சனி, 14 அக்டோபர், 2023

பிரகாஷ் பழனி மற்றும் 'நான் படிச்ச கதை'

 

===================================================================================================

அறம் செய்யப் பழகு 

சென்னை சைதாப்பேட்டை மாந்தோப்பு அரசுப்பள்ளியில் படித்த பழைய மாணவர் ஒருவர் பள்ளி மாணவர்களுக்குத் தேவையான எட்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள விளையாட்டுப் பொருட்களை தானமாக வழங்கினார்.

இவ்வளவு பெரிய தொகையைக் கொடுக்குமளவுக்கு வளர்ந்த அந்த அரசுப்பள்ளி மாணவர் யார்?


அவர்தான் பிரகாஷ் பழனிவீட்டுவேலை செய்யும் அம்மாவையும் சைக்கிள் ரிக் ஷா ஓட்டும் அப்பாவையும் அவரவர் கஷ்டத்தில் இருந்து மீட்டு வீட்டில் வைத்து நன்றாகக் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணினார்.

இதற்காக ப்ளஸ் டூ  படிப்பை முடித்து விட்டு மேற்கொண்டு தொடராமல் சமையல் மண்டபங்களில் உதவியாளராக வேலை பார்த்தார்.

இது குடும்ப செலவிற்கு உதவியதே தவிர குடும்ப பொருளாதார நிலையை நினைத்தபடி உயர்த்தவில்லை.  இதனால் பகலில் சமையல் உதவியாளர் வேலை, இரவில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக மாறினார்.  கம்பியூட்டர் பற்றி கொஞ்சம் புரிபட்டது.   டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக இருந்தவர் கம்பியூட்டர் சம்பந்தப்பட்ட படிப்புகளை தேடித்தேடிப் படித்தார்.

கல்வித்தகுதியை பார்க்காமல் இவரது திறமையை மதித்து பெரிய நிறுவனம் ஒன்று இவருக்கு வேலை கொடுத்தது.  அந்த நிறுவனத்தில் படிப்பபடியாக உயர்ந்தவர் பின் சொந்தமாக பேசிக் கிளவுட் சொல்யூஷன் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்.  அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இப்போது நெதர்லாந்தில் இருக்கிறார்.  இவரது நிறுவனத்தின் கிளைகள் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் செயல்படுகிறது.  250க்கும் மேற்பட்டவர்கள் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.  பணியாற்றுபவர்களில் பெரும்பாலானவர்கள் இவரைப்போலவே சிரமப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த அரசுப்பள்ளியில் படித்த மாணவ மாணவியரே.   இந்திய நிறுவனத்தை இவரது சகோதரர் விஜயகுமார் பார்த்துக் கொள்கிறார்.

அம்மாவும் அப்பாவும் ராஜா ராணி போல வாழ்வதற்கு வீடு உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுத்திருக்கிறார்.  அவர்கள் விரும்பிய நாடுகளுக்கு அழைத்துச் சென்று வந்துள்ளார்.

சென்னையில் உள்ள அவரது நிறுவனத்தின் வாசலில் பெரிதாக 'அறம் செய்து பழகு' என்று எழுதப்பட்டுள்ளது.  பால்யகால நண்பர் பார்த்திபனையும், பாடம் சொல்லிக்கொடுத்த லாரன்சு வாதியாரையும் நன்றி பாராட்டுகிறார்.

தனது முன்னேற்றத்திற்கு காரணமே அறம்தான்.  எந்த நிலைமையிலும் நேர்மையை விட்டுக்கொடுக்காமல் வாழ்கிறேன்   எனது சம்பாத்தியம் எவ்வளவாக இருந்தாலும் அதில் பெரும்பகுதியை ஏழை எளிய பள்ளிக்குழந்தைகளின் படிப்பிற்கு செலவிடுகிறேன்.  நிறுவனத்தை இன்னும் பெரிய அளவில் கொண்டு செல்ல உழைத்து வருகிறேன்.  இது வருமானத்திற்காக அல்ல, இன்னும் நிறைய எளிய மாணவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வைப்பதற்காக என்று கூறிய பிரகாஷ் பழனியை தொடர்பு கொள்வதற்கான மெயில் முகவரி :Talents@basiscloudsolutions.com.

=========================================================================================================================

                                                       நான் படிச்ச கதை (JKC)

 

முன்னுரை 

எழுத்துலகில் இரண்டு இரா நடராஜன்கள் சமகாலத்தவர். ஒருவர் ஆயிஷா நடராசன் என்று அவர் எழுதிய ஆயிஷா என்ற கதையின் கர்த்தாவாக பிரபலம் ஆனவர். இரண்டாமவர் இந்தக் கதையின் ஆ(ச்)சிரியர். பிறந்த ஊரான மெலட்டூர் அடைமொழியாக வைத்து மெலட்டூர் இரா. நடராஜன் என்று அறியப்படுகிறார். 

இவரது பிளாகில் >>>>> http://mrnatarajan.blogspot.com/ <<<<< தன்னைப்பற்றி

சொந்த ஊர் : மேலட்டூர். படித்த பள்ளிகள். : அரசினர் உயர் நிலைப் பள்ளி, மெலட்டூர்; தூய பேதுரு உயர்நிலைப்பள்ளி, தஞ்சாவூர். கல்லூரி, புஷ்பம் கல்லூரி, பூண்டி; வேலை பார்த்த ஊர்கள் மும்பை, குவாஹாட்டி, சென்னை என்று அறிமுகம் செய்துகொள்கிறார்.

இவர் ஒரு பேங்க் ஆபீசர்.

ஒரு சிறுகதை தொகுப்பை  சில ரகசியங்கள் என்ற பெயரில் freetamilebooks.com தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் 43 கதைகள் உள்ளன. அந்தப் புத்தகத்திற்கு பாக்கியம் ராமசாமி எழுதியஅணிந்துரை இக்கட்டுரையின் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ளது.

இவரது கதைகள் கல்கி, விகடன், வாரமலர் போன்ற பத்திரிக்கைகளிலும் வெளியாகி உள்ளன.

தருமியாக

இந்தக் கதை =====>சிறுகதைகள்.காம்<===== தளத்தில் இருந்து பெறப்பட்டது. நிலாச்சாரல் தளத்தில் 2007 ஆம் ஆண்டு வெளியான கதை. 

தருமி 2007

 கதையாசிரியர்: மெலட்டூர் இரா.நடராஜன்

பேங்க் ஆஃப் டுபாகூர் வங்கியின் சென்னைக் கிளை. நோடீஸ் போர்டில் போட்டிருக்கும் சர்குலரை ஒருவர் சத்தமாக படிக்கிறார். “நம் வங்கி அலுவலர்க்கோர் நற்செய்தி. நம் சேர்மனுக்கு வெகுநாட்களாக ஒரு சந்தேகம் நிலவி வருகிறது. அதை நல்ல ஆபீஸ் நோட் வாயிலாக தீர்த்து வைப்பவருக்கு ஆயிரம் டாலர் பரிசாக அளிக்கப்படும்.” 

தருமி அங்கு வருகிறான். “ஏம்பா? பரிசுத் தொகை எவ்வளவு?” 

“ஆயிரம் டாலர்.”

தருமி தனிமையில் புலம்புகிறான். “ஐய்யோ ஆயிரம் டாலராச்சே! ஆயிரம் டாலராச்சே!! எனக்கு மட்டும் அந்தப் பரிசு கிடைச்சிட்டா முதல்ல பையன் இஞ்சினீரிங் காலேஜ் ஃபீஸ் கட்டிடுவேன். அப்பறம் மிச்சம் இருக்கிற பணத்தில… கிரெடிட் கார்டு ட்யூஸ் கட்டிடலாம். ஐய்யோ… அடுத்தவன் எவனாது இதை கேட்டு நோட்டு போடறதுக்கு முன்னாடி நான் போடணுமே… இந்த சமயம் பார்த்து நோட்டு போட ஒரு ஐடியாவும் வரமாட்டேங்கிறதே. என்ன செய்வேன்? யாரைப் போய்க் கேப்பேன்?” 

சொக்கன் ஞாபகம் வருகிறது. “சொக்கா.. உன்னை விட்டா வேறு யாரு இருக்கா? ப்ளீஸ் ஹெல்ப் மீ.” 

சொக்கன் வருகிறார். “வங்கி அதிகாரியே” 

“யாருய்யா நீ?” 

“நான் யார் என்பது இருக்கட்டும். உமக்கு மட்டும் அந்த நோட் கிடைத்துவிட்டால்…” 

“ஆஹா அது மட்டும் கிடைச்சிடுச்சுன்னா என்னோட முக்கியமான பிரச்சனை ஒண்ணு தீர்ந்துடும்.! அட நீயும் அறிவிப்பைக் கேட்டாச்சா!! போச்சு. எல்லாம் போயே போச்சு. போயிந்தே. ஹோகயா. இட்ஸ் கான்.” 

“எனக்கு வேண்டாம். நீயே எடுத்துக் கொள்.” 

“என்னது. உன் நோட்டை நான்.. நான்.. எடுத்துகறதா? இங்கப்பாரு நான் பார்க்கறதுக்கு சாதாரணமாக இருக்கலாம். அஞ்சு வருஷத்துல ரெண்டு பிரமோஷன் வாங்கிருக்கேன்.” 

“எங்கே, என் திறமையின் மீது உமக்கு சந்தேகம் இருந்தால் சோதித்துப் பாரேன்? உனக்குத் திறமையிருந்தால். கேள்விகளை நீ கேட்கிறாயா? இல்லை, நான் கேட்கட்டுமா?” 

“ம்ஹும். எனக்கு கேள்வி கேட்டுத்தான் பழக்கம். தட்ஸ் ஆல்.” 

“எங்கே, கேள்விகளைத் தொடங்கு” 

பிரிக்க முடியாதது என்னவோ? நாமும் நம் கோரிக்கைகளும் 

பிரிந்தே இருப்பது? யூனியனும் மேனேஜ்மென்டும் 

சேரக்கூடாதது? பிரமோஷனும் டிரான்ஸ்பரும் 

சேர்ந்தே இருப்பது? ஏடிஎம்மும் டெபிட்கார்டும் 

சொல்லக்கூடாதது? டேக் ஹோம் பே 

சொல்லக்கூடியது? டெல்லர் டோக்கன் நம்பர் 

பார்க்க முடியாதது? சர்வீஸ் ஃபைல் 

பார்த்து ரசிப்பது? சம்பள பில் 

சம்பளம் என்பது? மாதம் ஒரு முறை வருவது 

டூர் என்பது? அடிக்கடி வருவது 

அதிரடி சர்வீசுக்கு? சானியா மிர்சா  

அபார சிக்ஸுக்கு? மஹேந்திர டோனி 

சூப்பர் ஜோடிக்கு? சூர்யா-ஜோதிகா 

சண்டை பார்ட்டிக்கு? சாப்பல் – கங்கூலி 

லோக்கல் டூருக்கு? நீ 

ஃபாரின் டூருக்கு? நான் 

“அப்பா!! ஆள விடு. எனக்கு தெரிஞ்சது இவ்வளவுதான். நீர்தான் சகலகலாவல்லவர். நீங்கள் எழுதிய நோட்டை கொடுங்கள். அதை அப்படியே பார்வெர்டு செய்கிறேன்.” 

கொஞ்ச தூரம் சென்றுவிட்டு திரும்பி வந்து. “அது சரி.. பரிசு கொடுத்தால் வாங்கிக்கறேன்.மெமோ, சஸ்பென்டு மாதிரி வேறு எதாவது கொடுத்தால்?” 

“என்னிடம் வா. நான் பார்த்துக் கொள்கிறேன். ” 

“என்ன, சஸ்பென்ஷன் ஆர்டரை படிச்சு காட்டவா?” 

சொக்கன் சிரிக்கிறான். “கவலைப்படாதே சகோதரா. யூ வில் கெட் த ரிவார்டு. வெற்றி நிச்சயம்.” 

“என்ன சிரிப்பய்யா, உன் சிரிப்பு! சூர்யா மாதிரி சிரிப்பு!!” 

சேர்மன் செயலகத்தில் உள்ள கான்ஃபரன்ஸ் ஹாலில் தருமி. சேர்மன் கையில் தருமி எழுதிய நோட் இருக்கிறது. “மிஸ்டர் தர்மராஜன் அலியாஸ் தருமி அவர்களே! நீங்கள்தானே இந்த நோட்டை பார்வெர்டு செய்தது.” 

“ஆமாம். உங்கள் ஐயப்பாட்டை நீக்கும் அந்த அற்புத நோட்டை நானேதான் எழுதினேன்”. 

“எங்கே, நீரே படித்துக் காட்டும்.” 

தருமி படிக்க படிக்க சேர்மன் முகம் பிரகாசம் அடைகிறது. “ஆஹா! அம்சமான ஆபீஸ் நோட்டு!! ஆழமான கருத்துக்கள்!!! என் டவுட்டை க்ளியர் செய்துவிட்ட சூப்பர் நோட்டு!!!” 

தன் செகரெட்ரியை அழைத்து பரிசை கொண்டுவரச் சொல்லுகிறார். அப்போது ஜி.எம். என். கீரன் எழுந்திருக்கிறார். “சேர்மன் அவர்களே! ப்ளீஸ் வெயிட் அந்த நோட்டில் பிழை உள்ளது.” 

“யூ மீன் மிஸ்டேக்?” சேர்மன் திடுக்கிடுகிறார். ஆனால் தருமியோ… 

“பிழை இருந்தாலென்ன? எவ்வளவு பிழையோ அவ்வளவு பரிசுத் தொகையை குறைத்துக் கொடுங்களேன்.” 

ஆனால் அதற்கு என்.கீரன், “மிஸ்டர் தர்மராஜன்! நீர்தானே இந்த நோட்டை எழுதியது? ” 

“எஸ். நானேதான் எழுதினேன். பின்னே ஆபீஸ் கான்டீன்ல யாராவது எழுதிக்கொடுத்ததை கொண்டு வந்து கொடுப்பேனா? நானே… நானேதான் எழுதினேன்.” 

“அப்படியானால் அந்த நோட்டில் எழுதியுள்ளதை விளக்கி விட்டு பரிசை பெற்றுச் செல்லுங்களேன்.” 

“சேர்மனுக்கே விளங்கி விட்டது. நீங்க யாரு குறுக்கே?” 

“நான் இந்த டூபாகூர் வங்கியின் தணிக்கை பிரிவின் தலைவர். என். கீரன். ஜெனரல் மேனேஜர். எமது சேர்மன் மிக சரியான ஆபீஸ் நோட்டுக்கு பரிசளிக்கிறார் என்றால் அதை பார்த்து சந்தோஷப்படும் முதல் ஆள் நான்தான். அதே நேரத்தில் பிழையுள்ள நோட்டுக்கு பரிசளிக்கிறார் என்றால் அதற்கு வருத்தப்படுபவனும் நான்தான்.” 

“ஹோ. இங்க எல்லாமே நீங்கதானா. ஒரு சில பேர், ஏகப்பட்ட பைல்களை பார்த்து அதையெல்லாம் ரெஃபர் செஞ்சு நோட்டு போட்டு பேர் வாங்குவாங்க. ஒரு சில பேர், போட்ட நோட்டுல எங்கடா குற்றம் இருக்குன்ணு தேடி கண்டு பிடிச்சு பேர் வாங்கிட்டு போவாங்க. இதுல நீங்க எந்த வகையை சார்ந்தவர் என்று உங்களுக்கே புரியும். ஒண்ணு மட்டும் நிச்சயமய்யா. உங்கள மாதிரி ரெண்டு பேர்.. இல்லை நீங்க ஒருத்தரே போதும். இந்த பேங்க் உருப்பட்டாப்பலத்தான். சேர்மனிடம் சொல்லிவிடுங்கள். எனக்கு பரிசு வேண்டாம். நான் வருகிறேன்.” 

தருமி வேகமாக போக என். கீரன் அழைக்கிறார். “தருமி அவர்களே!” அழைப்பை நிராகரித்து தருமி இன்னும் வேகமாக ஓட, கான்ஃபரன்ஸ் ஹாலில் சிரிப்பலை. 

சேர்மன் மிகுந்த சோகத்துடன் அமர்கிறார். “நல்லவேளை! என்னை காப்பாற்றினீர்கள் ஜி.எம். அவர்களே!! இல்லையென்றால் என் மீது விஜிலென்ஸ் என்கொயரி வந்திருக்கும். தாங்க்ஸ். 

அங்கே தருமி புலம்பிக் கொண்டிருக்கிறான். “எனக்கு வேணும். இன்னமும் வேணும். ஐயையோ யாரோ இன்னமும் தொரத்தர மாதிரியே இருக்கே. இனிமே நான் எந்த நோட் போட்டாலும் ஏம்பா இது உன் நோட்டா? இல்லே, ஆபீஸ் கான்டீனுக்கு வந்த யாராவது எழுதிக் கொடுத்ததான்னு கேப்பாங்களே? இதுக்குத்தான்… இதுக்குத்தான் கண்டவனை நம்பி காரியத்துல எறங்கப்படாதுங்கறது. மாட்டிக்கிட்டல்ல. நல்லா அவஸ்த படு. ஏன்டா… ஏன்டா… ஏன்? ஐயோ இப்படி தனியா பொலம்பற அளவுக்கு கொண்டுவிட்டானே. சொக்கா. அவனை எதுக்குக் கூப்பிடணும். அவனை நம்பாதே. அவன் வரமாட்டான். அவன் இல்லை.” 

சொக்கன் வருகிறார். “தருமி. பரிசு கிடைத்ததா?” 

“வாய்யா. எல்லாம் கிடைச்சுது. நல்லவேளை டிஸ்மிஸ் செய்யல. நான் உனக்கு என்னய்யா துரோகம் செஞ்சேன்.” 

“வங்கி அதிகாரியே கான்ஃபரன்ஸ் ஹாலில் என்ன நடந்தது?” 

“ம்… இதெல்லாம் நல்லா ஏத்த எறக்கமா பேசு. நோட் போடும் போது கோட்டை விட்டுடு.” 

“என்ன நடந்தது?” 

“உன் நோட்டில் குற்றம் என்று சொல்லிட்டாங்கையா.” 

“என் நோட்டில் குற்றமா. சொன்னவன் எவன்?” 

“உன் பாட்டன். அங்க ஒருத்தன் இருக்கான். எல்லா சர்க்குலரும் அவருக்கு அத்துபடியாம்.” 

கான்ஃபரன்ஸ் ஹாலுக்குள் தருமியும் சொக்கனும் வேகமாய் வருகிறார்கள். சொக்கன் நெருப்பாய் கக்குகிறார். “இச்சபையில் என் நோட்டை குற்றம் சொன்னவன் எவன்?” 

சேர்மன் எழுந்து நின்று, “என். கீரன். அவன் இவன் என்ற ஏகவசனம் வேண்டாம். ஹவ் சம் டீசன்ஸ்சி. மரியாதையோடு கேள்வி கேட்டால் தக்க பதில் கிடைக்கும்.” 

“யார் இந்த கிழவன்?” 

“பேங்க் ஆஃப் டுபாகூரின் தலைமை தணிக்கையாளர்! என்.கீரன்!! ஜி.எம். மிகுந்த அனுபவம் உள்ளவர்!!” 

“அதிகம் அனுபவம் இருந்துவிட்டால் அனைத்தும் அறிவோம் என்ற அகம்பாவமோ?” 

கீரன் எழுந்து, “முதலில் நீங்கள் எழுதிய நோட்டை இன்னொருவர் மூலமாக அனுப்பியதின் காரணம்?” 

“அது நடந்து முடிந்த கதை. தொடங்கிய பிரச்சனைக்கு வாரும். எங்கு குற்றம் கண்டீர்? ஸ்பெல்லிங்கிலா? அல்லது ஃபார்மெட்டிலா?” 

“ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருந்தாலும் அவை மன்னிக்கப்படலாம். காரணம் எங்களிடம் எம்.எஸ். வேர்ட் இருக்கிறது. ஸ்பெல் செக் போட்டுக் கொள்வோம். ஆனால் பொருளில்தான் குற்றம் இருக்கிறது.” 

“கூறும். கூறிப் பாரும்.” 

“எங்கே நீங்கள் எழுதிய நோட்டை சொல்லும்.” 

நோட்டைப் படிக்கிறார். “போதும். போர் அடிக்கிறது. சுருக்கமாக சொல்லும். இதனால் தாங்கள் சொல்லவரும் கருத்து…” 

“புரியவில்லை? இந்தியாவில் உள்ள மற்ற வங்கிகளில் என்ன Work Culture இருக்கிறதோ அதேதான் நம் வங்கி கிளைகளிலும் உள்ளது என்பதுதான் என் வாதம்.” 

“ஒருக்காலும் கிடையாது. இதோ. எங்கள் வங்கி சர்குலர்களின் தொகுப்பு சி.டி இருக்கிறது. இதில் எங்குமே நீங்கள் சொன்ன கல்சர் குறிப்பிடப்படவில்லை. சர்குலர்களில் சொல்லப்படாத எந்த விஷயத்தையும் நாங்கள் ஏற்றுக் கொள்ளமாட்டோம்.” 

“நிச்சயமாக?” 

“சத்தியமாக.” 

“நீ தினம் தினம் பார்க்கும் இன்ஸ்பெக்ஷன் மான்யுவல் மீது ஆணையாக..” 

“அதென்ன ஜுஜுபி மேட்டர்? நம் எல்லோரும் மறை பொருளாக மதிக்கும் பேங்கிங் ரெகுலேஷன் ஆக்ட் மீது ஆணையாக சொல்கிறேன். அக்ரிகல்சர். ஹார்ட்டிகல்சர்.. இது மாதிரி சில கல்சர்கள் இருக்கிறதே தவிர நீ சொன்ன கல்சர் ஒருக்காலும் இங்கு இருக்க முடியாது என்பதே என் கருத்து.” 

“மிஸ்டர் என்.கீரன். நன்றாக என்னை பாரும். நான் யார் தெரிகிறதா?” 

சொக்கன் மெதுவாக எம்.ஜி.ஆர். ஸ்டைலில் மீசையை பிய்க்கிறார். என்.கீரன் திடுக்கிடுகிறார். 

“ஆ! நீங்களே ரிசர்வ் வங்கியின் கவர்னர் ஆகுக. உங்கள் அதிகாரத்தினால் எனது வேலைபோனாலும், பென்ஷன் கொடுக்காமல் போனாலும் குற்றம் குற்றமே. குற்றம் குற்றமே.” 

“கீரா. தும் ஹோகயா.” 

கீரன் கைகளை உயரே தூக்கி, கண்கள் மூடி….

“நான் வாங்கும் சம்பளம் நாலு நாளைக்குத்தான் போதும்

நாய்ப் பாடு படுவேனே தவிர உம்மைப் போல்

கான்டினில் நோட் டிராஃட் எழுத மாட்டேன்.” 

சொக்கன் என்.கீரனை எரித்துவிடுகிறான். 

சேர்மன் கூவம் நதிக்கரையோரம் ஓடிவருகிறார். “கவர்னர் அவர்களே! என்ன செய்துவிட்டீர்கள்? நீங்கள் போட்ட நோட் என்பது என் புத்திக்கு எட்டாமல் போனது தவறுதான். அவரை மன்னித்துவிடுங்கள்.” 

அப்போது சொக்கன் குரல் கேட்கிறது. “சேர்மன் அவர்களே! கவலை வேண்டாம். உங்கள் வங்கியில் ஒரு உயர்மட்ட சர்ப்ரைஸ் டெஸ்ட் செய்யவே யாம் நடத்திய நாடகம் இது. மிஸ்டர் என். கீரரை கூவத்தில் போட்டால், என்னால் கூட காப்பாற்ற முடியாத அளவுக்கு நாறிப் போய்விடுவார் என்பதால் அவரை கரையிலேயே விட்டிருக்கிறேன். இன்றைக்கு சனிக்கிழமை. ஆபீஸ் டைம் முடிந்துவிட்டது. நாளை ஹாலிடே என்னால் ஒன்றும் செய்ய முடியாது. திங்கட்கிழமை வழக்கம் போல் என். கீரன் ஆபீஸ் வருவார். அவருக்கு ஒன்னரை நாள் டூர் பேட்டா கொடுத்துவிடு. நான் வரட்டா.” 

பின்னுரை. 

பகடி நன்றாக இருக்கிறது. பேங்க் ஆஃபீசர் என்பதால் பேங்க் நடவடிக்கைகள் அடிப்படையில் கதையை செலுத்தியிருக்கிறார். அந்த வகையில் கதை சிறப்பாகச் செல்கிறது.  அதனால் ஏற்பட்ட பிழைகள் இரண்டு. 

கருப்பொருள் கிடைக்கவில்லை. Work culture என்பது சரியான கரு அல்ல. பரிசுக்குரிய ஆய்தல் (doubt) கேள்வி வெளிப்படையாக சொல்ல முடியவில்லை. தருமியும் சொக்கனும் எதற்கு எந்த முடிவை எப்படி எழுதித் தந்தார்கள் என்பது சொல்லப்படவில்லை. நோட் எழுதினர் என்பது மட்டுமே தெரிய வருகிறது. நோட் செய்யுளுக்கு இணையாகாது. 

இந்திய வங்கி டாலரில் பரிசு  கொடுக்கமுடியாது. ஆயிரம் பொன் ஆயிரம் டாலருக்கு ஈடாகாது. 

மொத்தத்தில் நல்ல பகடி  நல்ல சிரிப்புக் கதை.

அணிந்துரை

நான் வியந்த பல எழுத்தாளர்களில் மெலட்டூர் நடராஜனும் ஒருவர். இப்பவும் காலேஜ் படித்துக்கொண்டிக்கும் ஜாலி மாணவன் போன்ற தோற்றம் கொண்டவர். ஆனால் அவரது நட்பு வட்டம், இலக்கிய வட்டம், தத்துவ வட்டம் ரொம்ப பெரியது. அவர் எங்கள் ‘அக்கறை’ கூட்டத்தின் முக்கிய புள்ளிகளில் ஒருவர். சென்னைவாசியாக இருந்தவரையில் தவறாது ‘அக்கறை’ கூட்டத்தில் கலந்து கொள்வார். தூத்துக்குடியில் தற்போது வேலை நிமித்தமாக வசித்து வந்தாலும் அவ்வப்போது திடீர் தீடீரென ‘அக்கறையுடன்’ தலை காட்டுவார். தகவல் களஞ்சியமாக, அனுபவப் பெட்டகமாகப் பல நாட்டு நடப்பு விஷயங்களைக் கூறுவார். அந்தச் செய்திகளைப் பத்திரிகையில் படித்துவிட முடியாது. பின்னணிகளும் inside information களும் சுவையான திகைப்புகளாக மலரும்.

அஸ்ஸாமில் போலிங் பூத் ஆபீசராக இருந்த போது, நடந்த திகில் அனுபவங்களை சொல்லி, எப்படி நம் மின்னனு வாக்கு இயந்திரம் மிக சிறப்பானது என்று விளக்கி சொல்வார். படித்தது, பார்த்தது, கேட்டது என்று அவரின் பேச்சு ஒரு பத்திரிக்கையாளனின் உணர்வுகளை பிரதிபலிப்பதாக இருக்கும்

இந்தத் தொகுதியிலுள்ள கதைகள் அத்தனையையுமே தமது அனுபவங்களால் பின்னியிருக்கிறார். எல்லாக் கதைகளிலுமே அவரது சொடுக்கு நடையைக் காணலாம். விறுவிறுப்பும் சிறுகதைக் களத்துக்கான கச்சிதமும் சகல கதைகளிலும் இருப்பதால் தனியன்கள் சாத்தியமில்லை. ஆழ்ந்த தத்துவங்களை அனாயாசமாக மனத்தில் பதிய வைக்கிறார்.

சுஜாதாவை வழிபட்டு வழிபட்டு அரை சுஜாதாவாக ஆகிவிட்டார். பத்திரிகாசிரியர்கள் வழி வகுத்துத் தந்தால் குறைந்த பட்சம் ‘முக்கால் சுஜாதாவாக முற்றுவதற்கு’ வாய்ப்பு உண்டு.

என்றைக்கும் உங்கள் பிரியத்துக்கு உரிய

பாக்கியம் ராமசாமி

இவருடைய இரண்டு புத்தகங்கள். இதைத்தவிர லலிதா சஹஸ்ரநாமம் உரையுடன் வெளியிட்டுள்ளார். 





23 கருத்துகள்:

  1. ஒரு திருத்தம் அனுப்பப்பட்டுள்ளது. மெயில் பார்க்கவும்.

    பதிலளிநீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை. ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்காக தன் கிரிகெட் ஊதியத்தை வழங்கிய வீரரை போற்றுவோம்.

    "அறம் செயப் பழகு" பிரகாஷ் பழனிஅவர்களின் நல்ல திறமையும், உழைப்பும், அவர் பள்ளி குழந்தைகளுக்காக செய்யும் செயல்களும் போற்றத்தக்கவை. இன்றைய இரு செயல் வீரர்களுக்கும் பாராட்டுக்கள். பகிர்ந்தமைக்கு மனம் நிறைந்த நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    இன்றைய கதை பகிர்வும் அருமை. பேங்க் சம்பந்தபட்ட வார்த்தைகளுடன் நல்ல நகைச்சுவை கதையாக இருந்தது. ஆசிரியர் திறம்பட எழுதியுள்ளார். அவரே ஒரு பாங்க் ஆபீசராக பணியில் இருந்தமையால் தங்கு தடையின்றி பேங்க் சம்பத்தப்பட்ட வார்த்தைகள் வந்திருக்கின்றன.

    /மிஸ்டர் என். கீரரை கூவத்தில் போட்டால், என்னால் கூட காப்பாற்ற முடியாத அளவுக்கு நாறிப் போய்விடுவார் என்பதால் அவரை கரையிலேயே விட்டிருக்கிறேன். /

    கதையில் இது மாதிரியாக வந்த பிற நகைச்சுவை வரிகளும் சிரிப்பை உண்டாக்கியது.

    முன்னுரை பின்னுரைகளும் சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களால் கதைக்கு சிறப்பை தருகின்றன.

    எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி அவர்களின் அணிந்துரையும் சிறப்பாக உள்ளது. இவரது அப்புசாமி, சீதா பாட்டி கதைகளை நிறைய படித்துள்ளேன். சிறந்த எழுத்தாளர்.

    இப்போது இணைத்துள்ள பகுதிகளையும் படிக்கிறேன். இன்றைய கதை பகிர்வுக்கு சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்

    பதிலளிநீக்கு
  5. பிரகாஷ் பழனி. பெற்றோரை நன்றாக கவனிப்பதோடு, தான் படித்த பள்ளிக்கும் செய்திருக்கிறார். பிரகாசமான மனசு...

    பதிலளிநீக்கு
  6. பிரகாஷ் பழனி அவர்களுக்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  7. பிரகாஷ் பழனி அவர்கள் நீடூழி வாழட்டும்.

    பதிலளிநீக்கு
  8. போற்றுதலுக்கு உரியவர்கள். போற்றுவோம்

    பதிலளிநீக்கு
  9. ஆப்கானிஸ்ரான் நில நடுக்கத்துக்கு உதவியவரை வாழ்த்துவோம்.

    பிரகாஷ் பழனி அவர்களின் சேவை மிகுந்த நன்மை தருவது போற்றுவோம்.

    தருமி பாணியில் கதை சிரிக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
  10. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  11. பிரகாஷ் பழனி போன்ற மனித நேயமும் பெற்றோரிடம் பாசமும் கொண்டவர்கள் நாட்டில் நிறயட்டும். தன் சம்பளத்தைக் கொடுத்த கிரிக்கெட் வீரர் பாராட்டுக்குரியவர்.

    பதிலளிநீக்கு
  12. எனக்கு இந்தக் கதை ஓர் நெருடலான கருவோடு இருப்பதாய்த் தோன்றூகிறது. அப்படியெல்லாம் மனதைக் கவரவும் இல்லை. ஒருக்கால் வங்கி நடைமுற தெரிஞ்சிருந்தால் புரியுமோ என்னமோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக் கதை கதை அல்ல. திருவிளையாடல் தருமிக்கு பொற்கிழி கொடுத்த படலம். திரைப்படத்தில் நாகேஷ் பாத்திரத்தை ஒட்டி அதே போன்ற வசனங்களுடன் பகடியாக எழுதப்பட்டது.
      Jayakumar

      நீக்கு
  13. வந்தவர்களுக்கும் வந்து கருத்து கூறியவர்களுக்கும் நன்றி.

    இன்று ஏனோ ஜீ வீ சார், நெல்லை சார், கீதா ரங்கன், கோமதி அரசு அம்மா, ஆகியோரை காணவில்லை. அவர்களுக்கும் நன்றியைக் கூறிக்கொள்கிறேன்.
    Jayakumar​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை முதல் கொஞ்சம் வேலை, உறவினர் வருகை அதனால் வர முடியவில்லை.

      நீக்கு
  14. பாஸிடிவ் செய்திகள் அருமை.
    "அறம் செயப்பழகு" சிறு வயது முதல் தன் உழைப்பால் முன்னேறி . தாய் தந்தையரை நன் கு கவனித்து கொண்டு ஏழை மாணவர்களையும் முன்னேற பாடுபடும் பிரகாஷ் பழனி அவர்களை வாழ்த்தி பாராட்டி மகிழ்கிறேன்.

    பதிலளிநீக்கு
  15. “அப்பா!! ஆள விடு. எனக்கு தெரிஞ்சது இவ்வளவுதான். நீர்தான் சகலகலாவல்லவர். நீங்கள் எழுதிய நோட்டை கொடுங்கள். அதை அப்படியே பார்வெர்டு செய்கிறேன்.”//

    பார்வெர்ட் செய்யும் காலம். காலத்துக்கு ஏற்றார் போல நகைச்சுவை


    //ஆ! நீங்களே ரிசர்வ் வங்கியின் கவர்னர் ஆகுக. உங்கள் அதிகாரத்தினால் எனது வேலைபோனாலும், பென்ஷன் கொடுக்காமல் போனாலும் குற்றம் குற்றமே. குற்றம் குற்றமே.” //

    ரசித்த வரிகள்.

    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  16. திருவிளையாடல் படத்திற்கான அன்பர் ஏ.பி. நாகராஜனின் வசனப் புத்தகம் கையில் இருக்கவே கதாசிரியர் வெகு சுலபமாகப் போயிற்று. ஜெஸி ஸார்! மெலட்டூர் நைட்ரஜனின்
    வேலை சுலபமாகப் போயிற்று.

    இந்த மாதிரி ஈ.அ.கா. இல்லாமல் கதாசிரியரின் சொந்தக் கற்பனைக் கதை ஒன்றை இதே பகுதியில் போடுங்கள். ஒரிஜனல் மெலட்டூராரை ரசிக்கலாம்.

    எதற்குச் சொல்கிறேன் என்றால் மெலட்டூர் மண் ராசி அப்படி.

    மெலட்டூர் மேளா -- பற்றி கேள்விப் பட்டிருப்பர்கள் பாக்யவான்கள்.

    பதிலளிநீக்கு
  17. ** மெலட்டூர் நடராஜன்

    தட்டச்சுப் பிழை. மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
  18. பிரகாஷ் பழனி - செய்தி வாவ் போட வைத்தது. வாழ்த்துகள்!

    ரஷித் கானையும் வாழ்த்துவோம்

    இவர் குறித்து வேறு ஒரு செய்தியும் பார்த்த நினைவு.

    கீதா

    பதிலளிநீக்கு
  19. ஜெ கே அண்ணா, இந்தக் கதை நல்ல பகடிதான். அதுவும் மிகப் பிராபல்யமான திருவிளையாடல் படத்தில் குறிப்பிட்ட இந்த ஸீன்.

    முதலில் சிவன், தருமிக்கான கேள்வி பதில்கள் புரிந்தது ரசித்தேன்....ஆனால்அதன் பின் என்னால் ஆழ்ந்து வாசிக்க முடியவில்லை ஏனென்றால் எனக்கு இந்த பேங்க் நடவடிக்கைகள் சுத்தமா தெரியாது.

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!