திங்கள், 29 ஜூன், 2020

'திங்க'க்கிழமை :  சிறுதானிய கஞ்சி  - கீதா ரெங்கன் ரெஸிப்பி 



சிறுதானிய கஞ்சி

எல்லோருக்கும் எங்கள் இனிய அன்பான வணக்கம். இன்று மிக மிக மிக சிம்பிளான அதே சமயம் ஒரு பேச்சுலர் ரெசிப்பி. என் மகனுக்குச் சொல்லிக் கொடுத்தது. சோசியல் டிஸ்டன்ஸ் இருந்தாலும் நம்ம பூஸார், தான் மாஸ்க் போட்டுக் கொண்டு கண்டிப்பாக வந்து எனக்கு எல்லாம் எடுத்துத் தருவதாக அன்புடன் சொன்னதால் (பாருங்க என்னா கடமை உணர்ச்சி!!!) அவரும் கூடவே இங்கு. அவரது செக் இல்லாமலா? எனவே மூவரும் கிச்சனுக்குள்.

இப்ப நேரா ரெசிப்பிக்குப் போகலாம். இதை அப்படியே கெட்டியாகவும் சாப்பிடலாம். அல்லது சுடுநீர் கலந்து நெகிழ்த்தியும் குடிக்கலாம். அல்லது செமிசாலிடாகவும் சாப்பிடலாம். ரஸம் டேஸ்ட் தான் கிட்டத்தட்ட.  பொங்கலாகவும் செய்யலாம். அவனுக்குப் பல சமயங்களில் சாதம் தனியாக, ரசம் தனியாக என்று செய்ய நேரம் இருப்பதில்லை என்பதால் இப்படி முதலில் அரிசியில் சொல்லிக் கொடுத்தேன். அப்புறம் எல்லா தானியங்களிலும். 



3 செப்பரேட்டர் உள்ள குக்கர் என்றால் ஒரு பாத்திரத்தில் ப்ளெயின் சாதத்திற்கு அரிசி களைந்து வைத்துவிட்டு, மற்றொரு பாத்திரத்தில் என்ன காய் அன்று பயன் படுத்துகிறோமோ அக்காயைப் போட்டு உப்பு, காரம் மஞ்சள் பொடி போட்டு தாளித்து நன்றாக மிக்ஸ் செய்துவிட்டு, மற்றொரு பாத்திரத்தில் இன்றைய கஞ்சி/ரஸம் சாதம் பாக்ஸில் கொடுத்திருப்பது போல் போட்டு குக்கரில் செட் செய்து வைத்துவிட்டால் வெயிட்டும் போட்டு 20 நிமிடத்தில் ரெடியாகிவிடும்.


காயை வெளியில் எடுத்து தேங்காய் சேர்க்கப் பிடித்தால் சேர்த்துக் கொள்ளலாம்.


பொரியல் அல்லாமல்  கூட்டு என்றால் கூட்டிற்கான காய்,  பருப்பு சேர்ப்பதாக இருந்தால் பருப்பு எல்லாம் சேர்த்து) அதை ஒரு செப்பரேட்டரில் போட்டு தாளித்தும் போட்டு, உப்பு, மஞ்சள் பொடி, அப்புறம் அரைத்து விடுவதானால் அரைத்து விட்டுக் கலந்து வைத்துவிட்டால் ஒரே நேரத்தில் சாதம், பொரியல்/கூட்டு, ஒரு சாலிட் ப்ரேக்ஃபாஸ்ட் கஞ்சி அல்லது ரசம் ஸ்டைல் ஒரு பதார்த்தம் ரெடி. கூட்டிற்கு அவனுக்கு நான் பல வகைப் பொடிகள் கொடுத்திருப்பதால் அதைப் பயன்படுத்திக் கொள்வான். அரைத்துவிடுவது என்பது எல்லாம் நேரம் இருந்தால் மட்டுமே.


மகனுக்கு இது மிகவும் எளிதாக இருப்பதால் இப்படிச் சொல்லிக் கொடுத்ததைச் செய்து கொள்கிறான். குக்கர் வேலை செய்யும் சமயத்தில் காலேஜ் க்ளினிக்கிற்குக் கிளம்பும் வேலைகளை முடித்து விட சௌகர்யமாக இருக்கிறது என்றும் சொன்னான். அவன் இன்னும் நிறைய அவனாகவே செய்து கொள்கிறான். அந்த ரெசிப்பிஸ் எனக்கும் சொல்வான் ஆனால் எப்போதேனும். நேரம் கிடைப்பதுதான் அவனுக்குச் சிரமமாக இருக்கிறது.


இந்தக் கஞ்சிக்கு வேறு விதத்தில் செய்யலாம் என்று அவனுக்குச் சொல்லியதையும் இங்கு சொல்கிறேன்.

இதில் மிளகு பூண்டு என்று தாளிப்பதற்குப் பதில் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம், ஜீரகம் தாளித்தும் செய்யலாம்.

சிறு தானியத்திற்குப் பதில் அரிசி/பச்சரிசி நொய்/புழுங்கரிசி நொய்/ஓட்ஸ்/அவல்/ QUINOVA- என்று எது வேண்டுமானாலும் பேஸாகப் பயன்படுத்தலாம். நான் QUINOVA விலும் செய்தேன். அதைச் செய்யும் போது படம் எடுக்க முடியாமல் போனது.

பருப்பு எதுவும் இல்லாமலும் செய்யலாம். (கொஞ்சம் உடம்பு சரியில்லாமல் இருந்தால் லைட்டாக இருக்கும்.)

தாளிப்பின் கூடவே கொஞ்சம் ரசப்பொடியும் கலந்து வேக வைக்கலாம்.

தாளித்து வதக்குவதுடன் தக்காளியும் சேர்த்து சும்மா லைட்டா வதக்கி சேர்த்துக் கொள்ளலாம்.

தாளிப்பிள் ஜீரகத்துடன் கொஞ்சம் கருஞ்சீரகம் சேர்த்து தாளிக்கலாம். சோம்பும் கூட கொஞ்சமாகத் தாளிக்கலாம். (நான் செய்த போது கருஞ்சீரகம் காலியாகி இருந்தது அதனால் போடவில்லை)

விருப்பம் இருந்தால், வீட்டில் வேப்பம் பூ ஸ்டாக் இருந்தால் அதையும் கொஞ்சம் நெய்யில் வறுத்து இதில் கலந்து சாப்பிடலாம்.
கூடவே கொஞ்சம் இஞ்சி அல்லது சுக்குப் பொடியும் கலந்து செய்யலாம்.

பிடித்தால் தாளிப்பில் சின்ன வெங்காயம் 4, 5 சேர்த்துக் கொள்ளலாம்.

இதோடு பீன்ஸ், காரட், பட்டாணி, காலிஃபளவர், கோஸ் என்று எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் சேர்த்தும் செய்யலாம். (மகன் அம்மா ஆல் இன் ஒன் என்று  கேட்ட போது சொன்னது. பாண்டிச்சேரியில் இருந்தப்பவே நான் சென்னைக்கு வரும் சமயம் அவன் இப்படித்தான் சமைத்துக் கொள்வான்.)  

இப்படி நம், ஏஞ்சல் சொல்லுவது போல் மானே தேனே என்று சேர்த்துச் செய்யலாம்.

எபி ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி சொல்லி மீண்டும் வேறு ஒரு திங்க வுடன் திங்க பதிவில் சந்திப்போம்!

Thanks For Helping Around The Kitchen, Kitty - Señor GIF ...
ஆஆஆஆ! கஷ்டப்பட்டு சமைச்சதெல்லாம் இப்படி வெட்டுதே! இனிமேல் ஓவர் டு ஏஞ்சல் வந்து சொல்லுவாங்க இதுல யார் ஸ்காட்லான்ட் யார் லண்டன்னு!!!!

90 கருத்துகள்:

  1. இனிய திங்கள் காலை வணக்கம்.
    அனைவரும் ஆரோக்கியத்துடன் இருக்க இறைவனிடம் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா. வணக்கம். இந்த வாரம் இனிதே தொடங்கட்டும்.

      நீக்கு
    2. அன்பு ஸ்ரீராம் இனிய காலை வணக்கம்மா. எல்லோரும் பத்திரமாக
      இருங்கள்.

      நீக்கு
  2. அருமையான சத்தான உணவு. மகனுக்கு
    எப்படி பொடி எல்லாம் செய்து அனுப்புகிறீர்கள்
    கீதாமா?
    ஒன் பாட் குக்கிங்க் மாதிரி ஒரே குக்கரில் பல
    தயாரிப்புகள் செய்த காலம் நினைவுக்கு வருகிறது. இங்கே
    கினோவா உபயோகம் செய்வதுண்டு.
    பேரனுக்கு பெருங்காயம் பிடிக்கும். மிளகு சீரகம்
    இந்தக் காலத்தில்
    சேர்க்க வேண்டிய விஷயம். ருசியாகச் சுடச் சுட செய்யலாம். நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெரி வெரி சாரிம்மா...காலையில் உங்கள் கருத்துக்கு பதில் கொடுக்காமல் எப்படியோ மிஸ் ஆகியிருக்கு. ஸாரி அம்மா

      //எப்படி பொடி எல்லாம் செய்து அனுப்புகிறீர்கள்
      கீதாமா?//

      ஹையோ அம்மா...இங்க சீனியர் குயந்தை இருக்காங்க!!!! ஹா ஹ ஹா ஹா அவங்க எக்ஸ்பெர்ட் ஆக்கும். மீ நத்திங்க்.

      ஆமாம் அங்கு கினோவா கிடைக்கும். எனக்கு அங்கிருந்து வரும் உறவினர் கொடுத்தது இருந்தது அம்மா.

      //பேரனுக்கு பெருங்காயம் பிடிக்கும். // அப்ப செய்யலாமே.

      மிக்க நன்றி வல்லிம்மா

      கீதா

      நீக்கு
    2. மகனுக்கு
      எப்படி பொடி எல்லாம் செய்து அனுப்புகிறீர்கள்
      கீதாமா?//

      வல்லிம்மா அவன் இங்கிருந்து போகும் போதே கொடுத்துவிட்டேன். அதன் பின் அவன் 2 வருடம் முன்பு விசா மாற்ற ஜஸ்ட் ஒரு வாரம் வந்தப்ப நிறைய வீட்டில் செய்து கொடுத்துவிட்டேன். அப்போது அவனுக்கு வேறு எதுவும் இங்கிருந்து கொண்டு செல்லவில்லை. எல்லாமே அல்மோஸ்ட் ப்ரிப்பேர்ட். ரெடிமேட்னு கூடச் சொல்லலாம். சென்ற வருடம் கொஞ்சம் அனுப்பிக் கொடுத்தேன். போஸ்டில்.

      மற்றபடி அவனே செய்து கொள்வான் என்னவென்றால் நேரம் தான் பிரச்சனை. ரெசிடென்ஸி க்ளினிக் வொர்க், அதற்கான படித்தம், ஜேர்னல் க்ளப் ப்ரிப்பரேஷன், எம் எஸ் செய்வதற்குப் படித்தம், தீசிஸ் பேப்பர் ப்ரிப்பரேஷன் என்று இருப்பதால். இரு நாட்கள் மூன்று நாட்களுக்கு என்று நேரம் கிடைக்கறப்ப சமைத்து வைத்துக் கொள்கிறான். அங்கு அவன் ரெடிமேட் அல்லது பேக்கரி ஐட்டம்ஸ் வாங்கிச் சாப்பிடுவதில்லை. ரொம்ப அபூர்வம். கொஞ்சம் ஹெல்த் கான்ஷியஸ் பையன் ஹா ஹா ஹா ஹா என்னிடமும் கேட்டுக் கொள்வான் இடையிடையே.

      கீதா

      நீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  5. முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்..

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு சின்ன வயதிலிருந்தே, முயற்சியின்மை இன்மை புகுத்திவிடும் என்றே பாடம். இன்றுதான் சரியான வார்த்தை தெரிந்தது.

      நீக்கு
  6. அனைவருக்கும் அன்பின் வணக்கம்...

    பதிலளிநீக்கு
  7. அவரவரும் சிறுதானியங்களைத் தம்முடைய உணவில் சேர்த்துக் கொள்வது இன்றைய கால கட்டத்தில் மிக மிக அவசியமாகின்றது...

    அந்த வகையில் அருமையான குறிப்புகள்..

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை செல்வராஜு சார்.... எங்கள் வட்டத்திலும் (சொந்தத்தில்) பலர் சிறுதானியப் பிரியர்களாக ஆகிவிட்டனர்.

      இதெல்லாம் எங்கள் வழக்கத்திலேயே கிடையாது.

      சம்பந்தமில்லாமல், கம்பு, சிறுதானியம், ஓட்ஸ் (இதன் ஒரிஜினல் கன்ஸ்யூமர் குதிரை) என்று விளம்பரங்கள் மூலம் உணவுப் பழக்கத்தை மாற்றுவது கேலிக்குரியது அல்லவா?

      நீக்கு
    2. அதே துரை அண்ணா. துரை அண்ணா உங்க கருத்துக்கு மிக்க நன்றி

      கீதா

      நீக்கு
    3. நெல்லை உணவுப் பழக்கம் என்பது பொதுவாகச் சொல்லக் கூடாது. தனிப்பட்ட ஒன்று.

      சிறுதானியங்கள் பழைய காலத்திலிருந்தே இருக்கு கொஞ்சம் விவசயாம் கட்டுரைகளில் இது நிறைய இருக்கு. பண்டைய கலெவ்ட்டுகள் சமையல் பார்த்தால் தெரியும்

      கீதா

      நீக்கு
    4. நெல்லை அப்படிப் பார்த்தா மைக்ரோவேன் யூச் செய்வது மிகவும் கெடுதல்னு சிலர் சொல்லித்தானே வருகின்றனர்?

      கேஸ் வந்தப்பவும் கூட அப்படி சொன்னாங்க..ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    5. நெல்லை இப்ப சொல்றத கேட்டீங்கனா ஓடிப் போயிடுவீங்க...ஹா ஹா ஹா என்னன்னா நட்பு ஒருவர் எந்த தானியமும் சாப்பிடுவதில்லை. அரிசி உட்பட.

      அவர் சர்க்கரை வியாதி, ஹார்ட் பிரச்சனை பைபாஸ் எல்லாம் ஆனவர். அவர்க்கு அவர் மனைவி காலிஃப்ளவரை உதிர்த்து மிக மிகச் சின்னதாகச் செய்து அதையே ஸ்டீம் செய்து அரிசி/தானிய சாதத்திற்குப் பதிலாக அதை வைத்துக் கொண்டு அதோடு சாம்பார், ரசம் மற்ற காய்கள் என்று தொட்டுக் கொண்டுச் சாப்பிட்டு வருகிறார். அப்படி ஒன்றும் வித்தியாசம் ஒன்றுமே தெரியவில்லை என்றார்.

      நான் சென்னைய்ல் இருந்தவரை இந்த நட்பு வட்டம் அடிக்கடி என் மாமியார் வீட்டில் ஒரு கெட்டுகெதர் போடுவாங்க பாட்லக். கேட்டேன் அப்ப இனி கல்யாணச் சாப்பாடு கெட்டுகெதர் எல்லாம் அவுட் ஆஃப் க்வெஷனான்னு

      ஆமாம் என்றார். இப்போ அவருக்கு உடலநலம் நன்றாக இருப்பதாகச் சொன்னார். அவர் மனைவியும் எனக்கு நட்புதான். என்னை அவர் மனைவியோடு பேசச் சொல்லிக் கேட்டுக்கொள்ளச் சொல்லியிருக்கிறார். இனிதன பேசிக் கேட்க வேண்டும். ஹா ஹா ஹா ஹா நான் இங்கு திங்கவுக்குப் போடுவேனா ந்னு இப்பவே நெல்லை யோசித்து அப்பால போவது தெரியுதே ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    6. தி/கீதா, என்னோட நண்பர் தி.ரா.ச. என்பவர் (வல்லிக்கும் தெரியும். எல்கேக்கும் தெரிந்தவரே) சர்க்கரை அளவு 500க்குப் போய்க் கோமா நிலை கிட்டத்தட்ட. அப்போ மருத்துவர் ஆலோசனையின்படி காலையில் வெறும் பருப்பு வகைகள், பாதாம், முந்திரி, பிஸ்தா, சர்க்கரை உள்ளவர்கள் சாப்பிடும் பழங்கள். மத்தியானம் தால் சூப் மாதிரி வைத்துக் கொண்டு தொட்டுக்கொள்ள சாலட், அன்றைய சமையலில் என்ன காய் சமைக்கிறாங்களோ அது! இரவுக்கும் மறுபடி வேறே தால், காய்கறிகள் வேக வைத்தவை மிளகு, ஜீரகம் போட்டு எலுமிச்சை பிழிந்து! எனக்குத் தெரிந்து வருஷக்கணக்காக அப்படிச் சாப்பிட்டு வந்தார். அவர் மனைவியும் அதையே சாப்பிட்டதால் வீட்டில் சமையலே இல்லை. கல்யாணங்களுக்குப் போனாலும் அங்கே சமைக்கப்பட்ட காய்களே சாப்பிட்டு வருவார். பழ சாலட்! அமாவாசை ஒரு நாள் மட்டும் வீட்டில் சமையல். இப்போக் கொஞ்ச நாட்களாகச் சமைத்த அரிசிச் சாதம் சாப்பிடுகிறார் என நினைக்கிறேன்.

      நீக்கு
    7. நாங்க மூன்று பேரும் கேழ்வரகு நிறையச் சாப்பிட்டிருக்கோம். கேழ்வரகு ரொட்டி, தோசை, களி, கூழ் என அம்மா பண்ணுவார். அரிசிமாவில் புளித்த மோர் விட்டுப் பண்ணும் கூழ் அம்மாக் கேழ்வரகு மாவிலும் பண்ணுவார். சாப்பிட்டிருக்கோம். கம்பு அடை சாப்பிட்டிருக்கோம்.

      நீக்கு
    8. ஓ கீதாக்கா உங்கள் நண்பர் குறித்துச் சொன்ன தகவல்கள் அறிந்து கொண்டேன். நானுமே கூட சமீபகாலமாக சில சமயங்களில் இப்படிச் சில நாட்களில் சாப்பிடுகிறேன். அரிசி கோதுமை, எதுவும் இல்லாமல். இடையிடையே. 10 நாட்களுக்கு இடையில் இரு முறை யாக...காய்கள் சூப் தால் பழங்கள் என்று.

      //நாங்க மூன்று பேரும் கேழ்வரகு நிறையச் சாப்பிட்டிருக்கோம். கேழ்வரகு ரொட்டி, தோசை, களி, கூழ் என அம்மா பண்ணுவார். //

      என் தாத்தாவிற்கு சுகர் அதுவும் யூரினில் தான் இருந்தது அதற்கு பாட்டி இதெல்லாம் செய்துகொடுப்பார்கள் எனக்கும் அப்படியே.

      இப்போதும் செய்கிறேன். ராகி மொத்தே என்று இங்கு செய்வாங்களே அதுவும் செய்கிறேன். அதே தான் அக்கா பாட்டியும் அரிசிமா கூழ் செய்வது போலத்தான் ராகியும் செய்வார். நானும் செய்வதுண்டு. அதே போல இங்கு செய்யும் மொத்தே கூட இப்படித் தாளித்து செய்வதுண்டு.

      கம்பு அடை சோள அடை தோசை, கம்பு தோசை இட்லி நு இங்கு உண்டு.

      மிக்க நன்றி கீதாக்கா

      கீதா

      நீக்கு
  8. அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். இன்றைய முக்கியச் செய்தி அலோபதி+சித்த மருத்துவம் இணைந்து கொடுக்கும் சிகிச்சையினால் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகத் தகவல். கடவுள் அருளால் இது வெற்றி அடைந்து அனைவரின் பிரச்னைகளும் தீரப் பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதாக்கா இச்செய்தி நானும் அறிந்தேன் நன்றாக இருப்பதாகத் தெரிகிறது. ஆம் பிரார்த்திப்போம்.

      ஆனா இங்கு நேற்று மட்டுமே எக்கச்சக்க கேஸஸ் கீதாக்கா. இங்கு பங்களூரில் மட்டுமே. நான் அறிந்தவரை இங்கு நம் தமிழ்நாட்டைப் போல சித்த மருந்துகள் பயன்படுத்தும் பழக்கம் இல்லை என்றே தோன்றுகிறது கீதாக்கா.

      கீதா

      நீக்கு
  9. இஃகி,இஃகி,இஃகி, நம்ம உணவு, இதெல்லாம் அனுப்பலாம்னு தெரியவே இல்லை. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நான் எல்லா சிறு தானியங்களும் வெறும் வாணலியில் வறுத்து மிக்சியில் போட்டுத் திரித்து வைத்துக் கொள்வேன். இம்மாதிரிக் கஞ்சி தான் எதில் செய்தாலும். புழுங்கலரிசி+தக்காளி+மிளகு, ஜீரகம், ஏஞ்சலுக்குக் கூடச் சொல்லி அவர் செய்து கொண்டிருப்பதாகச் சொன்னார். அதே போல் சிறுதானியக் கஞ்சியும் பண்ணுவேன். காய்கள் முடிந்தப்போப் போடுவேன். சி.வெ.வும் விரதம் இல்லாத நாட்களில். மற்றபடி இது தினசரி ஆகாரம் என்பதால் அப்படியே ஓர் "ஓஓஓஓஓஓ" போட்டுவிட்டுப் போறேன். இப்போ மாப்பிள்ளைச் சம்பாவில் கஞ்சி போட்டுக் கொண்டு இருக்கேன். அதில் முளைக்கட்டிய பயறு, முளைக்கட்டிய வெந்தயம் சேர்த்துப் பண்ணுகிறேன். மற்றவை அப்படியே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கஞ்சின்னா, வெல்லம்போட்ட பாசிப்பருப்பு கஞ்சி, ரவை கஞ்சி, ஜவ்வரிசி கஞ்சி கேள்விப்பட்டிருக்கேன்.

      எங்கப்பா உடம்பு சரியில்லாதபோது சுக்கு சேர்த்த புழுங்கரிசி கஞ்சி சாப்பிடுவார் (எனக்குப் பிடிக்காது).

      இப்போ என்னன்னா, கினோவா, சிறுதானியங்கள், தக்காளி என வித வித கஞ்சி போடறாங்க. காலம் கலிகாலம்தான். ஹா ஹா.

      இதை காலை டிபனுக்கு மாற்றாக பண்ணறீங்களோ (அப்படீன்னா 12 மணி லஞ்ச், மாலை 5 மணிக்கு லைட் டிபன் என்பதுபோல?). அப்போ காப்பி?

      நீக்கு
    2. ஹா ஹா ஹா ஹா கீதாக்கா எது வேண்டுமானாலும் எழுதி அனுப்பலாம். நேற்று நீங்க உங்க பதிவுல போட்டது கூட அனுப்பலாம்!!! ஹா ஹா ஹா

      கீதாக்கா உங்களை நிஜமாகவே நினைத்துக் கொண்டுதான் இதை எழுதினேன். செய்யும் போதும். கிட்டத்தட்ட உங்கள் கஞ்சி முறைகள் சில செய்முறை எல்லாம் நம் வீட்டிலும் உண்டு என்பதால்.

      சிறிய வித்தியாசம் இருந்தால் உடனே எடுத்து வைத்துக் கொண்டு விடுவேன். நேற்று உங்கள் பதிவில் சொன்னது போல காலையில் சாப்பிடுவதை அரைத்து வடிக்கட்டி என்று சொல்லியதை...நோட் செய்து கொண்டேன்.

      நீங்கள் கருத்தில் சொல்லியிருப்பதை பதிவில் சொல்ல விட்டுப் போயிடுச்சு. இப்போ எல்லாம் எழுதும் போது பல விஷ்யங்கள் மறந்து விடுபடுகிறது. புழுங்கலரிசி கஞ்சி நம் பிறந்த வீட்டில் சகஜம். பாட்டிக்கு வயசாகி கடைசி 6 மாதங்கள் தானாகச் சாப்பிட முடியாமல் போனபோது இப்படியான கஞ்சிகள் தான். அவருக்கு பூ சிவெ எல்லாம் போடாமல்.

      இன்னொன்னு கவனிச்சீங்களா?! உங்களைப் போல நானும் கருகப்பிலை என்று எழுதுகிறேன்!!!

      மிக்க நன்றி கீதாக்கா "ஓஓஓஓஓஓ" போட்டதற்கு!

      கீதா

      நீக்கு
    3. நெல்லை, காலை ஐந்து மணிக்கு எழுந்ததும் காலை நியமங்கள் முடிந்த பின்னால் ஐந்தேகால் சுமாருக்கு நெல்லிக்காய்+பாவக்காய்+இஞ்சி+சி.வெ. சேர்த்து அரைத்த சாறு. சுமார் ஆறு மணிக்குக் காஃபி. அதன் பின்னர் ஏழு மணிக்கு நான் வேலை செய்ய எழுந்துடுவேன். அப்போவே இரண்டாம் காஃபியும் கேட்டுடுவார். அதைக் குடித்ததும் கஞ்சிக்கு மோரெல்லாம் விட்டுத் தொட்டுக்கத் துண்டம் மாங்காயோ அல்லது மோர் மிளகாயோ அல்லது சுண்டைக்காய் வற்றலோ, மணத்தக்காளி வற்றலோ வறுத்து வைச்சுடுவேன். எட்டரை ஒன்பதுக்குள் அதைக் குடிச்சுடுவோம். பின்னர் பத்தரையிலிருந்து பதினோரு மணிக்குள் முருங்கைக்கீரை சூப். அநேகமா முருங்கைக்கீரை மட்டும் போட்டுத் தான். மற்றக் கீரைகள் வாங்கினாலும் சூப்பில் சேர்ப்பதில்லை. பனிரண்டு, பனிரண்டரை அளவில் அளவுச் சாப்பாடு! ஒரு தம்பளர் அரிசி வைப்பேன். கொஞ்சம் போல் ஏதேனும் குழம்பு, ரசம், காய் ஒன்று தான்! குழம்பு, ரசமெல்லாம் மிஞ்சாது. சொப்பு வைச்சு விளையாடறாப்போல் இருக்கும் நான் சமைப்பது. பின்னர் மத்தியான ஓய்வுக்குப் பின்னர் மாலை நான்கு மணி அளவில் தேநீர் அல்லது எப்போவானும் காஃபி அதோடு மாரி பிஸ்கட் 2 அல்லது பிரிட்டானியா ரஸ்க் 2. இரவுக்கு இட்லி, தோசை, சப்பாத்தி, அரிசி உப்புமா, பொங்கல், புளிப்பொங்கல், ரவாதோசை, வெந்தய தோசைனு ஏதேனும் ஒண்ணு. இதான் எங்கள் அன்றாட மெனு! பக்ஷணங்கள் எல்லாம் வாங்குவதே இல்லை. எப்போவானும் முடிஞ்சால் நான் கொஞ்சமாப் பண்ணுவேன். அதைப் பத்து நாட்கள் வைச்சுப்போம். இல்லைனா ரொம்பவே ஏதேனும் சாப்பிடணும் போல் இருந்தா இலை வடாம், ஜவ்வரிசி வடாம், வெங்காய வடாம்னு ஏதேனும் ஒண்ணு கொஞ்சமாப் பொரிச்சுக் கொடுப்பேன். காஃபி எல்லாம் காலைக்கு அப்புறம் குடிப்பது இல்லை. அரிசி சாப்பிடும் அளவு மிகக் குறைச்சல்! இல்லைனா கொஞ்சம் கூடினாலும் அவருக்கு சர்க்கரை எகிறும். ரொம்பக் கவனமாகப் பார்த்துப் பார்த்துச் செய்ய வேண்டி இருக்கும். அதுக்கே அவருக்கு எங்கே ஏறிடுமோ சர்க்கரைனு பயம் வந்துடும்.

      நீக்கு
    4. ஒன்றைச் சொன்னால், அதன் அர்த்தம் புரிந்து சின்சியராக எழுதின மறுமொழியைப் படித்தேன் கீசா மேடம்.

      நானும் கிட்டத்தட்ட 20 நாளா அரிசி சாப்பிடாமல் (இரண்டு நாட்கள் மட்டும் கீரை ரொம்பப் போட்ட அடை) இருந்தாலும் வெயிட் குறையலை.

      நீங்க டயப்படி சாப்பிடறீங்க. ஆனால் தொடர்ந்து வாலை இருக்கற மாதிரியே இருக்கும். ஒரு கிண்ணம் பண்ணுவதற்கும் ஒரு பாத்திரம் நிறைய பண்ணுவதற்கும் அவ்வளவு வித்தியாசம் கிடையாது.

      என் பெண் மாரி/ரஸ்க் இவைகளுக்குப் பதிலா ஷுகர் இல்லாத பச்சைக் கலர் பாக்கெட்டில் வரும் பிஸ்கட் இரண்டு சாப்பிடுவா (நல்லா இருக்கும். ஆனா நானெல்லாம் ஒரு பாக்கெட் பிரித்தால் கட கடவென காலி பண்ணிடுவேன்)

      எனக்கு ஷுகர் ஃபோபியா உண்டு. மூணு மாத்த்திற்கு ஒரு தடவை செக் பண்ணி லிமிட்டுக்குள்தான் இருக்கு, இன்னும் டயபடீஸ் இல்லைனு தெரிஞ்சுக்குவேன். (அப்பா, அம்மாவுக்கு உண்டு)

      நீக்கு
    5. ஆமாம் கீதாக்கா .அடிக்கடி செய்றேன் இப்போ மாப்பிள்ளை சம்பா அப்புறம் வரகிலும் செய்றேன் .வேலைக்கு லன்ச் பாக்சில் அதைத்தான் கொண்டுபோறேன் .மகளுக்கும் அந்த டேஸ்ட் பிடிச்சிருச்சி 

      நீக்கு
    6. நெல்லைத்தமிழரே, எதையுமே ஆறு மாசமாவது சாப்பிட்டுப் பார்த்துட்டுத் தான் அது உடலுக்குச் சரியா வருதா, எடை குறைகிறதா எனக் கண்டுபிடிக்க முடியும். நீங்க 20 நாட்கள் அடை மட்டும் சாப்பிட்டால் எல்லாம் எடை குறையாது. ப்ரவுன் அரிசி சாப்பிடுங்க! வெள்ளை அரிசி வேண்டாம். அல்லது சிவப்பு அரிசி சாப்பிடுங்க! காய்கள் நிறையவும், அரிசி கொஞ்சமாவும் சாப்பிடணும். வாழைத்தண்டு சாலட், வெள்ளைப்பூஷணிக்காய் சாலட் அல்லது துருவிப் போட்டுப் பச்சடினு சாப்பிடுங்க! கொஞ்சம் இல்லை/நிறையவே வெறுப்பாய் வரும் தான். ஆனால் நாளாவட்டத்தில் எடை குறைய ஆரம்பிக்கும். உடனே பத்துக் கிலோ குறைஞ்சுடும்னு எதிர்பார்க்கவும் கூடாது. 2,3 கிலோ குறைந்தாலே நல்லது தான். நிறைய நடங்க! கார்ப் குறைச்சாலே எடை குறைய ஆரம்பிக்கும். காய்கள், பழங்களை தாராளமாச் சாப்பிடலாம். தேங்காய்க் கீற்றுக்கூடச் சாப்பிடலாம். சிவப்பு அரிசி அவலில் காய்களை நறுக்கிச் சேர்த்துத் தேங்காய்ப்பூப் போட்டு உப்பு, எலுமிச்சம்பழம் பிழிந்து வெறும் கடுகு மட்டும் தாளித்துக் கலந்து சாப்பிட்டுப் பாருங்கள். இதை ஒரு வேளை உணவாகவும் வைச்சுக்கலாம்.

      நீக்கு
  10. இன்றைய ரசம், சாம்பார், பொரியல், கூட்டு, கஞ்சி ரெணுப்பி அருமை.

    பேசாமல் நீர்க்க ரசம் சாதம் சாப்பிட்டால் போதாதோ? எதுக்கு இந்த கஞ்சி பிஸினெஸ் எல்லாம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்கள் பச்சரிசி பயன்படுத்துவது அபூர்வம். அதுவும் கஞ்சி வடித்துதான். பெரும்பாலும் கேரளா சம்பா புழுங்கல் அரிதான். அதிலும் ரசம் சாப்பிடுவதுண்டு.

      கஞ்சி வயிற்றிற்கு ஜீரணம் ஆகும் எளிதான ஒன்று. வித்தியாசமான ஒன்றும் கூட. நம் வீட்டில் வித்தியாசங்கள் பிடிக்கும்.

      கீதா

      நீக்கு
  11. //விருப்பமிருந்தால் வேப்பம்பூ, கருஞ்சீரகம் // - சுண்டைக்காய் வற்றல், மணத்தக்காளி வற்றல், மிதுக்கு வற்றல் போன்றவை மிஸ்ஸிங்.

    கீசா மேடம், இரண்டு சின்ன வெங்காயத்தையும் சேர்க்கச் சொல்லுவார்கள்.

    எனக்கென்னவோ... இனிப்பு சேர்க்காத கஞ்சி பிடிப்பதில்லை.

    இருந்தாலும் பெண் கஞ்சி என்றில்லாவிட்டாலும் சூப் செய்து சாப்பிடுவாள்.

    வித்தியாசமான ரெசிப்பி, என் பார்வையில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மணத்தக்காளி வற்றலும் சேர்க்கலாமே...

      நான் தான் மேலே சொன்னேனே கீதாக்காவுக்கு சொல்லிய கருத்தில் இப்ப வாசித்தப்பதான் மிஸ் ஆனது எல்லாம்..

      இது மகனுக்குச் சொல்லிக் கொடுப்பது ஒரே குக்கரில் அவனுக்கு எளிதாகச் செய்து கொள்ள. அவனுக்கு காலை உணவு என்று இட்லி, தோசை, பொங்கல் எல்லாம் சாப்பிடுவது என்பது மிகவும் கடினம். நேரம் இல்லாததால். 6 மணிக்கும் செல்ல வேண்டிய அவசியம் உண்டு. அதனால் எளிதான உணவாகச் சொல்லுவது.

      சூப்பு போலவும் செய்யலாம் நெல்லை. இருநாள் முன்ன என்று நினைக்கிறேன்...எல்கே அவர்களின் மனைவி சௌம்யா ராகி சூப் போட்டிருந்தாங்க. நல்ல குறிப்பு

      கீதா

      நீக்கு
    2. ராகி உடம்புக்கு ரொம்ப நல்லது.

      நீக்கு
  12. பால் கஞ்சி எல்லாம் பாயசம் மாதிரி இருக்கும். கஞ்சி எனில் உப்புப் போட்டு இப்படித்தான் இருக்கணும். எல்லாவற்றிற்கும் சின்ன வெங்காயம் சேர்ப்பதில்லை. புழுங்கலரிசிக் கஞ்சி+தக்காளி+மிளகு, ஜீரகம் போட்டுச் செய்து உப்பு நார்த்தங்காய் அல்லது வறுத்த சுண்டைக்காயோடு சாப்பிட்டால், அல்லது அரிசி அப்பளம்! ஆஹா, ஓஹோ, பேஷ், பேஷ் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! சுண்டைக்காய் ! பார்த்தே நாட்களாச்சு மா.

      நீக்கு
    2. அதே அதே கீதாக்கா ஹைஃபைவ்!!! ஹைஃபவ்! என பாட்டியின் நினைவு....

      கீதா

      நீக்கு
    3. அட! வல்லி, நீங்க இந்தியா வந்தால் எவ்வளவு வேணுமோ சுண்டைக்காய் வற்றல் தரேன்! இங்கே வாரம் இரு முறையாவது சுண்டைக்காய் சமைக்கணும். குழம்பிலே போடலைனா கஞ்சிக்காவது வறுத்து வைச்சுடணும்.

      நீக்கு
  13. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், கௌ அண்ணா வந்திருக்கும் வரப்போகும் எல்லோருக்கும்.

    ஆ இன்று நம்ம ரெசிப்பியா....யாரோடதா இருக்கும்னு பார்க்க வந்தா!!!

    மிக்க நன்றி எபிக்கு!

    கீதா


    பதிலளிநீக்கு
  14. வணக்கம் கீதாரெங்கன் சகோதரி

    சிறுதானிய கஞ்சி முறை நன்றாக உள்ளது. இதில் உடம்புக்கும் தேவையான ஊட்ட சக்தி நிறைந்த பொருட்கள் (காய்கறிகளும்) சேர்ப்பதால், ருசியாகவும், அதே சமயம் சத்தான ஊட்டம் தரும் வகையிலும் இருக்கும். படங்கள், செய்முறை விளக்கங்கள் எல்லாமே நன்றாக உள்ளது.

    இந்த வகையான சிறுதான்யங்கள் அந்த காலத்திலிருந்து எப்போதுமே இருந்தாலும், இப்போது எல்லோரும், அரிசியை விட சிறுதான்யத்திற்கு மிகவும் முக்கியத்தும் தருகின்றனர். தக்க சமயத்தில் இந்த சத்தான உணவை நீங்களும் பகிர்ந்ததற்கு நன்றிகள்.

    அங்கு எலியாரின் கையிலிருக்கும் ஊசிக்கு பயந்து இங்கு வந்து சத்தான கஞ்சியை சொட்டு கூட விடாமல் குடி(சுவை)க்கும் பூசாருக்கு வாழ்த்துகள். ஹா.ஹா.ஹா. படம் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கமலாக்கா உங்கள் விரிவான கருத்திற்கு

      ஆமாம் பண்டையகாலத்திலிருந்தே இருந்தாலும் இடையில் வேறு தானியங்கள் வந்ததால் இவை இப்போது மீண்டும் பேசப்பட்டு ஆனால் என்னன்னா விலையும் எக்கச்சக்கமாக ஏற்றி விட்டுவிட்டாங்க!! ஹா ஹா ஹா

      அங்கு எலியாரின் கையிலிருக்கும் ஊசிக்கு பயந்து இங்கு வந்து சத்தான கஞ்சியை சொட்டு கூட விடாமல் குடி(சுவை)க்கும் பூசாருக்கு//

      ஹா ஹா ஹா ஹா

      மிக்க நன்றி கமலாக்கா

      கீதா

      நீக்கு
  15. எனக்கும் இந்த சிறுதானிய கஞ்சிகளுக்கும் காத தூரம்...இதை சாப்பிடுவதற்கு பதிலாக நான் பட்டினியாகவே இருந்துவிடுவேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஹா மதுரை ஹூம் சாப்பிட்டுப் பார்த்துட்டுச் சொல்லணுமாக்கும்! சும்மா சிறுதானியம்னு சொன்னதுமே சொல்லிடக் கூடாது! உங்க வீட்டு மாமிக்கிட்ட சொல்லிட்டா அப்புற பூரிக்கட்டைக்குப் பயந்தேனும் குடிப்பீங்க!! ஹா ஹா ஹா

      மிக்க நன்றி மதுரை

      கீதா

      நீக்கு
  16. சிறுதானிய கஞ்சிகளில் தான் எத்தனை விதங்கள்...! ('லாம்' மட்டும் 18 தடவை...!)

    சத்தான குறிப்புகள்... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா டிடி. லாம் கவுண்டிங்க்!!

      மிக்க நன்றி டிடி

      கீதா

      நீக்கு
    2. இன்று வீட்டில் வாசித்து காட்டும்போது மனைவி கேட்டது... "நான் தான் அப்படி சொல்வதாக" நினைக்கும் போது, 'கண்டு கொண்டது' ஹா... ஹா...

      அவர்கள் மேலும், "சில காய்கறிகளை போடலாம், வதக்கலாம், கலக்கலாம்" - அது 18 'லாம்' !

      நீக்கு
  17. அனைவருக்கும் வணக்கம். காலையில் செல்லம்,படுத்தல். நான் போட்ட பின்னூட்டங்கள் வரவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா பானுக்கா உங்க செல்லம் ரொம்பவே செல்லம் கொஞ்சுகிறது கொஞ்சம் மிரட்டி வையுங்க. சரியாகிடும்!!

      கீதா

      நீக்கு
  18. சத்தான உணவு வகைகள் இச்சமயத்தில் அவசியமானதே.... பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  19. சிறுதானிய கஞ்சி சுவை! சூடாக சாப்பிட்டு விட வேண்டும் இல்லாவிட்டால் ஆறின கஞ்சி பழங் கஞ்சி என்று ஆகி விடும். எனக்கும் உப்பு போட்ட கஞ்சிதான் பிடிக்கும். ஓட்ஸ் கஞ்சி கூட உப்பு போட்டு, கொஞ்சம், மிளகு,சீரகம் சேர்த்துதான் சாப்பிட பிடிக்கும். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் காலி ஃபிளவர் ரெசிபி பற்றி நானும் கேள்விப் பட்டேன். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் பானுக்கா எந்த்க கஞ்சியுமே சூடாகச் சாப்பிடுவதுதான் நல்லதும். எனக்கும் உப்பு போட்டதுதான் பிடிக்கும்.

      தித்திப்பு என்றால் பாசிப்பருப்பு கஞ்சி போல சும்மா வேக வைத்து வெல்லம் கலந்து சில விரத நாட்களில் வீட்டில் குடிப்பாங்க முன்னாடி அது பிடிக்கும் ஆனால் நமக்குத்தான் இப்ப இனிப்பே ஆகாதே...

      ஓ நீங்களும் காலிஃபளவர் இந்த டைப் உணவு கேள்விப்பட்டிருக்கீங்களா..

      மிக்க நன்றி பானுக்கா

      கீதா

      நீக்கு
  20. கீதா ரங்கன் இதயக் கோளாறுகளுக்காக மருந்து சாப்பிடுகிறவர்கள் காலி பிளவர் சாப்பிடக் கூடாது என்பார்களே? உங்கள் தோழியின் கணவருக்குத் தெரியாதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ அப்படியா? ஆனால் அவர் தன் மருத்துவரிடம் கலந்தாலோசித்துத்தான் சாப்பிடுவதாகவும் சொன்னார். அவர் வேறு யாருமல்ல நான் பர்வத மலை ட்ரிப் பத்தி ப்ளாகில் போட்டப்ப எங்கள் எல்லாரையும் விட முதலில் கோயிலை அடைந்தவர் என்று சொல்லி உதாரணமாஅச் சொல்லி படமும் போட்டிருந்தேன் அவர் அனுமதியுடன். செம ஜாலி டைப் அவர்.

      மிக்க நன்றி பானுக்கா

      கீதா

      நீக்கு
  21. அன்பின் நெல்லைத் தமிழன் அவர்களுக்கு..

    20 வருடங்களுக்கு முன் குவைத் வந்தபோது விவரம் தெரியாமல் ஓட்ஸ்ஸில் தான் உலக மகா சத்துகள் இருக்கின்றன என்று நம்பி கையில் இருந்த காசை ஓட்ஸ் ஆக்கி இருக்கிறேன்...

    இணையத்தில் புழங்க ஆரம்பித்தது
    மேற்கத்திய குதிரைகள் தின்ற்து போக மிச்சம் என்று தெரிந்ததும்

    ஒட்ஸ் என்னை விட்டு ஓடிப் போனது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓட்ஸ் கஞ்சி பற்றிக் கேள்விப் பட்டிருந்தாலும் எங்களுக்கு அறிமுகம் ஆனதே 2004 ஆம் ஆண்டு அம்பேரிக்காவுக்குப் போனதும் தான். அங்கே பெண்ணும், பிள்ளையும் பழக்கப்படுத்தினதோடு கையிலும் வாங்கிக் கொடுத்தாங்க. பின்னர் தான் தெரிந்தது இந்திய சீதோஷ்ணத்துக்கு அது சரிப்பட்டு வராதுனு. இருந்ததை மட்டும் சாப்பிட்டு முடித்தோம். பின்னர் நாங்களாக வாங்கவில்லை. இப்போல்லாம் அம்பேரிக்கா போகும்போது ஓட்ஸ் வேண்டாம்னு சொல்லிடுவோம். அதுக்கு பதிலாக கார்ன்ஃப்ளேக்ஸ் வாங்கிப் பாலில் போட்டுச் சாப்பிட்டுக்கலாம். இல்லைனா ப்ரெடே சாப்பிட்டுக்கலாம்னு ஓட்ஸ் பக்கமே போறதில்லை.

      நீக்கு
    2. இங்கயும் பையன் எப்போவாவது சாப்பிடுகிறான். என்னைப் பொறுத்த வரையில், நம் மண்ணுக்கு அந்நிய உணவு எதுவுமே நமக்கானது இல்லை என்பதுதான். கார்ன்ஃப்ளக்ஸ் போன்றவையும் நன்றாக இருக்கும் என்றாலும், இந்த ஊருக்கு வந்த பிறகு இவை எதையுமே நான் சாப்பிடுவதில்லை. ரொம்ப ஆசைனா, அவல், பால், தேன் விட்டு சாப்பிடுவேன் (அந்த பேப்பர் அவல்).

      வெளிநாட்டு கம்பெனிகள், எப்படி, நம் மாநிறம் மோசமான நிறம் என்றும் வெள்ளையாக இருப்பதுதான் பியூட்டி என்றும் சொல்லி க்ரீம்களை நம் தலையில் கட்டுகிறார்களோ, அது போல ஓட்ஸ், கார்ன்ஃப்ளக்ஸ் போன்றவைகள்தாம் நல்ல காலை உணவு என்று நம்ம தலைல கட்டறாங்க. எண்ணெய் சேர்க்காத நம் இட்லியைவிடவா அவை நல்லவை? நமக்கு உடம்பு சரியில்லைனா ரெண்டுதான் கொடுப்பாங்க, ஒண்ணு இட்லி இல்லைனா ஜவ்வரிசி கஞ்சி.

      நீக்கு
  22. இன்ஸ்டண்ட் குக்கிங் என்று வேலைக்கு ஓடுபவர்கள் நியூடில்ஸ், கடை இட்டிலி மாவு என உடம்பை கெடுத்துக்கொண்டிருக்கும்போது, நம்ம் ஊர் சத்தான இன்ஸ்டண்ட் சிறுதானிய கஞ்சி சொல்லிக் கொடுத்த கீத்தா மேடம் கு நன்றிகள்.
    எனக்கு தான் துவையல் ஊருகாய் இல்லாமல் கஞ்சி இரங்காது.
    இவற்றை சாப்டா அதன் புளிப்பு என் ுடம்பில் கெட்ட நீர் இறங்க விடாது எடையை கூட்டும் என ஆயுர்வேத டாக்டர் சொல்கிறார்.
    எனவே நீங்க சொல்லும் கூட்டு சைடு டிஷ் சாப்டு பழகனும் போல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரவிந்த் மிக்க நன்றி கருத்திற்கு

      நல்ல சத்துள்ள துவையல்களும் இருக்கின்றன அரவிந்த். ஊறுகாய் இல்லாமல் சாப்பிடுங்கள் டாக்டர் சொல்வது நல்லதுதானே. இந்த கஞ்சிக்கு எல்லாம் ரசம் போலத்தான் இருக்கும் அரவிந்த் எனவே தொட்டுக் கொள்ள எதுவும் இல்லாமலும் சாப்பிடலாம் இல்லை என்றால் சுண்டை, மணத்தக்காளி கூட சாப்பிடலாம் .

      மிக்க நன்றி அரவிந்த்

      கீதா

      நீக்கு
  23. தானியக்கஞ்சி..அனைவரும் எக்காலத்திலும் ஏற்கவேண்டியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி முனைவர் ஐயா உங்கள் கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  24. வன் பொட் சமையல் அருமை. நேரம் இல்லாமை உள்ள அனைவருக்கும் பிரயோகமானது.
    கிராமத்துக்கு வந்து விட்டேன் :) சுண்டங்காய் மூன்று மரங்கள் காய்க்கின்றன .மாங்காய் வற்றல். காய் வற்றல்கள் போட்டு விட்டேன்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் ஊர் கிராமத்திற்கு வந்துவிட்டீர்களா? அட! //சுண்டங்காய் மூன்று மரங்கள் காய்க்கின்றன .மாங்காய் வற்றல். காய் வற்றல்கள் போட்டு விட்டேன்:)//

      அசத்தறீங்க.

      //வன் பொட் சமையல் அருமை. நேரம் இல்லாமை உள்ள அனைவருக்கும் பிரயோகமானது.// ஆமாம். குறிப்பாகத் தனியா இருக்கறவங்களுக்கு

      மிக்க நன்றி மாதேவி.

      கீதா

      நீக்கு
  25. ஆஆஆஆஆஆ இன்று பழைய சென்னை புதிய பெங்களூர்க் கீதா ரெசிப்பியோ:)) ஹா ஹா ஹா எனக்குப் பிடிச்ச கஞ்சி...

    //சோசியல் டிஸ்டன்ஸ் இருந்தாலும் நம்ம பூஸார், தான் மாஸ்க் போட்டுக் கொண்டு கண்டிப்பாக வந்து எனக்கு எல்லாம் எடுத்துத் தருவதாக அன்புடன் சொன்னதால் //

    அம்மம்மா அப்பவும் சொன்னா, சென்னைக்குப் போகாத பிள்ள, “குருமா”:) அங்கின கூடியிருக்குதாம் என..:)).. இல்ல அம்மம்மா நான் கிட்டப்போக மாட்டேன், கீதாவிடமிருந்து 4 அடி தள்ளி நிண்டே கஞ்சி காச்சப்போகிறேன் எனச் சொல்லி வந்தேனா... ஆனா கீதா மஸ்க் கட்டேல்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

    // அவரது செக் இல்லாமலா? எனவே மூவரும் கிச்சனுக்குள்.//
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) செக் இப்ப்போ ஓவரா ஸ்லீப் பண்ணுறா:)).. ஒரு சமோசா ரெசிப்பி ரெடி பண்ணுங்கோ கீதா, அவவைக் கூட்டி வாறேன்ன்.. அப்போதான் சரியாகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மம்மா அப்பவும் சொன்னா, சென்னைக்குப் போகாத பிள்ள, “குருமா”:) அங்கின கூடியிருக்குதாம் என..:)).. இல்ல அம்மம்மா நான் கிட்டப்போக மாட்டேன், கீதாவிடமிருந்து 4 அடி தள்ளி நிண்டே கஞ்சி காச்சப்போகிறேன் எனச் சொல்லி வந்தேனா... ஆனா கீதா மஸ்க் கட்டேல்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..//

      ஹா ஹா ஹா ஹா....நான் சென்னையில் இல்லை...இங்க பங்களூரில் அல்லோ..(இங்கும் கூடித்தான் போயிருக்கு! இது ரகசியம் உங்களுக்கு!)

      கஞ்சி குடிக்கும் போது மாஸ்க் போட்டா எப்படிக் குடிக்க முடியும்?!!! ஹா ஹா ஹா

      ஒரு சமோசாவும் வல்லாரை ரீயும் ரெடி செய்யறேன் பூஸார் அது ஓகேதானே?!!ஹா ஹா

      மிக்க நன்றி அதிரா

      கீதா

      நீக்கு
    2. ஹையோ உங்களுத்துத் தெரியாது கீதா:))..
      என் செக்.. சமோசா சாப்பிட்டாவோ அவ்ளோதேன்ன்.. நீங்க, நான் எல்லாம் காலி:)).. நான் ஓடிப்போய் பங்கருக்குள் ஒளிக்கப்போறேன் ஜாமீஈஈஈஈஈ ஹா ஹா ஹா:).

      நீக்கு
    3. தெரியும் அதிரா மைதா கோதுமை எதுவும் ஆகாது அவங்களுக்கு...அதுக்கென்ன க்லூட்டன் ஃப்ரீ மாவில் செஞ்சுப் போடுவோம்..

      நாம தெகிரியமா நிக்கலாம் முன்னே!!

      கீதா

      நீக்கு
  26. ஐ ஒப்ஜக்சன் யுவர் ஆனர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) .. சிறுதானியக் கஞ்சி எனச் சொல்லிப்போட்டு, வரகுக்கஞ்சி செய்திருக்கிறா கீதா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. சிறுதானியக் கஞ்சி என்றால் கடசி 2,3 சிறுதானியங்களாவது கலந்திருக்க வாணாமோ.. சரி சரி அஜஸ்ட் பண்ணிக் குடிக்கிறேன் நன்றாகச் செய்திருக்கிறீங்க கீதா....

    எனக்கு மிகவும் பிடிச்ச கஞ்சி, ஆனா நான் பருப்பு சேர்ப்பதில்லை கொஞ்சம் பால் சேர்ப்பேன்... மற்றும்படி இதே ரெசிப்பிதான், எண்ணெய் சேர்க்காமல் அவிச்சே செய்வேன்.. தேசிக்காய்தான் நானும் சேர்ப்பேன்... சூப்பராக வரும்...

    இன்னும் கொஞ்சம் தண்ணியாக்கியிருக்கோணுமோ கீதா, இது சாதம் போல இறுகி விட்டது என நினைக்கிறேன்...[இதுக்குத்தான் அஞ்சுவை ஜெல்ப்புக்கு கூப்பிடாதீங்கோ என்பது, அவதான் கஞ்சி எனச் சொல்லிச் சாதமாக்குவா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)]

    நோஓஓஓஓஓ என்னை ஆரும் பேய்க்காட்ட முடியாதூஊஊஊஉ... ஒரு படம் ரெண்டு தரம்... போட்டிருக்கு:) ஹா ஹா ஹா.

    இனி செய்யும்போது பருப்புச் சேர்த்துச் செய்து பார்க்கிறேன் கீதா..

    நான் வரகு, சாமி, குதிரைவாலி இவற்றில் செய்வேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹலோ பூஸார் வரகும் சிறுதானியம் இல்லாம என்னவா?!!! ஒரு மருத்துவர் சொன்னார் சிறுதானியங்களைத் தனி த்னிதாகத்தான் செய்ய வேண்டுமாம். சேர்த்துச் செய்யக் கூடாதென்று படித்தேன் அதிலிருந்துதான் இப்படி.

      சொல்லிருக்கேனே பருப்பு சேர்க்காமலும் செய்யலாம் என்று. இது காலை உணவுக்கு என்று செய்ததால் கொஞ்சம் ஃபில்லிங்காக இருக்க வேண்டும் இல்லையா அதான்.

      ஓ பால் சேர்ப்பீங்களா? அப்படியும் செய்து பார்த்துவிடலாம்..

      //இன்னும் கொஞ்சம் தண்ணியாக்கியிருக்கோணுமோ கீதா, இது சாதம் போல இறுகி விட்டது என நினைக்கிறேன்..//

      இது கெட்டியாகச் செய்துவிட்டால் பாரிட்ஜாகவும் சாப்பிடலாம் என்பதால் அதை எல்லாம் பாக்ஸிற்கு வெளியே சொல்லியிருக்கிறேன் அதிரா...ப்ரேக்ஃபாஸ்ட் என்பதால் கொஞ்சம் இப்படிச் செய்தேன். லீவு என்றால் கஞ்சியாக இருக்கும்.

      இதிலேயே சூடாகத் தண்ணீர் கலந்தால் நெகிழ்ந்துவிடுமே.

      //இதுக்குத்தான் அஞ்சுவை ஜெல்ப்புக்கு கூப்பிடாதீங்கோ என்பது, அவதான் கஞ்சி எனச் சொல்லிச் சாதமாக்குவா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)]//

      ஹா ஹா ஹா பாருங்க அவங்க என் பக்கமாக்கும்!!!

      //நோஓஓஓஓஓ என்னை ஆரும் பேய்க்காட்ட முடியாதூஊஊஊஉ... ஒரு படம் ரெண்டு தரம்... போட்டிருக்கு:) ஹா ஹா ஹா.//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர் அங்க கொஞ்சம் பாருங்க ஒன்றில் பூண்டு இல்லாமல். மற்றொன்றில் பூண்டு போட்டு. அது நெல்லை, கீதாக்கா, வல்லிம்மா எல்லாம் பூண்டு இல்லாமதானே குடிப்பாங்க அதனாலதான். ஒரு நல்ல மனசை சொல்ல மாட்டீங்களே ஹா ஹா ஹாஅ ஹா ஹ

      நானும் உங்களைப் போல பால் சேர்த்துச் செய்து பார்க்கிறேன்.

      நானும் குதிரைவாலி, சாமை எல்லாத்திலும் செய்வேன் முன்பு அப்படித்தான் எல்லாம் கலந்தும் செய்வேன் ஆனால் அந்த மருத்துவர் சொன்னதை வாசித்ததும் தனி தனியாகாச் செய்கிறென்.

      மிக்க நன்றி அதிரா

      கீதா

      நீக்கு
    2. //ஆனால் அந்த மருத்துவர் சொன்னதை வாசித்ததும் தனி தனியாகாச் செய்கிறென்.//

      ஓ நான் தோசைக்கு மட்டும் கலந்து போடுவேன் கீதா, மற்றும்படி எதுக்கும் கலப்பதில்லை.. ஆனா ஏன் கலக்ககூடாதோ தெரியல்ல்லியே,...

      நீக்கு
  27. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) பாவம் அப்பாவிப் பூஸ், என்னமாதிரி பான் ஐக் கழுவுது பாருங்கோ:)).. இப்பூடி வேலை வாங்கப்பிடாது:))... நான் இப்பவே போறேன் ஸ்கொட்லாண்ட்யாட் க்கு:))

    ஹா ஹா ஹா நான் ஓட்டிடுறேன்ன்ன்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹ ஹா ஹா ஹா...சிரிச்சு முடில அதிரா...
      ஆமாம் ல நல்லா வழிச்சு சாப்பிட்டு பான் கழுவியது போல இருக்குமே! எங்க வீட்டில் குழந்தைகளாக இருக்கறப்ப வீட்டில் ஸ்வீட் செய்து உருளி பாத்திரம் தேய்க்க வரும் போது நாங்க போட்டி போட்டு தோசை சட்டுவம், ஸ்பூன் என்று வைத்துக் கொண்டு சுரண்டி சுரண்டி கையில் போட்டுக் கொண்டு சாப்பிடுவோம். சேவைக்கு வணக்கும் உருளியில் மாவின் பொருக்கும் ஒட்டிக் கொண்டிருக்கும் அதையும்.... கடைசியில் பார்த்தால் பாத்திரம் பளிச்சுனு இருக்கும்!! பாட்டி கேப்பா அட பள பளன்னு தேச்சுருக்கீங்களேன்னு ஹா ஹா ஹா ஹா அது ஸ்வீட் செய்த நெய்னு/சேவைக்கு ஊற்றிய தேங்காய் எண்ணெய்னு சொல்லுவோமா என்ன?!! ஹா ஹா ஹா அப்புறம் சத்தம் போடாமல் தேய்க்கும் போது பாட்டி சொல்லுவாங்க அதுதான் தேய்த்தாச்சே இன்னும் எதுக்குன்னு நாங்கள் கமுக்கமாகச் சிரித்துக் கொண்டு, இன்னும் பள பளன்னு தேய்க்கறோம்னு சொல்லித் தேய்ப்போம்! நல்ல காலம் பாட்டி முதலில் கையில் தொட்டுப் பார்த்திருந்தால்தானே தெரியும் நெய்/எண்ணெய் பிசுக்கு அது என்று!!!

      நன்றி நன்றி

      கீதா

      நீக்கு
  28. நான் கஞ்சியானாலும் நேரடியாக ஒரு பாத்திரத்தில் தான் கரைய விடுவேன். குக்கரில் வைப்பதில்லை. இப்போ முருங்கைக்கீரைக்காக மட்டும் குக்கர். அதுவும் தாளிப்பைக் குக்கரிலேயே செய்து கொண்டு நன்கு வதக்கி நீர் விட்டு ஒரு கொதி வந்த பின்னர் உப்புச் சேர்த்துக் குக்கரை மூடி விசில் வர விடுவேன். கஞ்சியெல்லாம் நேரடியாத் தான். குக்கர் எப்போவானும் அவசரத்துக்கு, அல்லது யாரானும் வந்தால் அப்போ!

    பதிலளிநீக்கு
  29. சிறுதானிய கஞ்சி மிகவும் நன்றாக இருக்கிறது. படங்களும், செய்முறை சொன்னவிதமுன் நன்றாக இருக்கிறது கீதா.

    நிறைய குறிப்புகள் இருக்கிறது. எது வசதியோ எது பிடிக்குமோ செய்து கொள்ளலாம் அருமை.
    வரகு, குதிரைவாலி, சாமை, கம்பு இதெல்லாம் முன்பு வாங்கி கஞ்சி, பொங்கல் எல்லாம் செய்தேன். இப்போது வாங்குவது இல்லை.
    மீண்டும் வாங்க வேண்டும். ராகி இட்லி ராகி தோசை எல்லாம் செய்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோமதிக்கா.

      ஆமாம் எது நமக்கு ஒத்து வருமோ அதைச் செய்து கொள்ளலாம். எல்லாமே நம் அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் பொருட்களின் பெர்ம்யூட்டேஷன் காம்பினேஷன் தானேக்கா.

      வாங்கினா செஞ்சு பாருங்க கோமதிக்கா..நானும் ராகி இட்லி, ராகி தோசை, சோள தோசை இன்னும் சில கூடச் செய்வதுண்டு கோமதிக்கா.

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  30. மகன் நீங்கள் சொல்லிக் கொடுத்ததை ஏற்றுக் கொண்டு செய்து பார்த்து சௌகர்யமாக இருக்கிறது என்று சொல்வது உங்களுக்கு மகிழ்ச்சிதான் இல்லையா கீதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பின்னே ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும் அக்கா. அவனும் சொல்லித் தருவதுண்டு...அவன் செய்யும் வித்தியாசமான ரெசிப்பிஸ்

      கீதா

      நீக்கு
  31. சாப்பாடு இல்லாத புது பாத்திரம் போல் இருக்கிறது, அதன் முகம் தெரிவதால் அதை வேறு பூனை என்று பிடிக்க முயற்சி செய்கிற மாதிரி இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதிக்கா அந்த ரகசியத்தை எல்லாம் இப்படி அம்பலப்படுத்துவாங்களா...பூஸாருக்குக் கேட்டுவிடப்ப் போகுது. ஏற்கனவே அவங்க வேற ஒன்னு சொல்லிட்டுப் போயிருக்காங்க.ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
  32. இத்தனை வயதாகியும் சிறு தானியங்களென்று சொல்பவை என்னவென்றே தெரியாது அவை எப்படி இருக்கும் என்பதும் தெரியாது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சார் கூகுளில் போட்டுப் பாருங்க படங்கள் கிடைக்கும். அம்மாவுக்குத் தெரிஞ்சிருக்கும் சார்

      மிக்க நன்றி ஜிஎம்பி சார்

      கீதா

      நீக்கு

  33. ரொம்ப நல்லா இருக்கு கீதா அக்கா ...

    அம்மா இப்படி அடிக்கடி செய்வாங்க ...இதில பச்சை பயறு மாதிரியும் சேர்த்து செய்வாங்க ..

    பதிலளிநீக்கு
  34. கீதாஆ :) இந்த சிறுதானியம் இப்போ அடிக்கடி சேர்க்கிறேன் .தோசை இட்லி குழைவா செய்த கஞ்சி கஞ்சி செய்தா மோர்களி பதத்தில் எடுப்பேன் .நல்ல குறிப்பு பகிர்வுக்கு நன்றீஸ் 

    பதிலளிநீக்கு
  35. இன்னிக்கு குதிரை வாலி பொங்கல் :) எங்க வீட்டில் 

    பதிலளிநீக்கு
  36. இனிய 11 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள் எங்கள் பிளாக் :)   கீதா சொல்லலைன்னா தெரிஞ்சிருக்காது .தாங்க்ஸ் கீதா .

    பதிலளிநீக்கு
  37. சிறப்பான குறிப்புகள். இங்கே சிறுதானியம் கிடைப்பது அரிதாக இருக்கிறது. தேட வேண்டும். சிறுதானிய சமையல் வீட்டில் செய்வதுண்டு.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!