திங்கள், 16 ஆகஸ்ட், 2021

'திங்க'க்கிழமை :  வாழைக்காய் பொடி   - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி

 நான் நிறைய தடவை சொல்லியிருக்கேன். எனக்கு உணவுல, புதுசா ஒண்ணை ஏத்துக்கவே முடியாது. வேற வழியில்லாமல் சாப்பிட நேர்ந்தாலும் அதில் உள்ள குறைகளையே மனது அதிகமாக நினைக்கும்.

அப்படி ஒன்றுதான் இந்த வாழைக்காய் பொடி. இதுபோல வெண்டைக்காய் புளிக்கூட்டு இன்னும் சிலதும் இருக்கு. கல்யாணம் ஆனதுலேர்ந்து மனைவியைப் பண்ணச் சொல்லமாட்டேன்.  உனக்கு வேணும்னா பண்ணிச் சாப்பிட்டுக்கோ என்று சொல்லிடுவேன். ஆனா பாருங்க, பசங்க வந்தப்பறம், அவங்களுக்கும் சேர்த்து இதெல்லாம் செய்துடுவா. இந்த ஜால்ரா கோஷ்டிக்கு அதெல்லாம் பிடிக்கும். என்னோட காம்பினேஷன் அவங்க விரும்புவதில்லை.  (பருப்புக் குழம்பு, தேங்காய் அரைத்த கூட்டு,  மோர்ச்சாத்துமது, கோஸ் மிளகூட்டு, சேவை  புளிசேரி என்று பெரிய லிஸ்ட் இருக்கு. அதுல சமீபத்து addition கேரட் கேப்சிகம் பருப்புசிலி). இன்னைக்கு என்ன சமையல், அப்பா காம்பினேஷனா?  என்று பையன் அலுத்துக்குவான். சரி.. அதை விடுங்க. எல்லோரும் ஒரே குணம், ரசனையோட இருந்தால் அதை ஐந்து நாட்களுக்கு மேல் தாங்க முடியாதுன்னு நினைக்கிறேன். 

பசங்களுக்கு வாழைக்காய் பொடி ரொம்பப் பிடிக்கும். அதை சாதத்துல கலந்து சாப்பிடுவாங்க. நானும் ஒரு நாள், ஒரு வாய் சாப்பிட்டுப் பார்த்தேன். ஓகே என்று தோன்றியது.  என்னிடம் கிச்சன் வேலைகள் வந்த ஒரு நாள், பசங்களுக்கு இண்டெரெஸ்டிங்காக இருக்கட்டுமே என்று வாழைக்காய் பொடி செய்தேன். அதன் செய்முறை திங்கக் கிழமை பதிவுக்காக.


தேவையானவை

 

வாழைக்காய் 2 

பெருங்காயம் 1 துண்டு

மிளகாய் பழம் 3-4

கடலைப்பருப்பு 2 மேசைக்கரண்டி

துவரம்பருப்பு 2 மேசைக்கரண்டி

உளுத்தம்பருப்பு 2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு


செய்முறை


1.  வாழைக்காயை அலம்பிவிட்டு, இரண்டு பாதியா கட் பண்ணி,  குக்கரில் 2 விசில் விட்டு எடுக்கவும்.  பெரிய வாழைக்காயா இருந்தால் 3 பகுதியாவும் கட் பண்ணிக்கலாம்.   பிறகு வாழைக்காயை எடுத்து அதன் தோலை நீக்கிவிடுங்கள் (கையாலேயே எடுத்துவிடலாம்).


2. வாழைக்காயை கையாலேயே சிறிய துண்டுகளாக்கிக்கொள்ளுங்கள்.  கையால அழுத்தினாலே உதிர்ந்துவிடும்.


3. கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, சூடான பிறகு, பெருங்காயத்தை நன்கு வறுக்கவும்.  பிறகு வற்றல் மிளகாய். அதன் பிறகு கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, உளுந்து. இவைகளச் சிவக்க வறுத்து, தட்டில் கொட்டி ஆறவைக்கவும்.


4. மிக்சியில், முதலில் பெருங்காயம், மிளகாயை அரைத்துக்கொண்டு, பிறகு பருப்புகள், அதனுடன் தேவையான  கல்லுப்பும் போட்டு கொரகொரவென அரைக்கவும்.


5. இதனை, உதிர்த்துவைத்திருக்கும் வாழைக்காயுடன் நன்கு கலந்தால், வாழைக்காய் பொடி தயார்.


இதனை சூடான சாதம், நெய்யுடன் கலந்து சாப்பிட மிகச் சுவையாக இருக்கும்.







நீங்களும் இந்தச் சுலபமான வாழைக்காய் பொடியைச் செய்துபாருங்கள்.

63 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    ஆஹா. இன்றும் சகோதரர் நெல்லைத் தமிழரின் சமையல் ரெசிபியா? தொடர்ந்து சாதனை படைக்கும் நெ.த.சகோதரருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமலா ஹரிஹரன் மேடம்.. நான் அவ்வப்போது படங்கள் எடுத்துவைத்திருப்பேன். அனுப்பும்போது ஒரே சமயத்தில் 5-6 செய்முறைகள் எழுதி அனுப்பிடுவேன். தனித் தனியாக அனுப்ப சோம்பேறித்தனம் வந்துடும்.

      நீக்கு
  3. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    இன்றும் என்றும் ஆரோக்கியத்துடன்
    இருக்க இறைவன் அருள் எல்லோருக்கும்
    கிடைக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  4. நெல்லைத் தமிழனின் வாழைக்காய்ப் பொடி
    நன்றாக வந்துள்ளது.

    நம் ஊர் பெரிய வாழைக்காய் போல இங்கே
    பார்க்க முடிவதில்லை.
    நல்ல முற்றின காய் இந்தப் பொடி செய்ய நன்றாக
    வரும்.

    பழசையே விரும்பும் இவருக்கும், புதிதாகக் கேட்கும்
    பசங்களுக்கும் நல்ல டக் ஆஃப் வார்.:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா....

      இந்தியாவுக்கு வந்தப்பறம் (சென்னைக்கு, பிறகு பெங்களூருக்கு), அருமையான வாழைக்காய், நிறைய காய்கறிகள், இந்தியன் பழங்கள் போன்றவைகளைக் காண முடிகிறது, வாங்கவும் முடிகிறது. இந்த ஊர்ல நல்ல வாழைக்காய் 10-13 ரூபாய் ஆகிறது.

      எனக்கு ஃப்ரெஷ் காய்கறிகள் பார்த்தா, வாங்கும் பழக்கம். வேஸ்ட் ஆகுதே என்று எண்ணுவதில்லை. பழைய காய்கறியைக் கடாசிவிடு என்று மனைவியிடம் சொல்லுவேன்.. பெரும்பாலும் அவள்.... கேட்பதில்லை.

      நீக்கு
  5. என்று சொல்லிடுவேன். ஆனா பாருங்க, பசங்க வந்தப்பறம், அவங்களுக்கும் சேர்த்து இதெல்லாம் செய்துடுவா. இந்த ஜால்ரா கோஷ்டிக்கு அதெல்லாம் பிடிக்கும்.//////////////////////////////////////////////////////////////////படிக்கவே அருமையாக இருக்கிறது. எங்கள் மாப்பிள்ளையும் பசங்களை அம்மா
    ஜால்ராக்கள் என்றே அழைப்பார்:)

    எங்கேயுமே அம்மா ராஜ்யம் கொஞ்சம் அதிகம்.
    அப்பாவும் பயந்த மாதிரி, ஆமாம் மாதிரிதான் நடிப்பார்:)


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மா, பசங்களை க்ரூப்பாக விட்டுவிடுவதுதான் சரி என்று நினைக்கிறேன். அப்பாக்கள் பொதுவா ஸ்டிரிக்ட், பிஸினெஸ் லைக், அன்பு வெளிப்படையாகக் காட்டாத குணம்.... அதனால, அம்மா ராஜ்ஜியத்துல விடுவதுதான் நல்லது. இல்லையா?

      நீக்கு
  6. பொடிக்குத் துவரம் பருப்பு சேர்ப்பார்களா.
    மீண்டும் திரு நெல்வேலி,தஞ்சாவூர் என்று
    ஏதாவது முறையோ என்னவோ.

    மிக அருமையாக வந்துள்ளது.
    நன்றியும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது என் மனைவியின் செய்முறை (அவுஹ கும்பகோணம்.. ஆனா வளர்ந்தது எல்லாம் பாளையங்கோட்டைல).

      எனக்கு இட்லி மிளகாய்பொடிக்கு சிவப்பு நிறம் இருந்தால் பிடிக்கும் என்பதால் பெடெகே சில்லி என்று அழைக்கப்படும், கர்நாடக காஷ்மீரி மிளகாய் கொஞ்சம் உபயோகிப்பேன். எனக்கு நல்லா வந்திருப்பதாகத் தெரிந்தாலும், பசங்க, அம்மா பண்ணற மாதிரி இது இல்லையே.. அது நிறம் குறைவாக இருக்குமே என்றெல்லாம் சொல்லுவாங்க.

      எதுக்கு வம்பு என்று... மனைவி செய்முறையை அப்படியே ஃபாலோ பண்ணிடுவேன். கஸ்டமர்கள் பசங்கதானே... நானில்லையே

      நீக்கு
    2. நான் வெங்கடேஷ் பட் செய்முறையை அப்படியே ஃபாலோ பண்ணி வெண்பொங்கல் செய்தேன்.. ஆஹா ஓஹோன்னு சொன்னாங்க. அப்புறம் இரண்டு முறை, செய்முறையைப் பார்க்காம நானாகவே செய்தேன். சொதப்பிவிட்டது. திரும்பவும் பழைய பாடலையே பசங்க ஆரம்பிச்சுட்டாங்க. நீங்க ஏன் புதுசா ட்ரை பண்ணறீங்க.. அம்மா பண்ணறது நல்லா இருக்கும் என்று.. ஹாஹா

      நீக்கு
    3. கும்பகோணம் பக்கங்களிலும் வாழைக்காய்ப் பொடிக்குத் துவரம்பருப்புச் சேர்த்துப் பார்த்தது இல்லை. என் மாமியார் கடுகு, உபருப்பு, கபருப்பு சேர்ப்பாங்க. நான் அதிகம் கபருப்பு சேர்க்கிறதில்லை.

      நீக்கு
  7. வணக்கம் நெல்லை தமிழர் சகோதரரே

    அருமையான வாழைக்காய் பொடியை பக்குவமான முறையில் அழகாக சொல்லியுள்ளீர்கள்.பாராட்டுக்கள். படங்களும் செய்முறைகளும் நன்றாக உள்ளது. நான் முதலில் தலைப்பைப் பார்த்ததும்,வாழைக்காய் பொடித்துவல் செய்முறையோ என நினைத்தேன்.

    முன்பு கரி அடுப்பில், வாழைக்காய் மேல் எண்ணெய் தடவி சுட்டு எடுத்து (அப்பா.. சொல்லும் போதே பயங்கரமாக இருக்கிறதா..? :) ஆனால் இப்படித்தான் செய்வோம். இப்போது கரி அடுப்புக்கு எங்கே போவது?) நீங்கள் சொன்ன பருப்பு, மி. வ. காரத்துடன் அம்மியில் கொஞ்சம் புளியும் சேர்த்து பொடிப்போம். சுவை அமிர்தமாக இருக்கும். இதற்கு தொட்டுக் கொள்ள டாங்கர் பச்சடி மிகப் பொருத்தம்.

    கேஸ் அடுப்பிலும் இப்படி சுட்டு செய்யலாம் என உறவுகள் சொல்வார்கள். நான் செய்ததில்லை. ஆனால், நீங்கள் செய்த முறையில் நான் செய்துள்ளேன்.

    இப்போது நான்கு நாட்களாக வாய்வுத் தொல்லை என் நெஞ்சில், முதுகில் என பிடித்தமாக வந்து அமர்ந்துள்ளதால், உங்கள் தயாரிப்பான வாழைக்காய் பொடியை கண்ணாற ரசித்து ஒரு ஸ்பூன் எடுத்துக் கொண்டேன். மிக அருமையான பக்குவத்துடன் ருசியாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம்..

      உங்கள் எழுத்து என் 9ம் வகுப்பு காலத்துக்குக் கூட்டிச் செல்கிறது.

      அதிலும் நான் தங்கியிருந்த, எங்கள் பெரியப்பா வீட்டில் குக்கர் இன்னபிற சாதனங்களுக்குத் தடை. கரியடுப்பு, இரட்டை அடுப்பு, விறகடுப்பு..... உரலில் இடித்த இட்லி மி.பொடி... என்று.... பெண்களுக்கு மிகவும் கஷ்டமான காலம் அது என்று நினைக்கிறேன். ஆனால் அப்போ பசங்க இன்னும் நல்லவங்களாக இருந்தாங்க. போட்டதைச் சாப்பிட்டுவிட்டு அவங்க அவங்க வேலையைப் பார்க்கப் போயிடுவாங்க. இப்போ மாதிரி, அதைப் பண்ணு இதைப் பண்ணு என்று சொன்னதில்லை (குறைந்த பட்சம், நாங்களெல்லாம் அப்படித்தான் இருந்திருக்கிறோம். சனிக்கிழமை இரவு பலகாரம் என்பதால், எங்களுக்கும் ஓரிரு தோசைகள் கிடைக்கும்)

      என் பையனுக்கு உளுத்தமா பச்சிடி போட்டால், பேசாமல் சாப்பிட்டுவிடுவான்.

      நீக்கு
  8. சுலபமாக இருக்கிறது செய்முறை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அப்பாதுரை சார்... கடினமான முறை என்றால் நான் எப்படிச் செய்வது?

      இன்றுகூட காலையில், சாதம், பாசிப்பருப்பு, பாகற்காய் ரோஸ்ட் செய்திருக்கிறேன். (பையனுக்கு... எனக்கு இதெல்லாம் பிடிக்காது)

      நீக்கு
  9. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவருக்கும் வணக்கம்.

      கீதா சாம்பசிவம் மேடம்தான் முன்புபோல காலையிலேயே வர முடிவதில்லை போலிருக்கு. விரைவில் எல்லாம் சரியாகிவிடணும் என்று ப்ரார்த்திக்கிறேன்.

      நீக்கு
  10. கடைசி படம் மிகவும் அழகாக வந்து இருக்கிறது வாழைக்காய் பொடியும்தான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கில்லர்ஜி... நல்லவேளை இதில் பங்கு கேட்கவில்லை.

      நீக்கு
  11. வாழைக்காய் பொடி செய்முறை நன்றாக இருக்கிறது. படங்கள் எல்லாம் அருமை.

    குழந்தைகளுக்கு பிடித்த பொடி செய்து விட்டீர்கள். உங்களுக்கும் பிடித்து விட்டதா நல்லது.

    மாயவரத்தில் பக்கத்து வீட்டில் எனக்கு சொல்லி கொடுத்த முறை :-வாழைக்காயை வில்லை வில்லையாக நறுக்கிக் கொண்டு எண்ணெய் விட்டு வதக்கி கொண்டு ,ஆறிய உடன் பொடியை போட்டு மிக்ஸியில் ஒரு சுற்றி சுற்றி எடுக்க வேண்டும் என்று .

    பொடி வறுப்பது நீங்கள் சொன்னது போல்தான்.

    நீங்கள் செய்து இருக்கும் முறை எளிதாக இருக்கிறது, அது மாதிரி செய்து பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அரசு மேடம்.. நீங்க சொல்லியிருப்பதும் நன்றாகத்தான் இருக்கிறது. வாழைக்காய் விரைவில் வெந்துவிடும் என்பதால் ரிஸ்க் இல்லை. அடுத்த முறை, உங்கள் மெதட்தான். நான் செய்திருப்பதில், கொஞ்சம் கவனப் பிசகில் குக்கரில் வாழைக்காய் அதிகமா வெந்துவிட்டால், உபயோகமில்லாமல் ஆகிவிடும்.

      நீக்கு
    2. சில சமயங்களில் இது மாதிரி வதக்கிச் சேர்க்கையில் பொடியோடு சேர்ந்து கொண்டு துவையல் மாதிரி ஆயிடுமோனு தோன்றுகிறது.

      நீக்கு
    3. முழுதும் வதங்காமல், மிக்சியில் பொடியாக்கும் ஸ்டேஜ் என்றுதான் நான் புரிந்துகொள்கிறேன்.

      நீக்கு
  12. வாழைக்காய் எண்ணெய் நிறைய விட்டு மொறு மொறு என்று வறுத்த மாதிரி வதக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புரிந்துவிட்டது. அது இன்னமுமே சுவையாக இருக்கும் என்பது என் எண்ணம். பார்ப்போம்.

      நீக்கு
  13. அம்மாவுடன் வாழ்ந்த காலத்தில் அம்மா இதை செய்வார்கள்... இந்த முறையை நான் மறந்தே போய்விட்டேன் ஞாபகபடுத்தியற்கு மிக மிக நன்றி நெல்லைத்தமிழன் இந்த வாரமும் அடுத்த வாரமும் கொஞ்சம் பிஸி அதன் பின் இதை நிச்சயம் செய்து பார்த்து சாப்பிட்டு மகிழ்வேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அவர்கள் உண்மைகள் மதுரைத் தமிழன் துரை.

      தொடர்ந்து வருகை தர்றீங்க, ஆனால் திங்க பதிவுக்கு மாத்திரம்..ஹாஹா

      செய்துபார்த்துவிட்டுச் சொல்லுங்க (கலாய்ங்க). ஹாஹா

      நீக்கு
    2. உணவு பதிவுகள் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று அடுத்தாக ஞாயிற்று கிழமை இரவு கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கும் நேரம் அதனால் உடனடியாக படித்து கருத்து இட முடிகிறது மற்றைய நாட்களில் லஞ் டைம் போன் மூலம் பதிவுகள் படிப்பதுண்டு ஆனால் போன் மூலம் கருத்துக்கள் இடுவது எங்க்கை கடினம் என்பதால் யாருக்கும் கருத்து இடுவதில்லை நேரம் கிடைக்கும் போது புதன் கிழமையும் வியாக்கிழமையும் வருவதுண்டு

      நீக்கு
    3. நாங்க மறுநாள் படிப்பதை நீங்க முந்தின நாளே படித்துவிடுகிறீர்களே...

      வருகைக்கு நன்றி செங்கோட்டை துரை.

      நீக்கு
    4. இந்தப் பக்கம் கொஞ்சம் பார்சல் அனுப்பி வைங்க துரை.

      நீக்கு
  14. நல்லதொரு குறிப்பு. வாழைக்காய் என்றாலே ஃப்ரை மட்டுமே என்று சிலர் சொல்வதுண்டு. கூட்டு, வட இந்திய சப்ஜி வகை என நிறையவே இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழைக்காய் கூட்டு, ஃபரை.... லாம் இருக்கு. வட இந்திய சப்ஜி வகைல வாழைக்காயா? அது சேருமா வெங்கட்?

      நீக்கு
  15. நாங்கள் இதை வாழைக்காய் பொடிமாஸ் என்போம். நான் ஒரு முறை வாழைக்காய் பொடிமாஸ் செய்த பொழுது படங்கள் எடுத்து எ.பி.க்கு அனுப்ப வேண்டும் என்று வைத்திருந்தேன். கீதா ரங்கனிடம் சொன்ன பொழுது,"வாழைக்காய் பொடிமாஸையெல்லாம் அனுப்பினால் கலாய்த்து தள்ளி விடுவார்கள் என்றார். அதனால் படங்களை அழித்து விட்டேன். பார்த்தால் கலாய்க்கும் ஆசாமியே அதை பதிவாக அனுப்பியிருக்கிறார்..! ஹூம்! கீதா அக்கா வந்து என்ன சொல்லப் போகிறார் என்று பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்க ஊரில் வாழைக்காய்ப் பொடிமாஸ் என்றால் அது வேறே! வாழைக்காயை தோல் நிறம் மாறும் வரை வேகவிட்டு எடுத்துப் பின் ஆறிய பின் தோலை உரித்துக்கொண்டு காரட் துருவலில் துருவிக் கொண்டு, அடுப்பில் தே.எண்ணெயில் கடுகு, உபருப்பு, பச்சை மிளகாய், இஞ்சி, கருகப்பிலை, சிட்டிகை பெருங்காயத்தூள் சேர்த்துத் தாளித்துக் கொண்டு துருவிய வாழைக்காய்த் துருவலைச் சேர்த்துத் தேங்காய்த் துருவலோடு உப்புச் சேர்த்து அரைத் தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து (பிடித்தமானால்) நன்கு கிளறிவிட்டுப் பின்னர் எலுமிச்சம்பழம் பிழிந்து நன்கு கலந்து கொண்டு தொட்டுக்கக் கறி மாதிரிப் பரிமாறுவோம். வற்றல் குழம்பு, பிட்லை போன்றவற்றோடு நன்றாக இருக்கும்.

      நீக்கு
    2. நெல்லை சொல்லி இருக்கும் இந்த வாழைக்காய்ப் பொடி கமலா சொன்னது போல் அடுப்பில் சுட்டுத் தான் பண்ணுவோம்.எரிவாயு அடுப்பிலும் சுடலாம் என்றாலும் க்ரில் இருந்தால் நல்லது. அல்லது க்ரில்லுடன் கூடிய மைக்ரோவேவ், அவன் போன்றவற்றிலும் சுட்டுக்கலாம். ஆனால் நான் பெரும்பாலும் மேற்சொன்ன பொடிமாசுக்குச் செய்வது போல் தோல் நிறம் மாறியதும் வாழைக்காயை எடுத்துத் தோலை உரித்துத் துருவிக் கொண்டு நல்லெண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, மிவத்தல், பெருங்காயம் சேர்த்து வறுத்துக் கொண்டு மிக்சியில் பொடி செய்து இந்தத்துருவலோடு உப்புச் சேர்த்துக் கிளறி வைத்து விடுவேன். துருவல் ஒரே மாதிரியாக இருக்கும். நெல்லை போட்டிருக்கும் படத்தில் இருப்பது போல் கட்டியும் உருண்டையுமாக இருக்காது! :)

      நீக்கு
    3. வாங்க பா.வெ. மேடம். வாழைக்காய் பொடிமாஸ் வேறு வாழைக்காய் பொடி வேறு.

      நான் ஹாஸ்டல்ல இருந்தபோது எப்போதாவது வாழைக்காய் பொடிமாஸ் பண்ணுவாங்க, வெங்காயமும் போட்டு. எனக்கு ரொம்பப் பிடித்தமானது.

      வீட்டில் ரொம்பச் சொல்லி அதைப் பண்ணச் சொல்லுவேன் (வெங்காயம் இருந்தால் நான் மட்டும்தான் கஸ்டமர். பசங்களுக்குப் பிடிக்காது).

      கீசா மேடம் செய்முறை சொல்லியிருக்காங்க.

      நீக்கு
    4. http://geetha-sambasivam.blogspot.com/2019/10/blog-post_14.html

      நீக்கு
    5. என் அம்மாவும் இந்த முறையில்தான்
      ​(கீதா அக்கா சொல்லியிருக்கும் முறை)​ வாழைக்காய் பொடிமாஸ் செய்திருக்கிறார்.  பொடிமாஸ் உருளைக்கிழங்கிலும் செய்வார்கள்.

      பெரும்பாலும் பொடிமாஸில் வெங்காயம் சேர்க்கமாட்டார்கள்.

      நீக்கு
    6. ஆமாம், உருளைக்கிழங்கிலும் பொடிமாஸ் பண்ணலாம். வத்தக்குழம்போடு ரொம்ப டேஸ்டா இருக்கும். பொடிமாஸில் எல்லாம் வெங்காயம் சேர்ப்பதில்லை.

      நீக்கு
    7. St.Xavier's Hostel. அதனால் வாழை பொடிமாஸில் வெங்காயம் சேர்த்திருக்கலாம்.

      உங்க இடுகைக்குப் போய்ப் பார்த்தால் அதன் பின்னூட்டங்கள் சுவாரசியமாக இருக்கின்றன

      நீக்கு
    8. //துருவல் ஒரே மாதிரியாக இருக்கும். நெல்லை போட்டிருக்கும் படத்தில் இருப்பது போல் கட்டியும் உருண்டையுமாக// - ஹாஹா. எம்.டி.ஆர் புளியோதரைப் பொடி மாதிரி இல்லாமல், இப்படி இருந்தால், காய் சேர்த்த ஃபீலிங்கோட சுவையாகவும் இருக்கும். கொஞ்சம் என் முறையிலும் செய்து பார்த்துட்டுச் சொல்லுங்களேன்.. என்னை மாதிரியே செய்து பார்க்காமலேயே இப்படி இருந்தால் நல்லா இருக்காதுன்னு சொல்றீங்களே

      நீக்கு
    9. ஏன் சாப்பிட்டதில்லைனு நினைக்கறீங்க? அந்தக் காலங்களில் இதை அம்மியில் வைத்தே பொடி செய்வார்கள். சுட்ட வாழைக்காயைத் தோலுரித்துக் கொண்டு காரப்பொடியோடு அம்மியில் வைத்துப் பொடிக்கையில் இப்படித் தான் வரும். ஆனாலும் இவ்வளவு கட்டி உருண்டைகளாக இருக்காதுனு சொல்லலாம்.

      நீக்கு
    10. கீசா மேடம்... அப்போ சின்னப் பெண் என்பதால், அது பெரிய கட்டிகளாகவும் இப்போது சின்னதாகவும் (நீங்க இப்போ பெரிய பெண் என்பதால்) தெரிந்திருக்கணும்.

      ஆனால் எனக்கென்னவோ நீங்க கொஞ்சம் லேப்டாப் ஸ்க்ரீன் பக்கத்துல கண்ணைக் கொண்டுபோயிட்டீங்கன்னு தோணுது. அதனால் ரொம்பப் பெருசாத் தெரியுதோ? ஹிஹி

      உங்கள் தலைவர் சிவாஜி மட்டும், க்ளோஸப்ல ஸ்க்ரீன்ல முகத்தைக் காட்டி நடிக்கும்போது, ஆஹா ஓஹோ என்ன நடிப்புடா... கண்ணே நடிக்குது மூக்கே தனியா நடிக்குது என்று புகழ்ந்து பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறீங்க.. ஒரு final productஐ close-upல் படம் எடுத்துப் போட்டால், அதில் கடுகு சைஸ் ரொம்பக் கம்மி, வாழைக்காய் பெரிய துண்டு, உளுந்து ரொம்ப கால் சைஸுக்கு உடைத்திருக்கீங்க என்றெல்லாம் பாயிண்ட் பாயிண்ட்டா வாசிக்கிறீங்களே..ஹாஹா

      நீக்கு
  16. முற்றல் வாழைக்காய்தான் இதற்கு நன்றாக இருக்கும். நான் குக்கரில் வைக்க மாட்டேன். அதிகம் குழைந்து விடுமோ என்று பயம்.
    நல்ல முற்றல் வாழைக்காயை வேக வைத்த பிறகு துருவிக் கொள்ளலாம்.
    நாங்கள் து.பருப்பு சேர்ப்பதில்லை.
    கறிவேப்பிலையை விட்டு விட்டீர்களே..?
    எங்கள் வீட்டில் போர் குழம்பிற்கான சைட் டிஷ் இது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் சேப்பங்கிழங்கு, உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு தவிர்த்த காய்களைக் குக்கரில் வேக வைப்பதே இல்லை.

      நீக்கு
    2. வாழைக்காய் பொடிமாஸ், வெந்தயக் குழம்பு வகைகளுக்கும் நல்லாவே இருக்கும்.

      இந்தப் பொடி, பருப்பு பொடி மாதிரி, சாதத்தில் கலந்து சாப்பிடுவது.

      எங்க அம்மா, உருளைக்கிழங்கு பொடிமாஸ், எலுமிச்சை சாறுலாம் விட்டுப் பண்ணுவாங்க... அதைச் சாப்பிட்டு எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டன..

      நீக்கு
    3. கீசா மேடம்... உங்க லிஸ்டில், நெல்லை ஸ்பெஷல் சிறுகிழங்கை விட்டுவிட்டீர்களே

      நீக்கு
    4. சிறு கிழங்குக்கும் இடம் இருந்ததே! பார்க்கிறேன்.

      நீக்கு
  17. அதாவது வாழைக்காய் பொடிமாஸ் (புட்டு) செய்து அதில கொஞ்சம் பருப்புப்பொடி இட்லி மிளகாய் பொடி தூவினால் மாஸ் போய் வாழைக்காய் பொடி ஆகிவிடும். அப்படித்தானே? 

    கோவிச்சுக்காதீங்க. எல்லாம் ஒரு கலாய்ப்பு தான். 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயகுமார் சார்.. உங்களுக்கு மட்டும் இதனைச் சொல்றேன். என் மனைவி முதலில் செய்தபோது, இதைத்தான் நானும் சொன்னேன். இருந்தாலும், பிறகு சமாதான வார்த்தைகளும்தாம்..ஹாஹா. ஆனாலும் ஜால்ரா கோஷ்டிகளுக்கு இது பிடித்திருக்கிறதே...

      நீக்கு
  18. இந்தப் பொடியை சர்க்கரை வள்ளிக்கிழங்கில் செய்து பாருங்கள். தற்போது சர்க்கரை வள்ளிக்கிழங்கு கிடைக்கிறது. நன்றாக இருக்கும்.


    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெயகுமார் சார்.... நான் சென்ற வருடம், கயாவில், சர்க்கரைவள்ளிக்கிழங்கு, விளாம்பழம் இரண்டையும் விட்டுவிட்டேன். கயா முடித்துவிட்டு பிறகு நைமிசாரண்யம் வந்தபோது, அங்கு சல்லிசு விலையில் ஏகப்பட்ட விளாம்பழம் விற்றுக்கொண்டிருந்தார்கள். இங்க பெங்களூர்ல, ஏகப்பட்ட சர்க்கரை வள்ளிக்கிழங்கு கிலோ பத்து ரூபாய் விலையிலும் வந்தது. என்ன பண்ணறது..

      நீக்கு
    2. பையன்களுக்கு வாங்கி செய்வது.

      நீக்கு
    3. அது என்னவோ ஒரே யோசனைதான். அவங்க சாப்பிட்டாங்கன்னா பாதகமில்லை. வீட்டில் செய்வதற்கு யோசனையாக இருக்கிறது ஜெயக்குமார் சார்.

      நீக்கு
  19. வாழைக்காய் பொடி நன்றாக இருக்கிறது. செய்து பார்கிறேன்.
    நாங்கள் வறை(தேங்காய் சேர்த்து லறுப்பது)
    ,பச்சடி, துவையல் செய்வோம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!