5.10.25

நாங்கள் தரிசனம் செய்த கோயில்கள் - 26 :: நெல்லைத்தமிழன்.

 

தஞ்சை பெருவுடையார் கோயில். 

இராஜராஜன் காலத்தில் சேரநாட்டை அரசாண்டவன் பாஸ்கர ரவிவர்மன் என்னும் அரசன் (கிபி 978-1036)  எதனால் தன் மூன்றாம் ஆண்டில் சேரமன்னன் மீது படையெடுத்தான் என்று கலிங்கத்துப்பரணி, இராஜராஜ சோழன் உலா, விக்கிரம சோழன் உலா போன்றவற்றைவைத்தும் ஒரு சில கல்வெட்டுகள் கொண்டும் கண்டுபிடித்திருக்கிறார்கள். 

அரசன் ராஜராஜன் அனுப்பிய தூதுவனை சேர அரசன் சிறையெடுத்து கன்யாகுமரி/நாகர்கோயில் பக்கம் கல்குளம் தாலுக்காவில் இருந்த உதகையில் அடைத்துவிடுகிறான் (இது ஒரு நகரம். அது மதில்கள் சூழ்ந்ததாகவும், தன்னுள்ளே மாட மாளிகைகள் கொண்டதான செழிப்பான நகரம், சேரர் ஆளுகையில் இருந்த பகுதி). தூதுவனைச் சிறையடைத்தது பெரும் குற்றம், தனக்கு விடப்பட்ட சவால் என்பதால் படையைத் திரட்டிக்கொண்டு சேர அரசு நோக்கிச் செல்கிறான். 

அப்போது பாண்டிய நாட்டை அரசாண்டுகொண்டிருந்த அமரபுயங்கன், சேர அரசனின் நெருக்கமான நண்பன். அதனால் இடைமறித்து சோழர் படையைத் தாக்குகிறான். அவனைப் புறமுதுகிட்டு ஓடவிட்டு, பிறகு கேரளா சென்று சேர அரசனை காந்தளூர்ச் சாலையில் தோற்கடிக்கிறான். பிறகு உதகை சென்று தூதுவனை சிறைவிடுக்கிறான். (அங்கும் போர் நடக்கிறது). பிறகு தென் கடற்கரையில் இருந்த விழிஞம் என்ற இடத்தில் நடந்த போரிலும் வெற்றிபெற்றுத் திரும்புகிறான்.  (இதற்கு இன்னும் நாவலாசிரியர்கள் தகுந்த நாவல் எழுதியிருக்கிறார்களா?  அண்ணன் ஆதித்த கரிகாலன் கொலையில் சேரர்கள் பங்கு ஏதேனும் உண்டா என்று விசாரிக்க-கண்டுபிடித்த நால்வரில் இருவர் சேரர் பின்புலம் கொண்டவர்கள், தூதுவனை சேரனுக்கு அனுப்ப, அவன், என்னிடமே விசாரணையா என்று கோபம் கொண்டு தூதுவனைச் சிறையெடுத்திருப்பான், காந்தளூர்ச்சாலையில்தான் போர்ப்பயிற்சிகள் நடந்துவந்தன, போர்வீர்களுக்கான பயிற்சியும் வழங்கப்பட்டதால், அதில் பயிற்சிபெற்றவன் ரவிதாசனாக இருந்திருப்பான், அதனால் தூதுவனைச் சிறையெடுத்த காரணத்தால் போர் நடத்தி வெற்றிபெற்றிருப்பான் ராஜராஜன் என்ற புனைவு சரியாக வருமா?)

ராஜராஜ சோழனின் குறிப்பிடத்தக்க செயல்கள் என்று பார்த்தால், சைவத் திருமுறைகளை ஒழுங்குபடுத்தியது. சிதம்பரத்தில் அழியக்கூடிய நிலையில் கிடந்த திருமுறைகளை, நம்பியாண்டார் நம்பி என்பவரைக் கொண்டு, முழுவதும் பாதுகாத்தான். திருமுறைகளை ஏடுபடுத்தினான். கோயில்களில் ஓதுவாரை அமர்த்தும் முறையை ஆரம்பித்தான்.. அதனால்  திருமுறை கண்ட சோழன் என்ற பெயர் பெற்றான்.

நாட்டில் விளைநிலங்கள் எல்லாவற்றையும் முறையாக அளந்தான். அதற்கேற்ப வரிவசூல் செய்தால். நிவந்தங்களாகக் கொடுக்கப்பட்ட நிலத்தின் வரி, எதற்கு நிவந்தக்களாகக் கொடுக்கப்பட்டதோ  அதற்குச் சென்றது. இறையிலி நிலம் என்பது வரி வழங்கத் தேவையில்லாத நிலமாகக் கொள்ளப்பட்டது. 

தஞ்சை பெரியகோயிலைப் பற்றிப் பேசும்போதும் படிக்கும்போதும், கருவூர்த்தேவர் பற்றி பிரஸ்தாபம் எழும். பலர், கருவூர்தேவர் இராஜராஜ சோழனின் குரு என்றெல்லாம் எழுதியிருக்கிறார்கள். வரலாறு என்ன சொல்கிறது?

திருவிசைப்பா என்பது ஒன்பதாவது திருமுறை. இதில் ஒன்பது அடியார்கள் பதிகங்கள் பாடியுள்ளனர். அவர்களுள் கருவூர்த்தேவரும் ஒருவர்.  இவர் 10-11ம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்கவேண்டும். இராஜராஜ சோழன் மற்றும் இராஜேந்திர சோழனின் சமகாலத்தவர். சிவபெருமான் பக்தர். சிவயோகத்தான் அற்புத சக்திகள் அடைந்தவர்.  பித்தர் போல நாடெங்கும் திரிந்து, தென்பாண்டி நாட்டை அடைந்து, அம்பாசமுத்திரத்தின் அருகில் உள்ள திருப்புடைமருதூர் என்ற தலத்தை அடைந்தார். கோயிலை அடையமுடியாமல் தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு. மறுகரையில் இருந்த கருவூர்த்தேவர் ‘நாறும்பூ நாத’னை மனதால் நினைக்கவும் வெள்ளம் வடிந்த தாம்.  தஞ்சை பெரியகோயிலைக் கட்டிக்கொண்டிருந்தபோது சிவலிங்கத்தை நிலைநிறுத்த அஷ்டபந்தன மருந்து சரியாக வேலை செய்யவில்லை. அவருடைய ஆசான் போகர் சித்தரின் அழைப்பின்பேரில் தஞ்சை வந்து அஷ்டபந்தன மருந்துப் பொருளைக் கடினப்படுத்தி சிவலிங்கத் திருமேனியின் பிரதிஷ்டை செய்தாராம். திருவிசைப்பாவைப் பாடிய ஒன்பதில் இவர்தான் மிக அதிகமான (103 என்று நினைவு) பாசுரங்கள் பாடியவர்.  தில்லை, தஞ்சை இராஜராஜேச்சரம், திருவிடை மருதூர், கங்கைகொண்ட சோழேச்வரம் போன்ற பத்து தலங்களுக்கு திருவிசைப்பா பாடியுள்ளார்.

அன்னமாய் விசும்பு பறந்து அயன் தேட

    அங்ஙனே பெரியநீ சிறிய

என்னை ஆள் விரும்பி என்மனம் புகுந்த

    எளிமையை என்றும் நான் மறக்கேன்

முன்னம் மால் அறியா ஒருவனாம் இருவா

    முக்கணா நாற்பெருந் தடந்தோள்

கன்னலே தேனே அமுதமே கங்கை

    கொண்டசோ ளேச்சரத் தானே.

முன்பு பிரமனும் திருமாலும் பறந்து தேடியும் அவர்கள் உன்னை அறியமுடியவில்லை. அவ்வளவு பெரியவனான நீ, இந்தச் சிறியேனை விரும்பி என் மனத்தில் புகுந்துகொண்ட எளிமையை நான் எப்போதும் மறக்கமாட்டேன். மூன்று கண்கள், நான்கு பெரிய தடந்தோளினை உடைய கரும்பே, தேனே, அமுதமே, கங்கைகொண்ட சோழீச்வரத்தில் உள்ளவனே என்று உருகிப் பாடுகிறார். 

உலகெலாம் தொழவந்து எழுகதிர்ப் பருதி

   ஒன்றுநூ றாயிர கோடி

அலகெலாம் பொதிந்த திருவுடம்பு அச்சோ !

   அங்ஙனே அழகிதோ, அரணம்

பலகுலாம் படைசெய் நெடுநிலை மாடம்

   பருவரை ஞாங்கர்வெண் திங்கள்

இலைகுலாம் பதணத்து  இஞ்சிசூழ் தஞ்சை

   இராசரா சேச்சரத்(து) இவர்க்கே.

இதில் மதிள் சூழ்ந்த தஞ்சையில் இருக்கும் இராஜராஜேச்வரத்து சிவபெருமானைப் பற்றிப் பாடுகிறார். (இது போலப் பத்துப் பாசுரங்கள்). ஞாங்கர்வெண் திங்கள் (பெரிய மலையிடத்து சந்திரன் தவழ்வதுபோல), கோடி சூரியர்கள் பொதிந்ததுபோன்ற  திருவுடம்பு உன்னுடையது.

எத்ற்காக நான் இந்த இரண்டு திருவிசைப்பாக்களை எடுத்துக்கொண்டு, அதில் ஒவ்வொரு பாசுரங்களைக் கொடுத்துள்ளேன்?  நமக்கு பொதுவாகத் தெரிவது, கருவூர்த்தேவர் இராஜராஜனின் குரு, அவர் தஞ்சைப் பெரிய கோயிலில் சிவலிங்கம் வைக்க உதவினார் என்பது மாத்திரம்தான். கங்கைகொண்ட சோழீச்வரம் கட்டி முடிக்கும்போது இராஜராஜ சோழன் உயிருடன் இல்லை. அந்தக் கோயிலே 1035ல்தான் (சுமாரா) கட்டிமுடிக்கப்பட்டது. இராஜேந்திர சோழனே 1044 வரைதான் ஆட்சி புரிந்திருக்கிறான். கங்கை வரை அவனது படைத்தளபதியை அனுப்பி, வெற்றிபெற்று, பிறகு கங்கை நீரை வைத்து அந்த இடத்தைச் சுத்தப்படுத்தி, காடுகளை வெட்டி, நகரமாக்கி, நகரின் நடுவே கங்கைகொண்ட சோழீச்வரத்தைக் கட்டி, அங்கு ஒரு குளம்/கிணறு வெட்டி, அதில் மிகுதி இருந்த கங்கைநீரை நிரப்பி…..  பிறகு ஒரு சமயம் கருவூரார் வந்து பார்த்துவிட்டு, அதற்கும் பாசுரங்கள் இயற்றியிருக்கவேண்டும். பலவற்றையும் படிக்கும்போது நாம் ஒரு சில கட்டங்களை மாத்திரம் தெரிந்துகொண்டு வரலாற்றைச் சமைக்கிறோமோ என்று தோன்றுகிறது. 

நான் ஒரு பகுதியில் வால்மீகியார் பற்றியும், அவர் புறநானூற்றுச் செய்யுள் ஒன்றையும் எழுதியிருக்கிறார் என எழுதியிருந்தேன். நம் ஜீவி சார் அதற்கு, அந்தச் செய்யுள் புறநானூற்றின் 358வது பாடல் எனவும், அது துறவறத்தின் மகிமையைச் சொல்கிறது எனவும், தேடலில் ஆர்வம் உடையவர்கள் பார்க்கவும் என்று எழுதியிருந்தார். (இது ஒரு அருமையான உத்தி. ஆசை உடையவர்களுக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கும் அவரவர் தேடலே அவர்கள் விரும்பிய திசை நோக்கிச் செல்லவைக்கும்).  நான், ஒரு பதிவில் இதைப்பற்றி எழுதுகிறேன் என்று சொல்லியிருந்தேன். அதனை கருவூர்த்தேவர் பற்றி எழுதும் பதிவில் எழுதுவது பொருத்தம் என்று நினைக்கிறேன். இந்தப் பாடலை வான்மீகியார், துறவறம் என்ற துறையில் எழுதியிருக்கிறார்.

பருதி சூழ்ந்தஇப் பயங்கெழு மாநிலம்

ஒருபகல் எழுவர் எய்தி யற்றே;

வையமும் தவமும் தூக்கின், தவத்துக்கு

ஐயவி யனைத்தும் ஆற்றாது ஆகலின்,

கைவிட் டனரே காதலர்; அதனால்  

விட்டோரை விடாஅள், திருவே;

விடாஅ தோர்இவள் விடப்பட் டோரே.

இதன் சுருக்கமான பொருள்.. தவத்தையும் உலகத்தை ஆளுவதையும் ஒப்பிட்டால், தவத்தின் கடுகளவுக்குக்கூட `உலகம்` ஒப்புமையாகாது. இந்த உலகமானது, ஒரு பகலில் ஏழு அரசர்கள் என்று வேகமாக நிலைமை மாறக்கூடியது. அதனால் நாம் புரிந்துகொள்ளவேண்டியது, உலகத்தின் மீது ஆசை வைப்போரை திருமகள் கைவிட்டுவிடுவாள். ஆனால் தவத்தின்பால் (அதாவது உலகத்தில் பற்றற்று இருப்பவரை) ஆசை உள்ளோரை திருமகள் எப்போதும் கைவிடாள்.

இதனைப் படித்தபோது எனக்கு குலசேகர ஆழ்வார் பெருமாள் திருமொழியில் (திவ்யப்பிரபந்தம் முதலாயிரம்) எழுதியிருக்கும் ஒரு பாசுரம் நினைவுக்கு வந்தது. 

நின்னையே தான்வேண்டி* நீள்செல்வம் வேண்டாதான்*

தன்னையே தான்வேண்டும்* செல்வம்போல் மாயத்தால்*

மின்னையே சேர் திகிரி* வித்துவக்கோட்டு அம்மா!*

நின்னையே தான்வேண்டி* நிற்பன் அடியேனே             

ஐச்வர்யத்தில் ஆசைப்பட்டு அதனை அடைய, விடாது முயற்சிப்பவனிடம் அந்த ஐச்வர்யம் சேர்வதில்லை, தன் மீது ஆசைப்படாதவனிடம் சேர்கிறது. அதுபோல, உன் மீது நான் அதீதமான ஆசை வைத்திருக்கிறேன், ஆனால் நீ என்னைப் புறக்கணித்தாலும், அதனைக் கவனியாது உன்மீதே ஆசை வைப்பேன் என்பது கருத்து.

இதை எழுதும்போது,  ஒரு யோகி தன் அனுபவங்களைப் பற்றி எழுதியதைப் படித்தது நினைவுக்கு வருகிறது.  சுவாமி இராமா என்று நினைவு. அவரது குரு ஒரு நாள் அவருக்கு (இமயமலை) கண்ணை மூடிக்கொள்ளச் சொல்லி, பிறகு திறந்துபார்க்கச் சொல்கிறார். அவர் எதிரே வைர வைடூரியங்கள், தங்க நகைகள் என்று பெரிய குவியலே இருக்கிறது. உனக்கு பணம் வேண்டும் என்றால் இதனை எடுத்துக்கொள். பணத்தின் மீது ஆசையில்லை, யோகத்தின், தியானத்தின் மீதுதான் ஆசை என்றால் என்னைப் பின் தொடர். இவை ஏதோ மாயம் என்று நினைக்காதே. அத்தனையும் உண்மையான செல்வம். தொட்டுப் பார்த்துக்கொள் என்றாராம். இவர், தனக்கு செல்வம் தேவையில்லை, குருவின் பாதையிலேயே நடக்கத்தான் ஆசை என்று உறுதியாகச் சொல்லவும் தன்னுடன் அவரைச் சேர்த்துக்கொண்டார் என்று எழுதியிருந்தார். செல்வம் என்பதற்கு அர்த்தம், எப்போதுவேண்டுமானாலும் செல்வோம் என்பதுதானே


 

அறுமுகன் கோயிலுக்குச் செல்லும் வழியில், பிரகதீச்வரர் விமானத்தின் பின்புறம் கருவூர் சித்தருக்கு சிறிய கோயில் அமைத்திருக்கின்றனர். இவை மிகவும் பிற்காலச் சேர்க்கை என்று சொல்லவேண்டியதில்லை. 



கருவூர்ச்சித்தர். 





மராத்தா வாயிலுக்குப் பின்புறம் ஒரு கோபுரம் தெரிகிறது அல்லவா? அதுதான் கேரளாந்தகன் வாயில்

கேரளாந்தகன் வாயில். இங்கு துவாரபாலகர்கள் இல்லை என்பதைப் பாருங்கள்.

கேரளாந்தகன் வாயில். அதனை அடுத்து இராஜராஜன் நுழைவாயில்

கற்களை ஒன்றின்மேல் ஒன்றை அடுக்கியிருக்கிறார்கள். நாம் பொதுவாகச் செய்வது போன்று செவ்வகமாக இல்லாமல், ஒரு கல் அதன் கீழுள்ள கல்லுடன் பொருந்தும்படி வெட்டியிருக்கிறார்கள். இதற்கு இடையில் சுண்ணாம்பு மற்றும் சாந்துகள் பூசவில்லை என்பதையும் பாருங்கள். கற்களில் சிறிது மேலெழும்பி இருக்கும்படியான குமிழ்களையும் பாருங்கள். கற்களைத் தூக்குவதற்காக அவை அமைக்கப்பட்டிருக்குமோ?

இராஜராஜன் நுழைவாயில் துவாரபாலகர்கள்

இராஜராஜன் நுழைவாயிலின் பக்கச் சுவர்களில் செதுக்கப்பட்டிருக்கும் அழகிய சிற்பங்கள். ஒவ்வொன்றும் ஒரு வரலாறை நமக்குத் தெரிவிப்பவை.

இந்தச் சிற்பங்களையெல்லாம் கூர்ந்து கவனித்து பொருத்தமான புராணச் செய்திகளைச் சொல்லும் திறமை கீதா சாம்பசிவம் மேடம், கோமதி அரசு மேடம் போன்றவர்களுக்கு உண்டு.

நுழைவாயிலின் பகுதியைத் தாண்டியுள்ள மதிள் சுவரில் கல்வெட்டுகள் இருக்கின்றன. இங்கு சிற்பங்கள் இல்லை (காரணம் அது கோயிலுக்கான பாதுகாப்புச் சுவர் என்பதால்)

நுழைவாயிலில் சிற்பங்கள். அதன் பின்பகுதி மதிளில் கல்வெட்டுகள் இந்தப் படத்தில் தெளிவாகத் தெரியும்.


நுழைவாயிலின் பக்கவாட்டு நெடுஞ்சுவற்றிலும் மற்றுமுள்ள சுவர்களிலும் கல்வெட்டுகள்தாம்.

கல்வெட்டின் முதல் வார்த்தை 'வாழைப்பழம்' என்று கண்டுபிடித்து-விட்டீர்களானால் கௌதமன் சாருக்கு எழுதி உங்களுக்குரிய பரிசை வாங்கிக்கொள்ளுங்கள்.

(வெளியிடும் முன்பு, நானே வாழைப்பழத்தைக் கண்டுபிடித்துவிட்டேன். அதனால் இந்தக் கல்வெட்டில் உள்ள முழுச் செய்தியையும் சரியாக எழுதுவோருக்கு நெல்லைத்தமிழன் பரிசு அளிப்பார்!)😀

 

இன்றைய பகுதி ரொம்பவே நீளமாகிவிட்டதோ..  அடுத்த வாரம் சந்திப்போம்.

(தொடரும்) 
= = = = = = = = = =

67 கருத்துகள்:

  1. சேர மன்னனுக்கு தூது, தூதன் சிறை எடுப்பு, ரவிதாசன், ஆதித்த கரிகாலன் கொலை என்று உங்களுக்கு ஒன்றோடு ஒன்று சம்பந்தப்படுத்தி நன்றாக கற்பனை ஓடுகிறது. நீங்கள் சொன்னது போல் இதுவரை யாரும் இது பற்றி எழுதியதாக தெரியவில்லை. நீங்களே ஏன் ஒன்றும் முயற்சிக்கக் கூடாது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஶ்ரீராம். நான் இந்தப் பகுதிகளை பல மாதங்களுக்கு முன்பே எழுதிவிட்டதால் அன்றைய ஞாயிறு பகுதியை முதலில் படித்துவிடுவேன். அப்படி ஆரம்பிக்கும்போது கருத்து ஒன்று என்பதையும் ஓரக் கண்ணால் பார்த்திருந்து யாராயிருக்கும் என்ற எண்ணமும் மனதில் ஓடியது.

      எனக்கு, முன்பு, ஏன் குந்தவை புத்த மத்த்தைத் தழுவினாள் (அனேகமாக), ஏன் அதிக அளவு நிவந்தங்களை அந்தச் சமயத்துக்குக் கொடுத்தாள் என்பது பற்றி எழுத ஆரம்பித்துவிட்டு, பிறகு கதை வரலாற்றுத் தவறுகளுடன் அபத்தமாகிவிடக் கூடாது எனத் தோன்றியது. அருமையாக நாவல் எழுதும் (எழுதிய) காலச்சக்கரம் நரசிம்மா, பொன்னியின் செல்வன், குந்தவையின் மகன் என எழுதியதைக் கொஞ்சம்கூட நம்மால் சீரணிக்க முடியவில்லை அல்லவா?

      நீக்கு
  2. பதிகங்களும் பாசுரங்களும் வரலாற்றுச் செய்திகளுமாக பதிவு..

    சிறப்பு.. மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துரை செல்வராஜு சார். இன்றைய பதிவு உங்களுக்குப் பிடித்தது மகிழ்ச்சி

      நீக்கு
  3. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  4. ராஜராஜன் திருவாயில் சிற்பத் தொகுப்புகளில் கண்ணப்பர் வரலாறும் ஒன்று.. கையில் உடும்புடன் திண்ணப்பர் நிற்கின்ற படிமமும் அங்குள்ளது..

    நாளாறில் கண்ணை இடந்து அப்பியதாக பட்டினத்தடிகள் பாடுவார்..

    திண்ணப்பர் எந்த நாளில் ஈசனுக்கு உடும்புக் கறி சமர்ப்பித்தாரோ!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறைய சிற்பத் தொகுதிகள் இருக்கின்றன. கண்ணப்பர் வரலாறு, இறைவனின் அருளையும் கருணையையும் பெற, உள்ள பூர்வமான பக்தி மாத்திரமே போதும், வேறு எதுவும் தேவையில்லை என மெய்ப்பிப்பது. குடிப்பெருமை, குலப்பெருமை, ஐஸ்வர்யப் பெருமை, கல்விப் பெருமை அவனிடம் செல்லாது.

      நீக்கு
  5. பாசுபதத்தைக் கொடுப்பதற்கு முன்பாக பார்த்தனுடன் ரகளை.. கைகலப்பு.. அடிதடி..

    இந்தக் கூத்தைக் காண்பதற்கு பார்வதி இடுப்பில் குழந்தையுடன் வந்து விட்டாள்...

    அந்தப் பக்கமாக பெண்ணொருத்தியின் முன்பாக யானை பெருஞ்சத்தமிடுகின்றது..

    வள்ளிக்கான நாடகம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் இறைவனின் திருவிளையாடல், நமக்கான படிப்பினையைச் சொல்லியபடி

      நீக்கு
  6. வரலாற்று செய்திகளும், படங்களும் அருமை.

    ராஜராஜ சோழனின் குறிப்பிடத்தக்க செயல்கள் என்று பார்த்தால், சைவத் திருமுறைகளை ஒழுங்குபடுத்தியது. என்று வரிசைப்படுத்தி எழுதியது

    சோழர் காலம் பற்றி பள்ளி பாடத்தில் படித்தது போல இருக்கிறது, நன்றாக இருக்கிறது.

    திருப்புடைமருதூர் இறைவனின் பெயர் நாறும்பூ நாதன் என் மாமியாரின் அப்பாவுக்கு அவர் பெயர் தான். எங்கள் குடும்பத்தில் தாத்தாவின் பேர் என் கணவரின் அண்ணனுக்கு வைத்து இருக்கிறார்கள்.
    இந்த கோயில் தலவரலாற்றில் கருவூர் சித்தர் தான் இந்த பேரை சொல்லி வணங்கி பாடியதாக சொல்கிறது.

    //மன்னர் ஒருவருக்கு சிவன் மான் வடிவில் தோன்றி அருள்புரிந்தார். அப்போது ஏற்பட்ட காயத்தின் தடம் இன்றும் சிவனது திருமேனியில் உள்ளது.
    சந்தனாதி தைலம்: இறைவனின் திருமேனியில் உள்ள காயத்தை ஆற்றுவதற்காக சந்தனாதி தைலம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

    இறைவனின் காயங்களை ஆற்றியதால் கருவூர் சித்தர் அவரை "நாறும் பூவின் நடுவில் நிற்பவனே" என்று பாடியதாகக் கூறப்படுகிறது.//


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாறும்பூ நாதன்... என்ன அருமையான தமிழ் பெயர். இறைவியின் திருநாம்ம் நினைவில் இருக்கிறதா கோமதி அரசு மேடம்?

      உங்கள் குலம் சைவத் திருமுறைகளால் செழிப்புற்றது.

      நீக்கு
    2. இறைவியின் பெயர் :-
      ருத்ராட்ச மேனியைக் கொண்ட அபூர்வ அம்மன் கோமதி அம்பாள்

      நீக்கு
    3. ஆஹா... அவர்களுடைய பெயர்தான் உங்களுக்கா அல்லது சங்கரன்கோயில் அம்பாள் பெயரா?

      நீக்கு
    4. எனக்கு என் பாட்டியின் பேர், என் அம்மாவின் அம்மா பேர்

      நீக்கு
  7. வான்மீகியார் துறவற பாடலும் , விளக்க்மும் அருமை.
    பாசுரம் பகிர்வும் அதன் விளக்கமும் அருமை.
    கருவூரார் பற்றி நிறைய பகிர்ந்து இருக்கிறீர்கள் . அவரைப்பற்றிய கதைகள் நிறைய இருக்கிறது.

    //இராஜராஜன் நுழைவாயிலின் பக்கச் சுவர்களில் செதுக்கப்பட்டிருக்கும் அழகிய சிற்பங்கள். ஒவ்வொன்றும் ஒரு வரலாறை நமக்குத் தெரிவிப்பவை.//

    ஒவ்வொன்றையும் நின்று நிதனாமாக பார்த்தால் கதைகள் பல தெரியும். படங்களை அருமையாக எடுத்து இருக்கிறீர்கள்.

    சகோ துரைசெல்வராஜூ அவர்கள் கதைகள் சொல்லி விட்டார்கள் .

    வாழைப்பழம் படிக்கமுடிகிறது.

    இன்றைய பதிவு அருமை.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோமதி அரசு மேடம். சைவத் திருமுறைகள் பரிச்சையம், சிவன் கோயில்கள் தரிசனம் உங்களையும் துரை செல்வராஜு சாரையும் போல எனக்கு இன்னமும் அமையவில்லை.

      நீக்கு
    2. ///துரை செல்வராஜு சாரையும் போல..///

      அந்த அளவுக்குத் தகுதி இல்லாதவன்..
      இன்னமும் பயில வேண்டும்

      நீக்கு
  8. ராஜராஜன் திருவாயில் சிற்பத் தொகுப்புகளை நெருங்கி நின்று பார்க்க இயலாதபடி அங்கு சில பிரச்னைகள்..

    வசதி செய்து கொடுத்தால் தேர்வு எண்களுடன் பற்பல விஷயங்களைத் தந்து பாழ்படுத்திவிடுவார்கள் கிறுக்கர்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை. கொஞ்சம் வாய்ப்பிருந்தால் மூலவர் மேலேயே எழுதிவிடுவார்கள். கிராஃபிட்டி எனப்படும் இத்தகைய கிறுக்கல்களைச் செய்பவர்கள் தண்டிக்கப்படவேண்டியவர்கள்.

      நீக்கு
  9. தொல்லியல் துறையினர்க்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  10. கோயிலின் நிருதி மூலையில் கூடாரத்தின் கீழ் வைக்கப்பட்டிருந்த கோரதங்கள் என்னவாயின என்று தெரியவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் அவற்றைக் கூர்ந்து கவனித்த நினைவு இல்லை. அடுத்தபுறை செல்வோம்.

      நீக்கு
  11. மரியாதைக்குரிய கோமதி அரசு அவர்கள் தமது கருத்துரையில் என்னையும் குறித்ததற்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  12. வாழைப்பழம் -நெஞ்சம் நெகிழ்கின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கல்வெட்டின் வார்த்தைகளைப் படிக்க முடியும்போது நமக்கே பெருமிதமாக இருக்கும். கேஜிஜி சார் போட்டிகள் திரும்பவும் எபியில் வரும் என்றார். சொல்லி மாதங்களாகவிட்டதே

      நீக்கு
  13. தமிழ் எழுத்துரு வடிவங்கள் யாரோ ஒரு வெள்ளை மிசுநரியால் செய்யப்பட்டதென்று இங்கே புரளி
    ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருவள்ளுவரே கிறித்துவ மத்த்தைச் சார்ந்தவர் என நிறுவ்வும் அவர்கள் பாடுபட்டனர். யாராக இருந்தால் என்ன, சொல்லப்பட்ட நெறிப்படி நம் வாழ்வை, ஊன் உண்ணாது, பிறன் மனை நோக்காமல், பொய் களவு இல்லாமல்.... இன்னும் பலதும் இல்லாமல் வாழ்வோம் என்று நினைப்பவர்களைக் காண்பதரிது.

      நீக்கு
  14. கல்வெட்டில் வாழைப்பழம் என்றிருக்க
    இன்றைக்கு - வாழை பழம் என்று தட்டச்சு செய்கின்றனர்..

    ஒழுங்காக உச்சரிக்கவும் தெரியவில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாளப்பயம் வாளப்பளம் வாயப்பயம் லாம் துரை செல்வராஜு சார் கேட்டதில்லையா?

      நீக்கு
    2. அந்தக் கொடுமைகளைச் சொல்லவும் வேண்டுமா?..

      நீக்கு
  15. எழுப்பப்பட்ட கற்சுவரை எழுத்துப் பிழையின்றி கல்வெட்டுச் சுவராக மாற்றியிருக்கின்றனர்..

    என்னே வல்லமை!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதற்கு எத்தனைபேரின் உழைப்பு இருக்கவேண்டும்? என்ன செதுக்கவேண்டும், அதனை எழுதிக்கொள்ள ஒருவர், சரிபார்த்து ஒப்புதல் கொடுக்க ஒருவர், பிறகு செதுக்குவது, அதைச் சரிபார்ப்பது, என்ன முடித்துள்ளது என்று எழுதிக்கொள்வது என்று பலருடைய உழைப்பால் உருவானவை அவை. அந்தக் கற்களைத் தொட்டாலே நம் முன்னோர்களின் படைப்பைத் தொட்டு அவர்களுக்கு நன்றி பாராட்டுவதற்குச் சமம்.

      நீக்கு
  16. ராஜராஜன் திருவாயிலின் த்வாரபாலகர் காட்டும் தத்துவம் வேறொரு பதிவில!?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது விளக்கமாக வரவேண்டிய விஷய்ம் துரை செல்வராஜு சார்.பின்பொரு பதிவில் வரும்.

      நீக்கு
  17. இன்றைய பகிர்வில் பலவற்றையும் கண்டுகொண்டோம்.
    ராஜராஜன் சேர அரசன் மீது படை எடுத்ததற்கான காரணம் அறிந்துகொண்டோம்.

    கருவூர் தேவரின் நாம் அறிந்ததை விட வேறு தகவல்களும் தந்துள்ளீர்கள் கண்டோம். நன்றி.

    '"நுழைவாயிலின் பக்கச் சுவர்களில் செதுக்கப்பட்டிருக்கும் அழகிய சிற்பங்கள். ஒவ்வொன்றும் ஒரு வரலாறை நமக்குத் தெரிவிப்பவை. " ஆமாம் ஆற அமர பார்த்து ரசித்து அறிய வேண்டிய விடயங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மாதேவி அவர்கள். பதிவை ரசித்தமைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  18. ​//தூதுவனைச் சிறையெடுத்த காரணத்தால் போர் நடத்தி வெற்றிபெற்றிருப்பான் ராஜராஜன் என்ற புனைவு சரியாக வருமா?//
    தூதுவன் வந்தியத்தேவன் ஆக இருந்தால்?
    வரலாற்றின் நிகழ்வுகளை இலக்கியம் மூலமாகவே ஊகிக்க வேண்டியுள்ளது. கட்டுரையில் வேண்டிய இடங்களில் இலக்கியத்தையும் மேற்கோளிட்டு கூடுதல் சிறப்பாக படங்களையும் இணைத்து கட்டுரை நன்றாக உள்ளது,

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயகுமார் சார்... சேரனுக்கு வந்தியத்தேவன் தூது போயிருப்பானா, போர்களில் வீரம் காட்டிய அவன், சேரன் சிறைப்பிடிக்கும்போது என்ன செய்திருப்பான் என்பதெல்லாம் யோசிக்கவேண்டிய விஷயம். பதிவைப் பாராட்டியதற்கு நன்றி

      நீக்கு
  19. கற்சுவர் குமிழ்கள் உள்ள சுவர், மதில்களில் போர் வீரர் ஏறுவதற்கு பயிற்சி அளிக்க முன் மாதிரி பயிற்சி சுவர்கள் என்று நினைக்கிறேன்,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவைகளைத் தூக்கி ஒன்றோடொன்று பிணைக்க ஏதுவாக இந்தக் குமிழ்கள் அமைக்கப்பட்டிருக்கும் என்று எனக்குத் தோன்றியது.

      நீக்கு
  20. மராத்தா வாயிலுக்குப் பின்புறம் ஒரு கோபுரம் தெரிகிறது அல்லவா? அதுதான் கேரளாந்தகன் வாயில்//

    இந்தப் படமும் இதற்கு மேலே இருக்கும் முதல் மூன்று படங்களும் எடுத்த விதம் அட்டகாசம், நெல்லை. ரொம்ப அழகாக இருக்கு.

    முதலில், தளம் ஸ்க்ரோல் ஆகி வந்து இந்த இடத்தில் நின்றதால் முதலில் கண்ணில் பட்டவை இவை!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா ரங்கன்.க்கா... ஏதோ குறளி வித்தை காரணமாக அந்த இடத்தில் வந்து நின்றிருக்குமோ?

      நீக்கு
  21. பதிவு நல்லாருக்கு.

    ஆதித்தகரிகாலன் கொலையில் சேரருக்கும் பங்கு உண்டா? பாண்டியர் என்று சொல்லப்படுவதுண்டு.

    வாசித்த போதே எனக்கும் உங்க கற்பனை போல எனக்கும் ஓடியது மனதுள். அப்படி இருந்திருக்குமோ என்று.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆதித்த கரிகாலன் கொலையில் இருவருக்கும் பங்கு இருந்திருக்க வேண்டும். சேரர், பாண்டியர்களுக்கு உதவியாக இதில் பங்கெடுத்திருக்கவேண்டும். அதிலும் நம்பூதிரிகள் மூலமாகவோ என்று எனக்குத் தோன்றியது

      நீக்கு
  22. விதவக்கோட்டு அம்மா அந்த பாசுரம் தெரிந்து கொண்டதுண்டு. அப்ப இது ரொம்பவும் பிடித்துப் போன ஒன்று.

    //ஐச்வர்யத்தில் ஆசைப்பட்டு அதனை அடைய, விடாது முயற்சிப்பவனிடம் அந்த ஐச்வர்யம் சேர்வதில்லை, தன் மீது ஆசைப்படாதவனிடம் சேர்கிறது. //

    லக்ஷ்மிய பத்தி இப்படி எல்லாம் சொல்லாதீங்க நெல்லை!!!!!!!!!!!!!!!!!!!!!! அவங்க ரொம்ப நல்லவங்க! உங்க லைனை ஒத்துக்க முடியலை! ஹாஹாஹாஹா

    அதை நினைச்சுக் கூடப் பார்க்காதவங்ககிட்டதான் அவங்க போறதில்லை.

    ஆனா பாருங்க அரசியல் வாதிகள் அதன் பின்னே தானே ஓடுறாங்க. அவங்களுக்கு பல தலைமுறைக்குச் சேர்ந்திருக்கே.

    தத்துவங்கள் எல்லாம் அரசியலுக்கும் ஊழலுக்கும் பொருந்தாதுங்க.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தப் பாசுரத்தின் பொருளைத்தான் சொல்றீங்கன்னு தெரியும் சும்மா உங்களை ஓட்டினேன்.

      கீதா

      நீக்கு
    2. கீதா ரங்கன்...இதைப்பற்றி நானும் யோசித்திருக்கிறேன். உங்கள்ட, சட்னு 10 கோடி ரூபாய் கொடுத்தால் என்ன செய்வீங்க? அதுவே 100 கோடின்னா என்ன பண்ணுவீங்க? (உடனே மக்களுக்கு தானம், இலவச மருத்துவமனைனுலாம் ஜல்லி ஓட்டாதீங்க). எவ்வளவு பணம் சேர்ந்தாலும், அது சேரும் சமயத்தில் நமக்கு ஆரோக்கியம் இருக்கணும். நாம் சேர்த்து அதன் மூலமாக பிறர் அனுபவிப்பதுதான் நடக்கும். கருணாநிதி பூஜ்ஜியத்தில் இருந்து மாங்கு மாங்குன்னு சேர்த்தார். அவரைவிட கொஞ்சம் கூட கஷ்டப்படாதவர்களுக்கு அது போய்ச்சேர்ந்தது.

      எவ்வளவு பணம் இருந்தாலும் ஆறுக்கு மூன்று அடி படுக்கைலதான் தினமும் படுக்கணும். இதுபற்றி சங்கீதா ஹோட்டல்களை உருவாக்கியவரின் காணொளி பார்த்திருக்கிறீர்களா?

      நீக்கு
  23. யோகி சுவாமி ராமாதான்.

    கருவூர்சித்தர் - கருவூர்னதுமே இப்போதைய நிகழ்வுகள்தான் நினைவுக்கு வருகின்றன. புகுந்த வீட்டு சாமி கூட நினைவுக்கு வரலை!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க சொல்றது பத்து ரூபாய் கரூர். நான் சொல்வது சோழ சாம்ராஜ்ஜியத்தோடு தொடர்புடைய கருவூரார் ஹாஹாஹா

      நீக்கு
  24. கற்களில் சிறிது மேலெழும்பி இருக்கும்படியான குமிழ்களையும் பாருங்கள். கற்களைத் தூக்குவதற்காக அவை அமைக்கப்பட்டிருக்குமோ?//

    அப்படியும் இருக்கலாம் அப்ப மறுபக்கமும் இருந்திருக்கும் இல்லையா?

    எனக்கென்னவே இது கால் வைத்து ஏறுவதற்கு வசசியாக இருக்கும் என்று தோன்றியது. பெரிய கிணறுகளில் இறங்குவதற்கு இப்படிக் கல் பதித்திருப்பாங்க சின்னதா சில பாறைகளிலும் கூட ஒன்று கால் பாதங்களை நுழைத்து பதித்து ஏறுவது போல் சிறு குழியாகவோ இல்லை இப்படி குமிழ்களாகவோ.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க சொன்ன பிறகுதான், மறுபக்கமும் பார்த்திருந்திருக்கலாமோ என்று தோன்றியது. வாயிலின் உள்ளே, படிகள் அமைத்து கோட்டையின் (மதிள்சுவரின்) மேலே ஏறுவதற்கு வசதி இருக்கும்போது எதற்கு இந்தக் குமிழ்கள்? மத்தகத்தால் யானை முட்டி சுவரை உடைக்காமலிருப்பதற்கா?

      நீக்கு
  25. சிற்பங்கள் அசாத்தியமாக இருக்கின்றன. குட்டி குட்டியாக எப்படிச் செதுக்கியிருக்காங்க!

    கல்வெட்டுகளில் இரண்டாவதில் முதல் வார்த்தை வாழைப்பழம், அப்புறம் ழுன இடையிடையே சில எழுத்துகள் புரிகின்றன ஆனால் முழுவடுவத்தில் தொடர்ந்து இல்லை என்பதால் புரியலை. மிதழ்க்கும், நிஷ்ரயம்?

    ஓரிரு வரிகள் தாண்டி உடையரா......மாவீரன்?

    நேரில் கிட்ட போய் பார்த்தால் தெரியுமோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த வரி, ஸ்ரீ ராஜராஜ உடையாரா இல்லை உடையாளூரா? படபடவென கல்வெட்டுகளை வாசிப்பவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். நேரில் பார்த்தாலும் கல்வெட்டுகளை வாசிக்கும் படிப்பு அல்லது பழக்கம் இருந்தால்தான் படிக்க வரும். நன்றி கீதா ரங்கன். இன்று ரொம்பவே தாமதம். தூங்கிவிட்டீர்களா?

      நீக்கு
  26. //புராணச் செய்திகளைச் சொல்லும் திறமை கீதா சாம்பசிவம் மேடம், கோமதி அரசு மேடம் போன்றவர்களுக்கு உ ண்டு.// அட! நெல்லை நேத்தே எதிர்பார்த்திருக்கார் போல. ஆனால் துரைத் தம்பி மற்றும் கோமதி அரசு படிச்சிருக்காங்க போலவே. என்னை விட கோமதி அரசு இன்னமும் சுலபமாகப் படிச்சுடுவார். அவங்க கணவர் இது குறித்தெல்லாம் நல்ல ஞானம் உள்ளவராச்சே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா சாம்பசிவம் மேடம். உங்களுக்கும் வரலாற்று மற்றும் புராணச் செய்திகள் நல்லாவே தெரியும். எனக்கு சட் என்று இந்தச் சிற்பம் எதைக் குறித்து என்பது புரியாது.

      நீக்கு
  27. நான் மின் தமிழ்க்குழுமத்தில் இருந்தப்போ ஒருத்தர் கல்வெட்டு படிக்கச் சொல்லிக் கொடுத்திட்டு இருந்தார். ஆனால் எனக்கு அதிர்ஷ்டம் இல்லை. குழுமத்தில் அந்தப் படிப்புக்கான ஆட்கள் அனைவருமே விரைவில் பிரிஞ்சுட்டோம். :( அங்கேயும் இந்த ஜாதிப்பிரிவினை தலை தூக்க ஆரம்பிச்சது. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் கல்வெட்டு படிக்க ரொம்பவே ஆசை. கொஞ்சம் கஷ்டம். காரணம் என்னன்னா, ஒவ்வொரு நூற்றாண்டுக்கும் தமிழ் எழுத்து வடிவம் மாறி வந்துள்ளது. கல்வெட்டுகளில் பிற மொழி எழுத்துக்களும் உண்டு. ஜாதிப்பிரிவினை எங்குதான் இல்லை?

      நீக்கு
  28. பதிவு நீளமாக இருந்தாலும் விபரமான பல தகவல்களைக் கொடுத்திருப்பதால் சலிப்பெல்லாம் தெரியலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கீசா மேடம். நேற்று எங்கேனும் மால்கள் சென்றிருந்தீர்களா? வெயில் அதிகமாக இருக்கிறதா? (இப்போ வெயில் குறைய ஆரம்பிக்கும் சமயம்)

      நீக்கு
    2. உடம்பு சரியில்லைனா ஆஸ்பத்திரி தவிர்த்து நான் வெளியேயே போவதில்லை. அதிலும் என்னோட நடைக்கு மால் மட்டும் இல்லை, மால்கள் வேறேயா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
    3. நான் கத்தாரில் விலாஜியோ மால் சென்றிருந்த படங்களைப் பார்க்க நேர்ந்தது. அந்த மாலில், உள்ளேயே கால்வாய் மாதிரி பண்ணி அதில் படகுகள் விட்டிருந்தாங்க. அதைப் பார்த்தவுடன் நீங்களும் போயிருந்தீர்களா என்று கேட்கத் தோன்றியது.

      நீக்கு
    4. முதல்லே பையருக்கே அப்படி ஒரு மால் இருக்குனு தெரியுமோ தெரியாதோ! இங்கே வந்து ஒரு வருஷம் தானே ஆகுது!

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!