சனி, 3 பிப்ரவரி, 2024

தொழிலாளியாக இருந்து தொழில் அதிபர்! மற்றும் நான் படிச்ச கதை

 

நன்றி JKC ஸார்

=========================================================================================

வங்கிகளால் கண்டுகொள்ளப்படாத மக்களுக்கு கடன் அளித்தே மிகப் பெரிய தொழில் பேரரசைக் கட்டியெழுப்பிய ஸ்ரீராம் குழும நிறுவனர் தியாகராஜனின் அணுகுமுறை வியக்கத்தக்கது.  

நன்றி JKC ஸார்.

=========================================================================================

தொழிலாளியாக இருந்து தொழில் அதிபர்! 500 பேருக்கு பயிற்சி; 200 பேருக்கு வேலை...

தியாகராஜன் ஆடை வடிவமைப்பாளர். சாதாரண பனியன் தொழிலாளியாக, ஆடை தயாரிப்பு தொழிலில் நுழைந்து, இளம் தொழில்முனைவோராக இருப்பவர். திருப்பூரில், 3 இடங்களில் தனது நிறுவன கிளைகளைநிறுவியுள்ளார். 

இதுவரை, 500க்கும் மேற்பட்டவர்களுக்கு பயிற்சி வழங்கி, 200க்கும்மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பும் பெற்றுக் கொடுத்துள்ளவர்.

அவர் சொல்கிறார் : 

வெளியூரில் இருந்து பிழைப்புத்தேடி, தொழில் வாய்ப்பு நிறைந்த திருப்பூருக்கு ஏராளமானோர் வருகின்றனர். அவர்களில் பலர், தொழிலாளிகளாக உள்ளனர்; சிலர், தங்கள் கடும் உழைப்பால், முதலாளிகளாக மாறியுள்ளனர். அந்த வரிசையில், கும்பகோணத்தைச் சேர்ந்த நான், கடந்த, 15 ஆண்டுகள் முன், பனியன் நிறுவனத்தில் வேலை தேடி திருப்பூர் வந்தேன். எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த நிலையில் ஒரு பனியன் நிறுவனத்தில், சாதாரண கைமடி வேலையில் சேர்ந்தேன்.

'அடுத்து என்ன செய்யலாம்?' என்ற கேள்வி மற்றும் தேடல் என்னுள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். அந்த அடிப்படையில், ஆடை தயாரிப்பின் அடிப்படை எது என்பதை கண்டறியும் ஆவல் வந்தது. அப்போது தான், 'பேட்டர்ன்' எனப்படும் வடிவமைப்புத்துறை மீது ஆர்வம் வந்தது. 'கேட்' (Computer Aided Design) எனப்படும் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் உதவியுடன், ஆடை வடிவமைப்பு பயிற்சியை முறையாக கற்றுத்தேர்ந்தேன்.

பின், சிறியளவில் சொந்தமாக நிறுவனம் துவங்கி, வர்த்தகர்களிடம் இருந்து 'ஆர்டர்' பெற்று, அவர்கள் விரும்பும் ஆடைகளை வடிவமைத்து வழங்கி வருகிறேன்; தொழில் வளர்ந்தது. மூன்று கிளைகளை நிறுவியுள்ளேன். என் நிறுவனத்தில், ஆர்வமுள்ளவர்களுக்கு பயிற்சியும் வழங்கி வருகிறேன். இதுவரை, 500க்கும் மேற்பட்டவர்கள் பயிற்சி பெற்று, ஏராளமானோர் வேலைவாய்ப்பும் பெற்றுள்ளனர். கல்வி பயில்வது மிக அவசியம்; அதோடு, தாங்கள் கால்பதிக்கும் துறை சார்ந்த பயிற்சியும், அதில் வெற்றி பெறுவதற்கான விடா முயற்சியும் அவசியம்.

'அப்டேட்' முக்கியம்



ஆடை துறையை பொறுத்தவரை, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில், தேவை இருந்து கொண்டே தான் இருக்கும்; மாறாக, ஆடைகளின் வடிவமைப்பில் வேண்டுமானால் மாற்றம் ஏற்படலாம். அவர்களின் தேவைக்கேற்ப தொழில்நுட்பங்களை 'அப்டேட்' செய்து கொள்வது அவசியம்.

ஆரம்ப காலங்களில், மனித ஆற்றல் மூலம் மேற்கொள்ளப்படும் 'பேட்டர்ன்' மட்டும் தான் இருந்தது. நாளடைவில், 'கேட்' தொழில்நுட்பம் அவசியமானதாக மாறியது; தற்போது, 'கேட்' இல்லாமல் 'பேட்டர்ன்' இல்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது. ஆடை உற்பத்தி துறையில், இப்பிரிவு முதன்மையானது; முக்கியமானது. ஆடை வடிவமைப்பு என்பது, இத்தொழில்நுட்பம் வாயிலாக எளிதாகிறது; நான்கு பேர் செய்யும் வேலையை ஒருவர் செய்கிறார். நவீன 'சாப்ட்வேர்' வாயிலாக 'பேட்டர்ன்' செய்து கொடுக்கும் போது, துல்லியம் இருக்கும்.

இத்துறையை பொறுத்தவரை, தொழில்நுட்பங்களை 'அப்டேட்' செய்வது மிக அவசியம். இதன் அடுத்த கட்டம், '3டி' தொழில்நுட்பம்; நம் ஊரில் பிரபலமடையாவிட்டாலும், அந்த பயிற்சியை பெறுவதிலும், இளைஞர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். எதிர்காலத்தில் '3டி' தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்படும் ஆடைகள் சந்தைக்கு வரும்; அப்போது, 'கேட் பேட்டர்ன் மேக்கர்'களுக்கான தேவை மேலும் கூடும்.

அதிகரிக்கும் ஆர்வம்



'பேட்டர்ன்' துறையை பொறுத்தவரை, இளைஞர்கள் தொழில்நுட்பத்தை திறம்பட கற்றுக்கொள்ள அதற்கேற்ற பாடப்பிரிவைதான், கல்லுாரிகளிலும் தேர்ந்தெடுத்து படிக்கின்றனர்.பெரும்பாலான பனியன் நிறுவனங்களில், பல ஆண்டுகளாக பணிபுரியும், 50 வயது கடந்த 'பேட்டர்ன் மாஸ்டர்'கள், 'கேட்' தொழில்நுட்பத்தை கற்காமல், தங்களது அனுபவத்தின் வாயிலாக, மனித ஆற்றல் வாயிலாகவே 'பேட்டர்ன்' செய்கின்றனர்.

தொழில்நுட்பம் கற்று இப்பணிக்கு வரும் இளைஞர்களுடன், ஈடுகொடுத்து பணியாற்றுவதில் அவர்களுக்கு சிரமம் உள்ளது. தொழில்நுட்பம் கற்று வருபவர்களுக்கு தான், நிறுவனங்கள் வாய்ப்பும், முக்கியத்துவமும் வழங்குகின்றன.எனவே தான், பனியன் நிறுவனங்களில் பல ஆண்டுகளாக பணிபுரியும் 'பேட்டர்ன் மேக்கர்கள்' கூட, 'கேட்' தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்கின்றனர். காலை, 6:00 மணியில் இருந்து, 8:00 மணி வரை எங்கள் நிறுவனத்துக்கே வந்து பயிற்சி பெறுகின்றனர்; பின், தங்கள் பணிக்கு சென்று விடுகின்றனர்.

நிதானம் வேண்டும்



'கேட் பேட்டர்ன்' பயிற்சி பெற்றவர்களுக்கு கேரளா, மும்பை, ைஹதராபாத் உள்ளிட்ட பகுதிகளிலும் வேலை வாய்ப்பு கிடைக்கிறது; பயிற்சி பெற்ற பலர், அங்கு வேலை வாய்ப்பும் பெற்றுள்ளனர். துவக்கத்தில், மாதம், 12 ஆயிரம் முதல், 15 ரூபாய் சம்பளம் பெறும் அவர்கள், தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளும் பட்சத்தில், அடுத்த ஓரிரு ஆண்டுகளில், 30 ஆயிரம் ரூபாய் வரை கூட சம்பளம் பெறுகின்றனர். சிலர், சொந்தமாக 'பேட்டர்ன் சென்டர்' வைத்து, நிறுவனமாக செயல்பட்டு வருகின்றனர். பல நிறுவனங்களில் 'ஆர்டர்' அதிகம் வந்துவிட்டால், 'பேட்டர்ன் மேக்கர்'களுக்கான தேவையும் அதிகரித்து விடுகிறது. அதுபோன்ற சமயத்தில், பனியன் நிறுவனத்தினர், எங்களை போன்றவர்களுக்கு, 'ஜாப் ஒர்க்' அடிப்படையில் 'பேட்டர்ன்' செய்து கொடுக்கும் வேலையை வழங்குகின்றனர். தொழில் முனைவோராக மாறுவதற்கு, மத்திய, மாநில அரசுகள் 'ஸ்டார்ப் அப்' வாயிலாக ஊக்குவிப்பு வழங்குகின்றன.

புதிதாக இத்துறையில் கால்பதிக்கும் இளைஞர்கள், தேர்ந்தெடுத்துள்ள துறையின் அனைத்து நுணுக்கங்களையும் கற்று, காலத்துக்கேற்ப தங்களை 'அப்டேட்' செய்து, நிதானமாக செயல்பட்டால், நிறைய சம்பாதிக்க முடியும்.

தற்போது, உள்நாடு மற்றும் வெளிநாடுகளின் 'ஆர்டர்' குறைவு என்பதால், ஆடை தொழிலில் மந்த நிலை நிலவுகிறது என்ற பேச்சு, பரவலாக இருந்து வருகிறது. ஆனால், ஆடை துறை என்பது, நிலையானது; அதற்கு அழிவில்லை. அந்த வகையில், திருப்பூருக்கான 'ஆர்டர்' இருந்துகொண்டேதான் இருக்கும்; மந்த நிலை என்பது, தற்காலிகமானதுதான். ஆடை உற்பத்தி, வடிவமைப்பு போன்ற துறைகளில் திட்டமிட்டு செயலாற்றுபவர்களுக்கு இந்த மந்தநிலை, எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை; அவர்கள் தொடர்ந்து தொழில் செய்கின்றனர்.

 ==========================================================================================

நான் படிச்ச கதை (JKC)

 

மீட்சி

கதையாசிரியர்: ராஜம் கிருஷ்ணன்

 

முன்னுரை.

ராஜம் கிருஷ்ணனின் இந்த  சிறுகதை “மீட்சி” 1955 ஆம் ஆண்டு  கலைமகளில் வெளியானது. அக்கால கட்டத்தில்  இரு தாரம், மனைவி, துணைவி போன்ற வாழ்க்கை பழக்கங்கள்/வழக்கங்கள்  சாதாரணம். சொல்லப்போனால் ஒருவருடைய அந்தஸ்து என்பதே அவருக்கு எத்தனை பெண்டாட்டி என்பதில் இருந்த காலம். ஆகவே அக்கண்ணோட்டத்துடன் கதையை வாசிக்கவும்.

கதை மூன்றாம் மனிதர் பார்வையில் இரு சிறுமிகளின் வாயிலாக சொல்லப்படுகிறது. கதை முழுதும் தரப்பட்டுள்ளது.

மீட்சி

கதையாசிரியர்: ராஜம் கிருஷ்ணன்

 

கீழே ஓடும் சாக்கடையின் குறுக்கே போட்டிருந்த கல் வாசற்படியிலே சுரத்தின்றிக் கன்னத்தில் கை வைத்தவண்ணம் பிரேமா உட்கார்ந்திருந்தாள். காலையிலிருந்து அன்று அவளுக்கு ஏனோ ஒன்றுமே பிடிக்கவில்லை. பொழுதே போகவில்லை போல் இருந்தது. அவளுடைய வீட்டுக்கு எதிரே ஆலமரத்தடியில் அவளை ஒத்த பிராயத்தினர் தாம் விளையாடிக் கொண்டிருந்தனர். தினமும் அந்தச் சிறுவர்கள் பள்ளிக்கூட உபாத்தியாயருக்கு ‘டிமிக்கி’ கொடுத்துவிட்டு அங்கு வந்துதான் விளையாடுவார்கள். ஆனால் பிரேமாவின் அம்மா அவளுக்குக் கண்டிப்பான உத்தரவிட்டிருந்தாள். அந்தக் கும்பலுடன் சேர்ந்து அவள் விளையாடவே கூடாது. அவர்கள் பெட்டிக் கடைப் பக்கத்திலிருந்து பொறுக்கி வரும் துண்டு பீடிகளைப் புகைத்துக் கொண்டு காசு வைத்துக் கோலி ஆடுவார்கள். தெரு நாய்களைப் போல் புழுதியில் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுக் கட்டிப் புரளுவார்கள். அவர்களுடைய புத்தகப் பைகள் எல்லாம் ஆலமரத்தடி மேடையில் தூங்கும்.

பிரேமாவும் அவளுடைய தாய் கண்ணம்மாவும் அந்தப் பக்கத்துக்குப் புதிதானவர்கள். கண்ணம்மாவுக்குப் பஞ்சாலையில் வேலை. விடிய ஆறு மணிக்கே புறப்பட்டால் தான் அவளுக்குப் படியளக்கும் பஞ்சாலைக்குக் குறித்த நேரத்தில் செல்ல முடியும். பிரேமாவை அப்போதே எழுப்பி அவள் உட்கார்த்தி வைத்துப் போய்விடுவாள். அந்த வீட்டில் அவர்கள் இருந்த ஒரே அறைதான் குடியிருக்கத் தகுதி வாய்ந்ததாகத் தெருவைப் பார்த்துக்கொண்டு இருந்தது. மீதி இடங்கள் எல்லாம் கூரை விழுந்து குட்டிச்சுவர்களாகக் காட்சி அளித்துக்கொண்டிருந்தன. திரும்ப அம்மா வரும்வரை, அதாவது மாலை ஆறு மணிவரை, பிரேமாவுக்குச் சர்வ சுதந்திரந்தான். வீட்டில் இருக்கும் பண்டங்களில் எது வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் எடுத்துச் சாப்பிட்டுக்கொள்ளலாம். ஆனால் ஒரே ஒரு தடை மட்டும் அவளுக்குச் சிறை வாசத்தையும் விடக் கொடுமையானதாகக் கஷ்டம் கொடுத்தது. பிரேமா அந்த வாசற்படிக்குள்ளேதான் விளையாடிக்கொள்ளலாம். வீட்டை விட்டு எங்கும் நகரக் கூடாது என்பதுதான் உத்தரவு.

மாலை கண்ணம்மா வீடு திரும்பிய பின் தண்ணீர் கொண்டுவந்து, அடுப்பு மூட்டிச் சோறாக்குவாள். பிரேமாவுக்குத் தலைவாரி, மேலுக்குத் தண்ணீரோ வெந்நீரோ ஊற்றிக் குளிப்பாட்டிவிடுவாள். அப்புறம் சுடு சோறு உண்டபின் இருவரும் தூங்குவார்கள். ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் அவளுக்கு ஓய்வு நாள். அன்று அவர்கள் காலையிலேயே எண்ணெய் தேய்த்துத் தலை முழுகுவார்கள். காயும் கறியுமாய்ச் சமைத்து உண்டுவிட்டு, கோயம்புத்தூருக்குச் சினிமாப் பார்க்கச் செல்வார்கள்.

சலித்து ஓய்ந்து உட்கார்ந்திருந்த பிரேமாவுக்கு, “நிதம் ஞாயிற்றுக் கிழமையாக இருக்கக்கூடாதா?” என்று இருந்தது.

அப்போதுதான் சின்னி அவள் அருகில் வந்து நின்றாள். சின்னிக்கு நாலு அல்லது ஐந்து பிராயந்தான் இருக்கக்கூடும். அவளைவிடச் சிறியவள் தான். அவள் போட்டிருந்த அழுக்குக் கவுன் பின்புறம் பித்தானில்லாமல் தொங்கியது. நான்கு நாட்களுக்கு முன் சீவிப் பின்னலிடப்பட்ட சடையினின்றும் மயிர்கள் பறந்து பறந்து முகத்தை மறைத்தன. வழிந்த மூக்கைப் புறங்கையால் துடைத்தவண்ணம் பிரேமாவை உற்றுப் பார்த்துக்கொண்டே நின்றாள் சின்னி.

பிரேமா சட்டென்று எழுந்து, “பாண்டி ஆடலாம் வாரியா?” என்று கேட்டாள். அவள் தலையை அசைத்தாள்.

அந்தக் கணமே இருவரும் தோழிகளாகிவிட்டனர்.


“உங்க வூடு எங்கே இருக்குது?” என்று பிரேமா அவளைப் பாண்டியாடியபின் விசாரித்தாள்.

“பிள்ளையார் கோயிலுக்குப் பொறவிலே இருக்குது பார், குட்டி யண்ணந்தோப்பு, அங்கே இருக்குது. எங்கம்மா பொரி கடலை கொண்டுட்டுக் கோயமுத்தூர் போவாங்க. சாயங்காலந்தான் வருவாங்க. எங்கய்யா ராவு தான் வூட்டுக்கு வருவாரு” என்று அவள் கேட்காத விவரங்களையும் சின்னி சேர்த்துத் தெரிவித்தாள்.

பிரேமாவுக்குத்தான் அந்த வீட்டையும் ஆலமரத்தடியையும் விட்டால் வேறு இடம் தெரியாதே? ஆனால் அதற்காக அவள் கவலைப்படவில்லை. பதிலாக, “எங்கம்மாளுக்குப் ‘பார்வதி மில்’லிலே வேலை. பொழுது போய்த்தான் வருவாங்க. நீ நிதம் இங்கே வரியா? எங்கம்மா பழம் மிட்டாய் அல்லாம் வாங்கியாருவாங்க. உனக்கும் தருவேன். உம்?” என்று தலையை ஆட்டிப் பெருந்தன்மையுடன் ஆசை காட்டினாள்.

சின்னியின் கௌரவ உணர்வு அவ்வளவு சீக்கிரம் அவளுடைய இரக்கத்துக்கு இலக்காக விரும்பவில்லை.

“எங்கம்மாளுந்தான் பொரி கடலை கொண்டாருவாங்க. எங்க ஐயாவுக்குந்தான் மில்லிலே வேலை” என்றாள் விட்டுக்கொடுத்துக்கொள்ளாமல்.

“உங்க வூட்டை யார் பார்த்துக்குவாங்க?” பிரேமாவுக்கு இது பெரிய பிரச்னையாயிற்றே?

“எங்கண்ணன் இருக்குது. தங்கச்சிப் பாப்பா இருக்குது. அவன் வூட்டைப் பூட்டிப்போட்டு இங்ஙனே வந்திட்டான். அதோ பாரு, மரத் தடியிலே தங்கச்சிப் பாப்பா” என்று ஆலமரத்தடி மேடையில் படுக்க வைத்திருந்த குழந்தையைச் சின்னி காட்டினாள்.

‘நாளைக்கும் வாரியா? நெதம் இங்கே விளையாடலாம்” என்றாள் பிரேமா. சின்னி தலையை முழுச் சம்மதத்துடன் அசைத்தாள்.

சின்னி இதற்குப் பிறகு தினம் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல வீட்டை விட்டு அங்கு வந்துவிடுவாள். விளையாட என்று மட்டும் சொல்லிவிட முடியாது. சின்னியைக் கவர்ந்தது பிரேமாவின் தோழமை மட்டுமல்ல. பிரேமாவுக்கு அவளுடைய அம்மா தினமும் நிசமாகவே ஏதாவது தின்பண்டம் வாங்கித் தருவது வழக்கமாக இருந்தது. முதலில் சின்னி விட்டுக் கொடுத்துக்கொள்ளாமல், ‘எங்கம்மாளும் பொரி கடலை வாங்கித் தருவாங்க’ என்று சொல்லிக்கொண்டாலும், பிரேமாவுக்குச் சமமாக ஆக முடியாது என்று உறைத்துவிட்டது. மேலும் மாம்பழம், சாக்லேட், மிட்டாய் முதலியவற்றின் தனித்தனியான ருசி அந்தப் பொரிகடலைக்கு ஏது? அதுவும் நல்ல வியாபாரம் ஆகியிருந்தால் தான் அவளுடைய அம்மாள் ‘செலவுச் சாமான்கள்’ வாங்கிக் கொண்டு சிரித்த முகத்துடன் வருவாள். இல்லாவிட்டால் வெடு வெடு கடு கடு என்று வருவாள். சின்னி ரோதனை செய்தால் சுடச் சுட உதைகளே கிடைக்கும்.

பிரேமா வாயால் தாராளம் காட்டியது போல் கையால் காட்டிவிடமாட்டாள். சின்னி ஊறும் நாவை உள்ளுக்கு இழுத்துக்கொண்டு கெஞ்சும் விழிகளுடன் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே தன் கையிலுள்ள பண்டத்தை ருசித்துச் சப்புக் கொட்டிக்கொண்டு தின்பதில் அவளுக்குப் பரமானந்தம். சின்னி ஊறும் எச்சிலை உதட்டில் நனைய வைத்துக் கொள்வாள். கை தன்னையும் அறியாமல் அவளிடம் நீளும். பிறரை இரங்கச் செய்து தான் மேலான நிலையில் இருக்கும் பெருமையில் மூழ்கியபடியே அவள் சிரிப்பாள். சிரித்துக் கொண்டே தன் தாராள மனப்பான்மையை ஓர் அரசிக்குரிய பெருமிதத்தோடு பிய்த்து எறிவாள். மாம்பழமானால் பல்லால் தோலை உரித்துக் கொடுப்பாள். சாக்லெட்டானால் நெல்லளவு மீதியுடன் மேலே சுற்றப்பட்ட காகிதம் கிடைக்கும். மிட்டாயானால் அவள் சப்பி ஈர்க்கில் மீதி வைத்துத் தருவாள். சின்னி அந்தத் தானத்தைக் கடைசி வரையில், சக்கையிலும் சக்கையாகத் தேயும் வரையில் ரசிப்பாள்.

அப்படி அந்தத் தின்பண்டங்களின் சிறு பகுதிகளை ரசிக்கும் போதெல்லாம் முழுசும் ஒரு நாள் கிடைக்காதா என்று சின்னியின் உள்ளம் ஏங்கும். தொடர்ந்து சிந்தனைகளும் கேள்விகளும் உள்ளத்தில் வட்டமிடும். அவளுடைய ஐயாவும் மில்லிலேதானே வேலை செய்கிறார்? நிறையச் சம்பளம் கிடைக்குமே? ஏன் ஒன்றும் வாங்கி வருவதில்லை? சின்னிக்குத் தந்தையுடன் நெருக்கமான பழக்கமே இருக்கவில்லை என்று சொல்ல வேண்டும். அவள் காலையில் எழுந்திருக்குமுன் அவன் வேலைக்குப் போய்விடுவான். இரவு அவன் வருவதற்குள் அவள் அநேகமாக உறங்கி விடுவாள். விடுமுறை நாட்களில் அவள் வீட்டில் இருப்பது உண்டு. ஆனால் நெருங்கிச் சல்லாபிக்க சந்தர்ப்பங்கள் ஏற்படுவது துர்லபம். அவன் வீட்டில் இருந்த போதெல்லாம் அவளுடைய அம்மாவிடம் சண்டைகள் போடுவான். அடிக்கவும் உதைக்கவுங் கூடத் தயங்க மாட்டான். கடைசியில் சின்னி, முருகன் எல்லாரையுமே சேர்த்துத் திட்டிவிட்டு வெளியேறி விடுவான்; சின்னியின் அம்மா அழுவாள். அழுதுவிட்டுக் கூடையைத் தூக்கிக்கொண்டு கோயம்புத்தூர் போய்விடுவாள். ‘எல்லா அப்பாக்களும் இப்படித் தான் இருப்பார்களா? பிரேமாவுக்குங்கூட அம்மா தானே எல்லாம் வாங்கித் தருகிறாள்?’

சின்னி ஒருவழியாய் முடிவுக்கு வந்தாள்.

அன்று ஞாயிற்றுக்கிழமை. பிரேமா புதுச் சட்டை, லோலாக்கு எல்லாம் போட்டிருந்தாள். தலையை வாரி இரு பின்னல்கள் போட்டு. பட்டு நாடாக் கொண்டு அவளுடைய அம்மா முடிந்திருந்தாள். ஆல மரத்தடியில் நின்றவளாய், கையில் இருந்த மசால் வடையைக் கடித்துக் கொண்டு இருக்கும் போது சின்னி வந்தாள். அவளைக் கண்டதுமே பிரேமாவுக்குக் கர்வம் கண்களில் பளபளத்தது. “நாங்க இன்னிக்குக் கோயமுத்தூருக்குச் சினிமாப் பாக்கப் போகப் போறோமே?” என்று நீட்டினாள்.

மசால்வடையைத் துளி விண்டு அவளுடைய கையில் வைத்தபடி, “நீ பார்த்திருக்கிறியோ சினிமா! நல்ல நல்ல சேலை கட்டி ராஜா ராணி அல்லாம் வருவாங்க. கலர் கலர் டான்ஸ் ஆடுவாங்க” என்று விசாரித்தாள்.

சின்னிக்கு இந்த ஆசை காட்டும் பேச்சுப் பிடிக்கவில்லை.

“உங்க அய்யாவுங்கூட வருவாரா பிரேமா?” என்று விசாரித்தாள். முதல் நாள் ஏற்பட்ட சந்தேகத்தை ஊர்ஜிதம் செய்து கொள்ளவே இந்தக் கேள்வி கேட்டாள்.

‘ஐயா’ என்ற பெயரைக் கேட்டதுமே பிரேமா டக்கென்று, “எங்க ஐயாதான் ஆஸ்பத்திரியிலே செத்துப் போனாரே? எங்கம்மா அப்புறந்தான் இங்கே வந்தாங்க. எங்க மாமன் சினிமாக் கொட்டாய்க்கு வந்திருப்பாரு. அவரு நல்லவரு. நேத்து ராவுங்கூட இங்கே வந்திருந்தாரு. எங்கம்மாளுக்குப் புதுச் சேலை, எனக்கு இந்தப் பட்டுச்சட்டை, அல்லாம், இந்த வடைகூட, அவருதான் வாங்கியாந்தாரு” என்றாள்.

அந்தச் சமயம் பிரேமாவின் அம்மா வாசல் படியில் வந்து நின்று கொண்டு, “தட்டிலே சோத்தை வச்சிட்டு எங்கே போனே?” என்று அவளை அதட்டி அழைத்தாள்.

பிரேமா உள்ளே ஓடிவிட்டாள். சின்னி மலங்க விழித்துக்கொண்டு நின்றாள். கண்ணம்மாவைப் பார்த்த பிரமிப்பு இன்னும் அவளுக்கு அடங்கவில்லை. இடையிலே புது மஞ்சள் வாயல் சேலை. கறுப்புப் பட்டு ரவிக்கை உடலோடு ஒட்டி இருந்தது. தலையிலே கொண்டை. மேலே கனகாம்பரப் பூ. ஆஸ்பத்திரியில் இருக்கும் ‘மிஸி அம்மா’ளைவிடப் பிரேமாவின் அம்மா அழகாக இருக்கிறாள் என்று சின்னி முடிவு கட்டினாள்.

கோயம்புத்தூருக்குப் போகும் பஸ் அந்த ஆலமத்தடியிலிருந்து ஐந்தாறு கஜம் தள்ளியிருக்கும் சாலை வழியே தான் செல்லும். பஸ்ஸுக்குக் காத்து நிற்பவர்கள் வெயிலுக்காக அந்த மரத்தடியில் வந்து நிற்பார்கள்.

சின்னி அங்கு நிற்கையிலேயே அவளுடைய அம்மா கூடையுடன் அங்கு வந்தாள். அன்று அத்தனை நேரம் அவளுக்கு வீட்டில் வேலை இருந்தது. பொரிகடலை வியாபாரத்துக்கு இனிமேல்தான் போகப் போகிறாள்.

சின்னியை அங்கே கண்டதும் முத்தம்மாளுக்குக் கோபம் வந்தது. “வூட்டிலே புள்ளையைப் பார்த்துக்கோன்னேன்; இங்கே எங்கேடி வந்தே? போ!” என்று அதட்டினாள்.

சின்னி படியவில்லை. கண்ணம்மாவைப் பார்த்து மலைத்த அவள் கண்களுக்கும் கருத்துக்கும் அவளைக் கண்டதும் மிரட்டலைக் கேட்டதுமே ஆத்திரம் பொங்கி எழுந்தது. “போ, மாட்டேன் போ!” என்று அம்மாவைப் பிடித்துத் தள்ளினாள்.

“என்ன கேடு வந்திச்சி உனக்கு?” என்றாள் முத்தம்மாள்:

“வெவ்வெவ்வே, மூஞ்சியைப் பாரு!” என்று சின்னி அழகு காட்டினாள்.

“ஏன்? உங்கப்பனிடம் கத்துக்கிட்டியா? போடி அப்பாலே” என்று அவளை வெருட்டித் தள்ளினாள்.

அப்போது எதிர் வீட்டுக் கதவு திறந்தது. காண்போர் சொக்கும் எழிலுடனும் ஒயிலுடனும் கண்ணம்மா முதலில் வந்தாள். பின்னால் பதுச் செருப்புச் சப்திக்க, பிரேமாவும் ஓடி வந்தாள். கதவைப் பூட்டிச் சாவியைப் பர்ஸில் போட்டுக்கொண்டு அவள் ஆலமரத்தடியை நோக்கி வந்தாள்.

பிரேமா கூசிக் குன்றி நிற்கும் சின்னியைக் கண்டு மௌனச் சிரிப்புச் சிரித்தவளாய், தாயின் முன்றானையைப் பிடித்துக்கொண்டு நடந்தாள்.

தனக்குப் பத்தடி தூரத்தில் வந்து நின்ற கண்ணம்மாளைக் கண்டதும் முத்தம்மாளின் முகம் கடுகடுவென்று ஆயிற்று. காரணமில்லாமல் காறி உமிழ்ந்தாள்.

கீழே புழுதியில் படுத்திருந்த சொறி நாயை அப்போதுதான் கண்டவள்போல, “கண்ட நாயிங்களும் ஊரிலே வந்து ரோதனை குடுக்குதுங்க!” என்று குறிப்பாய்க் கூறி ஒரு கல்லை எடுத்து ஓங்கி வீசினாள்.

நாய் குறைத்துக்கொண்டு பத்தடி தள்ளிப் போயிற்று.

“இந்தப் பாழாய்ப்போன பஸ் எப்போ வந்து தொலைக்குதோ தெரியலியே?” என்று அவள் முணுமுணுக்கையிலேயே அந்தப் பாழாய்ப் போன பஸ் சாலையில் வரும் குரல் கொடுத்தது. புளி மூட்டை அடைத்துக் கொண்டாற்போலச் சினிமாவுக்குச் செல்லும் கும்பலை ஏற்றிக் கொண்டு வந்த அது, மஞ்சள் சேலை உடுத்து நின்றவருக்கு அருகேயே மயங்கினாற் போல் நின்றுவிட்டது. அவள் ஒரு கணத்தில் தொத்திவிட்டாள். கண்டக்டரின் உத்தரவுக்காக உள்ளே ஏறாமல் நின்றாள்.

முத்தம்மாள் பறிபோகும் ஆவேசத்துடன் ஓடி வந்தாள். கூடையால் அவளை இடித்தபடி, “என்ன வழியை மறிக்கிறே? இடத்தை உடு” என்றாள்.

“ஏம்மா கூடையைப் போட்டு இடிக்கிறே?” என்று முகத்தைச் சுளித்துக்கொண்ட கண்ணம்மா ஒரு கையில் பிரேமாவையும் பற்றி இழுத்துக்கொண்டு உள்ளே ஏறிவிட முயன்றாள். முத்தம்மா விடவில்லை. கூடையை முன்னுக்கு வைத்து மறித்தாள்.

கண்டக்டரின் கவனம் திரும்பியது. “என்னம்மா கூடையை வழியிலே நீட்டிக்கிட்டு?” என்று அவன் ஆத்திரத்துடன் காலால் தள்ளினான்.

மின்னல் போல் கண்ணம்மா பிரேமாவுடன் ஏறிவிட்டாள்.

“இறங்கு, இறங்கம்மா, எடு கூடையை! அவ்வளவுதான்!” என்று முத்தம்மாளை ஒதுக்கிவிட்டு அவன் ஊதலை ஊதிவிட்டான்.

மனிதச் சுமை சுமந்த இரக்கமில்லாத அந்தப் பெரு வண்டி அலட்சியமாக உறுமிவிட்டு அனல் புழுதியைக் கிளப்பிக்கொண்டு அகம்பாவத்துடன் மறைந்தது.

ஏமாற்றம், தோல்வி, நிராசை எல்லாவற்றினாலும் தாக்கப்பட்ட முத்தம்மாள் தன் நாவினால் அந்தக் கண்டக்டரையும் மஞ்சள் சேலையில் மயக்கிய கழுதையையும் பழி தீர்த்துக்கொள்ளத் தொடங்கிவிட்டாள். ஏடும் எழுதுகோலும் நாணிக் கூசும் சொற்களை எல்லாம் பிரயோகித்தவளாய் அவள் பத்திரகாளி போல் வீடு திரும்பினாள்.

அவளுக்கு அத்தனை கோபம் வந்து சின்னி கண்டதில்லை. பின்னாலேயே தாயைத் தொடர்ந்து ஓடினாள்.

வீட்டின் முன் முற்றத்திலே முருகையன் சகாக்களுடன் கோலாகலமாகப் புகை குடித்தவண்ணம் குண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தான். குமுறிக் கொப்புளித்துச் சீறிப் பெருகும் ஆத்திரத்துடன் வந்த முத்தம்மாளைக் கண்டதுமே உபாத்தியாயர் வரக் கண்ட வகுப்பறைபோல் அங்கே சத்தம் அடங்கியது. தாழ்வாரத் திண்ணையிலிருந்து உருளவிருக்கும் கைக்குழந்தையைத் தள்ளி விட்டுவிட்டு, அவள் கையைச் சொடுக்கிக் கொண்டு எவளோ பழிகாரிக்கு ஆயிரம் சாபங்கள் கொடுத்தாள்.

அவளுடைய அடிநெஞ்சிலிருந்து ஜ்வாலையாய் மண்டி வந்த தீ அந்தச் சொற்களின் மூலமாக அவியவில்லை. அவளை இன்னும் உந்தியது. பழி வாங்கத் துடித்தது.

சிலையாய் நின்றவள், “மொட்டையா!” என்று விளித்தாள்.

மொட்டையன் அந்தக் கோஷ்டியில் முதிர்ந்த அரும்பு. மொட்டைக் கைக் கரும்பனியனில் வாட்டசாட்டமான தேகம் வலிமையைக் காட்ட நிற்பவன். குச்சி குச்சியாய் நிற்கும் தலை மயிரும் கலங்கிச் சுழலும் விழிகளும் அரும்பும் இளம் மீசையும் அரும்பு பிரியுமுன் அனல் கக்கும் புழுதிச் சுழற்காற்றின் வெறியின் வயப்பட்டு மாசடைந்ததை எடுத்து உரைத்தன.

அவனை மட்டும் அழைத்துக்கொண்டு போய் முத்தம்மாள் ரகசியம் பேசினாள். சின்னி அவளை விட்டு அசையவே இல்லை.

“அந்தப் பாவி, பழிகாரி, என் வயிறு எரிவதைப் போல் வயிறெறிந்து ஓடணும்” என்ற இடைப்பல்லவிதான் கேட்டது.

வேட்டைக்குச் சந்தர்ப்பம் கிட்டினாற்போல மொட்டையன் ஒரு துள்ளுத் துள்ளினான். “நல்ல தேட்டை கொடுத்தீங்க அத்தை. இப்பவே ஓடிப்போயி…” என்று சந்தோஷ ஆரவாரம் செய்தான்.

“நேத்துத்தான் சம்பளப் பணம் வந்தது. அல்லாத்தையும் சுருட்டிக்கிட்டுப் போகமாட்டா. இல்லே, எதாச்சும் அகப்பட்டதையானும் சுருட்டிக்கிட்டு வந்திடு. பாவி!” என்று பல்லைக் கடித்துக் கையை நெரித்தாள் முத்தம்மாள்.

சின்னிக்கு விளங்கவும் இல்லை; ஒன்றும் விளங்காமலும் இல்லை. இருளும் ஒளியுமாய், கலங்கியதும் கலங்காததுமாய், மனசில் அலை மோதின.

மொட்டையன் நல்லவனுக்கு நல்லவன். திருடனுக்குத் திருடன். அயோக்கியனுக்கு அயோக்கியன். முத்தம்மாள் நல்லவள். அவளுக்கு நல்லவனாகிவிட்டான்.

ஒரு நோட்டுக் கற்றை, பத்து ஐந்து ரூபாய் நோட்டுக்கள், அவன் அங்கிருந்து கிளப்பி வந்துவிட்டான்.

பணத்தைத் தொட்டதும் முத்தம்மாளின் எரிந்த நெஞ்சு தணிந்தது. வெயிலில் காய்ந்து புனலில் முழுகியதைப் போல, உஷ்ணம் குளிர்ச்சிப் புன்னகையில் மடிந்து முகத்தில் மலர்ச்சியை உண்டு பண்ணியது. முழுசாக ஒரு ரூபாயை அவனுக்குக் கூலியாக உள்ளங்கையில் வைத்தாள்.

சின்னிக்கு விழிகள் நிலைத்தன?

“பிரேமா வூட்டிலேந்துதானே மொட்டையனைத் திருடச் சொன்னே? ஏம்மா?” என்று கோபத்துடன் தாயின் சேலையைப் பிடித்து அவள் இழுத்தாள்.

பிறர் காசை எடுப்பது தவறு என்பதை அவள் நன்கு அறிவாள் : மணியகாரர் வீட்டு வாசலில் அம்மை குத்தும் அம்மாளுடைய பர்ஸை எடுத்துவிட்டு முருகனே ஏட்டையாவிடம் சாட்டையடி பெற்றிருக்கிறான். அம்மாவே ஏன் அவனைத் திருடி எடுத்துவரச் சொன்னாள்?

“நான் அவுங்க வாரையிலே சொல்லிடறேம் பாரு. ஐயா ஒனக்கு அதாம் ஒதை குடுக்கிறாரு!” என்று நியாயம் பேசி விரலை ஆட்டிப் பயமுறுத்தினாள் அவள்.

“அந்தக் கொள்ளையிலே போறவ, உங்க அப்பனையே மடக்கி வாயிலே போட்டுக்கிட்டாளே? ஏண்டி வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிறே? இந்தச் சம்பளத்தைப் பிடுங்கிக்கிட்டு, புள்ளையும் குட்டியுமா குலை எரிய வைக்கிறாளே? நன்றி கெட்ட கழுதை, எதினாலும் போய்ச் சொன்னியோ, உயிரை எடுத்துப் போடுவேன்!” என்று மகளை அதட்டினாள்.

சின்னிக்கு இன்னும் தெளிவாக விளங்கவில்லை. அப்பனை மடக்கி எப்படி வாயிலே போட்டுக்கொள்ள முடியும்? அவன் என்ன தோசையா, பிட்டா? ஆனால் அவனுடைய சம்பளப் பணத்தை அவள் ஏன் பறித்துக் கொள்கிறாள்? சின்னியின் உரிமை உணர்வில் குபீர் என்று தீப்பற்றிக் கொண்டது.

கவிந்து வந்துகொண்டிருக்கும் இருளில் அவள் ஆலமரத்தடியை நோக்கி ஓடி வந்தாள். அங்கே பஸ் நின்றிருந்தது. பிரேமாவின் வீட்டின் முன்-அதோ, தெரு விளக்கு அடிக்கும் வெளிச்சத்தில்..

பட்டுச் சட்டையும் சரிகை மேல்வேட்டியும் அணிந்து அவளுடைய ஐயாதாம் அவர்! சந்தேகமே இல்லை.

இரைக்க இரைக்க ஓடி வந்தாள் சின்னி.

பிரேமாவின் கையைப் பற்றிக்கொண்டு செல்லமுத்து நின்றிருந்தான். கண்ணம்மா பூட்டைத் திறந்து கொண்டிருந்தாள்.

கொதித்தெழுந்த உணர்வுடன் சின்னி பின்னாலிருந்து அப்பனின் கையைப் பற்றி இழுத்தாள்.

அவள் திடுக்கிட்டுத் திரும்புவதற்குள் கண்ணம்மா கதவைத் திறந்துவிட்டு, “ஐயோ!” என்று கூவினாள்.

“பாருங்க, ஓட்டைப் பிரிச்சு எந்தப் பயலோ உள்ளாற வந்து பெட்டி சட்டியை எல்லாம் உடைச்சு..” அழுகுரலில் ஒலமிட்டுக் கொண்டு தன் தகரப் பெட்டியில் இருந்த உடைமைகளை எல்லாம் அவள் அவசரமாக எடுத்து இறைத்தாள். “பணத்தைப் பார்த்து எடுத்திருக்கிறாங்க. நேத்து நீங்க தந்த பணத்திலே தான் மிச்சம் வச்சிருந்தேன். எஞ்சம்பளப் பணங்கூடப் பத்து ரூபாய் உண்டு. சட்டிபானை எல்லாம் உடைச்சுப் போட்டு, பட்டப் பகலிலே தெரிஞ்சு வேணுமின்னு செய்தாப்போலச் செய்துட்டாங்களே!”

சொல்லிச் சொல்லி அவள் பிரலாபித்தாள்.

“இந்தப் பக்கம் நெடுகிலும் களவாணிப் பயலுகதான், கண்ணம்மா. நான் போலீஸிலே தகவல் கொடுத்துப் போடறேன் இப்பவே. இன்னம் சாமான் சட்டி எதுனாலும் போயிருக்குதா பார்” என்றான் செல்லமுத்து.

“எனக்கு இந்த ஊரே புடிக்கலிங்க. தலைக்குத் தலை கண்டபடி வாயிலே வந்தாப்போலப் பேசுறாங்க, நாயின்னும் பேயின்னும். எங்கன்னாலும் போயிடலாம் போலிருக்கு!”

கண்ணீர்த் துளிகள் அவளுடைய எலுமிச்சம் பழக் கன்னங்களில் உருண்டு விழுந்தன.

சின்னியின் பொறுமை இதற்கு மேல் நீடித்திருக்கவில்லை.

“நீ என் எங்க ஐயனின் சம்பளப் பணமெல்லாம் புடுங்கிக்கிட்டே? நல்லா வேணும். எங்கம்மாதான் மொட்டையனை வுட்டு ஆட்டிலே பூந்து திருடச் சொன்னாங்க!”

சிறுமியின் விழிகள் பளீரென்று ஒளிர்ந்தன. பருத்திப் பஞ்சு போல் கள்ளங்கவடற்று வெடித்த உண்மையைக் கேட்டதும் கண்ணம்மா பளீரென்று அறை வாங்கினவள் போல் திடுக்கிட்டாள்.

“உங்க ஐயாவா? இவுரா?”

“ஆமாம், எங்க ஐயாதான்!” – உரிமையுடன் செல்லமுத்துவின் கையைப் பற்றினாள் சின்னி.

உறுத்துப் பார்த்த செல்லமுத்துவுக்குத் திடீரென்று முளைத்த அந்தக் குட்டிச்சாத்தானை அப்படியே வெளியே பிடித்துத் தள்ள வேண்டும் போல ஆத்திரம் துடித்தது.

“ந்தா! இங்கே எங்கே வந்தே?” என்று அந்தப் பிஞ்சுக் கரத்தை உலுக்கி அவன் அதட்டினான்.

“உடுங்க!” என்ற கண்ணம்மா விழிகளை உருட்டி அவனைச் சுழற்றிச் சுழற்றி அடித்தாள்.

“பொய்யா சொன்னீங்க, பெண்சாதி புள்ளை இல்லாத தனியாளுன்னு? பச்சைத் துரோகம் பண்ணிப்போட்டா? பாவி! நம்பினேனே?”

இந்தத் தாக்குதலில் அரண்டு போன செல்லமுத்து குற்றவாளியாய்ப் பதுங்கினான்.

‘பெண் அபலையாய் இருக்கும்வரை அநுபவி. புலிபோல் சீறினால் பின்வாங்கு’ என்ற அநுபவக் கீற்றின் அடிச்சுவட்டில் அடுத்த கணம் அவன் மௌனமாக வெளியேறினான்.

கண்ணம்மா அரற்றி அரற்றி அழுதாள்; விம்மினாள். அவளுக்கு. உரிமையில்லாத பொருள் அவளுக்குத் தக்கவில்லை. ஓட்டைக் குடிலுக்குள் உடைந்த பானை தான் அவளைக் கண்டு அநுதாபப்படுவதுபோல் காட்சி அளித்தது.

தெருவிலே சின்னி வெற்றிப் பெருமிதத்துடன் தந்தையின் கையைப் பிடித்துக்கொண்டு வீட்டுக்கு நடந்து கொண்டிருந்தாள்.

பின்னுரை.

கதையை முன்பகுதியைப் படிக்கும்போது கதை இரண்டு சிறுமிகளைப் பற்றியது என்று தோன்றும். ஆனால் தலைப்பிற்கேற்ற கதை கடைசி 2 பக்கங்களில் தான் சொல்லப் படுகிறது. கதையின் சுவாரசியம் கூட்ட வேண்டி இரண்டு சிறுமிகளை அறிமுகப்படுத்தி அவர்களின் மூலமாக கதையை நகர்த்துகிறார் ஆசிரியர். இதுவும் ஒரு டெக்னிக்.

கதையின் கடைசி முடிவு பாலச்சந்தரின் அபூர்வ ராகங்கள் முடிவு போல் ஒரு ரஜனிகாந்த் வந்து நான் தான் அவன் (கண்ணம்மாவின் புருஷன்) என முடியும் என்று எதிர்பார்த்தேன். ஏமாந்தேன்.

– ஜூலை , 1955 – கலைமகள் கதம்பம் (1932-1957), வெள்ளி விழா வெளியீடு, முதற் பதிப்பு: ஏப்ரல் 1957, கலைமகள் காரியாலயம், சென்னை

ஆசிரியர் பற்றிய குறிப்பு.


ராஜம் கிருஷ்ணன் (1925 - 2014). பெண்ணியம், இடது சாரி கொள்கை ஆகியவற்றில் பற்றுள்ளவர்.  வெவ்வேறு இடங்களுக்குச் சென்று அம்மக்களுடன் பழகி mஆராய்ந்து  தன் நாவல்களை எழுதுவது அவருடைய வழக்கம். கோவா விடுதலைப்போர் (வளைக்கரம்), ஊட்டி படுகர்களின் வாழ்க்கை (குறிஞ்சித்தேன்), தூத்துக்குடி உப்பளம் (கரிப்பு மணிகள்), பீஹார் கொள்ளைக்கூட்டம் (முள்ளும் மலரும்) என மாறுபட்ட வாழ்க்கைச் சூழல்களை எழுதியவர்.

1973ஆம் ஆண்டிற்கான சாஹித்திய அகாடமி விருது பெற்றவர்.

இவரது படைப்புகள் முதன்முறையாக நாட்டுடமை ஆக்கப்பட்டவை. 

==========>மேலதிக விவரங்களுக்கு

=========>கதையின் சுட்டி


 

 


16 கருத்துகள்:

  1. ஸ்ரீராம் தியாகராஜன் பற்றிய செய்தியின் விவரங்கள் அறிய ஸ்ரீராம் குழும நிறுவனர் எனபதை க்ளிக்கவும் என்று ஒரு குறிப்பு தந்திருக்கலாம்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Font Sze பெரிதாக்கப்பட்டுள்ளது..  நிறமும் மாறி அது லிங்க் என்று தெரியும் அளவில் உள்ளதால் அது புரிந்து கொள்ளக்கூடியதே JKC ஸார்..

      நீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. நல்ல செய்திகள். மூன்றுமே. இரு செய்திகளுக்கு ஜெ கே அண்ணாவுக்கு நன்றி.
    ஆடைவடிவமைப்பில் CAD ரொம்பப் பிரபலமாக இருந்தது பலரும் கற்றுக் கொண்டார்கள் நான் கோயம்புத்தூரில் இருந்த சமயம். இப்போது இன்னும் அது விரிவடைந்திருக்கும்.
    இந்த நுட்பம் பல துறைகளுக்கும் உதவியாக இருக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. ராஜம் கிருஷ்ணன் அவர்களின் கதைகள் பெரும்பாலும் விளிம்புநிலை மனிதர்கள் குறிப்பாகப் பெண்கள் சார்ந்த கதைகளாக இருக்கும். யதார்த்தமாகவும் இருக்கும் உலகில் நடப்பவையாகவும் மற்றும் அவர் ஒவ்வொரு ஊராகச் சென்று தங்கி அந்த ஊர் மக்களின் வாழ்க்கையைப் படித்து அறிந்து அனுபவங்களைக் கூர்ந்து நோக்கி எழுதுவார். அப்படி வடக்கில் கூட ஒரு கிராமத்தில் (காசி? அப்படி நினைவு) தங்கி, கணவர் அதற்கு உதவியாகவும் இருந்ததாக எங்கேயோ சொல்லிய நினைவு.

    ஆனால் கணவரின் மறைவுக்குப் பிறகு அவரது நாட்கள் கொஞ்சம் சிரமமானவையாக இருந்தது. வாசித்திருக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. இக்கதையும் அப்படியான ஒரு கதை. முடிவு யூகிக்க முடிந்தது. சின்னியின் அம்மா அந்தப் பேருந்து நிறுத்தத்தில் கத்தும் போதே....கூடவே பிரேமாவின் அம்மாவும், மாமா என்றும் அவன் வீட்டிற்கு வந்து பிரேமாவுக்கும் அவள் அம்மாவுக்கும் துணிகள் வாங்கிக் கொடுத்ததை பிரேமா சொல்லும் பகுதியிலும்...புரிந்து விடுகிறது.

    சிறுமிகளின் மனப்போக்கை மிக அழகாகச் சொல்லியிருக்கிறார். அண்ணா சொல்லியிருப்பது போல் சிறுமிகளின் வழியாகக் கதையைக் கொண்டுவந்து கடைசியில் முடிக்கிறார்.

    இப்படியான பெண்களின் வாழ்க்கை மிகவும் வேதனையான ஒன்று.

    எனக்குத் தோன்றியது ஒன்றே ஒன்று மட்டும்தான்....முத்தம்மா தன் கணவன் கண்ணம்மாவுடன் செல்கிறான் என்பது தெரிந்தும், அவள் வீட்டில் மறைமுகமாக ஆள் அனுப்பி களவாடச் சொல்வதையும் பார்க்கறப்ப அத்தனை தைரியம் இருந்தவள் ஏன் முன்பே சண்டை போடவில்லை என்பதுதான். சிறிய ஊர் தானே! பேருந்து நிறுத்தத்தில் அவளைக் கண்டதும் மறைமுகமாக வார்த்தைகளை உதிர்த்து நாயைக் கல்லால் துரத்தும் இடத்தில் கண்ணம்மாவுடன் நேரிலேயே சண்டைக்குப் போயிருக்கலாமோ!!

    கண்ணம்மாவும் கடைசியில் வருந்துகிறாளே...அதனால் தோன்றியது.

    ஆனால் ராஜம் கிருஷ்ணன் அவர்கள் பெரிய எழுத்தாளர். பிரபலமாக இருந்தவர். எனவே நான் இப்படிச் சொல்வது சரியாக இருக்குமா என்று தெரியவில்லை.

    இவரது வேறொரு நாவல் சுழலில் மிதக்கும் தீபங்கள் வாசித்திருக்கிறேன். அதில் அவர் சொல்லியிருக்கும் வரிகளை என் கதை ஒன்றில் பயன்படுத்தியிருப்பேன் கதாபாத்திரத்தின் வழியாக....எபியில் வந்த கதைதான்.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. தியாகராஜன் பாராட்டுக்குரிய இளைஞர்.

    பதிலளிநீக்கு
  7. தியாகராஜன் ஆடை வடிவமைப்பாளர் நிறைய பேருக்கு பயிற்சியும் கொடுத்து வேலைவாய்ப்பும் வாங்கி கொடுத்தற்கு வாழ்த்துகள், பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  8. கதை முன்பு படித்து இருக்கிறேன். ராஜம் கிருஷ்ணன் அவர்களின் கதைகள் நிறைய படித்து இருக்கிறேன். கதைபகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. ராஜம் கிருஷ்ணனின் எழுத்து என்றைக்குமே ஏனோதானோ எழுத்தல்ல. உழைப்பு கூடியது. அவர் தேர்ந்தெடுக்கும் களத்திற்கு நம்மையும் அழைத்துச் சென்று வாசிக்க வைக்கும் ஆற்றல் கொண்டவர்.

    பதிலளிநீக்கு
  10. பாசிட்டிவ் செய்திகள் எல்லாமே நன்று. தியாகராஜன் பலருக்கும் பயிற்சி கொடுத்து வேலை வாய்ப்பும் கொடுப்பது மிகச் சிறப்பான விஷயம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  11. நான் படிச்ச கதை - குழப்பங்கள் சிக்கல்கள் இல்லாத எளிய நடையில் இப்படியான மக்களின் உணர்வுகளைச் சொன்ன விதம் வித்தியாசம்.

    பகிர்வுக்கு மிக்க நன்றி ஜெயகுமார் சந்திரசேகரன் சார்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  12. பாசிட்டிவ் செய்திகள் நன்று. படித்த கதை - எனக்கும் பிடித்தது.

    பதிலளிநீக்கு
  13. வந்தவர்க்கும் வந்து பதிவைப் படித்தவர்களுக்கும் கருத்து கூறியவர்களுக்கும் மிக்க நன்றி.
    Jayakumar

    பதிலளிநீக்கு
  14. தியாகராஜனின் அயராத முயற்சியின் வெற்றிக்கு வாழ்த்துகள். அவரின் உதவியால் நிறையப் பேர்கள் வேலை வாய்ப்புகள் பெற்று முன்னேற்றம் அடைந்திருப்பது அறிந்து ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தோம்.

    ராஜம் கிருஷ்ணனின் கதைகள்படித்திருக்கிறேன். நன்றாகவே இருக்கும். இக் கதை இப்பொழுதுதான் படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!