புதன், 17 ஜூலை, 2024

மற்றவர்கள் பதில் சொல்லமுடியாத, kgg மட்டுமே பதில் சொல்லக்கூடிய கேள்விகள் உண்டா?

 

கே. சக்ரபாணி  : சென்னை 28: 

நான் ஒரு  காபி  பிரியர். வீட்டில்  குறைந்தது  ஒரு நாளைக்கு  நான்கு தடவை குடிப்பேன். கிச்சனுக்குபோயி  திருட்டு காபி ஒரு தடவை  குடிப்பேன்.  எங்கேனும்  வெளியே சென்றால்  காபி குடிக்காமல்  வரமாட்டேன் . தாங்கள்  எப்படி? 

# நான் காஃபியே குடிப்பதில்லை.  தினசரி‌ 2 டீ மட்டுமே.

& முன்பு காபி குடிக்காமல் இருந்து வந்தேன். காபி குடிப்பதை நிறுத்துவதில் எனக்கு அனுபவம் அதிகம். இதுவரை வாழ்க்கையில் காபி குடிப்பதை ஐந்து முறை நிறுத்தியிருக்கிறேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். 

நிறுத்தி வைத்த காபி பழக்கம் திரும்ப எப்படி ஏற்படுகிறது என்றால், தங்கள் பொருட்களை விளம்பரம் செய்ய continental coffee என்று ஒரு பிராண்ட் அடிக்கடி இலவச பாக்கெட் கொடுத்துவிடுகிறார்கள். அதை வீண் செய்ய மனம் இல்லாமல் காபி பழக்கம் திரும்ப ஆரம்பிக்க வேண்டியதாகிறது. 

இன்னும் சில சமயங்களில் வீட்டில் வேலை செய்பவர்கள் கேட்பதால், காபி பொடி அல்லது காபி டிகாக்ஷன் ( V S Mani - என்று ஒரு பிராண்ட் - நல்லா இருக்கு!) வாங்கி, குறிப்பிட்ட நாளுக்குள் சாப்பிட்டு முடிக்க ( expiry date கடக்காமல் இருக்க ) நானும் சாப்பிட வேண்டியதாகிறது. 

ஆ - சொல்ல வந்ததை விட்டுவிட்டேனே - 

இப்போதைக்கு நான், "ஒரு காபி" பிரியர். அதாவது - காலை சிற்றுண்டிக்குப் பின் ஒரே ஒரு காபி. அதுவும் அதிக பட்சம் 40 மி லி மட்டுமே. அதற்குப் பின் காபி குடிப்பதில்லை. 

2) குழந்தையை  கொஞ்ச கன்னத்தை கிள்ளுகிறோம்.  அன்பை காண்பிக்க கன்னத்தில்  முத்தமிடுகிறோம் . ஆனால்  கோபம். வந்தால்  அதே  கன்னத்தில்தான்  அறைகிறோம். ஏன் அப்படி?  

#  கன்னத்தில் ஸ்பரிசம் பின்னமாகாமல் மூளைக்கு அனுப்பப்படுவது காரணமாக இருக்கலாம்.

& இப்படிக் குழப்பம் வராமல் இருப்பதற்காக நாம் வேண்டுமானால் நடைமுறையை கொஞ்சம் மாற்றிக் கொள்வோம் - கொஞ்சுவதற்கு காதை லேசாகத் திருகலாம்; அன்பைக் காட்ட மூக்கை நிமிண்டலாம்; கோபம் வந்தால், முதுகில் ஒரு சாத்து சாத்தலாம் - ஆனால் எல்லாவற்றிற்கும் குழந்தை அப்படியே எதிர்வினை ஆற்றினால் என்ன ஆகும்! 

தாய்க்குப்பின்  தாரம்  என்பதுபோல் தந்தைக்குப்பின் யார் என்று   கூறவில்லையே

# அந்தக் காலத்தில்  " தம்பியுடையான் படைக்கு அஞ்சான் " என்று சொல்வார்கள். எனவே உடன்பிறந்தோர்கள் தந்தைக்குப் பின் நமக்கு உதவி செய்வார்கள் ஆதரவு தருவார்கள் என்று பார்க்கலாம்.  உடன் பிறந்தோரை விட்டால் நெருக்கமான நண்பர்கள் உதவி செய்வார்கள் என்பது நமது எதிர்பார்ப்பு. 

& " தாய்க்குப்பின் தாரம் " என்பது கல்யாணம் செய்துகொண்ட ஆணுக்கு சொல்லப்பட்டது. தாயைப் போல தாரம் உடனிருந்து கவனித்துக்கொள்வார் - என்பதற்கு. நாம் வேண்டுமானால் தந்தைக்குப் பின் மாமனார் என்று வைத்துக்கொள்வோம் !

பெண்கள்  ஆண்களைவிட அதிகமாக பேசுகிறார்களே  அது. ஏன்? 

# ஆண்களை விட, பெண்களை விட என்பதைக் காட்டிலும்,  அதிகம் பேசுவோர் -  அதிகம் பேசாதோர் என்று மக்களை  வகைப்படுத்துவதே நியாயமாக இருக்கும்.

& ஒருவர், தன் மனைவியிடம் ஒரு பத்திரிக்கைத் துணுக்கை படித்துக் காட்டினார். அது, ' கணவன் சராசரியாக மனையிடம் ஒரு நாளில் 2500  வார்த்தைகளும், மனைவி ஒரு நாளில் சராசரியாக கணவனிடம் 5000 வார்த்தைகளும் பேசுகிறார்கள்' என்பது. 

அத்தோடு விட்டிருக்கக் கூடாதா அவர் ? 

மனைவியிடம் : " இது பற்றி நீ என்ன சொல்ல விரும்புகிறாய் ?" (6 வார்த்தைகள்) 

மனைவி " ஏன் என்றால், ஆண்கள் எதையும் ஒருமுறை சொன்னால்  புரிந்துகொள்ள மாட்டார்கள் - எல்லாவற்றையும் இரண்டுமுறை சொன்னால்தான் புரிந்துகொள்வார்கள் " (12 வார்த்தைகள்!) 

ஜெயகுமார் சந்திரசேகரன்: 

google க்கும் meta ai க்கும் என்ன வித்தியாசம்? இரண்டும் கேள்விகளுக்கு பதில், சந்தேகங்களுக்கு விடை தருபவைதானே? 

# கூகுள் இருப்பதை தேடி எடுக்கிறது. மற்றையது உண்டாக்குகிறது.

& கூகிள் - நண்பன் போல - எதை வேண்டுமானாலும் கேட்கலாம். விடை கிடைக்கும். 



Meta AI - பள்ளி ஆசிரியர் போல. - அனுஷ்கா, தமன்னா பற்றி எல்லாம் கேள்வி கேட்டால் பதில் சொல்லாது. பெஞ்சு மேல ஏறு என்று சொல்லாமல் சொல்லும். 

மற்றவர்கள் பதில் சொல்லமுடியாத, kgg மட்டுமே பதில் சொல்லக்கூடிய கேள்விகள் உண்டா? உண்டு எனில் யாது?

# இந்தக் கேள்விதான்.

& உண்டு, அது "kggயின் ஆதார் நம்பர் என்ன ?" 

= = = = = = = = =

KGG பக்கம் : 

புரசவாக்கம் - மதார்ஷா பக்கத்தில் இருந்த சலூன் - முதல் விஜயம் பற்றி .. 

சென்னையில் இந்த மாதிரி பயந்த முகத்துடன்(!) உள்ள சிறுவனை(!) அந்த சலூன் கடைக்காரர் அதுவரை பார்த்திருக்கமாட்டார். 

போலியான பணிவுடன் ஒரு காலி இருக்கையில் ஏறி அமரச் சொன்னார். 

ஒரு பச்சைத் துணி கொண்டு எனக்குப் பொன்னாடை போர்த்தினார். 

எஸ் பி சம்முவம் கடையில் இருந்ததுபோல சுற்றிலும் அரசியல் தலைவர்கள் படமோ அல்லது (ஆபாச) பிரெஞ்ச் அழகி படமோ இல்லை. 

அதற்கு பதில், புரியாத / தெரியாத பிக்காசோ ஓவியங்கள் போல சில கண்ணாடி ஓவியங்கள். 

முடி திருத்துபவர் என்னிடம், " சிக்கடிங்கா ?" என்று கேட்டதுபோல இருந்தது. ஒன்றும் சொல்லாமல் லேசாகப் புன்னகை செய்து வைத்தேன். 

அவர் மீண்டும், " சிக்கடிங்கா ?"

' ஆ கடவுளே ! இது என்ன சோதனை! இவர் என்ன பாஷை பேசுகிறார்? ' என்னிடம் ஏதோ பதில் எதிரபார்க்கிறார் போலிருக்கே! 

சற்றுக் குழப்பத்துடன் அவரைப் பார்த்தேன். 

அவர் அதற்குள் என்னை 'ஊமை அல்லது தமிழ் தெரியாதவர்' என்று நினைத்துவிட்டார் போலிருக்கு. 

அதனால் அவர் தன்னுடைய உபகரணங்கள் வைக்கும் மேஜை டிராயரைத் திறந்து, ஒரு கத்தரிக்கோல் மற்றும் முடி வெட்டும் மெஷின் இரண்டையும் வெளியில் எடுத்துக்  காட்டி, " இந்த இரண்டு சின்னங்களில் எதற்கு உன் ஓட்டு ?" என்று சைகையில் கேட்டார். 

அப்போதுதான் எனக்குள்  " சிக்கடிங்கா ?" என்றால் 'சிசர் கட்டிங்கா' என்று பல்பு  எரிந்தது! நான்தான் சொன்னேனே - சென்னைவாசிகள் வேகமாக தமிழ் பேசுவார்கள் என்று. அதில் ஒன்றுதான் இந்த " சி(சர்)க்க(ட்)டிங்கா !"

சந்தோஷமாக கத்தரிக்கோலுக்கு ஓட்டுப் போட்டேன். அவர் கத்தரியும் சீப்புமாக வேலையைத் தொடங்கினார். 

அப்பொழுது என்னுடைய மனதில் ஒரு ஃபிளாஷ் பேக் .. 

******* 

டார்டாய்ஸ் சுழல்கிறது .. .. 

நாகையில் மூன்றாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த சமயம் .. 

முடி திருத்துபவர் ஒருவர் ஞாயிற்றுக் கிழமைகளில் தன் பெட்டியோடு வீதியில் வருவார். எங்கள் மூன்று குடித்தன வீட்டுக்கு அவர் வரும்போது நிச்சயமாக சிறியவர், பெரியவர்கள்  என்று குறைந்தபட்சம் ஐந்து பேருக்காவது முடி திருத்துவார். 

நடுக்குடித்தனக்காரர் (ஓய்வு பெற்ற) ஆசிரியர் பாலசுப்ரமணியன் - அவருடைய கடைசி பையன் - (நான்காம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த) நாராயணனைக் கூப்பிட்டு, முடி திருத்துபவரிடம் ஒரு கேள்வி கேட்கச் சொல்லுவார். 

" மெஷின் இருக்கா ? "

'இருக்கு' என்று பதில் சொன்னால்தான் - அவரிடம் கட்டிங் செய்துகொள்வார்கள்! 

(யோசனைகளில் இப்படி நான் ஆழ்ந்திருக்கும்போது என்னுடைய தலையை - சற்று லேசாகப்பிடித்து வேண்டிய திசையில் / கோணத்தில் திருப்பினார் சென்னை  முடிதிருத்துபவர்.) 

டார்டாய்ஸ் நின்று, பிறகு சுழல்கிறது! 

வாசலில் வருகின்ற முடிதிருத்துபவரிடம் மாட்டிக்கொண்ட சில சமயங்களில், அதுமாதிரி யோசனையில் நான் ஆழ்ந்தால் - அந்த பெரிய சிவந்த கண்கள், வெற்றிலைப்பாக்கு வாய் கொண்ட - நாட்டுச் சரக்கு குடித்த முடிதிருத்துபவர் - என் தலையை அமுக்கிப் பிடித்து என் முகத்துக்கு அருகே அவர் முகத்தை வைத்து, நாக்கைத் துருத்தி, சிவந்த கண்களை என்னை நோக்கி முழித்துப் பார்த்து 'தலையை ஆட்டக்கூடாது ' என்பார். 

பயத்தில் அடங்கி ஒடுங்கி உட்கார்ந்திருப்பேன். 

கடைசி நடவடிக்கையாக அவருடைய மொன்னக் கத்தியைத் தீட்டிக்  கொண்டு என்னுடைய பின் கழுத்தில் 'சர்ர் ரக்' என்று ஒரு இழு இழுப்பார் பாருங்கள் - என்னுடைய உடம்பில் உள்ள ரோமங்கள் எல்லாமே 'வந்ததுடா ஆபத்து' என்று சிலிர்த்து நிற்கும்! 

அதோடு விடுவாரா - உடனே என் காதருகில்  வந்து, " கூசுதா? " என்று கேட்பார் - சற்றும் எதிர்பார்க்காத இந்த கேள்வியாலும், அவருடைய வாயிலிருந்து வந்த வெற்றிலைப் பாக்கு மற்றும் நாட்டுச் சரக்கு வாடையாலும் என் தலை சுற்றும்! 

ஃபிளாஷ் பேக் ஓவர். டார்டாய்ஸ் சுருள் நின்றுவிட்டது. 

******* 

சென்னை முடிதிருத்துபவர் கத்தரிக்கோல் & கத்திக்கு ஓய்வு கொடுத்து, மெஷினைக் கையில் எடுத்தார். 

அப்போதுதான் எனக்கு முக்கியமான விஷயம் ஒன்று ஞாபகத்திற்கு வந்தது! 

அது என்ன? 

(தொடரும்) 

= = = = = = = = =

54 கருத்துகள்:

  1. கேஜிஜியின் அனுபவத் தொடர் ரசனையுடன் செல்கிறது.

    ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு நாலாம் வகுப்பில் படிக்கும் பையன் என்பதுதான் பகீர் என்கிறது

    பதிலளிநீக்கு
  2. நாங்கள் காபி டீ குடிப்பதில்லை. அதனால் வீட்டிற்கு வருபவர்களுக்குத்தான் சங்கடம்.

    பதிலளிநீக்கு
  3. தாய்க்குப் பின்...... தந்தையொடு கல்விபோம் தாயொடு அறுசுவை போம் என்பது நினைவுக்கு வருகிறது. ஒரு நேரத்தில் அம்மாவின் இழப்பை கொஞ்சம் மனைவி மூலமும், அப்பாவின் இழப்பை நண்பனின் மூலமும் சரி செய்துகொள்ளலாமோ என்று நினைத்தால் அவர்கள் வேறு, மற்றவர்கள் வேறு என்றுதான் தோன்றுகிறது.

    எனக்கு ஆலோசனைகளுக்கு தந்தைக்குப் பின் மாமனார் இருந்தார்.

    என்ன வயதாக இருந்தாலும் அவர்கள் நமக்குத் தேவைப்படுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  4. குழந்தையைக் கன்னத்தில் அறைவது.... என்ன ரசனை கேள்வி கேட்டவருக்கு...

    முதுகுல அடி போட்டிருக்கேன். நல்லா திட்டியிருக்கேன். பள்ளி பஸ்ஸை மிஸ் பண்ணினதுக்கு ஒரு தடவை உதைத்தேன் என மகள் சமீபத்தில் சொன்னாள். (இப்போதும் ஒரு இடத்திற்கு சீக்கிரமாகப் புறப்படவில்லைனா எனக்குக் கோபம் வரும், டென்ஷனாயிடுவேன், அதிலும் இரயில் நிலையத்துக்கு அரை மணி முன்னால் போயிடணும் என்பது என் கட்சி. வேர்க்க விறுவிறுக்க ஓடி இரயிலைப் பிடிப்பது என்பதெல்லாம் என்னால் நினைத்தே பார்க்க முடியாது)

    நான் எப்படி இருந்தேன் என நினைவில்லை. ஆனால் பெண் பார்க்க (அதற்கு முன்னால் அவள்தான் மனைவி என்பது நிச்சயமாகிவிட்டது) இருபது நிமிடங்கள் தாமதமாக்க் கிளம்பியதற்கு அப்பா என்னைக் கடிந்துகொண்டது நினைவுக்கு வருது. கொஞ்சம் தாமதமானா பெண் வீட்டார் மனம் என்ன பாடுபடும், அதிலும் அவர் நண்பரான என் வருங்கால மாமனார் என்ன நினைப்பார் எனக் கடிந்துகொண்டார். (அப்பா... உங்களை ரொம்ப மிஸ் செய்கிறேன், மாமனாரையும். எங்கிருந்தோ வந்தாள் படத்தில் வரும் ஒரு பாடலை தனிமையில் பாடி இப்போவும் கண்ணீர் உகுக்கும் நிலைக்குச் சென்றுவிடுவேன்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் பாரா அப்படியே டிட்டோ செய்கிறேன். ஆனால் மகளை எந்தக் காரணத்தினாலும் அடித்தது இல்லை.

      நீக்கு
    2. நெல்லை அவர்களது கருத்து மனதை உருக்குகின்றது..

      நீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. 'கேள்வி பிறந்தது அன்று, நல்ல பதிலும் கிடைத்தது இன்று.'
    நன்றி. சிறிது விரிவான பதிலை எதிர்பார்த்தேன். உதாரணமாக கூகிள் இந்த இடத்தில் இது போன்று உள்ளது வேண்டுமென்றால் சென்று வாசித்துக்கொள் என்று பல சுட்டிகளைத் தந்துவிடும். மீட்டா ஆசிரியர் போல. இந்தக் கேள்விக்கு இதுதான் எனது பதில். என்று கூறிவிடும். நான்
    இது வரை மீட்டா உபயோகித்ததில்லை.
    கூகிள் ஒரிஜினல். மீட்டா சீனா
    Jayakumar

    பதிலளிநீக்கு
  7. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  8. தண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
    தளிர் விளைவாகித்
    தமிழ் நிலம்
    வாழ்க..

    பதிலளிநீக்கு
  9. திரு. கே. ஜி. ஜி.. அவர்களின்
    தரமான பதில்களுக்கு நன்றி

    கே. சக்ரபாணி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேள்விகளுக்கு இரண்டு ஆசிரியர்கள் # , & பதில் அளித்துள்ளனர்.

      நீக்கு
  10. கௌதம் ஜி அவர்களது கை வண்ணம் அருமை..

    குவைத்தில் இருந்தபோது ஆறு காஃபி வரை அருந்திய நான் இப்போது அடியோடு விட்டு விட்டேன்..

    காலக் கொடுமையடா கந்தசாமி!..

    பதிலளிநீக்கு
  11. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  12. கேள்விகளும் , பதில்களும் அருமை.
    கெளதம் சார் நினைவுகள் பகிர்வு அருமை.

    " சிக்கடிங்கா ?" தெரிந்து கொண்டேன், சிரிப்பு வந்தது.
    கோவையில் எங்கள் மாமனாருக்கு வீட்டு வந்து முடிவெட்டுபவர் தான் பிடிக்கும் முடிதிருத்தும் கடைக்கு போகவே மாட்டார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில ஊர்களில், சில மனிதர்கள் அப்படித்தான் ஒரு கொள்கை வைத்திருப்பார்கள்.

      நீக்கு
  13. //தந்தைக்குப் பின் மாமனார் என்று வைத்துக்கொள்வோம்//

    இந்தப் பதிலை நகைச்சுவையாக நினைக்க முடியவில்லை.

    பல குடும்பங்களில் இன்றைய நிலையில் திருமணத்திற்கு பிறகு குடும்பத்திலிருந்து மகனை கழட்டி விட்டு மாமனார்தான் பார்த்துக் கொள்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லர்ஜி.... நீங்கள் சொல்வது விதிவிலக்குகள்தாம். என்னைப் பொறுத்தவரையில், நம்முடைய பாரம்பர்யம் (தமிழக), பெண்ணைக் கொடுத்ததுடன் அவள் மீதான உரிமை (நல்ல அர்த்தத்தில்) விட்டுப்போய்விடும். அவள் இன்னொரு குடும்பத்தின் உறுப்பினர். அவளது ஆர்வம், ஆசை, எதிர்பார்ப்பு எல்லாமே அவளுடைய புதிய குடும்பத்தின்மீதுதான் இருக்கும், இருக்கணும்.

      ஆனால் சில பல குடும்பங்களில், சம்பாதிக்கும் மகளிடமிருந்து பணத்தை எதிர்பார்ப்பது, பையன் இல்லாததால், அவளே தங்களைத் தாங்கும் பாரமாக கடைசிவரை இருக்கவேண்டும் என்ற சுயநலத்தில் பெண்ணை மாத்திரம் இழுக்க முடியாததால் மாப்பிள்ளையோடு இழுத்துவிடுவது என்றெல்லாம் நடக்கிறது. இது தவறு மாத்திரமல்ல துரதிருஷ்டவசமானது என்றே நான் நினைக்கிறேன்.

      பொதுவா மாமனாருக்கு இந்த மாதிரி எண்ணங்களெல்லாம் இருக்காது. இந்த மாதிரி எண்ணங்களே பெண்களால்தான் வரும் என்று சொன்னால், பெண்ணுரிமைவாதிகள் சண்டைக்கு வருவார்கள்.

      நீக்கு
    2. கருணாநிதி, அவருக்கும் மாறன் பிரதர்ஸுக்கும் ஏற்பட்ட பிரச்சனைகளின்போது, தன் மகள் செல்வியிடம், என் மகளாக இந்த வீட்டுக்கு எப்போதுமே நீ வரலாம், ஆனால் உன் புகுந்த வீடான மாறன் பிரதர்ஸுக்கு பரிந்துகொண்டு இங்கு வருவதானால் வரவே வேண்டாம் என்று சொல்லியதை பத்திரிகைகளில் எழுதியிருந்தார்களே... அவற்றைப் படிக்கவில்லையா கில்லர்ஜி?

      நீக்கு
    3. சுவாரஸ்யமான தகவல்கள். நன்றி.

      நீக்கு
    4. பொதுவா மாமனாருக்கு இந்த மாதிரி எண்ணங்களெல்லாம் இருக்காது. இந்த மாதிரி எண்ணங்களே பெண்களால்தான் வரும் என்று சொன்னால், பெண்ணுரிமைவாதிகள் சண்டைக்கு வருவார்கள்.//

      ஹாஹாஹா நெல்லை, நான் இன்னிக்கு உங்களை வம்புக்கு இழுத்து சண்டை போடும் மூடில் இல்லை!!!!!

      கீதா

      நீக்கு
  14. நானும் தற்போது வீட்டில் தான் சிக்கட்டிங் செய்துகொள்கிறேன். பீஸ் 200 ரூ
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீட்டில் செய்துகொண்டால், யாருக்கு ஃபீஸ்?

      நீக்கு
    2. பார்பர் தான். கடையில் 130 ரூ. வீட்டுக்கு வந்தால் 200 ரூ.

      நீக்கு
    3. அட! அப்படி ஒரு (வீடு தேடி வரும்) வசதி, இந்தக் காலத்திலும் இருக்கிறதா! ஆச்சரியமா இருக்கு!
      நான் கடந்த ஆறு வருடங்களாக வீட்டில் hair trimmer கொண்டு முடி வெட்டிக்கொள்கிறேன்!

      நீக்கு
  15. கேள்வி பதில்கள் அருமை.

    நினைவுப்பகிர்வு ரசனை. பேரனை சலூன் அழைத்துப் போவதுண்டு. இப்பொழுது ஆறுவயது SPA போட்டுகளைக் கண்டுவிட்டு ஒரு தடவை போய் பார்க்கவேண்டும் என்கிறார்.:)) என்னத்தை சொல்வது.

    அனுஷ்கா சிரிக்கவில்லை உம் என்று இருக்கிறாரே என நினைத்தேன் அதுதானே சிரிப்பில்லாத அனுஷ்கா படம் எ.பி இல் வருமா?. :)

    பதிலளிநீக்கு
  16. பெண்கள் ஆண்களைவிட அதிகமாக பேசுகிறார்களே அது. ஏன்? //

    அதெல்லாம் ஒரு காலம். அப்போது பெண்களை ரொம்பவும் கட்டுப்படுத்தி வளர்க்கும் சூழலில் இருந்ததால் பெண்கள் தங்களுக்குக் கிடைக்கும் அவகாசத்தில் நிறைய பேசுவது என்பது உளவியல் ரீதியாகவும் சொல்லலாம்.

    ஆனால் எல்லா பெண்களும் அப்படி இல்லை. என்பதோடு இப்பலாம் பாருங்க கொஞ்சம் இணையத்தில் யுட்யூபில் ஆண்கள்தான் நிறைய பேசறாங்க!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இணையத்தில் யுட்யூபில் ஆண்கள்தான் நிறைய பேசறாங்க// - அவங்க பேசறாங்கன்னா அதுக்கு 'வரவு' காரணமாக இருக்கும். ஆனால் ஒண்ணுமில்லாததுக்கே பெண்கள் பேசிக்கொண்டே இருக்காங்களே... அது ஏன்? தவறான அழைப்பு (Wrong call. இது என்னடா எனக்கு வந்த சோதனை..ஆங்கிலத்தில் எழுதினால் நல்லா இருக்கறது தமிழ்ல எழுதினா தவறாகவும் புரிந்துகொள்ளும்படி இருக்கு?) வந்தாலே அவங்களோடும் அரை மணி பேசுகிறார்களே அது ஏன்? என்பதுதான் கேள்வி..ஹா ஹா

      நீக்கு
  17. google க்கும் meta ai க்கும் என்ன வித்தியாசம்? இரண்டும் கேள்விகளுக்கு பதில், சந்தேகங்களுக்கு விடை தருபவைதானே? //

    நான் அறிந்த வரையில் கூகுளிடம் கேட்டால் அது கல்லூரி விரிவுரையாளர் அல்லது ஆராய்ச்சி கைட் போல இதோ இதைப் பார் அதைப்பார் என்று கை காட்டும் வழிகாட்டி. ஒவ்வொன்றாய்த் தேடி எடுத்து நமக்குத் தேவையானதை நாம் தொகுத்துக் கொள்ள வேண்டும். இது நல்ல விஷயம்.

    மெட்டா ஏஐ இணையத்தில் இருக்கும் தரவுகளிலிருந்து தொகுத்து எடுத்துக் கொடுக்கிறது. அதாவது பள்ளி ஆசிரியர் மாணவர்களுக்கு நோட்ஸ் கொடுப்பது போல கிட்டத்தட்ட ஸ்பூன் ஃபீடிங்க். இதை வைத்துக் கொண்டு மாணவ மணிகள் தங்கள் அசைன்மென்டை முடிக்கிறார்கள்!!! அதுவே சொல்லிக்க்குதே நான் உங்கள் அசிஸ்டென்ட் என்று!!!!!

    ஆனால் மெட்டா ஏஐ யிடம் எல்லா கேள்விகளுக்கும் சரியான பதில் கிடைப்பதில்லை தனக்குத் தெரியாது என்றும் சொல்லி விட்டு அடுத்த முறை சரியான பதில் கொடுக்க முயற்சிக்கிறேன் என்றும் சொல்கிறது. (நன்றி துளசி மற்றும் ஸ்ரீராம். இருவரும் மெட்டா ஏஐயுடன் உரையாடி பகிர்ந்ததில் இருந்து நான் புரிந்து கொண்ட விஷயம்.)

    துளசிக்கு நோட்ஸ் கொடுக்க மெட்டா ஏ ஐ கிரிஸ்பாக கரெக்டாகக் கொடுக்கிறது. தேவையானதை மட்டும்.

    என்னிடம் மெட்டா ஏஐ இல்லை. ஏனோ என் வாட்சப் இன்னும் அதை எனக்குத் தரவில்லை. ஒரு வேளை இந்த கீதா கேள்வி மேல் கேள்வி கேட்டு மெட்டா ஏஐ யை சோர்வடைய வைத்துவிடுவாள்ன்ற பயம் போல!!!!!!!!

    (கௌ அண்ணாவின் வியப்பான மைன்ட் வாய்ஸ் - எபி ல ஒரு கேள்வி கூடக் கேட்கறதில்லை இவ எப்படி கேள்வி மேல கேள்வி )

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இந்த கீதா கேள்வி மேல் கேள்வி கேட்டு// - இப்போ புரிந்துவிட்டதா? இதுதான் கேள்வி.

      நீக்கு
  18. ஹாஹாஹா மெட்டா ஏஐ க்கு அனுஷ்கா வைத் தெரியலையா!!!! நல்ல விஷயம்.

    மெட்டா ஏஐ வரம்புக்கு அப்பாற்பட்டவற்றைத் தருவதில்லை என்பதும் தெரிகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீ ட் டா - பெரும்பாலும் celebrities படம் கேட்டால் கொடுப்பதில்லை. விவரங்கள் கொடுக்கும். ஆனால் படம் கொடுக்காது. ஏதேனும் legal issues இருக்கலாம்.

      நீக்கு
  19. கௌ அண்ணா உங்க அனுபவங்கள் சுவாரசியம் அதோடு எனக்கு என் மகனின் சிறு வயது நினைவுக்கு வந்தது. நாங்கள் திருவனந்தபுரத்திலிருந்து கோயம்புத்தூர் சென்னை என்று வரும் வரை என் மகன் எங்கள் ஊர் (திபுரம் லருந்து கிட்டதானே!!) சென்றுதான் திண்ணையில் ரத்தினம் என்பவரிடம் முடிவெட்டிக் கொள்ந்வான். அவர்தான் அவங்க்கு ஆஸ்தான முடிதிருத்துபவர். சலூன் பக்கம் போகவே மாட்டான். அவனுக்கு முடிவெட்டிக் கொள்வது என்பது ஒரு சிரமமான விஷயமாக இருந்தது. இப்பவும் தான். அதனால் இப்பலாம் ட்ரிம்மர் வைத்துதான் செய்து கொள்கிறான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா! ஆச்சரியமா இருக்கு. இந்தக் காலத்திலும், இப்படி ஒருவரா!

      நீக்கு
  20. கேள்விகள் புதியவர்களிடமிருந்து - மகிழ்ச்சி. கேள்விகளும் அதற்கான பதில்களும் நன்று.

    கேஜிஜி பக்கம் - ஸ்வாரஸ்யம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!