செவ்வாய், 13 பிப்ரவரி, 2024

சிறுகதை  :  காபிப் பொடியும் கந்தனும்  - புவனா சந்திரசேகரன் 

 காபிப்பொடியும் கந்தனும்

புவனா சந்திரசேகரன் 

------------------------------------------------

கந்தா என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் கந்தசாமி, என்னுடைய பெரிய மாமாவின் வீட்டில் பல வருடங்களாக வேலை பார்க்கும் ஓட்டுநர், அதாவது கார் டிரைவர்.

பழைய கால ப்ரீமியர் பத்மினியுடன் தொடங்கியது கந்தாவின் ஓட்டுநர் வேலையும் பெரிய மாமா வீட்டுடன் உறவும். சாக்லேட் நிற ப்ரீமியர் பத்மினி போய் வெள்ளை யானையான அம்பாஸிடர் வந்து அதுவும் ஓய்வு பெற்ற பின்னர் நீல நிற மாருதி எஸ்டீம் வண்டி , பிறகு ஆரஞ்சு நிறத்தில் ஜொலிக்கும் டாட்டா பஞ்சில் இப்போது வந்து நிற்கிறது.

கந்தனும் மாமா வீட்டின் பிரிக்க முடியாத அங்கமாகிப் போனான். சின்னச் சின்ன வேலைகளைச் செய்து கொண்டு, மாமி அன்புடன் தரும் ( மீந்து போன) பலகாரங்களைச் சுவைத்துக் கொண்டு மாமா, மாமி ஏவும் குற்றேவல்களை சிரித்த முகத்துடன் செய்து கொண்டு, அவர்களுடைய அன்றாட வாழ்க்கையில் நீக்கமற நிறைந்து நின்றான்.

"கந்தா, பக்கத்து வீட்டில் ஏணி வாங்கிட்டு வந்து பரணில இருக்கற பழையஇரும்புப் பொட்டியை எறக்கி வை"  

"கந்தா, கடைக்குப் போய் நல்ல தேங்காயாப் பாத்துப் பொறுக்கி எடுத்துட்டு வா"

"கந்தா, இந்தத் தேங்காய் மூட்டையைக் கொண்டு போய் முக்கில இருக்கறஅந்தப் பிள்ளையார் கோயிலில் சிதறுகாய் போட்டுட்டு வா.  நம்ப தம்பிக்கு பிரமோஷன் ஆயிருக்கு. நூத்தியெட்டுத் தேங்காய் உடைக்கறதா வேண்டிட்டிருந்தேன்"

"கந்தா, நம்ப அண்ணாச்சி கடைக்குப் போய் நாலு கிலோ ஜீனி வாங்கிட்டு வா.  இன்னைக்கு லட்டு புடிக்க சமையற்காரரைக் கூப்பிட்டிருக்கேன். நாளைக்கு நம்ப பாப்பாவுக்கு அனுப்பணும்"

"கந்தா, பேங்குக்குப் போய் இந்த பாஸ்புக்கில் என்ட்ரி போட்டுட்டு வா"

எத்தனையோ ஆன்லைன் வங்கி சௌகர்யங்கள் வந்து விட்டாலும் இன்னமும் வங்கிக் கணக்கைப் பார்ப்பதற்கு பாஸ்புக்கைப் பயன்படுத்தும் மிகக் குறைந்த வாடிக்கையாளர்களில் என்னுடைய மாமாவும் ஒருத்தர்.

என்ன வேலை சொன்னாலும் முகம் சுளிக்காமல் செய்கிற கந்தன், நிறையசமயங்களில் சொதப்புவதிலும் மிகப்பெரிய கெட்டிக்காரன். உடல் பலத்தால் சாதிக்கும் காரியங்களை எளிதாகச் செய்து முடித்து விடுவான். ஆனால் அறிவை உபயோகித்து யோசித்து செயல்பட வேண்டிய இடங்களில் கந்தன் மிகப்பெரிய ஜீரோ தான். அறிவுசார் விஷயங்களை அவனால் நினைவு வைத்துக் கொள்ள முடியாது. புத்திசாலியாக இருந்தால் தான் வேறு நல்ல இடத்தில் வேலைக்குச் சேர்ந்து கை நிறைய சம்பாதிப்பானே?

பெரிய மாமா கொடுக்கும் சொற்ப சம்பளத்திற்காகவும், மாமி கொடுக்கும் மீந்து போன தின்பண்டங்களுக்காவும் வேலையில் ஒட்டிக் கொண்டு தன் ஆயுளைக் கழிக்க மாட்டானே? ஒழுங்காக விபத்து எதுவும் செய்யாமல் நிதானமாக வண்டி ஓட்டுவான். வயதான காலத்தில், அதுவும் பையன் வெளிநாட்டிலும், பெண் வேறு மாநிலத்திலும் வசிக்கும் நிலையில் ஆத்திர, அவசரத்திற்கு வண்டி அவர்களுக்குத் தேவையாக இருந்தது. அதோடு கூடவே பேச்சுத் துணைக்கு ஏற்றவனாகவும், விசுவாசமானவனாக இருப்பதற்கும் அதிக சாமர்த்தியம் இல்லாத கந்தன், மனதிற்கு உகந்தவனாக இருந்தான். மிகச் சிறந்த எடுபிடியாகவும், ஒரு நல்ல காவற்காரனாகவும் இருந்தான்.

ஒருமுறை மாமா, கந்தனை அழைத்து ஒரு வேலை சொன்னார்.

"நம்ம ஸ்டோர் ரூமில பழைய நியூஸ் பேப்பர்ஸ் நிறைய சேந்திருக்கு.  கொண்டுபோய்ப் பழைய பேப்பர் கடையில் போட்டுட்டு வா" என்று கந்தனிடம் சொல்ல,

கந்தனும் பழைய செய்தித் தாள்களைக் கயிறு போட்டுக் கட்டித் தன் சைக்கிளின் கேரியரில் வைத்துக் கொண்டு போய்ப் போட்டு விட்டு வந்தான்.

"என்னடா கந்தா? எவ்வளவு ரூபாய்க்குப் போச்சு? எவ்வளவு எடை இருந்துச்சு?" 

"தெரியலைங்க ஐயா. நான் கேக்கலையே?"

"என்ன கேக்கலையா? எவ்வளவு பணம் கொடுத்தான்? ஒரு கிலோ என்ன ரேட்?"

"பணமா? அவன் ஒண்ணும் கொடுக்கலையே? நானும் அவனைக் கேக்கலையே?  நீங்க நியூஸ் பேப்பர்களை அந்தக் கடையில் போடச் சொன்னீங்க. நானும் கீழே பொத்துன்னு போட்டுட்டு வந்துட்டேன்"  என்று சொல்லித் தலையைச் சொறிந்து கொண்டு நின்றான் கந்தன்.

தலையில் அடித்துக் கொண்ட பெரிய மாமா, அவனுடன் அந்தக் கடைக்குப் போய்ப் பணத்தை வாங்கிக் கொண்டு கடைக்காரனையும் நன்றாகத் திட்டி விட்டு வந்தார். கந்தனின் புத்திசாலித்தனத்திற்கு இது ஒரு சின்ன எடுத்துக்காட்டு. 

காலையில் எங்கேயாவது போகவேண்டும் என்றால் சீக்கிரமாக வந்துவிடச் சொல்லி மாமி சொல்வார்.

"கந்தா , மலைக் கோயிலில் அபிஷேகத்துக்குக் கொடுத்திருக்கோம்.  காலை பத்து மணிக்கு அங்கே இருக்கணும். நீ ஒரு எட்டரை மணிக்கு வந்திரு. போக ஒரு மணி நேரத்துக்கு மேல ஆகும்" என்று முதல் நாள் மாலையில் சொல்லி அனுப்பியிருப்பார் மாமி.

கந்தனோ நிதானமாக ஒன்பது மணிக்கு மேல் வந்து டென்ஷனைக் கூட்டி விடுவான்.

திட்டினால் முகம் வாடி விடும். தலைகுனிந்து நின்று திட்டுக்களை வாங்கிக் கொள்வான். எதிர்த்துப் பேசவே மாட்டான்.

"சோறு வடிக்க நேரமாயிடுச்சும்மா"

"நீ ஏண்டா சோறு வடிக்கணும்? உன் பொண்டாட்டி எங்கே? ஊரில் இல்லையா?"

"இருக்காம்மா. அவளுக்கு ரொம்ப முதுகுவலி. படுக்கையில் இருந்து எழுந்துக்க முடியலை. நான் தான் தினமும் சமையல் செய்யறேன்" என்பான்.  சில நேரங்களில் அண்ணன் வீட்டுக்கோ, அக்கா வீட்டுக்கோ மனைவி போயிருப்பதாகச் சொல்லுவான். நிறைய சமயங்களில் கடைத்தெருவில் வண்டியுடன் காத்துக் கொண்டிருக்கும் போது வடை, போண்டா அல்லது சுண்டல் வாங்கி வருவான்.

"காலையில் சோறு வடிச்சிட்டேன். காய் எதுவும் செய்யலை. இதை வச்சு சாப்பிட்டுருவேன்" என்று அவன் சொல்லும் போது மாமியின் மனமும் இளகிவிடும். வீட்டில் மிச்சம், மீதியிருக்கும் குழம்பு, காய்கறி மற்றும் பழைய மிக்சர் என்று எதையாவது கொடுத்து விடுவாள். எதைக் கொடுத்தாலும் அவனும் பிரியத்துடன் வாங்கிக் கொண்டு போவான். குற்றம், குறை சொல்ல மாட்டான்.

ஏதோ அந்தக் குடும்பத்திற்கும் கந்தனுக்கும் பூர்வ ஜன்ம பந்தம் என்று தான் சொல்ல வேண்டும்.

காபிப்பொடி சம்பவம் இப்படித் தான் ஒரு தடவை நடந்தது. மாமாவும், மாமியும் தாங்கள் வசிக்கும் மதுரையில் இருந்து, கும்பகோணத்தில் நடந்த குடும்ப நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காகத் தங்களுடைய வண்டியிலேயே பயணம் செய்தார்கள்.

எங்களுடைய சின்னத் தாத்தாவிற்கு அறுபதாம் கல்யாணம். நாங்களும் போயிருந்தோம். அங்கே தான் கந்தனுக்கு ஒரு புதிய நண்பன் கிடைத்தான்.

பெங்களூரில் வசிக்கும் எங்களுடைய தூரத்து உறவினர் ஒருத்தரின் வீட்டு டிரைவரான பிரகாஷ் நம்முடைய கந்தனுக்கு அறிமுகமானான்.  கந்தனின் வெள்ளந்தியான குணமும், அப்பாவித் தனமான பேச்சும் பிரகாஷின் மனதைக் கவர்ந்ததில் அங்கிருந்த இரண்டு நாட்களில் நன்றாகப் பழகி விட்டார்கள். வண்டி ஓட்டிய நேரம் தவிர மீதி நேரங்களில் ஒன்றாகச் சாப்பிடப் போவது, ஒரே இடத்தில் இரவு தூங்கப் போனது என்று பல்வேறு காரணங்களால் அவர்களுடைய நட்பு வளர்ந்தது.

ஊருக்குக் கிளம்பும் போது மொபைல் நம்பர்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

ஊருக்குத் திரும்பியபிறகும் வாட்ஸப்பிலும், மொபைல் அழைப்புகளிலுமாக அரட்டை தொடர்ந்ததால் நட்பும் தொடர்ந்தது.

அன்று காலையில் பெரிய மாமா, வண்டியைத் துடைத்துக் கொண்டிருந்த கந்தனைக் கூப்பிட்டார்.

"இங்கே பாரு கந்தா. நாளைக்குக் காலையில் நம்ம காரிலயே பெங்களூர் போறோம். டேங்கில் பெட்ரோல் எவ்வளவு இருக்குன்னு பாத்து இன்னைக்கே ரொப்பிடு. அப்புறம் டயர்லாம் சரியா இருக்கா , ஸ்டெப்னி பொஸிஷன்  எப்படின்னு செக் பண்ணு. ஏசியெல்லாம் சரியா வேலை பண்ணுதான்னு ஒரு தடவை வொர்க் ஷாப் போய்க் காமிச்சுட்டு வந்துரு. காலையில் ஆறு மணிக்குக் கெளம்பிரணும். சமைக்கிறேன், கிமைக்கிறேன்னு லேட் பண்ணாம டயத்துக்கு வந்துரணும். வழியில் சாப்பிட்டுக்கலாம். சாக்குப் போக்கு சொல்லாம நேரத்துக்கு வந்துரு" என்று எச்சரிக்கை கொடுத்து அனுப்பினார் மாமா.

அன்று சாயந்திரம் கையில் ஒரு பெரிய கட்டைப்பையோடு வந்தான் கந்தன்.

"என்னடா இது? கையில் என்ன இவ்வளவு பெரிய பை? உன்னோட துணிமணியா? ஒரே நாளில் திரும்பிடறோமே நாம தான்!"

"அது வந்துய்யா பிரகாஷ் ஃபோன் பண்ணினான். அவன் வேலை செய்யறானே உங்க உறவுக்காரங்க, அந்த வீட்டுச் சின்னம்மாவுக்கு காபிப்பொடி வேணுமாம்.  அவங்க ஊரில் அவங்க இருக்கற எடத்துல சரியாக் கெடைக்கலையாம். அந்த அம்மா என்னவோ இன்ஸ்டன்ட் யூஸ் பண்ண மாட்டாங்களாம். நல்ல காபிப்பொடி தான் வேணுமாம். ரொம்ப வருத்தப் பட்டானா? நான் தான், 'கவலைப்படாதடா, நான் ஐயாவோட நாளைக்கு உங்க ஊருக்கு வந்துட்டிருக்கேன்.  வாங்கிட்டு வந்துடறேன்' னு சொல்லிட்டேன்" என்று பெருமையாகச் சொல்ல, மாமாவிற்குக் கோபம் தலைக்கேறியது.

"யாரைக் கேட்டு இதை வாங்கிட்டு வந்தே? இந்தக் குப்பையை எல்லாம் வண்டியில் தூக்கிட்டுப் போக முடியாது. என் கிட்ட ஒரு வார்த்தை பெர்மிஷன் வாங்காமல் நீயா எப்படி வாங்கிட்டு வரலாம்?" பொங்கி விட்டார் மாமா.  கந்தனின் முகம் வாடி வதங்கி, வெயில் காலத்தில் சாயந்திர நேரத்தில் தெருவோரக் கடையில் கிடைக்கும் கொத்தவரங்காய் போல ஆனது.

"ஐயா, அந்த பிரகாஷ் தான் நாம் பெங்களூர் போறதைச் சொன்னதும் வாங்கிட்டு வரச் சொல்லிப் பணத்தை ஜி பேயில அனுப்பினான்! நம்ம உறவுக்காரவுங்க வீட்டுல தானே அவன் வேலை பாக்கறான்?  அவர்களுக்காக வாங்கினா நீங்க ஒண்ணும் சொல்ல மாட்டீங்கன்னு நெனைச்சேன். இனிமேல் திருப்பிக் கொடுத்தாக் கடையில் வாங்க மாட்டாங்கய்யா..." குரலில் அழுகை எட்டிப் பார்த்தது கந்தனுக்கு.

"கடையில வாங்கமாட்டான்னா நீயே போய் கொரியரில் அனுப்பு. போ, என் கண் முன்னால நிக்காதே" என்று கத்தி விட்டு உள்ளே போக, கந்தனோ தலையில் கை வைத்துக் கொண்டு வாசல் திண்ணையில் உட்கார்ந்தான். என்ன செய்வதென்று அவனுடைய சிற்றறிவுக்கும் புரியவில்லை.

மாமி அவனை  சைகையால் அழைத்தாள்.

"கவலைப்படாதே, கொஞ்ச நேரத்தில் அவர் மூடு சரியானதும் நான் பேசிப் பாக்கறேன்" என்று மெதுவாக அவனுக்கு மட்டும் கேட்கும்படி சொன்னாள்.

மாமா உள்ளே போனவுடன் அவருடைய மொபைல் அழைத்தது. எடுத்துப் பேசினார். பேசும் போதே முகம் மலர்ந்து போனது.

"அட, எப்படியிருக்கீங்க? ரொம்ப நாளாச்சு பாத்து. ஆமாமாம்,  கும்பகோணத்தில் சந்திச்சது தான். ஆமாம், நாங்க நாளைக்குக் காலையில் கெளம்பி பெங்களூர் வரோம். ஏதாவது வேணுமா மதுரையில் இருந்து? என்ன காபிப்பொடியா?  மருமகளுக்கா? அட, இந்தக் காலத்தில் இப்படிப்பட்ட பொண்ணா? ஆச்சரியமாக இருக்கே? கண்டிப்பா வாங்கிட்டு வரேன். இதிலென்ன சிரமம்? வேற ஏதாவது வேணுமா?  அப்புறம் ஸ்ரீ வில்லிப்புத்தூர் வாசனைப் பொடி, சாமுண்டிப் பாக்கு ஏதாவது வேணும்னாச் சொல்லுங்க. நான் வாங்கிட்டு வந்துடறேன். இதிலென்னங்க இருக்கு?  ஒருத்தருக்கொருத்தர் இது கூடப் பண்ணலைன்னா நாமெல்லாம் மனுஷங்களே இல்லை"  என்று சொல்லி விட்டு அழைப்பைத் துண்டித்தார்.

வாசலில் உட்கார்ந்திருந்த கந்தனைக் கூப்பிட்டு, அந்தப் பையை கார் டிக்கியில் வைக்கச் சொன்னபோது அவனுக்கு ஒன்றும் புரியாமல் திருதிருவென்று முழிக்க, நடந்த அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த மாமியோ, மனித மனத்தின் விசித்திரத்தை நினைத்து சிரித்துக் கொண்டாள்.

26 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. எங்கிருந்தோ வந்தான் - என்கிற மாதிரி இருக்கின்றது..

    பதிலளிநீக்கு
  4. /// அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த மாமியோ, மனித மனத்தின் விசித்திரத்தை நினைத்து சிரித்துக் கொண்டாள்.///

    நல்ல கதை.. சிறப்பு...

    பதிலளிநீக்கு
  5. கதை மிக நன்று. மனித மனங்கள் விசித்திரமானதுதான். அதனால்தான் பலரும் புரிந்து கொள்ள முடியாமல் குழப்பத்தில் தவிக்கிறார்கள் உறவுகள் பிரச்சனைகள்! கந்தன் போன்றவர்களைப் பார்க்கும் போது பாவமாக இருக்கும். களிமண் பொம்மைகள் போன்றவர்கள் வளைப்பதற்கு ஏற்ப வளைபவர்கள். களிமண் பொம்மைகள் கூட விரிசல் விடும். இவர்களுக்கும் விரிசல் வருமோ? அப்படி ஒரு மனம் பற்றி எழுதி வைத்திருக்கிறேன்.

    நல்ல கதை

    கீதா

    பதிலளிநீக்கு
  6. கந்தன் போன்றவர்கள் கிடைப்பது அரிது. முன் ஜென்ம பந்தங்களாக இருக்க வாய்ப்புண்டு. பேப்பர் கடையில் போட்டு வந்தது கொஞ்சம் ஜீரணிக்க கஷ்டமாக இருந்தது. இது போன்றவர்கள் நீண்ட நாட்கள் தொடர்வதற்கு மாமி போன்றவர்களின் அனுசரணை தான் போலும்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  7. கௌ அண்ணா, துளசியோட பழைய காரை இங்க கொடுத்துட்டாரா!!!! ஹிஹிஹி

    படம் நல்லாருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
  8. கந்தன் போன்ற நபர்கள் கிடைப்பது அரிது தான். கதை நன்று. தொடரட்டும் பகிர்வுகள்.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சகோதரி

    தாங்கள் படைத்துள்ள கதை நன்றாக உள்ளது. கந்தன் போன்ற நல்லவர்கள் வீட்டின் வேலையாட்களாக கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

    வீட்டின் உரிமையாளரான மாமா, அவரின் உறவுகளுக்கென கந்தன் தான் வாங்கி வந்திருந்த சாமான்களை பற்றி சொன்னதும் கேட்காமல், அவரின் உறவுகாரர்கள் அவரிடமே நேரடியாக அங்கு கிடைக்காத சாமான்களை வாங்கி வரும்படி கூறியதும், கேட்பதோடு மட்டுமின்றி, கார் ஓட்டுனர் கந்தனையே ஏவி அந்த சாமான்களை காரில் ஏற்றும்படிக்கு கூறியது அவரின் ஈகோவை காட்டுகிறது. மாமி அவரின் செயல் கண்டு மனித மனமானது விசித்திரமானது என நினைப்பது உண்மைதான்.

    நல்லதொரு கதைப்பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமை சகோதரி.
      இந்த மாதிரி மாறுபட்ட பார்வை தான் எதை வாசித்தாலும் முக்கியம். அந்த பெரிய மாமாவின் ஈகோவைப் பற்றி யாரேனும் குறிப்பிட்டுச் சொல்ல மாட்டார்களா என்பதற்காகத் தான் காத்திருந்தேன். முதல் வாசகராக அதைச் சொல்லியிருக்கிறீர்கள். எங்கெங்கோ போக்குக் காட்டி இந்த மாதிரியான மனித மனங்களின் கல்யாண குணங்களைச் சொல்வதற்காகத் தான் இந்தக் கதை எழுதப்படிருக்கும் என்பது தான் என் யூகமும்.

      நீக்கு
    2. வணக்கம் ஜீவி சகோதரரே

      தங்களின் புரிதலான கருத்துப் பதிலுக்கும், மனமார்ந்த பாராட்டிற்கும் மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  10. கதை நன்றாக இருக்கிறது. கந்தனின் அன்பு உள்ளமும், மாமாவின் உள்ளமும் புரிகிறது கதையில்.

    //மனித மனத்தின் விசித்திரத்தை நினைத்து சிரித்துக் கொண்டாள்.//

    மனித மனங்கள் பல விசித்திரங்களை கொண்டது தான்.

    பதிலளிநீக்கு
  11. இந்தப் பகுதியில் வெளியிடும் கதைகள் ஒரே மாதிரி அரைத்த மாவையே அரைக்காமல் வித்தியாசமான விஷயங்களைத் தொட்டு
    இருந்தால் வாசிக்க ஆர்வமாக இருக்கிறது.
    அதற்கான முயற்சிகளை மேற்கொள்வது இந்தப் பகுதிக்கு எழுதும் எழுத்தாளர்களின் கையில் தான் இருக்கிறது. செவ்வாய் கதைப்பகுதிக்கு இதற்கு முன்னால் எழுதிய எழுத்தாளர்களைத் தொடர்பு கொண்டு அவர்களிடம் சிறுகதைகளை வாங்கிப் பிரசுரிக்க எபி முயற்சி செய்தால் அது
    இந்தப் பகுதியின் வருங்கால சிறப்பிற்கு நிச்சயம் உதவும். வாசித்து
    கருத்திடும் வாசகர்களின்
    எண்ணிக்கையும் கூடும் என்பது திண்ணம். இதற்கு எபி தன்னாலான முயற்சிகளைச் செய்ய வேண்டும் என்று எபியின் நெடுங்கால வாசகன் என்ற ஆர்வத்தில் கேட்டுக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. பின்னர் நீல நிற மாருதி எஸ்டீம் வண்டி , பிறகு ஆரஞ்சு நிறத்தில் ஜொலிக்கும் டாட்டா பஞ்சில் இப்போது வந்து நிற்கிறது.//

    கடைசியாக வாங்கிய ஆரஞ்சு நிறத்தில் ஜொலிக்கும் டாட்டா பஞ்சின் பக்கத்தில் நின்று எடுத்த கந்தன் படம் கிடைக்கவில்லை போலும் சாருக்கு . பழைய நீல நிற மாருதி அருகில் கந்தன் பவ்வியமாக கை கட்டி கொண்டு இருக்கும் படம் அருமை.

    பதிலளிநீக்கு
  13. கந்தன் போன்ற அப்பாவி மனிதர்கள் கிடைப்பதே சொர்க்கம்.

    காப்பிப் பொடியும் மனித மனங்களின்விசித்திரங்களும்.. பலவகை மனிதர்கள்.

    நல்ல கதையை தந்துள்ளீர்கள்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!