வியாழன், 22 பிப்ரவரி, 2024

முதல் தேதியும் முன்னூறு ரூபாய் சம்பளமும்

 'அந்தக் காலத்தில் நாங்கள் எல்லாம்' என்று பேச இப்போதெல்லாம் நிறைய விஷயங்கள் சட்சட்டென கிடைத்து விடுகின்றன!

சென்ற இரு வாரங்களாக நாம் பார்த்த, நாம் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிற இந்த டிஜிட்டல் பணம் வராத காலம் ஒன்றும் வெகு நாட்களுக்கு முன்னால் இல்லை.  இதோ..  இப்பொழுதுதான் கொஞ்ச வருடங்கள் முன்னே..

'மாப்பிள்ளை கைநிறைய சம்பளம் வாங்கறார்' என்கிற ப்ரோக்கரின் சொல்லுக்கு இலக்கணப்படி சுத்தமான அர்த்தம் இருந்த காலம்!

இப்படி கண்ணால் பார்க்காமலேயே பணம் நம்முடன் விளையாடும், நாம் நம் செலவுகளை பணத்தைக் கண்ணால் பார்க்காமலேயே செய்யலாம் என்று கற்பனை கூட செய்து பார்த்திருக்க மாட்டோம்!  சிறு வயதில் ட்ரேட் விளையாடுவோமே..  அது மாதிரி.

எங்கள் வீட்டில் காசு டப்பா என்று ஒன்று இருந்தது.  ஆச்சர்யம் என்ன என்றால் அந்த காசு டப்பா ஒரு சிகரெட் டப்பா.  இரண்டு உள்ளங்கைகளையும் சேர்த்தால் கிடைக்கும் அளவில் ஒரு சதுரமான அலுமினியம்  டப்பா.  பத்து சிகரெட்களை நீளவாக்கில் வரிசையாக அடுக்கலாம் என்பது போல இருக்கும் அளவு.  அவ்வளவு அகலமாக அதே சமயம் ஒடுங்கிய டப்பா..  அந்தக் காலத்து பணத்தில் அதிக பட்சம் ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாகத்தான் அதில் வைக்க முடியும்.  ஆனால் ஆயிரம் ரூபாய் என்பது ஒரே சமயத்தில் அப்போது கண்ணால் பார்க்காதது.  

அப்பா சம்பளம் வாங்கி வந்து பணத்தை அதில்தான் வைப்பார்.  என்ன சென்டிமென்ட்டோ...  அதுவும் சம்பளம் வாங்கி வந்து சாமியிடம் வைத்து விட்டு, கைகால் அலம்பிக் கொண்டு  ஹாலில் அமர்ந்து அம்மாவிடம் அந்த காசு டப்பாவை எடுத்து வரச் சொல்வார்.  அம்மாவும் அப்பா பீரோவைத் திறந்து அந்த டப்பாவை எடுத்து வருவார்.  அப்பாவின் அருகில் அமர்வார்.  (ஆரம்ப காலங்களில்) நாங்கள் சுற்றி நின்றிருக்க  பணத்தை ஒரு முறை எண்ணி அம்மா கையில் கொடுத்து உள்ளே வைக்கச் சொல்வார்.  இரண்டு மூன்று நோட்டுகளுக்குள் இருக்கும்.  எவ்வளவு எண்ணினாலும் அவ்வளவுதானே இருக்கும்!  அன்று செலவுக்கு அதிலிருந்து எடுக்க மாட்டார்.  அவசரத்துக்கு சட்டைப் பாக்கெட்டில் இருக்கும் பணம், இல்லாவிட்டால் பல்லைக் கடித்துக்கொண்டு மறுநாள் வரை காத்திருப்பு.  மறுநாள் முதல்தான் மற்ற செலவுகள்.  ஆனாலும் பதினைந்து இருபது தேதிகளில் டப்பாவில் ஓரிரு ரூபாய்கள்தான் மிச்சமிருக்கும்!  வெகு சில சமயங்களில் எங்கிருந்தாவது சிறிய தொகை கடன் வாங்கி வருவார்!  மறுபடியும் காசு டப்பா நிகழ்ச்சி அரங்கேறும்.  அப்போதெல்லாம் என் ஆசை, குறைந்தபட்சம் முன்னூறு ரூபாய் வாங்கும் ஒரு அரசு உத்யோகம்தான்!   பெரிய தொகை! 

அப்பாவுக்கு வரவு செலவு கணக்கு எழுதும் பழக்கம் இருந்தது.  காலை எழுந்ததும், அல்லது மிகச் சில சமயங்களில் இரவு படுக்கப்போகும் முன்பு கணக்கு எழுதி விடுவார்.  எங்களை எல்லாம் அழைத்து கணக்கு கேட்பார்.  தக்க ரசீதுடன் தயாராக இருக்க வேண்டும்!  என்ன செலவு, வேறென்ன செலவு என்று நோண்டி எடுத்து விடுவார்.  அவர் எழுதி வைத்த வரவு செலவுக் கணக்குகள் அண்ணன் வீட்டில் எங்கேயோ எடுக்க முடியாத இடத்தில் பரணின் ஆழத்தில் அடைந்துள்ளது.  அவைகளை எடுத்துக் பார்க்க ஆசை.  காலக்கண்ணாடி.  

அதிலேயே கமிஷன் அடித்து சினிமாக்கள் பார்த்திருக்கிறேன், ஸ்கூலில் ஐஸ்க்ரீம் வாங்கி சாப்பிட்டிருக்கிறேன்!!!  அந்த கணக்கில் க தி த என்று எழுதி ஒரு பெயரை எழுதி ஒரு தொகை எழுதும்போதுதான்   கடன் வாங்கி இருந்தார் என்று தெரியும்.  க தி த = கடன் திருப்பித் தந்தது   

எங்களுக்கெல்லாம் ஆளுக்கொரு பர்ஸ் வாங்கி கொடுத்திருந்தார்.  அதில் மடித்து வைக்கப்பட்டிருக்கும்  பேப்பர் இருக்கும், எவ்வளவு வரவு, எவ்வளவு எடுத்தோம் என்று எழுத..  பெயர்தான் எங்கள் பர்ஸ்...  நாங்கள் அதிலிருந்து எடுத்து செலவழித்ததில்லை!  மாமாக்கள் உறவுகள் நம் இல்லம் வந்து கிளம்பினால் எங்களுக்கெல்லாம் ஊர்க்காசு தருவார்கள்.  அஞ்சு பைசா அம்மு போல அதை நாங்கள் பர்சில் சேமித்து வைக்க பணிக்கப்படுவோம்! அதாவது உடனடியாக அது எடுத்து செலவழிக்கப்பட மாட்டாது!  உடனடியாக என்ன, நாங்கள் அதை எங்கள் காசு என்று செலவு செய்ததே இல்லை!  எங்கள் பெயரில் அப்பா வைத்திருந்த பினாமி கணக்கு!  இதைத்தவிர பிறந்த நாளுக்கு அப்பா தரும் காசும் அதில்தான் இருக்கும்.  அப்பா பெரும்பாலும் அம்மாவிடமிருந்தும் அவ்வப்போது எங்களிடமிருந்து 'கடன்' வாங்குவார்!  வரவு - செலவுக் கணக்கு நோட்டில் எங்கள் பெயர்கள் ஏறும்.  இன்னமும் என் பிரவுன் கலர் சொரசொர பர்ஸ் என் நினைவில் இருக்கிறது.  உள்ளே புது ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் நோட்டுகள்...நாணயங்கள்..  அதற்கான கணக்கு சொல்லும் வெள்ளை பேப்பர்...  

========================================================================================



========================================================================================================

ஏகாந்தமாய் 

சோமாலிய இரவொன்றில் இந்திய இசைக்கான முஸ்தீபுகள் !

நெருக்கடிகள், சவால்கள் மிகுந்த இந்த ஆஃபிரிக்க போஸ்ட்டிங்கில் அவ்வப்போது தலைகாட்டிய இந்தியப் பண்டிகை நாட்கள் சற்றே மனசுக்கு ஆசுவாசம் தந்தன. இணக்கமான இந்திய நண்பர்கள் சோமாலியாவில் அமைந்துவிட்டிருந்ததால் நான் பிழைத்தேன்! பெரிய இடைவெளிகளுக்குப் பின் நிகழ்ந்தாலும், நண்பர்களோடான சில சந்திப்புகள், கொண்டாட்டங்கள் மனதுக்குக் குதூகலமாக, இதமாக அமைந்துவிட்டன. பொழுதும் எதிர்பார்த்ததைவிட, ஒருவழியாக நல்லபடியாகப் போய்ச்சேர்ந்தது எனலாம்.

பொதுவாகப் பண்டிகை தினங்களின் இரவை மொகதிஷு-வாழ் இந்திய
நண்பர்கள், கேசவன் சாரின் வீட்டில் கொண்டாடுவது வழக்கமாக
இருந்தது. வீடு என்கிற பெயரில் பெரியதொரு பங்களாவை அவர் வேலை
பார்த்த உலக வங்கி வாடகைக்கு எடுத்துக் கொடுத்திருந்ததால், அது
பண்டிகைப்பொழுதுகளைக் கூட்டத்துடன் குதூகலமாகக் கொண்டாட
இந்தியக் குழுவினருக்கு வசதியாகிப்போனது. (அந்த நகரில் எம்பஸி/ ஐ.நா. போன்ற சர்வதேச அலுவலகங்களுக்குக் கொடுத்ததுபோக, ஒரு சில நல்ல நிலையிலிருந்த பங்களாக்கள் ஊரின் வெளிப்புறங்களில் அமைந்திருந்தன.

மிகையான டாலர் தொகைக்கு வெளிநாட்டவருக்கு அவை வாடகைக்குக்
கொடுக்கப்பட்டன). மேலும், அவரது வீட்டின் முன்னே, நன்கு 
பராமரிக்கப்பட்ட பெரிய தோட்டம் ஒன்று வியாபித்திருந்தது. 50-60 பேர்
வசதியாக உட்காந்து பார்ட்டி செய்ய ஏதுவாக அது அமைந்திருந்தது.
கேசவன் சாரும், அவரது மனைவி ஜெயாவும் அன்பர்களை, நண்பர்களை
அழைத்து உணவளிப்பதில், உபசரிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டும்
நல்மனத்தினர் என்பது இங்கே குறிப்பிடப்படவேண்டிய விஷயம்.
ஒரு வருடம், அப்படி ஒரு புத்தாண்டுக் கொண்டாட்டத்தை இந்திய இசை
விழா மற்றும் டின்னர் என, கேசவன் சாரின் ஹாஸ்பிட்டாலிட்டியில்
கொண்டாடுவது என்று ஏற்பாடாகி இருந்தது. அதற்கு முந்தைய டிசம்பர்
மாதம் நெடுகிலும், இந்தியர்கள் யார் வீட்டில் லஞ்ச்/டின்னர் எனச்
சந்தித்தாலும் ஹிந்தி, தமிழ்ப் பாடல்கள்பற்றிய பிரஸ்தாபமே
பெரும்பாலும் போய்க்கொண்டிருந்தது. புத்தாண்டிரவு யார், எந்தப் பாட்டைப் பாடுவது, யார் வீட்டில் சேர்ந்து உட்கார்ந்து அதற்கான பயிற்சி
மேற்கொள்வது என்கிற பேச்சே தடதடத்துக்கொண்டிருந்தது. நண்பர்
ரவீந்திரன், ஐ.நா.வில் கன்சல்ட்டண்ட்டாக இருந்த சிதம்பரம் சாரின்
மனைவி உஷா, ஐநாவின் இன்னுமொரு அதிகாரியாக இருந்த ஜெயராமன்
சாரின் மனைவி லலிதா, நமது பீஹார் நண்பர் கபூர் போன்றோர் இதில்
பெரும் முனைப்புக் காட்டினர். எங்களில் மற்றவர்கள் பெரும்பாலும் ரசிகர் கூட்டத்தைச் சார்ந்தவர்கள்!

கபூருக்கு பழைய ஹிந்தி சினிமாப் பாடல்களில் பெரும் மோகம் இருந்தது.
கூடவே, பங்கஜ் உதாஸ், ஜெகஜீத் சிங், (பாகிஸ்தானின்) குலாம் அலி
ஆகியோரின் கஸல்களை (Ghazal)யும் அவர் விடுவதில்லை. பார்ட்டிகளில்
கொஞ்சம் ஸ்காட்ச்சை உறிஞ்சிவிட்டு, எதையாவது ’ஹம்’
செய்தவாறிருப்பார். நான் அவரைக் கவனிப்பதைப் பார்க்க நேர்ந்தால்..
லேசாகப் புன்னகைத்துவைப்பார்! ’தோடி.. தோடி.. பீயா கரோ.. (Thodi..thodi..
peeyaa karo..! (கொஞ்சமா.. கொஞ்சமா.. குடிச்சுவைப்பா..)’ என மென்மையாக எச்சரிக்கும் பங்கஜ் உதாஸ் (Pankaj Udhaas), மேலும் அவரின் (ச்)சிட்டி ஆயீ ஹை… ஆயீ ஹை.. (ச்)சிட்டி ஆயீ ஹை..(லெட்டர் வந்திருச்சு.. வந்திருச்சு..) எனும் கஸல், குலாமி அலியின் (ச்)சுப்கே.. (ச்)சுப்கே.. ராத் தின்.. ஆஸூன் பஹானா யாத் ஹை.. (Chupke chupke raat .. din.. Aasoon bahaanaa.. yaad hai.. Chupke Chupke.. (யாருக்கும் தெரியாமல், இரவு மற்றும் பகற்பொழுதுகளிலும்.. கண்ணீரைப் பெருக்கி.. விட்டது..
நினைவிலிருக்கிறது…) போன்ற கஸல்கள் ரசிகர்களின் மனங்களில்
நர்த்தனமாடிக்கொண்டிருந்த காலகட்டமது. கபூர் அந்தப் புத்தாண்டிரவுக்
கொண்டாட்டத்தில் ஒரு கஸலை மெல்ல எடுத்துவிடலாமா என்று
ரகசியத் திட்டமிட்டவாறிருந்தார் எனப் பேச்சு அடிபட ஆரம்பித்தது!

சோமாலி அரசு தொழிற்சாலை ஒன்றில் அக்கவுண்ட்டண்ட்டாக அப்போது
பணிபுரிந்த பாம்பேயைச் சேர்ந்த கோவிந்த் குமார் மிகவும்
மென்மையானவர். மிருதுவாகப் பழகும் நண்பர். அவரையும் இந்த ஹிந்தித் திரையிசை -குறிப்பாக அப்போதே பழையவை என்று கருதப்பட்ட ராஜ் கபூர், தேவ் ஆனந்த், திலீப்குமார், சஞ்சீவ் குமார் படப் பாடல்கள்- கட்டிப்போட்டுவைத்திருந்தது. திரையிசைக்கு இன்னுமொரு இனிய அடிமை. அவர் வீட்டுக்கு அரட்டைக்காகப் போன சில
மாலைப்பொழுதுகளில், அந்த ஸான்யோ டூ-இன்–ஒன் –இல் பழைய 
ஹிந்திப்படப் பாடல்கள் ரம்யமாக ஒலித்துக்கொண்டிருப்பதைக் கேட்டு
ஆனந்தப்பட்டிருக்கிறேன். நண்பர்கள் சிலர் கோரிக்கை விடுத்தும், அந்தப் பாடல் நிகழ்ச்சியி\ல் பாட கோவிந்த் முதலில் தயங்கினார். கூச்ச சுபாவம் அவரைப் படுத்தியது. பின்னர் இணங்கி, தனக்கென ஒரு பாட்டைத் தேர்வு செய்திருந்தார் கோவிந்த். அந்தக்கால ஸென்ஸேஷனான நர்கீஸ் தத் (Nargis Dutt) , ராஜ் கபூர் ஜோடிக்காக லதா மங்கேஷ்கர், மன்னா டே (Manna Dey) 1957 படமான ‘(ச்)சோரி.. (ச்)சோரி (Chori Chori)’யில் அருமையாகக் குரல்கொடுத்திருந்த ஒரு பாடலது.

சோமாலியாவின் அந்தக் கொண்டாட்ட இந்திய இரவில், திட்டங்கள்,
பயிற்சிகளைத் தாண்டி நமது திரு-க்களும், திருமதிகளும் என்னதான்
இறுதியாகப் பாடிப் படுத்தினார்கள்! எப்படிக் கழிந்தது அந்தப் பொழுது?
அடுத்த வியாழன் மெல்ல வரட்டுமே. அதைக் கொஞ்சம் சொல்லட்டுமே..

**
===========================================================================================

நியூஸ் ரூம் 
பானுமதி வெங்கடேஸ்வரன் 

- காதலர் தினத்திற்கு ரோஜா ஏற்றுமதி சரிந்தது. 50 லட்சம் இலக்கு நிர்ணயித்திருந்தது 30 லட்சம் மட்டுமே ஏற்றுமதி.

- கும்பகோணத்தை சேர்ந்த தனியார் வங்கி ஊழியரான, 40 வயதான ஆர்த்தி என்பவர் 30 லட்சம் ஆன்லைனில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என்று அவருக்கு வந்த குறுஞ்செய்தியை நம்பி, தன் நகைகளை விற்று முதலீடு செய்திருக்கிறார். பிறகுதான் அவருக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரிந்திருக்கிறது. இந்த விஷயம் குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் தெரிந்தால் அவமானமாகும் என்றும், தான் இறந்து விட்டால் தன் இரு மகள்களின் கதி என்னவாகுமோ என்றும் யோசித்த அவர், கண்களை கட்டியபடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். - ஆசையே மரணத்திற்கு காரணம்.

- ரோட்டமைன் பி என்னும் ரசாயனம் கலந்திருப்பதால் பஞ்சு மிட்டாய்க்கு தமிழக அரசு தடை விதித்திருக்கிறது.கர்நாடகாவிலும் அதை தடை செய்ய பரிசீலனை செய்வோம் என கர்நாடகாவின் சுகாதாரத்துறை கமிஷனர் அறிவிப்பு. 

- உயர் விளைச்சல் அரிசி ரகங்கள் தமிழகத்தில் அறிமுகம்.

- ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருக்கும் பெற்றோர் மூன்றாவது குழந்தையை தத்தெடுக்க அளித்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, முழுக்க முழுக்க குழந்தைகளின் நலனை மையப்படுத்தியே தத்தெடுப்பு சட்டம் செயல்படுகிறது. குழந்தையை தத்தெடுப்பது அடிப்படை உரிமை கிடையாது, தான் விரும்பும் குழந்தையை தத்தெடுக்கும் உரிமை பெற்றவர்களாக விரும்புகிறவர்களுக்கு கிடையாது என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதி கூறியிருக்கிறார். சட்டம் ஒரு இருட்டறைதானோ?




============================================================================================


தமிழில் மாற்று சினிமாவுக்கான முன்னோடி நீங்கள். அப்படியொரு பரீட்சார்த்த முயற்சிக்கு உங்களைத் தூண்டியது எது?

1976 முதல் மாற்று சினிமாவுக்கான முயற்சியில் ஈடுபட்டேன். நண்பர்கள் உதவியுடன் ‘குடிசை’ படத்தைத் தொடங்கினேன். மிகப் பெரிய போராட்டத்துக்குப் பின்னர் 1979 மார்ச்சில் படம் வெளியானது. இதன் பின்னால் சுவாரஸ்யமான சங்கதிகளும், சங்கடங்களும் உண்டு. திரைத் துறைக்கு வருவதற்கு முன்னால் பத்திரிகையாளனாகப் பணிபுரிந்தேன். தினமணியில் உதவி ஆசிரியர் பணி. சிறுகதைகளுடன் சினிமா விமர்சனமும் எழுதுவேன். அப்போது காரசாரமான சினிமா விமர்சகர்கள் மூவரில் நானும் ஒருவன். மற்றவர்கள் சுஜாதா, புஷ்பா தங்கதுரை. இந்தி, ஆங்கிலம், தமிழ்ப் படங்களுக்கு விமர்சனம் எழுதுவேன். அப்படித்தான் என் சினிமா வாழ்க்கை தொடங்கியது.

இயக்குநர் பாலசந்தர் உங்கள் விமர்சனங்களைப் படித்துவிட்டு உங்களைக் கடிந்துகொண்டதாகவும் அதன் தொடர்ச்சியாக நீங்களே படம் எடுக்கத் தொடங்கியதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். உண்மையா?

என் விமர்சனங்களைப் பார்த்துவிட்டு என்னைப் பற்றி அனந்துவிடம் விசாரித்திருக்கிறார் இயக்குநர் கே.பாலசந்தர். “ஏ.ஜி. ஆபீஸில் பணிபுரியும் எழுத்தாளர் து.ராமமூர்த்தியின் மகன்தான் ஜெயபாரதி” என்றிருக்கிறார் அனந்து. பாலசந்தரும் ஏ.ஜி. அலுவலகத்தில் பணிபுரிந்தவர்தான். ஒரு நாள் அனந்து என்னை தினமணி அலுவலகத்தில் வந்து பார்த்தார். “பாலசந்தர் உன்னைப் பார்க்கணும்ன்னு சொல்றார். கார் கொண்டுவந்திருக்கிறேன். வா” என்றார்.

“பாலசந்தர் கார் அனுப்பி என்னை அழைக்கிறார் என்றால், அது பலருக்குக் காழ்ப்புணர்ச்சி வந்துவிடும். என் உத்தியோகத்துத்தான் ஆபத்து. நான் பஸ்ஸிலேயே வந்துவிடுகிறேன்” என்றேன். மதியம் மூன்று மணிக்கு பஸ் பிடித்து சர்.சி.வி.ராமன் சாலையில் இருந்த பாலசந்தர் அலுவலகத்துக்குச் சென்றேன்.

பாலசந்தர் உட்பட மொத்த அலுவலகமும் எனக்காகக் காத்திருந்தது. “வாய்யா உக்காரு. திமிர் பிடிச்சவனே” என்றுதான் வரவேற்றார் பாலசந்தர். “நீ யாரோட புள்ளைன்னு கேள்விப்பட்டேன். அது என்னய்யா சகட்டுமேனிக்கு எல்லாப் படத்தையும் விமர்சனம் பண்றே?” என்றார். “நல்லா இருந்தா நல்லா இருக்குன்னு எழுதறேன். இல்லைன்னா நல்லால்லேன்னு எழுதறேன். இதுல என்ன சார் தப்பு” என்றேன். “எதுதான் நல்ல சினிமா?” என்றார். “அது வேற சார். நான் எடுத்துக் காட்டுறேன்” என்றேன்.

அப்போது உங்களுக்கு திரைத் துறையில் பின்னணி ஏதேனும் இருந்ததா?

இப்போது வரை எனக்கு திரைத் துறையில் எந்தப் பின்னணியும் இல்லை. உண்மையில் பலரும் நான் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்தவன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பிற இயக்குநர்களிடம் பணிபுரிந்த அனுபவம் கூட இல்லை எனக்கு. என் பட படப்பிடிப்பில்தான் சினிமா கேமராவையே பார்த்தேன்! திரைத் துறை சார்ந்த புத்தகங்களை வாசித்து, சுயமாகவே சினிமாவைக் கற்றுக்கொண்டவன் நான். தவறுகளிலிருந்து பாடம் கற்றபடி சினிமா ஊடகத்தைக் கற்றுக் கொண்டேன்.

அந்தக் காலகட்டத்திலேயே சினிமாவில் நடிக்கவும் வாய்ப்பு வந்தது. இல்லையா?

ஆமாம். பாலசந்தர் என்னை நடிக்க வைக்க விரும்பினார். வழக்கமாக, உட்லேண்ட்ஸ் ஓட்டலில் எனக்கு சிற்றுண்டி வாங்கித் தருவார். ஒருமுறை “உன்னோட கண்கள் தீர்க்கமானவை. நீ ஏன் என் படத்தில் நடிக்கக் கூடாது? ரெண்டு ஸ்டில்ஸ் எடுத்துட்டுவா” என்றார். “சார், விளையாடாதீங்க. டிபன் வாங்கித் தாங்க. சாப்பிட்டுட்டு கெளம்புறேன்” என்றேன்.

 அதுபற்றிக் கேள்விப்பட்ட (ராபர்ட்) ராஜசேகர் “எவ்ளோ பெரிய வாய்ப்பு! ஒரு பெரிய டைரக்டர் உன்னை ஹீரோவாக்கணும்னு சொல்றார். நான் புகைப்படம் எடுத்துத் தர்றேன்” என்று என்னிடம் சொன்னார். இரண்டு ’ஸ்டில்’களை எடுத்துக்கொண்டு பாலசந்தரிடம் ராஜசேகரே சென்று கொடுத்துவிட்டார். அது பாலசந்தருக்கு அது மிகவும் பிடித்துவிட்டது. “என்னிக்கு வேணாலும் கார் அனுப்புவேன். தயாரா இரு. நீ ஹீரோ” என்றார் என்னிடம்.

எந்த வருடம் அது?

1976. ‘மூன்று முடிச்சு’ படத்தில் ரஜினி நடித்த வேடத்தில் முதலில் என்னைத்தான் நடிக்கவைக்க நினைத்திருந்தார் பாலசந்தர். அவர் கூப்பிட்டபோது, “சார், நான் படம் இயக்கலாம்ன்னு இருக்கேன். நடிகனாக்கி, என்னைத் திசைதிருப்பப் பாக்குறீங்களா?” என்றேன். “யோவ், நீ படம் எடுத்தா எனக்கு என்னய்யா?” என்றார். “நான் உங்களுக்குப் போட்டியில்லை. நான் நல்ல படம் எடுப்பேன். தனியா நிப்பேன்” என்றேன் விடாப்பிடியாக.

“பார்க்கலாம், பார்க்கலாம். நான் கூப்பிடுறேன். வா” என்றார். படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னர் அனந்துவிடம், “எங்கேய்யா அவன்?” என்று கேட்டிருக்கிறார். “ஜெயபாரதி படம் எடுக்க ஆரம்பிச்சாச்சு. டைரக்டர் ஆய்ட்டார் சார்!” என்றிருக்கிறார் அனந்து. “என்னய்யா இது அவனை ஹீரோவாக்கணும்னு நினைச்சேன். டைரக்டராய்ட்டானே!” என்று சலித்துக்கொண்டாராம் பாலசந்தர்.

ஏன் அத்தனைப் பெரிய வாய்ப்பைத் தவறவிட்டீர்கள்?

கல்லூரிக் காலங்களில் நாடகங்களில் நடித்திருக்கிறேன். பரீக்‌ஷா ஞாநியின் நாடகங்களில் நடித்திருக்கிறேன். ஆனால், என்னுடைய இலக்கு நடிப்பு அல்ல. இயக்கம்தான்! ஆனால், நல்ல வாய்ப்பைத் தவற விட்டுவிட்டீர்களே என்று இன்னமும் பலர் சொல்வதுண்டு.

-இயக்குநர் ஜெயபாரதி பதில் 
நன்றி: இந்து தமிழ் திசை  நன்றி திரு R. கந்தசாமி, முகநூல் 

========================================================================================================

இணையத்தில் பார்த்து திகைத்து வருந்தியது..

Death at the Windmill

Four engineers were performing routine maintenance at the 

top of a 67-meter-high wind turbine in Holland when a fire broke 

out atop the turbine. 

Two of the engineers thankfully managed to escape safe and sound. 

The other two were trapped at the top and died in the burning flames. 

In this photo, you can see the pair hugging each other as they await their deaths. 

We only hope that this human connection may have made facing 

the situation a bit more bearable.


===================================================================================


மூன்று வித்தியாசமான, கருத்தைக் கவர்ந்த செய்திகள்....

-------------------------------------------------------------
------------------------------------------------------------------

========================================================================================================



கனவொன்று கண்டேன்...

கனவு காண்பதாய்
கனவொன்று கண்டேன்...
கனவுக்குள் வந்த
கனவிலும்
கனவு காண்பதாய்
கனவுதான்
கண்டு கொண்டிருந்தேன்...
ஆமாம் ,
கனவுகளே ஏன்
கனவுகளாக
வருகின்றன?                                  - செப் 27 2014

================================================================================================


பொக்கிஷம் : -

இப்படி ஒரு முகப்பவுடர் பெயரை கேள்விப்பட்ட மாதிரியும் இருக்கிறது.  புதுசாகவும் இருக்கிறது!


என்றென்றும் மாறாதது!


அடடே...


நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை!

ஓல்ட் கிரிக்கெட் செய்தி!


98 கருத்துகள்:

  1. அஞ்சு பைசா கிடைக்காமல் கஷ்டப்பட்ட காலங்கள் அப்போ கசப்பாக இருந்தாலும் இப்போது இனிப்பதேன்? காசு இருக்கும் காலம் இப்போதிருந்தாலும் பொறுப்பு நம்மை சந்தோஷமாக வைத்துக்கொள்ளத் தவறுகிறதா? விடை தெரியாத கேள்விகள்... ஈரோட்டிலிருந்து

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த நிலையே இப்போதும் இருந்தால் இனிக்காது.  அந்தக் காலத்தைக் கடந்து விட்டோம் என்பதால்தான் இனிக்கிறது!  நாம் பெரும்பாலும் நிகழ்கால இன்பங்களைத் துறந்து அலலது மறந்து கடந்த காலங்களில்தான் வாழ்கிறோம்.  

      நீக்கு
    2. உண்மை. லிவிங் இன் பாஸ்ட் எதையும்அனுபவிக்க முடியாமல் செய்துவிடுகிறது. இருந்தாலும் இளமைக் காலங்கள் போலாகுமா

      நீக்கு
    3. யாருக்குமே இளமையைத் தொலைக்க மனம் வருவதில்லை.  மனதில் என்றும் இளையவர்கள்தான்!

      நீக்கு
    4. நெல்லை ஆஹா ஈரோடா...காலில் சக்கரம்!!

      அதேதான்.....கடந்த கால இளமை அதை இப்போதும் மனதில் தக்க வைத்துக் கொள்வது நலல்து ஆனா அந்த வாழ்க்கை அனுபவங்களை இப்போதைய வாழ்க்கையோடு ஒப்பிடாமல் பார்த்தால் நாம சந்தோஷமா இருப்போம்....

      கீதா

      நீக்கு
  2. முகப்பவுடர் விளம்பரம் ஒன்பது-பனிரண்டு வகுப்பு ஹாஸ்டல் வாழ்க்கைக்கு இட்டுச்செல்கிது மனதை. இமாமி பவுடர் வைத்திருந்தவன் மாடர்ன், பணக்காரன் என்ற எண்ணம் அப்போது. அந்தக் காலங்கள்தாம் பிற்காலத்தில் பவுடர் என்றால் பத்து வெரைட்டி, எண்ணெய் ஐந்து, பெர்ப்யூம் இருபது.சோப் பத்து.. என பாத்ரூமில் அடுக்கி வைத்துக்கொள்ளும் மனநிலையை எனக்குத் தந்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏற்கெனவே சொல்லி இருக்கிறேன்.  நான் Second Nature என்றொரு முகப்பவுடர் உபயோகித்தேன்.  மிகவும் பிடித்திருந்தது.  பின்னர் அது தயாரிப்பையே நிறுத்தி விட்டது போல, கிடைப்பதில்லை.

      நீக்கு
  3. Death at windmill ஏன் இந்தக் கொலைவெறி உங்களுக்கு? பெங்களூரில் தீப்பிடித்த வீட்டின் பால்கனியில் மாட்டிக்கொண்டு பிறகு தீப்பிடித்து அலறி இறந்த பெண்ணின் காணொளி நினைவுக்கு வருது. இது தேவையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட, அதையும்தான் பார்த்து வைப்போமே, தெரிந்து கொள்வோமே..  சில சமயங்களில் நிலையாமை தத்துவம் சில கண்களை நமக்குள் திறந்து விடுமே...

      நீக்கு
  4. ஜெயபாரதி.... வாய்ப்பு கிடைத்தும் கோட்டைவிட்ட 16வயது டாக்கர் சங்கமம் ரகுமான் நிழல்கள் நடிகர்கள் பூஜைக்காக வாழும் பூ காதல் ஓவியம் நடிகர் எனப் பலரை நினைவுபடுத்துகிறது அதிகம் எழுத முடியவில்லை

    பதிலளிநீக்கு
  5. மாப்பிள்ளை கைநிறைய சம்பளம் வாங்கறார்' என்கிற ப்ரோக்கரின் சொல்லுக்கு இலக்கணப்படி சுத்தமான அர்த்தம் இருந்த காலம்!//

    ஹாஹாஹாஹா ஸ்ரீராம் அதெல்லாம் மலை ஏறிப் போச்சு! இப்ப கதையே வேற. கை நிறைய வாங்கினாலும் பத்தாதாம்!!! பண வீக்கம் ஒரு புறம் இருந்தாலும், மனதில் திருப்தி இல்லாமை, அதீதமான ஆசைகளும் காரணமாகின்றனவோ காலத்திற்கு ஏற்ப என்று தோன்றுகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாமே கண்ணால் பார்க்காத பணம்...   ஞானக்கண்ணுக்கு மட்டும் தெரியும்!

      பணவீக்கமல்ல...  டெக்னாலஜி..  புராணத்தை தன் கையிலேயே வைத்துக் கொள்ளும் அரசாங்கத்தின் சாமர்த்தியம்!  அப்பாவு எங்கள் பெயரில் வைத்திருந்த பினாமி கணக்கு போல - கிட்டத்தட்ட!

      நீக்கு
  6. மாப்பிள்ளை கைநிறைய சம்பளம் வாங்கறார்' என்கிற ப்ரோக்கரின் சொல்லுக்கு இலக்கணப்படி சுத்தமான அர்த்தம் இருந்த காலம்!//

    ஹாஹாஹாஹா ஸ்ரீராம் அதெல்லாம் மலை ஏறிப் போச்சு! இப்ப கதையே வேற. கை நிறைய வாங்கினாலும் பத்தாதாம்!!! பண வீக்கம் ஒரு புறம் இருந்தாலும், மனதில் திருப்தி இல்லாமை, அதீதமான ஆசைகளும் காரணமாகின்றனவோ காலத்திற்கு ஏற்ப என்று தோன்றுகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. ஆமாம் இப்ப பணத்தைக் கண்ணால் பார்க்காமல் போல தங்கம், வெள்ளி வாங்காமலேயே முதலீடுகள் வந்துவிட்டனவே paper gold, silver என்று!

    கீதா

    பதிலளிநீக்கு
  8. அந்த காசு டப்பா ஒரு சிகரெட் டப்பா. இரண்டு உள்ளங்கைகளையும் சேர்த்தால் கிடைக்கும் அளவில் ஒரு சதுரமான அலுமினியம் டப்பா. //

    அட அப்படி எல்லாம் கூட டப்பா இருந்ததா!

    //ஆனால் ஆயிரம் ரூபாய் என்பது ஒரே சமயத்தில் அப்போது கண்ணால் பார்க்காதது. //

    நூறு ரூபாயே பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய விஷயம் ஸ்ரீராம் நமக்கு அப்ப.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருந்தது. எங்கள் வீட்டில் யாராவது அந்த சிகரெட் பெயர் கூட சொல்லக்கூடும் - நினைவிருந்தால்!

      நீக்கு
  9. அப்பா சம்பளம் வாங்கி வந்ததும் நீங்கள் சொல்லியிருக்கும் அனுபவங்கள் ஆஹா!!

    ம்ஹூம் அந்த மாதிரி இனிய அனுபவங்கள் இல்லை.

    எனக்கும் வரவு செலவு எழுதும் பழக்கம் இருந்தது....இப்போதும் தொடர்கிறது அவ்வப்போது....

    ஹையோ ஆமாம் அப்ப உறவுகள் வரப்ப கைல காசு கொடுப்பாங்க அஞ்சு பைசா என்பதே மிகப் பெரிய விஷயம் நமக்கு அதைத் திருப்பி திருப்பிப் பார்த்து, எங்கேனும் இடுக்கி வைத்துக் கொண்டு அவ்வப்போது இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்துக் கொண்டு எங்களுக்குள் நடந்ததுண்டு. அப்ப பெரிய குடும்பமாச்சே! ஆனால் பாட்டி யார் யாரிடம் என்ன பைசா இருக்கு என்று கேட்டு அதைக் கழித்துக் கொண்டுதான் பஸ்ஸிற்குப் பைசா தருவார் 10 பைசா அப்போது 5 பைசாதான் தருவார்!!! 5 பைசாவுக்கு மிட்டாய், கொடுக்காப்புளி வாங்கித் தின்னவங்க முழிப்பாங்க!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரவு செலவு கணக்கை நிறுத்தி 22 வருடங்கள் ஆகிறது.  அம்மா மறைந்தபோது ஒரு வெறுப்பில் நிறுத்தினேன்.

      நீக்கு
  10. எங்கள் பெயரில் அப்பா வைத்திருந்த பினாமி கணக்கு! //

    ஹாஹாஹாஹா இதேதான் எங்க கதையும்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  11. அட! அம்பையின் இள வயதுப் படம்! கொஞ்சம் வயதான படத்தைதான் பார்த்திருக்கிறேன்.

    பின்னர் வருகிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  12. அப்போது திருச்சியில் இருந்தோம். அப்பா excise டிபார்ட்மெண்டில் தப்பிஸ்ட். ஒன்றாம் தேதி 100 ஒரு ரூபாய் நோட்டுகளாக கொண்டு வருவார். வாடகை கொடுத்து விட்டு பாக்கியை அம்மாவிடம் கொடுத்து விடுவார். அம்மாவும் சிரத்தையாக காலணா அரையணா கணக்கு விடாமல் ஒரு சிறு நோட்டில் கணக்கு வைத்திருப்பார். வாங்கும் சம்பளம் 20 தேதி வரை தான் வரும். முதல் தேதி என்ற சினிமா பார்த்திருப்பீர்கள். அந்தக் கதைதான் எங்கள் வீட்டிலும்.
    என்னுடைய முதல் சம்பளம் 325 ரூபாய் (பிடித்தம் இல்லாமல்).

    காதல் ராஜாக்களும் ரோஜாக்களை மறந்துவிட்டனர். 50 லட்சத்தில் இருந்து 30 லட்சமாக சரிந்து விட்டது.

    கனவுக்குள் கனவா? ஒரிஜினல் கனவு எங்கே போனது. கனவு கனவாய் விரிந்ததா?

    எனக்கு நினைவில் வரும் அந்தக்காலத்து டால்கம் பவுடர் வகைகள் வினீபா, ரெமி, பாண்ட்ஸ், குடிக்கூரா, ஹிமாலயன் பொக்கே, மைசூர் சாண்டல். சிறுவர்களாகிய நாங்கள் பவுடர் உபயோகிப்பதில்லை. ஆனால் உபயோகிப்பவரை கேலி செய்வோம்.
    Jayakumar​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "தப்பிஸ்ட்"  புன்னகைக்க வைக்கும் டைப்போ!

      என்னுடைய முதல் சம்பளமும் 325 ரூபாய்தான்!

      ஒரிஜினல் கனவே அதுதான்.  அங்கேதான் இந்தக் கூத்து.  நினைவுகள் குழப்பமானால் கனவுகளிலும் காட்டும் போலும்!!!!

      நீக்கு
    2. ஹெட் கான்ஸ்டபிளை ஏட்டு என்று சொல்வதைப்போல் டைப்பிஸ்ட் என்பதை தப்பிஸ்ட் என்று கூப்பிடுவார்கள்.

      நீக்கு
  13. வியாழன் பகுதியில் ஏகாந்தன் சார் அனுபவம் இனிமை. கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டபோது இனிமை சேர்த்த நண்பர்கள் குழாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை.  அவர் அனுபவங்கள் எனக்கும் சில அனுபவங்களை நினைவு ப்படுத்தின.  அதைவிட நிறைய பாடல்களை நினைவு படுத்தின!

      நீக்கு
    2. ஆனால் அவற்றை இன்னொரு வியாழனுக்கு ரிசர்வ் செய்துவிட்டேன் ஹிஹிஹி

      நீக்கு
    3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
  14. அது பினாமி என்று சொல்வதைக் காட்டிலும் மைனர் அக்கௌன்ட் என்றால் கவுரமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  15. ..அம்பையின் இள வயதுப் படம்!..பின்னர் வருகிறேன்..//

    என்ன! ஒங்க படத்தைத் தேடப் போய்விட்டீர்களோ !

    பதிலளிநீக்கு
  16. ஸ்போர்ட்ஸ் வீக்கில் வந்த செய்தியாக - இங்கிலாந்தின் டோனி க்ரெய்க்கையே ஒரு உலுக்கு உலுக்கிய அந்த ஒட்டகச்சிவிங்கி ரசிகர்கள் ஸ்ரீவத்ஸவா, பண்டா..அடடா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அலுமினிய பேட் வைத்து அடித்து நொறுக்கிய டோனி க்ரெய்க்கைப் பார்த்து நறநறத்த காலம் நினைவுக்கு வந்தது

      நீக்கு
    2. டோனி க்ரெய்க், கீத் ஃப்லெட்சர் காலம். க்ரெய்க்கைத் தலையில் தூக்கிவைத்துக்கொண்டாடிய நம் அசட்டு மீடியா.. அப்போதும்...

      நீக்கு
    3. அப்போதைய கிரிக்கெட் அனுபவங்கள் தனி!

      நீக்கு
  17. ஜெயபாரதி அவர்களின் பரீட்சார்த்த முயற்சிகள் பாராட்டத்தக்கது. கலைத் தாகம். ஆனால் கலைக் கொலைப் படங்கள் தயாரித்து நடித்து டப்பு பார்த்து வசதியா இருப்பது பெட்டரா இல்லை கவைத் தாகத்தைத் தணித்துக்கொண்டு கலைமாமணிக்கு கியூவில் நிற்பது நல்லதா என்று புதன் பகுதிக் கேள்வியா வைக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னதான் கொண்டாடினாலும் நான் கலை படங்கள் பார்ப்பதைத் தவிர்த்து விடுகிறேன்!

      நீக்கு
  18. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  19. ///ஆமாம் ,
    கனவுகளே ஏன்
    கனவுகளாக
    வருகின்றன?..///

    கனவுகள்
    கனவுகளாகவே
    இருப்பதால் தான்!..

    பதிலளிநீக்கு
  20. ஏகாந்தன் அண்ணாவின் இளமை இதோ இதோ இனிமை இதோ இதோ இனிய அனுபவங்கள். அந்த நாள் ஞாபகம் நெஞ்சில்வே வந்ததேன்னு இங்கு பகிர்ந்து கொண்டதும் வாசிக்க சுவாரசியமாக இருக்கிறது.

    ஒயாஸிஸ் போல இருந்திருக்கும் இல்லையா அண்ணா!?

    கீதா

    பதிலளிநீக்கு
  21. இப்பதான் எல்லாமே ஆன்லைன்ல வந்துவிட்டதே! அதனால ரோஜா வின் ஏற்றுமதி சரிந்ததோ என்னமோ! இல்லைனா காதலர்கள் குறைந்துவிட்டாங்களோ!

    வங்கி ஊழியர் செய்தது ஆச்சரியமா இருக்கு....அவரே வங்கியில் பணி புரிந்து கொண்டு எப்படி இப்படி ஏமாந்தார்? ஆச்சரியம்

    ஒரு பக்கம் அரிசி சாப்பிடுவதை தவிருங்கள்ன்னு தமிழக அரசு என்னன்னா விளைச்சல் அதிகமுள்ள அரிசியை அறிமுகம் செய்கிறது...மாற்றி யோசிக்க வேண்டும் அரசு என்று தோன்றுகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  22. ஜெயபாரதி அவர்கள் நல்ல சினிமா எடுத்தாரா? நல்ல சினிமா என்றால் என்ன? இலக்கணம் என்ன என்று அவரது படம் என்ன இருக்கு என்று பார்த்து படம் பார்க்க வேண்டும். அவர் எப்படி எடுத்திருக்கிறார் என்று.

    பாலசந்தர் படங்களை விமர்சித்தாலும் கூட அவர் இவரைக் கூப்பிட்டு நடிக்கக் கேட்டது, உரிமையோடு பேசியது எல்லாம் நல்ல ஆரோக்கியமான காலம் என்று எண்ண வைத்தது

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல சினிமா என்றால் மனதுக்கு பிடித்திருக்க வேண்டும்.  சோலா சமயங்களில் சகலகலாவல்லவன் போன்ற மசாலா படங்கள் தரும் மகிழ்வை கலப்படங்கள் தருவதில்லை.

      நீக்கு
  23. ..இளமை இதோ இதோ இனிமை இதோ இதோ ..வா! ஓயேஸிஸ் போலவா!

    இறைவா! நான் என்ன செய்துவிட்டேன்.. என்னதான் அப்படி எழுதிவிட்டேன் என்று படித்துப் பார்த்தேன். ஒன்னுமில்லையே. சாதாரணமாத்தானே போய்கிட்டிருக்கு.. அது கொஞ்சம் சோமாலியா -ங்கிறதைத் தவிர !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏகாந்தன் அண்ணா..ஹாஹாஹாஹா அது சோமாலியா போன்ற ஊரில் இதெல்லாம் தானே அன்று சந்தோஷம் தந்த நிகழ்வுகள் அதை நீங்கள் சொல்லியதால் இதற்கு முன்னான பகுதிகளில் அந்த ஊரைப் பற்றி சொல்லியதிலிருந்து இது வித்தியாசம் இல்லையா அதான் அப்படிச் சொன்னேன்.

      கீதா

      நீக்கு
  24. வின்ட் மில் - பார்க்கவே அதுவும் செய்தியுடன் பார்க்க ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது.

    மூவிககசெ வில் முதல் செய்தி வருத்தமாக இருந்தது ஒரு மருத்துவரைக் கூப்பிட்டு உயிர் இருக்கிறதா இல்லையா என்று பரிசோதிக்க மாட்டாங்களோ? வறுமை அறியாமையை நினைத்து மனம் கஷ்டப்பட்டது.

    இரண்டாவது செய்தி - முதலீடு இல்லாத வருமானம்!!? ஆச்சரியப்படுத்தியது. ஆனால் இத்தனை யாசகர்கள் இருக்கிறார்கள் என்பதும் நம் பொருளாதார நிலையை யோசிக்க வைக்கிறது.

    கோர்ட் தீர்ப்பு சூப்பர்.

    கீதா

    பதிலளிநீக்கு
  25. படத்துல இருக்கறவங்க எல்லாம் வரணும்னா கனவுலதால் வருவாங்க! அதனாலதான் கனவுகள் கனவுகளாக....கனவுகள் புகை புகையா வந்துச்சா ஸ்ரீராம்!!?

    வித்தியாசமான கனவு.

    கீதா

    பதிலளிநீக்கு
  26. கனவுக்குப் போட்ட கருத்து இப்படிக் கனவாகிடுச்சே...மெய்ப்பியுங்கள் ஸ்ரீராம் உள்ளார இருந்தா...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில கனவுகள் கனவுகளாகவே இருக்கட்டும்! அதுதான் நல்லது. நிஜத்தில் கசந்து கூடப் போகலாம்! கனவுல அப்படியேனும் ஒரு சந்தோஷ உலகம் சுழலட்டுமே!! என்ன நான் சொல்றது! ஆ!!! ஜீ வி அண்ணாவின் கதையில் வந்த கற்பகம் ...அந்தக் கதாபாத்திரம்!

      கீதா

      நீக்கு
    2. கீதா...  உங்கள் நினைவுத்திறன், அதை சம்பந்தப்படுத்தும் திறன்..   பாராட்டுகள்.  கனவுக்குள் கனவு காண்பதற்கு கனவு காப்பதை கனவு கண்டு கொண்டிருந்தேந்தான்.  ஆனால் அது என்ன கனவு என்று நான் சொல்லவிலையே கீதா!

      நீக்கு
  27. குட்டிகுரா , பான்ட்ஸ், சாண்டல், இன்னொன்னு ஏதோ ஒன்று பெயர் டக்குனு நினைவில்லை. இதெல்லாம் தான் கேள்விப்பட்டவை. வீட்டில்ல் வாங்கியதில்லை. முன்னும் சரி பின்னும். எனக்கும் போடும் பழக்கம் இல்லை. எப்பவுமே.

    நான் அதிகம் பயன்படுத்தியது ரோஸ் பவுடர்!!!!!!!!!!!!!!! தான் ஸ்ரீராம். புரிஞ்சுருக்கும்!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊஹூம் எனக்குப் புரியவில்லை கீதா...  இருந்தாலும் நிறையவுடர்கள் இருந்தன.   கமகமா கமகமா கமகமா கமகமா எக்ஸோடிகா விளம்பரம் நினைவிருக்கிறதா?

      நீக்கு
    2. ரோஸ் பவுட்ர் நா - நாடகம்கு மேக்கப் போட போட்டது!!!!

      கீதா

      நீக்கு
  28. அப்போதே கோச்சிங்க் எல்லாம் இருந்திருக்கிறதே! தாணுமாமா நியூஸ் வாசித்ததும் தோன்றியது.

    ஓம் சாந்தி - சாப்பாட்டை சாப்பிட்டதும் ஆறதுக்கு முன்ன நானே சொல்லிட்டு சாப்பிடறேன் என்றா இல்லை இந்த சாப்பாட்டை சாப்பிட்டு ௳னசு விரக்தியாயிடக் கூடாது என்று மனதைத் தேற்றிக் கொள்வதற்கோ..

    ஓல்ட் கிரிக்கெட் செய்தி சுவாரசியம்

    கீதா

    பதிலளிநீக்கு
  29. சிறு வயது நினைவுகள் - எங்களுக்கும் பெரிதாக காசு கிடைத்ததில்லை. அப்பா கணக்கு எழுதுவார் என்றாலும் எங்களுக்கெல்லாம் காட்டியதில்லை - ஏன் அம்மாவுக்குக் கூட காண்பித்ததாக நினைவில்லை. ஆனால் அம்மாவிடம் செலவுக்குக் காசு கொடுத்து விட்டு, எவ்வளவு செலவு என கணக்குக் கேட்டு துளைத்து விடுவார்! :)

    சோமாலியா நினைவுகள் - மேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

    மற்ற பகுதிகளும் நன்று.

    பதிலளிநீக்கு
  30. முதல் தேதியும் முன்னூறு ரூபாய் சம்பளமும் என் அப்பாவை நினைக்க வைத்தது. இப்போதும் அவர் எழுதி வைத்த வரவு செலவு கணக்குகள், எதையாவது தேடும் போது கண்ணில் படும். மீண்டும் படட்டும் என்று கொஞ்ச நேரம் அதை பார்த்து பயணித்து அங்கேயெ வைதுவிடுவேன் மீண்டும் கண்ணில் படவேண்டும் என்று. உங்களின் அனுபவங்கள் இவற்றை எல்லாம் எனக்கு மீண்டும் இழுத்து வந்துவிட்டன, ஸ்ரீராம்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்லியிருப்பது நெகிழ்த்துகிறது துளஸிஜி.

      நீக்கு
  31. ஏகாந்தன் சாரின் அனுபவங்கள் சுவாரசியமான இனிய அனுபவங்கள் அவருக்கும் இவற்றை மீண்டும் அசை போட மகிழ்ச்சியாக இருக்கும்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  32. ஆன்லைன் முதலீட்டில் இப்படி படு குழியில் விழுந்து பல உயிர்கள் பலி ஆகிறது. ஆச்சரியமான விஷயம் இவர் ஒரு வங்கியில் பணி புரிந்தவர் என்பது. அதுவும் பெண். பொதுவாக பெண்கள் பண விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பார்கள் என்று சொல்லப்படுவதுண்டு.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  33. ஸ்ரீராம், உங்கள் கனவுகளை சுழன்று சுழன்று உங்களை உள்ளே இழுப்பதை வார்த்தைகளில் ரசித்தேன்.

    கனவுகள் சுகம்தான். சுகமான கனவுகள் வரும் வரை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுகமான கனவா, திகிலான கனவா என்பது விழித்தெழும் வரை தெரிவதில்லை.

      நீக்கு
  34. மூன்று வித்தியாசமான செய்திகளில் முதல் இரண்டு யோசிக்க வைக்கின்றன. மூன்றாவது நல்ல தீர்ப்பு.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  35. ஜெயபாரதி அவர்கள் என்ன படங்கள் இயக்கியிருக்கிறார் என்பது சட்டென்று நினைவில்லை. அப்போதெல்லாம் நான் பெரும்பாலும் படங்கள் பார்த்துவிடுபவன் என்பதால் யோசித்துப் பார்க்கிறேன்.

    பொக்கிஷப் பகுதிகளும் சுவாரசியம். முகப்பவுடர் பயன்படுத்தியது பான்ட்ஸ் என்று நினைவு.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அக்ரஹாரத்தில் கழுதை போன்ற படங்கள் இயக்கி இருக்கிறார்.

      நீக்கு
  36. உங்கள் அந்தக்கால நினைவுகள் பூவண்ணன் அவர்களின் ஆலம் விழுதுகள் கதையை நினைவு படுத்தி விட்டது.

    பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தும் அப்பா. குழந்தைகள் என்ன கேட்டாலும் வாங்கிய சம்பள்த்தில் மீதி இருந்தால் எடுது கொள்ளுங்கள் என்பார். குழந்தைகள் தாங்கள் குடம்ப பட்ஜெட் போட்டு ஈதி பணம் காண்பித்து சுற்றுலா போகலாம் என்று பெஸிக் கொள்வார்கள் மிக அருமையான கதை.

    அதை படிப்பது இருந்தௌ உங்கள் அனுபவங்கள்.

    எங்கள் வீட்டில் கணக்கு எழுதும் வழக்கமில்லை, சார் வீட்டில் கணக்கு எழுதி வைத்து செலவு செய்வார்கள். அது போல சார் கணக்கு எழுதினார்கள். வரவுக்குள் செலவு செய்ய வேண்டும் கடன் வாங்க கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே..  அப்படியா கோமதி அக்கா..  நான் அந்தக் கதை வாசித்ததில்லை.  நானு கடன் வெங்கட் கூடாது என்பதில் கவனமாயிருந்தேன்.  வாங்கவும் இல்லை.

      நீக்கு
  37. சோமாலியாவில் இனிய பழைய இந்தி பாடல்களுடன் இரவுகளை கழித்தது அருமை.

    கனவு கவிதை அருமை. மனதின் நினைவுதானே கனவு.
    மற்றும் பொக்கிஷபகிர்வுகள், செய்திகள் எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு
  38. வியாழன் பகுதி சிறப்பு..

    அந்த காலத்து நடைமுறையில் நாணயம் இருந்தது..

    இன்று எதிலும் எதுவும் இல்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில்லறை இருந்தது என்கிறீர்களா?!! பணமும் இருந்தது!

      நீக்கு
  39. எகாந்தன் அவர்களது கை வண்ணம் அழகு..

    பதிலளிநீக்கு
  40. சோமாலியாவில் பாடல்கள் பாடி களித்த பொழுதுகள் ரசனை. சிலர் படுத்திய பாடுகள் காண அடுத்த வாரம் வருகிறோம் ...:)

    துணுக்கு சித்திரங்கள் சிரிப்பை தந்தது.

    வின்ட் மில் கவலை கொள்ளவைத்தது.

    அந்தக்கால பணப்பெறுமதி ....விலைகளும் குறைவு உணவு இடியப்பம்,வடை,தோசை ,இட்லி ஐந்துசதம். மதிய சாப்பாடு பாடசாலை பிள்ளைகளுக்கு ஒரு மடத்தில் சமைத்து வழங்குவார்கள் இருபத்தி ஐந்துசதம். அம்மா எங்களுடைய கை செலவுக்கு ஒரு பெட்டியில் 50 ரூபா போட்டு வைப்பார்.அருகே கணக்கு கொப்பியும் பேனாவும் இருக்கும் எதற்கு எடுத்தோம் என்று எழுதி எங்கள் பெயரையும் குறிப்பிட வேண்டும்.

    பதிலளிநீக்கு
  41. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை.

    தங்கள் எண்ணப்பதிவாகிய முதல் பகுதி எப்போதும் போல் சிறப்பு. அந்தக்காலத்திற்கே அழைத்துக் கொண்டு போனது. குடும்பத்திற்காக வரவு செலவு பட்டியல்களுடன், வேண்டிய மளிகை சாமான்களின் கணக்குகள். அதை தாண்டி வரும் குறிப்பிட்ட மாதங்களின் விழாக்களுக்கென்று அதிகப்படியாக வாங்கலாமா என கணக்கு போட்டு வாங்கும் மளிகை பொருட்கள்.. பூ, பழம் என்ற செலவுகள்... அதில் சந்தோஷங்களுடன் கொஞ்சம் கவலைகளும் வந்து சேரும். .

    பொதுவாக குடும்பத் தலைவரின் வருமானம் கொஞ்ச பணமென்றாலும், இருபத்தைந்து நாட்களுக்கு நிறைவாக கழிந்த நாட்கள். அடுத்த ஐந்து நாட்களின் விசாரங்கள், கவலைகள் வரும் ஒன்றாம் தேதி தீர ஆரம்பித்து விடுமென்ற சந்தோஷ எதிர்பார்ப்புக்கள். / நம்பிக்கைகள்.

    இப்போது சம்பள பணம் முன்பு போல கையில் வருதில்லை. நாட்கள் அனைத்தும் ஒன்று போலவே நகர்கின்றன. வேண்டிய சாமான்களை எப்போது வேண்டுமானலும் வாங்கிக் கொள்ளலாம் என்ற நிலை வந்த போதும், ஏனோ இழுபறி போராட்டமாக அன்று வாழ்ந்த ஒரு கவலையுடனான நிம்மதி இப்போதில்லை. பலசரக்கு சாமான்களிலிருந்து, காய்கறி வரை விலைகள் பன்மடங்கு ஏறி உச்சாணிக்கே சென்று விட்டது. அப்போது எதையுமே கொஞ்சமாக வாங்கினாலும், நன்கு சாப்பிட்டு, ஆரோக்கியமாக இருந்தோம்.

    எங்கள் அப்பாவும், தீபாவளிக்கு, பொங்கலுக்கென பண்டிகை நாட்களில் நாங்கள் அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொள்ளும் போது, பரிசாக ஆளுக்கு ஒரு ரூபாய் தருவார். அந்தப் பணத்தையும் சேகரித்து வைத்து சமயங்களில் வீட்டுச் செலவுக்கென தந்துள்ளோம். அந்த ஒரு ரூபாயில் இருந்த மதிப்பு, இப்போது ஒரு ஆயிரத்தில் இல்லவேயில்லை. உங்கள் எண்ணங்களை ரசித்துப் படித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​நன்றாக ஒப்பீடு செய்திருக்கிறீர்கள், நினைவு கூர்ந்திருக்கிறீர்கள். நன்றி கமலா அக்கா.

      நீக்கு
  42. /// அந்த காலத்து நடைமுறையில் நாணயம் இருந்தது..///

    நா நயம்!..

    பதிலளிநீக்கு
  43. கலாம் கூட கனவு காணத் தான் சொன்னார்
    அவரது கனவு
    இலட்சியக் கனவு நனவின் வெற்றிக்கான வித்தாக விதையாக இருக்கும் என்ற கனவது
    வகைவகையாக
    கலர்க்கலராக வரிசையாக
    நிறையக் கனவுகள்
    வாலிபக் கனவு
    வயோதிகக் கனவென்று
    வயது வகைகள் கூடவுண்டு கனவுகளுக்கு
    இன்பக்கனவு என்றால்
    எம்ஜிஆர் நினைவில்
    மனம் அமிழும்.
    பி.டி.சாமி கைங்கர்யத்தில்
    முருங்கை மரப் பேய்க் கனவுகள் கண்ட
    பருவமே அலாதி
    பாரதிராஜா கனவுகளிலோ
    வெள்ளை உடை தேவதைகள் உலா நிச்சயம்
    அடுத்த வீட்டுப்பெண் அஞ்சலி எதிர்த்த வீட்டு சரோஜா என்று
    போட்டி போட்டுக் கொண்டு
    இளமைக்கனவுகளை
    ஆக்கிரமித்த அழகிகள்
    எத்தனை எத்தனை?
    இத்தனையையும்
    ஓரம் கட்டி யானை துரத்தும் கனவுகள்
    கண்டவரும் உண்டு
    மொத்தத்தில்
    கனவில்லாமல் நாமில்லை
    நாமில்லாமல் கனவுகளுமில்லை
    ஞாலத்தீர், அறிவீர்!

    பதிலளிநீக்கு
  44. நாமில்லாமல் கனவுகளுமில்லை..//

    அட !

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!