செவ்வாய், 23 ஏப்ரல், 2024

சிறுகதை : காஃபி - துரை செல்வராஜூ

 காஃபி

துரை செல்வராஜூ 

********

" காபி.. "

செய்தித் தாளில் இருந்து முகம் திருப்பிய சுந்தரத்தின் கண்களில் இளந்தேவதை தெரிந்தாள்...

அந்தத் தேவதையின் பெயர் காமாட்சி..
வெள்ளித்தட்டு.. அதில் ஒரு வெள்ளிக்குவளை.. அதில் நுரையும் மணமுமாக இருந்தது டிகிரி காஃபி..

திருவையாற்றுக்குள் காஃபி..

காஃபிக்குள் காஃபி என்றால் தஞ்சாவூர் டிகிரி காஃபி தான்..
.
காமாட்சியின் கைகளில் இருந்து காஃபியை வாங்காமல் கண்களால் அளவெடுத்தான் சுந்தரம்...

நேற்று விடியற்காலை சுபமுகூர்த்தத்தில் மாங்கல்யதாரணம்...

அனைத்தும் சுபமங்கலமாக நிகழ்ந்து மதியத்திற்கு மேல் முதல் அழைப்பு முடிந்து இங்கே மணமகள் இல்லத்தில் திருப்பள்ளி.. 

அங்கிருந்து பெரிய அக்காவும் வேறு சில உறவினரும் பேச்சுத் துணைக்கு வந்திருக்கின்றனர்..

யார் பேச்சுக்கு யார் துணை!..

விடியும் முன் தலை குளித்தது.. உலரட்டும் என்று தளர்வாகப் பின்னப்பட்ட  கூந்தலில் கமகம என்று மல்லிகைச் சரங்கள்..  எல்லாம் பெரிய அக்காவின் வேலையாகத் தான் இருக்கும்..  

நேற்று இரவு அணிந்திருந்ததை விட நகைகள் அதிகம்.. 

நெற்றிக்கு மேல் இருபுறமும் சூரிய சந்திர வில்லைகள்.. வகிட்டில் நெற்றிச்சுட்டி..

காதுகளில் வேறு விதமான தொங்கல்கள்.. கழுத்தில் சிவப்புக் கல் அட்டிகையும் வேறு சில சங்கிலிகளும்..

ராத்திரி சத்தமில்லாது இருந்த கொலுசுகள் இப்போது  சலசலக்கின்றன..

எல்லாவற்றுக்கும் மேலாக மஞ்சள் இழைத் திரளில் திருமாங்கல்யம் மின்னிக் கொண்டிருந்தது..

கவனமாக காமாட்சியின் முன் கையைப் பற்றினான் சுந்தரம்... 

காபித் தம்ளர் இருந்த வெள்ளித் தட்டு நடுங்கியது.. கையில் கூடுதலாக இருந்த வளையல்களும் சிலுசிலுத்தன.. 

இதென்னடா வம்பாப் போச்சு.. என்று நினைத்துக் கொண்ட சுந்தரம் - காமாட்சியின் கைகளில் இருந்த தட்டை வாங்கி அருகிருந்த சிறு பலகையில் வைத்து விட்டு காமாட்சியை பக்கத்தில் நெருக்கமாக அமர்த்திக் கொண்டான்.. நடுக்கம் இன்னும் தீரவில்லை..

கைகளில் தங்க வளையல்களுடன் கண்ணாடி வளையல்களும் இருந்தன.. பகல் பொழுது.. கலகலத்துக் கொண்டிருக்கட்டுமே என்ற நல்ல எண்ணமாக இருக்கலாம்!.. 

விரல்களில் மருதாணிச் சிவப்பு.. இடது சுட்டு விரல் பெரு விரல்களைத் தவிர்த்து மற்ற விரல்களில் மோதிரங்கள்..

சிவந்திருக்கும் விரல்களைப் பற்றியபடியே காமாட்சியின் முகத்தை நோக்கினான் சுந்தரம்.. 

அந்தக் காலைப் பொழுதிலும் முகத்தில் மேலுதட்டில் சற்றே வியர்த்திருந்தது..  தனது கைப்பிடிக்குள் இருந்த அவளது கை விரல்களைக் காட்டி கண்களால் கேட்டான்..

" எட்டு மோதிரம் போட்டுக்கக் கூடாதாம்.. நீங்க காபி குடிங்க.. "

" நீ குடிச்சியா?.. "

காமாட்சியின் முகத்தில் வெட்கம்..

வெள்ளித் தம்ளரை எடுத்து காபியை அருந்தியதும் சுந்தரத்தின் முகம் மாறியது..

" காஃபி நல்லா இருக்கு... அருமை அருமை!.. "

அங்கு வீட்டிலும் கறந்த பாலில் தான் டிகிரி காஃபி.. என்றாலும் இங்கே மாமியார் வீட்டில் கூடுதல் சுவையாக இருந்தது..

கைராசியோ!..

காமாட்சியின் முகத் தாமரை மலர்ந்தது.. இதற்கு மேல் வேறென்ன வேண்டும்!..

மேல் விழிகளால் காமாட்சியின் வேல் விழிகளை விழுங்கிக் கொண்டே சுந்தரம் காஃபியை அருந்த - மெல்லிய புன்னகை காமாட்சியிடம்..

இதற்குள் -  கூடத்தில் பேச்சு சத்தம்..

" வாங்க.. வாங்க.. நமஸ்காரம்.. "

" நேத்து தான்  மாயவரத்து ல மச்சினர் மகனுக்கும் முகூர்த்தம்... "

" அதான் ரெண்டு நாளைக்கு முன்னால வந்து விஷயம் சொன்னீங்களே!.. "

" வீட்ல யும் புள்ளைங்களும் மாயவரத்து ல தான் இருக்காங்க.. நான்  போட் மெயிலப் புடிச்சி விடியக் காலயில வந்தேன்.. மளியக் கடை மாடு கன்னு ன்னு இருக்கு.. நாமளும் உஷாரா இருக்க வேண்டியதா இருக்கே.. "

கீழத் தெரு மளிகைக் கடைக்காரர் கல்யாணம் விசாரிப்பதற்காக வந்திருக்கின்றார்..

" ஆமா.. ஆமா.. இங்கேயும் அப்படித்தான்.. எல்லாம் நேத்து சாயங்காலமே கிளம்பிட்டாங்க..  நேத்து அழைப்புக்கு வந்த சொந்தங்க  மட்டுந்தான் இப்போ வீட்ல.. நம்ம காலம் மாதிரி ஒரு வாரத்து கலியாணம் எல்லாம் இப்போ ஏது?.. " - ஆமோதித்தவர் உள் நோக்கிக் குரல் கொடுத்தார்..

" யார் வந்திருக்காங்க பாருங்க.. சந்தனம் எடுத்து வாங்க.. பட்சணமும் தாம்பூலமும் கொண்டு வாங்க.. " 

சுந்தரமும் காமாட்சியும் உள் அறையில் இருந்து கூடத்துக்கு வந்தபோது - சமையல் கூடத்தில் இருந்து காமாட்சியின் அம்மாவும் பெரிய அக்காவும் வெள்ளித் தட்டுகளுடன் வெளிப்பட்டனர்..

ஒன்றில் ஜிலேபி, பால்கோவா, முறுக்கு, சோமாசா என பட்சணங்கள்.. மற்றொன்றில் சந்தனமும் விபூதி மடலுடன் குங்குமமும் இருந்தன..

புதுமணத் தம்பதியினர் இருவரும்  வந்திருந்த பெரியவரை கை கூப்பி வணங்கியபடி தண்டனிட்டு எழுந்தனர்..

" பெத்தவங்க பெரியவங்க மனச குளுர வைக்கணும்.. ஒருத்தருக்கு ஒருத்தர் கண்ணா இருக்கணும்..  மகமாயி என்னிக்கும் துணை இருப்பா!.. " - என்றபடி மடலில் இருந்து விபூதி குங்குமம் எடுத்து மணமக்களுக்குப் பூசி வாழ்த்தினார்..

இடுப்புப் பட்டையில் இருந்து மோதிரம் ஒன்றை எடுத்து சுந்தரத்தின் விரலில் அணிவித்து விட்டு மீண்டும் ஒன்றை எடுத்து சுந்தரத்தின் கையில் கொடுத்து காமாட்சிக்கு அணிவிக்கச் சொன்னார்..  

" பத்து மணியப் போல சம்பந்தி புரம் ரெண்டாம் அழைப்புக்கு வர்றாங்க.. மத்தியானம் எல்லாருக்கும் விருந்து.. அவசியம் வந்து கௌரவிக்க வேணும்.. " காமாட்சியின் அப்பா விண்ணப்பித்துக் கொண்டார்..

" அதுக்கென்ன வந்துடுவோம்.. ஆனா ரெண்டு மணியாகுமே.. "

 தட்டில் இருந்து ஜிலேபி ஒன்றைக் கிள்ளி வாயில் போட்டுக் கொண்டார்..

" அதனால என்ன.. நாங்க எல்லாம் காத்திருக்கோம்.. "

பெரிய அக்கா உள்ளே சென்று காஃபியும் தாம்பூலமும் எடுத்து வந்தாள்..

" சிவ சிவா.. அப்படியெல்லாம் இருக்க வேணாம்.. சின்னஞ்சிறுசுங்க.. அதுங்கள முதல் ல சாப்பிட வெச்சுடுங்க.. நீங்களும் காலத்துல சாப்பிட்டுடுங்க.. எங்கூட இருந்து சாப்பிட ஒருத்தர் போதும்..  ரெண்டு மணிக்கெல்லாம் வந்துடறேன்.. அப்போ நா புறப்படுறேன்.. நாலு நாள் ஆச்சு கடை திறந்து.. "  - என்றபடி காஃபியை அருந்தியவர் தாம்பூலம் எடுத்துக் கொண்டு புறப்பட்டார்..

அவர் சென்றதும் -  " பெரியவங்க  பெரியவங்க தான்.. " என்ற பெரிய அக்கா தொடர்ந்தாள்..

" மாமாவுக்கு காபி?.. " 

காமாட்சியின் அப்பா பெரிய அக்காவுக்கு மாமா முறை தானே.. 

பெரிய அக்கா இப்படி உரிமையுடன் கேட்டதும் அவளது அன்பினையும் பண்பினையும் கண்டு அங்கிருந்த அனைவருக்கும் மகிழ்ச்சி..

" இப்பதானே இட்லி சாப்பிட்டாங்க.. உங்க மாமா!.. " - காமாட்சியின் அம்மா பதில் கூறவும் - 

" அப்பா.. "  - காமாட்சி மற்றொரு காஃபியுடன் வந்தாள்..

"  மாப்பிள்ளைக்குக் காபி கொடுத்தீங்களா!?.. "

அவருக்கு வீட்டுக்குள்  நடக்கின்ற எல்லாம் தெரியும்.. இருந்தாலும் அன்பின் விசாரிப்பு..

" ம்ம்.."  புன்னகை ததும்ப காமாட்சி உள் அறைக்குள் சென்றாள்... பின்னாலேயே சுந்தரமும் சென்றான்.. அறைக்குள் சென்ற காமாட்சி அந்த வெள்ளித் தம்ளரை நோக்கினாள்..

சுந்தரம் அருந்தியது போக மீதம் அரை தம்ளர் காஃபி  இருந்தது.. சற்றும் யோசிக்காத காமாட்சி அதை எடுத்து மெல்ல அருந்தினாள்..

பின்னால் வந்த சுந்தரம் அப்படியே காமாட்சியை சிறைப்படுத்திக் கொண்டு காது மடலின் அருகாக சுவாசித்தான்.. களிப்புடன் கவிதை வாசித்தான்..

" காமாட்சி.. ரெண்டு பேரும் சாப்பிட வாங்க.. "

வெளியில் இருந்து பெரிய அக்காவின் குரல்..

" நல்லவேளை நான் தப்பிச்சேன்.. " காமாட்சியின் முகத்தில் புன்னகை..

சுந்தரத்திற்கோ ஏமாற்ற்ம்..

இரண்டாம் மூன்றாம் அழைப்புகளுக்குப் பின் தொடர்ந்த கோலாகலத்தில் ஆர்த்தியும் அருணும்.. ஆர்த்தி பெங்களூரில் குடியேறி விட அருண் - கைக்கு அருகில்..

பெரிய அக்காவும் சின்ன அக்காவும் பூர்வீக சொத்து நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட தங்கை மட்டும்.. 

அடுத்த சில மாதங்களில் அவளும் நல்ல விதமாக கரையேறி விட ஓராண்டுக்குள் வங்கியில் வேலையும் கிடைத்து விட்டது.. 

எல்லாம் காமாட்சி வீட்டுக்கு வந்த யோகம் என்று பேசிக் கொண்டனர்..

பூர்வீக சொத்தும் வங்கியில் வேலையும் சுந்தர - காமாட்சி குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு அடித்தளம் ஆகின..

சில மாதங்களுக்கு முன் அருணுக்கும் நித்யா வந்து சேர்ந்திட சுந்தர - காமாட்சி தம்பதியருக்கு நிம்மதிக்கு மேல் நிம்மதி.. 

இப்போது ஐம்பதைக் கடந்து விட்டார் சுந்தரம்.. காதுகளின் பக்கமாக நரை..

" காபி.. இந்தாங்க.. "

ஊஞ்சலில் அமர்ந்திருந்த சுந்தரம் வாங்கிக் கொள்ள - காமாட்சியம்மாள் அவருக்குப் பக்கத்திலேயே அமர்ந்து கொண்டார்..

" காஃபி நல்லா இருக்கு... அருமை.. அருமை!.. "

காமாட்சியம்மாளின் முகத் தாமரை மலர வேறென்ன வேண்டும்!..

" அன்னைக்கு காதுக்குள்ள கவிதை ஒன்னு சொன்னீங்களே.. "

" என்னைக்கு?.."

" அதான் அன்னைக்கு!.. "

மஞ்சள் முகத்துத் 
தாமரையே
மங்கலம் ஆகிய 
பூ மழையே
சுந்தரன் நெஞ்சினில் காமாட்சியே
சூழ்ந்திடும் நலங்கள் தேனாட்சியே!..

சுந்தரன் தோளில் இளங்கிளியே
புதுமலர் பூத்திடும் பூங்கொடியே
வசந்த மலர் என
வந்த நிலவே
வரம் எனக் கிடைத்த வடிவழகே!..

காஃபியும் அன்றைக்கு மாதிரியே இருக்க கவிதையும்  அன்றைக்கு மாதிரியே இருக்க - கணவரின் தோளில் புன்னகையுடன் சாய்ந்து கொண்டார் காமாட்சியம்மாள்...

***

38 கருத்துகள்:

  1. மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு.

    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. தண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
    தளிர் விளைவாகித்
    தமிழும் வாழ்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதிய வாழ்த்து வாசகங்கள்!

      நீக்கு
    2. வசிக்கின்ற ஊரையும் வாழ்த்த வேண்டுமாம்...

      மணிமேகலையில் இருந்து சமீபத்தில் தெரிந்து கொண்டேன்..

      நீக்கு
    3. ஊரையும் வாழ்த்த வேண்டுமாம்...

      மணிமேகலையில் இருந்து சமீபத்தில் கற்றுக் கொண்டேன்..

      நீக்கு
    4. ஓ.. இந்தக் கருத்து காணாமல் போய் விட்டதென மறுபடியும் போட்டு விட்டேன்...

      நீக்கு
  4. இன்று கதைக் களம் காண்பதற்கு வருகை தரும் அன்பு நெஞ்சங்களுக்கு நல்வரவு..

    பதிலளிநீக்கு
  5. இன்று எனது கதையினைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும்

    அழகிய ஒளிப்படத்துடன் சிறப்பு செய்த சித்திரச் செல்வர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. நல்லதொரு நாளில் இந்தக் கதை வெளியாகி உள்ளது.. மகிழ்ச்சி..

    முன்பெல்லாம் நாளையும் கோளையும் உத்தேசித்து - கதையை வெளியிடுமாறு அன்பின் ஸ்ரீராம் அவர்களிடம் கோரிக்கை வைத்திருக்கின்றேன்..

    அவரும் அவ்விதம் வெளியிடுவார்..

    இப்போது அப்படியெல்லாம் இல்லை...

    ஆயினும் மிகச் சரியாக புதுமணத் தம்பதியர் பொருந்தி மகிழ வேண்டிய நாளில் இக்கதை வெளியாகி உள்ளது..

    இது இறைவன் சித்தம்...

    நன்மையை நாடுகின்றேன்..
    நன்மையும் நாடுகின்றது...

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

    இன்றைய கதை மிக அருமையாக உள்ளது. அழகான, அன்பான ஒரு இல்லறத்தை நல்லதொரு வார்த்தைகளால் பிணைத்தெடுத்து தந்த விதத்தை ரசித்தேன்.

    அன்பான ஒரு குடும்பத்தை அருகிலிருந்து பார்த்த ஒரு நிறைவு கதையில். பொங்கும் மங்கலம் என்றும் தங்கட்டும். காஃபியோடு கவிதையும் மணந்தது வெகு சிறப்பாக இருப்பதைக் கண்டு அனைவரும் நன்றாக இருக்க இறைவனிடம் வேண்டியது என் மனம். நிறை நிலா நாளில் மனதிற்கு நிறைவான கதை.

    இப்படி ஒரு அருமையான கதையை தந்த உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். பாராட்டுக்கள். நன்றிகளும்.

    கதைக்கேற்ப காமாட்சியின் ஓவியத்தைப் படைத்த சகோதரர் கௌதமன் அவர்களுக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      அருமையான மாங்காய் சாம்பார் சாதம் சாப்பிட்ட வாய்க்கு உடனே சுவையான டிகிரி காஃபியும் கிடைத்தது. நன்றி.

      (இதை கருத்தில் குறிப்பிட எண்ணி மறந்து விட்டேன்.அதனால் காலை வேலைகளுக்கு நடுவே உடன் வருகிறது இந்த பின் கருத்து.)

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. /// அருமையான மாங்காய் சாம்பார் சாதம் சாப்பிட்ட வாய்க்கு உடனே சுவையான டிகிரி காஃபியும் கிடைத்தது. நன்றி... ///

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. இயல்பான அறத்துடன் ஒரு கதையை எழுதப் போக -

    இன்று வரை நான் படுகின்ற அவஸ்தை எனக்குத் தான் தெரியும்...

    அந்தக் கதையைக் கோப்பில் இருந்து எழுதிய சில நாட்களில் நீக்கியும்

    எனது இன்னல் இன்னும் நீங்கவில்லை...

    எல்லாம் அவன் செயல்...

    பதிலளிநீக்கு
  11. அங்காரகனால் குருதியின் சூடு அதிகரிக்கின்ற செவ்வாய்க் கிழமையில் நிறைநிலா கூடி நன்னாளாக மலர்ந்திருக்கின்றது..

    இந்நாளில் அனைவரது அந்தராத்மாவை சற்றே மகிழ்விக்கும் படியாக இன்று எனது எழுத்துக்கள்...

    இதுவே ஆத்ம திருப்தி..

    பதிலளிநீக்கு
  12. ஜெயாவில் திரு ஏரகம் பற்றிய வர்ணனை ஓடிக் கொண்டு இருக்கின்றது..

    நான் ஓதிய கல்வியும்
    என் அறிவும்!..

    அவனருள்..
    அவனருள்!..

    பதிலளிநீக்கு
  13. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  14. கதை நன்றாக இருக்கிறது.
    கவிதை நன்றாக இருக்கிறது. இளம் வயது சுந்தரம், காமாட்சி கதையும் ஐம்பதைக் கடந்து விட்ட சுந்தரம் கதையும் நன்றாக இருக்கிறது.மீண்டும் கவிதையை கேட்டு வாங்கி விட்டார் காமாட்சி.
    சாரின் ஓவியமும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ கோமதி அரசு..

      /// இளம் வயது சுந்தரம், காமாட்சி கதையும் ஐம்பதைக் கடந்து விட்ட சுந்தரம் கதையும் நன்றாக இருக்கிறது... ///

      தங்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      வாழ்க நலம்..

      நீக்கு

  15. @ கமலா ஹரிஹரன்..

    /// நிறை நிலா நாளில் மனதிற்கு நிறைவான கதை.

    இப்படி ஒரு அருமையான கதையை தந்த உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். பாராட்டுக்கள்.. ///

    தங்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  16. இளம் தம்பதிகளின் கதை சிறப்பு ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இளம் தம்பதிகளா!?...

      இப்போது ஐம்பதுக்கும் மேல் வயசு இருவருக்கும்!..

      மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நீக்கு
  17. பெளர்ணமி நாளில் குளிர் நிலா போல மனதுக்கு இதம்தரும் நல்லதோர்கதை வாழ்த்துகள்.
    அந்தக் காலத்தையும் இந்தக்காலத்தையும் கதையில் சேர்த்துக் கொண்டுவந்தது சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி மாதேவி..

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!