ஞாயிறு, 18 பிப்ரவரி, 2024

நான் தரிசனம் செய்த கோயில்கள் – ஐந்து துவாரகைகள் யாத்திரை – பகுதி 07 : நெல்லைத்தமிழன்


 

நான் தரிசனம் செய்த கோயில்கள் – ஐந்து துவாரகைகள் யாத்திரை – பகுதி 07

Bபேட் துவாரகை என்பது கட்ச் வளைகுடாப் பகுதியைச் சேர்ந்த ஒரு தீவு.  அது ஓக்ஹா எனப்படும் கரைப்பகுதியிலிருந்து சுமார் 3-4 கிமீ தூரத்தில் இருக்கிறது.  நாங்கள் ருக்மணி கோவிலை தரிசித்த பிறகு, அங்கிருந்து புறப்பட்டு, கடற்கரைப் பகுதி என்று புரிந்துகொள்ளும் அளவு உடைந்த படகுகள், கரைகள், மற்றும் நிறைய Godown போன்றவை இருந்த நெரிசலான பகுதிகளைக் கடந்து அரை மணி நேரம் பயணித்து கரைப்பகுதிக்கு வந்தோம். அங்கிருந்து சிறிது தூரம் நடந்துசென்றால், தீவுக்குப் பயணிக்கும் பகுதி வருகிறது. ஏராளமான பெரிய அளவான படகுகள் (50-100 பேர்களை ஏற்றிச்செல்லும் அளவு) இருக்கின்றன. இவை அனைத்தும் இஸ்லாமியர்கள் கட்டுப்பாட்டில் உள்ளன. இதற்குக் காரணம், அவர்களும் பேட் துவாரகைத் தீவில் வாழ்கின்றனர்.

இங்கு ஒரு படகை அமர்த்திக்கொண்டு, பேட் துவாரகை நோக்கிப் பயணித்தோம். வழியில் சீகல் எனப்படும் பறவைகள் ஏராளமாக நம்மை நோக்கி வருவதுபோலப் பறக்கின்றன. பொதுவாக பயணியர்கள் பிஸ்கட் போன்றவைகளை மேலே தூக்கி வீசும்போது அவை பிடித்துக்கொள்கின்றன. மிக நெருக்கமாகப் பறக்கும் சீகல் பறவைகள் பரவசம் தந்தன.  இருந்தாலும் அவைகளைப் படம் எடுக்கிறோம் என்று செல்ஃபோனை உயர்த்தும்போது, அவைகள் செல்போனைப் பிடித்துக்கொள்ளக் கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வும் வந்தது.










படகுப் பயணத்தில் நான், நினைவுக்காக எடுத்துக்கொண்ட புகைப்படம். 


சுமார் அரை மணி நேர படகுப் பிரயாணத்திற்குப் பிறகு நாங்கள் பேட் துவாரகையை அடைந்தோம்.  படகுத்துறையிலிருந்து ஒரு பாலத்தின் வழியாக நாங்கள் பேட் துவாரகை தீவினை அடைந்தோம். எல்லாத் தலங்களிலும் இருப்பதுபோல ஏகப்பட்ட கடைகள் இங்கு உண்டு. இங்கு துவாரகை கற்கள் கிடைக்கும். முக்திநாத் செல்பவர்கள் அங்கு சாளக்கிராமங்கள் வாங்குவதைப் போல, இங்கு துவாரகைக் கற்களை வாங்கிச் செல்வர். இதனை இப்போது தடை செய்திருக்கிறார்கள்.

இங்குதான் ஸ்ரீகிருஷ்ணரின் அரண்மனை அமைந்திருந்ததாம். இங்கு தன் பால்ய நண்பனான கிருஷ்ணரைச் சந்தித்துத் தன் கஷ்டங்களைச் சொன்னால் ஏதாவது தீர்வு கிடைக்கும் என்று (தன் மனைவியின் ஆலோசனையால்) சுதாமா எனப்படும் குசேலர் வந்து ஸ்ரீகிருஷ்ணரைச் சந்தித்த இடம். அவலைக் கொண்டு வந்து, அதைக் கொடுக்க வெட்கப்பட்டு, இவ்வளவு பெரிய அரண்மனையில் வசிக்கும் அரசனுக்கு இதையா கொடுப்பது என்று எண்ணித் தயங்கியபோது, ஸ்ரீகிருஷ்ணரே கேட்டு வாங்கிக் கொண்டதும், இரண்டு வாய் வாங்கிக்கொண்ட தும், அதுவே போதும் என்று ருக்மணி சொன்னதும் இங்குதான்.  இரண்டு வாய்க்கே, குசேலரின் வாழ்வு எங்கேயோ போய்விட்டது, மூன்றாவது கைப்பிடியையும் கிருஷ்ணர் ஏற்றுக்கொண்டால் உலகின் அனைத்துச் செல்வமும் குசேலருக்கே சென்றுவிடும் என்பதால் ருக்மணி தேவி தடுத்துவிட்டார் என்பதையும் நாம் படித்திருப்போம்.  அப்போ துர்வாசர் சாபம் எப்போது நிகழிந்திருக்கும்? இந்தச் சம்பவத்திற்குப் பிறகாக இருக்கலாம்.

இந்த் தீவை இஸ்லாமியர்கள் ஆக்கிரமித்துவிட்டனர் என்ற புகைச்சலும், அதனால் ஏற்பட்ட ஜாக்கிரதை உணர்வும், இந்த இடம் பாகிஸ்தானுக்கு அருகில் இருக்கிறது என்ற காரணமும், இஸ்லாமியத் தீவிரவாதிகளினால் பிரச்சனை வந்துவிடக் கூடாது என்பதாலும், கோவிலில் அலைபேசி அனுமதிக்கப்படுவதில்லை. செல்போனை டெபாசிட் செய்துவிட்ட பிறகுதான் கோவில் வளாகத்திற்குள் செல்லவேண்டும். 


பாலத்தின் வழியே சென்றபோது கண்ட காட்சி… எங்கள் பிளாக் ஸ்ரீராம் நினைவுக்கு வந்தார்.

கடலில் கிடைக்கும் பொருட்களாலான கைவினைப் பொருட்களை விற்கும் கடைகள் இங்கு ஏராளம்.

யாத்திரையை நட த்துபவர் எங்களை முன்னால் செல்லவிட்டு, கடைசியாக வருவார். பொதுவாகக் கடைகளைக் கண்டால், பெண்கள் (னு சொன்னா கோபித்துக்கொள்ளப் போறாங்க) கடையை நோக்கி பர்சேசுக்குப் போயிடுவாங்க என்பது அவர் கவலை.

கோவில் வளாகத்தை நெருங்கிவிட்டோம்.

இப்போது கோவில் அமைந்திருக்கும் இந்தப் பகுதியில்தான் ஸ்ரீகிருஷ்ணரின் அரண்மனை அமைந்திருந்தது என்று சொல்கின்றனர்.

Bபேட் துவாரகை கோவில்.

என்னுடைய செல்ஃபோன் மற்றும் பையை யாத்திரிகை குழுவினர் பார்த்துக்கொள்ள, போலீஸ் காவலுடன் இருந்த நுழைவாயிலைக் கடந்து கோவிலுக்குச் செல்கிறோம். இங்கு ஸ்ரீகிருஷ்ணருக்கு ஒரு சன்னிதி இருக்கிறது. அரை மணி நேரத்திற்கு ஒரு முறை ஆரத்தி நடைபெறுகிறது. அருகிலேயே குசேலர் வந்த தன் நினைவாக அவருக்கான ஒரு சிறு இடமும் இருக்கிறது. அங்கு சென்றால், அங்குள்ள பண்டா, அவலை பிரசாதமாகத் தந்தார். மீண்டும் எப்போது இங்கு வருவோமோ என்று தோன்ற, மீண்டும் ஸ்ரீ கிருஷ்ணரை தரிசித்துவிட்டு கோவிலின் வெளிவாசல் வழியே வந்தோம். (மீண்டும் இரு வருடங்கள் கழித்து இந்தத் தலத்திற்கு நான் சென்றிருந்தேன்)

Bபேட் துவாரகையில் உள்ள துவாரகா ஈசனை வணங்கிக்கொள்வோம்.

கோவிலில் சுமார் அரை மணி நேரம் செலவழித்த பிறகு, அங்கிருந்து கிளம்பினோம். வரும் வழியில் துவாரகைக் கற்களை வாங்கிக்கொண்டோம். படகுகள் இருக்கும் இடத்திற்கு வந்து இன்னொரு படகைப் பிடித்து அனைவரும் திரும்பவும் நிலப்பகுதிக்கு வந்து சேர்ந்தோம். இப்போதே இருட்டிவிட்டது.


துவாரகை கற்கள்.  

கடைவீதி.  எல்லா இடங்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பொருட்களைத்தான் விற்பனை செய்கின்றனர் (துவாரகை கற்கள் தவிர). அதனால் அவற்றில் எனக்கு எப்போதுமே அவ்வளவாக ஆர்வம் இருந்த தில்லை. அதுவும் தவிர, இத்தகைய, ஒரு வாரத்திற்கு அதிகமான பயணத்தில் தேவையில்லாமல் பொருட்களைச் சேர்த்துக்கொள்வதிலும் எனக்கு ஆசை இல்லை. யார் ஒவ்வொரு இட த்திலும் பையைத் தூக்கி இறக்குவது? எல்லாப் பொருட்களுமே எல்லா இடங்களிலும் இப்போது கிடைக்கிறது. இருக்கவே இருக்கு ஆன்லைன் பர்சேஸ். அதனால் பெரும்பாலும் நான் எதையும் வாங்குவதில்லை.

பத்து நிமிடங்களில் படகுத் துறையை அடைந்தோம். மாலை மயங்கிய நேரம் என்பதால் பலரும் நிலப் பகுதிக்குச் செல்ல படகுத் துறையை அடைந்திருந்தார்கள். அதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், எங்களுக்கான படகை ஏற்பாடு செய்தனர். அனைவரும் அமர்ந்த பிறகு படகு நிலப்பகுதியை நோக்கிச் செல்ல ஆரம்பித்தது.

 அடுத்த வாரம் பயணம் தொடரும்.

 

64 கருத்துகள்:

  1. Bபேட் துவாரகை தீவுக்கு படகில் சென்று கிருஷ்ண தரிசனம் முடித்துக் கொண்டு மீண்டும் நிலப் பகுதிக்கு வந்து சேர்வது வரை இன்றைய தரிசன பாக்யம். கோர்வையான வர்ணிப்பு. இதை வாசிக்கிறவர்களே தீவுக்குள் சென்று தரிசனம் முடித்து திரும்பிய உணர்வு ஏற்பட்ட மாதிரியான விவரிப்பு. நன்றி நெல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி சார். பேட் துவாரகைப் பகுதிகளை ரசித்ததற்கு நன்றி. இனித்தான் அங்கிருந்து நிலப் பகுதிக்குப் பயணப்படப் போகிறோம்.

      கோகுலத்திற்கும் பேட் துவாரகைக்குமான வித்தியாசம் பிறகு வரும்.

      நீக்கு
    2. ஓ.. நேரலை விவரிப்பாய்க் கேட்டதில் இன்னும் சந்தோஷம். நலமே
      வருக. நன்றி, நெல்லை.

      நீக்கு
  2. குசேலர் கதை நம் பகுதிகளில் பிரசித்தம்.
    இந்தத் தீவில் இருக்கும் பகவானின் அரண்மனையில் தான் குசேலர் தம் அன்பு நண்பருக்கு துணியில் முடிந்து கொண்டு போயிருந்த அவலைக் கொடுத்து மகிழ்ந்தார் என்பதை வாசித்த பொழுது பரவசம் ஏற்படுகிறது. நேர்த்தியான விவரணை.
    துவாரகைக் கற்கள் பற்றிய விவரம் வேறே.
    போன பகுதியிலேயே கேட்க வேண்டும் என்று நினைத்தேன். இந்தப் பகுதியில் சத்யபாமாவிற்கு கோயில் உண்டா நெல்லை?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குசேலர் கதையை நினைவுபடுத்தும் விதமாக குசேலர் சன்னிதியில் அவல் பிரசாதம் தருகிறார்கள்.

      இந்தப் பகுதியில் சத்யபாமா கோவிலைப் பார்க்கவில்லை. ஆனால் தென்னகத்தில் ருக்மணி சத்யபாமா சமேத ஶ்ரீவேணுகோபாலர் கோவில்கள்தாம் பல உள்ளன. இது ஆச்சர்யம்தான். நல்ல சந்தேகம்.

      நீக்கு
    2. சொல்ல மறந்தேன்..நான் திண்டுக்கல்லில் 7--8 வது வகுப்பு படிக்கும் பொழுது சிறப்புத் தமிழில் 'குசேலோபாக்கியானம்' செய்யுள்களை மிக ஆர்வமாகப் படித்திருக்கிறேன். பகுதி செய்யுட்கள் பூராவும் மனப்பாடம்.
      இளம் வயதில் நெஞ்சில் ஊன்றப்பட்ட தமிழ்ச்செடி இன்றும் பூத்துக்குலுங்கிக் கொண்டிருக்கிறது.
      அந்தக்காலத்து தமிழ் வளர்ச்சி இந்தக் காலத்தில் இருக்கிறதா என்பது மிகவும் அர்த்தம் பொதிந்த கேள்வி.
      தாய்மொழிச் சிறப்புகளையெல்லாம் தாரை வார்த்து விட்டவர்களை -- இந்த நல்ல நேரத்தில் இவர்களை நினைப்பானேன்?.. விட்டுத்தள்ளுங்கள்.

      நீக்கு
    3. பிராமண, இந்து எதிர்ப்பு என்ற மனநிலையும், வேறு மதங்களுக்கு உதவ்வேண்டும் என்ற எண்ணமும், ஆட்சியாளர்களை தபிழை விட்டு ஒதுங்க வைத்துவிட்டது. ஒவ்வொரு தமிழ்ச்செய்யுளிலும் இந்து மத அடையாளங்கள் இருக்கக்கூடாது என்பதே நோக்கமாகிவிட்டதால், செய்யுள் பகுதி, தமிழிலக்கியம், நன்னெறி எனப் பலவற்றையும் ஒதுக்கித் தள்ளும் சூழ்நிலை அமைந்துவிட்டது.

      போதாக்குறைக்கு இப்போ சமத்துவ சமூக நீதிப் பாடல் ஒவ்வொரு தினத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்து போலப் பாடவேண்டும் என்ற சுற்றரிக்கை வேறு. தபிழ்த்தாய் வாழ்த்துப் பாடலின் வரிகளையே மாற்றிய புண்ணியொஆன்கள் இவர்கள். இவர்கள் காலத்தில் தபிழ் எவ்வாறு வளர்ச்சியடையும்?

      நீக்கு
    4. தமிழிலக்கியம் என்றாலே ஐம்பெரும் காப்பியங்கள், ப்ரபந்தங்கள், சைவத் திருமுறைகள், திருக்குறள், பிறகு சீறாப்புராணம், அப்புறம் கிறித்துவ பாடல்கள் (அவர் பெயர் சட்னு நினைவுக்கு வரலை. கிறித்துவ மத்த்தைத் சேர்ந்தவர், திருநெல்வாலிச் சீமையில் அரசு பதவியில் கிராம முன்சீப் போன்று, இருந்தவர், சீவலப்பேரி பாண்டி கதையில் வருபவர்)என்று இருக்கும். அதிக அளவில் இந்துக்கள் சம்பந்தப்பட்ட சமய நூல்கள் என்பதால் இவைகளைத் தவிர்த்துவிட்டார்கள் கோலிருக்கிறது. போதாத்தற்கு சமூக மாற்றங்கள், டாஸ்மாக் பிரியாணி தமிழகம் என்று ஆகிவிட்டதால், கள்ளுண்ணாமை, புலாலுண்ணாமை (ஆட்டை அடித்து வசக்கித் தொழுவினில்.... என்று வரும் பாடல் என நினைவு) எல்லாவற்றிர்க்கும் மூடுவிழா

      நீக்கு
    5. என்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளை (எச்.ஏ.கிருட்டிணனார்) இரட்சணிய யாத்திரிகம் எழுதியவரா?

      நீக்கு
    6. ஆமாம் கோமதி அரசு மேடம். ஆனால் இன்னொரு கவிஞரும் உண்டு. சட்னு நினைவுக்கு வரவில்லை.

      நீக்கு
  3. கட்டுரையும் படங்களும் அசத்தல் அபாரம். . சில போட்டோக்கள் குறிப்பாக பறவைகள் போட்டோக்கள் மிக சிறப்பாக உள்ளன.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜெயகுமார் சார். நிறைய படங்கள் எடுத்தருந்தேன். பறவைகள் மிக அழகு, அது ஒரு நல்ல அனுபவம்.

      நீக்கு
  4. படங்கள் பிரமாதம்.  JKC சொல்லியிருப்பது போல பறவைகள் படம் பிரமாதம்.  செல்லைக் கவ்விக்கொண்டு போய்விடுமோ என்கிற உங்கள் கவலை எனக்கும் வந்தது.  அதே சமயம் ஒரு சந்தேகமும் தீர்ந்தது.   கோவில் படம் பழமையைச் சொல்கிறது.  இவ்வளவு வளர்ந்த குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய் செல்லம் கண்களையும் மனதையும் கவர்ந்த அதே நேரம் கீழே என் பெயர்!  ஹா...  ஹா..  ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஶ்ரீராம்... தாய்மை, யாரிடம் கண்டாலும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். என் வளாகத்தில் சில கைவிடப்பட்ட நாய்கள் உலாவும். அதிலும் ஒரு வெண்ணிற நாய். வளாகத்தில் இருக்கும் பதின்ம வயதுப் பெண், நடைப் பயிற்சி முடியும் தருவாயில் நாயைப் பார்த்தால் கொஞ்சுவாள். எனக்குத்தீன் அத்தகைய அன்பு இல்லாமல் கோய்விட்டது.

      கொஞ்சம் அசந்தால் செல்லைத் தவறுதலாக உணவு என நினைத்துத் தட்டிவிடும் அபாயம் உண்டு. நிறையகேர் பிஸ்கட்டை நீட்டினால் கவ்விக்கொள்ளும், தூக்கிப் போட்டால் அலகால் பிடித்துக்கொள்ளும்.

      நீக்கு
    2. தாய்மை உணர்வு என்பது தனிதான். அது ஒரு சிலருக்கு எப்படி இல்லாமல் போகிறது என்பது ஆச்சரியமாக இருக்கு நெல்லை. குறிப்பாகத் தன் குழந்தைகளையே கொல்லும் நிலைக்குச் செல்வது. மனம் என்பது விசித்திரம்தான்.

      நானும் எந்தச் செல்லத்தைப் பார்த்தாலும் ரசித்துக் கொஞ்சிவிட்டு வருவேன். இதோ இப்ப எங்க வீட்டுக்கும் மாடி வீட்டுக்கும் இடையில் பூனைக்குட்டிகள் செம ரவுன்ட் கட்டி ...இங்கு வந்து உணவு உண்டு குதித்து ஆட்டம் போட்டுவிட்டுப் போறாங்க. பின் வீட்டு ப்ரௌனி செல்லம் வீட்டுக் கதவு முன் தான் படுக்கை பல சமயங்களில். அப்புறம் தானே எழுந்து சென்று விடும். எங்களோடு வாக்கிங்க் வரும். இரண்டு தெரு சுற்றிவிட்டு அதை அவங்க வீட்டுல கொண்டு விட்டுட்டு ரோடு பக்கம் சென்று விடுவோம். இல்லைனா கடைக்கெல்லாம் வந்துவிடும்!!

      அனைத்து ஜீவராசிகளும் இறைவனின் படைப்பு. உலகமே அந்த மாபெரும் சக்தியின் படைப்புதானே!

      கீதா

      நீக்கு
  5. எங்கள் பிளாக்கில் ஞாயிறு மிகப் பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கிறது.  நிறைய பேர் இங்கு இதைத்தான் முதல் தெரிவாகக் குறிப்பிடுகிறார்கள்.  பாராட்டுகள் நெல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க நிறையவே exaggerate செய்திருந்தாலும், எனக்கு மகிழ்ச்சிதான்.

      என் தெரிவு, வியாழன், புதன், திங்கள், செவ்வாய் என்ற வரிசை. ஒன்றை எழுத எண்ணுகிறேன். இப்போதெல்லாம் பல வியாழன் பதிவுகள் அவசரமாக ரிலீஸ் செய்யப்பட்டவை போலத் தோன்றும். நேரமின்மை என்பதை நான்றிவேன்.(வியாழனில் முதல் பகுதி). சாதாரண உணவு தயாரிப்பும் தி பதிவில் உங்கள் எழுத்தில் சுவையாக இருக்கும்.

      நீக்கு
    2. நெல்லை ஸ்ரீராம் சொல்லியிருப்பது ஒன்றும் மிகைப்படுத்தல் இல்லை. நல்ல விஷயமே ஆமாம் இதெல்லாம் தான் கிடைக்கும் positive strokes! மீண்டும் மீண்டும் எழுத வைக்கும் மந்திரக் கோல்கள். கிடைக்கும் போது எடுத்து பத்திரப்படுத்திக்கோங்க!!!

      கீதா

      நீக்கு
    3. இந்தாங்க பிடிங்க, என் பாராட்டுகளையும்!!!! பத்திரமா வைச்சுக்கோங்க!!!

      கீதா

      நீக்கு
    4. செவ்வாயை முதன்மை படுத்த எபி குழுவிற்கு எனக்குத் தெரிந்த ஆலோசனைகள் சொல்லியிருக்கிறேன், நெல்லை. எபி வாசகர்கள் மனம் வைத்தால் இதை மிகச் சுலபமாக செய்து விடலாம்.

      நீக்கு
    5. தன் கையில் கிடைத்திருக்கும் மந்திரக்கோல் தனக்கே தெரியாது என்றும் சொல்வார்கள், தி.கீதா.

      நீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள் அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம். இன்று ஏதேனும் வெளியில் பயணிக்கிறீர்களா?

      நீக்கு
  7. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  8. பதிவு சிறப்பு..
    இயற்கை எழில் கொஞ்சும் படங்கள்..

    இப்படி முகத்துடன் மோதுவதற்கு வருவது போல வருகின்ற கடல் நாரைகளை சிங்கப்பூரில் பார்த்து மகிழ்ந்துள்ளேன்..

    Seagulls என்பர்..

    மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் திரிவேணி சங்கமம் (அலஹாபாத்) போகும் வழியிலும் பார்த்திருக்கிறேன். ஆனால் இங்கு மிக அதிகம். அதிலும் அவை மிக மிக நெருக்கமாகப் பறக்கின்றன. உண்மையிலேயே அது ஒரு நல்ல அனுபவம் துரை செல்வராஜு சார்.

      நீக்கு
    2. கடல் நாரைகள் என்ற வார்த்தையைப் படித்தவுடன், சென்றவார யாத்திரையின்போது இரவு 6 மணிக்கு, ஒரு மரத்தில் கொக்குகள் ஏராளமாக அமர்ந்திருந்ததைப் பார்க்க நேரிட்டது. அது இரவில் துயில்வதற்கான ஏற்பாடு போலிருக்கிறது. அந்தப் படத்தை ஒரு பதிவில் வெளியிடுகிறேன். ஒரே மரத்தில் 400 கொக்குகள்.

      நீக்கு
  9. பாலூட்டுகின்ற நாய் அழகு.. அருமை..

    அங்கே ஆதரவற்ற நாய் ஒன்றை ஆதரித்ததால் வங்க தேசிகளுக்கு பகையாகி விட்டேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிலருக்கு சில பிடிப்பதில்லை. அந்த 'சில' நாயாக அல்லாமல், உங்களைப் பிடிக்காதவனாகிவிட்டானோ அந்த வங்கதேசத்துக் காரன்?

      நீக்கு
  10. மற்றொரு சமயத்தில் மூன்று குட்டிகளைக் காப்பாற்றினேன்.. அவை வளர்ந்ததும் அவற்றால் சில தொந்தரவுகள்..

    கடுப்பாகிய மலையாளி ஒருவன் அவற்றின் மீது கொதிக்கும் நீரை ஊற்றித் தீர்த்து விட்டான்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரட்டுவது வேறு, துன்புறுத்துவது வேறு. அந்த மலையாளிக்கு எந்த ஜென்மத்தில் கொதிநீர் அபிஷேகம் காத்திருக்கிறதோ..

      நீக்கு
  11. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  12. பதிவு அருமை.

    //சீகல் பறவைகள் பரவசம் தந்தன.//
    படத்தில் பார்க்கும் போதே பரவசமாக இருக்கிறது, நேரில் பார்க்கும் போது மேலும் மகிழ்ச்சிதான்.

    //இருந்தாலும் அவைகளைப் படம் எடுக்கிறோம் என்று செல்ஃபோனை உயர்த்தும்போது, அவைகள் செல்போனைப் பிடித்துக்கொள்ளக் கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வும் வந்தது.//

    செல்போனை பத்திரமாக பிடித்துக் கொண்டு நிறைய படம் எடுத்து விட்டீர்கள். படகு பயண படம் அருமை.

    குசேலர் ஸ்ரீகிருஷ்ணரைச் சந்தித்த இடத்துக்கு போய் கிருஷ்ணரை தரிசிக்கிறோம் என்றால் மனதில் மகிழ்ச்சியும் மக்கள் எல்லோரும் வறுமை நோய்(பசிப்பிணி) என்ற பிணிகளில் இருந்து விடுபடவேண்டும் என்ற பிரார்த்தனை செய்ய மனது நினைக்கும் இல்லையா? நானும் அப்படி பிரார்த்தனை செய்து கொண்டேன்.

    அருமையான படங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அரசு மேடம்... பாகவதம், மஹாபாரதம் போன்றவற்றில் வரும் இடங்களை நாம் நேரில் காண்பது நிச்சயம் பரவசம் தரும்.

      நீக்கு
  13. கடைசியில் ஒரு படம் மட்டும் தலைகீழாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதை காலையில்தான் கவனித்தேன். பூரி யாத்திரைக்குச் செல்வதற்கான முந்தைய தினம்தான் பதிவுகளைத் தயார் செய்து அனுப்பினேன். அவசரத்தில் இதனைக் கவனிக்கவில்லை.

      நீக்கு
  14. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

    இன்றைய துவாரகா பயண யாத்திரை பதிவும் அருமை.

    படங்கள், விபரங்கள் அனைத்தும் ரசனையாக படிக்க நன்றாக இருந்தது. அத்தனை படங்களும் இயற்கை அழகுடன் அருமை. படகில் பயணித்த போது பறந்த நிறைய பறவைகள், செல்லத்தின் தாய்ப்பாசம் என அனைத்தும் கண் கொள்ளாத காட்சிகள்.

    துவாரகா நாதரை தரிசித்துக் கொண்டேன். குசேலர் ஸ்ரீ கிருஷ்ணனிடம் அருள் பெற்ற கதை எப்போதுமே பரவசமூட்டும் நெகிழ்வை தரும். மேலும் தங்கள் பயணத்துடன் தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம்... துவாரகா நாதரை நானும் தரிசித்த நினைவு வந்தது. அந்த அந்த இடங்கள் எல்லாமே சிறிய இடங்களாக இருந்து தற்போது கோவில் கட்டியிருப்பார்கள். இருந்தாலும் அவை வரலாறு நிகழ்ந்த பகுதிகளல்லவா?

      நீக்கு
  15. கருத்துகள்லாம் காணாமல் போவது சகஜமாகிவருகிறது. கௌதமன் சார்தான் அவற்றைப் பிடித்துக்கொண்டு வரவேண்டும்

    பதிலளிநீக்கு
  16. ஸ்ரீகிருஷ்ணர் மாளிகை கோவிலாக அமைந்துள்ளதில் மகிழ்ச்சி. தரிசித்துக் கொண்டோம்.

    விரிவான தகவல்களுடன் படங்களும் சிறப்பு நாமும் பயணத்தில் நேரே கண்டு வணங்கிய உணர்வை தருகிறது. நன்றி தொடர்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மாதேவி. அதை கிருஷ்ணரின் மாளிகை ஒரு காலத்தில் அமைந்திருந்த இடமாகத்தான் கொள்ளவேண்டும். ரொம்ப அலங்காரங்கள் இல்லாத கோவில் பகுதிகள். கருத்துக்கு நன்றி

      நீக்கு
  17. நெல்லை, சீகல் படங்கள் அட்டகாசம்!! ரொம்ப ரசித்துப் பார்க்கிறேன். அதிலும் அந்த ஒன்றின் மேலே ஒன்று பறக்கும் படம் இருக்கு பாருங்க அது அட்டகாசமாக உங்கள் மொபைலில்/கேமராவில் சிக்கிய படம். ஏன்னா பறவைகள் பறப்பதை நாம நின்று நிதானித்து எடுக்க முடியாதே....கோணம் பார்த்து. ஏய் போஸ் கொடு நீ இங்கிட்டு பற நீ அங்கிட்டு கொஞ்சம் ஒதுங்கிப் பறன்னா சொல்ல முடியும் ஹாஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தப் பறவைகள் வெகு அருகாகப் பறந்தன. சட் சட் என்று பல க்ளிக்குகள். அதில் சரியாக பிசிறில்லாமல் வந்தவற்றைப் பகிர்ந்துள்ளேன் கீதா ரங்கன் (க்கா)

      நீக்கு
  18. சீகல் படங்களில் இருந்தே நான் இன்னும் வெளிய வரலை!!!!
    ஆமாம் அவை எதைப் போட்டாலும் கவ்விக்கும் உங்க மொபைலை கூட அப்படி நினைச்சு கவ்விடுச்சுனா!! நீங்க சொல்றாப்ல அது கொஞ்சம் ஜாக்கிரதையாகத்தான் இருக்கணும்.

    படங்கள் அட்டகாசம் நெல்லை. வேறு வார்த்தைகள் இல்லை!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயமில்லாமல் வெகு அருகில் பறக்கின்றன. விட்டால் கையில் அமர்ந்துகொண்டுவிடும். நிச்சயம் செல்போனைத் தட்டிவிடும் வாய்ப்பு உண்டு. கையை உரசியவாறும் பறந்தன அவை. அந்த அனுபவம் தனி.

      நீக்கு
  19. இது மொபைலில் எடுத்தால்தான் டக்குனு எடுத்து சேவ் பண்ண முடியும் கேமரானா என் கேமரா போலதெல்லாம் இதுக்கு வொர்க்கவுட் ஆகாது என்பதோடு ஒன்னு சேவ் ஆகி அடுத்த ஃப்ரேமுக்குத் தயாராகறதுக்குள்ள எல்லாம் பறந்து படகும் கடந்து போயிருக்கும்!!!!!

    நான் இப்படியானதுக்கு என் லொட்டு கேமராவில்!!!!! continuous shot ஆப்ஷன் போட்டுருவேன்.

    படங்கள் தெளிவு, நெல்லை. செம

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் கீதா ரங்கன். மொபைலில் என்பதால் சட் சட் என்று பல படங்கள் எடுத்துவிட முடியும். சில வெளியே சென்றாலும் பல படங்கள் மிகச் சரியாக வந்துவிடும். இன்னும் படங்கள் அடுத்த வாரம் வரும்.

      நீக்கு
  20. பாலத்தின் வழியே சென்றபோது கண்ட காட்சி//

    அழகான படம்! இதையும் ரசித்துப் பார்த்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  21. இந்தத் தீவில்தான் கிருஷ்ணரின் அரண்மனை இருந்தது என்றால் - அப்ப இன்னும் கரை தள்ளி இருந்திருக்கும் இல்லையோ? அப்படினா கிருஷ்ணர் இந்தப்பக்கம் நிலத்திற்கு வரணும்னா படகில் தான் சென்று வந்திருப்பாரோ? குசேலரும் படகில்தான் போயிருப்பார் இல்லையா? கதைல அப்படி எல்லாம் சொல்லவே இல்லை பாருங்க நெல்லை! குசேலர் கதைல அதை வாசித்த நினைவு இல்லை.

    அந்த அரண்மனை எப்படி இருந்திருக்கும்? அது சரி அப்ப சகுனி காந்தார நாட்டில் (இப்ப ஆஃப்கானிஸ்தான்) அப்ப அதுவும் அங்கிட்டு எட்டினாபல கொஞ்சம் கிட்டக்க இருந்திருக்குமோ. என்னவெல்லாமோ கற்பனைகள் மனதில் ஓடுது, நெல்லை...அந்தக் காலகட்டத்தை நினைச்சுப் பார்க்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  22. நான் வாங்குகிறேனோ இல்லையோ இப்படியான கடைகளைப் பார்த்தால் கண்டிப்பாகச் சென்று விடுவேன், நெல்லை! எனக்குப் பார்ப்பது கைவினைப்பொருட்களை ரசிப்பது ரொம்பப் பிடிக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் பார்ப்பது (window shopping) மிகவும் பிடிக்கும். டூரிஸ்ட் இடங்களில் நிறைய விலை சொல்வார்கள். அதுவும் தவிர, ஒவ்வொருவரும் கடைகளில் நின்றுவிட்டால் அடுத்த இடத்திற்குப் போவது கடினம். இப்படி ஒவ்வொரு யாத்திரைகளிலும் சிலர் வராமல் தாமதமாவதும், யாத்திரை நடத்துபவர் கடிந்துகொள்வதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

      நீக்கு
  23. Bபேட் துவாரகை தீவு - கடல் சீற்றம் கொள்ளும் போது பாதிப்பு இருக்காதோ? அங்கு வசிப்பவர்கள் என்று பார்க்கும் போது அப்படினா பெரிய தீவா? இதைப் பார்க்கவே போகணும் என்று நினைத்ததுண்டு. எப்படி அந்த அமைப்பு இருக்கும் என்றும் பார்த்து அறிய ஆவல்.

    உங்களுக்கு நல்ல தரிசனம் கிடைத்தது இரண்டாம் முறையும் சென்று வந்தது மகிழ்வான விஷயம் நெல்லை.

    சன்னதி, கிருஷ் மிக அழகு,
    //Bபேட் துவாரகையில் உள்ள துவாரகா ஈசனை வணங்கிக்கொள்வோம்.//

    யெஸ்ஸு!!!

    எங்க பிறந்த வீட்டில் துவாரகை கிருஷ் இந்தப் படம் இருந்தது. இப்படியான அலங்காரத்தில். யார் போனாங்கன்னு தெரியலை இல்லை யாரேனும் கொடுத்ததா என்று தெரியவில்லை.

    மாமியார் வீட்டிலும் இருந்தது மாமியார் மாமனார் சென்று வந்திருக்காங்க. அப்போது பெரிய அண்ணா குடும்பத்தில் அலகாபாதில் இருந்தாங்க. சின்னமாமியார் பெண்ணும் உதய்பூரில் இருந்தாங்க.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதைப்பற்றி நிறைய எழுதத் தயக்கம். அந்தத் தீவில் பெரும் ஆக்கிரமிப்பு, முஸ்லீம்களால். பாஜக அரசு வந்த பிறகுதான் போட்களில் தேசியக் கொடி பறக்கிறது. கோகுலத்தில் இருக்கும் மனிதர்களைவிட பசுக்கள் அதிகம் என்றும், அங்கு வேறு மதத்தினர் யாருமே வசிக்கவில்லை, அதற்கான வாய்ப்பு இல்லை என்றும் சொன்னார்கள்.

      நீக்கு
  24. குசேலரின் தொடர்புள்ள அந்த இடத்தை தரிசித்தது மிகவும் மகிழ்ச்சியும் இனிமையும்., இல்லையா நெல்லைத்தமிழன்?

    அந்த கடல் பறவைகளின் படங்களை மொபைலில் பார்க்கும் போது அவை சிறியவை அல்ல பெரியவை என்பது தெரிகிறது எனவே தட்டிப் பறிக்க வாய்ப்பு அதிகம்தான். கூடவே அவை இப்படி நிறைய யாத்ரீகர்களைக் கண்டிருக்கும் அனுபவமும் இருக்கும். மிக அழகாக எடுத்திருக்கிறீர்கள். மிகவும் கவனமாகவும் எடுத்திருக்கிறீர்கள்.

    துவாரகைக் கற்கள் இப்படி ஒவ்வொரு முறை விற்கவும் அங்கு கிடைக்குமா என்ற கேள்வி எழுகிறது. ஒரு வேளை வெளியில் இருந்து கொண்டு வந்து விற்பார்களோ அதற்கு வாய்ப்பு இருக்கும் என்று தோன்றுகிறது.

    பயணத்தகவல்கள் அருமை. மேலும் தெரிந்து கொள்ளத் தொடர்கிறோம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துளசிதரன் சார்.... வரலாற்று முக்கியத்துவமும் ஆன்மீகம் தொடர்பான இடங்களும் ரொம்பவே மன மகிழ்ச்சி தரும். (இருந்தாலும், பல இடங்களில், குறிப்பாக பூரி போன்ற இடங்களில்) பணத்தை ரொம்பவே எதிர்பார்ப்பது மனதுக்கு வருத்தமும் ஏமாற்றமும் தரும். (Exploiting பக்தி உணர்வு. ஆனால் நான் எப்போதுமே, நம் தொடர்பு கடவுளிடம்தான்... இவர்கள் வெறும் கருவிகள் மட்டுமே என்று நினைத்துக்கொள்வேன். They are just doing their job and not more than that. அவர்களே கடவுள் அல்ல என்றும் நினைத்துக்கொள்வேன்)

      துவாரகை கற்களை விற்க தடை வந்துவிட்டது. இதான் சாக்கு என்று கோரல் பகுதிகளில் எல்லாம் கற்களை வெட்டுவதால் இந்தத் தடை என்று கேள்விப்பட்டேன். இவை வெளியில் கிடைப்பதல்ல. Coral பகுதியில் இருப்பவை, துவாரகை கடல் பகுதியில்.

      நீக்கு
  25. வழக்கம் போல சுவாரஸ்யமாக இருந்தது பதிவு.

    படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  26. அழகான கோயில். இரண்டு முறை இங்கே தரிசனம் செய்யும் பாக்யம் கிட்டியிருக்கிறது. தொடரட்டும் பயணங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தில்லி வெங்கட். நீங்கள் முக்தி நாத் போயிருக்கிறீர்களா?

      நீக்கு
    2. இதுவரை முக்திநாத் செல்லும் வாய்ப்பு அமையவில்லை நெல்லை.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!