சனி, 13 ஏப்ரல், 2024

நோயுற்ற ​மரங்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி மற்றும் நான் படிச்ச கதை

விட்டுப்போன தகவல்கள்.... 




மதுரை: ஆழ்துளை கிணற்றுக்குள் தண்ணீரின் அளவை எளிதில் கண்டறியும் வகையிலான ஒரு புதிய கருவியை மதுரையைச் சேர்ந்த எலக்ட்ரீஷியன் ஒருவர் கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.

தனக்கான திறன், அறிவு, அனுபவம் யோசனையைப் பயன்படுத்தி புதிதாக ஒன்றை கண்டுபிடிக்க, வயது, கல்வி என்பது ஒரு பொருட்டல்ல என தொடர்ந்து பல்வேறு புதிய கருவிகளை கண்டுபிடித்தவர் மதுரையைச் சேர்ந்த எலக்ட்ரீஷியன் ரசாக். அந்த வகையில், தற்போது ஆழ்துளை கிணற்றுக்குள் தண்ணீர் அளவைக் கண்டறியும் விதமாக புதிய கருவி ஒன்றை கண்டறிந்துள்ளார். இக்கருவி மூலம் குழாய்களை வெளியே தூக்கி கண்டறிவது தவிர்க்கப்பட்டு, மேல்பகுதியில் வைத்திருக்கும் சுவிட்ச் போர்டு மூலம் எளிதில் தெரிந்து கொள்ளலாம் என அவர் கூறுகிறார்.

மேலும், அவர் கூறியது: ''சிறுவயது முதலே புதிய கண்டுபிடிப்புகளில் ஆர்வம் அதிகம். ஓரளவுக்கு படிந்திருந்தாலும், அனுபவத்தைப் பயன்படுத்தி ஏற்கெனவே ரைஸ் குக்கர், இருபுறமும் சுழலும் மின்விசிறி, ரயில் தண்டவாள விரிசல் கண்டறியும் கருவி, மாற்றுத் திறனாளிக்கான பிரத்யேக டாய்லெட், ஊன்றுகோள், ராணுவத்தினருக்கான குளிர் தாங்கும் கோட், ஆட்டுக்குடல் சுத்தம் செய்யும் கருவி, தண்ணீரில் இருந்து ஆயிலை பிரித்தெடுக்கும் கருவி, ஆட்டோவுக்கான வாட்டர் வைப்பர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட புதிய கண்டு பிடிப்புக்களை கண்டறிந்துள்ளேன்.

இதற்காக அரசுத்துறை அதிகாரிகள், தனியார் அமைப்புகளிடம் இருந்து பாராட்டுச் சான்றிதழ், விருதுகளும் பெற்றுள்ளேன். எனது கண்டுபிடிப்புகளை முறையாக பதிவு செய்து, பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் முயற்சித்துள்ளேன். இந்நிலையில், கடந்த சில நாளுக்கு முன்பு மதுரையில் ஒருவர் வீட்டில் ஆழ்துளைக்குள் இருந்த மின் மோட்டார் பழுது நீக்கும் பணிக்காக சென்றேன். மோட்டார் பழுது நீக்கி, உள்ளே இறக்கிய நிலையிலும், போர்வெல்லில் மீண்டும் தண்ணீர் எடுக்கவில்லை. மறுபடியும் பிளாஸ்டிக் குழாய்களை வெளியே தூக்கி பார்த்தபோது, தண்ணீர் மட்டம் குறைந்து இருப்பது தெரிந்தது.  (நன்றி JKC ஸார்)

=================================================================================================================

சென்னையைச் சேர்ந்த அருண் கிருஷ்ணமூர்த்தி 2007-ம் ஆண்டு Envorinmentalists Foundation of India (EFI) என்கிற நிறுவனத்தை நிறுவினார். அதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள 39 ஏரிகளையும் 48 குளங்களையும் புதுப்பித்துள்ளார். (நன்றி JKC ஸார்)


=============================================================================================




===================================================================================================


 

நான் படிச்ச கதை

புற்றிலுறையும் பாம்புகள்

கதையாசிரியர்: ராஜேந்திர சோழன்


ஆசிரியர் ராஜேந்திர சோழன். இயற்பெயர் அதுவே. அஸ்வகோஷ் என்ற புனைபெயரிலும் எழுதியுள்ளார். பிறப்பு 1945. உளுந்தூர்பேட்டை. இறப்பு மார்ச் 1 2024. அவரது விருப்பத்திற்கு ஏற்ப கண், மற்றும் உடல் தானம் செய்யப்பட்டது. 

ஆசிரியராக 20 ஆண்டுகள் பணியாற்றி 1991இல் விருப்ப  ஒய்வு பெற்ற அவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கப் பணிகளிலும் தமிழ் தேசிய கட்சி பணிகளிலும் ஈடுபட்டார். 

பாதல் சர்க்காரிடம் நாடகப்பயிற்சி பெற்று, தமிழ்நாடு முழுவதும் பல நாடகங்களை இயக்கி அரங்கேற்றினார்.[ 

ராஜேந்திரசோழன் இரண்டாண்டு காலம் சென்னைத் தோழர்களுடன் இணைந்து 'பிரச்சனை’ , 'உதயம்’ இதழ்களை நடத்தி அவற்றில் நிறைய எழுதினார். ’மண்மொழி’ என்ற சமூக மேம்பாட்டு இதழை நடத்தியுள்ளார். சிறிது காலம் கணையாழி, கசடதபற  போன்ற இதழ்களிலும் எழுதினார். 

"நாம் எழுதுவதை எழுதிப் போட்டுவிடுவோம். அது அதன் வேலையை காலங்காலமாகச் செய்துகொண்டே இருக்கும்" - எழுத்தாளர் ராசேந்திர சோழன்

ஜெயமோகன் "தமிழில் பாலியல் சித்தரிப்பு எழுத்தில் முக்கியமான திருப்புமுனை என்றால் ராஜேந்திர சோழன் எழுதிய 'புற்றில் உறையும் பாம்புகள்' போன்ற சிறுகதைகளையும், 'சிறகுகள் முளைத்து… 'என்னும் சிறிய நாவலையும் சுட்டிக்காட்டலாம்.'" 

மேலதிக விவரங்களுக்கு     ====>இங்கே<====

முன்னுரை

எஸ்ரா இந்தக் கதையை 100 சிறந்த கதைகளில் ஒன்றாக தேர்ந்திருக்கிறார். 

கதையில்லாத கதைகள் என்று நான் குறிப்பிடும் கதைகளில் மற்றுமோர் பகிர்வு. கதை முழுதும் ஒரு பெண்ணின் புலம்பல் ஆக இருப்பதால் தான் அப்படி சொல்கிறேன். .

சரி. கதையின் தலைப்பு என்ன?

புற்றிலுறையும் பாம்புகள் 

அப்படின்னா?

எனக்கும் தெரியவில்லை. கதையில் புற்றும் இல்லை, பாம்பும் இல்லை.

ஒரு வேளை உருவகமாகச் சொல்கிறார் என்றால் புற்று, வன மயில் என்ற கதாநாயகியின் மனதாகவும் அவள் மனதில் உறங்கும் ஆண்கள் மீதுள்ள சந்தேகம் பாம்புகளாகவும் கொள்ளலாம். அல்லது காமம் நிறைந்த ஆண்களின் பார்வை அவர்கள் மனது என்னும் புற்றில் உறையும் பாம்புகளாகவும்  இருக்கலாம். புரிந்து கொள்ளுதல் அவரவர் அனுமானத்தைப் பொறுத்தது. 

கதையின் சிறப்பு என்று கருத ஏதாவது காரணம் இருக்க வேண்டுமே?

கதை 1970 களில் எழுதப்பட்டது. அதுவரையிலும் கதைகளை பேச்சுவழக்கில், வட்டார மொழியில்  எழுதும் போக்கு இருந்ததில்லை. கி ரா போன்றவர் துவங்கி வைத்த வட்டார வழக்கு, மற்றும் பேச்சு தமிழில் கதை  எழுதியது ஒரு திருப்புமுனையாக அமைந்தது எனலாம்..

நான் பிறந்து வளர்ந்த தென் ஆற்காடு மாவட்டத்தின் பேச்சு  மற்றும் பழக்க வழக்கங்கள் கதையில் உள்ளது. 

சரி வாசிக்க போரடிக்குமா?

இல்லை. அடமானம் போன்று இதையும் ஒரு வீச்சில் வாசிக்கலாம். கதை முழுதும் தரப்பட்டுள்ளது. 


புற்றில் உறையும் பாம்புகள்

 

தோட்டப்பக்கம் வேலி ஓரம் கிடந்த சோளத்தட்டுக் கட்டை இழுத்துப்போட்டு உதறி, குத்துக்காலிட்டு அமர்ந்தபடி அடுப்புக்கு தட்டை அடித்து சீராய் அடுக்கிக்கொண்டிருந்த வனமயிலு எதிர்வீட்டில் குடியிருக்கும் வாலிபனைப் பார்த்து முணுமுணுத்துக் கொண்டாள்.

“கண்ணைப் பாரேன் நல்லா… கோழி முட்டையாட்டம் வச்ச கண்ணு வாங்காம பாக்கறத. இவனெல்லாம் அக்கா தங்கச்சியோட பொறந்திருக்கமாட்டானா… எம்மா நேரமா பாத்துக்னுகிறான்யா இதே மாதிரி…”

பக்கத்தில் சற்று தள்ளி தொட்டியில் கைவிட்டுக் கலக்கியபடி மாட்டைப் பிடித்துத் தண்ணீர் காட்டிக்கொண்டிருந்த கந்தசாமி அவன் பாட்டுக்குப் பேசாமல் இருந்தான்.

“பாரா தே அவன் பாக்கறத… எங்கனா அசையரானா பாரேன். அவனும் அவன் மூஞ்சும் .. நல்லா அய்யனாரப்பன் செலையாட்டம்.”

அவன் தொட்டியிலிருந்த தவிட்டை அள்ளி உள்ளங்கையில் ஏந்தி மாட்டுக்கு ஊட்டினான்.

“எங்கனா ஒதை பட்டாத்தான் தெரியும். புள்ளாண்டானுக்கு. இப்படியே பாத்துக்னு இருக்கட்டும். ஒருத்தன் இல்லன்னாலும் ஒருத்தன் எவன்னா கண்ணை நோன்டிப்புட மாட்டான் ஒரு நாளைக்கி. சீ நமக்கு என்னுமோ ஒரு ஆம்பளை பாக்கறான்னாலே அம்மா அயக்கமா கிது. ஒவ்வொருத்தியாமாட்டமா… கட்டனவன் கண்ணெதுர குத்துக் கல்லாட்டம் குந்திருக்க சொல்லவே… சீ! ஜென்மமா அது. செருப்பாலடி…”

முகவாய்க்கட்டையை இழுத்து தோள் பக்கம் இடித்துக் கொண்டாள். எதிர் வீட்டை முறைத்து புருஷனை முறைத்து நன்றாகவே மூடியிருந்த மாராக்கை மேலும் இழுத்து மூடிக்கொண்டாள்.

“பாருய்யா… நீ ஒரு ஆம்பள இங்க குந்தியிருக்க சொல்லவே இந்த பார்வ பாக்கறானே… நீயே கண்டி, இல்லண்ணா என்னா செய்வான். கைய புடிச்சிகூட இழுப்பாம் போலக்குது. ஏன் இழுக்கமாட்டான். தொடப்பக்கட்டையை எடுத்துக்க மாட்டனா கையில, தொடப்பக்கட்டய…”

அவன் வலது மாட்டைப் பிடித்து முளைக்குச்சியில் கட்டிவிட்டு இடது மாட்டைப் பிடித்து அவிழ்த்துக்கொண்டு வந்தான்.

“அங்க பாருதே ரவ அவனண்ணா… நீ என்னமோ இப்பத்தான் ஒரேயடியா தண்ணிகாட்டற… தண்ணி. இங்க என்னடா பார்வன்னு நீ ஒரு பார்வ பாத்தினா உள்ள ஓடிப்புட மாட்டான். அவன்… என்னமோ குந்திங்கிறியே பேசாத.”

அவன் தொட்டியைக் கலக்கித் தண்ணீர் காட்டிக்கொண்டிருந்தான்.

“என்னா ஊரகாளி மாடுன்னு நெனச்சிக்கினானா… பாரேன் பின்ன அவன. நவுருவனான்னு நின்னுகினு பாக்கறத. கிட்ட வந்து பாக்கணம். அப்பறம் இல்ல தெரியும் ஆருன்னு… வனமயிலு எந்த வம்புக்கும் போவாதவள்னுதான் பேரு. இவனல்லாமா சும்மா உடுவேன். காறி மிழிய வச்சிட மாட்டனா. சாணியக் கரைச்சு மூஞ்சில ஊத்தி…”

நமுத்துப் போன சோளத்தட்டை சொத்துக் சொதுக்கென்று முறித்தாள்.

“என்னுமோ நெனைச்சிக்னுகிறாரு புள்ளாண்டான். ஆபீஸ் உத்தியோகம் பண்றமே. பாத்துப்பம் பல்ல இளிச்சிக்கினு ஓடியாந்துபுடும்னு… பழ மொறத்தாலதான் சாத்துவாங்கன்னு தெரியாது போலருக்குது.”

கைக்கு அடங்குகிற அளவு ஒரு தேற்றம் தெரிந்த சோளத்தட்டுகளை அள்ளி உடம்போடு சேர்த்து அனைத்துக்கொண்டு உள்ளே வந்தாள்.

“இவரு ஒரு ஆம்பளன்னு கேடக்கறாரே சொறன கெட்டத்தனமா… அவன் பாட்டுக்னு கெடப்பாறைய முழுங்கிப்புட்டு நிக்கறவனாட்டம் நின்னு பாத்துக்னுகிறான். ஏண்டா பாவின்னுகூட கேக்காம பேசாமகிறாரே என்னுமோ ஊமையாட்டம். கேட்டா என்னா வெல்லத்துல வச்சா முழுங்கிப்புடுவான். இன்னொரு ஆம்பளன்னா பாத்துக்னு சும்மா இருப்பானா…”

அடுப்பாங்கரையோரம் வைத்துவிட்டு நிமிர்ந்து நின்று தன்னைத் தானே ஒருமுறை உடம்பு பூராவும் பார்த்து மேலே தூசுதும்பு இல்லாமல் புடவை, மாராக்கு, ரவிக்கைஎல்லாம் தட்டிக்கொண்டாள்.

“நான்ன வாசி தான் ஆச்சி. இதுவே இன்னொருத்தின்னா சும்மா இருப்பாளா இத்தினி நாளைக்கி. எப்பவே வாசப்படி தாண்டி எகிறிக் குதிச்சிப் புட்டிருக்க மாட்டாளா… எங்கனா தெரியிதா இந்த ஆம்பளைக்கி…” வெளியே வந்து பழையபடி குத்துக்கால் போட்டு அமர்ந்து தட்டை ஒடிக்க ஆரம்பித்தாள்.

“பாரந்தே, இன்னும் இங்கதாண்டி நின்னுக்குனுகிறான் அவன். அசைய மாட்டானாடியம்மா அந்த எடத்த உட்டு… இப்பிடி அப்பிடிக்கூடம்.”

அவன் மாட்டைப் பிடித்துக் கட்டிவிட்டுப் போருக்குப் போய் வைக்கோல் பிடுங்கத் தொடங்கினான்.

“ஏன்யா அவனுக்கு மக்க மனுஷாள் ஆரும் கெடையாதா. வந்த நாளா ஒண்டியாவே கெடக்கரானே .. ஊருக்கீருக்குக் கூட போவாம…”

அவன் வைக்கோல் பிடுங்கினான்.

“நாலு மக்கா மனுஷாள் இருந்திருந்தா கட்டுத்திட்டம் பண்ணி வெச்சிருப்பாங்க… இந்த மாரில்லாம் பாக்க மாட்டான். பெருமா கோவில் மாடு மாதிரி அவுத்து உட்டுட்டாங்க போலருக்குது… தண்ணி தெளிச்சி” கழுத்தை சொடுக்கிக்கொண்டாள்.

“ஊடு உண்டு வேல உண்டுன்னு செவனேன்னு கெடக்கறவளையே இந்த பார்வ பாக்கறானே… இன்னும் அங்கங்கே கேப்பார் மேப்பார் இல்லாம கெடக்குதே… அந்த மாரில்லாம் இருந்தா என்னா பண்ணுவான். சீ ஒடம்புல சீழா ஓடுது. ரத்தம் ஓடல…”

முகத்தைச் சுருக்கி உதட்டைப் பிதுக்கினாள். சோளத்தட்டை பொத்தென்று வைத்தாள்.

பிடுங்கிய வைக்கோலைக் கையில் சேர்த்து அணைத்து மாட்டுப் பக்கம் கொண்டு வந்து உதறினான் அவன்.

“இவன் வந்த நாளா அந்த பங்கஜம் போன்னக்கூடம் வெளில காணம்யா; உள்ளவே பூந்துக்னு… ஊட்ட உட்டுட்டு வர மாட்டன்றா… வந்தா கூடம் மின்னமாரி குந்தி ஆர அமர நாலு வார்த்த பேசமாடன்றா. காக்கா… கணக்கா பறக்கறா. என்னமோ மறந்து வச்சிட்டாப்போல. பாத்துருக்கிறியா நீ அதெல்லாம். ஒரே ஊட்டகிறாங்க ரெண்டு பேரும். என்னா நடக்குதோ, ஆரு கண்டாங்க அந்த காளியம்மாளுக்குத்தான் வெளிச்சம்.

வைக்கோல் உதறி முடித்தவன் கொஞ்சம் சரிந்த தோட்டப்படலை இழுத்து நிமிர்த்தி சரியாய் வைத்துக் கட்டிக்கொண்டிருந்தான்.

“எது இந்தக் காலத்துல தெய்வத்துக்கெல்லாம் பயப்புடுது. அது அது இருக்கிறவரிக்கும் கும்மாளம் கொட்டிட்டுப் போவுது. ஊரு சிரிச்சா கூடம் கவலை இல்லன்னு… எங்கூட்டல்லாம் வயசுக்கு வந்துட்டா வாசப்படிய தாண்ட உடுவாங்களா…! அந்த மாரில்லாம் வளந்தனாலதான் முடியுது. செலதுங்கலாட்டமா… அடியம்மா… எப்பிடித்தான் மனசு வருதோ… கழுத்துல கட்டன தாலிக்கு துரோகம் பண்ண…”

உடம்பை ஆட்டி அவயங்களை நொடித்து பாவனையுடன் சிலிர்த்துக்கொண்டாள்.

“என்னுமா ஆடுதுங்க கேழ்வி மொற இல்லாம…”

அடுத்த கட்டு சோளத்தட்டுகளை அள்ளித் தூக்கிக்கொண்டு வரும் போது தெருப்பக்கம் யாரோ நிற்பதையும் குரல் கொடுப்பதையும் கொஞ்சம் ஒருக்களித்த கதவு வழியாகக் கண்டு பரவசமடைந்தாள்.

“தே யாரோ வந்திருக்கிறாங்க தே…”

“ஆராது” அவன் கழுத்தை மட்டும் திருப்பிக் கேட்டான்.

“நல்ல ஆளுய்யா நீ! ஆருன்னா எனக்கெப்பிடி தெரியும், நானு என்னா ஊர்ல இருக்கறவங்க எல்லாரியுமா தெரிஞ்சி வச்சிக்கினுகிறேன்… கட்டிக்கினு வந்ததுலேருந்து வாசப்படி தாண்டி அறியாதவ நானு… எங்கனா ஊரு பயணம் போவ தெருவுல நடக்கறதுன்னாலே அப்படியே ஒடம்பு இத்துப் போயிடற மாதிரியிருக்கும் எனக்கு. என்ன வந்து கேக்கறியே ஆருன்னு…”

தெருக்கதவு வழியாக தோட்டம் தெரிந்துவிடப் போகிறது என்பது போல சுவரில் ஒட்டிக்கொண்டாள்.

“போய் பாருதே! கூப்புட்றாங்க…”

அவன் படல் கட்டுவதை நிறுத்திவிட்டு எழுந்துவந்தான். அடுப்பங் கரையில் வைத்துவிட்டு அவனைத் தொடர்ந்து பின்னாலேயே அவளும் வந்தாள். கதவு வரைக்கும் வந்து மறைவில் உடம்பை வைத்துக் கழுத்தை மட்டும் வெளியில் வைத்து நின்றாள்.

“வாங்க…வாங்க நீங்கதானா. உட்காருங்க” அவன் சொன்னான். வெள்ளைச் சட்டை போட்ட சிவப்பு உடம்புக்காரர் திண்ணையில் உட்கார்ந்தார்.

“நம்ம இந்த கொரலூர் ரோடு போடறது விஷயமா மின்ன ஊர்ப் பஞ்சாயத்துல பேசிக்கினு இருந்தமே… அது விஷயமா எல்லார்கிட்டயும் கையெழுத்து வாங்கி ஒரு மகஜர் குடுக்கலாம்னு… அடுத்த வாரம் மந்திரி வர்ராராம் கூட்டேரிப்பட்டுக்கு…” அவர் கொஞ்சம் பேசினார்.

பளிச்சென்று சிகப்பாயிருக்கும் விரல்களால் பாக்கெட்டில் மடித்து வைத்திருந்த வெள்ளைப் பேப்பரை எடுப்பதையும், பேனா எடுப்பதையும் பார்த்தாள். காய்ந்த தவிட்டுத் திப்பியும் வைக்கோல் சுனையும் உள்ள கையை கையெழுத்துப் போடுவதற்காக கோவணத்தில் துடைத்துக் கொண்டிருந்தான் அவன்.

“கையை அப்பவே கழுவக்கூடாதாதே!” வந்தவர் நிமிர்ந்து பார்த்ததும் தலையை உள்ளுக்கு இழுத்துக்கொண்டாள்.

“கொஞ்சம் தண்ணி கொண்டாரச் சொல்லுங்க, குடிக்க.”

“ஏமே… கொஞ்சம் தண்ணியாம் கொண்டாந்து குடு தாகத்துக்கு…”

கதவை விட்டு நகர்ந்தவள் காலையில் கழுவிய வெண்கலச் செம்பை சட்டுப்பிட்டென்று புளிபோட்டுத் துலக்கி குடத்திலிருந்து தண்ணீர் சாய்த்துக்கொண்டாள். மூணாம் மாசம் வாங்கியிருந்த ஒரே ஒரு எவர் சில்வர் தம்ளரைத் தேடி எடுத்துக்கொண்டு கதவண்டை வந்து நின்றாள்.

“இங்க வாதே இங்க…”

“கொண்ணாந்து குடுமே அவருகிட்ட…”

“இங்க வாதேன்ன…”

உடம்பை அஷ்ட கோணலாக்கி வளைந்தாள். கதவருகிலேயே நெளிந்து நாணிக்கோணிக்கொண்டு அறியாத பெண் மாதிரி நின்றாள்.

கந்தசாமி தண்ணீரை வாங்கி அவரிடம் கொடுத்தான். “கெணத்துத் தண்ணி, கொஞ்சம் உப்பு கரிக்கும்.” அவள் கதவு மறைவிலிருந்து காற்றுக்குச் சொன்னாள். தண்ணீர் குடித்த பிறகு வந்தவர் போய்விட்டார்.

“சரியான ஆளுதே நீ! மின்ன பின்ன தெரியாத ஆம்பள எதுறால வந்து நின்னு நீம்பாட்டுன்னு தண்ணி குடுரீன்னா ஆரால முடியுது… எனக்கென்னுமோ நெனச்சாலே ஒடம்பே சிலுக்குது. இன்னும்கூட அந்த அயக்கம் போவலையா. வேர்த்துப் போச்சி தெரியுமா எனக்கு…”

அவள் தோட்டத்துக்கு வந்து சோளத்தட்டுப் பக்கத்தில் அமர்ந்தாள்.

“நீ சொன்னதும் அப்படியே ஜென்மமே குன்னிப் பூடுத்தியா எனக்கு… என்னா நெனச்சிக்கின்றா இந்த ஆம்பள இப்பிடி சொல்லிப் புட்டாருன்னு… எடுத்துப்போட்டா மாறி பூடுத்து… ஏயா… என்னா நெனச்சிக்கினுயா அப்பிடி சொன்ன… கொண்ணாந்து குடுக்கறாளா இல்லியா பாப்பம்னா…”

அவன் குறையோடு விட்ட படலை கட்டிக்கொண்டிருந்தான்.

“கதவாண்ட நிக்கறதுக்கே உள்ளங்காலல்லாம் கூசுது எனக்கு. அப்பேர்ப்பட்ட பொம்பளைய இவர் என்னடான்னா ஊரு பேரு தெரியாத ஆம்பளைக்கி அரிவிகால தாண்டி வந்து தண்ணீ குட்றீன்னா… நல்லா இருக்குதே ஞாயம்… அந்தமாரிதான் இன்னொரு நாளைக்கி சொல்லப்போறியா…”

கிடந்த மீதி சோளத்தட்டுகளை ஒடித்து முடித்து தென்னம் அலவு எடுத்து இறைந்து கிடந்த செத்தைகளைக் கூட்டினாள்.

“சில பொம்பளைவ மொகந் தெரியாத ஆம்பளகிட்ட கூடம் என்னுமா பேசிப்புடுதுங்க. எடுத்த வாய்க்கி வெடுக்வேடுக்குன்னு… நமக்கு என்னடான்னா அப்பிடியே மர வட்ட ஊர்றாமாரி கிது போ மெனில… கட்டனவன உட்டுட்டு மத்தவன நிமிந்து பாக்கறதுன்னாகூடம் கண்ணு ஒப்பல…”

உடம்பைச் சிலிர்த்து அருவருத்துக்கொண்டாள்.

அவன் படல் கட்டுவதை நிறுத்தி தெருவுக்கு வந்து எரவாணத்தில் பனம் நாறு செருகி வைத்திருந்த இடத்தை தேடிக்கொண்டிருந்தான்.

துடைப்பத்தை எடுத்து வந்து வைத்தவள் வெளியே போய் வேலை எதுவும் இன்றி சும்மா நின்றாள். கண்களை இடுக்கிக்கொண்டு வெறிச்சென்று கிடந்த எதிர்வீட்டைக் கூர்ந்து பார்த்துக்கொண்டு நின்றாள்.

கோழிமுட்டைக் கண்ணன் மறுபடியும் தோன்றினான். கன்னத்தில் கைவைத்து, உள்ளங்கையில் முகவாயைப் புதைத்து, கண்களை அகல விரித்தாள். ஆச்சரியத்தோடு பார்க்கிற மாதிரி முகத்தில் ஒரு வியப்புக்குறி தோன்ற, அபிநயம் பிடிக்கிற பாவனையில் நின்றாள்.

பின்னால் நாறு கத்தையுடன் கந்தசாமி வந்தான்.

“பாரன்யா அவன… பழையபடியே வந்து நின்னுக்கினு மொறைக்கிரத… அப்பிடியே கொள்ளிக்கட்டைய எடுத்தாந்து கண்ணுல சுட்டா என்ன இவன…”

“சரிதான் உள்ள போமே பேசாத… சும்மா பொண போணன்னிக்கின்னு…” அவன் படல் கட்ட உட்கார்ந்தான்.” இப்பதான் ஒரேடியா காட்டிக்கிறா என்னுமோ பெரிய பத்தினியாட்டம்.

கதையின் சுட்டி ====>இங்கே<====


10 கருத்துகள்:

  1. எதையும் அதீதமாகச் செய்தால், அதுவே எதிராளியிடம் தாக்கத்தை ஏற்படுத்தும். கதையில் வனமயிலின் மனத்தையே புற்றில் உறையும் பாம்புகள் என உருவகப்படுத்தியிருக்கிறாரோ எனத் தோன்றியது.

    ரொம்பவே வட்டார வழக்கு. வெளி உலகத்தையோ வேற்று மனுசனையோ பார்த்துப் பழகாத பெண்ணின் மனத்தை கதையாசிரியர் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். இத்தகைய தன்மை பொதுவா வழி வழி வந்த மனநிலை அல்லது ஹிப்போக்ரசி என இருவகையாகப் பிரிக்கலாம்.

    கதை ஆஹா ஓஹோ என்று சொல்லும் தரத்தில் இல்லை.

    பதிலளிநீக்கு
  2. கஷ்டப்பட்டுக் கிடைத்த பதினாறு லட்சத்தை ஆட்டோவில் விட்டவர். நல்ல பொறுப்புடன் கூடிய மனிதர். ஏரி தூர் வாரியது நல்ல செயல். மற்ற பாசிடிவ் செய்திகளும் நன்று.

    பதிலளிநீக்கு
  3. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. நீங்களும் சரி, மூலக்கதையைத் தட்டச்சு செய்த அந்த கிருஷ்ண பிரபுவும் சரி, கதையின் கடைசி வரிக்கு சரியான குறியீடுகள் கொடுப்பதில் கோட்டை விட்டிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "நாம் எழுதுவதை எழுதிப் போட்டுவிடுவோம். அது அதன் வேலையை காலங்காலமாகச் செய்துகொண்டே இருக்கும்" - எழுத்தாளர் ராசேந்திர சோழன்

      நீக்கு
    2. மொத்தக் கதையையும் தாங்கி நிற்கிற ஒற்றை வரி:

      இப்பதான் ஒரேடியா காட்டிக்கிறா என்னுமோ பெரிய
      பத்தினியாட்டம். -- இது யார் நினைப்பு என்று நினைக்கிறீர்கள்?

      இந்தக் கேள்விக்கு பதில் தான் நான் குறிப்பிடுவது.

      நீக்கு
    3. நினைப்பு பொழைப்பைக் கெடுக்குது என்று என்னுடைய அம்மா அடிக்கடி கூறுவார். அது தான் இது, பெண்ணின் நினைப்பு அவள் மட்டுமே பத்தினி என்பது.
      Jayakumar

      நீக்கு
    4. அது அவள் கணவனின் நினைப்பு என்றால் எப்படி இவளுடன் மனதை விரோதித்துக் கொண்டு குடும்பம் நடத்துகிறான் என்ற கேள்வி வரும்.

      உங்கள் பதில் தான் சுவாரஸ்யம். அது அந்தப் பெண்ணின் நினைப்பு என்றால் சரியான கில்லாடி என்று தோன்றும்.

      யாரின் நினைப்பு என்றாலும் 'இப்பத் தான் ஒரேடியா காட்டிக்கிறா என்னுமோ பெரிய பத்தினியாட்டம்' என்று ஒற்றை கொம்புகள் (')ஆரம்பத்திலும் கடைசியிலும் வரவேண்டும்.
      உட்கார்ந்தான் என்ற வார்த்தைக்கு பின்னால் இருக்கிற ரெட்டைக் கொம்புகளை (")
      எடுத்து விட வேண்டும்.

      ஜெஸி ஸார்! எழுதத் தெரிந்த எழுத்தாளன் தன் எழுத்தில் மட்டும் பேசுவதில்லை. இந்த மாதிரி குறியீடுகளிலும் வாசிப்பவரோடு நெருக்கமாய் பேசுகிறான்.

      ஒரு பரிதாபம் என்னவென்றால் ரெண்டே வரிகளில் 'இதான் கதைக்கரு
      ' என்று வரையறுக்கும் புத்திசாலிகள் இதெல்லாம் பற்றி அறியாதவர்களாகவே இருக்கிறார்கள்!! :))

      நீக்கு
  5. படித்தால்தான் விஞ்ஞானி ஆகமுடியும் என்பதை ரசாக் தகர்த்து உள்ளார்.

    பதிலளிநீக்கு
  6. பாஸிடிவ் செய்திகள் அருமை.
    கதை படித்தேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!