செவ்வாய், 16 ஜூன், 2020

கேட்டு வாங்கிப் போடும் கதை : தலைமுறை இடைவெளி - ஜீவி

எச்சரிக்கை:   இந்தக் கதை  55  வருடங்களுக்கு முன்  பிரபல பத்திரிகை  ஒன்றில் பிரசுரமான  கதை.  மனித மன உணர்வுகள்  என்னவாக  இருந்தாலும்  அதை அச்சு அசலாகப் பிரதிபலித்த  எழுத்துக்கள்  சிறந்திருந்த காலம் அது.  அதனால் தான்  அம்மா வந்தாள் போன்றவான எந்தப் பொய்மைப் போர்வையைப்  போட்டும்  போர்த்தி மறைக்கத் தேவையில்லாத  கதைகள்  வாசகர்களின்  வாசிப்புக்கு உள்ளாகின.   இப்பொழுதோ   கதா பாத்திரங்களின் உணர்வுகளை  அவர்தம் உரையாடல்கள்  மூலம் வெளிப்படுத்தாத,  ஏதோ விக்கிரமாதித்தன் கதையை  குழந்தைகளுக்குச் சொன்ன அந்நாளைய பாட்டிமார்கள் போல எழுத்தாளர்களும்  கதை சொல்லிகளாகி விட்டனர்.
  
இந்நாளைய பத்திரிகைப் பிரசுர  கதைகளுக்கு   எவ்வளவு மாறுபட்டு  அந்நாளைய கதைகள் இருந்திருக்கின்றன  என்பதற்கு ஒரு  சாம்பிள்   இந்தக்  கதை.  அம்மி,,  பாவாடை -  மேலாக்கு,  தேங்காய்ச் சில்,   பாத்ரூம் செம்பு --  இவற்றின் ஊடே தான் இன்றைய வாழ்க்கைப் போக்கும்  வளர்ந்து வந்திருக்கிறது  என்பது என்னவோ  உண்மை.

வாசித்து விட்டுச் சொல்லுங்கள்.

                                                                                ---  ஜீவி

=====================================================================


                                                     தலைமுறை  இடைவெளி


ஜீவி

வர் ஆபிஸுக்குப் போய் விட்டார்.

ஒருவழியாக சமையலறைக்  காரியங்கள் எல்லாம்  முடிந்தன.  நெற்றியில் ஆறாக வழிந்த வியர்வையைப் புடவைத் தலைப்பால்  துடைத்துக் கொண்டவள்,  தலைமுடியைக் கோதி விட்டுக் கொண்டே கூடத்துப்  பக்கம் வந்தேன்.

கால்கள் கெஞ்சின.  ஊஞ்சல் பலகை  'உட்கார வா'  என்று அழைப்பது போல லேசாகக் கிறீச்சிட்டுக் கொண்டிருந்தது.  

படபடவென்று  வாசல் கதவை யாரோ  தலைபோகிற அவசரத்தில் இடித்தார்கள்.

யாராக  இருக்கும்?..

சத்தியமாக  'அவர்'  இல்லை.  ஆள் காட்டி விரலைக் குவித்துக் கொண்டு  'டொக் டொக்'கென்று தட்டுவது தான் அவர் வழக்கம்.

ராணியாகவும்  இருக்காது.  பள்ளிக்கூடம் விடும் நேரம்  இன்னும்  ஆகவில்லை....   பின்?..

தோட்டத்துப் பக்கம் மண்டை வீங்க  காக்காய் ஒன்று கத்திக் கொண்டிருந்தது.   யாராவது   விருந்தினர்கள்   வருகிறார்களோ?..   அம்மா கூட இந்தப் பக்கம் தலை காட்டி  ரொம்ப நாளாச்சு.   வரச்சொல்லி ஒரு வாரத்திற்கு முன்பு தான் போனில் சொல்லியிருந்தேன்.  முடிந்தால் பார்க்கலாம் என்று  சொன்னாள்.  ஒருக்கால்  அவள்தானோ?..

"அம்மா...  அம்மா...  கதவைத்  திறவேன்?....."

எனக்கு  ஒரே வியப்பு.   கதைவை விரியத் திறப்பதற்குள்  கதவுக்கும் எனக்கும் இருக்கும் இடுக்கில்  நுழைந்து கொண்டு  என் அருமை  மகள் ராணி  உள்ளே  நுழைந்தாள்.

தாமரை முகத்தில்  குறுகுறுவென்று  கருவண்டுகள்  மாதிரி  கறுப்பு விழிகள்.  அலாதியான  ஜ்வலிப்புடன்  சுழித்தன.  உதடுகளில்  இளமைத் தனத்திற்கே  உரிய  படபடப்பு.   என் அம்மா அடிக்கடி சொல்வாள்,  'உன்னை அப்படியே  உரிச்சு  வைச்சிருக்காடி,  என் பேத்தி'ன்னு.   நானும்  அந்த வயதில் இப்படித் தானா இருந்திருப்பேன்  என்பதை நினைக்கும் போதே  நெஞ்சு  இனித்தது.

"ஏண்டி,  ஏன் இவ்வளவு  சீக்கிரம்?..  இப்போத்தானே   பதினோறு  மணி  அடிச்சது?.."

நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்வதற்கு  ராணி  கூடத்துப் பக்கம்  இருந்தால் தானே?..  ஒரே ஓட்டம் தான்.  வேறு எங்கே?..  இவளுக்கென்று
ஒரு  கொல்லைப்புறம் வாய்த்திருக்கே!...

எல்லாம் அவர் செய்த வேலை.  ஒரு  மாசத்துக்கு  முந்தி  யாரோ  கொடுத்தார்களென்று  ரோஜாச் செடியொன்றை  வாங்கி  வந்து தோட்டத்தில் நட்டாலும் நட்டார்,  வந்தது வினை.    கால் வருடத்  தேர்வில்  ராணியோட மார்க்  இங்கிலீஷிலே  திடீர்ன்னு  குறைஞ்சதுக்குக்  காரணம்  என்னவென்றால்  இந்த ரோஜாச் செடிதானென்று அடிச்சுச்  சொல்வேன்.

பின்னே என்ன?..  ஒன்பதாவது வகுப்பு படிக்கிற பெண்ணொருத்திக்கு  எந்த நேரமும் இந்த செடியைப் பற்றித் தான்  நினைப்பு என்றால், எனக்கு  ஆத்திரம் பொங்காதா,  என்ன?..  இந்த லட்சணத்திலே  கெட்ட கேட்டுக்கு   அல்ஜிப்ரா மேத்ஸ்  வேறே.

ஒரே வாரம் தான்.  என்னுடைய நேரடி பாதுக்காப்பிலே  இந்த ராணியை மட்டும்  அவர் விட்டுவிட்டாரென்றால்  எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றி விடுவேன்.  ஆனால் ஒன்று மட்டும் இப்பொழுதே சொல்கிறேன்.,   ராணியை மட்டும் என் வழிக்கு  கொண்டு வ்ர வேண்டுமென்றால்,   முதல்லே  என்ன செய்வேன் தெரியுமா?... விடுவிடுவென்று   கொல்லைப்புறம்  போய்   வேரோட  அந்த  ரோஜாச் செடியைப்  பிடுங்கி  பக்கத்து  வீட்டுக்கு தானம்  பண்ணி விட்டுத் தான்  மறுவேலை.

இப்பொழுதே  அந்தக்  காரியத்தைச் செஞ்சிடுவேன்....  ஆனால்  இவளுக்கு   அவள்  அப்பா  செல்லம்  ஜாஸ்தி.   அப்படி   இப்படியென்று ஏதாவது ஒன்றென்றால் இந்த ராணி  குய்யோ முறையோ  கத்தி  வீட்டையே  ரெண்டாக்கிடுவாள்!..  அவர்  ஆபிஸிலிருந்து வந்தவுடனேயே  முகாரி ராகத்திலே   பிலாக்கணம்   பாட ஆரம்பித்தாள்  என்றால்  அவர் குதியோ  குதியென்று  குதிக்க,  சும்மாக் கிடந்த சங்கை ஊதிக் 
கெடுத்தாற்போல...  ராமா .. ராமா,  வேண்டாம்ப்பா  வேதனை!..

சப்தம் போடாமல்  ரேழி பக்கம் சென்று  அம்மிக்கல் பக்கம் நின்று  எம்பிப்  பார்த்தேன்.  ரோஜா செடி பக்கம் ராணியைக் காணோம்.    எங்கே போய் விட்டாள்,  இந்த காலகண்டி?..

பாத்ரூம்  சுவரின் மேல் வைக்கப்பட்டிருந்த  பித்தளைச்  செம்பு  தட்டுப்பட்டது.  'ஓகோ'வென்று தலையை ஆட்டிக் கொண்டே  உள்ளே வந்தேன்.

ஊஞ்சல்  கிறீச்சிட்டது.

அதன் அழைப்பை ஏற்காமல் இருக்க மனம் வரவில்லை.  வெற்றிலையில் சுண்ணாம்பைத் தடவியபடியே அமர்ந்தேன்.

ஒரு விதத்தில்  ராணியை  நினைக்கப் பெருமிதமாகத் தான் இருந்தது.  எப்படி  நெடு நெடுவென்று வளர்ந்து விட்டாள்!   சரியாக என் தோளுக்கு வருகிறாள்.  அவள் அப்பாவைப் போலவே  கொஞ்சம் வளர்த்தி தான்!..  போன வருஷம் நான் பார்த்த ராணி இல்லே,  இப்போது.    எனக்கே ஆச்சரியமாகத் தான் இருக்கிறது.  நேற்று முகத்தைப்  பிடித்து  நெற்றியில் அவளுக்கு ஸ்டிக்கர் பதிக்கும் போது ரெண்டு பருக்கள் கூட கையில் உறுத்தினவே!..

தோட்டத்துப்  பக்கம் சப்தம் கேட்டது.

திரும்பிப் பார்த்தேன்.  கூடத்திற்குள்ளே 'விடுவிடு'வென்று நுழைந்த ராணி  சுவர்ப்பக்கமாகவே  ஒதுங்கி நடந்து மாடிப் படிகளை நோக்கி விரைந்தாள்.

"ஏண்டி,  ஸ்கூல் விட்டுட்டாளா,  இல்லை, திரும்பியும் போகணுமா?.."

"......................................"

"ஏண்டி,  நான் கேக்கறது காதுலே விழலே?.."

"என்ன கேட்டேம்மா?.."

"என்ன பொண்ணுடி,  பகல்லேயே  தூங்கறயே!  திரும்பியும் ஸ்கூலுக்குப்  போகணும்மான்னு  கேட்டேன்.."

"இல்லேம்மா.. ஒரே வயித்துவலியா இருந்தது.  'லீவ்' கேட்டுண்டு வந்துட்டேன். .."

"என்ன வயித்து வலியா?  காலம்பற என்னடி இத்தனை நாளும் தின்னாததைத் தின்னுட்டே?.. வெறும் உப்புமா தானே?"

"ம்..ம்..." தலையைக் குனிந்து கொண்ட ராணி ஏனோ மாடிக்கு ஓடுவதிலேயே  கவனமாக இருந்தாள்.  அவள் முகம் குங்குமம் போலச் சிவந்திருந்தது..

"ஸ்கூல் வாசல்லே விக்கற கண்டதை  வாங்கிச் சாப்பிடாதேன்னா கேட்டாத்தானே? போதாக்குறைக்குப்  பொன்னியும்  வந்தாளான்னு  இலந்தைப் பழ சீசன் வேறே.  எல்லாம் புழுத்து  நெளியறது;  எவ்வளவு  தின்னையோ?"

"அதெல்லாம்  ஒண்ணும்  இல்லேம்மா.." --  ராணி மாடிப்படிகளில்  தடதடவென்று  ஏறிப் போய் விட்டாள்..

இப்பொழுது தான்  திடீரென்று  சட்னிக்கு  அரைக்க வேண்டுமென்ற  ஞாபகம் வந்தது.  அவருக்குத் தேங்காச் சட்னி  என்றால் உயிர்.

சமையலறைக்குள்  சென்று பொட்டுக்கடலைப்  பொட்டலத்தையும்,  தேங்காய்ச் சில்லையும்  எடுத்துக் கொண்டவள்  கொல்லைப்புறம்  வந்த பொழுது,  பாத்ரூம் செம்பு அங்கேயே இருப்பது  தெரிந்தது.

ராணி எடுத்து வர மறந்திருக்கிறாள்.

'சே!  வயசு தான் தடி மாட்டுக்கு   ஆகிற மாதிரி ஆகிறது.  கொஞ்சம் கூட பொறுப்பு இல்லியே'  என்று சலித்துக் கொண்டே தோட்டப்பக்கம் நுழைந்தேன்,.   செம்பை  எடுத்து வர.    செம்புடன்  திரும்பும்  போது  ..........

துணிகள் உலர்த்தும் கொடியில்  உலர்த்தியிருந்த  ராணியின்  பாவாடை -  மேலாக்கு.

'என்ன இது?  என்றுமில்லாத திருநாளாய்  தன் துணியைத் தானே  கசக்கி உலர்த்தியிருக்கிறாள்?..  அந்த அளவுக்கு அக்கறை இவளுக்கு எங்கிருந்து வந்தது?' என்று நினைத்துக் கொண்டேன்.

பாவாடையைச் சரியாகப் பிழியாமல்  உலர்த்தியிருந்ததினால்  அதிலிருந்து ஈரம் சொட்டிக் கொண்டிருந்தது.   அதை நன்றாகப் பிழிந்து உலர்த்தும்  நோக்கத்தோடு கையில் எடுத்தேன்.

என் உடல் சிலிர்த்து,  நெஞ்சு கிளுகிளுத்தது.  வயிற்றிலிருந்து  மார்பைக் குறி வைத்து இனம் தெரியாத இன்ப வேதனையின் மின்னல் கீற்றொன்று பாய்ந்தது.  

என் கால்களுக்கருகில்  ராணி உயிராகக் கருதி வளர்க்கும்  ரோஜாச் செடியின் காம்பொன்றில்  நேற்று நான் பார்த்த  மொட்டொன்று  இன்று இதழ் விரித்து மலராகச் சிரித்துக் கொண்டிருந்தது.

எனக்கு சின்ன வயசிலிருந்தே  கூச்சம்  ஜாஸ்தி.    'ஏண்டி,  இப்படிச் சின்ன விஷயத்திற்கெல்லாம்  நாணிக் கோணிக்கறேன்னு  அந்த வயசிலே  அம்மா என்னைத் திட்டித் தீர்க்காத  நாளில்லை.   

ராணி என்னோட வயிற்றிலே வளர்வதின் 'அறிகுறி'  தெரிந்ததும்  அதை இவரிடம் சொல்வதற்குள் நான்  பட்டபாடு...  அம்மாடியோ..!  அது அந்த முருகப் பெருமானுக்குத் தான் வெளிச்சம்!

என்னோடு  உடன் பிறந்த கூச்சம் தான் இப்போ மாடிக்கு ஓடிப் போய் ராணியிடம் எதைப்பற்றியும் கேட்க முடியாமலும்,  'அதை'ப்பற்றி அறியாத அவளுக்கு  அதன் இரகசியத்தை  விளக்க முடியாமலும் தடுத்தது.

நேற்று வரை ராணி எனக்குக் குழந்தைதையாகத்  தான்  தென்பட்டள்.  ஆனால் இன்றோ?..  எனக்குச் சமமான ஒரு பெரிய மனுஷியைப் போல் எனக்குள்ளேயே ஓர் உணர்வு....  அவளிடம் போய் முகம் சிவக்க  எப்படி அக்குவேறு ஆணிவேறாக  ஒவ்வொன்றையும்  பிட்டு வைப்பேன்?  வெட்கமா இருக்கே!  கூச்சமா இருக்கே!..

நான் செய்ய வேண்டியது ஒரு தாயின் கடமையாக எனக்குத் தோன்றினாலும்  'சட்'டென்று செயல்பட முடியாமல்  எதுவோ என்னைத் தடுத்தது.  இக்கட்டான இந்த விஷயத்திலிருந்து  தப்பித்துக் கொண்டு விலகியோடவே மனசு விரும்பியது.  இருந்தலும்  என் மகள்?..  கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல், வினோத உண்ர்ச்சிகளின் அவஸ்தையில்..  , தன் தாயிடமே சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தடுமாறி கொண்டிருக்கும் அவள் நிலைமை?..  'இதற்குக் காரணம் என்ன,  இது  எதனால்?'  என்று கூட அறிய முடியாத குழந்தைத் தனம் கொண்டவளாயிற்றே,  அவள்?...

'நானும் இதையெல்லாம்  கடந்து தானே வந்திருக்கேன்' என்று சட்டென்று ஒரு  நினைப்பு.

அந்த வயசில் எனக்கே புரியாத ஒரு நிகழ்வு அது.  குபுகுபுவென்று வெள்ளம் பாய்ந்தது போன்ற உணர்ச்சி.  சின்ன வயசில்  பென்சிலைச் சீவும் போது பிளேடு 'சர்க்'கென்று கையைப் பதம் பார்த்து விடுவது இல்லையா?..  அப்பொழுதெல்லாம் ஈரத் துணியை விரலைச் சுற்றிக் கட்டியது எனக்கு  நினைவிலிருக்கிறது.

எனக்குப் பத்து வயசாயிருக்கும் போது தொடையில் சிரங்கு மாதிரி வந்து, கட்டியாக உருமாறி, திடீரென்று ஒரு நாள் உடைந்து விட்டது.    வலியில் துடிதுடித்துப் போய் விட்டேன்.

டாக்டர் வீட்டிற்கு வந்திருந்தார்;  புண்ணைக்  கீறி 'பாண்டேஜ்' போட்டுக் கட்டி விட்டார். இப்போக் கூட அந்த வடு தொடையில் இருக்கிறது.  பத்து வயசில் கட்டி உடைந்த பொழுது  டாக்டர் சிகித்சை செய்தார். பதினைந்து வயசில்  டாக்டரின் இடத்தில் அம்மா இருந்தாள்.  அவ்வளவு தான் எனக்கு அந்தக் காலத்தில் தெரியும்.  பக்கத்து வீட்டுக்காரர்களையெல்லாம்  அழைத்து வந்து என்னை மணையில் உட்காரவைத்துக் கொண்டாடியது  -- சாயந்தரம்  சிமிலி உருண்டை செய்து  எல்லோருக்கும் வழங்கியது --  இதெல்லாம் ஏனென்று எனக்கு அப்போது தெரியாது.

என்னுடைய  அம்மாவுக்கு அப்பொழுது இருந்த கூச்சமின்மை எனக்கு இப்போது இல்லை.  அதையெல்லாம் விட்டுத் தள்ளூங்கள்.  இன்னும் கொஞ்ச நேரத்தில் ஆபிஸிலிருந்து  'இவர்' வருவரே,  எப்படி 'இந்த' நியூஸை அவரிடம் சொல்வேன்?  என்னோடயே ஜனித்து,  என்னோட இரத்தத்தின் ஒவ்வொரு அணுவிலேயும் இரண்டறக் கலந்து விட்டிருக்கும்  பாழாய்ப் போன கூச்சத்தை எப்படி விரட்டிவிட்டு... ஓ, சத்தியமாக   அது என்னால் முடியாத காரியம்.   இதற்குத் தான் சுதந்திரமாக வாழ்க்கையை நடத்தும் வாலிப உள்ளத்தினரிடையே,  நல்லது - கெட்டது  என்று நடந்தால் அதை நடத்திச்  செல்லப் பெரியவர்கள் வீட்டிலிருக்க வேண்டுமென்று சொல்கிறார்கள் போலிருக்கு.

'இது' ஒரு பெண்ணினுடைய பெற்றோர்கள் பெருமைப்பட்டுக் கொண்டாடக் கூடிய ஒரு  நிகழ்ச்சி தான் என்றாலும் தனி ஆளாய் என்னால் எதுவும் சாத்தியமில்லை., அவர் வந்ததும் என் கூச்சத்தை ஓரங்கட்டி  எப்படியாவது அவரிடம்  சொல்லி  'உள்ளூரிலிருக்கும் அவர் தமக்கையை வரவழைத்து  ராணிக்கு எல்லா நல்லதுகளையும் செய்ய வேண்டும்;  அம்மாவுக்கும் சொல்லி அனுப்ப வேண்டும்'  என்று நினைத்துக்  கொண்டிருக்கும்  போதே, வாசல் கதவை  'டொக்'கென்று தட்டும் சபதம் கேட்டது.

அவர் தான்.

"ராஜலட்சுமிப் பாட்டி இன்னைக்கு ஏனோ சந்தோஷமாயிருக்காப் போல இருக்கே.." என்று நுழையும்  போதே, என்னைப் பாட்டியாக்கிக் கிண்டல் செய்தபடி வந்தார் அவர்.

என்னுடைய உணர்ச்சிகளைப் புரிந்து கொள்வதில் படு சூரர்  இவர்.

'சந்தோஷத்திற்கு வேறு  ஒன்றும் காரணமில்லை.  ராஜலட்சுமி பாட்டிக்குப் பேத்தி பிறக்க வழி பிறந்தாச்சு'  என்று சொல்ல நுனி நாக்கு வரை  வார்த்தை வந்து விட்டது. உதடைக் கடித்து வார்த்தைகளை விழுங்கிக் கொண்டேன்.  எல்லாவற்றிற்கும் இந்தப் பாழும் கூச்சம் தான் காரணம்!

காலை அலம்பிக் கோண்டு ஊஞ்சலில் வந்து உட்கார்ந்தார் அவர்.  எதைச் சொல்வது, எப்படி  ஆரம்பிப்பது என்று  திகைத்தவளாய் ஊஞ்சல் சங்கிலியைப்  பிடித்துக் கொண்டு நான் நின்றிருந்தேன்.

"இன்றைக்கு என்ன விசேஷம்?..  அடேடே,  முறத்திலே சேமியாப் பொட்டலத்தைப் பிரிச்சு வைச்சிருக்கையே--  இன்னிக்கு  சேமியா பாயசமா?.."  என்று நாக்கை சப்புக் கொட்டிக் கொண்டவர்,  என்னை விஷமத்தனத்துடன் பார்த்தார்.  அவர் புருவங்கள் இரண்டும் நெளிந்து பார்வையிலேயே  என்னை விழுங்கின.  "என்ன விசேஷம்ன்னு கேட்டேனே;  ராணிக்குப்  பிறந்த நாளா,  கார்த்திகை மாசத்திலேன்னா அது வரும்?" 

"இல்லே,  வந்து  ஒண்ணுமில்லே.."

"ஓண்ணுமில்லாத்துக்கா இத்தனை ஏற்பாடு?  என்னான்ன.."  என்றவர்  என்னை இழுத்து ஊஞ்ச்சலில் தன் பக்கத்தில் இருத்திக் கொண்டார்.  முதுகுப் பக்கம் அவர் விரல் ஊர்ந்த  சிலிர்ப்பில்  சிலிர்த்துப் போனேன்.  மாடி ஏறிப் போன பெண் அப்பாவின் குரல் கேட்டு படியிறங்கி வந்து விடப் போகிறாளே என்ற பயம் வேறே.

"ம்.. ஏன் இவ்வளவு  பீடிகை..  நானே சொல்லட்டுமா?..  இன்னைக்கு 'எக்ஸிபிஷன்' போகணும்.  நீ பாத்து  வைச்சிருக்கிற  கொட்டடிப் புடவையை வாங்கணும்..  அதானே?.."

நான் சிணுங்கினேன்..  "போங்கன்னா..  புடவை வேண்டியது தான்..  அதுக்காக பாயசம் வைப்பாளா?.."

அவர் புன்னகைத்தார்.  இந்தப் புன்னகை எங்கே கொண்டு போய் விடும் என்று எனக்குத் தெரியும்..  பின்னே என்ன?..  பெண் பிள்ளை ஒன்று வீட்டில் இருக்கிறது என்ற விவஸ்தையே பல நேரங்களில் அவருக்கு இல்லாது போய் விடும்.  பட்டு நூல் கத்தரிக்கிற மாதிரி ஆளைத் தள்ளி விட்டு  விலகினால் தான் உண்டு.   ஆனால் பல நேரங்களில் என்னாலும் அப்படிச் செய்ய  முடியாமல்  மாட்டிக் கொள்வது தான் வாடிக்கை.  

சுவாசக் காற்று படும் அளவுக்கு நெருக்கம் காட்டினார்.  என் கூச்சம் என்னோட கூடப் பிறந்த ஒன்றல்ல என்று அப்பொழது நன்றாக  உணர்ந்தேன்.  எல்லாத்துக்கும் இவர் தான் காரணம். எதற்கெடுத்தாலும் இப்படிக் கூச்சப்படுகிற மாதிரி என்னைப் பழக்கி விட்டார்.   இவருக்கு எதெல்லாம் பிடிக்கிறதோ அதையெல்லாம் இன்னொருத்தருக்கும் பிடிக்க வைக்கிறதிலே கில்லாடி இவர்.

இவர் வந்ததும்   எதைச்  சொல்ல நினைத்தேனோ அதையே சொல்ல முடியாமல் நா குழறியது.

"ம்.. வந்து... நம்ம ராணி வந்து..  " நான் வார்த்தையை முடிக்கக் கூட இல்லை.  அதற்குள் மாடிப் படிகளில் 'தடதட'வென்ற சப்தம்.  சடாரென்று  அவரிடமிருந்து விலகிக் கொண்டு மாடிப்பக்கம் திரும்பினேன்.  

ராணி  தான்.  கீழ்க் கடைசிப்படியில் ஒயிலாக நின்று கொண்டிருந்தாள்.   பெண் பார்த்து விட்டாளோ என்று ஒரு வினாடி மனம் துணுக்குற்றது.   

இவரோ  எதற்கும் சங்கடப்படாமல் ரொம்ப சகஜமாக,  "என்ன குழந்தை?  ஸ்கூலுக்குப் போகலையா?  உன்னோட அம்மாக்காரி என்னவோ சொல்றாள்!..  என்னன்னு கேளு.."  என்று சிரித்தார்.

ராணியின் உதடுகள் சுழித்துக் கொண்டன.  "ஐயய்யே...  நா  இனிமே குழந்தை இல்லேப்பா..  பெரியவளாயிட்டேனாக்கும்!"  என்று சர்வ சகஜமாகச் சொன்னவள், "ஏம்மா,  கீழே கிடக்கே  அந்தப் போர்வை.. அதை எடுத்திண்டு போகட்டுமா?..  இண்டர்வெல் விட்டப் பொழுதே பர்மிஷன் கேட்டுண்டு ஸ்கூலேந்து வந்திட்டேன்.

என் பிரண்டு  நளினி  துணைக்கு வந்தா.. அவளோட  மெடிக்கல் ஷாப்  போய் வேணுங்கறதெல்லாம் வாங்கிண்டு  வந்திட்டேன்.  அவ தான் பணமெல்லாம் கொடுத்தா..  அப்புறம் திருப்பிக் கொடுத்துக்கலாம்..   தென்?..  ஆ! மறந்திட்டேனே!  கொல்லைப்புறம் செம்பு வைச்சிருக்கேன்;  தண்ணி தெளிச்சு  எடுத்துக்கோ.." என்று சொல்லிவிட்டு  கட்டில் மேல் கிடந்த என் போர்வையை எடுத்துக் கொண்டு அமைதியாக மாடிப்படிகளில் ஏறினாள்.

எனக்கு  ஒரே திகைப்பு!  நான் எவ்வளவு பீடிகையுடன்  கூச்சத்தோடு ஆரம்பித்த விஷயத்தை என் மகள் எவ்வளவு சகஜமாக சாதாரணமாகச் சொல்லி விட்டாள்!

அந்தக் காலத்துப் பெண்களுக்குத் தான் இப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டுமென்று இதைப் பற்றியெல்லாம் சொல்லித்தர வேண்டியிருந்தது.  

இந்தக் காலத்திலோ,  இதற்கும் தாய் தேவையில்லை..  ஏகப்பட்ட புஸ்தககங்கள்; தானாய்ப் படிக்காவிட்டாலும்  பாடப்புத்தகங்களுக்கிடையே வைத்துப் படித்து விட்டுத்  தோழிகளுக்கு  விளக்கிவிடும்  தோழிகள்..  இப்படி எத்தனை சாதனங்கள், இல்லை?...

ஓ!    தன்னுள் தானே வளர்ச்சிக்கான வித்தைக் கொண்டிருக்கும் வாழ்க்கைப் போக்கின் வரலாறு நினைத்து நினைத்துப்  பார்க்க பிரமிப்பாய்த் தான்  இருக்கிறது!

=====

92 கருத்துகள்:

  1. முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென வைக்கப்படும்..

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் அன்பின் வணக்கம்....

    பதிலளிநீக்கு
  3. 55 வருடங்களுக்கு முன்பு வந்த கதையா..
    பிரமிப்பாக இருக்கிறது...

    தணலை விரல்களால் எடுத்து ஊதி
    அதைக் கொண்டு விளக்கை ஏற்றும் லாவகம்..

    ஆகா!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு துரை உங்கள் உவமையும்
      பிரமிக்க வைக்கிறது.வாழ்த்துகள்.

      நீக்கு
    2. ஆம், நானும் அதைத்தான் சொல்ல நினைத்தேன்.

      நீக்கு
    3. துரை ஐயா,

      என்ன அது?..
      தணலை விரல்களால் எடுத்து ஊதி
      அதைக் கொண்டு விளக்கை ஏற்றும் லாவகமா?.. ஆஹா! தன்யனானேன்.

      நீங்களும் தீக்குள் விரலை வைத்து நந்தலாலாவை தீண்டும் லாவகத்தோடு தான்
      அனுபவித்துச் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி, ஐயா.

      நீக்கு
    4. அன்பின் ஜீவி ஐயா..

      பள்ளியில் இப்படியான சூழலை ஆசிரியை எப்படி கையாள்கிறார் என்பதை வைத்து ஒரு கதையை உருவாக்கியிருந்தேன்..

      இனி அதற்கு வேலையில்லை....

      எனது கருத்து தங்களைக் கவர்ந்ததில் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  4. கத்தி இருபுறமும் கூராக இருக்கலாம்..

    ஆனால்
    கைப் பிடியும் சாணையுடன் இருந்தால்!...

    அப்படியான கத்தியைத் தான்
    இன்று ஜீவி ஐயா ஏந்தியிருக்கிறார்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியான கத்தியைக் கொண்டுதான்
      ஜீவி ஐயா அவர்கள் -

      பலாப்பழத்தைப் பிளந்து சுளைகளை எடுத்துக் கொடுத்திருக்கிறார்..

      நீக்கு
    2. ஆமாம். கம்பி மேல் நடப்பது போலத் தான்.
      கையில் குடை ஏந்தி இப்படியும் அப்படியும் சாய்ந்து பேலன்ஸ் பண்ணுகிற நிலை.
      கதையில் ஒரு இடத்தில் கூட 'அதற்கான' வார்த்தையை உபயோகித்து விடக் கூடாது என்று உறுதியுடன் அடை காத்தேன். இனி மேலும் சொல்லாமல் இருக்கக் கூடாது என்ற நிலையில் தான் அந்தப் பெண் ராணியின் வாய் மொழியாக, இயல்பாக, 'பெரியவளாயிட்டேனாக்கும்!' என்று சொல்ல வேண்டியதாகி விட்டது.

      'ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ' என்ற அந்த தாயின் மனநிலையும் புரிய வேண்டுமே என்ற கவலையும் இருந்தது.

      நீக்கு
  5. மல்லிகை மலர்வதைப் போல
    இன்றைய கதை மலர்ந்திருக்கிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

      55 வருடங்களுக்கு முன் இவ்வளவு
      முன்னேற்றமாக நடந்ததா.!!!

      1965 இல்.?
      நல்ல இனிமையாகச் செல்லும் கதை.
      இந்த நேரம் நான் தென்மாவட்டங்களில் இருந்ததாலோ
      என்னவோ நான் கொஞ்சம் பிற்பட்ட மனுஷிதான்.

      அன்னையின் ஆளுகைக்கு உள்பட்டுதான் என் வாழ்க்கை:)

      இந்தக் கதையின் அம்மா, அப்பா, பெண் எல்லோரும் சோபித அழகோடு இருக்கிறார்கள்.

      படிக்கப் படிக்க அதிசயம். எத்தனை அழகாக அந்தப் பெண் நடந்து கொள்கிறது.
      அதற்கு யார் சொல்லிக் கொடுத்தார்கள் இந்த விஷயத்தை எல்லாம்!!
      கொல்லைப்புறம், சொம்பு எல்லாம் அந்தக்காலத்தைச் சொல்கிறது.
      வெகு நாசூக்காகக் கதையை வழி நடத்தி இருக்கும்
      ஜீவீ சாருக்கு என் வணக்கங்கள்.

      நீக்கு
    2. 'இது' ஒரு பெண்ணினுடைய பெற்றோர்கள் பெருமைப்பட்டுக் கொண்டாடக் கூடிய ஒரு நிகழ்ச்சி தான் என்றாலும் தனி ஆளாய் என்னால் எதுவும் சாத்தியமில்லை., அவர் வந்ததும் என் கூச்சத்தை ஓரங்கட்டி எப்படியாவது அவரிடம் சொல்லி 'உள்ளூரிலிருக்கும் அவர் தமக்கையை வரவழைத்து ராணிக்கு எல்லா நல்லதுகளையும் செய்ய வேண்டும்; அம்மாவுக்கும் சொல்லி அனுப்ப வேண்டும்' என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே, வாசல் கதவை 'டொக்'கென்று தட்டும் சபதம் கேட்டது.///அட அம்மாவே. உனக்கு இவ்வளவு .கூச்சம்.நல்ல வேளை உன் பெண்ணிற்கு இல்லை.
      அது ஏன் அப்படிச் சொல்லாமல் மாடிக்குப் போனது?
      அப்பா வந்த பிறகுதான் சொல்ல வேண்டுமா.

      நீக்கு
    3. செம்பு தனியாக இருப்பதில் அம்மாவும் புரிந்து கொள்ளவில்லை. பெண் வந்ததுமே கொல்லைப்பக்கம் போவதில் இருந்தே புரிந்திருக்கணும். அந்த வயசு தானே! கூச்சம் ரொம்பவே அதிகமா நினைச்சுப் பார்க்க முடியாமல் இருக்கு!

      நீக்கு
    4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    5. தவறாக எழுதி விட்டதால் நீக்கிவிட்டேன். :) மன்னிக்கவும்.

      நீக்கு
    6. என்றோ எழுதிய மனமும் இன்று மலர்ந்து போயிருக்கிறது, துரை ஐயா.

      நீக்கு
    7. //இந்தக் கதையின் அம்மா, அப்பா, பெண் எல்லோரும் சோபித அழகோடு இருக்கிறார்கள்.//

      அம்மாடி! தேர்வில் தேறிய மகிழ்ச்சி. துரை ஐயா சொல்லியிருக்கிற மாதிரி
      தணலை விரலாம் எடுத்து ஊதி, விளக்கேற்றும் தேவு தான்!

      நீக்கு
    8. //அப்பா வந்த பிறகுதான் சொல்ல வேண்டுமா.//

      அப்படியில்லை.. அந்தத் தாய் தான் இக்கதையின் நாயகி. அவள் நினைப்புகளீலேயே கதை நடக்கிறது.. 'குழந்தை' என்று அவள் அப்பா சொன்னதும் இயல்பாகவே 'இப்போ நான் குழந்தை இல்லேப்பா.. பெரியவளாயிட்டேனாக்கும்' என்கிறது அந்தக் குழந்தை.
      இந்த இயல்பான பகிர்தலை ஜம்புலிங்கம் ஐயா பின்னால் வரும் பின்னூட்டத்தில் சரியாக உணர்கிறார். தங்கள் அன்பான வாசிப்புக்கு நன்றி, வல்லிம்மா.

      நீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்

    பதிலளிநீக்கு
  7. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். தொடரப் போகும் ஊரடங்கிற்குப் பின்னர் கொரோனாவின் தாக்கம் படிப்படியாகக் குறைய வேண்டும் என்று பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
  8. கிரஹங்களின் சேர்க்கையால் தான் இந்தக் கொடிய விஷ வைரஸின் தாக்கத்திற்குக் காரணம் என இன்றும் ஓர் விஞ்ஞானி சொல்லி இருக்கிறார். ஜூன் 21 ஆம் தேதிக்குப் பின்னர் குறைந்துவிடும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார். நம்பிக்கை பொய்க்காமல் எல்லாம் வல்ல இறைவன் காப்பாற்றட்டும்.

    பதிலளிநீக்கு
  9. பலத்த பீடிகையோடு வந்திருக்கும் கதையைப் படித்தேன். முடிவு எதிர்பார்த்தது தான் என்றாலும் பெண் அதை அம்மாவிடம் முதலிலேயே சொல்லி இருக்கலாம். அப்பா வரும்வரை காத்திருந்திருக்க வேண்டாம். ஆங்காங்கே சிற்சில எழுத்துப் பிழைகள் இருக்கின்றன. முக்கியமாய்ச் சிமி"லி" உருண்டை என்பது "சிம்"னி" உருண்டை என வந்திருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். பாத்ரூம் ஓடுவதற்கு முன்னால்
      மாற்று உடை எடுத்துக் கொண்டு போனதாய் இருக்க வேண்டாமோ.:)

      நீக்கு
    2. கண்ணில் பட்ட எழுத்துப் பிழைகளை சரி செய்துவிட்டேன்.

      நீக்கு
    3. மாற்றுத்துணி மட்டுமில்லை. பெண் அகாலத்தில் பள்ளியில் இருந்து வந்திருப்பதிலிருந்தே அம்மா புரிந்து கொண்டிருக்கணும். பல பள்ளிகளிலும் கூட ஒரு பெண்ணைத் துணைக்கு அனுப்புவார்கள். அல்லது வகுப்பில்லாமல் ஓய்வில் இருக்கும் ஆசிரியப் பெண்மணிகளில் யாரையானும் துணைக்கு அனுப்புவார்கள். இப்போதெல்லாம் பள்ளிகளிலேயே வென்டிங் மிஷின் இருப்பதால் குழந்தைகளுக்கு பயமில்லாமல் காசைப் போட்டுவிட்டு வேண்டுமென்பதை எடுத்துக் கொள்ளலாம். அதோடு பத்திலிருந்து பதினைந்து வயதுக்குட்பட்ட பெண்களுக்கு வாரம் ஒரு முறை இதைப் பற்றி வகுப்பெடுக்கின்றனர்.

      நீக்கு
    4. கதை நீட்சிக்காகத் தான் அப்பா வரும் வரை காத்திருந்தது, கீதாம்மா.

      வட்டார வழக்கு குழப்பமோ?.. தஞ்சாவூர் பக்கம் சிம்னி உருண்டை என்பார்களோ?.. சிம்னி விளக்கை சில பகுதிகளில் சிமிலி விளக்கு என்றும் சொல்கிறார்களோ?

      எது எப்படியாயினும் சிமிலி உருண்டை என்று திருத்தியதற்கு நன்றி, கீதாம்மா.
      உடனே திருத்திய எ.பி. ஆசிரியருக்கும் நன்றி

      நீக்கு
    5. எனக்கும் குழப்பம்...

      சீமை எண்ணெய் விளக்கு தானே
      சிமினி என்று வரும்..

      இதென்ன சிமிலி உருண்டை என்று...

      ஆபத்பாந்தவனாய் அக்கா வந்து
      சரியான வார்த்தையைச் சொன்னார்...

      சிமிலி உருண்டையின் தாத்பர்யத்தையும் அவர்களே விளக்குவார்களாக...

      நீக்கு
    6. என் மாமியாரெல்லாம் பக்காத் தஞ்சாவூர், கும்பகோணம். மற்ற ஊர்ப் பழக்கங்களைக் கிட்டேவே விட மாட்டாங்க. அவங்களும் சிமிலி உருண்டைனு தான் சொல்லிப் பார்த்திருக்கேன். எள்ளைப் பொடி செய்யாமல் பிடிக்கும் உருண்டை முத்துருண்டை எனவும் பொடிசெய்து வெல்லம், ஏலக்காய், தேங்காய்த் துருவல்(விரும்பினால்) சேர்த்துப் பிடிப்பதைச் சிமிலி உருண்டை என்றும் சொல்லுவார்கள். சில கேழ்வரகு மாவிலும் வேர்க்கடலையை வறுத்துப் பொடித்துச் சேர்த்துப் பண்ணுவார்கள். அதையும் சிமிலி உருண்டை என்றே சொல்வார்கள். இந்த எள்ளினால் ஆன சிமிலி உருண்டை வீட்டில் பெண்கள் வயதுக்கு வந்ததும் எடுக்கும் விழாவில் அனைவருக்கும் கொடுப்பார்கள். அதைத் தவிர்த்து ஏழாம் மாசம் வளைகாப்பிற்கும் உண்டு. நவராத்திரியில் சனிக்கிழமைகளில் நிவேதனமாகவும் இடம் பெறவும். நல்லதிற்கெல்லாம் எள்ளைப் பொடித்தே சேர்ப்பார்கள். அபர காரியத்திற்கு மட்டும் எள்ளை அப்படியே பயன்படுத்துவார்கள். தென் மாவட்டங்களில் எள் சாதத்துக்கு இந்த வெல்லம் சேர்த்த பொடியில் தான் பண்ணுவது வழக்கம். எள்ளில் மிளகாய் வற்றல், உப்புச் சேர்த்துப் பண்ணுவது தென் மாவட்டங்களில் இல்லை.

      நீக்கு
    7. அக்காவின் அன்பான விரிவுரைக்கு மகிழ்ச்சி...

      ஆக -
      சிமிலி உருண்டை என்பது இதுதனா!...
      விடலைப் பருவம் கொள்ளிடத்தின் தென்கரையில் அமைந்த கிராமத்தில்...

      கொள்ளிடக்கரை எள் நிலக்கடலை விளைச்சலுக்குப் பெயர் பெற்றது...

      அந்தந்த பருவ காலத்தில் கிடைக்கும் எள் கடலை இவற்றில் அவ்வப்போது இவ்வாறு வீட்டில் செய்வார்கள்...

      இதுக்கு எள்ளுருண்டை, பொடி உருண்டை என்றே சொல்லிக் கொள்வோம்...

      மீண்டும் அந்த காலகட்டத்தில் ஆழ்ந்தது மனம்...

      மகிழ்ச்சி.. நன்றியக்கா...

      நீக்கு
  10. 55 வருடங்களுக்கு முன்னால் வந்த கதை என்பதை நம்ப முடியவில்லை.

    கதைப் போக்கு, எழுதியது நன்றாக இருந்தாலும், குமுதம் பாணி கதையாக இருக்கு. விகடன், கல்கியில் இந்தக் கதை பிரசுரமாகாது.

    வெளிப்படையாகப் பேசும் பெண், அம்மாவிடமல்லவா முதலில் சொல்லியிருப்பாள். என்னதான் செல்லமாக இருந்தாலும் இந்தமாதிரி விஷயங்களை அப்பாவிடம் பேசமாட்டார்களே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //என் பிரண்டு நளினி துணைக்கு வந்தா.. அவளோட மெடிக்கல் ஷாப் போய் வேணுங்கறதெல்லாம் வாங்கிண்டு வந்திட்டேன். அவ தான் பணமெல்லாம் கொடுத்தா.. அப்புறம் திருப்பிக் கொடுத்துக்கலாம்.. // ஆமாம், அதுவும் இவை எல்லாம் சமீப காலங்களில் தான் வந்திருக்கிறது. அதிகம் போனால் 20 வருடங்கள் இருக்கும். 55 வருடங்கள் முன்னர் மருந்துக் கடைகளில் இவை எல்லாம் விற்பனைக்கு இருக்கும் என்பதே பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தனியே மருந்துக்கடைக்கெல்லாம் போகவும் வாய்ப்பில்லை. தாய் தன்னுடைய நிலையோடு ஒப்பிட்டுப்பார்ப்பதால் சுமார் 20/25 வருடங்கள் முன்னர் தான் இருந்த நிலைமையை நினைத்துப் பார்ப்பதாக வந்திருந்தால் கொஞ்சமானும் ஏற்புடையதாக இருக்கும்.

      நீக்கு
    2. @ நெல்லை

      அம்மாவிடம் சொல்லியிருந்தால், இந்தக் கதையே இல்லை, நெல்லை. இரண்டாவது பாராவிலேயே முடித்திருக்கலாம்.

      //55 வருடங்களுக்கு முன்னால் வந்த கதை என்பதை நம்ப முடியவில்லை.//

      ஏன் முடியவில்லை?.. தெரியவில்லை.. எனது 22 வயதில் எழுதிய கதை இது என்பதை வேண்டுமானால் நம்ப முடியாமல் இருக்கலாம். அந்த அளவில் என்னில் வளர்ச்சி. :))

      //கதைப் போக்கு, எழுதியது நன்றாக இருந்தாலும், குமுதம் பாணி கதையாக இருக்கு...//

      குமுதம் பாணி கதையாக இருந்தால் கதைப் போக்கு நன்றாக இருக்காது என்று அர்த்தமா?..

      //என்னதான் செல்லமாக இருந்தாலும் இந்தமாதிரி விஷயங்களை அப்பாவிடம் பேசமாட்டார்களே.//

      அப்பா, குழந்தை என்றதற்கு அந்தக் குழந்தை பதில் சொல்லியிருக்கிறது.
      கதை பூராவும் வாசகர்களின் யூகத்திற்கு 'அதை' விட்டிருக்கிறேன். ஆனால் பூடகமாக 'அதை' வாசகர்கள் யூகிக்கிற மாதிரி நிறைய சொல்லியிருக்கிறேன்.

      நீக்கு
    3. கீதாக்கா மெடிக்கல் விஷயமெல்லாம் அப்போதைக்கும் முன்னரே மும்பை தில்லி, கல்கட்டாவில் வந்துவிட்டது. ஆனால் நகரங்களில்.

      எங்கள் வீட்டில் மும்பை, கல்கட்டாவில் என் பாட்டியின் உறவினர்கள் இருந்தனர். எங்கள் வீட்டில் இப்படியான நிகழ்வுகளின் போது பண்டைய முறைப்படிதான். அதன் பின் பாட்டியின் மும்பை கல்கட்டா உறவுகள் வந்தப்பதான் எங்களுக்கு அறிமுகப்படுத்தி அப்போது அவர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறென். அவங்க எல்லாம் பயன்படுத்தியிருப்பதைச் சொல்லி. சில கம்பெனி/ப்ரான்ட் பெயரும் சொல்லுவார்கள்

      கீதா

      நீக்கு
  11. செம்பு, உரல், அம்மி.... பாத்ரூமில் ஆளிருப்கு என்பதற்கான அடையாளமாக சுவரில் செம்பு.... நன்றாக்க் கொண்டுவந்திருக்கீங்க. போன் - இவர் ஒருவேளை டெலபோன் டிபார்ட்மென்டில் வேலை பார்த்திருக்கலாம். அம்மாவுமா... அதாவது பெண்ணின் பாட்டி வீட்டிலுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தத் தொலைபேசி விஷயம் நானும் கவனிச்சேன் நெல்லை. எண்பதுகள் வரை வீட்டுக்கு வீடு தொலைபேசி என்பது அரிதாகவே இருந்தது. நாங்க குஜராத்தெல்லாம் சுத்திட்டுத் தொண்ணூற்று ஐந்தில் சென்னை வந்தப்போக் கூட எல்லார் வீட்டிலும் தொலைபேசி இல்லை. அக்கம்பக்கம் யார் வீட்டில் இருக்குனு கேட்டுட்டு அங்கே போய்த் தான் எஸ்டிடி பூத்தில் கொடுக்கும் பணத்தைக் கொடுத்துட்டுப் பேசி இருக்கோம்.

      நீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    நல்ல கதை. வளரும் ரோஜா செடியருகே தன் மகளை காணவில்லையென அந்த தாய் சொன்னதும் என் மனதுக்குள் கதை முடிவு வந்து விட்டது. (ஏனென்றால், தாயின் மனது மற்றொரு தாய்க்கும் தெரிந்ததுதானே..!) ஆனால் முடிவு மாறுபட்டுத்தான் இருக்கிறது. என்னதான் கூச்ச சுபாவமாக இருந்தாலும் அந்த தாய் புரிந்து கொண்டதை சந்தோஷத்துடன் உடனே சென்று மகளிடம் ஜாடைமாடையாக கேட்க வேண்டாமோ? ஆனால் அப்படி கேட்டிருந்தால், கதையின் திருப்பமாக இந்த முடிவு வந்திருக்காதே..! நானும் கிராமத்தில் வளர்ந்திருப்பதால், அந்த மகளின் தைரியம் என்னை நிறையவே பிரமிக்க வைக்கிறது. 55 கால வருடங்களுக்கு முன்பே இப்படி ஒரு தைரியங்களா பெண்களுக்குள் என வியக்க வைக்கிறது. வித்தியாசமான முடிவுக்கு பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி, சகோதரி.

      ஒரு கதையைக் கதையாகப் பார்த்தமைக்கு ரொம்பவும் நன்றி.

      நீக்கு
  13. 55 வருடத்திற்கு முந்தைய கதை....

    நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசித்து கருத்து பகிர்ந்தமைக்கு நன்றி, வெங்கட்.

      நீக்கு
  14. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  15. கூச்ச சுபாவம் கொண்ட ஒரு தாயின் மனநிலையை அழகாக தெரிவித்திருக்கும் கதை. 55 வருடங்களுக்கு முன்பே இத்தனை தெளிவாக ஒரு பெண்ணா? அப்பாவின் வளர்ப்போ? 70களில் கூட நாங்கள் அழுதோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு தாயின் மனநிலையிலேயே இந்தக் கதை நகர்கிறது.

      அதைத் தெளிவாகச் சொன்னமைக்கு நன்றி, பா.வெ.

      இன்றைக்கும் பெண்கள் நிறைய உள்ள வீட்டில் இதெல்லாம் வெளிக்குத் தெரியவே தெரியாது!

      கொண்டாடுகிறதெல்லாம் பிற்காலத்துப் பழக்கம் தான்.

      நீக்கு
  16. சில வருடங்களுக்கு முன்பு என் அக்கா 13 வயதான தன் பேத்தியோடு அமெரிக்கா சென்றார். நான் என் அக்காவிடம் தயக்கத்தோடு,"வைஷ்ணவி எப்போது வேண்டுமானாலும் பெரியவளாகலாம். லாங் ட்ராவல், எனவே நீ கையோடு சானிடரி நாப்கின் எடுத்துக்கொள்" என்றேன். அதற்கு என் அக்கா,"அவள் வகுப்பில் நிறைய பெண்கள் வயதிற்கு வந்து விட்டார்களாம், அதனால் அவளே அவள் அம்மாவிடம் தனக்கு சானிடரி நாப்கின் வாங்கித்தரச் சொல்லி விட்டாள்" என்றபோது பிரமிப்பாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  17. 55 வருடங்களுக்கு முன் என்பதே வியப்பாக இருக்கிறது...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க டி.டி. 1965- வாக்கில் பிரசுரமான கதை இது.

      நீக்கு
  18. //ஆள் காட்டி விரலைக் குவித்துக் கொண்டு 'டொக் டொக்'கென்று தட்டுவது தான் அவர் வழக்கம்//

    கணவரது அடையாளத்தை உணர்ந்து வைத்த உண்மையான மனைவியர்களின் அடையாளம்.

    சொல்ல வேண்டிய விசயத்தை நாசூக்காக சொல்லிச் சென்ற பாங்கு அருமை.

    இன்று இவைகள் சாதாரண நிகழ்வுகளாகி விட்டது.

    அன்று பெயரன் பிறந்து விட்டானாமே... என்று விசாரிப்பார்கள்.

    இன்று இந்த வார்த்தைகளே மறந்து விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கணவரது அடையாளத்தை உணர்ந்து வைத்த உண்மையான மனைவியர்களின் அடையாளம்.//

      கூர்மையாக வாசித்திருக்கிறீர்கள். நுண்மையாக உணர்ந்தும் இருக்கிறீர்கள்..

      //சொல்ல வேண்டிய விசயத்தை நாசூக்காக சொல்லிச் சென்ற பாங்கு அருமை.//

      இந்தக் கதைக்காக எடுத்துக் கொண்ட பொருள் அப்படி. நீங்கள் சொல்லியிருக்ம் நாசூக்கு தான் முக்கியமாகிப் போனது, தேவகோட்டையாரே!

      கொஞ்சமே சருக்கியிருந்தாலும் கதை ராசாபாசாமாகிப் போயிருக்கும்.

      //அன்று பெயரன் பிறந்து விட்டானாமே... என்று விசாரிப்பார்கள்.//

      நீங்கள் சொல்லியிருப்பது அத்தனையும் உண்மை. அதைத் தான் கதையில் பேத்தி ஆக்கிவிட்டேன். நன்றி.;



      நீக்கு
  19. மகள், இயல்பாகப் பகிர்ந்த விதம் சிறப்பு.
    அரங்கேற்றம் திரைப்படத்தில்...நான் கோலம் போடப்போறேன்..என்று கிழவி கூறியது நினைவிற்கு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த இயல்புக்காகத் தான் இந்தக் கதையையே எழுதியது, ஐயா!

      நீங்கள் சொன்னதும் தான் அந்த அரங்கேற்றம் காட்சி நினைவுக்கு வருகிறது..

      இயயக்குனர் பாலச்சந்தரரின் வெற்றியே அது தான்! ஒன்றைத் திரையில் காட்சியாகக் காட்டியோ சொல்லியோ இன்னொன்றைத் தெரியப்படுத்துவதில் மன்னர் அவர்!

      அந்தக் காலத்தில் டைரக்டர் இருக்கிறார் என்பதைச் சொல்ல வந்தவையாக இவை இருந்தன!

      நீக்கு
  20. ஜீ வி சார், மறுபடியும் ஸிக்ஸர் அடித்து விட்டீர்கள். அருமையான ஆனால் மென்மையாக கூறப் பட்டக் கதை. என் பெண்கல் இருவரும் முறையே 1992லும் 1998லும் பிற்ந்தார்கள். நான் அவர்களுக்கு வயது முதிர்ந்த காலம் வந்த பின் அமர வைத்து மிக விஞ்ஞான ரீதியாக இதைப் பற்றி விளக்கினேன். என்னை விட அவர்கள் பள்ளியில் ஏழாம் வகுப்பிலேயே இதைப் பற்றிய ஓர் வகுப்பே ஏற்பாடு செய்து ஓர் முதிர்ந்த ஆசிரியர் இதைப் பற்றி தீர விளக்குவார். எனவே, என் இரு பெண்களும் நேரம் வந்த போது மிகவும் நிதானமாகவும் புரிதலோடும் நடந்து கொண்டனர். நீங்கள் அந்த நிகழ்வை கையாண்ட விதம் மிக அழகாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசித்து உண்ர்ந்தைச் சொன்னமைக்கு நன்றி, சகோதரி!

      ஒரு ஆணில் பார்வையில் எந்த அளவுக்கு பூடகமாகச் சொல்ல முடியுமோ அந்த
      அளவுக்கு முயற்சித்திருக்கிறேன். அடுத்த கதையில் பார்க்கலாம்.


      நீக்கு
  21. //"ராஜலட்சுமிப் பாட்டி இன்னைக்கு ஏனோ சந்தோஷமாயிருக்காப் போல இருக்கே.." என்று நுழையும் போதே, என்னைப் பாட்டியாக்கிக் கிண்டல் செய்தபடி வந்தார் அவர்.//

    விஷயம் தெரியாமலே பாட்டியாக்கி விட்டார்.

    //சந்தோஷத்திற்கு வேறு ஒன்றும் காரணமில்லை. ராஜலட்சுமி பாட்டிக்குப் பேத்தி பிறக்க வழி பிறந்தாச்சு' //

    ராஜலட்சுமி பாட்டி பகிர்ந்து இருந்தால் இப்படித்தான் பகிர்வது வழக்கம்.

    கதை நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //விஷயம் தெரியாமலே பாட்டியாக்கி விட்டார்.//

      அட! நான் கூட இதை நினைத்து பார்க்கவில்லை, கோமதிம்மா.
      கதை போக்கில் இயல்பாய் வார்த்தைகள் வந்து உட்கார்ந்திருக்கின்றன.

      கதை நன்றாக இருக்கிறது என்று நீங்கள் சொன்னதில் சந்தோஷம். நன்றிம்மா.

      நீக்கு
  22. எனது பதினெட்டு வயதிலேயே உளவியல் அறிஞர் சிக்மண்ட் பிராய்ட் அவர்களின் மனோவியல் தத்துவங்கள் பெரிதும் என்னை ஆட்கொண்டன. பிராய்டின் கண்டுபிடிப்புகளை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர் அந்நாளைய 'காதல்' பத்திரிகையின் ஆசிரியர் அமரர் அரு. இராமநாதன் அவர்கள். பிராய்டை வாசிக்க வாசிக்க மனித உணர்வுகளின் விதவிதமான வெளிப்பாடுகளின் நேர்த்திகள் என்னை மிகவும் பரவசப்படுத்தின. என் கதைகளில் இயல்பாகவே பிராய்ட் பிரவேசித்தார். உணர்வு ரீதியாக கதை மாந்தர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்துவதற்கு தோன்றாத் துணையாக இருந்தார். அவர் வழிநடத்திய வெளிச்சத்தில் தான் நான் கதைகள் எழுத ஆரம்பித்தேன். இன்று வரை வாழ்க்கையைப் புரிந்து கொள்வதில் அவர் துணையாக இருக்கிறார். அந்த மாமனிதருக்கு என்றென்றும் என் நன்றி.
    இந்தக் கதையின் அந்தத் தாய் பாத்திரத்திலும் அவரது பாதிப்பு உண்டு.

    இந்தக் கதையை வாசித்து தங்கள் கருத்துக்களைப் பதிந்த நண்பர்களுக்கு மிகவும் நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளேன். தாய்மார்கள் என்ன சொல்லப்போகிறார்களோ என்ற பரிதவிப்பு எனக்கு இருந்தது உண்மை. அவர்களின் அங்கீகாரம் கிடைத்ததில் மனசுக்கு நிம்மதியாக இருக்கிறது. இது தான் பத்திரிகையில் எழுதுவதற்கும் ப்ளாக்குகளிலும் எழுதுவதற்கும் இருக்கும் பெருத்த வித்தியாசம். பத்திரிகையில் எழுதுவதில் வாசிக்கும் வாசகர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்ள முடியாது.
    எழுதுவோருக்கு அது பற்றிய அக்கறையும் எதிர்பார்ப்பும் இல்லாமலிருந்தது. பத்திரிகையாளர்களின் செல்வாக்கு மட்டும் தனக்கிருந்தால் போதும் என்ற நிலை அது.

    ஆனால் வலையுலகம் அப்படி அல்ல.. வாசிக்கும் வாசகர்களின் எண்ணப் பிரதிபலிப்பு உடனுக்குடன் தெரிந்து விடுகிறது. தெரிந்து சந்தோஷத்தைக் கொடுக்கிறது. மேலும் மேலும் எழுத உத்வேகத்தை அளிக்கிறது. இது இந்த காலகட்டத்தின் வளர்ச்சி. இந்த வளர்ச்சி எழுதுவோருக்கு க்ரியா ஊக்கியாய் பலவிதங்களில் உதவுகிறது என்பது நான் அனுபவித்த உண்மை. இதை சரிவர உபயோகித்துக் கொள்வது நமது கடமையாகிப் போகிறது. இந்தச் சிறுகதையை பரந்த வாசகர்களின் வாசிப்புக்கு உள்ளாக்கிய எங்கள் பிளாக் ஆசிரியர் குழுவிற்கு என் நன்றி.

    பதிலளிநீக்கு
  23. பெண்கள் பெரியவர்களாகி போனதை சடங்காகச் செய்யும் நம் சமூகத்தில் அந்தக் காலத்தில் நம்சமூகத்தில் பெண்குழந்தைக்ளின் புரிதலும்கூட என்றே நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊருக்குத் தெரியப்படுத்துகிற மாதிரி பெரிது படுத்திச் சடங்காகச் செய்யும் வழக்கம் எங்களில் இருந்ததில்லை.

      இதையெல்லாம் விவரமாக விளக்குகிற மாதிரி இன்றைய பாடதிட்டங்களே இருக்கிறது, ஐயா.

      நீக்கு
    2. ஜிஎம்பி ஐயா, முன்னெல்லாம் பெண்கள் வயதுக்கு வரும் முன்னர் திருமணம் ஆகிவிடும். திருமணத்திற்குப் பின்னர் பெண் வயதுக்கு வந்ததும், மாப்பிள்ளை வீட்டில் தெரிவித்து அதை ஓர் விழாவாகக் கொண்டாடுவார்களாம். அப்படி இருந்தது காலப் போக்கில் பெண் திருமணம் ஆகாமல் வயதுக்கு வந்தாலும் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். இதில் மதுரை முன்னிலை வகிக்கும். அங்கெல்லாம் ஒலிபெருக்கி வைத்து மேடை போட்டுப் பத்து நாட்கள் பெண்ணிற்குப் பத்துவித அலங்காரங்கள் செய்து, (அதற்கெனவே ஒப்பனைக்காரர் வருவார்) கூடவே ஒரு பெண்ணையும் உட்கார்த்தி இருப்பார்கள். அமர்க்களமாகக் கொண்டாடுவார்கள். பெண்ணின் தாய் மாமனுக்குத் தான் முக்கிய மரியாதை! அவனே முறை மாப்பிள்ளையாக இருந்தால் பெண் ஒதுங்கவும் அவன் தான் ஓலை கட்டுவான். இல்லை என்றாலும் மாமன் தான் ஓலை கட்டிப் பெண்ணைத் தனியாக வைப்பான். பின்னர் நாள் பார்த்துச் சடங்குகள் செய்வார்கள். சிலர் பணம் இல்6லை எனில் 3 மாதமோ, ஆறு மாதமோ கழிச்சுக் கூட வைத்துக் கொள்வார்கள்.

      நீக்கு
  24. இதே கருவில் நம் "பரிவை.குமார்" அவர்களின் கதையும் முகநூலில் பகிர்ந்திருக்கிறார். தந்தை வெளிநாட்டில் வேலை. தாய் மட்டும் இங்கே/ மகள் பத்து வயதுக்கே வயதுக்கு வந்துவிடுகிறாள். ஒரு தாயின் சந்தோஷத்தவிப்பை நன்றாக வெளிக்காட்டி இருந்தார். இரண்டு கதைகளின் கருவும் ஒரே மாதிரி இருந்தது ஆச்சரியத்தைக் கொடுத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முக நூலில் கூட கதைகள் எழுத முடியுமா?.. பின்னூட்டங்களைப் பகிர்ந்து கொள்ள முடியுமா?

      பெரிய வித்தையாக இருக்கிறதே, இது?..

      நீக்கு
    2. நான் பல வருஷங்களாக முகநூல் கதைகளைப் படித்து வருகிறேன். முக்கியமாய் நம் ரிஷபன் அவர்களின் கதைகள். கணேஷ்பாலா வேறே போட்டிகள் எல்லாம் நடத்துவாரே!

      நீக்கு
    3. அவையெல்லாம் ஒரு பக்கக் கதைகள் அல்லவா?.. ஐந்து பக்க சிற்கதையை ஐந்து பகுதிகளாகப் போட்டால் தான் உண்டு.

      முக்கியமாக இந்த மாதிரி எண்ணிக்கை நூறை எட்டுகிற பின்னூட்டங்கள். இவை பிளாக்கர் உலகிற்கென்றே வாய்த்த பேறுகள் அல்லவா?..

      நீக்கு
  25. Net Pack முடிகின்ற நேரம்..

    நேற்று மாலையிலிருந்து படபடப்பு..
    நாளைக்கு யாருடைய கைவண்ணமோ என்று..

    நல்ல வேளையாக இயங்கிக் கொண்டு இருக்கிறது..

    இல்லாவிட்டால் -
    கதையை வாசித்ததும் மனதில் தோன்றியதை உடனே பதிவு செய்ய இயலாமல் போயிருக்கும்..

    பதிலளிநீக்கு
  26. ஓ! அப்படியா ஐயா!
    படபடப்பே வேண்டாம்.
    காலையில் வாக்கிங் போய் விட்டு வந்து 6.15 வாக்கில் பார்த்தேன். உங்களைப் பார்த்ததில் சந்தோஷம்.
    சில நேரங்களில் ஒரு பின்னூட்டத்திற்கு பதிலாக வாசிப்பவரின் இன்னொரு பின்னூட்டமே இருக்கும்.
    ஒட்டு மொத்தமாக ஓரளவு கருத்துக்கள் பதிவானவுடன் பதில் சொல்லலாம் என்று காத்திருந்தேன்.
    உங்கள் மாறுபட்ட கதைகளை வாசிக்க நானும் காத்திருக்கிறேன். நன்றி, ஐயா.

    பதிலளிநீக்கு
  27. 55 வருடங்களுக்கு முன் வந்த கதை பாராட்டுகள்.
    அம்மாவின் அளவுக்கு மிஞ்சிய கூச்ச சுபாவம் தான் உதைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான்கு பெண்கள் கூடி பேசத் துவங்கினால் அதில் ஒரு பெண் மட்டும் எதுவும் பேசாமல் மெளனமாக இருப்பாள். அவள் மற்றவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தாலும் இவளாக எதுவும் சொல்ல மாட்டாள். ரொம்ப ஆராய்ந்து பார்த்தால் மற்றவர்கள் பேச்சில் டக்கென்று கலந்து கொள்ள இவளுக்கு ஒரு தயக்கம் இருக்கும். இதெல்லாம் ஏன் என்று யோசித்திருக்கிறீர்களா?
      இவர்களைப் பற்றி எழுதுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள், அந்த நான்கு பெண்களில் ஒரு பெண் மட்டும் பேசா மடந்தையாக நின்று கொண்டிருப்பது மட்டும் உதைக்கிறது என்று சொல்வீர்களா?

      -- இதெல்லாம் மனரீதியான குறைபாடுகள். நாம் எல்லோருமே ஏதோ ஒருவிதத்தில் குறைபாடு உள்ளவர்கள் தாம். காரணம் அறிய குடைந்து குடைந்து பார்க்க வேண்டும்.

      நீக்கு
  28. 55 வருடங்களுக்கு முன் அதாவது 64, 65 வருடங்களில் எனக் கொள்ளலாம் இல்லையா... அப்போதைய காலகட்டத்தின் ஓர் அம்மாவின் மன நிலையைச் சொன்ன விதம் நன்றாக இருக்கிறது. யதார்த்தம். நான் பிறந்த சமயம் அது என்றாலும் அதன் பின்னும் நான் வளர்ந்துவ் வரும் வருடங்களில் கூட எங்கள் வீட்டில் இப்படித்தான் சில பெரிய பெண்கள் இருந்தார்கள். நாங்கள் ஏதேனும் சொன்னல் கூட . சீ சீ என்பார்கள்.

    பள்ளி சென்ற பெண் திடீரென்று வீட்டிற்கு வந்ததும் கொஞ்சம் யூகித்திருக்கலாமே அவள் அம்மா? என்று தோன்றியது. முதலில் இல்லை என்றாலும் அடுத்தடுத்த செய்கைகளில், பதில்களில்.

    அப்பெண்ணும் தன் அம்மாவிடம் ஏன் சொல்லவில்லை என்று தோன்றியது.

    மற்றபடி கதை நன்றாக இருக்கு ஜீவி அண்ணா.

    அதுவும் அப்போதைய காலகட்டத்தில் முற்போக்கு சிந்தனையுடன் எழுதியிருக்கிறீர்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பள்ளி சென்ற பெண் திடீரென்று வீட்டிற்கு வந்ததும் கொஞ்சம் யூகித்திருக்கலாமே அவள் அம்மா? என்று தோன்றியது. முதலில் இல்லை என்றாலும் அடுத்தடுத்த செய்கைகளில், பதில்களில்.

      அப்பெண்ணும் தன் அம்மாவிடம் ஏன் சொல்லவில்லை என்று தோன்றியது. //

      யூகிப்பதென்ன? அவள் அம்மாவுக்குத் தான் கண் கண்ட காட்சியாய் 'இது தான் விஷயம்' என்று தெரிந்து விட்டதே! 'அப்படியா, சமாச்சாரம்?' என்று அவள் தன் பெண்ணிடம் கேட்கவில்லை. கேட்காதற்கு காரணம் அந்த அம்மாவிடம்
      மன ரீதியாக படிந்துள்ள குறைபாடு.

      அந்தப் பெண்ணாக வலிய வந்து தன் அம்மாவிடம் எதுவும் சொல்லாமல் இருந்தால் தான் கதையை அப்படி ஒரு முடிவில் கொண்டு வந்து நிறுத்த முடியும் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?

      இதெல்லாம் ஒரு கதையை எழுதும் பொழுது கதாசிரியர் வேண்டுமென்றே செய்வது. இது தான் தீர்மானிக்கப்பட்ட கதையின் போக்கு. இதில் மாறுபட்டால் இந்தக் கதையே வேறு மாதிரி உருவெடுக்கும். இல்லையா? இதைப் புரிந்து கொள்வதில் என்ன சிரமம் என்று எனக்குத் தெரியவில்லை.

      இந்தக் கதையில் முற்போக்கு சிந்தனை ஏதுமில்லையே, சகோ.?.. நீங்கள் எதைச் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லையே!

      நீக்கு
  29. சத்தியமாக 'அவர்' இல்லை. ஆள் காட்டி விரலைக் குவித்துக் கொண்டு 'டொக் டொக்'கென்று தட்டுவது தான் அவர் வழக்கம்.//

    இது கூட நுணுக்கமான எழுத்து...அந்தக் கதாபாத்திரத்தின் மைன்யூட் அப்செர்வேஷன் ஒரு மனைவியாக.

    அப்பாவிடம் சொல்லத் தயக்கமில்லாத ஃபார்வேர்ட் பெண் அந்தக் காலகட்டத்தில். நகரத்தில் வளரும் பெண். இதற்கு மற்றொரு வரி மெடிக்கல் ஷாப்பில் தேவையானதை வாங்குவது.

    ஆனால் எங்கள் கிராமத்தில் இதெல்லாம் 80 வரைக்கும் சாத்தியமில்லை. அதன் பின்னும் கூட சில வருடங்கள் மெதுவாகத்தான் அறிமுகமாயின.

    அப்போதைய காலகட்டத்து வார்த்தைகள் எல்லாம் கதையில் சொல்லி வருவது நன்றாக இருக்கிறது.

    அப்போது பிரசுரமானதுக்கும் வாழ்த்துகள்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இது கூட நுணுக்கமான எழுத்து...அந்தக் கதாபாத்திரத்தின் மைன்யூட் அப்செர்வேஷன் ஒரு மனைவியாக.//

      இதை தேவகோட்டையார் ஆரம்பத்திலேயே நுணுக்கமாக கண்டுபிடித்து சொல்லிவிட்டார், சகோ. நீங்களும் அதையே உண்ர்ந்து சொன்னதற்கு மிக்க நன்றி.

      அந்தப் பெண் அப்பாவிடம் சொன்னதற்கு நீங்கள் நினைக்கிற மாதிரி ஸ்பெஷல்
      காரணம் ஏதுமில்லை. 'குழந்தை' என்று அவர் விளித்தார். 'நான் குழந்தை இல்லை; பெரியவளாயிட்டேன்' என்று இயல்பாக பதில் சொல்கிறாள்.

      இதை ஏன் அம்மாவிடம் முன்னாலேயே சொல்லவில்லை என்றால் நான் என்ன சொல்வது? எந்த நேரத்தில் எதை யார் சொல்ல வேண்டும் என்று தீர்மானித்து எழுதுவது தானே கதைகள் என்பது?..

      கதை முடிவு கட்டத்திற்கு வரும் பொழுது தான் அந்தப் பெண் அதைச் சொல்ல வேண்டும் என்று நான் தீர்மானிக்கிறேன். அதற்காகவே அவள் அப்பாவை, 'குழந்தை..' என்று ஆரம்பித்து ஒரு கேள்வியை கேட்க வைக்கிறேன். அதற்கு பதில் சொல்வதன் மூலம் அவள் பெரியவளான செய்தியை அவள் மூலமே தெரிய வைக்கிறேன். கேள்வி--பதில் இரண்டையும் முன் கூட்டியே தயாரித்துக் கொண்டு அதன்படி கதையை நடத்திச் செல்வது எல்லாக் கதாசிரியர்களும் கைக்கொள்ளும் யுக்தி தானே?

      //இதற்கு மற்றொரு வரி மெடிக்கல் ஷாப்பில் தேவையானதை வாங்குவது.//

      இந்த மெடிகல் ஷாப் விஷயத்தை ஆரம்பித்து வைத்தது யார் என்று தெரியவில்லை. மெடிகல் ஷாப் என்ற ஒரு வார்த்தையை வைத்துக் கொண்டு என்ன நினைக்கிறீர்கள் என்று தெரியவில்லை. அந்தப் பெண்ணுக்கு வயிற்றுவலி அடிக்கடி வரும். அப்பொழுது பரால்கான் என்ற மாத்திரையை உபயோகிப்பது உண்டு. அதை அவள் மருந்துக்கடையில் வாங்கி வந்ததில் முக்கியப்படுத்துவதற்கு ஏதுமில்லை, சகோ.

      காலகட்ட வார்த்தைகள் என்று தனியாக எதுவும் இல்லை. தனது முந்தைய தலைமுறை தொடர்ச்சிக்கான எச்சங்களை இந்தத் தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவற்றைக் குறிப்பிட நேர்ந்தது.

      ஆழ வாசித்து உங்கள் வழியில் கதையை யோசிப்பதற்கு மிக்க நன்றி, சகோ.
      இந்த வழக்கம் நீங்கள் எழுதப் போகும் கதைகளுக்கும் நல்லதொரு பயிற்சிக் களமாக அமையும். அப்படி பல எழுத்தாக்கங்களைப் படைத்திட வாழ்த்துக்கள், சகோ.

      நீக்கு
  30. மிகவும் நுட்பமான ஒரு விஷயத்தை அதுவும் பெண் சார்ந்த விஷயத்தைக் கையாண்ட விதம் நன்றாக இருக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுவரை இந்தக் கதையை வாசித்த யாரும் சொல்லாதது இது. மிக்க நன்றி தி. கீதா

      நீக்கு
  31. சப்தம் போடாமல் ரேழி பக்கம் சென்று அம்மிக்கல் பக்கம் நின்று எம்பிப் பார்த்தேன். ரோஜா செடி பக்கம் ராணியைக் காணோம். எங்கே போய் விட்டாள், இந்த காலகண்டி?../////////ஆஹா .அழகான வார்த்தை. மாயாபஜாரில் கேட்ட
    நினைவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ.கோ. மாயாபஜாரில் வருகிறதா, இந்த 'காலகண்டி?'

      எங்கள் வீட்டில் அந்தக் காலத்தில் உபயோகிக்கும் வார்த்தை இது. சரியான காலகண்டியாக இருக்கிறாளே, இவள்? என்பார்கள்.

      தெரியப்படுத்தியதர்கு மிக்க நன்றி, வல்லிம்மா.

      மறு வாசிப்புக்கு கதையை உட்படுத்தியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
      எப்படியிருக்கிறது?..

      நீக்கு
  32. 55 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட கதை என்று எச்சரிக்கையில் வாசித்ததுமே அப்போதைய வருடங்களில் கதை என்ற ஆர்வத்துடன் வாசிக்கத் தொடங்கினேன்.

    அப்போதே உங்கள் கதை பிரபல பத்திரிகையில் பிரசுரமானதற்கு வாழ்த்துகள்.

    கதையை நன்றாக எழுதியிருக்கிறீர்கள். அப்போதே அக்காலகட்டத்திலேயே ஃபார்வேர்ட் திங்கிங்க் உள்ள டீன் ஏஜ் பெண் அவள் தாயின் சிந்தனைகள் என்று கதையின் போக்கு நன்றாக உள்ளது

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க, துளசிதரன்! உங்களை இங்கு கண்டதில் மகிழ்ச்சி.

      ஃபார்வேர்ட் திங்கிங்க் எல்லாம் ஒன்றுமில்லை. அவள் தாயின் யோசிப்பிலேயே கதை போகிறது. அவ்வளவு தான். கதையை வாசித்துப் பார்த்ததற்கு மிக்க நன்றி, துளசி!

      நீக்கு

  33. பின்னெழுபதுகளில் என் உயர்நிலைப் பள்ளி co ed வகுப்பில் நடந்த நிகழ்ச்சியொன்று நினைவுக்கு வந்தது.. co education என்பார்கள் அந்த நாட்களில் பெண்கள் ஆண்களுடன் சேர்ந்து படித்தால்.. ஒரு மதியம் சயன்ஸ் டீச்சர் வகுப்பைப் பாதியில் நிறுத்தி ஒரு மாணவியை அவசரமாக அழைத்துக் கொண்டு staff room போனார்.. அரை மணி போல் திரும்பி வந்த மாணவி எங்களிடம் ரகசியமாகச் சொன்னது: டீச்சர் வயசுக்கு வந்திட்டாங்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதான் விசேஷம். மூன்றாம் சுழிக்கென்றே இப்படி ஏதாவது கிடைத்து விடுகிறது, பாருங்கள்! :))

      நீக்கு
  34. ஐம்பத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் வந்த கதையா
    வியப்பாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 60 ஆண்டுகளுக்கு முன்னான எழுத்துக்களை எல்லாம் வாசித்ததில்லையா, நீங்கள்? நீங்கள் தொலைத்து விட்ட, நாங்கள் அனுபவித்து ரசித்த பொற்காலம் அது!

      நீக்கு
  35. பதில்கள்
    1. அறுபதுகளின் மருந்துக் கடைகள் அரை மருத்துவமனைகள் எல்கே. பாபநாசம் போன்ற சிற்றூர்களில் மருந்துக் கடை ஆசாமிகள் அசல் மருத்துவர்களை விட சக்தி வாய்ந்தவர்களாக இருந்தார்கள்.
      மருந்துக் கடைகள் சீர்படத் தொடங்கியது எண்பதுகளில் தான்.

      (ஹ்ம்ம் இதை வச்சு ஒரு கதை எழுதலாம் போலருக்கே?)

      நீக்கு
    2. அறுபதுகள் வாக்கில் மருந்துக் கடைகளில் நிறைய அடாவடி தொடங்கியது என்று சொல்வார்கள்.. அதுவரையில் முன்விடுதலை நிழலில் இயங்கிய மருந்துக் கடை ஆசாமிகளுக்கு ஊரில் இன்னாருக்கு இன்ன வியாதி என்று தெரியுமாம்.. என் பெரிய தாத்தா வீட்டில் யாருமே மருத்துவமனைக்கு போகவில்லை என்று நினைக்கிறேன்.. மருந்துக் கடை தான்.
      சீனப் போருக்கு முன் மருந்துக் கடைகள் were fairly sophisticated.. இந்தியாவின் ரூபாய் மதிப்பு சரியத் தொடங்குமுன் இருந்த இந்தியாவே வேறே. அப்படியொன்றும் பின்னோக்க வேண்டியதில்லை.. நூறே வருடங்களுக்கு முன் அமெரிக்க டாலருக்கு இணையாக இருந்தது இந்திய ரூபாய்..

      நீக்கு
  36. //medical shops helping before 55 years? i doubt it//

    வாங்க, எல்,கே. என்ன சொல்கிறீர்கள் புரியவில்லை.

    வாசித்த கதை பற்றி சொல்வதற்கு இது ஒன்று தானா இருக்கிறது என்றும் தெரியவில்லை எனக்கு.

    இதற்கு முன்னால் இதே மாதிரி கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு நான் சொன்ன பதில் இது. உங்களுக்கும் உதவும் என்று நம்புகிறேன்.

    :... மெடிகல் ஷாப் என்ற ஒரு வார்த்தையை வைத்துக் கொண்டு என்ன நினைக்கிறீர்கள் என்று தெரியவில்லை. அந்தப் பெண்ணுக்கு வயிற்றுவலி அடிக்கடி வரும். அப்பொழுது பரால்கான் என்ற மாத்திரையை உபயோகிப்பது உண்டு. அதை அவள் மருந்துக்கடையில் வாங்கி வந்ததில் முக்கியப்படுத்துவதற்கு ஏதுமில்லை..."

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!