4.8.25

"திங்க"க்கிழமை :  பொடிமூடிய முழுக் கத்தரிக்காய் கறி - ஸ்ரீராம் 

 "ஸ்ரீராம்...  CE கூப்பிடறார்"

"என்னையா?  என்னவாம்?"

"தெரில்ல... வீட்டுக்கு கிளம்பினார்..  அப்புறம் சிஸ்டம் பார்த்தவர் உடனே உன்னைக் கூப்பிட்டார்"

தள்ளு கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றேன்.  புன்னகைத்தேன். கேஜிஜி புன்னகைக்கவில்லை.

"மணி என்ன"

"ஒன்பது ஆறது..  நீங்க வீட்டுக்குள் கிளம்பலை?  தூங்க நேரமாகலை?"

"நாளைக்கு என்ன கிழமை?"

"என்ன கேஜிஜி..   ஞாபகமில்லையா என்ன...  திங்கக்கிழமை..."

"எனக்கு ஞாபகமிருக்குப்பா...  உனக்குதான் எங்கோ கவனம் போல..  நாளைக்கான போஸ்ட் எங்க?"

"திங்க'க்கிழமை...  இருக்குமே.."

"எங்க இருக்கு? காட்டு..  நாளைக்கு யார் ரெஸிப்பி?"

JB சானல் னு நினைக்கறேன்.  பானு அக்கா ஏதோ அனுப்பி இருந்தாங்களோ.."

"என்னையே கேக்கறியா?"

"ஒரு நிமிஷம்.."   - சிஸ்டத்தைத் திறந்து ஆராய்ந்தேன்...  நான்காம் தேதி ஒன்றுமில்லாமல் இருந்தது...  'ஆ...   ஏதோ ஷெட்யூல் செய்தேன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேனே...'..  

"பாவெ கனடா போயிருக்காங்க..   அவங்க ஒண்ணும் அனுப்பி இருக்க வாய்ப்பில்லை..  வேறு யாரும் அனுப்பலைன்னா நிலைய வித்வான் நீ ஏதாவது போடவேண்டியதுதானே?  வழக்கம்தான் அது?  ஏதோ ரெடி பண்ணி இருப்பேன்னு பார்த்தா ஒண்ணையும் காணோம். காலைல கேள்வி மேல கேள்வி வந்தா யார் பதில் சொல்றது"

"சரி கேஜிஜி..  பார்க்கிறேன்..  நீங்க கிளம்புங்க..  நான் முடிச்சுட்டு கிளம்பறேன்"

"கையோட முடி..  சேர்ந்தே கிளம்புவோம்..  உன்னை டிராப் பண்ணிட்டு நான் வீட்டுக்கு போறேன்..  க்விக்.."

சிஸ்டத்தைத் திறந்து ஃபோல்டர் ஃபோல்டராக ஆராய்ந்தேன்.  கேஜிஜி ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு படிக்க ஆரம்பித்தார்.

கடந்தவாரம் செய்தது நினைவுக்கு வந்தது.

'பதினைந்து மூணி'ல் வந்திருந்த ஒரு கிலோவுக்கும் மேற்பட்ட கத்தரிக்காயை எடுத்து ஆராய்ந்து, ஓரளவுக்கு ஒரே அளவினதாய் சில கத்தரிக்காய்களை மட்டும் தனியே எடுத்து வைத்தேன்.  சாப்பிடுவது நான், இளையவன் மட்டும்தான்.  மருமகள் அன்று அலுவலகம் செல்லும் நாள்.  ஆபீஸ் கேன்டீனில் சாப்பிட்டு விடுவாள்.  எனவே குறைந்த அளவே எடுத்துக் கொண்டேன்.

காயை நன்றாக அலம்பி, தட்டில் அடுக்கி முதற்கண் ஒரு போட்டோ எடுத்துக் கொண்டேன்.  'அவசரத்துக்கு உதவும்'.  ஆனால் அந்த போட்டோ சரியாக விழவில்லை!

பின்னர் காம்பை நீக்கி விட்டு நீளவாட்டில் இரண்டு பக்கமும் நறுக்கி அடுக்கினேன்.  காம்பை நீக்கி இருக்க வேண்டாம் என்று பின்னர் தெரிந்தது. ரெடியானதும் லாலிபாப் போல காம்பைக் கையில் பிடித்துக் கொண்டு சுவைத்திருக்கலாம்.. 

ஏற்கனவே பொடி தயாராய் இருந்தது.  கொஞ்சம் பொட்டுக்கடலை, கொஞ்சம் நிலக்கடலை, நான்கைந்து வரமிளகாய், கொஞ்சம் சீரகம், கொஞ்சம் மிளகு, கொஞ்சம், அரிசி,  கொஞ்சம் தனியா, உப்பு போட்டு கரகரவென அரைத்து, இஞ்சிபூண்டு பேஸ்ட் இல்லாததால்  நாலு பல் பூண்டு, கொஞ்சம் இஞ்சி போட்டு மறுபடியும் ஒரு சுற்று சுற்றி எடுத்து வைத்திருந்தேன்.

கத்தரிக்காயில் உள்பக்கமாக லேசாக நல்லெண்ணெய் தடவி அதில் இந்தப்பொடியை அடைத்து அமுக்கி வைத்திருந்தேன்.

அப்படியே ஓரமாக வைத்தாயிற்று.  வேறு வேலை காரணமாக ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அபப்டியே இருந்ததை அப்புறம் எடுத்து நான்ஸ்டிக் தவாவில் இட்டு மெல்ல புரட்டி,  இறக்கி வைக்கும் நேரத்துக்கு முன் பாக்கி இருந்த பொடியையும் மேலாகத் தூவி இறக்கி வைத்தாயிற்று.  நன்றாக இருந்ததது என்று சொல்லவும் வேண்டுமோ?  பார்த்தாலே தெரியும்.

படங்களை இணைத்து விட்டு கேஜிஜியிடம் காட்டினேன்.  படித்தவர் அப்படியே கொஞ்ச நேரம் பதிவையே பார்த்துக் கொண்டு யோசித்தார். அவர் நினைவு எங்கோ இருக்கிறது என்று தெரிந்தது.

"என்ன கேஜிஜி..   சரியில்லையா?"

"இல்லை..  ஓகேதான்..   உனக்கு ஒண்ணு சொல்றேன்..   இதைப் படித்ததும்  எனக்கு ஒரு பழைய விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது.."

"சொல்லுங்க.."

"என்னுடைய ஆரம்பப் பள்ளி நாட்களில் நாகையில் காய்கறிக் கூடைக்காரி கொண்டு வந்து விற்கின்ற சிறு சிறு கத்தரிக்காய் வீசை கணக்கில் வாங்குவோம். 

கே ஜி (அவர் கே ஜி என்று சொல்வது கே ஜி எஸ்ஸை) உடனே ஒரு சிறு கத்தரிக்காய் எடுத்து, அதை இன்றைய நறுக்ஸ் போல 8 வெட்டு வெட்டி உள்ளே (இட்லி) மிளகாய்ப்பொடி தடவி, கத்தரிக்காய் காம்பில் நூல் கட்டி தொங்கவிட்டு விடுவார்.
 
விசுவுக்கு ஒன்று, எனக்கு ஒன்று என்றும் தயார் செய்து கொடுத்து விடுவார்.

நாங்களும் அதை நூலில் தொங்கவிடுவோம்.
 
கத்தரிக்காயில் இருந்து மூன்று சொட்டுகள் காரநீர் கீழே விழும் வரை காத்திருப்போம்.
 
அதன் பிறகு அந்தக் கத்தரிக்காயிலிருந்து ஒவ்வொரு சுளையாக பிய்த்து இரசித்து சாப்பிடுவோம். இப்போதும் பள பள என்று இருக்கும் குட்டிக் கத்தரிக்காய்களைப் பார்க்கும் போது கே ஜி எஸ் ஞாபகம் வராமல் போகாது."

இந்த ஆகஸ்ட்டோடு ஒரு வருடம் ஆகிறது அவர் மறைந்து..  

40 கருத்துகள்:

  1. சுவையான பதிவு; சுவையான நினைவுகள்!! ஆம், நேற்று கேஜீயின்
    வருஷாப்திகம்.

    பதிலளிநீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா... வணக்கம், பிரார்த்தனைகள்.

      உங்கள் பேத்தி கை விரைவில் இயல்பு நிலை அடைய பிரார்த்திக்கிறேன்.

      நீக்கு
    2. தங்கள் பிரார்த்தனைக்கு நன்றி. நானும் பிரார்த்தனை செய்தபடிதான் உள்ளேன். குழந்தை கையில் பாரமான கட்டுடன் எப்போதும் போல் இயல்பாக இருக்க முடியாது சிரமபடுகிறாள். இன்னமும் இரு வாரங்கள் கழித்து மருத்துவரிடம் செல்ல வேண்டும். தங்களின் ஆறுதல்கள் மனதுக்கு இதமாக உள்ளன. நன்றி.

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    இன்றைய திங்கள் பதிவு அருமை. பொடி அடைத்த எண்ணெய் கார கத்திரிக்காயின் சுவை நீங்கள் தந்த பதிவின் வாயிலாகவே நாவில் உணர்கிறேன். படங்கள் செய்முறை அனைத்தும் அழகாக உள்ளது.

    இந்த மாதிரி மாநிலத்திற்கு மாநிலம் ஒரு தள்ளு கதவை திறந்து கொண்டு சென்று நம் உறவுகளை சந்திக்கும் காலம் வந்தால் நன்றாக இருக்கும். கற்பனையையும் உரையாடல்களையும் ரசித்தேன்.

    இறுதியில் மறைந்த அண்ணனின் நினைவுகளோடு பயணிக்கும் பதிவை படிக்கையில் மனதை வருத்தியது. காலம் பல சுவைகளோடு அது பாட்டுக்கு ஓடும் போது நினைவுகளின் சுமை மட்டுமே என்றும் தங்கியிருந்து நம்மை வருத்துவது இயல்புதானே.! பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா அக்கா.

      ​// இந்த மாதிரி மாநிலத்திற்கு மாநிலம் ஒரு தள்ளு கதவை திறந்து கொண்டு சென்று நம் உறவுகளை சந்திக்கும் காலம் வந்தால் நன்றாக இருக்கும் //

      பிளாக் ஹோல் தியரி நிஜமாவது போல இருக்கும். நிகழ்காலம், எதிர்காலம் என்றில்லை. எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.

      நீக்கு
    2. ஆம். பின்னோக்கி செல்ல முடிந்தால், நம் பெற்றோர்களோடு இருந்த அந்த ஆனந்தமயமான இளமை பருவங்களையும், அப்போது அவர்களுக்கு செய்ய முடியாத (அதை நினைத்து இப்போது வருத்தப்படும் பல பாசம் சேர்ந்த கடமைகளையும்) பல நல்ல செயல்களையும் சரி செய்து கொள்ளலாம். நம் உடல், மன போராட்டங்களையும் களைந்து விடலாம். இப்போது நினைக்கும் எல்லாமே கற்பனையில் அந்த நொடிப் பொழுதில் நன்றாகத்தான் உள்ளது. ஆனால், சாத்தியமில்லையே ..!

      நீக்கு
    3. நிச்சயமாக சரி செய்து கொள்ளலாம் என்று நம்புகிறீர்களா கமலா அக்கா...  நம் விதிப்படி மறுபடியும் அதையேதானே செய்வோம்...  அல்லது விதியை மாற்றினால் வேறு கடும் பின்விளைவுகள் ஏற்பட்டால்...?

      ஹிஹிஹி..  பயமுறுத்துவது என் உப தொழில்!

      நீக்கு
    4. கஹ மேடம்.. நானும் பசங்கள்ட டைம் மெஷின்ல போகமுடிஞ்சால் நிறைய தவறுகளைச் சரி செய்வேன் என்பேன். அதை ஒரு பதிவில் லிஸ்ட் போடறேன் என்ன என்ன தவறுகள்னு. ஆனால் பசங்க சொல்வாங்க.. அப்படிப் போயிட்டாலும் நீங்க அப்படித்தான் இருப்பீங்க என்பார்கள்

      நீக்கு
    5. /நம் விதிப்படி மறுபடியும் அதையேதானே செய்வோம்.../

      அட..! அப்போதும் அங்கு குறுக்கிடுவது விதிதானா!.? அது சரி..! நாம் பிறந்த துவக்கத்திலிருந்தே நாம் ஒவ்வொருவரும், சத்தியவான், சாவித்திரியாக இருக்க முடிந்ததில்லையே.! .

      /ஹிஹிஹி.. பயமுறுத்துவது என் உப தொழில்!/

      ஹா ஹா ஹா. ஆனால், பயப்படுவதே என் தொழில் அல்லவா..! :)))

      நீக்கு
    6. வணக்கம் நெல்லைத்தமிழர் சகோதரரே

      /ஆனால் பசங்க சொல்வாங்க.. அப்படிப் போயிட்டாலும் நீங்க அப்படித்தான் இருப்பீங்க என்பார்கள்/

      நானும் இப்படித்தான் விதியைப் பற்றி யோசிப்பேன். ஏனென்றால் விதியின் போக்கு என்றும் மாறாததல்லவா? ஆனால், ஒரு டைம் மெஷினில் புது முயற்சியாக நாம் பின்னோக்கி செல்ல முடிவதைக் கண்டு அந்த விதியே தன் இயல்பை மறந்து பிரமித்துப் போய் விட்டால்...! அந்த வினாடிகள் / நிமிடங்கள்/ நேரங்கள் நமக்கு சாதகமாகி விடாதா எனவும். யோசிப்பேன்.

      இவை எல்லாமே கற்பனைகள்தானே..! இப்படி கற்பனைகளும் சஞ்சரிப்பதைதான் நம் கனவுகளிலும், பல கதைகளிலும் காண்கிறோம்.

      நீக்கு
    7. இது சம்பந்தமாக நான் ஓரிரண்டு பதிவுகள் எழுதி இருந்தேன் முன்பு. நினைவிருக்கா?


      https://engalblog.blogspot.com/2015/06/blog-post_2.html

      நீக்கு
    8. இதையும் படிக்க சிபாரிசு செய்கிறேன்..

      https://engalblog.blogspot.com/2015/06/blog-post_3.html

      நீக்கு
    9. மனிதன் அதிகபட்சம் இதுவரை 40,000 கிலோமீட்டர் வேகத்தில்தான் விண்வெளிப்பயணம் செய்ய முடிந்திருக்கிறது! அதே சமயம் ஆளில்லாத விண்கலத்தை இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் கிலோமீட்டர் வேகத்தில் செலுத்த முடிந்திருக்கிறது! இதே போல வர்ம்ஹோல் என்ற ஒரு துளையின் மூலம் பெரும் சக்தியைவைத்துத் திறந்து, இறந்த காலத்துக்கும் பயணிக்கலாம். அப்படிப் பயணித்து, அங்கு நம் தாத்தாவை அவர் திருமண காலத்துக்குமுன் சந்தித்து, அவரை எதிர்பாராமல் கொன்று விட்டால் என்ன ஆகும்?


      அப்படி நடந்து விட்டால் பாரலல் யுனிவர்ஸில் (ஒவ்வொரு யுனிவர்சுக்கும் இணையான இன்னொரு யுனிவர்ஸ் இருக்கிறது. அங்கு(ம்) நம் எல்லோருக்கும் ஒரு இணையான ஸ்ரீராம், கௌதமன், எங்கள் ப்ளாக் என்று உண்டு!) இருக்கும் நாம் அங்கு நம் வாழ்க்கையை சாதாரணமாகத் தொடருவோமாம்!)

      நீக்கு
    10. தாத்தாவைக் கொன்றுவிட்டு... காலையில் என்ன விதமான கற்பனை... விதிப்படி அவர் சாகாமல் பிழைத்துக்கொள்வார். மனதில் அதை நிறுத்தி நம் பிள்ளையாகப் பிறந்து தொல்லை கொடுத்துப் பழி வாங்குவார் ஹாஹாஹா

      நீக்கு
  4. அருமையான ரெசிப்பி. செய்து பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகின்ற வகையில் வண்ண வண்ணப் படங்கள். சபாஷ்!
    45 வருடங்களுக்கு முன்னால் கல்லூரி விடுதியில் ஸ்டஃப்ட் கேப்ஸிகம் (குடமிளகாய்) சாப்பிட்ட ஞாபகம் வருகிறது. குடமிளகாய் தலையை வெட்டி உள்ளே உருளைக்கிழங்கு ஸ்டஃப்ஃபிங்க் வைத்து ரோஸ்ட் செய்திருந்தனர். அடுத்த திங்கள் பதிவுக்கு ஸ்ரீராம் சாருக்கு ஐடியா என்று வைத்துக்கொள்ளுங்களேன்😁

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சூர்யா..   நன்றி.

      ஸ்டஃப்டு குடைமிளகாய் ஏற்கனவே செய்து வெளியிட்டிருக்கிறேன்.   கொரானா காலம்னு நினைக்கிறேன்.  மறுபடி வேணும்னா போடலாம்!   

      அதுசரி, இவ்வளவு ஆர்வமான நீங்களும், நீங்கள் செய்தது எதையாவது படங்களுடன் அழகாக அனுப்பலாமே...  என் மெயில் ஐடி தெரியும்தானே?

      நீக்கு
  5. சுவையான பொடி மூடிய முழு கத்தரிக்காய் கறி சமையல் குறிப்பு அபாரம்!
    ஆடி 18 ஐ தாய்மாமன் தினமாக கொண்டாடினார்களாம். தெரிந்தோ தெரியாமலோ நீங்களும் மாமாவை நினைவு கூர்ந்து விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Grrrrrr... JB சேனல் பற்றி நீங்கள் ஒன்றும் சொல்லவில்லை!!!!

      ஆமாம் நானும் எங்கோ நேற்று தாய்மாமன் தினம் என்று பார்த்தேன்.. 

      என்னடா ப்ரெண்ட்ஷிப் தினம் என்று கொண்டாடிக் கொண்டிருக்கிறார்களே என்று நினைத்துக் கொண்டேன்.  இது ஒரு ஆச்சர்யம்தான். 

      இந்தப் பதிவே இந்நேரத்தில் அமைந்தததும் ஒரு ஆச்சர்யம்.  நீங்கள் யாராவது ஏதாவது அனுப்பி இருந்தால் நான் அதை வெளியிட்டிருப்பேன்!

      நீக்கு
  6. இந்த கத்தரி பொடியடைத்த கறி நான் அனுப்பி இங்கே வந்திருக்கிறது.

    படங்கள் அழகு பார்க்கவே சாப்பிடத் தூண்டுகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை.. 

      கோச்சுக்காதீங்க...   அது வேற கத்தரிக்காய்.  நான் அதை எடுக்கவில்லை.  இது இப்போ வாங்கிய புது கத்தரிக்காய்.  நீங்க அப்படி செஞ்சீங்க...  நான் இப்படி செஞ்சேன்...  ஹிஹிஹி... 

      நன்றி பாராட்டுக்கு.

      நீக்கு
  7. எழுதிய விதமும் அருமை

    கௌதமன் சாரைச் சந்தித்தபோதுதான் கேஜிஒய் மூத்தவரில்லை அவருக்கும் மூத்தவர் இருக்கிறார் எனத் தெரிந்துகொண்டேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். மூத்தவர் அவர். அவருக்கு அடுத்து என் அம்மா!

      நீக்கு
  8. மனைவிக்கு பொடிதூவிய கறி பண்ணத்தான் இஷ்டம். பொடி அடைப்பதில் கத்தரி உள்ள நல்லா இருக்கா என்று கண்டுபிடிக்கக் கஷ்டம் என்பாள்

    இது எதுக்குத் தொட்டுக்கப் பண்ணினீங்க? மோர்குழம்பு நல்ல காம்பினேஷன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /பொடி அடைப்பதில் கத்தரி உள்ள நல்லா இருக்கா என்று கண்டுபிடிக்கக் கஷ்டம் என்பாள்/

      அது என்னவோ தங்கள் மனைவி சொல்வது போல் கஷ்டந்தான். சமயத்தில் கத்திரிக்காயை எங்கு வெட்டினாலும், ஏதாவது ஒரு பாகத்தில் நாங்கள் இன்னமும் உயிரோடு இருக்கிறோம் என்று சொல்லும் விதமாய் புழுக்கள் நெளிந்து கொண்டே இருக்கும்.

      ஆகா.. இப்போது ஸ்ரீராம் சகோதரரை பயமுறுத்துவது என் தொழிலாக போய் விட்டதோ..? :)))

      நீக்கு
    2. ஒரு கஷ்டமும் இல்லை நெல்லை. 

      உண்மையில் இதைச் செய்யும்போது அதைப் பற்றி பதிவு போடுகையில் இதைச் சொல்ல வேண்டும் என்று நான் நினைத்துக் கொண்டேன்.  நீளவாக்கில் நறுக்கியவுடன் அந்தக் கத்தியாலேயே விலக்கி நன்றாக செக் செய்ய முடியும். 

      செய்தேன்.

      நீக்கு
    3. நான் இதில் எல்லாம் உஷார் கமலா அக்கா...  கத்தரிக்காய், வெண்டைக்காய், காலிப்ளவர் போன்றவற்றை நன்கு செக் செய்தே சமைப்பேன்.  

      மாம்பழத்தில் வண்டு இருக்கும் தெரியுமா?  முழு மாம்பழமாக அப்படியே சாப்பிடும் போது வரும் ஒருவித வாசனையிலேயே வண்டு இருக்கு என்பது தெரிந்து விடும்.  ஜாக்கிரதையாக சாப்பிடுவேன்.  எனக்கு மாம்பழத்தை நறுக்கி சாப்பிடுவதை விட முழுசாகக் கடித்து சாப்பிடுவதுதான் பிடிக்கும்.  அப்படி முழதாகச் சாப்பிட சிலவகை மாம்பழங்கள்தான் ஏற்றது.

      நீக்கு
  9. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  10. சமையல் குறிப்பை அழகாய் ஒரு கதை மாதிரி சொல்லி விட்டீர்கள்.

    கத்திரிக்காய் செய்முறை, படங்கள் எல்லாம் அருமை. உங்களின் பொறுமை வியக்க வைக்கிறது.

    மாமாவின் நினைவுகளை பகிர்ந்து கொண்டது அருமை.
    கெளதமன் சார் தன் அண்ணன் நினைவுகளை பகிர்ந்து கொண்டது நெகிழ்வு, கண்ணோரம் நீர் திரண்டு விட்டது.

    கே ஜி எஸ் அவர்களுக்கு வணக்கம்

    பதிலளிநீக்கு
  11. //வேறு யாரும் அனுப்பலைன்னா நிலைய வித்வான் நீ ஏதாவது போடவேண்டியதுதானே?//

    ரதித்தேன்.

    பதிலளிநீக்கு
  12. பொடி அடைத்த கத்தரிக்காய் எண்ணைப் பிரட்டல் நன்றாக உள்ளது.
    கே.ஜி.எஸ் இன் நினைவுகள் மனதைத் தொட்டது .

    பதிலளிநீக்கு
  13. நிலைய வித்வான் தன் பொறுப்பை நன்றாக செய்து இருக்கிறார்.

    //கேஜிஜி புன்னகைக்கவில்லை //

    கேஜிஜி அவர்கள் புன்னகை பூத்து பாராட்டி இருப்பார், பதிவு அவரின் மலரும் நினைவுகளை கொண்டு வந்து விட்டதே!


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரேடியோவில் அந்தக் காலத்தில் நிலைய வித்துவான் வாசிப்பார் என்று சொன்னாலே டொயிங் டொயிங் என்று அறுப்பார் என்று உடனே ரேடியோவை அணைத்து விடுவோம். ரொம்ப நாள் நிலையை வித்துவானே வாசித்தால் போர் அடிக்கும்!

      :))

      நன்றி கோமதி அக்கா..

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!