செவ்வாய், 3 அக்டோபர், 2023

நெடுங்கதை - ரயிலோடும் வீதி -5/5 - மூலத்திருநாள் பரசுராம்

 ரயிலோடும் வீதி- 5

மூலத் திருநாள் பரசுராம்


முந்தைய பகுதிகள்  :     2  3  4


ஞாயிற்றுக்கிழமை. இராணுவ வண்டியில் வேலூரிலிருந்து இராணிப்பேட்டைக்கு வந்துகொண்டிருந்தான் முரளி.  இராணுவ உடை தரித்திருந்தான். வண்டியை ஓட்டிவந்தவர் ஒரு சீக்கிய சிப்பாய்.

ஆற்காட்டையும் இராணிப்பேட்டையையும் பிரித்துக்கொண்டு பாலாறு ஓடியது. ஒரு மைல் அகலமான ஆறு.  பருவமழைக்காலம் தவிர மற்றக் காலங்களில் ஆழம் இருக்காது. தரைப்பாலத்தில் முழங்கால் அளவுதான் 
இருக்கும். ஆகவே வண்டிகள் அலட்சியமாகப் பயணிக்கும். 

ஆனால் முரளியின் வண்டி அவ்வளவு எளிதாகத் தரைப்பாலத்தைக் கடந்துவிட முடியவில்லை. பாலாறு இராணிப்பேட்டையின் எல்லையைத் தொடும் இடத்தில் அமைதியான நந்தவனத்திற்குள் ‘குமாரசாமி மடம்’ என்ற பஜனை மடம் இருந்தது. முக்கியத் திருவிழாச் சமயங்களில் அங்கு ஆன்மிகச் சொற்பொழிவுகள் நடக்கும். பெரும்பாலும் ஐம்பது வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் பெண்களும்தான் வருவார்கள்.

மடத்திற்கு மேலே அண்ணாந்தால், மஞ்சள் நிறத்தில் உயரமான புகைபோக்கியின் வழியாகப் பாரி கம்பெனியின் கந்தகப் புகை மஞ்சள் நிறத்தில் மூக்கைத் துளைப்பதாக இருக்கும். இன்றும் அது முரளியின் நாசியை வந்து அடைத்தது. கைகுட்டையால் மூக்கை  அழுத்திக்கொண்டான்.

ஆனால் இன்று அவ்விடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களும் இளைஞிகளும் கூடியிருந்தது முரளிக்கு வியப்பாக இருந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான ஆடை அணிந்திருந்ததால், இது ஏதேனும் ஒரு தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டமாகத் தெரியவில்லை. யார் கையிலும் பதாகைகள் இல்லை.  
கோரிக்கை என்னவென்று தெரியவில்லை. வண்டியை 
நிறுத்திவிட்டு இருவரும் இறங்கினார்கள். சிப்பாயிடம், “க்யா ஹை பூச்சியே” (என்னவென்று கேளுங்கள்) என்றான் இந்தியில்.

இராணுவ வண்டி தங்களைப் பார்த்தவுடன் நின்றதையும், அதிலிருந்து அதிகாரி போன்ற ஒருவர் இறங்கி நின்றதையும், ஒரு சிப்பாய் தங்களை நோக்கி வருவதையும் கண்ட கூட்டம், புத்துணர்ச்சி பெற்றதாக, “வேண்டாம் வேண்டாம் எங்களுக்கு ரயில் வேண்டாம்” என்று ஒரே குரலில் 
முழங்கியது. சிப்பாய் சற்றே பின்வாங்கி முரளியைப் பார்த்தார். 

மேலே போகவேண்டாம் என்பதுபோல் முரளி கையசைத்தான். வண்டியில் ஏறிக்கொண்டான். சிப்பாய் வண்டியைக் கிளப்பினார். இராணுவ வண்டிக்கே உரிய பெருத்த ஓசையுடன் வண்டி புறப்பட்டது.

அவ்வளவுதான், கூட்டம் வண்டியை முன்னேறவிடாமல் மறித்துக்கொண்டது. வேறு வழியின்றி வண்டி நின்றது.  முரளி மட்டும் இறங்கினான்.

கூட்டம் இப்போது ஒரே குரலில் “தரமாட்டோம், தரமாட்டோம், ரயிலுக்காக எங்கள் நிலங்களைத் தரமாட்டோம்” என்று முழங்கியது.

அவனுக்கு ஏதோ புரிந்தமாதிரி இருந்தது. தன் மேலதிகாரி அதிகாரத் தோரணையில் சொன்ன விஷயம் சரியாக நடக்கிறதே!

“நீங்கள் எல்லாம் யார்? எதற்காக இங்கே கூடியிருக்கிறீர்கள்?”  என்றான் முரளி.

தலைவன் போல் இருந்த சந்திரன் முன்னால் வந்து “வணக்கம் சார்!” என்றான்.

அவனிடம் அறைவாங்கி, அதனால் அவமானமும் வெறுப்பும் கொண்டவனாக நின்றிருந்த சஞ்சீவியும், ஜேம்ஸ் துரை சொன்னதற்காக இப்போது சந்திரனுடன் முன்னணியில் இருந்ததால், அவனும் “வணக்கம் சார்!” என்றான்.

“அனைவருக்கும் வணக்கம். இப்போது சொல்லுங்கள், இது இராணுவ வண்டி என்று தெரிந்தும் வழிமறிப்பது சரியா?  யார் நீங்கள்?” என்று அதட்டலாகச் சொன்னான் முரளி.  கூட்டம் ஒரு நிமிடம் அமைதியானது. தங்களை அடக்க இராணுவத்தையே அனுப்பியிருக்கிறார்களோ என்று 
எல்லோரும் பயந்தார்கள்.

“வழிவிடுங்கள்” என்று முரளியின் முன்னால் வந்து நின்றாள் கவிதா.

“வணக்கம் சார்!” என்றவள், “எங்கள் ஊருக்கு ரயில் விடப்போகிறார்கள் என்று சந்தோஷமாக இருந்தோம். ஆனால் எங்கள் நிலங்களையும் வீடுகளையும் பிடுங்கிக்கொண்டு, இடித்துத் தரைமட்டமாக்கிவிட்டு, எங்களை நூறு மைல் தூரத்துக்கு அனுப்பிவிடுவார்களாமே, அப்படிப்பட்ட ரயில் எங்களுக்கு வேண்டாம்! அதற்காகத்தான் இங்கே வந்திருக்கிறோம்” என்றாள் ஒரே மூச்சில்.

கவிதாவா இப்படிக் கோர்வையாகப் பேசுகிறாள்? அதுவும் கொஞ்சமும் பயமில்லாமல்? கவிதா மீது அவ்வப்பொழுது கிருஷ்ணவேணி பொறாமைப்படுவது நியாயமே என்று பட்டது சந்திரனுக்கு. அவள் கழுத்தையும் பாதங்களையும் பார்த்த சஞ்சீவிக்கோ அவள் இன்னும் மணமாகாதவள் என்று தெரிந்ததும் மனதுக்குள் ஒரு ‘இது’ பொங்கியது. 
சந்திரனைப் பார்க்கவரும்போது கவிதாவைப் பார்த்ததுண்டு. 

ஆனால் அப்பொழுதெல்லாம் அவளைப் பற்றி எந்த அபிப்பிராயமும் அவனுக்குள் உருவாகியதில்லை.  சந்திரனை விலாவில் இடித்தான். “நம்ப அடுத்தவீட்டுப் பொண்ணுதான்” என்று பெருமையாகச் சொன்னான் சந்திரன்.

கவிதா மேலும் பேசினாள்: “ஏன் சார், சீக்கிரம் நம்ப நாடு சுதந்திரம் பெறப்போகுதுன்னு சொல்றாங்களே, அதுவரையில் பொறுக்கக்கூடாதா? மகாத்மா காந்தியை நாங்க பார்த்துப் பேசினா ஒடனே இதை நிறுத்தமாட்டாரா? எங்க ஊருக்கு அடிக்கடி பஸ் வந்து போனாலே போதுமே, ரயில் வேணும்னு யாரு கேட்டாங்க?”

முரளிக்கு விஷயம் இன்னும் தெளிவாகப் புரிந்தது.  வாலாஜாப்பேட்டையில் இருந்து பிஞ்சி வழியாக ரயில்தடம் 
போடுவதுதான் திட்டம். அதை வேறு திசைக்குத் திருப்பிவிட யாரோ திட்டமிட்டு இவர்களைத் தூண்டியிருக்கிறார்கள்.

“இவ்வளவு நல்லாப் பேசறாங்களே, இவங்க பேர் என்ன?”  என்று சந்திரனிடம் கேட்டான். இளம்பெண்ணிடம் நேரடியாகப் பெயரைக் கேட்பது நாகரிகம் இல்லையே!

கிருஷ்ணவேணி இப்போது முன்னால் வந்தாள். “சார் இவதான் கவிதா ! எங்க பிஞ்சி கிராமத்துலயே இவளமாதிரி வாயாடி கெடையாது” என்று வஞ்சப் புகழ்ச்சியாகக் கூறினாள். 

‘அப்படிப்பட்டவ தான் எனக்கு வேணும்’ என்று நினைத்துக்கொண்டான் சஞ்சீவி. பிறகு, இரகசியக் குரலில், “இன்னிக்கு நீ என்னோட வரணும், அம்மா கிட்ட ஒரு விஷயம் நீ தான் சொல்லணும்” என்றான் சந்திரனிடம்.

அதற்குள் முரளி கவிதாவைப் பார்த்தபடி பேசினான்: “நல்லது மேடம்! நீங்கள் சொல்வதுதான் நியாயம். பஸ் போகவேண்டிய இடத்தில் ரயில் போகவேண்டியதில்லை.  வீடு வாசல்களை இடிக்க வேண்டியதும் இல்லை. ஆனால் இதை நீங்கள் மாவட்ட கலெக்டரிடம் தான் சொல்லவேண்டும். மகாத்மாவிடமும் சொல்லலாம். ஆனால் இராணுவத்திற்கும் இதற்கும் சம்பந்தமில்லை” என்று சொல்லிவிட்டு வண்டியில் ஏறிக்கொண்டான். “வழியை விடுங்கள்” என்று அதட்டியதும் கூட்டம் வேகமாகச் சிதறியது. வண்டி நேராகச் சென்று பாரி கம்பெனியின் மெயின்கேட் அருகில் நின்றது.

சந்திரனும் சஞ்சீவியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். “அப்படீன்னா ஜேம்ஸ் தொரை நம்பள எதுக்காக இப்படி சமூகசேவைன்னு இங்க நிக்கவைக்கணும்? கவர்மென்ட் வண்டியோ, மிலிட்டரி வண்டியோ எது வந்தாலும் கோஷம் போடணும்னு ஏன் சொல்லணும்?”

“சரி, எல்லாரும் அவங்கவங்க வீட்டுக்குப் போகலாம்.  நாளைக்கு ஜேம்ஸ் தொரையைப் பாத்துப் பேசி வெவரத்த சாயங்காலம் கேட் மீட்டிங்ல சொல்றேன்” என்று சந்திரன் சொன்னதும் கூட்டம் கலையத் தொடங்கியது.

“என்னய்யா இது, வெட்டியாப் போச்சு இன்னிக்கு! கொழந்த இன்னேரம் அம்மாவக் காணுமேன்னு அழுதுக்கிட்டிருப்பான்” என்று கிருஷ்ணவேணி கணவனின் சைக்கிளில் கிளம்பினாள். யமுனா அவளுடன் ‘டபுள்ஸ்’ ஏறிக்கொண்டாள்.

வண்டியில் இராணுவ உடையில் இருந்தவன் முரளியாக இருக்கலாம் என்று யமுனாவுக்குச் சற்றும் அனுமானமே எழவில்லை. தான் வருவதாக அவன் கடிதம் எழுதவும் இல்லை.

கவிதா நடந்தே வந்திருந்ததால், “அண்ணே, நாம்ப போகலாமா?  வெய்யிலாகுது” என்றாள் சந்திரனைப் பார்த்து.

“ஆமாம்ப்பா, கெளம்பு” என்று சந்திரனோடு முந்திக்கொண்டான் சஞ்சீவி. கவிதாவோடு பேசுவதற்கு இதைவிட நல்ல சந்தர்ப்பம் கிடைக்குமா?

ஆனால் கவிதாவுக்கு சஞ்சீவியைப் பற்றி எதுவும் தெரியாததால் வீடுவரை பேசாமல் மௌனமாகவே இருந்தாள். வேறு வழியின்றி சஞ்சீவியே கேட்டான்,

“எப்படிங்க அவ்ளோ தைரியமா பேசினீங்க அந்த மிலிட்டரிக்காரன் கிட்ட?”

அவன் முகத்தில் இருந்த பூரிப்பு அவளுக்கு மகிழ்ச்சியளித்தாலும், அவனுக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல், “யாருண்ணா இவரு?” என்றாள்.

“இவன் பேரு சஞ்சீவி. நம்ப கம்பெனிலதான் இருக்கான்.  நம்ப தோஸ்து. தொரைக்கு சுருட்டு சுத்தறவன்னு சொன்னா எல்லாருக்கும் தெரியும். தொரை கிட்ட ரொம்ப செல்வாக்கு உள்ளவன்” என்றான் சந்திரன்.

“அம்மா எனக்குப் பொண்ணு பாத்துக்கிட்டிருக்காங்கன்னும் சொல்லுப்பா” என்றான் சஞ்சீவி அவசரமாக.

கவிதாவின் முகம் வெறுப்பைக் காட்டுவதுபோல் சுருங்கியது. சஞ்சீவியை உற்றுப் பார்த்தாள். “அதான் இப்டித் துள்ளிக் குதிக்கிறீங்களா?” என்றாள்.

“அந்த ஆசையெல்லாம் வெச்சுக்கிட்டு எங்க வீட்டுப் பக்கம் வந்துராதீங்க! காட்பாடிலேருந்து நாலு ஆளோட எங்க அத்தான் ஒங்க வீட்டுக்கு வந்துடும்!” என்று வீட்டுக்குள் நுழைந்து கதவைத் தாளிட்டாள்.

சந்திரனுக்கே அவள் செய்கை வருத்தத்தைக் கொடுத்தது.  பாவம் சஞ்சீவி, அன்று தன்னிடம் அறை வாங்கினான்.  இன்று கவிதாவிடம் அவமானப்படுகிறான்.

அதற்குள் கிருஷ்ணவேணி, “வாங்கண்ணே! கை கழுவிக்கிட்டு தோசை சாப்பிடுங்க” என்றாள்.

சந்திரன் இரண்டு தோசை சாப்பிட்ட நேரத்தில் சஞ்சீவி அரை தோசையை வைத்துக்கொண்டு திண்டாடிக்கொண்டிருந்தான்.

கவிதாவின் நிராகரிப்பு அவனை என்னவோ செய்தது.

“மனசு சரியில்லையா? சீக்கிரம் ஒரு கால்கட்டு போடச் சொல்லுங்க” என்று சிரித்துக்கொண்டே தேநீர் கொண்டுவந்து வைத்தாள் கிருஷ்ணவேணி.

“நானும் அதையே தான் நெனச்சேன். நம்ப கவிதா நல்ல பொண்ணுதானே?” என்றான் சந்திரன்.

“ஓஹோ, அவ பேச்சுல மயங்கிட்டாரா இவரு?” என்று கேலி செய்தவள், “அவளுக்கென்ன, நெருப்பு மாதிரி! ஒரு பய அவகிட்ட வாலாட்ட முடியாது! கல்யாணம் கட்டிக்கிட்டு நம்ப ஹைஸ்கூலு பக்கத்துல பென்சில் பேனா விக்கற கடை போடப்போறாளாம். ஆனா வெள்ளிகிழமை சந்தைக்கு வர்றதையும் விடமாட்டாளாம்” என்றாள்.

சுருக்கென்று விழித்துக்கொண்ட சஞ்சீவி, “அப்ப காட்பாடிலதான கடை போடணும்? இந்த ஊர்ல எதுக்கு?” என்றான்.

“அவங்க அத்தான் காட்பாடில தான இருக்கான்?”  கலகலவென்று சிரித்தாள் கிருஷ்ணவேணி. “அத்தானாவது ஆட்டுக்குட்டியாவது! இந்த யமுனா எப்பப் பாத்தாலும் முரளி அத்தான் முரளி அத்தான்னு சொல்லிக்கிட்டே இருப்பாளா, அவள வெறுப்பேத்தணும்னு தனக்கும் ஒரு 
அத்தான் காட்பாடில இருக்கான்னு சொல்லிக்கிடுவா! டூப்பு!  அது எனக்கும் அவளுக்கும்தான் தெரிஞ்ச ரகசியம்!”

அவ்வளவுதான், கிருஷ்ணவேணி தட்டில் கொண்டுவைத்திருந்த மூன்று தோசைகளையும் ஒரே நிமிடத்தில் காலிசெய்தான் சஞ்சீவி. அந்த வேகத்தைப் பார்த்து அவள் அசந்துபோனாள். “விஷயம் புரிஞ்சுதா?” என்றான் சந்திரன் சிரித்துக்கொண்டே.

வெட்கத்தால் முகத்தைத் திருப்பிக்கொண்டான் சஞ்சீவி.

அன்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்தது வசதியாகப் போயிற்று. சற்று நேரத்தில் சந்திரனும் கிருஷ்ணவேணியும் சைக்கிளில் கிளம்பினார்கள், சஞ்சீவியின் அம்மாவிடம் கவிதாவைப் பற்றிப் பேச.

அவர்கள் போனது தெரியாமல் தற்செயலாக கவிதா கதவைத் தட்டவும், சஞ்சீவி திறந்தான். அவள் திகைப்புடன் “அவங்க இல்லியா” என்று பின்வாங்கினாள்.

“வர நேரமாகும்னு சொன்னங்க. காட்பாடில ஒங்க அத்தானப் பாத்து முகூர்த்தத்துக்கு நாள் குறிக்கப் போயிருக்காங்க!”  என்றான் குறும்பாக.

நாணத்தால் சிவந்தது அவள் முகம். “தெரியும், தெரியும், கிருஷ்ணவேணி அக்கா தான சொன்னாங்க? வரட்டும், பாத்துக்கறேன்” என்று தன் வீட்டுக்குப் போவதுபோல் வாசலைவிட்டு இறங்கினாள். ஆனால் முகம் அவனைத் திரும்பிப் பார்த்துக்கொண்டே சென்றது.

****

தன்னுடைய மேலதிகாரி சொன்னபடி, கம்பெனியின் உயரதிகாரியான ஜேம்ஸ் தொரை முன்னால் சென்று அமர்ந்தான் முரளி. குட் மார்னிங் சொன்னான்.

கமலா டேவிடை அழைத்து “நம்ப ரயில்வே ப்ராஜெக்ட் பேப்பர்களைக் கொண்டுவாங்க” என்றார் ஜேம்ஸ்.

“மிஸ்டர் முரளி, கூடிய சீக்கிரம் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கும்னு சொல்றாங்க. எங்கெங்க பெரிய பெரிய கம்பெனிகள் இருக்கோ அங்கெல்லாம் ஒரு ரயில்வே ஸைடிங் (லைன்) போட்டாகணும்.  அப்பத்தான் ப்ரொடக்ஷன் ஆனத நாடு முழுக்க அனுப்பமுடியும். அத விட்டுட்டு கிராமங்களுக்கு ரயில் போட்டா நாட்டுக்கு லாபம் கெடையாது. நீங்க பாத்தீங்க இல்லியா, பீப்பிள் ரயில் வேண்டாம்னு போராட்டம் பண்றாங்க! அதனால, வாலாஜாப்பேட்ல இருந்து பிஞ்சி வழியா ரயில் போடறத விட்டுட்டு, அம்மூர்ல இருந்து நம்ம கம்பனிக்கு நேரா சைடிங் லைன் போடணும்னு நீங்க ரெகமண்ட் பண்ணினா நல்லாருக்கும்!” என்றார். “மத்ததை கம்பெனி பாத்துக்கும்.”

சஞ்சீவி அவரிடம் சுருட்டைக் கொடுக்க, உடனே பற்றவைத்து உறஞ்சினார்.

“கமலா, இந்த ஜென்டில்மேனுக்கு தங்கறதுக்கு நம்ப கெஸ்ட் ஹவுஸ்ல சொல்லிடு. பியூர் வெஜிட்டேரியன் மீல்ஸ் ஏற்பாடு பண்ணு. அவரோட ரிப்போர்ட்டை நல்லா டைப் பண்ணிக் குடு. லேட் பண்ணாதே!”

“ஜஸ்ட் எ மினிட் சார்!” என்றாள் கமலா. “இந்த சஞ்சீவி என்கிட்டே ஐ லவ் யூ சொல்றான் சார்!” என்று அந்தக் கடிதத்தை நீட்டினாள். “நீங்க தான் சார் அவனுக்கு பனிஷ்மெண்ட் குடுக்கணும்.” பக்கத்திலிருந்த சஞ்சீவிக்கு வியர்த்தது.

அவர் ‘ஐ லவ் யூ’ பக்கத்தைப் பார்க்கும்பொழுது, அதன் பின்பக்கம் முரளியின் பார்வையில் விழுந்தது. தன்னுடைய கையெழுத்து அல்லவா? தான் யமுனாவுக்கு எழுதிய கடிதம் அல்லவா? அது இங்கு எப்படி வந்தது?

லபக்கென்று அக்கடிதத்தைப் பிடித்துக்கொண்டான் முரளி.

“இது என்னுடைய கடிதம். உங்களிடம் தவறுதலாக வந்திருக்கவேண்டும். எனிவே, தேங்க்ஸ்!” என்றான்

கமலாவைப் பார்த்து. “மிஸ்டர் ஜேம்ஸ், நீங்கள் கூறிய கருத்து எனக்கும் பொருத்தமாகவே படுகிறது. என் ரிப்போர்ட் அதைப் பிரதிபலிக்கும். திருப்திதானே?” என்றான்.


பின்கதைச் சுருக்கம்

1 முரளியின் ரிப்போர்ட் வந்ததும், தொழிற்சாலைகளுக்கு நேரடி ரயில் வசதி ஏற்படுத்தும் கொள்கையை அரசு வகுத்தது. அதன்படி பிஞ்சி கிராமம் பிழைத்தது. ரயில் ப்ராஜெக்டை அமல்படுத்தும் பொறுப்பு முரளிக்கே வழங்கப்பட்டது. அதை வெற்றிகரமாக நிறைவேற்றினான்.
அதனால் அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா முழுவதும் பாரி கம்பெனியின் தயாரிப்புகள் ரயில்மூலம் வலம்வந்தன.  இன்றும் கூட.

2 முரளி இராணிப்பேட்டையிலேயே தங்கிவிட்டதால், யமுனா-முரளி காதலும் நிறைவேறித் திருமணமும் முடிந்தது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

3 சந்திரனின் முயற்சியால் கவிதா-சஞ்சீவி திருமணமும் நடந்தேறியது. அவள் கேட்டுக்கொண்டபடியே ஹைஸ்கூல் அருகில் அவளுக்கு ஸ்டேஷனரி கடை வைத்துக்கொடுத்தான் சஞ்சீவி. வெள்ளிக்கிழமை சந்தையையும் அவள் விடவில்லை. அன்று மட்டும் சஞ்சீவி இரவு ஷிப்டுக்கு மாற்றிக்கொண்டு பகலில் கடையைப் 
பார்த்துக்கொண்டான்.

4 இன்றும் இராணிப்பேட்டையில் வெள்ளிக்கிழமைகளில் சந்தை நடக்கிறது. இன்றும் சந்திரன்-கிருஷ்ணவேணி, கவிதா-சஞ்சீவி, யமுனா-முரளி ஆகியோரின் சந்ததிகள் அங்கு கடைகளை நடத்துகிறார்கள். ‘ரயிலோடும் வீதி’ யைப் படித்துவிட்டு வந்ததாக அவர்களிடம் அறிமுகப்படுத்திக்கொண்டால், இதிலிருந்து மூன்று கேள்விகளைக் கேட்பார்கள். சரியான விடை சொல்பவர்களுக்கு நூறு ரூபாய் மதிப்புள்ள சுவையான வறுத்த வேர்க்கடலை தருகிறார்களாம்!

(முற்றும்)

****

எங்கள் பிளாக் ஆசிரியர் குழுவிடமிருந்து:

இந்த நெடுங்கதையை எழுதிய “மூலத் திருநாள் பரசுராம்” யார் என்பதைப் பற்றிப் பல்வேறு கருத்துக்கள் உலவுகின்றன.  நமக்கு வழக்கமாகக் கதை தரும் இரண்டு பெங்களூர்ப் பெண்மணிகளைக் கேட்டபோது இப்படிச் சொன்னார்கள்: “ஏன் சார், குமுதத்தில் அமரர் ரா. கி. ரங்கராஜன் 95 புனைபெயர்களில் எழுதினாராம். இராய செல்லப்பா ஒரே 
ஒரு புனைபெயரில் எழுதக்கூடாதா?” என்று!

****

33 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    இந்த கதை ஒரு சிறந்த எழுத்தாளரால்தான் எழுதபட்டிருக்கும் என முதல் பகுதியை வாசிக்கும் போது ஊகித்தேன். அதன் பின் படிக்க சந்தர்ப்பங்கள் என்னுடன் ஒத்துழைக்கவில்லை. இப்போது கதையின் முன் பகுதிகளையும் இத்துடன் சேர்ந்தாற் போல படித்து விட்டு பிறகு வருகிறேன். கதாசிரியருக்கு என் பணிவான வணக்கங்கள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    பார்க்க பார்க்க
    பாவம் பொடிபட..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. மிகச் சிறந்த முத்தாய்ப்பு..

    நிறைவு அருமை..

    பதிலளிநீக்கு
  5. வழக்கமாக அல்வா தான் கொடுப்பார்கள்..

    இங்கே வழக்கத்துக்கு மாறாக கை நிறைய கடலை அதுவும் வறுத்த கடலை கிடைத்திருக்கின்றது..

    மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  6. இங்கே தோக்கா வெளம்பரம் ஒன்றில் நாட்டுக் கடலையில் இருந்து தயாரிக்கப்பட்ட ஆயில் என்று பினாத்திக் கொண்டு இருக்கின்றார்கள்..

    நாட்டுக் கோழி நாட்டுப் பசு மாதிரி
    நாட்டுக் கடலையை எங்கேருந்து கொண்டாந்தானுங்கன்னு தெரியலை..

    பதிலளிநீக்கு
  7. நமக்குன்னு என்ன ஆப்பிரிக்காவுல இருந்தும் அண்டார்டிக்காவுல இருந்துமா கதையெல்லாம் வருது?..

    இந்தப்பக்கம் பெங்களூரு.. அந்தப் பக்கம் திருநவேலி.. நாரோயில்..

    மெசாரிட்டி பெங்களூருல இருந்து வர்றப்ப இந்தக் கதைய எழுதுனது ஆருன்னு கொஞ்சம் தடுமாறிப் போநது நெசந்தான்..

    அந்தத் திருநாள் இந்தத் திருநாள் ந்னு வர்றப்ப பெரிய கொழப்பம்..

    ஜீ பூம்பா ஜாடி திறந்து கொண்ட நேரத்துல செல்லப்பா ஐயா அவுங்க..

    மகிழ்ச்சி.. மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா! ஒன்றரை வருடமாக நான் வலைப்பதிவுகளின் பக்கம் வரவில்லை. பல்வேறு அலுவல்கள். தங்கள் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி.

      நீக்கு
  8. // நமக்கு வழக்கமாகக் கதை தரும் இரண்டு பெங்களூர்ப் பெண்மணிகளைக் கேட்போது //

    நமக்கு வழக்கமாகக் கதைகளைத் தருகின்ற - பெங்களூர்ப் 
    பெண்மணிகள் இருவரிடம் கேட்ட போது..

    ஆஹா.. ஆஹா!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒருவர் மாற்றி ஒருவராக அந்தப் பெண்மணிகள் கொடுத்த நச்சரிப்பு தாங்காமல்தான் திடீரென்று மனம்போன போக்கில் இந்தக் கதையை எழுத ஆரம்பித்தேன். குரங்கு பிடிக்கப் பிள்ளையாராக முடிந்ததற்கும் அவர்களுக்குத்தான் நன்றி!

      நீக்கு
    2. துரை அண்ணா, செல்லப்பா சார் இருவரின் கருத்துகளைப் பார்த்து சிரித்துவிட்டேன்!

      துரை அண்ணா, //இந்தப்பக்கம் பெங்களூரு.. அந்தப் பக்கம் திருநவேலி.. நாரோயில்..

      மெசாரிட்டி பெங்களூருல இருந்து வர்றப்ப இந்தக் கதைய எழுதுனது ஆருன்னு கொஞ்சம் தடுமாறிப் போநது நெசந்தான்..//

      இதுவும் புன்சிரிப்பை வழவழைத்தது. ஆனா மெசாரிட்டி இப்ப மைனாரிட்டி ஆயிடுச்சு!!!

      கீதா

      நீக்கு
    3. ஒருவர் மாற்றி ஒருவராக அந்தப் பெண்மணிகள் கொடுத்த நச்சரிப்பு தாங்காமல்தான் திடீரென்று //

      நச்சரிப்பில் ஒரு கதை பிறந்ததா இல்லையா!!!!

      அது கூட அவங்களால இப்ப எழுத முடியாத சூழலாக இருக்கலாம். அதனால் உங்களைக் கேட்டிருக்கலாம்!

      கீதா

      நீக்கு
  9. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  10. கதை மிக அருமையாக நிறைவு பெற்றது.
    //‘ரயிலோடும் வீதி’ யைப் படித்துவிட்டு வந்ததாக அவர்களிடம் அறிமுகப்படுத்திக்கொண்டால், இதிலிருந்து மூன்று கேள்விகளைக் கேட்பார்கள். சரியான விடை சொல்பவர்களுக்கு நூறு ரூபாய் மதிப்புள்ள சுவையான வறுத்த வேர்க்கடலை தருகிறார்களாம்!//

    சுவையான வறுத்த வேர்க்கடலையுடன் கொஞ்சம் கட்டி வெல்லமும் கிடைத்தால் மிக நல்லது.

    இராய செல்லப்பா சார், கதை மிக அருமை. வாரா வாரம் கடிதம் ஒவ்வொருவர் கைக்கு போய் கடைசியில் முரளி கைக்கு வந்து விட்டது.
    எல்லாம் சுபமாக முடிந்தது.


    பதிலளிநீக்கு
  11. செல்லப்பா சார்தான் எழுதுகிறார் என்று தெரிந்துவிட்டது முதல் பகுதியிலேயே. அவர் எழுதும் கதைகளில் நிறைய தகவல்கள் கதையினூடேயே வரும். கதாபாத்திரங்களின் வழியாகவும் வரும். அதுவும் இராணிப்பேட்டை, காட்பாடி என்றெல்லாம் பார்த்த போது ஊகிப்பது சிரமமாக இருக்கவில்லை.

    இன்று வரும் போது நாமளே சொல்லிடலாம்னு பார்த்தால், ஸ்ரீராம் ஆசிரியர் யார் என்று சொல்லி, கூடவே பங்களூர் பெண்மணிகள்னு சொல்லி சஸ்பென்ஸாம்!!!! ஹாஹாஹாஹா...

    ஆனா பாருங்க பங்களூர்ப் பெண்மணிகளில் இன்னும் சிலர் உண்டு எபியில் கதை எழுதினவங்க!!! எனவே அந்த இரு பெண்மணிகள் யாரென்று ஊகித்துக் கொள்ளலாம் மத்தவங்க!!!

    கீதா


    பதிலளிநீக்கு
  12. நல்லபடியாகப் பிஞ்சி கிராமம் பிய்ந்துவிடாமல் தப்பித்தது. நல்ல முடிவு. நேர்மறையான முடிவு. செல்லப்பா சார் கண்டிப்பாக நேர்மறையாகத்தான் முடிப்பார் என்று தெரியும்!

    பின் கதைக்குறிப்பு 4 ஐ ரொம்ப ரசித்தேன். இது செல்லப்பா சாரின் அக்மார்க்! கதையைப் பத்தி கேட்டா சொல்லிடலாம் அது சரி அந்த சந்ததிகள் யாரா இருக்கும்னு தெரிந்தால்தானே அங்க போய் கடலை போட...மன்னிக்கவும் வறுத்த வேர்க்கடலையைப் பெற முடியும்!

    கீதா

    பதிலளிநீக்கு
  13. “ஏன் சார், குமுதத்தில் அமரர் ரா. கி. ரங்கராஜன் 95 புனைபெயர்களில் எழுதினாராம். //

    ஹாஹாஹாஹா இதைச் சொன்ன பெண்மணி யாராக இருக்கும் என்று எனக்குத் தெரியுமே!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  14. ///குரங்கு பிடிக்கப் பிள்ளையாராக முடிந்ததற்கும் ///

    பிள்ளையார் எழுத்தாணி பிடிக்க - குரங்கால் துவம்சம் முடிந்தது என்பதே மகா பாரதத்தின் சுருக்கம்..

    இன்றைய உலகில்
    பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்ததுவும்

    குரங்கு பிடிக்கக் கோட்டானாய் முடிந்ததுவும் ஏராளம்.. ஏராளம்..

    அன்பின் செல்லப்பா ஐயா அவர்களுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  15. ஐயா செல்லப்பா அவர்களுக்கு வாழ்த்துகள்... தொடர்கிறேன்

    பதிலளிநீக்கு
  16. கதை இரண்டு ட்ராக்கில் சென்றுள்ளது. கடிதத்தின் கதை ஒன்று. ரயில் பாதை அமைப்பது இரண்டு. ரயில் பாதை புதியதாக வருவதற்கும் கடிதங்கள் கை மாறுவதற்கும் தொடர்பு உண்டு என்று பேனாவால் எழுதி பின்னர் பென்சிலால் லவ் யு எழுதி முத்து படத்தில் வரும் sub plot போன்று பல கைகள் மாறி சில குழப்பங்கள் உண்டாக்குவது என்பது கதைக்கு ஒரு வெயிட் சேர்ப்பதற்ககாக என்று தோன்றுகிறது. ரயில் பாதை வருமுன் உபயோகத்தில் இருந்தது கட்டைப் பேணா தான். fountain பேணா இல்லை.

    வீதியில் ரயில் ஓடாவிட்டாலும் எங்கள் பிளாகில் 5 வாரம் ஓடி ஒரு ரெகார்ட் உண்டாகி விட்டது. செல்லப்பா சாருக்கு வாழ்த்துக்கள்.
    Jayakumar​

    பதிலளிநீக்கு
  17. முடிவு சுபம் அருமை
    கதையில் இராணிப்பேட்டை என்று வரும்போது தங்களது நினைவே வந்தது கடந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தேன்

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் சகோதரரே

    கதை நன்றாக உள்ளது. ஒன்றிலிருந்து ஐந்து வரை எல்லாவற்றையும் படித்து ரசித்தேன். முதல் பகுதியிலிருந்து கடிதம் சுற்றி வந்து இறுதியில் எழுதியவரிடமே சேர்ந்து விட்டது. இரண்டு ஜோடிகளும் இறுதியில் எவ்வித பிரச்சனைகளுமின்றி இணைந்தும் சுபமான முடிவு. கதையை ஒவ்வொரு வாரமும் சுவாரஸ்யமாக கொண்டு சென்ற சகோதரர் இராய செல்லப்பா அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். கதை மிகவும் அருமையாக இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  19. என் அன்பு நண்பர் இராய. செல்லப்பா அவர்களின் கதை இதுவென்று அறிய மிகுந்த மகிழ்ச்சி வயப்பட்டேன். தேர்ந்த எழுத்தாளர் அவர்..சொல்லப் போனால் எழுதியவர் யார் என்று வாசகர் அறியாத நேரத்தில் எழுத்துக்காக வரும் பாராட்டுகள் உண்மையானவை என்று தற்கால சூழ்நிலையில் உறுதியாகச் சொல்லலாம். வாசகரின் ஆவலைத் தூண்டியதில் அவர் வெற்றி பெற்று விட்டார். நண்பருக்கு அன்பான வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  20. பிரமாதம். விறுவிறுப்பான திரைக்கதைக்கு ஏற்ற அழகான கதை. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  21. ஆரம்பம் முதலே இதை எழுதுவது திரு ராய.செல்லப்பா அவர்களே எனக் கண்டு பிடித்த தி/கீதாவுக்குப் பாராட்டுகள்.
    சிறிதும் தொய்வில்லாமல் ஒரு கடிதத்தை மட்டும் வைத்துக் கொண்டு விறுவிறு சுறுசுறு எனக் கதையைக் கொண்டு போன திரு செல்லப்பா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்/பாராட்டுகள். நல்ல அருமையான நடை. சரளமான எழுத்து. எங்கேயும் திசை மாறாமல் தடுமாறாமல் கதைக்கு வேண்டியதை மட்டும் சொல்லிவிட்டு அருமையான முடிவையும் கொடுத்து விட்டார்.

    பதிலளிநீக்கு
  22. மிக்க நன்றி அம்மா! நலமாக இருக்கிறீர்கள் தானே?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!