வியாழன், 15 பிப்ரவரி, 2024

ஜோடி சேரா இலைகள்

"அதில் ஏதோ வீடுகட்ட என்பது போல ஒரு விளையாட்டா வேறு ஏதாவதா தெரியவில்லை.  அதற்கு வேறு என்னென்னமோ தருகிறார்கள் அந்த பரிசுக்கு கூப்பன்கள் மூலம்.  இதில் வேறு ஏதாவது இருக்கிறதா என்றும் தெரியவில்லை.  

ஏன் இப்படி சொல்கிறேன் என்றால்,"......

நான் டிஜிட்டல் பேமெண்ட் செய்யச்செய்ய என் பேங்கிடமிருந்து அவ்வப்போது எனக்கு ஒரு குறுஞ்செய்தி வந்து கொண்டே இருந்தது.  'இத்தனை புள்ளிகள் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.  தற்போது உங்கள் சேமிப்பில் உள்ள புள்ளிகளின் எண்ணிக்கை' என்றெல்லாம் குறுஞ்செய்தி வரும்.  நான் அவற்றை இந்த ஜி பே ரிவார்ட்ஸில் வரும் வீடு கட்டும் விளையாட்டுச் செயலி போல நினைத்துக் கொண்டு பெரிதாக அதைப் பற்றி ஒன்றும் கவலைப்படாமல், ஒன்றும் நினைக்காமல் இருந்தேன்.

கொஞ்ச நாட்களுக்கு ஒருமுறை உங்கள் க்ரெடிட் பாயிண்ட்ஸ் ரீடீம் ஆகி வாங்கி எடுத்துக் கொள்கிறது என்றும் செய்தி வந்திருந்தகதைப் பார்த்திருக்கிறேன்.

சமீபத்தில் ஒரு நகை வாங்க வேண்டிய தேவை வந்தபோது GRT யில் ஒரு வழியாக விற்பனைப்பெண், சஃபாரி சூப்பவைசர், மேலாளர் என்றெல்லாம் பில்லைக் காட்டிக்காட்டி பல்லைக்காட்டி தொகையைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டே வந்தபின் கவுண்டரில் பணம் செலுத்த பேப்பரை நீட்டினேன்.  டெபிட் கார்டையும் கொடுத்தேன்.

சிறிது நேரம் கழித்து கவுண்ட்டர் (ஜாதி அல்ல) பெண்மணி என்னை அழைத்து என் கார்டில் க்ரிடென்ஷியல் புள்ளிகள் இருப்பதாகவும் அவற்றை தேவையான அளவு உபயோகிப்பதாகவும் சொன்னார்.  அவர் இரண்டு மூன்று முறை சொல்லியும் எனக்கு சரியாக விளங்கவில்லை.  இப்போது அதுவரை உபயோகிக்கா விட்டால் அவை வீணே வங்கிக்குதான் சேரும் என்றார்.  'எனக்கு ஏதும் நஷ்டமா?' என்று கேட்டேன்.  'உபயோகிக்கா விட்டால்தான் நஷ்டம்' என்றார்.  'சரி' என்று ஒப்புதல் கொடுத்தேன்.

பார்த்தால்,

எனது பில்லில் நான் செலுத்த வேண்டிய தொகை ஐந்தாயிரம் ரூபாய் குறைந்திருந்தது.  இத்தனை வருடங்களாக இந்த புள்ளிகள் பற்றி அறியாதிருந்தோமே என்று தோன்றியது.  எவ்வளவு வீண் செய்திருக்கிறோம் என்றும் தோன்றியது.  உண்மையில் இப்போதும் ஒன்றும் சரியாய்ப் புரியவில்லை!ஆனாலும் G Pay Rewards ஐ விட இது தேவலாம் என்று தோன்றியது.

ப்போது தெரிந்து கொண்ட இன்னொரு விஷயம்...  கற்றுக்கொண்ட இல்லை, தெரிந்து கொண்ட...

ஊபர், ஓலா, ரேபிடோ செயலிகளை இன்ஸ்டால் செய்து கொண்டு அவர்களிடம் முன்பணம் கட்டி அவற்றின் மூலம் பயணிகளை பிடிக்கும் ஆட்டோ, பைக், கார் போன்ற வாகனங்கள் பற்றி நமக்கெல்லாம் தெரியும்.

அந்த கொள்ளைக்கார நிறுவனங்களும் ஏகப்பட்ட சலுகைகள் ஆஃபர்கள் அறிவித்து பயணிகளையும் கவர்கிறார்கள்.  வாகன ஓட்டிகளையும் கவர்கிறார்கள்.  

ஆரம்ப காலங்களில் பயணிகளுக்கு பத்து ட்ரிப்புகள், 8 ட்ரிப்புகள் 15 சதவிகிதம், பத்து சதவிகிதம் என்று தள்ளுபடியெல்லாம் கொடுத்தார்கள்.  ஆனால் அப்படி கிடைத்து நாம் பயணிக்கும் ஆட்டோக்காரர் இதைக்கேட்டு கடுப்பாகி விடுகிறார் என்பதையும் கண்டோம்.  அந்த சவாரியில் அவர்களுக்கு வெறும் ஐந்தோ பத்தோ கிடைத்தால் கடுப்பு வராதா என்ன!   ஆனால் அவர்களுக்குரிய காசை அந்த நிறுவனம் தந்து விடும்.  அதுவரை இவர்களுக்கு பொறுமை இல்லை என்பது மட்டுமில்லை, அந்த நிறுவனங்கள் சொல்லும் பயணக்கட்டணமே மிகவும் குறைவு என்பது அவர்கள் எண்ணம்.  ஆனால் அவர்களுகு கிடைக்கும் சலுகைகளை மட்டும் ஆவலுடன் வரவேற்பார்கள் அவர்கள்.

போகப்போக இந்த சலுகைகள் வழக்கம்போல குறைந்து கொண்டே வந்தன.

பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் மாதாமாதம் தருகிறேன் என்று முதலில் வீராப்பாய் சொல்லி விட்டு அப்புறம் அதை வாங்க ஏகப்பட்ட விதிகளைக் கொண்டு வந்ததே அரசாங்கம்..  அது போலதான் தனியார் நிறுவனங்களும்!

ஓட்டுனர்களை பொறுத்தவரை ஐந்து சவாரிகள் செய்தால் நூற்றைம்பது ரூபாய் போனஸ் என்று சொன்னார்கள்.  அப்புறம் அதை குறிப்பிட்ட நேரத்துக்குள் தொடர்ந்து செய்ய வேண்டும் என்றார்கள்..  அப்புறம் அதிலும் நான்காவது சவாரிக்குப் பின் அந்த குறிப்பிட்ட நேரம் முடியும் வரை அவர்களுக்கு அந்த ஐந்தாவது சவாரி அனுப்பாமல் பார்த்துக் கொண்டார்கள்!  ஒரே பதிவு எண்ணில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் வண்டியோட்ட அவர்களே மறைமுகமாக ஆதரவு கொடுத்தார்கள்.

சில ஆட்டோ ஓட்டுனர்கள் ஒரே சமயத்தில் ஊபர், ஓலா இரண்டையும் ஒப்புக்கொண்டு எது அவர்களுக்கு லாபமோ அதற்குச் சென்றார்கள்.  இன்னொன்றை கேன்சல் செய்தார்கள்.  அப்படி அவர்கள் கேன்சல் செய்தால் கஸ்டமர்களுக்கு வண்டி வராமல் போவது கடுப்பு என்றாலும் பண விஷயத்தில் பிரச்னை இல்லை.  சிலர் சொல்லாமல் எதிர்திசையில் முன்னேறிக் கொண்டே இருப்பதைப் பார்த்து ஃபோனில் அழைத்து கேட்டால் 'நீங்கள் கேன்சல் செய்து கொள்ளுங்கள்' என்பார்கள்.  நாம் கேன்சல் செய்தால் நமக்கு 30 முதல் 40 ரூபாய் வரை பச்சா!

அதில் 'ஏன் கேன்சல் செய்கிறீர்கள்?' என்கிற கேள்வி பகுதி ஒன்று இருக்கிறது.  அதில் சென்று 'டிரைவர்தான் செய்யச் சொன்னார்' என்று டிக் செய்து விடுவேன் நான்.  பச்சாவிலிருந்து எஸ்கேப்! 

ஊபருக்கு ஐம்பது ரூபாய், ரேபிடோவுக்கு 45 ரூபாய் தினசரி டாப்பப் செய்ய வேண்டும்.  சிலர் அட்வான்ஸாக பணம் போட்டு வைத்திருப்பார்கள்.  

இந்த ஜனவரியில் அதற்கும் ஆப்பு வைத்தார்கள் செயலி கொள்ளையர்கள்.  ஜனவரி வந்ததும் எல்லா செயலிகளும் அப்டேட் செய்யச் சொல்லின.  செய்ததும் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.  ஒரு ஃபோன் நம்பரை ஒரு செயலிக்குதான் உபயோகிக்க முடியும்.  மூன்று செயலிகளும் வேண்டுமென்றால் மூன்று தனித்தனி ஃபோன் நம்பர் வேண்டும்.  இப்போது பார்த்தால் முதலில் சிலர், இப்போது நிறையபேர் ஆளுக்கு இரண்டு மூன்று செல் வைத்து ஆபரேட் செய்வதைக் காணலாம்.  வல்லவனுக்கு வல்லவன்.

இங்கே இன்னொன்று சொல்ல வேண்டும்.  சமீபத்தில் ஒரு நபருக்கு மூன்று சிம்கள்தான் என்று அரசு மற்றும் செல்போன் நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன என்று நினைக்கிறேன்.  சிம் கார்ட் மேனேஜ்மேண்ட் ஆதார் மூலம் கட்டுப்படுத்த படுவதால் இதில் ஊழல் செய்வதும் சிரமம் என்றுதான் நினைக்கிறேன். 

சரி, இவர்கள் கஸ்டமர்களுக்கு என்ன அப்டேட் செய்திருக்கிறார்கள் என்று பார்த்தால் பூஜ்யம்தான்.  அந்த செயலி உபயோகிப்பதை இன்னும் கொஞ்சம் குழப்பமாக்கி சிரமப்படுத்தி இருக்கிறார்கள்.  எப்போதுமே ஓட்டுனரை தொடர்பு கொள்ள அழைத்தால் நமது அழைப்பு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வழியாகத்தான் ஓட்டுனரை அடையும்.  அவர்கள் நம்பர் நமக்குத் தெரியாது.  நமது நம்பர் ஓட்டுனருக்குத் தெரியாது.  எனினும் ஏதோ தொடர்பு கொண்டு பேச முடிந்தது.  இப்போது ஏர்டெல் கஸ்டமர்கேர் பதிவு செய்யப்பட தகவல் போல ஏகப்பட்ட 'ஆம், இல்லை' வைத்திருக்கிறார்கள். நாம் புரிந்துகொண்டு ஆம் இல்லை அமுக்குவதற்குள் ஓட்டுநர் பொறுமை இழந்து அழைப்பை துண்டித்து விடுகிறார்.

கொசுறு : இது இப்போது எடுக்கப்பட்டு பழைய மாதிரியே வந்து விட்டது.

=================================================================================================

ஏகாந்தமாய் 


அழைக்கும் வனம், அத்துவானம் ..

சுற்றுலாத் துறை என்பதாக ஒன்று சோமாலியாவில் அப்போது இல்லை.
(இப்போதும் இருக்க வாய்ப்பில்லை! நிலமை அப்படி..) ஒருசில டாக்ஸிகள்,
பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட் என்கிற பெயரில் சில மினி பஸ்கள், டொயோட்டா வேன்கள், சாமானியர்கள் சந்தைபோன்ற இடத்திற்குப் பயணிக்க என சில டொயோட்டா பிக்-அப்கள் என இவ்வளவுதான் காணக் கிடைக்கும் தலைநகரிலேயே. கார்கள், 4WD-க்கள் என்றால் அவை வெளிநாட்டவர்களுக்கு, எம்பசி, ஐ.நா. போன்ற அயல் நிறுவனங்களுக்குச் சொந்தமானவை. சர்வதேச உதவி நிறுவனங்களின் லேண்ட் ரோவர்கள் சில அங்குமிங்கும் நகரில் அலைந்துகொண்டிருக்கும். மொகதிஷு தவிர, நாட்டின் மற்ற டவுன்களைப்பற்றி (அவை உண்மையில் டவுன்கள்தானா..?) ஏதும் குறிப்பிடாதிருப்பதே நல்லது. டான்ஸானியா, கென்யா, தென்னாப்பிரிக்கா, உகாண்டா போன்ற ஓரளவு முன்னேறிவரும் ஆஃபிரிக்க நாடுகளில்தான் ஆஃபிரிக்கன் சஃபாரி போன்ற உல்லாசப் பயணங்களை எல்லாம் சரிவர இயக்க என தனியார் ட்ராவல் ஏஜென்சிகள் எல்லாம் இருந்தன. சோமாலியாவில் சுற்றுலாப் பயணமா? Travel at your own risk !

வார இறுதியில் ஊர் சுற்றுவதற்காக, ப்ராஜெக்ட் வண்டிகளை – பெரும்பாலும் லேண்ட் ரோவர்கள், பிக்-அப்கள் போன்றவை - நிர்வாகத்திடம் அனுமதி பெற்று மொகதிஷுவில் பணிபுரிந்த இந்திய
நண்பர்கள் சிலர் எடுத்துவருவதுண்டு. (சிலர் வசதி இருந்தும் சொந்தக் கார் வைத்திருக்க அஞ்சினார்கள். காரணம், வண்டி படுத்துவிட்டால், அங்கேயே விட்டுவிட்டு நகர்ந்துவிடவேண்டியதுதான். ரிப்பேருக்கு வாய்ப்பில்லை.)

நகரத்துக்கு வெளியே (40 கிமீ. தூரத்துக்கு மேல்) அயல்நாட்டவர் செல்வதானால், சோமாலி அரசிடம் முன் அனுமதி பெறவேண்டும். அரசின் ப்ராஜெக்ட்களில் பொறுப்பான பதவிகளில் இருந்த இந்தியர்கள் ஓரிருவர் அப்படி சில முறை அனுமதி பெற்றுவிட, இரண்டு மூன்று கார்கள், லேண்ட்ரோவர்களுடன் நாங்கள் (பெரும்பாலும் 10-12 பேர்) மொகதிஷுவிற்கு வெளியே 40-50 கி.மீ. வரை, பிக்னிக் என்கிற பெயரில் சென்று வந்திருக்கிறோம்.

அன்று காலை, மொகதிஷு எல்லையை எங்கள் கார்கள் கடக்க முயல்கையில், சாலையோரத்தில் ஒரு சின்ன செக்யூரிட்டி போஸ்ட். ஒரு ஒல்லிக்குச்சி கான்ஸ்டபிள் துப்பாக்கியுடன் நின்றிருந்தவன், எங்களை நிறுத்தி சோதித்தான். அரசின் ‘அனுமதி’ காகிதத்தை வாசித்துப்பார்த்தான்.

ஒரு சல்யூட் வைத்து ஒருபக்கம் கைகாண்பித்துப் போகச் சொன்னான்.
போனோம்..போனோம்.. போய்க்கொண்டே இருந்தோம். நகருக்கு வெளியே பயணம் மேற்கொள்வதே ஒரு சாதனைதான் சோமாலியாவில்.
ஏனென்றால் தலைநகர் எல்லையிலிருந்து சில கி.மீ.கள் தாண்டியபின்னேயே காணக்கிடைப்பது வெறும் காட்டுப்பகுதி. காடென்றால் அடர்ந்த மரங்கள் சூழ்ந்த வெளி என்று அர்த்தம் கொள்ளவேண்டியதில்லை.

திட்டுத் திட்டாக ஆங்காங்கே சிலபல மரங்கள். உயர்ந்து நின்று பயமுறுத்தும் முட்புதர்கள். காட்டுச் செடிகள். சில இடங்களில்
ஒரேயடியாக வெட்டவெளி பரந்து கிடந்து, ஆகாசத்தோடு போட்டிபோடப்
பார்த்தது. நாம் எங்கே போகிறோம்.. என ஏதோ ஒரு புத்தகத் தலைப்புபோல் வாக்கியங்கள் மனத் திரையில் தோன்றி, வழிநெடுக தொந்திரவு செய்தவாறிருந்தது. காட்டின் சில பகுதிகளில் வழிநெடுக பேர் தெரியா முரட்டு செடிகொடிகள், விதவிதமாகப் பூத்துக் காய்த்துக் கிடக்கும்.  வழி என்றால் ஏதோ நம்ம ஊர் கிராமப்புற மண்சாலை என நினைத்துவிடவேண்டாம். ஒரு சாலையும் இல்லை. நாங்களே மனக் கற்பனையில் வரைந்துகொண்டு, போன, வந்த, ஒரு ’வழி’. ’மனமிருந்தால் மார்க்கமுண்டு’ என்பது இதுதானோ?

மரங்கள், புதர்கள், புழுதிப் பிரளயம். அடுத்த 3-4 மணி நேரத்துக்கு இதுதான். மனித நடமாட்டமே எங்கும் தென்படவில்லை. வழியிலே ஏதாவது சிறுவகை விலங்குகள் பார்க்கக் கிடைக்கலாம் என்பது எங்களில் சிலரது அனுமானம். கிடைத்ததோ ஏமாற்றம். விலங்குகளின் தரிசனத்திற்கு இன்னும், இன்னும் உள்ளே, எதியோப்பியா எல்லைவரை
செல்லவேண்டுமோ? கிட்டத்தட்ட 35-40 கி.மீ. பயணித்திருப்போம்.  காற்றோட்டமும் சரியாக இல்லை. வெயில் நாக்கை
வரண்டுபோகவைத்தது. ஏசி-யில்லா வண்டிகள், ஆசையில்லா வாழ்க்கைபோலே.. ஆளுக்காள் கோக்கையோ, தண்ணீரையோ அவ்வப்போது விழுங்கியவாறு, பேந்தப் பேந்த முழித்தவாறு பயணத்தைத் தொடர்ந்தோம்.

தொலைவில், ’அஃப்கோய்’ (Afgooye) என்ற பகுதியில், ஒரு பெரும் அரசுப்பண்ணை இருப்பதை எங்கள் குழுவில் சிலர் அறிந்திருந்தார்கள்.

அதுதான் அன்று எங்களது ரூரிஸ்ட் ஸ்பாட். ஒருவழியாகத் தட்டுத் தடுமாறி (இடையிலே கார் ஏதாவது ப்ரேக்-டவுண் ஆகிவிடாதிருக்கவேண்டுமே என்கிற பயம், பிரார்த்தனைவேற..)
வண்டிகளை ஓட்டியவாறு போய்ச் சேர்ந்தோம். அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில குடிசைகள். தோட்ட வேலையாட்கள் சிலர் திரிந்துகொண்டிருந்தார்கள். எங்களது கார்களின் வருகை அவர்களுக்கு அதிசயமாய்த்தோன்றியது. கார்களின் உள்ளே ஏதோ வேற்றுக்கிரகவாசிகள் போல நாங்கள் அவர்களுக்குத் தெரிந்திருக்கவேண்டும். அவர்களிடம் கொஞ்சம் சோமாலியில் பேசி, டிப்ஸ் கொடுத்தபின் சமாதானமாகி, உள்ளே போகச்சொல்லி வழிவிட்டார்கள். ஒரு பகுதி முழுதும் பெரும் வாழைத்தோட்டங்கள். இன்னொரு பகுதியில் பச்சைப்பசேலென்று ஏதேதோ மரங்கள். ஒரு ஓரமாகக் கார்களைப் பார்க் செய்துவிட்டு, சாமான்களை எடுத்துக்கொண்டு உள்ளே நடந்தோம். உயர்ந்து நின்று நிழல் தந்து பரந்திருந்த ஒரு பெருமரத்தினிடையே வசதியாக இடம்பிடித்து உட்கார்ந்து கொண்டோம். தரையில் உட்கார்ந்து காலை
நீட்டிக்கொள்வதில்தான் எத்தனை சுகம்.. ப்ளாஸ்டிக் விரிப்புகளை விரித்து, கொண்டுவந்திருந்த உணவு வகைகள், பீர், தண்ணீர் பாட்டில்கள்
இத்தியாதிகளை விரித்துவைத்து சாப்பிட்டோம். காபி, டீ, பீர் போன்ற திரவ ஆகாரமும் உள்ளே. அரட்டைகளில் களித்தோம். அந்த இடம் வெக்கையின்றி இதமாக இருந்ததால் நேரம் போனதே தெரியவில்லை.

சில மணிநேரம் கழித்து மொகதிஷுவை நோக்கிய சிக்கலான பயணத்தைத் தொடர்ந்தன எங்களது வண்டிகள்.  ஊருக்குத் திரும்பிவருகிற வழி கொஞ்சம் மாறிவிட்டிருந்தது. அதாவது தவறவிட்டிருந்தோம். தட்டுத்தடுமாறி வண்டிகள் முனகியவாறு போக, புழுதிப் படலம் பத்தடிக்கு முன்னே பார்க்கவிடாது தடுத்தது. இருந்தும் வண்டிகள் மிக மெதுவாக ஊர்ந்ததால், அந்த மாலை வெயிலில்,
வழியோரப் புதரொன்றில் சிவப்பாக மின்னியவாறு ஏதோ தெரிந்தது. அது என்ன பழம்.. கொஞ்சம் நிறுத்துங்கப்பா.. என்று ஒரு சிலர் பரபரக்க,
வண்டிகள் ஒவ்வொருன்றாய் கிரீச்சிட்டு நின்றன. ஓரிருவர் குதித்து
இறங்கி, புதர் விலக்கிப் பார்க்க, சில மிளகாய்ச் செடிகள் காட்டுப்புதர்களுக்கிடையே வளர்ந்து காயும், பழமுமாக நின்றிருந்தன.  அங்கே யார் போட்டார்கள் மிளகாய் விதைகளை! நிஜமாகவே மிளகாய்தானா என்று சந்தேகத்துடன் ஒருவர் பறித்துப் கொஞ்சம் கிள்ளி வாயில் போட (”ஐயோ.. வாயில்ல போட்டுக்காதீங்க.. ஏதாவது விஷப் பழமாக இருந்திடப்போகுது..” - வண்டிக்குள்ளிருந்த ஒரு வீரரின் கிறீச்சிடல்!). மென்றவரின் காதுகளில் லேசான புகை. மிளகாய்தான் என அவர் ஊர்ஜிதம் செய்ய, ஆசையாகப் பாய்ந்து ஆளுக்குக் கொஞ்சம் பறித்துப் பையில் போட்டுக்கொண்டோம். பிக்னிக் என அன்று அங்கே மெனக்கெட்டு வந்தவர்களுக்கு, இயற்கையின் காரமான போனஸ்..

மாலை 6 மணி வாக்கில் எங்கள் வண்டிகள் நல்லபடியாக நகரத்திற்குத்
திரும்பின. எல்லோரும் பை சொல்லிப் பிரிகையில், ஏதோ பெரிய
அட்வென்ச்சர் செய்துவிட்ட பெருமிதம் எங்கள் முகங்களில் தெரிந்தது!

**
வளரும்….

===============================================================================================

நியூஸ் ரூம் 


பானுமதி வெங்கடேஸ்வரன் 


- அரசு உத்தரவு,விதிகள் எதுவும் இன்றி தங்கள் விருப்பப்படி சான்றிதழ்களை தாசில்தார்கள் வழங்க முடியாது எனவும், ஜாதி, மதம் அற்றவர் என சான்றிதழ் வழங்க உத்தரவிட முடியாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

- தமிழ் சினிமா இயக்குனரான வெற்றி என்பவர் படப்பிடிப்பிற்காக லொகேஷன் பார்ப்பதற்காக தன் உதவியாளருடன் சிம்லா சென்றிருக்கிறார். அங்கு இன்னோவா காரில் பயணித்த பொழுது திடீரென கட்டுப்பாட்டை இழந்த வண்டி, சட்லெஜ் நதியில் சீறிப்பாய்ந்திருக்கிறது. 200 அடி பள்ளத்தில் உருண்டு, நதியில் விழுந்து மிதந்திருக்கிறது. இந்த விபத்தில் ஓட்டுனர் இறந்து விட்டார். வெற்றியோடு பயணித்த கோபிநாத் என்பவர் படுகாயங்களோடு தப்பி சிகிச்சை பெற்று வருகிறார். வெற்றி என்ன ஆனார் என்று தெரியவில்லை. இந்த வெற்றி முன்னாள் எம்.எல்.ஏ.வும், முன்னாள் சென்னை மாநகர மேயரும் சைதை துரைசாமியின் மகனாவார்.

அவரது உடல் 12 ஆம் தேதியன்று கண்டு எடுக்கபப்ட்டது.

- கர்நாடகாவில் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்னும் திட்டத்தால் கோவில்களின் வருமானம் இரண்டு மடங்கு உயர்ந்திருக்கிறது

- பாலக்காடு,கேரளாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குனர் கமலக்கண்ணன் இயக்கி தமிழகத்தின் ஈரோட்டைச் சேர்ந்த சிறுவர்கள் நடித்த 'குரங்கு பெடல்' என்னும் திரைப்படம் மக்கள் மனதை கவர்ந்துள்ளது.

- வடபழனி நூறடி சாலையில் வந்து கொண்டிருந்த ஆம்னி பஸ்ஸின் டயர் கழன்று ஓடி ஆட்டோவில் மோதி விபத்து. 

- 2023ஆம் ஆண்டில் அதிகமான செல்போன் விற்பனை செய்திருக்கிறது ஓப்போ,விவோ,ஒன் ப்ளஸ் போன்ற சைனீஸ் ஸ்மார்ட் போன்களை தயாரிக்கும் BBK Electronics group என்னும் நிறுவனம்.

- உலகளவில் போக்குவரத்து நெருக்கடியில் 2022 ல் இரண்டாம் இடத்தில் இருந்த பெங்களூர் 2023ல் ஆறாம் இடத்திற்கு வந்திருப்பதில் பெங்களூரு போக்குவரத்து காவல்துறை பெருமிதம்.

=======================================================================================================================


இன்றைய இலக்கியப் போக்கு தங்களுக்குத் திருப்தி தருகிறதா?
"சில இலக்கியவாதிகள் திருப்தி தருகிறார்கள். அவர்களின் இலக்கியப் போக்கு திருப்தி தருகிறது. வண்ணநிலவனைப்போல், வண்ணதாசனைப்போல் எழுத்தை மட்டும் எழுதிவிட்டு தங்களைப் பற்றி தம்பட்டம் அடித்துக் கொள்ளாதவர்களைத்தான் எனக்குப் பிடிக்கிறது. 

ஆனால் அடுத்தவர்களை படுமட்டமாகத் தாக்குவதும் தங்களைத் தாங்களே வானளாவப் புகழ்வதும்தான் இன்றைய இலக்கியப் போக்கு என்று ஆகிவிட்டது. இது யாருக்குத்தான் திருப்தி தரும்? நன்றாக எழுதும் பலர்கூடத் தங்களைத் தாங்களே மட்டு மீறிப் புகழ்ந்து கொள்ளும் அவலத்தைச் செய்து வருகிறார்கள்.
சுரதா ஒரு எழுத்தாளரைப் பற்றி என்னிடம் கேட்டார். அவர் எழுத்தைப் பற்றி என் அபிப்ராயம் என்ன என்று விசாரித்தார்.
அவர் நன்றாகவே எழுதுகிறார் என்றேன். "ஆனால் ரொம்ப கர்வியோ' என்றார் சுரதா. "ஆம்' என்றேன். "நான் அவர் எழுத்தை இதுவரை படித்ததில்லை. அவன் கர்வி என்று தெரிந்தபிறகு இனி படிக்கப் போவதும் இல்லை. அப்படியிருக்க அவரை நான் ஏன் மதிக்க வேண்டும் சொல்லுங்கள்!' என்றார் அவர்! என்னைப் போலவே பலருக்கு இந்தத் தற்பெருமைக் கலாசாரம் அலுப்பாக இருந்துள்ளது
என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. இலக்கியப் போக்கு பிடிப்பது இருக்கட்டும். இலக்கியவாதிகளின் போக்கு பிடிக்கும்படியாக இல்லையே!''

- திருப்பூர் கிருஷ்ணன் பேட்டி  நன்றி: சந்தவசந்தம்

நன்றி திரு R. கந்தசாமி ஸார்.

===========================================================================================

இணையத்திலிருந்து...

எடுக்கப்படும் புகைப்படமே தன் வாழ்வின் கடைசி நொடிகள் என்று அறியாத கணங்கள்....

Tina Watson's Last Breaths 

Tina and Gabe Watson were newlyweds on their honeymoon to Australia. Gabe wanted to go diving at the Great Barrier Reef, and to convince Tina to do so, he told her that he was a certified scuba diver. That was a blatant lie.  


When the currents got too strong, Gabe quickly swam back to the surface, leaving Tina behind to perish, later saying an ear problem prevented him from diving down deeper to help her. This image depicts Tina on her last breath, lying sideways on the seafloor behind another diver posing, oblivious to what was happening behind them.

=======================================================================================




'காரில் போறவனே
கவிதை ஒன்று எழுதேன்
என்னைப்பற்றி' என்றது
அதோ தெரியும்
அந்த ஒற்றை மரம்.
கவனமாய்
படமெடுத்துக் கொண்டாலும்
'உன்னைப்பற்றியா?
என்ன எழுத?' என்றேன்
சின்ன சிரிப்புடன்
'வெட்டவெளியில்,
பொட்டல் நிலத்தில்
வெயிலிலிருந்து உங்களை எல்லாம்
காக்க
வேர்விட்டிருக்கிறேனே
அதுபற்றி எழுது' என்றது மரம்
'பொட்டல்வெளியில்
ஒற்றை மரம்' என்றேன்
சுருக்கமாக
'சரிதான்
ஆனால் உன்
பரிதாபப்பார்வை தேவையில்லை
சுயபரிதாபம்
மனித இனத்தோடேயே இருக்கட்டும்
இணை யாருமில்லாவிட்டாலும்
இங்கு நிலையாய் நின்று
ஒரு
கணமும் அதை யோசியாமல்
நிழல்தரும் என் மேன்மை
உனக்கும் புரியவில்லை
நீ சொல்லியா
மற்றவர்க்கு
புரியப்போகிறது..
தாண்டிச் சென்று விடு நீயும்
தவறாது அனைவரும்
செய்கிறார்கள் அதைதான்'
என்றது மரம்.
'பெருமை பேசுகிறாயோ?' என்றேன்.
'கற்றுக் கொள்ளுங்கள் என்கிறேன்' என்றது
'வெட்டாமல் விட்டிருக்கிறார்களே
சந்தோஷப்படு' என்றேன்
'உணராமல் உலைவைக்கும்
உங்களுக்குதான் அதுவும்
புரியவேண்டும்'
மரம் சொன்ன வார்த்தைகள்
தாண்டி வந்த என்
பின்னால் காற்றில் கரைந்தது.

====================================================================================

இதென்ன
ஜோடி சேராமல்
தள்ளித் தள்ளியே
இருக்கின்றன இலைகள்??


================================================================================

கருணை கொலை மூலம் அன்பு மனைவியுடன் மரணித்த நெதர்லாந்து மாஜி பிரதமர்



================================================================================================================


பொக்கிஷம் :

அந்த ஆணின் முகத்தில் யாருடைய சாயல் தெரிகிறது? எனக்குத் தோன்றுவதுதான் உங்களுக்கும் தோன்றுகிறதா?

புதிர் போட்டிருக்கிறார்கள்....

இது நான் சிறுவயதில் சாப்பிட்ட நினைவு இருக்கிறது. ஆனால் மாத்திரையாகவா, டானிக்காகவா என்று நினைவில்லை!


தனித்தனியாக போட்டிருந்தால் இந்த வாரத்தை இதை வைத்தே ஒட்டி இருப்பேன்!

ஆஹா.. விடைகளும் வந்துடுச்சே...

70 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வணக்கம் ஜீவி ஸார்..  நான் ஐந்து மணிக்கு முதலில் கமெண்ட் இட்டு உங்களை வரவேற்று ஆச்சர்யப்படுத்தலாம் என்று நினைத்தேன்.  ஆனால் அசடு வழிந்து விடுவேனோ என்கிற எண்ணம் தடுத்து விட்டது!

      நீக்கு
    2. அங்கே காலை 5 மணி இங்கே மாலை 6.30.
      இந்த வியாழன் என்னன்ன சுவாரஸ்யங்கள் இருக்கு என்று பார்ப்பதற்காகவே
      மாலை இந்த நேரத்திற்கு
      இதற்காகவே காத்திருப்பேன்.
      சென்னை வந்து விட்டால் இது முடியாது தான்.

      நீக்கு
    3. அச்சச்சோ...  சென்னையிலும் முயற்சிக்கலாம்.  சரி, இந்த வியாழன் சுவாரஸ்யமாக இருந்ததா??

      நீக்கு
  2. டிஜிட்டல் பேமெண்ட் பற்றி என்னென்னவோ சொல்கிறீர்கள். நானோ சில சொந்த காரணங்களால் (என்ன வயசு தான்) இதையெல்லாம் பரிட்சித்துப் பார்க்க விருப்பப்படுவதில்லை.
    அதனால் படித்து 'ஓகோ, இதெல்லாம் இருக்கிறதா' என்று தெரிந்து கொண்டதோடு சரி. யயாதி கதை சொல்லி வைத்தாற் போல ஞாபகம் வருகிறது. கதை எழுத உட்கார்ந்தால் போதும். மனசு மட்டும் இளமையில் பூத்துக் குலுங்குவதில் எனக்கோ ஏகப்பட்ட குஷி. ஹி..ஹி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் முதலில் டிஜிட்டல் பேமெண்ட் பக்கம் போகாமல்தான் இருந்தேன்.  பல சமயங்களில் மகன்களின் உதவியை நாடவேண்டி இருந்தது.  பின்னர் நானே இணைந்து விட்டேன்!

      நீக்கு
  3. 'அழைக்கும் வனம். அத்துவானம்' கெத்தான தலைப்பில்லை?.. என்ன சொல்றீங்க?..

    பதிலளிநீக்கு
  4. ஒரு தடவை நா.பா.வைப் பார்க்க எக்ஸ்பிரஸ் எஸ்டேட் போயிருந்தேன். அப்போ நா.பா. தினமணிக்கதிர்க்கு ஆசிரியர். நா.பா. ரூமிற்கு வெளியே திருப்பூர் கிருஷ்ணன் அமர்ந்தபடி ஏதோ வேலையாக இருந்தார். அப்பொழுதெல்லாம் நா.பா விற்கு நேரடி உதவியாளர் மாதிரி தி.கி.
    அவரிடம் விஷயத்தைச் சொன்னேன். "உள்ளே தான் இருக்கிறார். போங்கள்.." என்றார். அவர் சொன்னாரே என்று சட்டென்று போனால், உள்ளே நா.பா. மேஜைக்கு எதிரே அசோகமித்திரன் உட்கார்ந்தபடி இரண்டு பேரும் எதையோ சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்தனர். நான் நுழைந்ததும் டக்கென்று அவர்கள் பேச்சு நின்றது.
    என்னைப் பார்த்ததும், "வாங்க, ஜீவி.." என்று சுற்றும் முற்றும் பார்த்தார் நா.பா. நான் கொண்டு போயிருந்த கதைக் கவரை அவரிடம் கொடுத்து, "வேறே ஒண்ணும் இல்லே.. இதைக் கொடுக்கலாம் என்று வந்தேன்.. அப்புறம் உங்களிடம் ஃபோனில் பேசுகிறேன்.." என்று சொல்லி வெகு நாகரிகமாக வெளியே வந்து விட்டேன்.

    திருப்பூர் கிருஷ்ணன் ரொம்பவும் சிம்பிளானவர். எப்பொழுதும் கதர் வேஷ்டி, கதர் ஜிப்பா, கதர் துண்டு தான். அந்த தோள்த்துண்டு கீழே நழுவி விழுந்து விடாமல் வெகு வேகமாக சைக்கிள் ஓட்டியபடி மாம்பலம் ஆர்ய கவுடர் தெருவில் அவர் செல்வதைப் பார்த்திருக்கிறேன்.
    திருப்பூர் கிருஷ்ணனை நினைக்கும் பொழுதெல்லாம் அது என்னவோ தெரிலே, இதெல்லாம் தான் என் நினைவுக்கு வரும்.

    நா.பா.விடம் அவ்வளவு நெருங்கிப் பழகிய திருப்பூர் கிருஷ்ணன்,
    சுரதாவிற்கு வித்வத் கர்வத்தைப் பற்றி பாடம் எடுத்திருக்கலாம் என்று தோன்றியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுவாரஸ்யமான விவரங்கள்.  தோள் துண்டை அணிந்தபடியே சைக்கிள் பயணமா?

      நீக்கு
    2. இலக்கியகர்த்தாக்களைப்பற்றிய விஷயங்கள் பொதுவாக படிக்க சுவாரஸ்யமானவை. சிருஷ்டித்தன்மை தாண்டி, சாதாரண மனிதர்களாக யாரவர்கள் என்று தெரிந்துகொள்ள ஆர்வம் எழும்.

      இப்போதிருக்கும் பர்த்தாக்களைப்பற்றி ஏதும் சொல்ல விருப்பமில்லை!

      நீக்கு
  5. டிஜிடல் பேமென்டைப் பிடிவாதமாக உபயோகிக்காமலிருந்துகடந்த மூன்று வருடங்களாக உபயோகிக்கிறேன். பலன்கள் இருந்தாலும், செலவைக் கட்டுப்படுத்த முடியாது. ஒரு ஒழுங்கு இல்லாமல் பணம் செலவழியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்.  நாம்தான் கட்டுப்பாடாய் இருக்க வேண்டும்.  சில சமயம் அவசிய அல்லது அன்றாட செல்வுகளும், அத்தியாவசிய செலவுகளும் ஒரே நாளில் அமைந்து கட்டுப்பாடு காரணமாக திண்டாடவும் நேரிடும் -  இன்று என் நிலை மாதிரி!

      நீக்கு
  6. ஸ்கூபா டிரைவிங்... மெக்சிகோவில், ஐம்பது டாரல் கொடுத்து கோரல் ரீஃப், கடல்வாழ் உயிரினங்களைக் காண நான் தயாராக இருந்தபோதும், எனக்கு நீச்சல் தெரியாது (certified) என்பதால் கூட்டிச் செல்லவில்லை. Certified ஆவதற்கான விதிமுறைகள் சுமார் நீச்சல் தெரியாத என்னை பயமுறுத்திவிட்டன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் பாஸின் மாமா பிள்ளை அகலமாய் மரணமடைய, அவன் இறுதிவரை இருந்ததில், ஆற்றில் தலைமுழுக வேண்டி இருந்தது.  அப்போதுதான் அது எனக்கு எவ்வளவு சிரமமான விஷயம் என்று தெரிந்தது.

      நீக்கு
  7. தெரியாத ஊரில் தெரியாத இடத்தில் தெரியாத பாதை வழியே பயணித்து பிக்னிக்... ரொம்பத் தைரியம்தான்.

    நாங்கள் பஹ்ரைனில் அத்துவான பாலைவனம் போன்ற இடத்தில் பிக்னிக்கில் இருந்தபோது, office bossன் பையன் நடந்து பார்க்கிறேன் என்று ரொம்பத் தூரம் கோய்விட்டான் போலிருக்கிறது. அவனைக் காணாமல் ஜீப் எடுத்துக்கொண்டு சுற்றி அவனைக் கண்டுபிடித்துக் கூட்டி வந்தார்கள்.

    இந்த மாதிரி பிக்னிக் நடத்த, டெம்ப்ரவரியாக மொபைல் டாய்லெட், மொபைல் கூடாரம், ஏர் கூலர் போன்றவைகளையும் வைப்பார்கள்.

    பதிலளிநீக்கு
  8. டிஜிட்டல் பேமெண்டில் பில் அடைப்பது (மின்சாரம்., தண்ணீர், அமேசான், இன்டர்நெட்) மட்டும்தான் செய்கிறேன். இங்கு திருவனந்தபுரத்தில் மற்ற பெரும்பாலானவர்கள் டிஜிட்டல் பேமெண்ட் ஒத்துக்கொள்வதில்லை. 2% கமிஷன் போகிறது என்கிறார்கள். ஓலா உபேர் போன்ற டாக்ஸி, ஆட்டோக்காரர்களும் கேஷ் தான். ஆட்டோவானால் எக்ஸ்ட்ரா வேறு தர வேண்டும்.

    மரமே நிழலே

    ஏ சி காரில் போறவரே
    என்னையும் பார்த்து உங்கள்
    எண்ணத்தை சொல்லிவிட்டு போங்க.
    சாலை விரிவாக்கம் என்று
    நாளை வருவார்கள் உன்னை வெட்ட
    அதுவரை இருக்கும் நாட்களை நீ
    மெதுவாக தள்ளு.

    பொக்கிஷத்தில் முதல் படத்தில் உள்ள ஆன் நம்பியார் போல் உள்ளது.

    மூன்று மரண செய்திகள் (வெற்றி, கடைசி போட்டோ, பிரதமர் கருணைக்கொலை) இந்த வாரம்.

    பொக்கிஷ புதிரை புதன் கேள்விகளாக்கியிருக்கலாம். புதன் பதிவிற்கு ஒரு வெயிட் கிடைத்திருக்கும்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் பழைய அலுவலகம் இருந்த சாலை இருபுறமும் வரிசையான பெரிய மரங்களுடன் நிழல் சேர்ந்து அவ்வளவு அழகாக இருக்கும்.  மன்மோகன் ஆட்சியில் சாலை விரிவாக்கம் என்று மொத்தத்தையும் வெட்டித் தள்ளினார்கள்.  மொட்டையாய் நிற்கிறது சாலை இப்போது.

      முன்னர் கைகளில் பணமாய் சம்பளம் வாங்கிய நாட்கள் நினைவில் நிழலாடுகின்றன.

      நீக்கு
  9. துண்டு நழுவி விடாமல் சைக்கிள் ஓட்டுவதில் திருப்பூர் கிருஷ்ணனுக்கோ அவ்வளவு திறமை இருந்தது..
    அமுதசுரபியின் இலக்கிய வட்டச் செய்திகளில் அவ்வப்போது திருப்பூர் கிருஷ்ணனைப் பார்த்ததுண்டு. பிற்காலத்தில் அமுதசுரபியின் ஆசிரியர் இவர் தான் என்று காலம் தெரியப்படுத்தாமல் இருந்தது.
    மாம்பலம் ஜெய்சங்கர் தெருவில் தான் அமுதசுரபி ஆசிரியர் விக்கிரமனின் (வேம்பு) இல்லம் இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவர்தானா எழுத்தாளர் விக்கிரமன்? சென்னை வெள்ளத்தின்போது (அல்லது கோவிடா?) மறைந்தவர் உடலை மூன்று நாட்கள் அடக்கம் செய்ய இயலாமல் கஷ்டப்பட்டது?

      நீக்கு
    2. ஆமாம், நெல்லை. தேசம் சுதந்திரம் பெற்றதிலிருந்து தொடர்ந்து வெளிவரும் கலை இலக்கிய மாத இதழ் அமுதசுரபி.
      ஸ்ரீராம் சிட்ஸால் நடத்தப்படும் பத்திரிகை. ஆரம்ப இதழிலிருந்து கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு மேல் அதன் ஆசிரியராய் இருந்தவர் விக்கிரமன். பொன்னியன் செல்வன் முடிந்ததும் அதன் கடைசி அத்தியாயத்தில் கல்கி விட்டுச் சென்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கிற விதமாய் நந்திபுரத்து நாயகி நாயகி சரித்திர நாவலை மூன்று பாகங்களாய் எழுதியவர் விக்கிரமன்..மிகச் சிறந்த வரலாற்று கதை ஆசிரியர். இலக்கிய விஷயங்களில் ஈடுபாடு கொண்டவர்.
      அது சென்னை வெள்ளம் வந்த பொழுது. நினைக்கவே வருத்தம் மேலிடுகிறது.

      நீக்கு
    3. விக்கிரமனிற்குப் பிறகு அமுதசுரபியின் ஆசிரியரானவர் திருப்பூர் கிருஷ்ணன்.

      நீக்கு
    4. படத்தில் இருப்பவர் திருப்பூர் கிருஷ்ணன் நெல்லை.  எழுத்தாளர் விக்ரமனை தஞ்சாவூரில் தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்கு வருகை தந்தபோது பார்த்திருக்கிறேன். அப்பா அப்போது அந்த எழுத்தாளர் குழுவில் இருந்தார்.

      நீக்கு
  10. ஆணின் முகச்சாயல் விடுத்து பெண்ணின் முகச்சாயல் பற்றிக் கேட்டிருந்தால் சொல்லியிருப்பேன்.

    ஒவியர் வினு என்பதால் பத்திரிகை கல்கி.

    ஹிந்து, முஸ்லிம், மதத்தின் பெயரால் பிளவுகள், பாக்கிஸ்தான்
    என்ற வரிகளுக்கிடையே----- ஹே, ராம்.. எத்தனை காலத்திற்கு தான் இந்த தேசத்தில் இதையே பேசிக்கொண்டிருப்பார்கள்?..



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // பெண்ணின் முகச்சாயல் பற்றிக் கேட்டிருந்தால் சொல்லியிருப்பேன். //

      கேட்டால்தான் சொல்வீர்களா? கேட்காமலும் சொல்லி இருக்கலாம்... ஆணின் முகம் கன்னட நடிகர் ராஜ்குமாரை நினைவுபடுத்தியது.

      நீக்கு
  11. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  12. digital payment ஐடியவே இல்லை. அது போல ஊபர் ஓலா எல்லாம் எப்போதாவதுதான் என்றாலும் இந்த ஓலாவும், ராபிடோவும் என்னென்னவோ ஆஃபர் என்று அனுப்பிக் கொண்டே இருக்கிறார்கள். அது சரி இதுங்களுக்கு எப்படித் தெரியும் நான் நடைப்பயிற்சி போகிறேன் என்று!!!!

    ஒரே ஒரு முறை ஓலா பைக் பயன்படுத்தினேன். நான் எந்த செய்திகளும் வேண்டாம் என்பதை ஓலா, ராபிடோ எல்லாத்துக்கும் தேர்ந்தெடுத்திருந்தாலும் எல்லாம் அனுப்பிக்க்ட்டே இருக்கு! எப்படினு தெரியலை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களை எல்லாம் பார்த்தா கொஞ்சம் பொறாமையாக கூட இருக்கு!

      நீக்கு
  13. அந்த வங்கி கார்ட் பாயின்ட்ஸ் பற்றித் தெரியும். கணவர் சொல்லியதுண்டு. ஒரு முறை இப்படி பில் கட்டும் போது அது சொல்லப்பட்டு கொஞ்சம் கழித்துக் கொண்டார்கள்! எவ்வளவுன்னு மறந்து விட்டது.

    ஓலா ஊபர் விஷயங்கள் தலை சுத்துது!!!! ஸ்ரீராம். எப்படி நீங்க கையாள்றீங்களோ!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  14. ஒரு சாலையும் இல்லை. நாங்களே மனக் கற்பனையில் வரைந்துகொண்டு, போன, வந்த, ஒரு ’வழி’. ’மனமிருந்தால் மார்க்கமுண்டு’ என்பது இதுதானோ?//

    ரசித்த வரி!!! எப்படியான அனுபவங்கள்! ஏகாந்தன் அண்ணா!

    கீதா

    பதிலளிநீக்கு
  15. இந்த வெற்றி முன்னாள் எம்.எல்.ஏ.வும், முன்னாள் சென்னை மாநகர மேயரும் சைதை துரைசாமியின் மகனாவார்.
    //

    ஓ இந்தச் செய்திதான் சமீபத்தில் ஓடிக் கொண்டிருக்கும் செய்தியா....கண்டு பிடிச்சிட்டாங்க இல்லையா....அடுத்த வரி பார்த்துவிட்டேன்,

    //கர்நாடகாவில் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்னும் திட்டத்தால் கோவில்களின் வருமானம் இரண்டு மடங்கு உயர்ந்திருக்கிறது//

    இங்கிருந்து அங்கிட்டு!! என்னவோ உதைக்குதே!!

    பெங்களூர் போக்குவரத்து 6 ஆம் இடம் எல்லாம் ஓகே மரங்களை எலலாம் வெட்டிடறாங்களேன்னு இருக்கு. பாலைவனம் போல ஆகிக் கொண்டு வருகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  16. ஊபர் இங்கும் கேன்சல் பண்ணு என வேலை காட்டுவார்கள்.

    சோமாலியா ரசனையான பகிர்வு.

    நியூஸ்ரைம் நன்று.

    பொக்கிசம் கேள்வித்தாள்கள் என அசத்தல்.
    தனிமரம் பேசும் கவிதை நன்று.

    பதிலளிநீக்கு
  17. திருப்பூர் கிருஷ்ணன் அவர்களின் பேட்டி - ஆமாம் நிறைகுடம் தளும்பாது. ஆனால் நிறைகுடங்களும் கூடத் தளும்புகின்றன சில! என்று அவர் சொல்லியிருப்பது யாரை என்று ஊகிக்க முடியவில்லை. உண்மையாகவே சுயதம்பட்டம் பிடிப்பதில்லைதான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாரைச் சொன்னாரோ...  சொன்ன காலகட்டம் எது என்று தெரிந்தால்  யூகிக்கலாம்.  சுடச்சுட அந்த நேரத்திலேயே படித்தவர்களுக்கு புரிந்திருக்கும்.

      நீக்கு
  18. இணையத்திலிருந்து படம் படத்தை ரசித்தாலும் செய்தி வேதனை

    கீதா

    பதிலளிநீக்கு
  19. இந்த ஒற்றை மரம் படம் முன்னரே போட்டிருந்த நினைவு ஸ்ரீராம். அல்லது இப்ப எடுத்தீங்களா? அதே படம் போல இருக்கிறதே!

    மரத்தின் பரிதாபமான வார்த்தைகள்.

    //பெருமை பேசுகிறாயோ?' என்றேன்.
    'கற்றுக் கொள்ளுங்கள் என்கிறேன்' என்றது
    'வெட்டாமல் விட்டிருக்கிறார்களே
    சந்தோஷப்படு' என்றேன்
    'உணராமல் உலைவைக்கும்
    உங்களுக்குதான் அதுவும்
    புரியவேண்டும்'
    மரம் சொன்ன வார்த்தைகள்
    தாண்டி வந்த என்
    பின்னால் காற்றில் கரைந்தது.//

    எல்லாருக்கும்தான். இது வாசித்த நினைவும் கொஞ்சம் இருக்காப்ல இருக்கு....

    வரிகள் சூப்பர் ஸ்ரீராம்....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசித்திருக்க முடியாது கீதா. முன்பு படம் மட்டும் பகிர்ந்திருந்தேன். இது இப்போது எழுதியது

      நீக்கு
  20. பூனாச்சு ஆஹா ரொம்ப ரசித்தேன் நல்லா ஆராய்ச்சிதான்! அது சரி எங்க வீட்டுக்கும் மாடி வீட்டுக்குமான (அங்குதான் பிறந்தாக மூணு பூனாச்சுகள். இப்ப ஒரே ரவுன்ட் கட்டி அட்டகாசம் மேலும் கீழும்!!) ஜிஞ்சர் பூனாச்சு எப்படி அங்கு வந்தாளோ!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  21. இந்தியாவில் சில வருடங்களுக்கு முன்னர் கருணைக் கொலை வழக்கு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் இருந்தது, ஆதரவாகவும், எதிர்த்தும் குரல்கள் எழுந்து கொண்டிருந்தன. அப்ப இப்ப நம் நாட்டிலும் கருணைக்கொலை சட்டம் வந்துவிட்டதா!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயரளவுக்கு இருக்கிறது.  ஆனால் சட்டம் இல்லாமலேயே நிறைய கொலை மட்டும் நடக்கிறது!

      நீக்கு
  22. பதில்கள்
    1. ஆ! கௌ அண்ணா! பூனைக்uக்க் கூட அரசியல் தெரியுமா!!! அண்ணா, ஆனா செம டைம்லி!

      கீதா

      நீக்கு
    2. ஆம். நானும் அதை நினைத்துதான் எழுதினேன்!

      நீக்கு
  23. புதிர்ல 1, விசித்திரம், மருத்துவர், த பால், வி சித்திரம் இதுகண்டு பிடிச்சேன் மற்றவை இல்லை

    கீதா

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் சகோதரரே

    வியாழன் கதம்பம் அருமை. முதலில் கூறிய செய்திகள் எனக்கு குழப்பந்தான். எங்கள் குழந்தைகள் இந்த விபரங்களின்படிதான் இப்போது செயல்படுகிறார்கள். எல்லாவற்றுக்கும் ஃபோன் மூலமாகத்தான் பட்டுவாடா செய்கிறார்கள். அவர்கள் அதுபடி செய்ததும் நான்தான் ஒன்றுக்கு பத்து தடவை சரியாக பணம் பட்டுவாடா செய்தீர்களா? உங்களுக்கு அதற்குரிய விபரங்கள் சரியாக வந்து விட்டனவா? என கேட்பேன்.

    நீங்கள் ஃபோன் மூலம் இச் செலவு கணக்குகள் கற்று தேர்ந்தது மகிழ்ச்சி.

    அந்த ஒற்றை மரத்தின் கவிதை அருமை. அது (அந்தப்படத்தை மட்டும்) நீங்கள் ஏற்கனவே பகிர்ந்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன். படமும் அழகு. கவிதையும் அழகு. ஒவ்வொரு வரிகளையும் ரசித்தேன்.

    மரம் சொன்ன கடைசி வரிகளை புரிந்து கொள்வதற்குள் அவற்றை காற்றில் கலக்கச் செய்து விட்டு பயணித்த கார் கடந்து விட்டிருப்பது மரத்தின் துரதிர்ஷ்டந்தான். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் கமலா அக்கா.  டிஜிட்டல் பணப்பரிமாற்றம் குழப்பம்தான்.  ஆனாலும் வசதி.கவிதையை ரசித்ததற்கு நன்றி.

      நீக்கு
  25. வணக்கம் சகோதரரே

    சகோதரர் ஏகாந்தன் அவர்களின் பிக்னிக் பயண விபரங்கள் சுவாரஸ்யத்துடன் சற்றே பீதியையும் கிளப்பியது. சென்றவிடங்களில் , அதுவும் அடர்ந்த காடு போன்ற பகுதியில் என்ன பழங்கள் அவை என்று அறியாத போது அவற்றை பரிசோதிக்க சுவைத்துப் பார்த்த ரிஸ்க் பிரமிப்படைய வைக்கிறது. அருமையான அவருடைய எழுத்தை தொடர்கிறேன்.

    சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களின் செய்தி அறை பக்கமும் அனைத்தும் படித்து தெரிந்து கொண்டேன். சில செய்திகளில் ஏற்கனவே படித்து அறிந்துள்ளேன். பகிர்வுக்கு அவர்க்கும் மனமார்ந்த நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  26. கருத்து போட்டு போக்வே இல்லை...

    பிக்காஸோ துணுக்குகள் எல்லாமே ரசித்தேன். ஏதோ ஒரு பாட்டில் கூட வருமே.....பிக்காஸோ ஓவியந்தான்....டெக்ஸாஸில் ஆடி வருதுன்னு வரும் ஆனா இடையில் தெரியலை!! என்ன பாட்டுன்னும் டக்குனு புரிபடலை.

    கீதா

    பதிலளிநீக்கு
  27. டிஜிட்டல் பேமெண்ட் - நிறைய விஷயங்கள் உண்டு. வங்கிகளின் டெபிட் மற்றும் க்ரெடிட் கார்டுகள் பயன்படுத்தும்போது பயன்படுத்துவது பொறுத்து சில Points கிடைப்பதுண்டு. அவை சில மாதங்கள் வரை நம் கணக்கில் சேர்ந்து வரும். அவற்றை பயன்படுத்தி சில பொருட்கள் வாங்கலாம். அதிகம் செலவு செய்தால் அதிக அளவில் Points கிடைக்கும். அதை பயன்படுத்தலாம்

    ஏகாந்தன் ஜி அவர்களின் அனுபவங்கள் ஒவ்வொன்றும் சிறப்பு. இப்படியான பயணங்கள் திகிலூட்டுபவை தான்.

    செய்திகள் தொகுப்பும் நன்று. மற்ற குறிப்புகளும் படித்தேன்.

    பதிலளிநீக்கு
  28. வணக்கம் சகோதரரே

    இன்றைய பதிவுக்கு தலைப்பு நன்றாக உள்ளது. பூனையாருக்கு பேசாமல் ஆராய்ச்சியாளார் பட்டம் தந்து விடலாம்.

    கருணைக் கொலை மனதை கலங்க வைக்கிறது. நேற்று செய்தியில் படித்தேன். நீண்ட வருடங்கள் இணை பிரியாது வாழ்ந்த மனமொத்த தம்பதியினர். இப்படிப்பட்டவர்களை காண்பதரிது.

    பொக்கிஷ பகிர்வுகள் நன்றாக உள்ளது. அது நடிகர் நம்பியார் சாயல் தெரிகிறது. நடிகர் சிவக்குமார் மாதிரியும் உள்ளது.

    புதிர் பகுதி காலையிலேயே பார்த்து சில விடைகள் அறிந்தேன். டாக்டர், டேபிள் ஃபேன், தபால், விசித்திரம் போன்றவை. ஆனால் இப்போது விடைகளும் வந்திருக்கின்றன. தெரியாமல் குழப்பிக் கொண்டிருந்த முதல் புதிருக்கு விடை தெரிந்து கொண்டேன். அதில் அதற்கு இறுதியில் வரும் அழகு சாதனம் என்னவென்று புரியவில்லை. எல்லாவற்றையும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  29. பதிவு அருமை. நீங்கள் முதலில் சொன்ன விஷயம் எனக்கு இன்னும் பழகவில்லை. அதனால் தெரியவில்லை.

    உங்கள் கவிதை அருமை. பூனையாரின் சிந்தனையும் படம் நன்றாக இருக்கிறது.

    ஏகாந்தன் அவர்களின் பயண அனுபவம் நன்றாக இருக்கிறது. பொக்கிஷ பகிர்வுகள் அருமை.

    ஆல்போ ஷாங்க் அம்மா வீட்டில், மாமியார் வீட்டில் முன்பு பயன்படுத்திய டப்பாக்கள் இருந்தன. சிறு வயதில் பாலில் போட்டு கொடுத்து இருப்பார்கள் அம்மா, நினைவு இல்லை அதன் ருசி எல்லாம்.

    பதிலளிநீக்கு
  30. புதிர் போட்டி கஷ்டபட்டு கண்டு பிடித்தேன், விடை கீழே இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  சாதாரணமாக பைண்டிங் புத்தகங்களில் விடை இருக்கும் பக்கம் இருப்பது சிரமம்.  இங்கு அதுவும் இருந்தது.

      நீக்கு
  31. ஊபர் ஓலா அனுபவங்கள் இல்லாததால் அதைப் பற்றித் தெரியவில்லை.

    டிஜிட்டல் பேமென்ட் சில அனுகூலங்கள் உண்டு. ஆனால் இன்னும் எனக்கு அந்த அனுபவமும் கிடைக்க வில்லை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  32. ஏகாந்தன் சாரின் அனுபவங்கள் சுவாரசியமாக இருக்கின்றன என்பதோடு திகில் அனுபவங்களாகவும் இருக்கின்றன. சோமாலியா போன்ற அவ்வளவாக வளர்ச்சியடையாத, பிரச்சனைகள் மிகுந்த நாடுகளில் இப்படித்தான் இருக்கும் போல. அங்கு வசிக்கும் வேறு நாட்டவர்களுக்குக் கஷ்டம்தான்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  33. கருணைக் கொலையை ஏனோ இன்னும் மனம் ஏற்க முடியவில்லை.

    பிக்காஸோ பொக்கிஷத் துணுக்குகள் மிகவும் சுவாரசியம்.

    பூனையின் படம் மிக அருமை. தலைப்பு அரசியல் இருக்கிறதோ? சமீபத்திய தமிழ்நாட்டு அரசியல். அதற்குத் தகுந்த படம்!

    உங்கள் கவிதை மிக அருமை, ரசித்தேன், ஸ்ரீராம்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!