சனி, 2 ஜனவரி, 2021

நல்ல செய்திகள்

 

இந்த 2021 ஆம் ஆண்டு, உலக மக்கள் எல்லோரும் எல்லா துன்பங்களும் நீங்கி, சந்தோஷமும் ஆரோக்கியமும் அடைந்து மகிழ எல்லோரும் பிராரத்திப்போம். 

==== 


==== 
ரத்த புற்றுநோய்க்கு மருந்து அமெரிக்காவில் கண்டுபிடிப்பு. 

வாஷிங்டன்: ரத்தம் மற்றும் எலும்பு புற்றுநோய்களை குணப்படுத்தக்கூடிய மருந்துகளை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் இயங்கும் 'கிளீவ்லேண்ட் கிளினிக்' மருத்துவ மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் 10 ஆண்டுகளாக புற்றுநோய் குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டுவந்தனர். அதில் குறிப்பிட்ட சில புற்றுநோய்களுக்கு அவர்கள் மருந்துகளை கண்டுபிடித்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. ரத்த புற்றுநோய் மற்றும் எலும்பு புற்றுநோயை குணப்படுத்த புதிய மருந்துகளை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். அவர்களின் ஆராய்ச்சி முடிவுகளுடன் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை வாயிலாக அது உறுதிபடுத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் குழுவில் அங்கம் வகித்த டாக்டர் மெசிஜெவிஸ்கி கூறியதாவது: ரத்தம் மற்றும் எலும்பு புற்றுநோய்களை எதிர்த்து போராடக்கூடிய டி.இ.டி.ஐ. 76 என்ற செயற்கை மூலக்கூறு ஒன்றை உருவாக்கி உள்ளோம்.இந்த செயற்கை மூலக்கூறு உடலில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 'செல்'களை குறிவைத்து அழிக்கும் திறன் உடையது என்பதை கண்டறிந்தோம்.இது புற்றுநோயால் பாதிக்கப்பட்ட துவக்க காலம் முதல் முழுதும் பாதிக்கப்பட்ட காலம் வரை உடலில் பாதிக்கப்பட்ட செல்களை அழிக்கும் திறன் உடையது. இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் மற்றொரு ஆராய்ச்சியாளரான பாபல் காந்த் ஜா கூறியதாவது: இந்த ஆய்வு முடிவுகள்நம்பிக்கை அளிக்கும் வகையில் அமைந்துள்ளன.இந்த டி.இ.டி.ஐ. 76 செயற்கை மூலக்கூறு புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி பரவலை தடுப்பதோடு மட்டுமல்லாமல் உடலில் உள்ள உயிரணுக்களின் ஆயுட்காலத்தையும் அதிகரிக்க வழிவகுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
==== 
பப்பாளி உறிஞ்சு குழாய் 

சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் உள்ள, வைத்தீஸ்வரர் சுவாமி கோவில் மற்றும் நாடி ஜோதிடம் புகழ்பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசன ம் செய்தும், நாடி ஜோதிடத்தை பார்த்தும் பரிகாரங்களை செய்து செல்கின்றனர். பக்தர்களின் தாகம் தணிக்க 20க்கும் மேற்பட்டோர் கோவிலைச் சுற்றிலும் இளநீர் வியாபாரம் செய்கின்றனர். மக்கள் இளநீரை அருந்துவதற்கு ஏதுவாக பிளாஸ்டிக் ஸ்ட்ராவை பயன்படுத்தினர். பிளாஸ்டிக் ஸ்ட்ரா பயன்படுத்த பேரூராட்சி நிர்வாகம் தடைவிதித்ததால், இளநீர் வியாபாரி சேகர், அவரது மகன் செந்தில் இருவரும் பரீட்சார்த்த முறையாக, நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும் பப்பாளி இலை தண்டை ஸ்ட்ராவாக பயன்படுத்தி இளநீர் விற்பனை செய்தனர். இதற்கு மக்களிடையே அமோக ஆதரவு கிடைத்தது. தற்போது மற்ற வியாபாரிகளும், பப்பாளி இலை தண்டை ஸ்ட்ராவாக பயன்படுத்தி இளநீர் வியாபாரம் செய்கிறனர்.





==== 
கேரளாவில் துப்புரவு பணிப்பெண் பஞ்., தலைவராக தேர்வு.

திருவனந்தபுரம்: கேரளாவில் பஞ்சாயத்து அலுவலகத்தில் பகுதிநேர துப்புரவாளராக இருந்தவர், தற்போது பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தெற்கு கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள பத்தனம்புரம் பஞ்சாயத்தில், ஆனந்தவள்ளி, 46, பகுதிநேர துப்புரவு பணியாளராக வேலை பார்த்தார். பட்டியலினத்தை சேர்ந்தவரான இவர், கடந்த 10 ஆண்டுகளாக இதே வேலையை செய்து வந்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக போட்டியிட்ட ஆனந்தவள்ளி, பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


latest tamil news

10 ஆண்டுகளாக பஞ்சாயத்து அலுவலகத்தில் தூசித்தட்டி, துப்புரவு வேலை செய்து அதே அலுவலகத்தில் தலைவர் நாற்காலியில் அமர்வார் என எதிர்பார்த்திருக்க மாட்டார். தலைவராக பொறுப்பேற்று நாற்காலியில் அமரும்போது, அவரால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. இதுகுறித்து அவர் கூறுகையில், ‛நான் 2011ம் ஆண்டு பகுதி நேர துப்புரவாளராக பணியில் சேர்ந்தேன். ரூ.2000 சம்பளம் வாங்கிய நான் தற்போது தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். எனக்கு ரூ. 6000 சம்பளம். எனது பழைய வேலையை ராஜினாமா செய்துவிட்டேன்.' என்றார்.


= = = = 

நினைத்ததை நடத்திக் காட்டும் நுட்பம்!


கணினிக்கும், மூளைக்கும் நேரடி தொடர்பை ஏற்படுத்தும் ஆராய்ச்சியில், 'பேஸ்புக்' ஈடுபட்டு வருகிறது. பல ஆண்டுகளாக நடக்கும் இந்த ஆய்வில், ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களைப் பற்றி, பேஸ்புக்கின் தலைமை தொழில்நுட்ப அலுவலர் மைக் ஷ்ரோபெர், தம் அலுவலக கூட்டத்தில் பேசியுள்ளார். சில இணைய தளங்களிடம் அக்கூட்டத்தின் காணொளி காட்சிகள் கசிந்துள்ளது.


மூளைக்கும், கணினிக்கும் இடைமுகமாக ஒரு தலைக்கவசம் போன்ற கருவியை, பேஸ்புக்கின் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இதை அணிந்து கொள்பவரின் மூளையில் உதிக்கும் எண்ணங்களை, அக்கருவி கட்டளைகளாக மாற்றி கணினியின் மென்பொருளுக்கு தருகிறது. இதன் மூலம், விசைப் பலகை, சுட்டி போன்றவற்றை கையால் இயக்காமல், வெறும் எண்ணத்தின் மூலமாகவே கருவிகளை இயக்க முடியும்.


“இந்த தொழில்நுட்பத்தை பெருவாரியான மக்கள் ஏற்கும் வகையில் உருவாக்கி, அறிமுகப்படுத்த வேண்டும்” என, மைக் ஷ்ரோபெர், அந்த சந்திப்பில் பேசியிருக்கிறார்.


= = = = 


முதுமையை ஒத்திப்போடும் ஆராய்ச்சி.


உடலுக்கு வயதாகும் வேகத்தை மட்டுப்படுத்தும் ஆராய்ச்சியில், ஒரு விந்தையான கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது. கடந்த, 50 ஆண்டுகளாக, உயர் ரத்த அழுத்த சிகிச்சைக்குத் தரப்படும் ஒரு மாத்திரையில், 'மெடோலாசோன்' என்ற வேதிப்பொருள் உள்ளது. இதற்கு, மனித செல்களின் சேதாரமடையும் தன்மையை மட்டுப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக, ஜப்பானிலுள்ள ஒசாகா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.


மெடோலாசோனை, ஆய்வகத்தில் சில வகை புழுக்களுக்கு கொடுத்த போது, அவற்றின் செல்கள் சேதாரமடையும் வேகம் வெகுவாக குறைந்தது. அதாவது அந்த புழுக்கள் மூப்படையும் வேகம் குறைந்து, இளமை நீடிப்பது தெரியவந்தது.


இதே போன்ற ஒரு மாற்றத்தை, மனிதர்களின் உடலிலும் கொண்டுவர முடியும் என, ஒசாகா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வயதாவது ஒரு நோய் அல்ல என்றாலும், வேகமாக மூப்பு எய்தும் வேகத்தை குறைப்பதன் மூலம், மூப்பினால் வரும் பிற உடல்நலக் குறைகளை தவிர்க்க முடியும். மேலும், இளமைத் தன்மையை சற்று நீட்டிக்கவும் முடியும் என்பது ஒரு போனஸ்தானே?


= = = =


பசையாகும் பிளாஸ்டிக் குப்பை!


வீணாகும் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யலாம். ஆனால், 'மேற்சுழற்சி' செய்ய முடியுமா? முடியும். பிளாஸ்டிக்கை மேற்சுழற்சி செய்து, பசைகளை தயாரிக்க முடியும். இதற்கான யுக்திகளை உருவாக்கியுள்ளனர், அமெரிக்காவிலுள்ள, கலிபோர்னிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள்.


உலோகங்கள், காகிதம் போன்றவற்றை மறுசுழற்சி செய்வதன் மூலம், மதிப்புக்கூட்டப்பட்ட புதிய பொருட்களை உருவாக்க முடியும். ஆனால், பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்தால், முன்பு இருந்ததைவிட மதிப்புக் குறைந்த பொருட்களையே உருவாக்க முடியும்.


இந்த சிக்கலை தவிர்க்கிறது 'அப்சைக்கிள்' எனப்படும் மேற்சுழற்சி முறை. இந்த முறையை பயன்படுத்தி, பிளாஸ்டிக்கிலிருந்து, பாலிஎத்திலினை பிரித்தெடுத்து, சில புதிய வினையூக்கிகள் மூலம் பசைகளை தயாரிக்கலாம்.


இந்த பசை, செயற்கை இடுப்பு மற்றும் மூட்டுக்களை பொருத்துகையில், பயன்படுத்தலாம். மேலும், பிளாஸ்டிக் மற்றும் உலோகப் பொருட்களை ஒட்டவும் பயன்படும். மற்ற பசைகளைவிட மேற்சுழற்சி பிளாஸ்டிக் பசைக்கு, 20 சதவீதம் கூடுதல் ஒட்டும் தன்மை உள்ளதாக கலிபோர்னிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


= = = = 


தேன் எடுக்கும் ரோபோ!


தேனீ வளர்ப்பும், தேன் எடுப்பதும் மிகவும் சிக்கலான தொழில். அந்த சிக்கலில் பாதியைக் குறைக்க, ரோபோவை பயன்படுத்தலாம் என்கிறது, தென்கொரியாவை சேர்ந்த, 'டேசுங்' என்ற நிறுவனம்.டேசுங், தயாரித்துள்ள 'ஹைவ் கண்டரோலர்' என்ற ரோபோவை, ஒரு தேனீ பெட்டியின் மூடியை திறந்து, பெட்டியின் மேல் வைத்துவிடவேண்டும்.


பிறகு, அந்த ரோபோவே மெதுவாக பெட்டிக்குள் உள்ள தேன்கூட்டு சட்டங்களை ஒவ்வொன்றாக எடுத்து, தேனீக்களை விரட்டி, தேனை வடித்து எடுத்துவிட்டு மீண்டும், பெட்டிக்குள் வைத்துவிடும்.


இந்த ரோபோவால், 90 சதவீதம் ஆட் கூலியும், 75 சதவீத நேர விரயமும் மிச்சமாவதாக டேசுங் நிறுவனத்தின் இணையதளம் தெரிவிக்கிறது. தேனீ எடுப்பவர்களுக்கு உடல் சோர்வும், தேனீக் கடியும் மிச்சம் என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம்.


= = = = 





32 கருத்துகள்:

  1. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்க்கையிலும் ஆரோக்கியம் பெருகி மன அமைதியுடன் வாழப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா...  வணக்கமும் நன்றியும்.vvvvvvvvvvvvvvvvv

      நீக்கு
  2. முதல் செய்தி ஆச்சரியமூட்டியது. ஏனெனில் சில நாட்கள் முன்னர் தான் நம்ம அக்த்தியர் நாடி ஜோதிடம் சொல்லும், "டிங்கு டிங்கே" புற்று நோய்க்கான மருந்து க்ண்டுபிடிக்கப்பட்டு முற்றிலும் ஒழியும் எனச் சொல்லி இருந்தார். அவர் சொன்னது சரியாகிவிடும் போல இருக்கு. மற்றச் செய்திகளும் இப்படிப் பலிச்சுட்டால்? நல்ல செய்திகள் எனில் பரவாயில்லை. மாறுபட்டவை? கொஞ்சம் இல்லை, நிறையவே கவலை அளிக்கும் விஷயம். மேலே இருக்கிறவன் தான் பார்த்துக்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டிங்கு டிங்கே தமிழ் அல்லது நம்நாட்டுச் செய்திகளில் வருவதற்குமுன் வெளிநாட்டுச் செய்திகளில் கசிந்திருந்திருக்கக் கூடிய விவரங்களைப் பார்த்திருப்பரோ!

      நீக்கு
  3. அட?இது வரைக்கும் யாரும் வரலையா? மீ த போணி? நேற்று கோமதி அரசு எனக்குப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தார்கள். கண்ணீரே வந்துவிட்டது. அவங்களை மறுபடி வலைப்பக்கம் வரும்படி கேட்டுக் கொண்டிருக்கிறேன். விரைவில் வர வேண்டும். மன ஆறுதல் பெற வேண்டும். இந்த மார்கழி மாதம் எத்தனை கோயில்கள் போயிட்டுக் கோலங்களும் ஸ்வாமி தரிசனங்களுமாகக் கொடுத்திருப்பார்! அது இல்லாமல் வெறிச்சோ வெறிச்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அக்காவோடு அவ்வப்போது உரையாடுகிறேன்.  எனக்கும் வாழ்த்துச் சொல்லியிருந்தார்.  வல்லிம்மாவும் அடிக்கடி அவருடன் பேசுகிறார்.  விரைவில் அக்காவை இங்கும் அவர் தளத்திலும் எதிர்பார்க்கலாம்.  சரிதானே கோமதி அக்கா?

      நீக்கு
  4. கேரளாவில் இந்த வருஷம் பெண்கள் ஆட்சி போல! பப்பாளி ஸ்ட்ரா புதுசு. முதுமையை எதுக்கு ஒத்திப் போடணும்? வயசாயிடுச்சுனே நினைக்காமல் இருந்தால் போதுமே! இஃகி,இஃகி,இஃகி! மற்றச் செய்திகளும் புதியவை. தேடித்தேடி எடுத்துப் போடும் எங்கள் ப்ளாக் ஆ"சிரி"யருக்கு (கௌதமன் சார்) நன்றி.

    பதிலளிநீக்கு
  5. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
    எங்கும் நலம் தங்கிட வேண்டிக் கொள்வோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இணைந்து பிரார்த்திப்போம்.  வாங்க துரை செல்வராஜூ ஸார்...  வணக்கம்.

      நீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    இன்றைய நல்ல செய்திகள் அருமை. பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி. ஆனந்தவள்ளி என்ற செய்தியை தவிர்த்து அனைத்துமே புதிதாகத்தான் படிக்கிறேன்.

    இயற்கை ஸ்ட்ரா நல்ல முயற்சி. வாழ்த்துக்கள். பிளாஸ்டிக் கழிவுகள் பசையாகும் முயற்சி, தேன் எடுக்க ரோபோ என்ற விந்தை அனைத்துமே நன்றாக உள்ளது. இந்தப் புதுமைகளைப் பற்றி தினமும் படித்து நினைத்தாலே, முதுமை அனைவரிடமும் வர யோசிக்குமே.. அதற்கு மருந்தே வேண்டாம். சனியில் வெள்ளியாக நடிகர் ஜெமினிகணேசன் அவர்கள் பாடிய பாட்டு "உனக்கென்ன கவலை.. நீ ஒரு ராஜா.. வந்தால் வரட்டும் முதுமை... என்ற பாடல் பிண்ணனியில் மனசுக்குள் ஓடுகிறது. ஹா.ஹா.

    அனைத்து பகிர்வினுக்கும் மிக்க நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    அனைத்து நல்ல செய்திகளுக்கும் மிக நன்றி.

    இரத்தப் புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடித்திருப்பது மிக
    அருமை.
    புத்தாண்டு நன்மைகளைக் கொண்டு வருகிறது.

    பதிலளிநீக்கு
  9. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    அனைத்து நல்ல செய்திகளுக்கும் மிக நன்றி.

    இரத்தப் புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடித்திருப்பது மிக
    அருமை.
    புத்தாண்டு நன்மைகளைக் கொண்டு வருகிறது.

    பதிலளிநீக்கு
  10. https://www.nu.nl/285203/video/hoge-onderscheiding-voor-rat-en-ander-positief-nieuws-in-2020.html
    வணக்கம் சென்ற வருட நல்ல செய்திகள் தொகுப்பு வீடியோ

    பதிலளிநீக்கு
  11. AI நுட்பம் உட்பட சில இயற்கையை மீறுவது, விளைவு : எங்கே செல்லும் இந்தப் பாதை...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேனெடுக்கும் ரோபோ செய்தி பற்றிச் சொல்கிறீர்களா DD ?

      நீக்கு
  12. வைக்கோலுக்கு Straw என்று பெயர்... ஐம்பது ஆண்டுகளுக்கு முன் நெற்பயிர்கள் இடுப்பளவு உயரமுடையதாக இருக்கும்... வைக்கோலை நறுக்கிப் போட்டு இளநீர் குடித்ததும் காட்டாமணக்குப் பாலை எடுத்துக் குமிழ் ஊதியதும் நினைவுக்கு வருகின்றன..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது எனக்கும் நினைவில் இருக்கிறது.  தஞ்சாவூரில் பழக்கம்.

      நீக்கு
  13. இந்நாட்களில் இயந்திர அறுவடை...
    நெல் மணிகள் சேமிப்பு போக எஞ்சிய உலர்ந்த பயிர்கள் வைக்கோல் ஆகாமல் முழுதாகக் கூளம் ஆகி விடுகின்றன...

    ஆரம்பத்தில் இந்தக் கூளத்தைத் தின்ன விரும்பாத கால்நடைகள் தற்போது வேறு வழியின்றி தின்னப் பழகியிருக்கின்றன...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாவம், அவை பேப்பர், போஸ்டர் பிளாஸ்டிக் என்று கிடைப்பதை எல்லாம் உண்கின்றன.

      நீக்கு
  14. பப்பாளியின் இலைத் தண்டுகள் இனி குழாய்க்காக ஒழிக்கப்படலாம்.. இதனால் பப்பாளி விளைச்சல் குறையக் கூடும்... பப்பாளிப் பூக்கள் இலைத் தண்டுகளின் இடுக்கில் மலர்ந்து காயாகக் கூடியவை...

    பதிலளிநீக்கு
  15. அனைத்தும் நல்ல செய்திகள்
    பஞ்சாயத்து தலைவருக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  16. ரத்தப் புற்று நோய்க்கும், எலும்பு புற்று நோய்க்கும் மருந்து கண்டுபிடிக்கப் பற்றிப்பது மிகவும் நல்ல விஷயம். ஆனா சினிமாக் காரர்களுக்குத்தான் கஷ்டம், இனிமேல் கதாநாயகனையோ நாயகியையோ எந்த வியாதியால் சாகடிப்பார்கள்? 
    பிளாஸ்டிக் மேற்சுழற்சி முறையால் பிளாஷ்டிக்கை மூட்டு சிகிச்சைகளுக்கு பயன்படுத்த முடியும் என்பது நல்ல செய்தி.  
    துப்புரவு தொழிலாளராக பணியாற்றியவர் பஞ்சாயத்து தலைவரானது ஜனநாயகத்தின் வெற்றி. 
    தேன் எடுக்கும் ரோபோ, பொறுத்திருந்து பார்க்கலாம்.  

    பதிலளிநீக்கு
  17. அனைத்துமே அரிய, உயர்ந்த செய்திகள்!
    கணினிக்கும் மூளைக்கும் நேரடித்தொடர்பு ஏற்படுத்தினால் அது நல்லது தானா? அல்லது இது புதுமையா?
    இந்த கண்டுபிடிப்பை விட பப்பாளிக்குழாய் கண்டுபிடிப்பு எத்தனை ஆரோக்கியமானது! இளநீர் வியாபாரி சேகரையும் அவர் மகன் செந்திலையும் நிச்சயம் வாழ்த்த வேண்டும்!

    பதிலளிநீக்கு
  18. அனைத்துமே சிறப்பான தகவல்கள். சம்பந்தப்பட்டவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!