செவ்வாய், 30 ஜூன், 2020

செவ்வாய் கதை : ங்கா... (By ஜீவி )

  ங்கா...    ....... ஜீவி 
வானதி பட்டும் படாமலும்தான்  பார்த்தாள்.


இருந்தாலும் கிரிஜாவிடமிருந்து பார்வையை அவளால் அகற்றிக் கொள்ள முடியவில்லை.'என்ன அழகு?.. என்ன வாளிப்பு?..' என்று திகைத்தாள்.

"என்னடி அப்படிப் பாக்கறே?" என்று லேசாக விலகியிருந்த புடவையின் மேல் பகுதியைச் சரிபடுத்திக் கொண்ட கிரிஜா புன்னகைத்தாள்.

"ஒண்ணுமிலேடி" என்று வெளிக்குச் சொன்னாலும் வானதிக்கு ஆச்சரியம் தான்.    எப்படி இப்படி?..

இவ்வளவுக்கும் கிரிஜாவுக்கு எட்டு வயசில் ஒரு பையன். எல்.கே.ஜி. படிக்கும் பெண். இருந்தும் எப்படி இப்படி ஒரு கட்டுக் குலையாத அழகு?.. ஒரு பெண்ணுக்கு இன்னொரு பெண்ணைப் பற்றித் தெரியாதா?... உயிர்ப்புள்ள இயற்கை; உயிரோட்டத்தின் செழுமை. 

அதே நேரத்தில் தன்னைப் பற்றியும் அவளால் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. கல்யாணம் ஆகி மூன்று வருஷம் இன்னும் முழுசாக முடியவில்லை.. அதற்குள்...

"என்னடி, யோசனை?.. எந்தக் கோட்டையைப் பிடிக்கப் போறே?"

"ம்?.. என்ன கேட்டே?"

"சரியாப் போச்சு.." என்று வானதியின் கன்னத்தில் லேசாகத் தட்டினாள் கிரிஜா.   "மெத்து மெத்துனு இருக்குடி உன் கன்னம்..
கிளி கொத்தாத பழம்ன்னு சொல்லுவாங்க.. அந்த மாதிரி கன்னம்டீ
உனக்கு..."

"சீ.. ஆனாலும் நீ சுத்த மோசம்."

"என்ன, நானா,  இல்லே,   உன்னோட அவரா?"

"க்குங்.." என்று வானதி வெளிக்குச் சிணுங்கினாலும், நெஞ்சுக்கு கிரிஜா சொன்னது இனிப்பாகத் தான் இருந்தது. 

நேற்று ராத்திரி தூங்குவதற்கு பதினொன்ரைக்கு மேலாகி விட்டது. போதாக்குறைக்கு அதிகாலை நாலு மணிக்கு அலாரம் வேறு அவன் வைத்ததைப் பார்த்து அவளால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. அப்பொழுதும் தன் கணவனைப் பார்த்து இதையேதான் சொன்னாள். 'ஆனாலும் நீங்க சுத்த மோசம்!

"என்னடி, இது?..   'அவர்''ன்னு ஒரு வார்த்தைதான் சொன்னேன்; ஆகாசத்திலே பறக்கறையே?..   உன்னோட அவர் அப்படி என்னடி சொக்கு பொடி போட்டு வைச்சிருக்கார்?..சொல்லுடி, கண்ணு," என்று கிரிஜா, வானதியின் தாடையைப் பிடித்துக் கொண்டாள்.

வயசுப்  பெண்களும் ஆண்களைப்  போலவே தான்.    இரண்டு நெருங்கிய நண்பிகள் சேர்ந்து விட்டால்  ஒருத்தருக்கொருத்தர் எந்தப் பகிர்தலுக்கும் பஞ்சமே இல்லையென்று சமயங்களில்  போய்விடுகிறதுதான்.

"நான்  சொன்னா நீயும் அந்த சொக்குப்பொடியை வாங்கி ஸ்டாக் வைச்சிண்டுவியா?"  என்றாள்  வானதி.

"தாராளமாய் செய்வேன்.  எங்கே கிடக்கும்ன்னு மட்டும் சொல்லு.
உனக்கும் சேர்த்து ரெண்டு  பாக்கெட் வாங்கித் தரேன்.."

"கடைலேலாம் வாங்கினா பழசா இருக்கும்.  அவ்வளவு எஃபெக்ட் இருக்காது.   இதுக்கெல்லாம்  ஹோம் பிரிப்பரேஷன் தான் லாயக்கு. தெரிஞ்சிதா?"

"நீ பாட்டுக்க சின்ன வெங்காயம்  அஞ்சு கிலோ வாங்கி  வெயில்லே உலர்த்தின்னு.. ஆரம்பிக்காதே..    நம்மாலேலாம்   அந்த  உலர்த்தி, இடிச்சு,  பொடி பண்ணற விஷயமெல்லாம்  ஆகாது. .. "

'பின்னே?..   கஷ்டப்படாம இந்த லோகத்திலே என்ன விஷயம்டீ  சாத்தியப்படும்?..  சொல்லு.."

"ஜாலியான விஷயத்துக்கெல்லம் கஷ்டப்பட்டா  அந்த த்ரில் போயிடும்  எனக்கு.   அதான் பாக்கறேன்.."

வானதி சிரித்தாள்.

"என்னடி, சிரிக்கறே?"

"ஒண்ணுமில்லே."

"என்ன ஒண்ணுமில்லே?"

'இவள் என்னிடம் கேட்கிறாளே?' என்று வானதி தனக்குள் நினைத்துக் கொண்டாள். ஒரு பையன்,ஒரு பெண்! அதற்கு அப்புறம் 'நாமிருவர்' ஸ்லோகன்! தொட்டால் ஒட்டிக்கொள்ளும் என்கிற பயமில்லை. இருந்தும் இந்த கிரிஜா எப்படி இப்படிக் கட்டுக்குலையாமல் இருக்கிறாள்?..

வானதிக்கு  ஒரே ஆச்சரியம்.  அவள் விஷயம்ன்னா  சங்கோஜமே இல்லாமல்  கேட்டு விடுகிறாளே, நாமும்  கேட்டு விட்டால் என்ன என்று தோன்றியது.  தொண்டைக்குழி வரை கூட வார்த்தை வந்து விட்டது.     ஆனாலும் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டாள்.

'என்னதான் நெருங்கிய தோழி என்றாலும் எப்படி இதைப் போய் வெளிப்படையாய் கேட்பது' என்று அவளுக்கு ஒரு தயக்கம்.

"கைக் குழந்தையை யாரு கிட்டே விட்டுட்டு வந்திருக்கே?"  என்றாள் கிரிஜா.

"அம்மா ஊரிலேந்து  வந்திருக்கா..  குழந்தை தூங்கிண்டு இருக்கா. 
எப்படியும்  ஒன்னவர் ஆகும் அவ முழிச்சிக்க..   சித்தே பாத்துக்கோமா..  இதோ வந்திடறேன்னு   ஏடிஎம்முக்கா வந்தேன்..." என்ற  வானதி "நான் வரேன்.. கிரிஜா.." என்று கிளம்புவதற்குத் தயாரானாள்.

"ஓரு நிமிஷம்.."  என்ற  கிரிஜா,  ஹால்  பூஜை அலமாரிக் கதவைத் திறந்து  அங்கிருந்த குங்குமச் சிமிழை  எடுத்து வந்து வானதியிடம் நீட்டினாள்.

வானதி குங்குமத்தை  நெற்றியில் இட்டுக் கொண்டிருந்த பொழுது.....

திடீரென்று வாசல் பக்கம் நிழலாடியது. வேலைக்கார அம்மாள் ப்ரீதாவை விட்டு விட்டுச் சென்றாள்.

"மம்மி..."என்று வாசலிலிருந்து கத்திக்கொண்டே ப்ரீதா ஓடிவந்து கிரிஜாவைக் கட்டிக் கொண்டாள். குழந்தை கொள்ளை அழகு. வாரி அணைத்துக் கொள்ளலாம் போலிருந்தது வானதிக்கு.

"நோ..நோ.." என்று தன் கழுத்தைக் கட்டிக்கொண்ட குழந்தையின் கைகளை விலக்கி விட்டாள் கிரிஜா. "ப்ரீதா! இப்படி மேலே விழுந்து புரளக்கூடாது. டோண்ட் பி நாட்டி..." என்று எல்.கே.ஜி. குழந்தையிடம் அவள் கடுகடுப்பது வானதிக்கு என்னவோ போலிருந்தது. பத்திரமாக பொத்தி வைத்திருப்பது போல தனது இடைக்கு மேல் பகுதியை அவள் சரிசெய்து கொண்டது விநோதமாக இருந்தது வானதிக்கு.

குழந்தையின் யூனிபாரத்தைக் கழட்டி, மடித்து வைத்து அதன் காலலம்பித் துடைத்துக் கூட்டி வந்தாள் கிரிஜா. 'நர்ஸரி ஸ்கூல்னு பேரு. மாசம் இவளுக்கு மட்டும் ஐநூறுக்கு மேலே அழறோம்.. என்ன பிரயோஜம்?.. நீட்னஸைப் பத்தி வீட்லேதான் எஜூகேட் பண்ண வேண்டியிருக்கு" என்று வானதியைப் பார்த்து புன்முறுவல் செய்தாள்.

"அதெல்லாம் சரி, கிரிஜா.. குழந்தை ஆசையோட அணைக்கறச்சே கையை விலக்கி விட்டையே?.. அந்த ஒரு நொடிலே அதோட முகம் சாம்பி, எதையோ இழந்துட்ட மாதிரி..."

"ஓ...ஓ...."என்று கண்களில் நீர் தளும்ப அடக்க முடியாமல் சிரித்தாள் கிரிஜா. "ஓ.. நீ என்ன சொன்னே?.. ப்ளீஸ் ரிபீட்..."

"என்ன சொன்னேன்?.. ஆசையோட அணைக்கறச்சே.. நீ விலக்கி விடறச்சே..."

"எஸ்.. தேர் தி பாயிண்ட் இஸ்...."  என்றாள்  கிரிஜா  "ஆசையோட அணைக்கறச்சே விலக்கித்தான் விடணும்.. அனுமதிச்சா உடை கசங்கும்.. உடல் கசங்கும்..எதுவுமே கசங்கினா எனக்குப் பிடிக்காது..." என்றவளை வினோதமாகப் பார்த்தாள்,வானதி. 

கிரிஜாவே தொடர்ந்தாள்:" ரமேஷூம் ப்ரீதாவும், கைக்குழந்தைகளா இருக்கறச்சே, எங்கம்மா தாய்ப்பால் கொடுடீன்னு தலையா அடிச்சிண்டா... நா மசியலே.. எல்லாருக்குமே புட்டிப்பால் தான்! இவருக்குக் கூட குறைதான்! அதுக்காக நாம என்ன செய்ய முடியும்,வானதி?.. யூ ஸீ... எதை நாம பழகிண்டாலும், பழகிக்கலேன்னாலும் ஃபஸ்ட் ஆப் ஆல் படைப்பின் அழகை ஆராதிக்க நாம கத்துக்கணும்,வானதி!.. நீ என்ன நெனைக்கறே?... ஆம் ஐ கரெக்ட்?..."

கிரிஜாவுக்கு என்ன பதில் சொல்வது என்று வானதிக்குப் புரியவில்லை. ஆனால் கட்டுக் குலையாமல் இருக்கும் கிரிஜாவின் அழகின் ரகசியம் அவளுக்குப் புரிந்து விட்டது.

ஆரம்பத்திலிருந்தே இந்த ஜாக்கிரதை உணர்வு தனக்கு இல்லாமல் போய்விட்டதே.. 'தப்பு செய்துவிட்டோமோ' என்று நொந்து கொண்ட வானதி திரும்பக் கிடைக்காத ஏதோ ஒன்றை இழந்து விட்ட உணர்வில் வீடு திரும்பினாள்.


ன்று மாலை மணி ஆறரையிருக்கும்.

கணவன் இன்னும் வீடு திரும்பவில்லை.   அம்மா கிச்சனில் இருந்தார்கள்.

குழந்தை லாவண்யா   ஹாலில் கட்டியிருந்த தூளியில் தூங்கிக் கொண்டிருந்தாள்.

துணித் தூளி  வானதியின்  அம்மா ஏற்பாடு.   குழந்தை பிறந்ததும் தொட்டில்  கூடவே கூடாது என்று  பாட்டி சொல்லி விட்டாள்.  இதான்  குழந்தைக்கு  ஆரோக்கியமானதாம்.  சின்னஞ்சிறு குழந்தையின் முதுகுப் பகுதியை அணைத்தபடி  மிருதுவான அதன் எலும்புக்கு சுகமாக இருக்கும் என்று அனுபவப்பட்ட வயதான மனுஷி தீர்மானமாகச் சொல்லி விடவே   குழந்தைக்கு  மரத் தொட்டில் வாங்கும் எண்ணத்தைக் கைவிட்டாள்  வானதி.  

இருந்தாலும் புருஷனை ஒரு  வார்த்தை கேட்டுக் கொள்ளலாம் என்று
"என்னங்க.. அம்மா சொல்றா.." என்று விஷயத்தைச் சொன்னாள்.

"அம்மா -  ஆட்டுக்குட்டிலாம்  இருக்கட்டும்.   நீ  என்ன சொல்றே?  அதைச் சொல்லு.." என்றான் ராகவன்,  கறாராக.

"அவ்வளவு அனுபவப்பட்டவா சொல்றா..  கேட்டுக்கலாமேனுன்னு தான்.." என்று அவள் சொன்ன போது,  ராகவன் அவள் தோளைத் தொட்டான்.   தொட்டதே அழுத்தின மாதிரி இருந்தது.      "இதோ பாரு.. நீ நினைக்கறது தான் இந்த வீட்லே நடக்கணும்ன்னு...  அதான் எனக்கு சந்தோஷம்ன்னு உனக்கு நன்னாத் தெரியுமிலே?..  பின்னே,  எதுக்கு இதுக்கெல்லாம் என்னைக் கேட்டுண்டு?..    நீ என்ன நினைக்கிறையோ அதை நடத்து, கண்ணா.. "   என்று ஒரே வரியில் விஷயத்தை முடித்து விட்டான்.   அவன் அதைச் சொன்ன தோரணையே வானதிக்குக் கிறக்கமாக இருந்தது.

இந்த விஷயத்தில் எல்லாம் ராகவன் கில்லாடி.  உப்பு பெறாத விஷயங்களுக்குக் கூட பாத்து பாத்து பெண்டாட்டியை குஷியா வைச்சிண்டிருந்தாதான்,  தான் குஷியாக இருக்கலாம்  என்பதை ஐந்தாவது வேத ஸ்லோகமாகவே  மனனம் செய்து மனதில் பதித்து வைத்திருப்பவன் அவன்.  

தூளியில் விட்டிருந்த குழந்தை லாவண்யா கையையும் காலையும் உதைத்துக் கொண்டாள். தூங்கிய குழந்தை விழித்துக் கொண்டது போலிருக்கிறது என்று அருகில் சென்று வானதி தூளியை லேசாக விலக்கிப் பார்த்தாள்.

முழுமதி போல் தாயின் முகம் கண்டதும் பொக்கைவாய்ச் சிரிப்புடன் கையைக் காலை ஆட்டிப் புரண்டது குழந்தை.   தூளியை விட்டு வெளியே எடுக்க குழந்தை பண்ணிய ஆகாத்தியதைக் கண்டு அவள் நெஞ்சு பூரா பூரிப்பு பொங்கித் தளும்பியது. 

அதற்கு மேலும் தூளியில் குழந்தையைத் தவிக்க விடாது, துணியை விலக்கித் தூக்கி உச்சி முகர்ந்தாள். அன்னையின் அணைப்பின் வெதுவெதுப்பில் சுகம் கண்ட குழந்தையின் கை பரபரத்தது. பிஞ்சு விரலால் மாராப்புப் பற்றியது.

"கொஞ்சம் பொறுடி.." என்று குழந்தையைக் கொஞ்சியபடி வானதி முந்தானை விலக்கி அணைத்துக் கொண்டாள். குழந்தை முட்டி மோதியது.

ஆஹா! ஆண்டவனின் படைப்பில் எத்தனை ரகசியம்? பிஞ்சு விரல்களால் பற்றி ஈறு கவ்வி குழந்தை  ஷீரபானம் பருகுகையில்,பூமியே காலுக்கடியில் நழுவுகிற மாதிரி, கரகரவென்று நெஞ்சுக் கூட்டுக்குள் பிரவாகமாய் கங்கையே ஊற்றெடுக்கிற மாதிரி இருந்தது வானதிக்கு.

இத்தனை நாள் இயல்பாய் இருந்த செயல்  இன்று  மிகவும் அர்த்த பூர்வமாய்  புலப்பட்டது. 'அழகுக்கல்ல, இது; குழந்தைக்கு அமுது புகட்ட'என்று யாரோ கரும்பலகையில் சாக்பீஸால் எழுதி புரிய வைத்த மாதிரி, நிதர்சன நிஜத்தை உணர்வு பூர்வமாய் சுகித்த பரமானந்தத்தில் அவள் மெய் சிலிர்த்து விதிர்விதிர்த்தது. முக்கியமான முழுமுதல் உண்மையைப் புறக்கணித்து மூன்றாம்தர சிந்தனைக்கு இடம் கொடுத்தது எவ்வளவு பேதைமை என்று நாணினாள் அவள்.

கிரிஜாவிடம்  காலையில்  பேசியது நினைவில் புரண்டது.

வலது கையோடு ஒன்றி உழைக்கவே உருவான இடது கையை 'அதற்கு மட்டும்தான்' என்று நினைப்பது எவ்வளவு பைத்தியக்காரத்தனம் என்று எண்ணிக் கொண்டாள் வானதி.

==================================

58 கருத்துகள்:

  1. அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்..

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பளிங்கு தன் அண்மையின் நிறத்தைத் தன்னுள்ளே காட்டும் (எங்கத்த...இப்போல்லாம் கலர் கலராக பளிங்குக் கற்கள் வந்துவிட்டதே. அதுவும்தவிர மழமழப்பாக மெருகூட்டினால் மட்டுமே பளிங்குக் கல் தன்னை அடுத்த நிறம் காட்டும்). அதுபோல உள்ளத்து உணர்ச்சிகளை முகம் காட்டிக்கொடுத்துவிடும் (சில கல்லைளிமங்கன்கள் மனசுல என்ன நினைக்கிறான்னு முகத்துல வெளிப்படாம பார்த்துக்கறாங்களே)

      நீக்கு
    2. வ சுப மாணிக்கம் உரை: முன்னுள்ள பொருளைக் கண்ணாடி காட்டும்; உள் மிக்க உணர்ச்சியை முகம் காட்டும்.

      நீக்கு
  2. அனைவருக்கும் அன்பின் வணக்கம்...

    பதிலளிநீக்கு
  3. அழகின் ஆராதனை...
    அழகே ஆராதனை!..

    இதற்கு மேல் வேறு சொற்கள்
    என் மனதில் தோன்றவில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் வார்த்தையில் ஒரு அழகான எஸ் பி பி பாடல் நினைவுக்கு வருகிறது!

      நீக்கு
    2. ஒட்டு மொத்த பின்னூட்டம் வாசித்து விட்டீர்களா, ஐயா?

      நீக்கு
    3. படித்தேன் - படித்தேன்...

      நேற்று காலையில் கதையைப் படித்ததும் நினைத்தேன் - இன்றைய பின்னூட்டத்தில் அனல் பறக்கும் என்று...

      ஆனால் அவ்விதம் நேரவில்லை..

      அந்தக் காலத்தில் பெண்கள் வாழை நார் கொண்டு பூத்தொடுக்கும் போது

      பூக்களைக் கட்டும் போதே..

      நார் உலர்ந்து விடாதபடிக்கு நீர் கொண்டு நீவி விடுவார்கள்..

      சிறிதுநேரம் தாமதித்தாலும் நார் உலர்ந்து இற்று விடும்...

      தாங்கள் கதையைக் கையாண்ட விதம் அது மாதிரி...

      நீக்கு
    4. ஆஹா.. ஆஹா...
      நாருக்கும் நீருக்கும் அவ்வளவு நெருக்கம்.. !!
      புதன் குறள் அற்புதம்.

      நீக்கு
  4. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  5. அனைவரும் ஆரோக்கியமாகவும்,அமைதியுடனும் இருக்கப் பிரார்த்தனைகள்.

    ஜீவி சாருக்கு வணக்கம். அழகுக்காகவே இந்தக் கதை
    படைக்கப் பட்டதாகத் தோன்றுகிறது.

    அன்னையின் அரவணைப்புக்காகப் படைக்கப் பட்ட
    மழலைகள் பாக்கியம் சுலபமாகக் கிடைக்கக் கூடியது
    அல்ல.
    கணவனும் மனைவியும்
    ஆதரவுடன் இணைந்தால் மட்டுமே நல்ல குழந்தை
    உருவாகும்.
    இதை உணராத ஒரு தாய்.
    உணர்ந்த ஒரு தாய்.
    சிறப்பாகச் செல்லும் கதை நடை.
    கற்பனை வளம் நிறைந்த வர்ணனைகள்.
    கிரிஜா போன்ற பெண்கள் குறைந்து
    வானதியைப் போன்ற பெண்கள் அதிகரிக்க வேண்டும்.
    அன்பை விட அழகானது என்ன இருக்க முடியும். நன்றி ஜீவி சார்.
    நன்றி ஸ்ரீராம், கௌதமன் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி, வல்லிம்மா. அதைத் தாண்டி பிறக்கப் போகும் கைக்குழந்தையின் நலனுக்குப் போகிறது இந்தக் கதை எழுதியதற்கான உந்துதல்.

      நீக்கு
  6. அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். இனி வரும் நாட்கள் நன்மையையே தரட்டும்.

    பதிலளிநீக்கு
  7. குழந்தைக்குத் தாய்ப்பால் தான் முக்கியம் என அறிவுறுத்தும் கதை. நல்ல எடுத்துக்காட்டு. ஆனாலும் இன்றைய பெண்கள் இந்த விஷயத்தில் விழிப்புணர்வுடனேயே இருக்கிறார்கள். பெரும்பாலான தாய்மார்கள் தங்கள் குழந்தைக்குப் பால் புகட்டுவதை ஓர் யக்ஞம் மாதிரியே செய்து வருகின்றனர். இந்த விஷயத்தில் இந்தக் காலப் பெண்கள் சற்றும் பின் வாங்குவதில்லை. எங்கேனும் ஒன்றிரண்டு இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீசா மேடம்.... அறிவுறுத்தலுக்கும் கதைக்கும் அறிவியலுக்கும் சம்பந்தம் இல்லை என்றே நான் நினைக்கிறேன். ஜீவி சார் எழுதியிருப்பது மிகப் பழமையான சிந்தனை. Science ஜீவி சார் மனதில் எண்ணியிருப்பதை மிகத் தவறு என்றே சொல்லுகிறது.

      நீக்கு
  8. "ங்கா!" என்னும் தலைப்பில் "தேனம்மை லக்ஷ்மணன்" ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கிறார் என நினைக்கிறேன். தலைப்பு அவரை நினைவூட்டியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழந்தை அழுதால் 'ங்கா.. வேணுமா கண்ணு?..' என்று அதனுடன் குலாவும் முயற்சியாய் கேட்பதுண்டு. 'ங்கா..' என்பதே தாய்ப்பாலுக்கான குழந்தை பாஷை!

      அது பற்றித் தெரிந்தவர்கள் காலம் காலமாய் உபயோகிக்கும் வார்த்தை அது.


      நீக்கு
  9. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  10. நேற்று எங்கள் ப்ளாகின் வாட்சப்பின் மூலம் இன்றைய கேவாபோக. ஜீவி சார் தான் என்பது புரிந்து விட்டது! :))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் நேற்றே உடனே பதில் சொல்லலாமா என நினைத்தேன். அவர் தவறா எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு அதிகம் என்பதால் விட்டுவிட்டேன்.

      நீக்கு
  11. ஜீவி சாரின் கதை.... எ.பியில் வந்திருப்பது பாராட்டுக்குரியது. வாழ்த்துகள்.

    கதை என்ன சொல்லவருது என்பது எனக்குப் புரியலை. அல்லது எதைச் சொல்ல வருகிறாரோ அது சரியாகச் சொல்லப்படவில்லை.

    எதை கட்டுக்குலையாத அழகுன்னு சொல்றார்? அவர் கதையில் எதை படிப்பவர்கள் புரிந்துகொள்ளணும்னு நினைக்கிறாரோ அது ஆபாச சப்ஜெக்ட். உடல் வாளிப்பைச் சொல்வதாக நான் எடுத்துக்கொண்டு விமர்சிக்கிறேன்.

    /கல்யாணம் ஆகி மூன்று வருஷம் இன்னும் முழுசாக முடியவில்லை.. அதற்குள்...// - வானதி உடல் கட்டுக்குலைந்துவிட்டது, அதாவது உடல் பருமன் அதிகமாகிவிட்டது. கிரிஜா குழந்தைகள் இருந்தும் தன் உடலை மெயிண்டெயின் செய்திருக்கிறாள்.

    இதற்கும் குழந்தைகளிடம் அன்பாக இருப்பதற்கும் என்ன சம்பந்தம்? பள்ளியில் இருந்து வரும் குழந்தை, தன் சாக்ஸ் இதெல்லாம் எடுத்துவைக்காமல் அம்மா என்று கட்டிக்கொள்வதை, தன் புடவை கசங்குகிறது என்பதே காரணம் என்று வைத்துக்கொண்டாலும், அதில் என்ன தவறு இருக்கிறது? குழந்தைகளிடம் அன்பைக் காட்டவேண்டும் என்பதால் கரி படிந்த கைகளுடனும், வேர்வை ஊற்றுக்களுடனும் கசங்கிய புடவையுடனும்தான் ஒரு அம்மா இருக்கணுமா? தன் உடலை மெயிண்டெயின் செய்வது தவறா?

    /"மெத்து மெத்துனு இருக்குடி உன் கன்னம்..// - இது வானதியைப் பற்றியது. இதை அழகுக்காகச் சொல்லியிருக்கிறாரா இல்லை உடல் பெருத்துவிட்டதால் முகம் வீங்கிவிட்டது என்று சொல்லவருகிறாரா என்பது தெரியவில்லை. அழகு என்று வைத்துக்கொண்டால், வானதியும் அழகுதானே.

    என்ன சொல்ல வந்தாரோ அதை விட்டுவிட்டு, ஆபாச சப்ஜெக்டில் கதை பயணிப்பதாக என் மனதிற்குப் படுகிறது.

    மறுபடியும் ஒரு குமுதம் கதை என்றே நான் நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மறுபடியும் ஒரு குமுதம் கதை என்றே நான் நினைக்கிறேன்.// தவறில்லையே ..

      நீக்கு
  12. //உப்பு பெறாத விஷயங்களுக்குக் கூட பாத்து பாத்து பெண்டாட்டியை குஷியா வைச்சிண்டிருந்தாதான், தான் குஷியாக இருக்கலாம்//

    இது அறிந்து கொள்ள வேண்டியது.

    பதிலளிநீக்கு
  13. கதையின் கருத்து கொஞ்சம் அவுட் டேட்டடாக இருப்பது போல தோன்றுகிறது. ஏனென்றால் இப்பொழுதெல்லாம் மருத்துவ மனைகள் தாய்ப்பால் கொடுக்க வேண்டியதை வலியுறுத்துகின்றன. ஏதாவது காரணங்களால் தாய்ப்பால் கொடுக்க முடியவில்லை என்றால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும் தாய்மார்கள் அதை பாட்டிலில் சேகரித்து மற்ற குழந்தைகளுக்கு வழங்கும் வசதிகளோடு மருத்துவ மனைகள் இயங்குகின்றன. இந்தக் கால பெண்களுக்கும் இதில் நல்ல அவேர்னெஸ் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பானும்மா. மருத்துவமனைகளில்
      இதை சொல்வதை நானும் கண்டிருக்கிறேன்.
      தாய்மை என்னும் அற்புதம் உணர்ந்து அறிய வேண்டிய
      ஒரு விஷயம்.

      நீக்கு
    2. வல்லிம்மா.. டாஸ்மாக் விஷயத்திற்கும் இப்படி மருத்துவமனைகள் பிரச்சாரங்களை மேற்கொள்ளலாம் என்று தெரிகிறது. அப்பொழுது தான் அந்த புட்டிகளில் ஒட்டியிருக்கும் லேபிள் வாசகங்களை விட நல்ல பலனைத் தரலாம். என்ன நினைக்கிறீர்கள்?..;

      நீக்கு
    3. பா.வெ.!

      தாங்கள் 'மங்கையர் மலர்' போட்டிச் சிறுகதைக்கான முதற் கட்ட தேர்வாளராக இருந்திருப்பதாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

      இப்படி உங்கள் பார்வையில் 'அவுட் டேட்டடாக' இருப்பதாக நினைத்து எத்தனை சிறுகதைகளைக் கழித்துக் கட்டினீர்களோ, தெரியவில்லை!.. ஐயோ! பாவம்!

      நீக்கு
  14. பதிவிலே இருக்கும் ஒரு வரியில் :-

    மூன்றாம்தர சிந்தனை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Third rate means -- inferior; very poor

      என்று ஆங்கில அகராதி சொல்கிறது டிடி.

      நீக்கு
  15. இருவேறு எண்ணங்களில் பயணிக்கும் பெண்கள் பற்றிய கதை .

    இப்பொழுது ஆறு மாதம் மட்டும் கட்டாயம் தாய்ப்பால் ஊட்டவேண்டும் வேறு தண்ணீர் உணவுகள் ஒன்றும் கொடுக்கக் கூடாது என அறிவுறுத்தப்படுவதால் இளம் தாய்மார்களும் அழகை ஒதுக்கி பாலூட்டுவது வரவேற்கத் தக்கது.

    பதிலளிநீக்கு
  16. தாய் பால் கொடுக்கும் சுகம், பெண்மையின் முழுமை தாய்மையில் நிறைவடைவது பொன்ற கருத்துக்களை சூசகமாய் உணர்த்துகிறது கதையின் இருதி வரிகள்.
    "வலது கையோடு ஒன்றி உழைக்கவே உருவான இடது கையை 'அதற்கு மட்டும்தான்' என்று நினைப்பது எவ்வளவு பைத்தியக்காரத்தனம்".
    வாழ்த்துக்கள் ஜீவி சார்.
    கதைக்கரு ஒரு நாள் சிறுகதையில் அடங்குவது அல்ல, எனவேதான் இதன் மீது புரிதலின் சிக்கல்களும் விமர்சனங்களும் எழும்.
    தாய்ப்பால், குழந்தைகள் மற்றும் தாயின் ஆரோக்கியம், அழகு என்பது எது? தாய்ப்பால் கொடுத்தும் அழகை பேணும் வழி உள்ளதா? நவீன பழக்கவழக்கங்களின் சாதகபாதகங்கள்? வேலைக்கு செல்லும் பெண்களின் சவால்கள்? மார்பகப் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களின் காரணம்? என கதைக்களம் நாவல் அளவு வளரும் அளவு மிகப் பெரிது ஐய்யா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரு அரவிந்த், தாய்ப்பால் கொடுப்பதற்கும் மார்பகப்புற்று நோய்க்கும் தொடர்பு இருப்பதாய்த் தெரியவில்லை. பல ஆண்களுக்கும் மார்பகப் புற்று நோய் வருகிறது. குழந்தை பெற்றெடுக்காப் பெண்கள், திருமணம் ஆகாப் பெண்கள் என மார்பகப்புற்று நோய் சம்பந்தமே இல்லாமல் வருகிறது.

      நீக்கு
  17. கதை தாய்ப்பால் கொடுப்பதன் மகிமையைச் சொல்ல வருகிறது என்று புரிந்தது கடைசியில். இன்னும் கொஞ்சம் பெட்டராகச் சொல்லியிருக்கலாமோ என்று தோன்றுகிறது. தாய்ப்பால் கொடுக்கும் மகிமையை நோக்கிச் செல்லாமல் கொஞ்சம் டிவியேட் ஆனது போல இருந்தது சில உரையாடல்கள். கொஞ்சம் பொருந்தாமல்.

    நீங்கள் சிறப்பாகக் கதை எழுதக் கூடியவர். எழுத்தாளரும் கூட. கத்துக்குட்டியான நான் இப்படிச் சொல்லலாமா சொல்வது சரியா என்றும் தெரியவில்லை ஜீவி அண்ணா. யோசிப்பதுண்டு நான் கருத்து சொல்லும் முன். இன்றும் மிகவும் யோசித்துவிட்டுத்தான் கருத்திடுகிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொடுக்கும் - கொடுப்பதன் என்று வந்திருக்க வேண்டும்.

      கீதா

      நீக்கு
    2. //நான் இப்படிச் சொல்லலாமா சொல்வது சரியா என்றும் தெரியவில்லை..//

      சரியே, சகோ. இதில் எந்தத் தயக்கமும் வேண்டாம். ஒரு படைப்பை தன் பார்வையில் கணித்துச் சொல்வதற்கு சுய திறமை தான் முக்கியம். அது உங்களிடம் நிறையவே இருக்கிறது. ஆனால் அந்த சுய திறமை வெளிப்படாமல்
      எதுவோ உங்களை தடுத்து விடுவதாக உணர்கிறேன். உங்கள் சுய யோசிப்பை செயல்பட வைக்காமல் எதுவோ தடுத்து விடுகிறது. அது என்ன?..

      நீங்கள் உங்கள் கருத்தைப் பதிவிடும் முன்னால், உங்களுக்கு முன்னாலிட்ட பின்னூட்டங்களை படிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இது ஆடு தாண்டுகிற வேலை. இந்த வழியைப் பின்பற்றுவதால் தான், முன்னாலிட்ட பின்னூட்ட கருத்தைத் தொடர்ந்தே அதே கருத்தில் பின்னால் வரும் பின்னூட்டங்கள் பல இருப்பதை இந்த பகுதியில் கூட நீங்கள் பார்க்கலாம். இப்படியான பழக்கம், ஒருவரின் கருத்துச் சுதந்திர வெளிப்பாட்டை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து விடும். தான் சுயமாக சிந்தித்தது பின்னுக்குத் தள்ளப்பட்டு வேறொருவரின் கருத்தை ஒற்றி அவரின் நிழலாக அமைவதாக அமைந்து விடும்.

      நாளாவட்டத்தில் இன்னொருத்தர் என்ன சொல்கிறாரோ அதுவே தன் கருத்துமாக மாறிவிடுகிற அபாயம் இதனால் உண்டு. இதிலிருந்து தப்பிக்க ஒரே ஒரு வழி தான் இருக்கிறது.

      எதை வாசித்தாலும் அதைப் பற்றி கருத்து சொல்ல வேண்டுமெனில் பிறர் இட்ட பின்னூட்டங்களைப் பார்க்காமல் துணிந்து உங்கள் கருத்தை பதிந்து விடுங்கள்.
      உங்கள் கருத்தைப் பதிந்த பிறகு பிறர் பின்னூட்டங்களைப் பார்த்தால், நீங்கள் அவர்கள் கருத்துக்களிலிருந்து விடுபட்டு வித்தியாசமாக சிந்தித்திருப்பது உங்களுக்கே புரியும். நாளாவட்டத்தில் இந்த மாதிரி சுய சிந்தனை தான் உங்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகிற அட்டகாசமான அடையாளமாகி விடும்.
      'அந்த தி. கீதாவா? வித்தியாசமாக பின்னூட்டங்கள் இடுவதில் அவர் திறமைசாலியாயிற்றே' என்ற உங்களுக்கென்றே தனித்த அடையாளமும் கிடைக்கும்.

      மற்றவர்களிடம் இல்லாத உங்களிடம் உள்ள சில தனித்திறமைகளை மென்மேலும் வளர்த்துக் கொள்ள இதுவே சரியான வழி. சரியா, அடுத்த பதிவில் முயற்சித்துத் தான் பாருங்களேன்.

      நீக்கு
    3. இந்தக் கதையின் போக்குக்கிடையே கிரிஜா - வானதி கணவன்மார்களின் மனப்போக்குகளை லேசாக கோடி காட்டியிருக்கிறேன். கிரிஜா தன் கணவனை டாமினேட் பண்ணுகிற பெண். அவள் திருப்தி தான் அவளுக்கு முக்கியம். வேறு வழியில்லாமல் அவள் வழியிலேயே போகிற ஆசாமி ஆகிவிட்டவன் அவள் கணவன்.

      ஆனால் வானதியின் கணவனோ வானதியின் சின்னச் சின்ன திருப்திகளையே தனக்கான சந்தோஷமாகக் காட்டிக் கொண்டு தனக்கான இடத்தை அவள் மனசில் அழ பதித்து அதன் மூலம் சந்தோஷம் காண்கிறான். இதைத் தான் தேவக்கோட்டையார் மிக உன்னிப்பாக கவனித்து சொல்லியிருக்கிறார்.

      இடையே இந்த கணவன்மார்களின் கதையும் ஓடுவதால் உங்களுக்கு அந்த டிவியேஷன் தெரிகிறது.

      சிறுகதையே ஆயினும் ஒரே திக்கில் பயணிக்காமல் இங்கே அங்கே சில விஷயங்களுக்கு ஊடே பயணிக்கிற மாதிரி அமைத்தால் நன்றாக இருக்கும்.
      அதற்காகத் தான் இந்த ஜோடனைகள் எல்லாம்.

      நீக்கு
  18. ஜீ.வி. சார், அழகான க்ருத்துள்ள கதை. எங்கள் அலுவலகத்தில் திருமணமான சில சிறு வயது பெண்கள் பிள்ளை பேருக்கு பிறகு கிரிஜாவைப் போல்தான் இருக்கின்றார்கள். வீட்டில் சரியாக சொல்லிக் கொடுக்கவில்லையோ அல்லது கணவனின் வற்புறத்தலோ தெரியவில்லை. தாய் பால் கொடுத்தால் அழகு குலைந்து விடும் என்று நம்பி அக்குழந்தையை தண்டிக்கிறார்கள். அதன் சத்தும் பிற்காலத்தில் அதன் பயனும் அவர்களுக்கு யாரும் எடுத்து கூறவில்லை போலிருக்கின்றது.
    இக்காலத்தில் தங்கள் வசதியையும் மீறி தங்கள் அழகை காபந்து படுத்தும் ஓர் வினோதத்தை நானும் கவனித்தேன். வருந்தத் தக்கது.
    இக்கருத்தை ஓர் கதையாக வெளி கொணர்ந்ததற்கு நன்றி.
    இக்கருத்து இக்காலப் பெண்களை சென்றடைய வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக்காலத்து இளம்பெண்கள் இந்த விஷயத்தில் விழிப்புணர்வுடன் இருப்பதாய்த் தான் தெரிகிறது. எங்கானும் ஒரு சிலர் வேறு மாதிரி இருந்திருக்கலாம். ஆனால் பெரும்பான்மைப் பெண்கள் புரிதலுடனே இருக்கின்றனர். குறைந்தது ஒரு வயது வரைக்குமாவது தாய்ப்பால் கொடுக்கின்றனர். பானுமதி சொன்னது போல் தாய்ப்பால் சேகரிக்கும் வங்கிகளும் உள்ளன.

      நீக்கு
  19. பின்னூட்டங்கள் உற்சாகத்தைக் கொடுக்கிறது.
    வாசித்து வருகிறேன். கதாசிரியன் இடையில் குறுக்கிடக் கூடாது. பின்னால் வருகிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  20. கருத்துள்ள கதை. பெண்ணின் உண்மை அழகு எதுவென்று எடுத்துக்காட்டும் கதை. கதை ஔட்டேடட் என்று குறிப்பிட்டிருந்தது ஒரு கருத்து. அதேநேரம் இன்னொரு நபர் தங்கள் அலுவலக பெண்கள் அப்படி இருப்பதை சொல்லியிருந்தார்கள். எதுவும் இன்னும் முழுமையாக ஓய்ந்துவிடவில்லை. எங்காவது இந்த நிகழ்வுகள் இன்னும் நடந்துகொண்டிருக்கும். அப்படிபட்ட நிகழ்வுகளின் தாக்கமில்லாமல் இந்தக் கதை எழுதப்பட்டிருக்கமுடியாது. வாழ்த்துக்கள் ஜீவி சார்.

    பதிலளிநீக்கு
  21. நல்ல கதை.

    நேற்று WhatsApp-ல் கேட்ட போதே, ஜீவி ஐயாவின் கதையாக இருக்கக்கூடும் என நினைத்தேன். கேட்கவில்லை - எப்படியும் தெரிந்து விடுமே என! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், எனக்கும் தோன்றியது தான். ஆனால் வேறு ஒரு விவாதம் நடைபெறும்போது குறுக்கிட்டால் சரியாய் வராதுனு பேசாமல் இருந்தேன்.

      நீக்கு
  22. எனக்கு நினைவு தெரிந்து முன்னெல்லாம் பள்ளியிலிருந்து வந்ததும் அம்மாவைக் கட்டிக்கொள்ளவெல்லாம் முடியாது! தொட முடியாது. நேரே குளியலறைக்குப் போய்ப் பள்ளித்துணிகளை மாற்றிக்கொண்டு அவற்றைக் கையோடு நனைத்தும் வைக்க வேண்டும். பின்னர் கை, கால்கள் அலம்பிக்கொண்டு அங்கே கொடியில் இருக்கும் மாற்றுத்துணிகளை அணிந்த பின்னரே வீட்டில் வந்து அம்மாவைப் பார்க்கவோ/தொடவோ முடியும். பள்ளிக்கூடத்து விழுப்பு எனச் சொல்வார்கள். தாத்தா வீட்டில் அதற்கும் மேலே. வேல் வைத்து தாத்தா தினம் பூஜை செய்வார் என்பதால் வீட்டைச் சுற்றிக்கொண்டு கொல்லைப்பக்கமாகத் தான் வரணும். அதெல்லாம் ஒரு காலம். அறுபதுகளிலேயே அவை எல்லாம் மாறிவிட்டன.

    பதிலளிநீக்கு
  23. கருத்துள்ள கதை. படித்து வரும் போதே முடிவு யூகித்துவிட முடிந்தது கொஞ்சம். என்றாலும் சொல்ல வந்த் கருத்து நல்ல கருத்து. ஒரு சிலர் அப்படி இருக்கலாம் ஆனால் இப்போது மருத்துவர்களே தாய்ப்பால் கொடுக்க அறிவுரை செய்வதால் விழிப்புணர்வு நன்றாகவே இருக்கிறது என்றே தோன்றுகிறது.

    வாழ்த்துகள்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  24. 'நல்ல கதைகள் அந்தக் கதைக்கான புரிதலைக் கொண்டுள்ளோரிடம் தானே பேசிக் கொள்ளும்' என்பார் என் முன்னோடிகளில் ஒருவர். அவர் இன்றும் நாம் நினைவில் கொண்டிருக்கும் சாதனைகள் புரிந்த எழுத்தாளர்.

    இருப்பினும் பதிவுலகில் எது பற்றி எழுதினாலும் அதுபற்றிய அபிப்ராயங்களைப் பகிர்ந்து கொள்வது ஒரு மரபாக இருப்பதினால் இந்தக் கதை சம்பந்தப்பட்ட என்ற அளவில் சில பகிர்தல்களுக்கு இந்தக் கதையை எழுதியவன் என்ற காரணத்தினால் விளக்கம் சொல்ல முனைகிறேன்.

    கைக்குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி கதைகள் எழுத வேண்டி பிரபல பத்திரிகை ஒன்றில் பரிசுப் போட்டி அறிவித்திருந்தார்கள். அந்தப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை இது.

    இந்தப் பின்னூட்டங்களில் பிரதானமாக எடுத்தாளப்பட்ட கருத்து ஒன்று, 'இந்தக் கதை காலத்திற்கு ஏற்பவான ஒன்றா?' என்பது. பொதுவாக அந்தந்த காலத்திற்கு பொருந்தி வருகிற கதைகளைத் தான் அந்தந்த காலகட்டத்தில் எழுத வேண்டும் என்று எந்த கோட்பாடும் கிடையாது. சொல்லப் போனால் சங்ககால பாடல்களுக்கு பொருத்தமான இந்தக் கால நிகழ்வுகளை என் பதிவில் இப்பொழுது நான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
    எக்காலத்துக் கதைகளூம் நாம் வாழ்கின்ற காலத்தில் வாசிப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கும் என்பது தான் கதைகளுக்கான செளகரியம். அதனால் நிகழ்கால நிகழ்வுகளைக் கொண்டு தான் கதை பின்ன வேண்டும் என்ற அவசியம் எக்காலத்தும் இல்லாது போகிறது. இந்தப் புரிதல் நமக்கிருந்தால் வழக்கமாக இந்தப் பகுதியில் இடப்படும் 'கதைக்கால நிர்ணயம்' குறித்து நாம் கொண்டிருக்கிற கருத்துக்கள் மாறும். மாற வேண்டும் என்பது புரிதலுடன் கூடிய எதிர்ப்பார்ப்பு.


    பதிலளிநீக்கு
  25. சரி, நம்ம கதைக்கு வருவோம்.



    நண்பர் அரவிந்த் காவியம் போலச் சொல்லியிருந்தார். 'இந்தக் கதைக்கரு ஒரு நாள் சிறுகதையில் அடங்குவது இல்லை' என்று சொல்லி அதற்கான காரணங்களைச் அடுக்கியிருந்தார். திருமதி ரமாஸ்ரீ அவர்களோ ஒருபடி மேலே போய் யதார்த்த நிகழ்கால உண்மைகளைக் குறிப்பிட்டிருந்தார்.



    இந்தக் கதைக்கு மட்டும் அல்ல. எல்லா நிகழ்வுகளும் சங்கிலி போல தொடர்பு கொண்டிருப்பதால் ஒன்றின் மூல விஷயத்தின் தொடர்ச்சியாகத் தான் பிற்காலத்தில் வரும் பிறிதொன்றும் இருக்கும். இன்றைய அழகு நிலையங்கள் மவுசு பெற்றிருப்பதற்கு இப்படியான முற்கால தொடர்ச்சியான காரணங்கள் பல. பல் வலி வந்தால் தான் பல் வைத்தியம் என்று இல்லை; முக அழகிற்காக பல் வரிசையை சீர்படுத்திக் கொள்வது என்று அது 'அழகு' சம்பந்தப்பட்ட ஒரு விஷயமாகவே ஆகி விட்டது. இப்படி பல.



    ஒரு வேடிக்கை என்னவென்றால் போன வாரம் கூட ஒரு தொலக்காட்சி சேனலில் பெண் மருத்துவர் ஒருவர் 'கைக்குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டிய அவசியம் பற்றி' அதை வலியுறுத்தி நீண்ட ஒரு பேட்டி ஒன்று கொடுத்திருந்தார்கள். அதனால் ராமாஸ்ரீ அவர்கள் சரியாகத் தான் சொல்லியிருக்கிறார் என்று நினைத்துக் கொண்டேன். அபிநயா அவர்களும் எதுவும் இன்னும் முழுமையாக ஓய்ந்து விடவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்கள். முழுமையான ஓய்தல் என்று எதற்கும் இல்லை என்பது தான் இயற்கை விதி. வாலு போய் கத்தி வந்த கதையாய், ஒன்று இன்னொரு ரூபம் எடுக்கும். அவ்வளவு தான்.



    கதை ஆரம்பத்திலேயே கீதாம்மா அவர்கள் கதையின் ஜீவனை உணர்ந்தார்கள். ஆனால் கால நிர்ணயம் சம்பந்தப்பட்டு அவர் கொண்டுள்ள கருத்துக்களால் அவர் நினைத்ததை சொல்ல முடியாமல் போய் விட்டது. அதனால் கதை எழுதுகிறவர்களை "எந்தக் காலத்துக் கதை இது?" என்று மட்டும் கேட்காதீர்கள். எந்தக் காலத்துக் கதையையும் எந்தக் காலத்திலும் படிக்கலாம். கால மாற்றத்தினால் கதைகள் பழமையாகவோ, பழுத்பட்டோ போய்விடாது. அல்லாவுதீனும் அற்புத விளக்கையும்,

    விக்கிரமாதித்தன் கதைகளையும் எக்காலத்தும் வாசிக்கலாம். அதனால் எதுவுமே, அது என்ன, ஆங்! அவுட் டேட்டடு இல்லை! இதை நினைவில் கொள்வீர்.



    இரு பெண்களின் இருவேறு எண்ணங்களில் பயணிக்கும் கதை என்று மாதேவி சொல்லியிருப்பது மட்டுமல்ல, உன்னிப்பாகப் பார்த்தால் அவர்களின் கணவன்மார்களும் இந்தக் கதையில் ஊடாடி வருவது தெரியும். தேவகோட்டையார் அதை மிகக் கூர்மையாகக் கவனித்திருக்கிறார். ரமாஸ்ரீ அவர்களோ 'அல்லது கணவனின் வற்புறுத்தலாலோ' என்று தன் பின்னூட்டத்தில் ஒரு வரி எழுதியிருக்கிறார் பாருங்கள், இந்த ஒரு வரியே இன்னொரு கதை எழுத கருவாகிப் போகும். இந்த மாதிரி தம்பதிகள் கொள்ளும் சில முடிவுகள், "இப்பத்தானே திருமணம் ஆகியிருக்கிறது? அதற்குள் என்ன அவசரம்? இன்னும் அஞ்சு வருஷம் கழித்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம்' என்பது வரை போயிருக்கிறது. பெண்கள் கட்டுப்பாடோடு மேனி அழகைப் பராமரிப்பதில் கணவன்மார்களின் ஈடுபாடும் கலந்தேயிருப்பது

    இந்தக் காலத்து இன்னொரு பரிணாமம்.



    அடுத்து 'எங்கள் பிளாக் வாட்ஸாப்' க்ரூப்பில் செவ்வாய் கே.வா.போ.கதை எழுதுவோர் பற்றி யூகமாக நான் குறிப்பிட்டிருந்த விஷயம். எந்த காரணத்தினாலோ அதுவும் இங்கு குறிப்பிடப்பட்டது.



    எனக்கும் எபிக்கும் நீண்ட நெடிய தொடர்பு உண்டு. சொல்லப்போனால் இந்த கே.வா.போ.கதைப் பகுதியின் தொடக்கக் கதையே என் கதை தான். அது எபி வேண்டி விரும்பிப் போட்ட கதையும் கூட. ஆரம்ப காலத்திலிருந்தே பார்த்து வருவதினால் இன்றைய எபியின் வளர்ச்சியை மனதார உணர்கிற வாய்ப்பு கிட்டியிருக்கிறது. புதுசு புதுசாக வாசகர்கள் எபியின் பதிவுகளை வாசிக்கிற பேறு வாய்க்கும் போதெல்லாம் அவர்கள் பங்கு கொள்ளும் வாய்ப்பும் கிட்டும் பொழுது

    எபியின் வளர்ச்சியின் வேகம் தன்னில் தானே நிகழ்கிறது என்பதை உணர்கிறேன்.



    அந்த அடிப்படையில் எபி வாட்ஸாப் குழுவில் தொடர்ச்சியாக விவாதிக்கும் 'சிலர்' எழுத்தாற்றலை உணரும் பொழுது அவர்களும் எபி பதிவுகளுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்று இயல்பாகவே நினைப்பேன். அந்த விருப்பத்தின் அடிப்படையில் தான் 'அடுத்த செவ்வாயில் யார் எழுதுவார்கள்' என்ற யூகத்தைச் சொல்லியிருந்தேன். 'ஒரு கதையை வாசித்தால் அதை எப்படி உள்வாங்கிக் கொள்ள வேண்டும்' என்று வாசிப்பு ரசனை கொண்ட பலர் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டால் அதுவே மென்மேலும் வாசிப்பு ரசனையை கூட்ட வழிகோலும்.



    இந்த ஒட்டுமொத்த கருத்துக்களையே இந்தப் பதிவுக்கான என் மறுமொழியாகக் கொள்ள வேண்டுகிறேன். உங்கள் அன்பிற்கு நன்றி.



    வாய்ப்பிருந்தால் அடுத்த கதையில் சந்திக்கலாம்.



    என்றும் உங்கள்,

    ஜீவி

    பதிலளிநீக்கு
  26. அருமையான பதிவு. தன் இளமையை காத்துக்கொள்ள தான் பெற்ற குழந்தைக்கு சொந்தமான தாய்ப்பாலை கொடுக்காமல் புட்டிபால் புகட்டும் பெண்களுக்கு புத்திபால் புகட்டும் பதிவு..

    பதிலளிநீக்கு
  27. வாங்க சார்! 'தான் பெற்ற குழந்தைக்கு சொந்தமான' என்று நீங்கள் சொல்லியிருப்பது இந்தக் கதைக்கே புதிய வெளிச்சம் பாய்ச்சிய மாதிரி இருந்தது. அந்த 'சொந்தத்தை' நீங்கள் அடிக்கோடிட்டு சொல்லியிருப்பது அருமை. புதிய புதிய கருத்துக்களைப் பார்க்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தாய்ப்பால் அந்தக் குழந்தைக்கு மட்டுமேயான இறைவனின் அருட் கொடை! அதை அந்தக் குழந்தைக்குக் கொடுக்காமல் ஏமாற்றுவது என்பது?.. என்னத்தைச் சொல்ல?..

    பசுவின் மடியில் சுரக்கிற பால் கூட அந்தக் கன்றுக்குட்டிக்காகத் தானே?.. 'வைக்கோலாலே கன்னுக்குட்டி மாடு எப்போ போட்டுது? கக்கத்திலே தூக்கி வைச்சா கத்தலையே என்னது?' என்ற கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள் நினைவுக்கு வந்தது. தங்கள் வருகைக்கும் ஆழ்ந்த கருத்துக்கும் மிக்க நன்றி, சார்!.

    பதிலளிநீக்கு
  28. பொதுவாக கதையின் கருத்தை நன்விவாதிக்க மாட்டேன் அது ஆசிரியரின் என்ணம் கற்பனை என்றி இருண்டு விடுவேன் கதை சொல்லும் முறையைதான் கவனிப்பேன் ஒரு கருத்தை உள்வாங்கி எண்ணங்கள்போகிற போக்கில் போக விட்டு எழுதிய கதை என்றே தெரிகிறது இப்போதெல்லாம் செவ்வாயில் வரும்கதைதகள் கேட்டு வாங்கியவையா என்னும் சந்தேகம் வருகிறது

    பதிலளிநீக்கு
  29. அபுரி புரியறத்துக்கே ரொம்ப நாளாச்சு...

    பதிலளிநீக்கு
  30. நல்ல கதைதான் . எதுவும் நம் பார்வையில் உள்ளது.

    பதிலளிநீக்கு
  31. வாசித்ததற்கு நன்றி, எல். கே.

    நேரடியான பார்வையை பலர் பிரதிபலிக்காதது தான் பல பின்னுட்டங்கள் மூலம் நான் பெற்ற அனுபவம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!