செவ்வாய், 4 அக்டோபர், 2016

கேட்டு வாங்கிப் போடும் கதை :: வாழத் தெரியாத ராஜீவ்



     இந்த வாரக் "கேட்டு வாங்கிப் போடும் கதை" பகுதியில் தில்லையகத்து க்ரானிக்கிள்ஸ் பதிவர்களில் இருவரில் முதல்வரான நண்பர் துளசிதரன் அவர்களின் படைப்பு இடம் பெறுகிறது.

     மலையாள தேசத்தில் ஆங்கில ஆசானாக இருப்பவர் நண்பர் துளசி.  சமூகப்பார்வை கொண்டவர்.  அதன் தாக்கமாகவே குறும்படங்கள் தயாரித்து இயக்கி இருப்பவர்.  அதில் அவரும் நடித்தும் இருக்கிறார்.

     இந்தத் தளத்தில் இவரும், இவரின் கூடப் படித்த திருமதி கீதா ரெங்கனும் சேர்ந்து எழுதுகிறார்கள்.  முதலிலேயே கீதாவிடம் சொல்லி விட்டேன்.  எங்கள் ப்ளாக்குக்கு இருவரும் தனித்தனியே ஆளுக்கு ஒரு படைப்பு தர வேண்டும் என்று!  அதன்படி இரண்டு வாரங்களுக்கு முன் கீதா ரெங்கன் கதை வெளியானது.  இப்போது துளஸிஜி படைப்பு.

     கதை பற்றிய அவர் கருத்தைத் தொடர்ந்து அவர் படைப்பு கீழே தொடர்கிறது.

=================================================================




எங்கள் ப்ளாக் நண்பர் ஸ்ரீராம், “கேட்டு வாங்கிப் போடும் கதை”க்காக எங்களிடம் தனித்தனியாக இருவரிடமிருந்தும் கதை வேண்டும் எனவும், எனது கதையாகிய இந்தக் கதையை அனுப்பலாம் என்று முடிவு செய்தோம். நண்பர் ஸ்ரீராமிற்கும், எங்கள் ப்ளாகிற்கும் எனது, எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 


இந்தக் கதை பிறந்த கதை : எங்கள் பகுதியில் நடந்த ஓர் உண்மைச் செய்தியை அடிப்படையாக வைத்துப் புனைந்தது. இதன் தொடர்ச்சிதான் எங்கள் குறும்படம் பரோட்டா கார்த்திக். அதில் நம் வலை நண்பர்கள் திருவாளர் இராயசெல்லப்பா, நண்பர் குடந்தை ஆர் வி சரவணன், பிசி பீ இப்போது இந்த பிசி பீ எங்கு பறந்து கொண்டிருக்கின்றதோ!!!..திருவாளர் திண்டுக்கல் தனபாலன், கோவை ஆவி நடித்துள்ளனர் என்பதை இங்கு மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்/றோம். இப்போது கதைக்கு….


=========================================================================



வாழத் தெரியாத ராஜீவ்

                           துளசிதரன் தில்லையகத்து  


             


எங்களாலால இனிமேலாம் அமைதியா, பேசாம இருக்க முடியாது.  பொறுமை போயிடுச்சி. ல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்குல.  உண்மைச் சொல்லணும்னா, பிரேத பரிசோதனைக்கு கவர்ன்மண்டு ஆசுபத்திரிக்கும் அப்புறம் சுடுகாட்டுக்கும் எடுத்துட்டு போற  இந்த சவம் பத்தாவது சவம். தெரியுமா? உங்களுக்கெல்லாம் எங்க தெரியபோகுது?

இது சுதாகரன் என்பவரின் வார்த்தைகள்.  சுதாகரனின் மனைவி, கேரளாவில் மலப்புரம் மாவட்டத்திலுள்ள ஊரங்காட்டிரி பஞ்சாயத்தில் வார்டு உறுப்பினர்.  ஆகையால், சுதாகரன் அந்தப் பஞ்சாயத்தில் மிகவும் இன்றியமையாத ஒரு நபர்.  

சீருந்தை நிறுத்தி இறந்து போன ராஜீவின் வீட்டிற்கு எப்படிச் செல்ல வேண்டும் என்று நாங்கள் கேட்ட போது அங்கு இருந்த ஒரு மளிகைக் கடைக்காரர் சுதாகரனைக் கை காட்டி விட்டார்.  சுதாகரன் அப்போது அருகிலுருந்த ஒரு தேநீர் கடையில் கட்டன் சாயாஎன்று கேரளாவில் சொல்லப்படும் பால் கலக்காத தேநீர் குடித்துக் கொண்டிருந்தார்.  நாங்கள் ராஜீவ் என்ற வார்த்தையை உச்சரித்த உடனேயே அவர் கொந்தளித்து,

     “ஆமா, நீங்கல்லாம் ஏன் இவ்வளவு சீக்கிரம் வந்தீங்க?  செத்த பாடி கிடைக்க இன்னும் ரெண்டு மணி நேரம் ஆவும்.  அதுவரைக்கும் உங்களால காத்துக் கிடக்க முடியுமாதுக்காக நீங்கல்லாம் கஷ்டப்படணும்?  நாங்கதான் கையாலாகாதவங்க. இந்த மாதிரி மோசமான கொடுமைக்கெல்லாம் துணை போயி கஷ்டப்படணும்னு விதி. எதுக்குமே உபயோகமில்லாம பொறந்துருக்கோம்.  இது மாதிரி செத்துப்போன சவங்கள முதுவான் குடியிருப்பிலிருந்து இந்தத் தாலுகா ஆசுபத்திரிக்குப் பிரேத பரிசோதனைக்குக் கொண்டு வரணும்னு எங்க விதி.  நாங்க இந்தப் பிரேத பரிசோதனை செய்ற டாக்டருங்களுக்கும், அப்புறம் இந்தப் பிரேதங்களைக் கொண்டு வந்து ஸ்ட்ரெச்சர்ல போட்டு திரும்பக் கொண்டு போற அந்த ஆளுங்களுக்கும் லஞ்சம் கொடுக்க பணம் பொட்டணும்.  அப்புறம் இந்தப் பாடிங்கள கொண்டுபோயி அடக்கம் செய்ணும். ஆனா, நாங்க இப்போ முன்ன மாதிரி கெடயாது. எங்களுக்கும் எல்லாம் தெரியும். 

ம்ம்ம் என்று கேட்டுக் கொண்டிருந்தோம். அவரது பொருமல்கள் அனைத்தும் நியாயமே என்பதால். ஆனால், எதற்காக எங்களிடம் இப்படிப் பொரும வேண்டும் என்பது மட்டும் புரியவில்லை. அவர் சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் ஆரம்பித்தார்.

அதனால, நீங்க சாமர்த்தியமா எங்களை ஏமாத்த முடியாது. இந்தப் பையனுக்காக நாங்க செலவழிக்க ஒவ்வொரு காசும் எங்களுக்கு வந்தாகணும்.  இந்த ஆதிவாசிப் பையனைப் புதைக்கறதுக்கு ஆகுற செலவெல்லாம் கெடைக்கறதுக்குள்ள ரூல்ஸ் எல்லாம் உங்க கையில உண்டுனு எங்களுக்குத் தெரியும்

என்று கொந்தளித்த போதுதான் தெரிந்தது, அவர் எங்களைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கின்றார் என்று. அவரிடம்,

“நீங்கள் நினைப்பது போன்று, நாங்கள் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் அல்லர், ராஜீவ் படித்து வந்த பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் என்று சொன்னதும், அதிர்ந்து விட்டார்.  அவர் மனம் சங்கடப்பட்டு விட்டது.  அந்த நிமிடத்திலிருந்து எங்களிடம் மிகவும் அன்பாக நடந்து கொண்டார். 

“நாங்கள் காத்திருக்கிறோம்” என்றோம். அங்கு பதட்ட நிலை இருந்ததை அறிய முடிந்தது. ஒரு புறம் ராஜீவின் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த ஆதிவாசி மக்கள் கூடி ஏதோதோ பேசிக் கொண்டிருந்தார்கள். தற்கொலையா, கொலையா என்றும் பேச்சு அடிபட்டுக் கொண்டிருந்தது. போலீஸார் மறுபுறம், சுதாகரனிடம் பேசிக் கொண்டும், கையெழுத்து வாங்கிக் கொண்டும், செய்தி அறிந்து வந்த பத்திரிகையாளர் சிலரிடம் அவர்களது கேள்விகளுக்குப் பதிலளித்துக் கோண்டும் என்று ஒரு விதமான பதட்ட நிலை நிலவியது.

இரண்டு மணி நேரக் காத்திருப்பிற்குப் பிறகு, ராஜீவின் பாடி வந்து விட்டது என்று சுதாகரனுக்குச் சொல்லப்பட்டதும், கூடியிருந்த மக்களில் சிலர் அதை எடுத்துக் கொண்டு மலைக்கு மேலே கொண்டுச் செல்ல வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுரை கொடுத்து அவர்களை அனுப்பிவிட்டு, அரை மணி நேரம், மேலும் அதன் தொடர்பான சில விவகாரங்களைப் பார்த்துவிட்டுச் சுதாகரன் எங்களை அழைத்தார்.

செங்குத்தான மலை மேலிருந்த ராஜீவின் வீட்டிற்கு வழி காட்ட எங்களுடன் வரவும் செய்தார். வழியில் வரும்போது தன்னுடைய முட்டாள் தனமானப் பேச்சிற்கு மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டே வந்தார்.

ராஜீவின் வீட்டை அடைய 30  நிமிடங்கள் ஆனது.  ந்த மயிலாடிக் குடியிருப்பு நான் இதுவரை பார்த்த ஆதிவாசிக் குடியிருப்புகளில் இருந்து சற்று வித்தியாசமாக இருந்தது.  ராஜீவின் வீட்டிற்கு அருகில் எந்த வீடுமே தென்படவில்லை.  அருகில் என்பது தோராயமாக இருநூறு மீட்டர்  தள்ளித்தான் இருந்தது.  ராஜீவின் உடல் தூக்குப் படுக்கையிலேயேதான் இருந்தது. 

மலை அடிவாரத்திலிருந்து இந்த உடலை மலை மேல் கொண்டு வருவதற்கு அந்த ஊழியர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள் என்று மலைத்தோம்.  ராஜீவின் முகம் பார்த்ததும் எனக்கு அவன் எட்டாம் வகுப்பு பிரிவில் கடைசி விசுப்பலகையில் உட்கார்ந்திருந்த நினைவு வந்தது. 

நான் அவனுக்குப் பாடம் நடத்தவில்லை என்றாலும், சீருடை மற்றும் பேருந்தில் செல்வதற்கானக் கட்டணங்களைப் பெறுவதற்காகச் சென்றிருக்கிறேன்.  எனக்கு நன்றாக நினைவுள்ளது.  அவன் நல்ல ஆரோக்கியமான பையனாக இருந்தான்.  ஆனால், இங்கு நேரில் பார்க்கும் போது அவன் அம்மாவும், அவனுடைய இரண்டு சகோதரர்களும், ஒரு சகோதரியும் மிகவும் நலிந்திருந்தார்கள்.  அவர்களுடைய பெரிய கண்களில் வருத்தத்தை விட பயமே மிகுதியாக இருந்தது.

இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள மொத்தமே பதினைந்து பேர்தான் கூடியிருந்தனர்.  யாரோ ஒருவர் வந்து சுதாகரனிடம் சவக்குழி தோண்டியாகி விட்டதாகக் கூறினார். சுதாகரன் ராஜீவின் அம்மாவிடம் வேறு ஏதாவது சடங்குகள் செய்வதற்கு உள்ளதா என்று கேட்டதற்கு எதுவும் இல்லை என்று கூறி விட்டாள்.  அவர் ராஜீவின் அம்மாவை சிறிது தண்ணீராவது அவன் வாயில் ஊற்றும்படி சொன்னதற்கு, அதுவும் தேவை இல்லை என்று சொன்னாள். பின்னர் சுதாகரனும் அவருடைய நண்பர்களும் உடலை சவக்குழிக்கு எடுத்துச் சென்றனர்.  எங்களது கண்கள் கண்ணீரால் நிரம்பியது.  ஆனால், ராஜீவின் அம்மாவின் கண்களில் ஒரு துளிக் கண்ணீர் கூட வர வில்லை என்பது எனக்குச் சற்று விசித்திரமாக இருந்தது. அப்பெண்மணி  உள்ளே சென்று ராஜீவின் சீருடைகள், பள்ளிப் பை முதலியவற்றைக் கொண்டுவந்து,

தெல்லாம் சவக்குழியில விட்டெறிஞ்சுருங்க.  எங்களுக்கு அவனுக்குச் சொந்தமானது எதுவும் வேண்டாம்.”  என்றாள்.

அவரது வார்த்தைகள் எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது.

ஏன் ராஜீவ் தற்கொலை செஞ்சுகிட்டான்?என்று அவன் அம்மாவிடம் கேட்டேன்.  நாங்களும், அவன் அம்மாவும், மற்ற குழந்தைகளும் மட்டுமே அங்கு இருந்தோம்.

எனக்கு எப்படித் தெரியும். அவன் ரொம்ப அடம் பிடிக்கறவன். என்னய என்ன செய்யச் சொல்லுறீங்க?என்பது அவன் அம்மாவின்  பதிலாக இருந்தது.  இது என்ன பதில், அர்த்தமற்ற பதில் என்று தோன்றியது.

நேத்தைக்கு நான் வெடிக்காலம் எந்திரிச்சு பார்த்தப்போ அவென் இந்த முந்திரி மரத்துல தொங்கிக்கிட்டிருந்தான்.

பள்ளிக்கூட ஹாஸ்டல் ஓணம் விடுமுறைனால மூடியிருந்திச்சு. ஓணம் விடுமுறை முடிஞ்சதும் அவன் பள்ளிக்கூடத்துக்கு வந்திருந்தான்னா இந்த மாதிரி அவனுக்கு நடந்திருக்காதுஎன்பது எங்களுடன் வந்திருந்த சசி என்பவரின் கருத்து.  இவர் பள்ளி விடுதி உணவகத்தில் வேலை செய்பவர்.

நாங்களும் ஈமச் சடங்குகள் நடக்கும் இடத்திற்குச் சென்றோம். சுதாகரனும் அவரது நண்பர்களும் ஈமச் சடங்குகளை முடித்ததும் மீண்டும் ராஜீவின் வீட்டிற்கு வந்தோம்.   நான் ராஜீவின் அம்மாவிடம் ஒரு ஆயிரம் ரூபாய் கொடுக்க எண்ணிய போது சுதாகரன் என்னைத் தடுத்தார்.

        “
நீங்க அவன் அம்மா  கையில கொடுத்தீங்கன்னா கள்ளுக் கடைக்குப் போயி குடிப்பா.  இல்லைன்னா அதை வே வழி செலவாக்கிட்டு, இல்லன்னா தொலைச்சுட்டு நம்மகிட்ட வந்துட்டு கெட்ட வார்த்தைல கத்துவா.  நீங்க அவங்ககளுக்கு ஏதாவது செய்யணும்னு நினைச்சா என்னோட வாங்க.  மலை அடிவாரத்து ஒரு கடை இருக்குதுஅங்க போயி அரிசி, பருப்பு, சர்க்கரை மாதிரி ஏதாச்சும் வாங்கிக் கொடுங்க.

நாங்கள் ராஜீவின் அம்மாவிடம் அவன் சகோதரர்களை எங்களுடன் அனுப்பச் சொன்னோம்.  அவர்களும் எங்களுடன் வந்தார்கள்.  போகும் வழியில், ராஜீவ் ஏன் தற்கொலை செய்து கொண்டான் என்று சுதாகரனிடம் கேட்டேன்.

இது தற்கொலைன்னு எல்லாரும் நினச்சு பேசிக்கராங்க. ஆனா இது தற்கொலைலாம் இல்ல.  இது இரத்தத்தை உறைய வைக்க பயங்கரமான ஒரு கொலை.  அதில எந்த சந்தேகமும் கிடயாது.  பொணம் தொங்கிட்டுருந்துச்சுனு சொல்ற அந்த முந்திரி மரத்தைப் பாத்தீங்களாஅந்த மரம் இந்தப் பையனோட உடம்பத் தாங்குமாயா? சொல்லுங்க.  அதுவுமில்லாம, கொஞ்சமும் சக்தியே இல்லாத இந்த அம்மாவும், அந்தப் பிள்ளைங்களும் அந்தக் கயித்தை அறுத்து உடம்பக் கீ கொண்டுட்டு வந்தாங்களாம்இத நம்பணுமாம்.  நல்ல கதை. இதெல்லாம் நடக்கக் கூடிய காரியமாயா? 

நாங்க அவ ஆசுபத்திரிக்கு எடுத்துட்டு போனப்போ அவனோட பிறப்பு உறுப்பும், விரையும் சிதஞ்சு, அறுபட்டுருந்ததப் பாத்தோம்.  ஒரு பையன் அவன் தற்கொலை செஞ்சுக்கணும்னு நினைசப்புறம், செய்றதுக்கு முன்னாடி தன்னோட பிறப்பு உறுப்புகளை அறுத்து செதைக்க அவனுக்கென்ன பைத்தியமா புடிச்சுருக்கு?”

என்னது!? பிறப்பு உறுப்பு சிதைந்திருந்திருச்சா? என்னப்பா இது? கொடூரமா இருக்குதே!” என்று நாங்கள் சொல்ல அவர் தொடர்ந்தார்.

இந்த மலைக்குப்  பெரிய்ய்ய ஆளுங்கல்லாம் வெல உசந்த, சொகுசான  காருங்கள்ள அடிக்கடி வந்து போறாங்க.  அதுவும் ராத்திரிலதான்.  முன்னாடில்லாம் வேட்டையாடறதுக்கு பெரிய வீட்டு மனுஷங்களும், ராஜாக்களும் அந்த குடும்பத்தைச் சேந்தவங்களும் வந்துட்டு போவாங்க.  இப் பணக்காரங்க, பெரிய மனுஷங்க எல்லாம் வரத்தொடங்கிருக்காங்க.  அவங்க துப்பாக்கில்லாம் கொண்டு வரது கிடயாது.  சாராயமும், போதை மருந்துமாத்தான் வந்து இறங்கறாங்க.

இங்க இருக்கற ஆதிவாசிப் பொண்ணுங்களையும், சின்னப் பொண்ணுங்களையும் சொல்றதுக்கே வெக்கமாவும், கோபமாவும் வருது. கற்பழிச்சு அழிக்கிறாங்க. எல்லாரையும் கொன்னுட்டு ஜெயிலுக்குப் போனா கூட தப்பில்லனு தோணுது.  எத்தனை அழுகிப் போன பொணங்களை இங்க கண்டெடுத்து,  பிரேத பரிசோதனைக்காக கவர்ண்மென்டு ஆசுபத்திரிக்கும் அப்புறம் அடக்கம் செய்றதுக்கும் கொண்டு போயிருக்கோம் தெரியுமாஎல்லாமே ரொம்ப மோசமான மொறையில கற்பழிக்கப்பட்ட உடம்புங்க. 

ராஜீவோட அம்மா இதுக்கெல்லாம் கோபப்பட்டு, கேள்வி எதுவும் கேக்க மாட்டா.  அவளுக்கு  இதெல்லாம் பழகிப் போச்சு.  போலீசு வந்து விசாரிச்சாலும் யாரும் உண்மையை சொல்லிட மாட்டாங்க.  ஒண்ணு இவங்க அவங்களுக்குப் பயப்படறாங்க. இல்லன்னா அவங்க இவங்களுக்கு சாராயம், போதை மருந்து எல்லாம் கொடுத்து வாயை அடச்சுடறாங்க.

நீங்க ராஜீவோட அம்மாவைப் பாத்தீங்கல்ல?  அவன் அம்மாவுக்கு நல்லாத் தெரியும் தன் மகனுக்கு என்ன நடந்துச்சுனு.  ஆனா, அவன் அம்மா , த்த பிள்ளைங்களுக்கு நடந்தாலும் கூட எதையும் சொல்ல மாட்டா.  இப்படித்தான் கஷ்டப்படணும், விதினு நம்புறா.  அவன் அம்மா  உயிரோடு இருக்கறதுக்கு காரணமே இந்த அடிமை புத்திதான். 

அப்ப இதை எல்லாம் இங்க யாருமே எதிர்க்கறதுக்கு இல்லையா? அரசுக்கு எதுவுமே தெரியாதா? யாரும் புகார் எதுவும் கொடுக்கலையா? ஆச்சரியமா இருக்குது. நாம் எல்லாரும் எந்த காலகட்டத்துல இருக்கோம்” என்று கேட்டோம், எங்கள் பகுதியைச் சேர்ந்த பகுதியாக இருந்தும், இந்தப் பகுதியிலிருந்து எங்கள் பள்ளியில் படித்துவந்த ராஜீவ் கூட ஒன்றும் சொன்னதில்லையே, இந்தக் குடியிருப்பில் நடப்பது எதுவுமே எங்களுக்குத் தெரியவில்லையே என்றும் வியப்பாக இருந்தது.

என்னது எதிர்த்துக் கேக்கலையா? ஒருநா காலை ராஜீவோட அப்பா  “நாடிஒரு ஓடைக்குப் பக்கத்துல பொணமாக் கெடந்தாரு.  அவரு  செத்தப்புறம் இந்தக் காம வெறியனுங்களுக்கு சுதந்திரம் கூடிப்போச்சு.  நாடிதான் இவனுங்களைலாம் எதிர்த்துப் போராடினாரு .  போன வாரம், ராஜீவ், இந்த வெறியனுங்களை அவன் அம்மாகிட்ட தப்பா நடந்துக்க வந்தப்ப கத்தியால மிரட்டி விரட்டினான்னு சொல்லிக் கேட்டோம்.  அதனால அவனுங்கதான் இவனைக் கொன்னு போட்டுருக்கணும்னு நினைக்கறோம். 

தெல்லாம் எங்களால இனியும் பொறுத்துகிட முடியாது.  தெப்பத்தி அரசியல் கட்சித் தலைவர்கள் கிட்டயும், மேலிடத்திலயும் கம்ப்ளைன்ட் லெட்டரு கொடுக்கணும்.  இப்படியே இதெ போக விட்டம்னா  இந்த வெறியனுங்க நாங்க குடியிருக்கற இடத்துக்கும் வந்துடுவானுங்க.  பொறகு இந்த ஆதிவாசிப் பொண்ணுங்களுக்கு வந்த கெதிதான் எங்க வீடுகள்ல இருக்கற பொண்ணுங்களுக்கும் நடக்கும்.

 நாங்க ஏற்கனவே பல கட்சிகள்ல இருக்கற இளைஞர் அமைப்புகிட்ட பேசி, வங்காளிகளுக்கும், பாலஸ்தீனியர்களுக்கும், சிரியா நாட்டு மக்களுக்கும், எகிப்தியர்களுக்கும் நடக்கற கொடுமைங்களுக்கு எதிரா போராடறதுக்கு பதிலா, நம்ம இடத்துல எங்களுக்கு நடக்கற இந்தக் கொடுமைங்களுக்கு எதிரா போராடணும்னு கெஞ்சிக் கேட்டுருக்கோம். என்ன நடக்குதுனு பாப்போம்இல்லனா நாங்க மக்கள் எல்லாருமே போராட்டத்துல இறங்க வேண்டியதுதான்

சுதாகரனின் இந்த வார்த்தைகள் எங்கள் மனதிலும் போராடும் உணர்வைத் தூண்டியது.  நாங்கள் சுதாகரனை மிகவும் பாராட்டிவிட்டு அவர் நடத்தும் போராட்டம் வெற்றி அடைய வாழ்த்தினோம்.  அந்த மலையில் இன்னும் சிறிது நேரம் இருந்து ரசிக்க முடியாததற்கு வருந்தி, ஏக்கத்துடன், மனம் இல்லாமல் வீட்டிற்குப் புறப்பட்டோம்.  

புறப்படும் முன் ராஜீவின் குடும்பத்திற்கு அரிசி, சர்க்கரை மற்றும் மளிகைப் பொருட்கள் கொடுத்தோம்.  எங்கள் மனம் இன்னும்  அந்த மலையையே சுற்றி வந்து கொண்டு இருக்கிறது.  அந்த மயிலாடி மலைக்கு, நல்ல உள்ளமும், அநீதியை எதிர்த்துப் போராடும் துணிவுள்ள மனிதர்கள் ஏராளமாகத் தேவைப்படுகின்றனர் என்பதை எங்களால் உணர முடிந்தது. அப்பொழுதுதான் அந்த முதுவான் குடியிருப்பு ஆதிவாசி மக்களை, மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மயிலாடியிலுள்ள காமவெறியர்களிடமிருந்துக் காப்பாற்ற முடியும்.

ராஜீவின் மர்மமான மரணத்தைப் பற்றி நாங்களும் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தோம். போராட முடிவெடுத்திருக்கும் சுதாகரனுக்கு வேண்டிய தார்மீக ஆதரவும் , முடிந்த உதவிகளும் கொடுக்க முடியும் என்பது மட்டுமல்ல கொடுக்கவும் வேண்டும்.  சுதாகரனைப் போன்ற நபர்கள் நம் சமுதாயத்திற்கு மிக அவசியம் என்பதையும் ஆசிரியர்களாகிய எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது. நாடிக்கு ஏற்பட்ட முடிவு சுதாகரனுக்கு ஏற்பட்டுவிடாமல் இருக்க வேண்டும் என்றும் நினைத்துக்கொண்டே, அவரது போராட்டம் வெற்றியடைய வேண்டும் என்று வாழ்த்தியதுடன், எங்களது உதவியும் கிடைக்கும் என்று நம்பிக்கையூட்டி விடை பெற்று கனத்த மனதுடன் வீடு திரும்பினோம்.

(இந்தக் கதையின் முடிவில் நாங்கள் உதவுவதாகவும், போராட்டம் என்றும் சொல்லியிருப்பதைத்தான் அதன் தொடர்ச்சியாக “பரோட்டா கார்த்திக்” எனும் குறும்படமாக நாங்கள் இயக்கினோம். அதன் லிங்க் இதோ.



30 கருத்துகள்:

  1. மனதை அதிரச் செய்யும் கதை. இப்படி இன்னும் பல கிராமங்கள், பல கொடுமைகள்......

    வாழ்த்துகள் துளசிதரன் ஜி!

    பதிலளிநீக்கு
  2. மனம் கணத்துப் போய்விட்டது நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
  3. படித்ததும் அதிர்ந்தேன். சமூக அவலங்களில் ஒன்றைக் கையாண்ட விதம் இன்றைய சூழலை மிகத் தெளிவாக உணர்த்தியது.

    பதிலளிநீக்கு
  4. சகோதரர் துளசிதரனுக்கு இனிய வாழ்த்துக்கள்!

    முற்றிலும் வேறு கோணத்தில், இன்றைய சமூக அவலங்களைத் தேர்ந்தெடுத்து அருமையாக எழுதியிருக்கிறீர்கள்! எப்படி இந்தப்பிரச்சினைகளுக்கெல்லாம் முடிவு கொன்டு வர இயலாமல் இருக்கிறதோ, அதே போல் உங்கள் கதைக்கும் முடிவில்லை என்பது சிறப்பு!

    பதிலளிநீக்கு
  5. adhirchi thandha kathai! varuthangalun kathaiyakki pathippithavarukku vanakkangal.

    பதிலளிநீக்கு
  6. கதை நிஜத்தைத் துகிலுரித்துக் காட்டியது. ஏதிலிகளுக்காகப் போராடுபவர்களுக்குப் படித்தவர்களின் ஆதரவு மிகவும் தேவை என்பதைச் செய்தியாக்கியது கதை.

    "நம்ம இடத்துல எங்களுக்கு நடக்கற இந்தக் கொடுமைங்களுக்கு எதிரா போராடணும்னு" - 'நல்ல வரிகள். உள்ளூர்ல ஓணான் பிடிக்காமல், உளுந்தூர்ப்பேட்டைல ஒட்டகம் பிடிக்கப்போறேன் என்று சொல்வதுபோல், உள்ளூர் மக்களின் வாழ்க்கைக்குப் போராடாமல், சம்பந்தமேயில்லாத மற்ற இடங்களுக்கு, மனிதர்களுக்குப் போராடுவதற்கு முன்னுரிமை கொடுப்பதில் என்ன பயன்.

    பதிலளிநீக்கு
  7. எத்தனை அறியாமையில் உழன்று கொண்டிருக்கிறோம் என்று தெரிகிறது. இங்கிருக்கும் அவலங்களைச் சந்திக்கத் தெம்பில்லாமல் வெளி தேசத்து அரசியலை அசை போட்டு
    இன்னும் எத்தனையோ. ஒரு கண்திறப்பு இந்தக் கதை. நன்றி திரு துளசிதரன். குறும்படம் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. அருமையான் குறும்படம். மிக நன்றி. நம்பிக்கை வேர்கள் தொடர்ந்து மரமாகட்டும்.

    பதிலளிநீக்கு
  9. முதலில் எங்கள் ப்ளாக் நண்பர்களுக்கு எனது (எங்கள்) மனம் கனிந்த நன்றிகள். இன்று பணி நிமித்தம் வெளியில் செல்ல நேர்ந்ததால், இப்போதுதான் கீதா சொல்லிப் பார்க்க நேரிட்டது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இடையில் நேரம் கிடைக்கும் போது ஒவ்வொருவரது கருத்திற்கும் நன்றியும் விடையும் பகர்கின்றேன். இப்படி ஒவ்வொருவரின் கதையையும் வெளியிட்டு உற்சாகப்படுத்தும், ஊக்குவிக்கும் எங்கள் ப்ளாகிற்கு எவ்வளவு நன்றிகள் உரைத்தாலும் தீராது! உங்கள் பணி வாழ்க!

    எங்கள் ப்ளாகிற்கு மீண்டும் மீண்டும் நன்றி.

    பதிலளிநீக்கு
  10. வெங்கட் ஜி மிக்க நன்றி! எங்கள் பகுதியில் மட்டுமல்ல, இந்தியாவின் எல்லா ஆதிவாசிப்பகுதிகள், மலவாழ் பகுதிகளில் ஏன் நீங்கள் சென்று வந்த ஏழு மாநிலங்கள் பகுதிகளிலும் நடக்கின்றது. கீதாவின் மகனுடன் படித்த நாகாலாந்து பையன்கள் 4 பேரும் நிறைய சொல்லியிருப்பதாக அவரது மகன் சொல்லக் கேட்டிருக்கிறோம். மிகவும் கொடுமை. பல நிகழ்வுகள் நமக்கு எட்டுவதில்லை என்பதே உண்மை. மிக்க நன்றி ஜி

    பதிலளிநீக்கு
  11. நண்பர் கரந்தையார் அவர்களின் கருத்திற்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  12. முனைவர் ஜம்புலிங்கம் ஐயா தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி! இது போன்ற மனித நேயத்திற்கு எதிரானவை நிறையவே நடக்கின்றது ஐயா.

    பதிலளிநீக்கு
  13. அருமையான கருப்பொருளை எடுத்துப் புனைந்த சிறப்பான கதை. இயல்பான வாழ்வு இழையோடுகிறது. ஆசிரியருக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  14. மிக்க நன்றி சகோதரி மனோ சாமிநாதன்! உண்மைதான் இது போன்றப் பிரச்சனைகளுக்கு முடிவே இல்லைதான். அதனால்தான் கதையில் முடிவு கொடுக்காமல்.....குறும்படத்தில் என் மனதில் தோன்றிய ஒரு சிறு முடிவினைக் கொடுக்க முயன்றிருக்கிறேன். அது யதார்த்த முடிவில்லை என்று சொன்னாலும், எங்கள் ப்ளாகின் பாசிட்டிவ் நியூஸை வாசிக்கும் போது, படத்தில் சொல்லப்பட்ட முடிவும் சாத்தியமானது இல்லை என்று சொல்வதற்கில்லை என்றும் ஒரு எண்ணம் எழுந்தது. யதார்த்தமற்ற முடிவை நாம் கொடுக்கவில்லை என்ற ஒரு சிறு மகிழ்ச்சியும் தோன்றியது. மிக்க நன்றி சகோதரி தங்களின் கருத்திற்கு.

    பதிலளிநீக்கு
  15. கதை நன்றாக வந்திருக்கிறது துளசி சார் நிஜங்கள்கற்பனைகளின் பிறந்த இடம்

    பதிலளிநீக்கு
  16. மிக்க நன்றி சகோதரி மிடில்க்ளாஸ்மாதவி தங்களின் கருத்திற்கு

    பதிலளிநீக்கு
  17. மிக்க நன்றி நெல்லைத்தமிழன் தங்களின் கருத்திற்கு. எனக்கு அடிக்கடி தோன்றும் ஒரு விஷயம். நாம் பல நாடுகளில் நடக்கும் அநியாயங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்து கொடி பிடித்துச் செல்கிறோம். ஆனால், நமக்கு அடுத்து நடக்கும் அநியாயயங்களுக்குப் போராடுவதும் இல்லை தீர்வும் காண்பதில்லை. அதைத்தான் கதையில் சொல்ல விழைந்தேன். தாங்கள் அதைக் குறிப்பிட்டுச் சொன்னமைக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  18. மிக்க நன்றி வல்லிம்மா. தங்களின் அழகான கருத்துரைக்கும், எங்கள் குறும்படத்தைப் பற்றிய தங்கள் கருத்திற்கும் மிக்க மிக்க நன்றிம்மா. தங்களின் கருத்து மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளது. மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  19. மிக்க நன்றி நண்பர் யாழ்ப்பாவாணன்! தங்களின் கருத்திற்கும் பாராட்டிற்கும்.

    பதிலளிநீக்கு
  20. மிக்க நன்றி ஜிஎம்பி சார் தங்களின் கருத்திற்கு.

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் இது நடந்த உண்மைகளை வைத்து பிண்ணப்பட்ட கற்பனையா ?
    மனதை உறைய வைக்கும் விடயங்கள்.
    உண்மையில் நாம் நமது தேசத்துக்குள் போராட வேண்டிய விடயங்களை மறந்து அடுத்த நாட்டு விடயங்களை தேடுகிறோம்.

    பதிலளிநீக்கு
  22. கில்லர்ஜி மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு. ஆம் ஒரு செய்தியை வைத்துப் புனையப்பட்ட ஒன்றே. நம் வீட்டிற்குள் ஆயிரம் இருக்கும் என்றாலும் அடுத்தவன் வீட்டு பிரச்சனைக்கு நாம் முந்திச் சென்று தீர்வு அல்லது நியாயம் சொல்லுவதுதானே மனித இயல்பு!! அதுதான் நாட்டிலும் நடக்கிறது.

    மிக்க நன்றி கில்லர்ஜி!

    பதிலளிநீக்கு
  23. ஆதிவாசிகள் கற்பழிப்பு என்று கூகுளில் தேடினால் ,எல்லா மாநிலங்களிலும் இந்தக் கொடுமை நடப்பதாக செய்திகள் நிறைய உள்ளன !உண்மையில் இப்படி செய்பவர்கள், மனிதன் என்று சொல்லிக் கொள்ள வெட்கப் படவேண்டும் !

    பதிலளிநீக்கு
  24. ஆதிவாசிகள் கற்பழிப்பு என்று கூகுளில் தேடினால் ,எல்லா மாநிலங்களிலும் இந்தக் கொடுமை நடப்பதாக செய்திகள் நிறைய உள்ளன !உண்மையில் இப்படி செய்பவர்கள், மனிதன் என்று சொல்லிக் கொள்ள வெட்கப் படவேண்டும் !

    பதிலளிநீக்கு
  25. மனதை மிகவும் கலங்கச் செய்த கதை.

    கணொளி முழுவதுமாகப் பொறுமையாகக் கண்டு களித்தேன்.

    குறும்படம் மிகச்சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது.

    சம்பந்தப்பட்ட அனைவருக்கும் என் மனம் நிறைந்த பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  26. மிக்க நன்றி பகவான் ஜி தங்களின் கருத்திற்கு.

    பதிலளிநீக்கு
  27. மிக்க நன்றி வைகோ சார் தங்களின் கருத்திற்கும், குறும்படத்தினைப் பற்றிய கருத்திற்கும், பாராட்டிற்கும்

    பதிலளிநீக்கு
  28. குறும்படம் பார்த்து இருக்கிறேன்! கதையாக படிக்கையில் மனம் கனத்துப் போனது! நன்றி!

    பதிலளிநீக்கு
  29. குறும்படம் பார்த்திருக்கிறேன்...
    துளசி சாரின் சிறுகதை அருமை...

    பதிலளிநீக்கு
  30. கொடுமை. குறும்படம் இன்னும் பார்க்கவில்லை. பார்க்கணும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!