திங்கள், 21 நவம்பர், 2016

"திங்க"க்கிழமை 161024 :: (அரைத்து விட்ட) மசாலா தோசை!



     காய்கறிகளை பொடிப்பொடியாக நறுக்கிச் சேர்க்கப் பொறுமை இல்லாத, அல்லது அதைவிட வித்தியாசத்தை எதிர்பார்த்த ஒரு நாள்!

     என்ன செய்யலாம்?

     எடுத்தேன் ஆறு பெரிய வெங்காயம், எட்டு சின்ன வெங்காயம், இரண்டு பெங்களூரு தக்காளி, எட்டு பச்சை மிளகாய், 

     ஐந்தாறு காய்ந்த மிளகாய், இரண்டு குடைமிளகாய், இதற்குத் தேவையான அளவு உப்பு,  கொஞ்சம் கொத்துமல்லி...  

     எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு அரைத்தேன்.

     தோசை மாவில் கலந்தேன்.  


     நன்றாகக் கலக்கி தோசை வார்த்து எடுத்து...

     சாப்பிட்டோம்!   தொட்டுக்கொள்ள எது....... வும் தேவை இல்லை!

     குடைமிளகாயை மட்டுமாவது பொடியாக நறுக்கி, அரைவதக்கல் வதக்கி, தோசையில் தூவிச் சாப்பிடலாம் என்று நினைத்தாலும், நறுக்கும்  நேரம்,பொறுமை  இல்லாத காரணத்தால் அதையும் அரைத்துச் சேர்த்து விட்டேன்.
     அப்புறமும் காரம் எங்களுக்குப் போதாத காரணத்தால் பமி, காமி முன்னரே போட்டிருந்தும் மாவில் இன்னும் காரப்பொடி சேர்த்தோம்.

      இதன் பிறகும் இதில் மறுபடியும் வெங்காயம் பூப்பூவாக நறுக்கி மேலே தூவிக் கூடச் சாப்பிடலாம்!  அதே போல கேரட் போன்றவையும்!

38 கருத்துகள்:

  1. ஆகா
    இப்பொழுதே சாப்பிட மனம் விரும்புகிறது நண்பரே
    தம+1

    பதிலளிநீக்கு
  2. ஆஹா...... ஆஹ்ஹா.......!!!!!
    ரசனை மிக்க பதிவு......!!!!!!!
    மனதால் சுவைத்தேன்.......!!!!!!

    பதிலளிநீக்கு
  3. ஆஹா...... ஆஹ்ஹா.......!!!!!
    ரசனை மிக்க பதிவு......!!!!!!!
    மனதால் சுவைத்தேன்.......!!!!!!

    பதிலளிநீக்கு
  4. வித்தியாசமான செய்முறைதான். நானும் தோசைக்குத் தனியான சட்னி (வெங்காய, பச்சைமிளகாய், காரச்சட்னி போன்றவை) பண்ணித் தொட்டுக்காமல், அதையும் மாவுலேயே கலந்து வார்த்தால் எப்படி இருக்கும் என்று எண்ணுவதுண்டு. இட்லி வார்க்கும்போதும், கொஞ்சம் இட்லிமாவு, அதன்மேல் மிளகாய்ப்பொடி எண்ணெய், அதன்மேல் இட்லிமாவுன்னு வார்த்தால் நல்லா இருக்குமோன்னு நினைப்பதுண்டு. புதுவித செய்முறைதான்

    பதிலளிநீக்கு
  5. இப்படித்தான் என் மனைவி என் குழந்தை சிறு வயதில் வெஜிடபுள் சாப்பிடாத நேர்த்தில் எல்லாவற்றையும் அரைத்து தோசையில் கலந்து சுட்டுக் கொடுப்பாள் குழந்தையும் விரும்ப்பி சாப்பிட்டும் குழந்தை உள்ள பெற்றோர்கள் இந்த வெஜிடபுள் சாப்பிடாத குழந்தைக்கு இம்மாதிரி செய்து தந்து சாப்பிட வைக்கலாம்

    பதிலளிநீக்கு
  6. அரைத்துவிட்ட சாம்பார் என்பது போல் அரைத்து விட்ட தோசை. அருமை.
    எளிதாக செய்யலாம் போல், வேலை செய்ய சோர்வாக இருக்கும் போது செய்யலாம் நல்ல யோசனை.

    காய்கறிகளை துருவி வெங்காயம் பச்சைமிளகாய், கருவேப்பிலை, பச்சைகொத்தமல்லி லேசாக வதக்கி தோசையில் கலந்து தோசை சுட்டு கொடுப்பேன். காரட், பீட்ரூட் வெங்காயம் கலந்து பிங்க் தோசை என்று என் குழந்தைகளுக்கு, பேரன் பேத்திகளுக்கு செய்து கொடுத்து அவர்களை சாப்பிட வைத்து இருக்கிறேன்.

    இட்லி மாவில் அரைகரண்டி இட்லி மாவு ஊற்றி நடுவில் காய்கலவை வைத்து பின் மறுபடி அரை கரண்டி மாவை மேலே ஊற்றி இட்லி செய்யலாம்.

    இதே இட்லியை இனிப்பு கலவை வைத்து செய்து குழந்தையுண்டாகி இருப்பவர்களுக்கு ”சினை இட்லி என்று” கொடுப்பார்கள் எங்கள் நெல்லைப்பக்கம். இனிப்புகலவைக்கு பச்சைபயிறு வெல்லம் தேங்காய் கலந்த கலவை இருக்கும்.

    பதிலளிநீக்கு
  7. இந்த அரைத்துவிட்ட தோசை ,தோசைக்கு ஒண்ணு விட்ட தம்பி போலிருக்கே :)

    பதிலளிநீக்கு
  8. சூப்பர்!! நான் பீட்சா தோசை (காய்கறிகள் தூவி தோசை மேல் மூடி செய்வது), தக்காளி (அரைத்த) தோசை, கொத்தமல்லி (அரைத்த) தோசை என்று ட்ரை பண்ணியிருக்கிறேன் - திடீர் விருந்தாளிகளுக்கு வெறும் தோசை வார்த்துப் போட்டால் எப்படின்னு :-)) @நெல்லைத்தமிழன்- இட்லிக்குள் மிளகாய்ப்பொடி எல்லாம் காரம் பத்தலை!

    பதிலளிநீக்கு
  9. நல்ல ஆலோசனை. அடுத்த தடவை செய்து பார்த்து விடுகின்றேன்.

    பதிலளிநீக்கு
  10. ஆகா!
    அருமையான படையல்
    சிறந்த செய்முறை வழிகாட்டல்

    பதிலளிநீக்கு
  11. செய்து பார்க்க வேண்டியதுதான் கோதுமை மாவு தோசையில் செய்யலாமா

    பதிலளிநீக்கு
  12. மசாலாவை கண்ணில் பார்க்காமல், மசாலா தோசையா !!! நெனக்கவே கஷ்டமா இருக்கு. மசாலா சுவையாக இல்லை என்றால், தோசையை வெட்டு - என்று தோசை சாப்பிடுவேன். தோசை சொகமில்லே என்றால், மசாலாவை மட்டும் லாவுவேன். ஆகையால், எனக்கு வேண்டாம் இந்த கலர் தோசை!

    பதிலளிநீக்கு
  13. இரண்டு வேகவைத்த உருளைக்கிழங்கையும் சேர்த்து அரைத்திருக்கலாம். நான் அடைக்கு அரைக்கும்போது இப்படி எல்லாவற்றையும் போட்டு அரைத்து மெல்லியதாக வார்ப்பதுண்டு. காய்களும் போட்டு அரைக்கலாம். என்ன இது என்று கேட்டால் ஸர்வம்பக்ஷ்யாமி,ஸாகரம் பக்ஷ்யாமி என்று சொல்வேன்.
    ரொம்ப நன்றாக உங்களின் தோசை,காரஸாரமாக,போதாதென்று இன்னும் உரைப்பு சேர்த்து அட்டஹாஸம் போங்கள். கண்ணில் ஜலம் வந்துவிடும் போலுள்ளதே. வயதானவர்கள் இதெல்லாம் கண்டுகொள்ளக்கூடாது என்கிறீர்களா?அரிசிமாவு, மைதா,ரவைகரைத்தும், துளி கடலைமாவு இதெல்லாம் சேர்த்தும் செய்யலாம். வந்தாரைக் கொள்ளும் இந்த மகராஜன் கப்பல். உங்கள் மஸால் தோசைக்கு இந்த வர்ணனை பொருந்தும். ஜமாயுங்கள். அன்புடன்

    பதிலளிநீக்கு
  14. எனக்கு இப்ப இருக்கிற உடல் நிலைக்கு யாராவது செய்து கொடுத்தால் சாப்பிடலாம். மஹா சூப்பர் ஐடியா ஸ்ரீராம், நல்ல காரமோ. காமாட்சி சொல்வது போல நான் தள்ளி நின்னே பார்க்கிறேன். ஜமாயுங்கள்.

    பதிலளிநீக்கு
  15. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார். வாருங்கள் சாப்பிடலாம்!

    பதிலளிநீக்கு
  16. நன்றி பாரதி. இங்கு வரும்போது நேரிலும் சுவைக்கலாம்!

    பதிலளிநீக்கு
  17. நன்றி நெல்லைத்தமிழன். சட்னி கலந்தால் நன்றாயிருக்காது. சுவையில் வித்தியாசம் தெரிய புளிப்போ, காரமோ ஏதாவது ஒரு சுவை தூக்கலாக இருக்க வேண்டும். மிளகாய்ப்பொடியை மேலாகத் தூவி தோசையைத் திருப்பாமல் எடுப்பதுண்டு. அடுத்த வார திங்கட்கிழமை பாருங்கள்!

    பதிலளிநீக்கு
  18. நன்றி மதுரைத்தமிழன். நெல்லையும் மதுரையும் அடுத்தடுத்துப் பின்னூட்டம்! நீங்கள் சொல்வது போல முன்பொருமுறை குழம்பு வைத்திருக்கிறோம் நாங்கள்!

    பதிலளிநீக்கு
  19. நன்றி கோமதி அரசு மேடம். எங்கள் நீளமான தோசை புராணம் பதிவுகள் முன்...பு படித்திருப்பீர்கள். அதில் மற்றும் அப்புறம் பிட்சா தோசை ஆகியவற்றில் காய்கறிகள், வெங்காயம் போட்ட தோசைக்கல் செய்ததைச் சொல்லியிருந்தேன். இட்லியிலும் முயற்சித்திருக்கிறேன். வெங்காயத்தை வதக்காமல் அப்படியே பூவாய் தோசை மேலே தூவினால் தனி ருசி. மாவில் கலந்து வார்த்தால் அது வேறு ருசி!

    பதிலளிநீக்கு
  20. நன்றி பகவான்ஜி! இன்னும் நிறைய தம்பிகள் இருக்கிறார்கள்!!

    பதிலளிநீக்கு
  21. வாங்க மிடில்க்ளாஸ்மாதவி.. நானும் நீங்கள் சொல்வது போல தோசை செய்வதுண்டு. அக்டொபர் 17 பதிவையே பாருங்களேன்! அடுத்த வாரம்...

    பதிலளிநீக்கு
  22. நன்றி நண்பர் அசோகன் குப்புசாமி.

    பதிலளிநீக்கு
  23. நன்றி நிஷா. வித்தகர் வாயால் பாராட்டு!

    பதிலளிநீக்கு
  24. நன்றி ஜி எம் பி ஸார்.. கிண்டாமல் எடுபட்டால் எதில் வேண்டுமானாலும் செய்யலாம்.

    பதிலளிநீக்கு


  25. நன்றி கேஜிஜி... சாப்பிட்டுப் பார்த்தால் விட மாட்டீர்கள்.. இதை மட்டுமல்ல.. அடுத்த வாரம் பாருங்களேன்.. அதைக்கூட....!

    பதிலளிநீக்கு
  26. நன்றி காமாட்சி அம்மா. உருளைக்கிழங்கு போட்டால் மெலிதாக வருமா, எடுபடுமா என்று சந்தேகம் வந்தது. மைதா தோசை போல, அல்லது ஆளு பரோட்டா போல ஆகிவிடுமோ என்ற சந்தேகமும் இருந்தது. எனவே அதைச் சேர்க்கவில்லை! காரமோ, புலிப்போ தூக்கலாக இலா விட்டால் சுவையில் பெரிய மாறுதல் தெரிய மாட்டேன் என்கிறது!

    பதிலளிநீக்கு
  27. நன்றி வல்லிம்மா. அடுத்த வாரம் பாருங்கள்!

    பதிலளிநீக்கு
  28. வெங்காயம் வதக்காமல் பச்சையாய் நானும் வெங்காய ஊத்தப்பம் செய்து கொடுப்பேன் சாருக்கு.
    நீங்கள் சொல்வது போல் தனி ருசிதான்.

    பதிலளிநீக்கு
  29. கௌதமன் அவர்களைக் கன்னாபின்னாவென்று ஆதரிக்கிறேன். :)))

    பதிலளிநீக்கு
  30. அட! ஸ்ரீராம் உங்க வீட்டுல சின்ன புள்ளைங்க நீங்க தானா...ஹஹஹஹ் என் பையனுக்குச் சின்ன வயசுல இப்படி எல்லாம் ஏமாத்திக் கொடுத்ததுண்டே....ரெட் தோசை, க்ரீன் தோசை, ப்ரௌன் தோசை....இப்படிப் பல பல பெயர் சொல்லி....காய் பேர் சொன்னா போச்சு....நல்லா இருக்கு உங்க ரெசிப்பி....

    கீதா

    பதிலளிநீக்கு
  31. கலர் கலரா தோசை எல்லாம் என் பையன் காலத்தோட சரியா போச்சு. சிவப்பு தோசை, பச்சைத் தோசை, ஆரஞ்சு தோசை என்று கலர் கலர் வாட் கலர் அப்படினு மகனுக்காக காய்களை ரகசியமாக அரைத்துக் கலந்து...என்று ..இப்போது அவன் என்னைக் கேலி செய்வது வழக்கம்...அம்மா என்னை எப்படி எல்லாம் ஏமாத்தியிருக்கமா...நானும் பாவம் புள்ளையா அப்பாவியா இருந்துருக்கேன் பாரு...

    நல்ல குறிப்பு..பார்க்கவும் அழகா இருக்கு...

    கீதா

    பதிலளிநீக்கு
  32. முந்தைய கமென்ட் என்னாச்சுனு தெரில...சரி விடுங்க காக்கா உஷ்.

    உருளைக் கிழங்கு அரைத்து செய்வது நன்றாக இருக்கும் ஸ்ரீராம். கொஞ்சம் மொறு மொறுவென்றும் வரும். ஆறினால் பஜ்ஜி போல சவ சவ என்று இருக்கும். சூடாகச் சாப்பிட நன்றாக இருக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!