்கள் என்றதும் எனக்கும் அதே நினைவுக்கு வந்தது.

      நீக்கு
  3. இமயமலையில் இறவாமல் வாழ்வதாக கூறப்படும் ரஜனியின் குரு பாபாஜி பற்றி சூசகமாக சொல்கிறார் ஆசிரியர் என்று நினைக்கிறேன். அவருடைய பிறப்பிடத்தில் ஒரு கோயில் கடலூர் பரங்கிப்பேட்டை அருகே இருப்பதாகக் கூறுவர். யோகியின் சுயசரிதையில் பாபாஜி பற்றிய மேலும் விவரங்கள் அறியலாம்.

    //மகாவதார பாபாஜியின் பிறப்பு மற்றும் வாழ்க்கை தொடர்பான வரலாற்றுப் பதிவுகள் எதுவும் இல்லை. பரமஹம்ஸ யோகானந்தர் ஒரு யோகியின் சுயசரிதத்தில், இந்த மரணமற்ற அவதாரம் இந்தியாவின் தொலை தூர இமாலயப் பகுதிகளில் எண்ணற்ற ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார், ஆசீர்வதிக்கப்பட்ட சிலருக்கு மட்டுமே அரிதாக தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறார் என்று எழுதியுள்ளார்.//

    ரஜனி அடிக்கடி இமயம் சென்று பாபாஜி வசித்ததாக கூறப்படும் குகையில் அமர்ந்து தியானம் செய்து திரும்புவார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  யோகியின் சுயசரிதம் என்னிடமும் இருக்கிறது.  படித்திருக்கிறேன்.  இந்த புதன் கிழமை அன்று இன்னொரு மகான் பற்றி அறிந்தேன்.  விவரங்கள் சரிவரத்தெரியாது.  முதல்முறை தெரிய வந்த விவரங்கள்.  அவரின் புத்தகத்துக்காக காத்திருக்கிறேன்.

      நீக்கு
  4. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  5. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஜெயக்குமார் சந்திரசேகர் ஸார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் மறந்தாலும் மறக்காமல் வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி. GMB ஐயா சொன்னபடி இனி வரும் பிறந்த நாட்கள் எல்லாம் ஒரு போனஸ் தான்.

      ஆமாம் GMB ஐயாவை ஆகஸ்டுக்குப் பின்னர் பதிவுலகில் காணவில்லை. ஏதாவது தெரியுமா?

      Jayakumar

      நீக்கு
    2. வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகர் சகோதரரே

      இன்று இனிய பிறந்த நாள் காணும் தங்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகளும் சகோதரரே. இறைவன் தங்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தை தந்தருள வேண்டுமாய் இந்த நன்னாளில் பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி.

      அன்புடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. ஜெ கே அண்ணா, நான் செப்டெம்பர் மாதம் பேசினேன். அப்போது சார் சக்கரநாற்காலியில் தான் வலம் வர முடிகிறது என்று சொன்னார் கூடவே அம்மாதான் பேசினாங்க. சாருக்குச் செவி கேட்கவில்லை என்பதால் அம்மாதான் பேசினாங்க. அவங்களுக்கும் சமைப்பது கடினமாக இருக்கு என்று ஆள் வைத்திருப்பதாகச் சொன்னாங்க. அதன் பின் ஜி எம் பி ஸாரை தொடர்பு கொண்ட போது எடுக்கவில்லை. அம்மாவின் நம்பர் முன்பு என்னிடம் இருந்தது இப்போது அதுவும் இல்லை.

      கேட்டிருக்கிறேன். மெசேஜ் வந்ததும் சொல்கிறேன்.

      கீதா

      நீக்கு
    4. ஜெ கே அண்ணா பிறங்க நாள் வாழ்த்துகள்! நீங்களும் அக்காவும் ஆரோக்கியமாக இருந்திட பிரார்த்தனைகள்

      கீதா

      நீக்கு
    5. பிறந்த நாள் வாழ்த்துக்களுக்கு நன்றி. இதுவும் ஒரு சாதாரண நாள் என்ற உணர்வே நிற்கிறது. கோயிலுக்கு போகவில்லை. பாயசம் வைக்கவில்லை.
      பிள்ளைகள் கொஞ்ச நாள் முன்பு தான் வந்து சென்றனர்.

      நீக்கு
    6. பிள்ளைகள் வந்துவிட்டுச் சென்றது மகிழ்வான விஷயம்.

      கீதா

      நீக்கு
    7. பிறந்த நாள் வாழ்த்துக்கள், ஜெஸி ஸார்..

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை. அனைவரையும் வாழ்த்திப் போற்றுவோம்.

    இன்றைய கதை பகிர்வும் அருமை. கூழாங்கற்கள் விளக்கம் ரசித்தேன். கதை முடிவும் நன்றாக உள்ளது. நல்லதொரு மனம் பக்குவப்பட்ட கதையை இன்று அறிமுகப்படுத்திய சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. மருத்துவர் ராமாமூர்த்தி அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள். எப்பேர்ப்பட்ட மருத்துவர்! பின்னால் பார்க்காமல் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்பது அருமையான கருத்து. கிராமத்திலிருந்து தற்போது தன் மகனோடு இருக்க சென்னைக்கு வந்ததும் சிறப்பு. எத்தனை முதியவர்கள் இப்படிச் செய்கிறார்கள்!!!????

    காஞ்சிப் பெரியவரின் அறிவுரை அருமை அருமை!!!! Forward Thinking !!!

    கீதா

    பதிலளிநீக்கு
  8. முகமூடித் திருடர்களிடம் போராடிய முதியவர் வைரக்கண்ணு, ஆஹா போட வைத்தார். ஆட்டோ ஓட்டுநர் ஜெகதாஸ் மனம் கனத்துவிட்டது. சமயோஜிதம்....அவர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

    மற்ற செய்திகளும்சிறப்பு

    கீதா

    பதிலளிநீக்கு
  9. உங்கள் முன்னுரையும் வாசித்தேன், அண்ணா. அதேதான் எனக்கும் முதலில் தோன்றியது.

    கதையில் ஆற்றில் கூழாங்கல்லின் அறிவியல் கருத்து.... உருள்வது மாறுவது என்று சொன்னாலும் கதைக்கும் தலைப்புக்கும் சம்பந்தமில்லையோ என்பது போலவும் முதலில் தோன்றியது , கூழாங்கல்/கற்கள் என்று ஏன் சொன்னார் என்பதற்கான விளக்கமும் புரியவில்லை. நானும் ஏமாந்தேன். முதலில்.....

    ஒன்று கூழாங்கல் என்பதற்கான விளக்கம் நாம் அறிந்தது போல்பண்பட்ட மனம், அறிவு என்ற ரீதியில் கதையில் தெளிவாகச் சொலல்வில்லை என்றலலும் ...சூன்யம் ஞான சூனியம் இதுக்காவது நல்ல புரியும்படியான விளக்கம் கொடுத்திருக்கலாமோ என்று தோன்றியது. இதன் அர்த்தம் எனக்குச் சரியாக விளங்கவில்லை. அந்தக் கதாபத்திரத்திற்கு ஏற்ப சொல்லியிருந்தால் நல்லாருந்திருக்கும். என்னவோ மிஸ்ஸிங்க் என்று தோன்றியது.

    இடலாக்குடி ராசா ஒரு வகை இவர் வேறு வகை அவ்வளவுதான். இப்படியான மனிதர்கள் பல சிறு ஊர்களிலும் காண முடியும். எங்கே போகிறோம் என்ன வாழ்க்கை, குறிக்கோள் எதுவும் இல்லாமல், வாழ்க்கை இழுக்கும் இழுப்பில் செல்வார்கள். இவர்கள் நேர்மறையாக இயங்குபவர்கள். தேங்குபவர்கள் மன ரீதியாகப் பாதிப்பில் இருப்பாங்க.

    இப்படியான மனிதர்களுக்கு மனரீதியாக பாதிப்பு இல்லை மொத்தத்தில் யாருக்கும் எந்த உபத்திரவும் இல்லாமல் செல்பவர்கள்.

    இப்படியானவர்கள் குடும்பத்தில் இணையும் போதுதான் பிரச்சனைகள், குடும்ப உறவிலும் கூட இப்படியானவங்களைப் பார்க்கலாம் எந்தவித சம்பாத்தியமும் செய்யாமல் தத்துவங்கள் பேசிக் கொண்டு குடும்பத்திற்கு எந்தவிதத்திலும் உதவியாக இல்லாமல் மற்றவர்களுக்கு குறிப்பாக மனைவி குழந்தைகளுக்குச் சிரமத்தைக் கொடுத்துக் கொண்டு...

    எனக்குக் கடைசியில் விளங்கியது இதுதான். எப்படிக் கூழாங்கற்கள் ஆறு போனபோக்கில் ஓடி உருண்டு தங்களைத் தக்க வைத்துக் கொள்கின்றனவோ அப்படி இப்படியானவர்களும் வாழ்க்கை போன படி வாழ்க்கையின் நீரோட்டத்தில் செல்கின்றனர். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், எதையும் அதிகம் நம்பி இராமல் கால் போன போக்கில்....எதிர்பாரா வாழ்க்கை.

    ஒரு தத்துவார்த்த ரீதியாக காவி உடை தரித்துக் கொண்டு - இது சென்டிமென்டல் காவி உடை தரித்தால் எங்கு போனாலும் ஏதேனும் கிடைத்துவிடும் - செல்வார்கள்....யாருக்கும் உபத்திரவ்ம் கொடுக்காததால் நலல்தைப் பேசுவதால் ஓடுகிறது. ஆனால் நகரத்தில் இப்படி போகுமா என்று தெரியாது,

    இடலாக்குடி ராசா போன்றவர்கள் அந்த ஊருக்குள் செல்லுபடியாவார்கள் அல்லது சுற்றுப்பட்டு கிராமங்கள் வரை, ஆனால் அதைத் தாண்டும் போது சாதாரண உடை சரிப்பட்டு வராது காவி உடை ஒரு பாதுகாப்பு! இப்படியானவர்கள் சாதாரண மான உடையில் அழுக்கு உடையில் இருப்பார்களையும் பார்க்கிறோமே....ஆனால் அவர்களை சமூகம் ஏற்பதில்லை.

    இப்படி யாருக்கும் உபத்திரவம் கொடுக்காமல் வாழ்க்கையின் இழுப்பில் காலச்சக்கரம் போகும் திசையில் செல்பவர்கள் கூழாங்கற்கள் போன்று..ஆற்றோடு நீரோடு உருண்டு செல்பவர்கள்....இவர்களுக்கும் மனம் பக்குவப்பட்டதால்தான் எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் வாழ்கின்றனர்.

    இப்படியானவர்கள் எதிலேனும் சிக்கினால் - தொழில் அலல்து குடும்பம் என்று அவ்வளவுதான் கண்டிப்பாக இவர்களால் தக்குப் பிடிக்க முடியாது. மனப்பிரச்சனை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இக்கதையில் வருபவர் போன்று ஒருவருக்கு முறை வைத்து புதன் கிழமை தோறும் மதிய உணவு கொடுத்துக் கொண்டிருந்தார் பாஸ். இது எனக்கு தெரியாது. ஒரு புதன் லீவு அன்று அவருக்கு சோறு கொடுத்த மனையாளிடம் நான் இவர் யார் என்று கேட்டேன். அவரும் தெரியாது என்று சொல்லிவிட்டு காரியத்தில் கண்ணாக இருந்தார்.

      வீடு வைத்து மாறியபோது சொல்லவில்லை. அதோடு அந்த முறை சாப்பாடும் முடிந்தது. ஒரு வித்தியாசம். அவர் சாமியார் உடை அணியவில்லை. பார்ப்பதற்கு கையில் ஒரு நீண்ட தடியுடன், காந்தி போல் அரை வேஷ்டி மட்டும் அணிந்து வினோபா போன்று இருந்தார்.
      Jayakumar

      நீக்கு
    2. உங்க பாஸ் செய்த விஷயம் மிக நல்ல செயல். ஜெ கே அண்ணா நம்மைப் போன்றவர்கள் இப்படி இருந்தாலும் நாம் உணவு அளிப்போம். ஆனால் பொதுவாக விரட்டிவிட்டுடுவாங்க இல்லைனா கண்டு கொள்ளமாட்டாங்க.

      //அவர் சாமியார் உடை அணியவில்லை. பார்ப்பதற்கு கையில் ஒரு நீண்ட தடியுடன், காந்தி போல் அரை வேஷ்டி மட்டும் அணிந்து வினோபா போன்று இருந்தார்.//

      ஓ! அதான் ஒரு சிலர்தான் இப்படியானவர்களுக்கும் உணவு கொடுப்பாங்க.

      ஆனால் மக்களைக் குற்றம் சொல்ல முடியாது. பல இடங்களிலும் குற்றங்கள் நிகழ்வதால் மக்கள் உஷாராக இருக்கத்தானே விரும்புவார்கள்,

      கீதா

      நீக்கு
  10. ஞான சூனியம் என்று ஏன் கதையில் வருகிறது என்பது புரியவில்லை. ஞான சூனியம் என்றால் அறிவற்றவர் என்று பொருள் என்றால், எப்படி இந்த பாபாவை அறிவற்றவர் என்று சொல்ல முடியும்? புரியவில்லை

    கூழாங்கல் - ஆசிரியருக்கு இவரைப் பார்த்திருக்கிறார் அனுபவம் எனவே இவர். கூழாங்கற்கள் என்றால் இவரைப் போன்று இன்னும் பலர் இந்த உலகில் இருப்பவர்கள் என்பதைச் சொல்லியிருக்கிறார் என்றே தோன்றுகிறது

    கதை நல்ல ஒரு அனுபவத்தைச் சொல்லிச் செல்கிறது. நன்றாக இருக்கிறது ஜெ கே அண்ணா

    கீதா

    பதிலளிநீக்கு
  11. பெண்ணைக் காப்பாற்றிய ஆட்டோ ரைவர் அவர் நிலை கவலை தருகிறது.

    கூழாங்கற்கள் சிறுகதையில் வருபவர் போல் முன்பு சிலர் வாழ்ந்தார்கள்.
    வயதான பெண்ணொருவரும் எங்கள் கோவிலில் தங்கி இருந்தார். யோகியின் சுயசரிதை படித்திருக்கிறேன்.


    பதிலளிநீக்கு
  12. கதையின் முடிவை தெளிவாக கூறாமல் வாசகர்களின் ஊகத்திற்கு விட்டு விடுவது தற்போதைய வழக்கம் என்றாகி விட்டது. //

    ஜெ கே அண்ணா, கதையின் முடிவு சரியாகத்தான் இருக்கிறது. இப்படியான மனம் பக்குவப்பட்டவர்கள் அதாவது எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த உலகியல் வாழ்க்கைக்குள் சிக்காமல் வரும் கூழாங்கல் போன்றவர்கள் எப்போதும் பிறப்பதில்லை என்பதைத்தான் சொல்கிறார். கூழாங்கல் என்பது அரிதல்ல...அது எல்லா இடங்களிலும் காணப்படுவதுதான் ஆனால் அவர் சொல்ல வருவது மறைபொருள். கால் போகும் போக்கில் வாழ்க்கையின் இழுப்பில் செல்பவர்கள்..

    எனக்கும் கதைகளை வாசிப்பவர்களின் ஊகத்தில் விடுவது பிடித்த முடிவு, அல்லது கதையின் முடிவு என்பது எல்லோரும் சந்தோஷமாக இருந்தார்கள், திருமணம் செய்து கொண்டார்கள், பிரிந்தவர்கள் சேர்ந்துவாழ்ந்தார்கள் என்று முடிப்பதை விட மறைமுகமாகச் சொல்லும் முடிவும் நன்றாக இருக்கும்...என்பது என் தனிப்பட்டக் கருத்து.

    கீதா

    கீதா

    பதிலளிநீக்கு
  13. மருத்துவர் ராமமூர்த்தி இப்போது சென்னை போய் விட்டாரா? மாயவரம் ஏழை மக்களுக்கு பெரிய இழப்பு. 10 ரூபாய் மருத்துவர் என்று பெயர் பெற்ற சிறந்த மருத்துவர். என் கணவர் இவருக்கு பொன்னாடை அணிவித்த பதிவு முன்பு போட்டு இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  14. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஜெயக்குமார் சந்திரசேகர் ஸார், வணக்கங்கள், வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  15. https://mathysblog.blogspot.com/2013/04/blog-post_26.html
    பரங்கிப்பேட்டை பாபாஜி கோயில் போய் இருக்கிறோம். பதிவும் போட்டு இருக்கிறேன்.
    கதை நன்றாக இருக்கிறது. சித்த புருஷர்கள் காலம் காலமாக தோன்றி கொண்டு இருப்பார்கள்.அவர்கள் ஒரே இடத்தில் இருக்க மாட்டார்கள்.
    எங்கேயாவது போய் கொண்டே இருப்பார்கள்.
    பாபா ஏன் கத்திரிக்கோல் கேட்டார்!, வாங்க வருவாரா என்ற எண்ணம் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொடுத்த சுட்டியில் சென்று பதிவையும் படங்களையும் பார்த்தேன். நானும் பின்னூட்டம் இட்டதாகத் தோன்றுகிறது.

      நீக்கு
  16. பிறந்த நாள் வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி.
    இம்முறை கதையைப் பற்றிய கருத்துக்கள் சிந்திக்க வைப்பனவாக உள்ளது. மகிழ்ச்சி.

    Jayakumar

    பதிலளிநீக்கு
  17. மருத்துவர் ராமமூர்த்தியைப் பற்றி நிறையக் கேள்விப் பட்டிருக்கேன். இந்த மாதிரி மருத்துவர்கள் அனாவசியமாகச் செலவு வைக்காமல் சரியானபடி நோயைக் கண்டறிந்து வைத்தியம் செய்வார்கள். ஆனால் நம் மக்களுக்கு ஆடம்பரம் தான் பிடிச்சிருக்கு. கார்ப்பொரேட் மருத்துவமனையில் தான் வைத்தியம் பார்த்துக்க ஆசைப்படுகின்றனர். சாலை போட்ட மக்களுக்குப் பாராட்டுகள். இளம்பெண்ணைக் காப்பாற்றிவிட்டுத் தான் உயிரை விட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு நற்கதி கிடைக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  18. பிறந்த நாள் வாழ்த்துகளும் ஆரோக்கியமான வாழ்க்கைக்குப் பிரார்த்தனைகளும் திரு ஜேகே சாருக்கு.

    பதிலளிநீக்கு
  19. கொள்ளையர்களை விரட்டி அடித்த முதியவருக்கும் அவர் மருமகளுக்கும் பாராட்டுகள். நான்கு மாதக்குழந்தை நல்லபடியாக ஆரோக்கியமாக வளரட்டும். கதையைப் படித்தேன். என்ன சொல்வதுனு புரியலை. கூழாங்கற்கள் காலத்துக்கும் நிலைத்து நிற்கும். அதே போல் பாபாவும்.

    பதிலளிநீக்கு
  20. என்னுடைய கதையை வெளியிட்டமைக்கு பேரன்பும் பெருநன்றியும். பல்வேறு சிறந்த கருத்துகளை வாசித்தவர்கள் தெரிவித்துள்ளார்கள். அவை என்னை மேலும் செய்யை படுத்திக்கொள்ள உதவியாக உள்ளன.

    மீண்டும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!