திங்கள், 22 ஜூன், 2020

"திங்க"க்கிழமை  : மைசூர் ரசம் - ரமா ஸ்ரீநிவாசன் ரெஸிப்பி 

மைசூர் ரசம்
ரமா ஸ்ரீநிவாசன் 


கோவிட் 19 தாக்கத்தால் வீட்டில் நாமே சமையல் என்று ஆகி விட்ட படியால், புது ரச, உணவு மற்றும் பதார்த்த வகைகள் முயன்று பார்க்கும் வாய்ப்பும் நேரமும் கிடைத்ததால், இதோ என்னுடைய ரெசிப்பி. இதன் பெயர் “மைசூர் ரசம்”. உங்கள் வீட்டிலும் முயன்று பாருங்கள்.  வித்தியாசமாக இருக்கும்.

தேவையான பொருட்கள் :

நல்லெண்ணை : 2 டீ ஸ்பூன்
புளி : ஒரு எலுமிச்சைப் பழம் அளவு
துவரம்பருப்பு : 100 கிராம். (நன்றாக குக்கரில் வேக வைத்தது)
பெருங்காயம் : 1 டீ ஸ்பூன்
தனியா : 2 டீ ஸ்பூன்
கடலை பருப்பு : 4 டீ ஸ்பூன்
சிவப்பு மிளகாய் : 4
துருவிய தேங்காய் : 2 – 3 டீ ஸ்பூன்
முழு கருப்பு மிளகு : 8
வெல்லம் : 2 டீ ஸ்பூன்
உப்பு : உங்கள் சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு :
நெய் : 2 டீ ஸ்பூன்
கடுகு : 1 டீ ஸ்பூன்
சிவப்பு மிளகாய் : உடைத்த ஒன்று
கருவேப்பிலை : 1 கொத்து

செய்முறை :
துவரம்பருப்பை நன்றாக குக்கரில் இலை இலையான பதத்திற்கு வேக வைத்துக் கொள்ளவும். இது குழையக் கூடாது என்பது மிக முக்கியம்.




இப்போது, புளியை நீரில் நன்றாக கரைத்து, வேண்டிய அளவிற்கு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

இன்னொரு வானலியில் எண்ணையை சுட வைத்து, தனியா, கடலை பருப்பு, சிவப்பு மிளகாய், தேங்காய் துருவல் மற்றும் பெருங்காயத்தை சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ளவும்.  நல்ல வறுத்த தேங்காய் மற்றும் பருப்புகளின் மணம் வந்ததும் கீழே இறக்கி ஆற வைக்கவும். இவை யாவும் நன்றாக ஆறிய பின், மிக்ஸியில் தண்ணீர் கலந்து மென்மையாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.



புளித் தண்ணீரில் பச்சை வாசம் மறைந்த பின், வேக வைத்த துவரம்பருப்பு கலவையை சேர்த்துக் கொதிக்க விடவும்.

இதனுடன் அரைத்த விழுதையும் சேர்த்துக் கலந்து நன்றாக கொதிக்க விடவும். உங்களுக்கு வேண்டிய அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

சிறிது வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்தால், ருசி அதிகரிக்கும்.  தனியாக இன்னொரு வாணலியில் நெய்யை சுட வைத்து கடுகு, ஒரு சிவப்பு மிளகாய், கருவேப்பிலை யாவையையும் வறுத்து, கொதிக்கும் ரசத்தின் மேல் விட்டு அடுப்பை அணைக்கவும்.




சாதத்தின் மீது கெட்டி நெய் விட்டு சுடச் சுட ரசத்தை பரிமாறவும். இதனுடன் பருப்பு துவையல் சாப்பிடுவதற்கு மிக ருசியாக இருக்கும்.

இதில் என்ன விஷேஷம் என்றால், பாத்திரத்தின் அடியிலிருந்து கரண்டியால் எடுத்தால், குழம்பு போலவும், தெளிவாக மேலிருந்து எடுத்தால், ரசமாகவும் உண்ணலாம்.  ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.



நண்பர்களே, மிக ருசியாக இருந்ததால், உங்களுடன் பகிர்கிறேன்.

51 கருத்துகள்:

  1. தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்...

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் அன்பின் வணக்கம்...

    பதிலளிநீக்கு
  3. ரசம் ரிசிப்பி அருமை படங்களும்தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரெசிப்பியையும் படங்களையும் விடுங்கள். சமைத்து உண்டு பாருங்கள். உங்களுக்கு கண்டிப்பாகப் பிடிக்கும்.

      நீக்கு




    2. ரசம் எங்களுக்கு பிடித்ததில் ஒன்று அதனால் கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் ....

      நீக்கு
  4. அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். இனியானும் தொடர்ந்து நல்ல செய்திகளே ஆக்கிரமிக்கப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னைக்கு போட்டிருக்கும் மைசூர் ரசமே நல்ல செய்திதான்னு நான் நினைத்தேன். ஹா ஹா

      நீக்கு
    2. மிக்க நன்றி நெல்லை சார்.

      நீக்கு
  5. முதல்லே "வெள்ளம்"னு வந்திருக்கிறதை எல்லாம் "வெல்லம்"னு யாரானும் மாத்துங்கப்பா! வெள்ளம் என்றால் அதிக நீர்ப்பெருக்குனு தமிழிலேயே குடிக்கிற குடிநீர் என மலையாளத்திலேயும் வரும். இங்கே ரசத்தில் "வெல்லம்" தான் போடணும். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)))))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மைசூர் ரசத்தில் வெல்லமா? சட் என்று ஆட்கள் அதிகமா வந்துட்டாங்கன்னா வெள்ளம் ஜாஸ்தி சேர்த்துவிடுங்கள் என்று சொல்றதுக்காக எழுதியிருப்பாரோ?

      நீக்கு
    2. நெல்லை சார், எங்கள் அகங்களில் ரசத்திற்கு எப்போதும் ஓர் ஸ்பூன் சர்க்கரையும் குழம்பில் ஓர் சிறு கட்டி வெல்லமும் சேர்ப்போம்.

      நீக்கு
  6. என் மாமியார் இப்படித்தான் மைசூர் ரசம்னு வைப்பாங்க. ஆனால் பருப்புக் குழையும். அதோடு எல்லாவற்றையும் தே.எண்ணெயில் தான் வறுப்போம். மற்றபடி செய்முறை இதேதான். அவங்களும் வெள்ளம் சேச்சே, வெல்லம் சேர்ப்பாங்க. அன்னிக்கு வீட்டில் சாம்பார் இருக்காது. காய்களும் பண்ணாமல் தே.எண்ணெயிலேயே அப்பளம் பொரிப்பாங்க. அங்கே தே.எண்ணெய்க்குப் பஞ்சமே இல்லை. டின் டின்னாக ஆட்டி வைச்சிருப்பாங்க. தென்னந்தோப்புக்கள் 2,3 இருந்தன. எல்லாவற்றிலும் நூற்றுக்கு மேல் தென்னை மரங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு கீதாமா,
      ஹாஹா. இனிய காலை வணக்கம். அன்பு துரைக்கும்
      இனிய நாளுக்கான வாழ்த்துகள்.
      மீண்டும் வருகிறேன்.

      நீக்கு
    2. கீதா, என் மாமியாருக்கு தே.எண்ணெய் அலர்ஜி. ஆகவே, ந.எண்ணெய்.

      நீக்கு
    3. ஆமாம், சிலருக்குத் தே.எ. ஒத்துக்காது என்பார்கள். நான் சமையல் எல்லாம் ந.எ. தான். இம்மாதிரிக் குறிப்பிட்ட சமையல்களுக்குத் தே.எ.

      நீக்கு
  7. வழக்கம்போல் என்னோட செய்முறை தனீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ! ஆனால் நானும் தேஎண்ணெயில் தான் வறுத்துப்பேன். என்ன ரசம் கொஞ்சம் நீர்க்க ரசமாக இருக்கும். மி.வத்தல், துபருப்பு, மிளகு, தேங்காய்த்துருவல், பெருங்காயம் தே.எண்ணெயில் வறுத்து அரைத்துக்கொண்டு பருப்பு ஜலத்தால் விளாவுவேன். அதென்னமோ ரசத்தில் பருப்பை அப்படியே சேர்த்தால் அதை ரசம்னு சொல்ல மனசு வரதில்லை. :))))))))))வறுத்து அரைப்பதில் துவரம்பருப்புச் சேர்த்தால் ரசம் நீர்க்க வரும். கடலைப்பருப்புச் சேர்த்தால் கெட்டியாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது ஏன் பருப்பு சேர்த்தால் ரசம்னு சொல்ல மனம் வராது? நீங்களும் இதுமாதிரி பண்ணுங்க. மாமா, சாப்பிட உட்காரும்போது ரசம் வேணுமா தக்காளி மட்டும் போட்ட சாம்பார் வேணுமான்னு கேளுங்க. ரசம்னா மேல, சாம்பார்னா கீழன்னு தட்டுல போடலாமே. டூ இன் ஒன். இந்த திப்பிசம்னாம் நான் கீசா மேடத்துக்குச் சொல்லவேண்டியிருக்கே. (நான் வரும்போது எனக்கு இப்படிப் பண்ணிடாதீங்க)

      நீக்கு
    2. ரசத்தில் பருப்பைப் போட்டு அத்தனையும் அடி மண்டியாக ஆகிக் கீழே கொட்டும்போது கண்ணில் ரத்தம் வரும். மாமியார் வீட்டில் சாம்பாரோடு சேர்த்துடுவாங்க. எங்களுக்கு/எனக்கு அந்த ருசி பிடிக்கிறதில்லை. நான் பருப்பே கொஞ்சமாய்த் தான் போடுவேன். ரசத்துக்கு மட்டும் பருப்பு எனில் அரைக்கரண்டி போட்டுட்டு அன்னிக்கு ஏதேனும் பருப்புக் கூட்டாக வைச்சுட்டால் பருப்புக் கரைத்த நீர் ரசத்துக்கும் பருப்புச் சக்கை கூட்டுக்கும் போயிடும். கெட்டியாக ரசம் இருந்தால் பிடிக்கிறதில்லை. கெட்டி ரசம் விட்டுக்க நேர்ந்தால் இரண்டு கரண்டி ஊற்றிக் கொண்டு மேலே ஜலத்தைச் சேர்த்துப்பேன்.

      நீக்கு
  8. இன்னொரு முறையில் மி.வத்தல், தனியா, வெந்தயம், ஜீரகம், கருகப்பிலை, தே.துருவல் கொஞ்சம் போல ஆகியவற்றை தே.எண்ணெயில் வறுத்து அரைத்தும் ரசம் பண்ணலாம்.இது ஒரிஜினல் கர்நாடக(மங்களூர்) ரசம் ஆகும். உடுப்பி ரசம் என்னும் பெயரில் வெங்கடேஷ் பட் ஒரு முறை செய்து காட்டினார். இதுவும் ரசம் கொஞ்சம் நீர்க்க வரும். பருப்பு ஜலம் தான் விடுவார். அவரும் வெல்லம் சேர்ப்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் நினைத்தேன் அதே ரசத்தை மைசூர்ல செய்தா மைசூர் ரசம்னும், உடுப்பில போய் செய்தா உடுப்பி ரசம், பெங்களூரில் பெங்களூர் ரசம்னு நினைத்தேன்.

      நீக்கு
    2. மைசூர் ரசம்னு ஹொரநாட்டில் எல்லாம் சாப்பிட்டது, உடுப்பியில் சாப்பிட்டது எல்லாம் வேறே மாதிரி இருந்தன.

      நீக்கு
  9. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  10. மைசூர் ரசம் படங்களும் விளக்கங்களும் மிக அருமை.
    நன்றி ரமாஸ்ரீ.

    எங்கள் வீட்டில் மைசூர் ரசத்துக்கு தேங்காய் உண்டு,.
    பருப்பு ஜலமும், மற்றவைகளை வறுத்து அரைத்து

    ரசமே அடர்த்தியாக இருக்கும்.
    கருவேப்பிலைமணத்தோடு கொஞ்சம் தண்ணீர் கலந்த
    குழம்பு போல மிக ருசியாக செய்வது வழக்கம்.

    தாளிக்க தேங்காய் எண்ணெய்.
    ஒவ்வொரு வீட்டில் ஒவ்வொரு மாதிரி செய்முறை.
    நல்லதொரு ரசம்+சாதம் சாப்பிட்ட திருப்தி.
    நன்றி ஸ்ரீராம். இனிமையான நாளுக்கான வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  11. இந்த Two in one மைசூர் ரசத்தை செய்து ருசிக்க வேண்டும்... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கங்கா கௌரி படத்தில லியோனி சொல்வார் மேலாட்டில கலக்கினா மோரு, கீளாட்டில கலக்கினா தயிரு. டூ இன் ஒன்னு. அது மாதிரி இது ஒரு தினுசு போல. செஞ்சு பார்க்கலாம்.

      நீக்கு
    2. துரை அண்ட் டி.டி. சார், செய்து உண்டு பாருங்கள். மிகவும் நன்றாக இருக்கும்.

      நீக்கு
  12. மைசூர் ரசம் என்றால் சற்று இனிக்குமா மேடம்? இனிக்கும் ரசம் புதிது எங்களுக்கு. அம்மாவை நச்சரித்து செய்ய வைத்து பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு மாதிரியான உப்பும் புளிப்பும் காரமும் அதே சமயம் இனிப்பும் சேர்ந்த ருசி.

      நீக்கு
  13. கடைசிப்படம் மோர்க்குழம்பு போலவே இருக்கிறதே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லர்ஜீ சார், அது flash போட்டு எடுத்து விட்டேன். அனுப்பும்போதே நினைத்தேன். இன்று டி.டி. வாயிலோ கில்லர்ஜி வாயிலோ விழுவேன் என்று. பலித்து விட்டது.

      நீக்கு
  14. இங்கயே முன்னால ஒரு மைசூர் ரசம் வந்திருக்கே. அதில் வெல்லம் போடலையே

    பதிலளிநீக்கு
  15. மைசூர் ரசம் செய்முறை போட்டு மீண்டும் ரொம்ப மாதங்களுக்கு அப்புறம் மைசூர் ரசம் செய்யணும்னு ஆவலைத் தூண்டிவிட்டீர்கள் ரமா ஶ்ரீநிவாசன். விரைவில் செய்துடவேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
  16. நாங்கள் யாவரும் நல(ள) பாகிகள் சார். எந்த ல, ள வென்று தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @Ramah Srinivasan, "நளபாகி" தான் சரி. ஆனால் சமையலில் நளபாகம் எனில் அடுப்பில் வைக்காமல் சமைப்பதைக் குறிக்கும்.

      நீக்கு
  17. ரசம் நல்லா வரலைன்னா பகிர்ந்திருக்க மாட்டீங்களோ?!

    பதிலளிநீக்கு
  18. ஏப்ரல்ல செய்த ரசத்தை ரொம்ப ஆறிப்போனப்பறம் ஜூன் கடைசில பரிமாறுகிறீர்களே.. இது தப்பில்லையோ?

    பதிலளிநீக்கு
  19. மைசூர் ரசம் எங்கள் வீட்டிலும் செய்வதுண்டு. நன்றாகவே இருக்கும்.

    சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  20. மைசூர் ரசம் நல்ல ரெசிப்பி ரமா. நம் வீட்டிலும் செய்வதுண்டு. நன்றாக எழுதியிருக்கீங்க.

    கீதா

    பதிலளிநீக்கு
  21. இதே மைசூர் ரசத்துல புளிக்குப் பதிலா எலுமிச்சை பிழிந்தும் செய்வதுண்டு.

    து ப வறுத்தும் செய்வதுண்டு. அப்புறம் இதெல்லாம் வறுத்துவிட்டு ஜீரகம் வறுக்காமல் சேர்த்தும் செய்வதுண்டு.

    பங்களூர் ரசம் என்றும் ஒரு ரெசிப்பி உண்டு. எபி க்கு அனுபியிருக்கேனா என்று தெரியவில்லை நினைவில்லை.

    இதெல்லாமே என் சித்தி இங்கு பங்களூரில் இருந்த போது அவர்கள் கேட்டரிங்க் செய்து கொண்டிருந்தாங்க கொஞ்ச வருடங்கள் அப்ப கற்றுக் கொண்டது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பங்களூர் ரசம் எ.பி.க்கு அனுப்பியிருக்கிறீர்கள் கீதா.

      நீக்கு
  22. மைசூர் ரசம் நன்றாக இருக்கிறது.செய்முறை குறிப்பும் நன்றாக இருக்கிறது.
    கடலைபருப்புக்கு பதிலாக துவரம் பருப்பு சேர்த்து செய்வேன்.
    படங்கள் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  23. மைசூர் ரசம் என்றால் தொட்டுக்கொள்ள பொரித்த அப்பளம் அல்லது உ.கி.கறி. நான் துவரம் பருப்புதான் வறுப்பேன். ரசத்தின் மேல்"கொத்துமல்லி கிள்ளிப்போட மறந்து விட்டீர்களே ரமாஶ்ரீ

    பதிலளிநீக்கு
  24. மைசூர் ரசம் என்றால் லா.ச.ரா.எழுதியிருந்த ஒரு விஷயம் நினைவுக்கு வரும். அவர் பங்களூர் சென்ற புதிதில் ஹோட்டலுக்கு சாப்பிடச் செல்லும் பொழுது தினமும் சர்வர் ரசத்தை தெளிவாக விடுவா? கலக்கி விடவா? என்று கேட்பாராம். தினசரி கேட்கிறானே என்று ஒரு நாள் "கலக்கி விடு" என்றாராம். அதை சுவைத்தப் பிறகு,தினசரி ரசம் சாதத்தை"தெளிவாக ஒரு முறையும், கலக்கி ஒரு முறையும் சாப்பிடுவாராம்.

    பதிலளிநீக்கு
  25. //கோவிட் 19 தாக்கத்தால் வீட்டில் நாமே சமையல் என்று ஆகி விட்ட படியால்,// நம்ம வீட்டில் தினமுமே நம்ம கை பாகம்தான். நடுவில் மருத்துவர் சொன்னாரேனு காடரிங்கில் வாங்கிக் கொண்டிருந்தோம். இப்போ அம்பேரிக்காவில் இருந்து வந்தப்புறமாக் கொஞ்ச நாட்கள் கொடுத்தாங்க! அதோட கொரோனாவும் வந்தாச்சு! ஆல் இன் ஆல் நான் தான்!

    பதிலளிநீக்கு
  26. http://geetha-sambasivam.blogspot.com/2019/10/blog-post_4.html

    http://geetha-sambasivam.blogspot.com/2019/10/blog-post_3.html

    மேற்கண்ட சுட்டிகளில் என்னோட மைசூர் ரசம் செய்முறைகளைப் பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!