9.10.25

காஞ்சனாவும், கலகலப்பும் ..

 

இந்த வார வியாழக்கிழமை பதிவு, நிலைய வித்வான்கள் தயாரிப்பு. 

கோர்வையாக, ஒழுங்காக எல்லாம் இருக்காது! 

எங்கே தொடங்கலாம்? 

- - - - - - - - - - -

தொடங்குபவர் : KGG. 

எப்போது டீ வி யில் நகைச்சுவை சானல் போட்டாலும் அடிக்கடி என் கண்ணில் படுவது காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 அல்லது கலகலப்பு 2  etc. அதில் வருகின்ற நகைச்சுவை காட்சிகள் கொஞ்சம் கூட சிரிப்பு வராது. இதை எல்லாம் நகைச்சுவை என்று எடுத்திருக்கிறார்களே என்று நினைத்தால் சிரிப்பாக இருக்கும்! சிறுபிள்ளைத் தனமான காட்சிகள்! 

காஞ்சனா படம், The Conjuring ஆங்கிலப்பட வரிசைகளைப் போன்று (காப்பியடித்து?) தமிழில் எடுக்கப்பட்ட படங்கள். ஆனால், சொதப்பல் படங்கள்! விரைவில் காஞ்சனா 04 கூட வெளிவர உள்ளதாம்! 

முதல் காஞ்சனா படம் வெளி வந்தது 2011 ஆம் ஆண்டு என்று நீங்கள் நினைத்தால், உங்களுக்கு சைபர் மார்க். 

இதோ காஞ்சனா முதல் படத்தின் வெளியீடு பற்றிய அறிவிப்பு : (1951 கல்கி தீபாவளி மலரில். ) 


படம் வெளியான தேதி : மே 1, 1952. (ஆனால் இது பயங்கரப் படமோ, நகைச்சுவைப் படமோ அல்ல! சமூகப் படம். லலிதா & பத்மினி நடித்தது) 

= = = = = = = = = = 

இது சரிதானோ? 

======

அரசியல் வேசிகள்

யானைச் சின்னத்திற்கு

நிச்சயதார்த்தம் செய்தால்

கழுதைச் சின்னத்திற்குக்

கழுத்தை நீட்டிவிட்டு

முதலைச் சின்னத்தோடு

முதலிரவு கொண்டாடுபவர்கள்.

- ---எழிலன்

இது சம்பந்தமாக கூடுதல் தகவல்: (by மஞ்சள் கமெண்ட் மண்டு - அதாவது 'ம&' ) 

யானை : அமெரிக்காவில் குடியரசுக் கட்சியின் (Republic Party )தேர்தல் சின்னம். 

கழுதை : அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியின் (Democratic Party )தேர்தல் சின்னம். 

முதலை : உலகில் எந்தக் கட்சிக்கும் முதலை தேர்தல் சின்னம் கிடையாது! 

- - - - - - -

புதுமைப் பழக்கம்

ஏ வி எம் தயாரிப்பாளர்ளில் ஒருவரான  ஏ வி எம் சரவணனுக்குப் புதுமையான பழக்கம் உண்டாம். அவருடைய அறைக்குள் யார் நுழைந்தாலும் அவரைப் புகைப்படமெடுத்து வைத்துக் கொள்வாராம். இதற்காகவே கேமிரா ஒன்று எப்போதும் அவரது மேஜையின் வலப்புற இழுப்பறையில் தயாராயிருக்குமாம். கிட்டத்தட்ட மூவாயிரத்திற்கும் மேற்பட்ட படங்கள் அடங்கிய ஆல்பமும் அதே மேஜை இழுப்பறையில் இருக்குமாம். 

- --குமார். 

(பழைய கல்கி பைண்டிங்கில் இருந்து)

- - - - - - - - -

கடுகு பதில்கள். 

படிக்க இயலவில்லை என்றால், எழுத்து வடிவம் கீழேயே உள்ளது. 

கடுகு பதில்களின் எழுத்து வடிவம் : 

ஏ ஜி அசோக்ராஜா - தஞ்சை
கே - பாரதீய ஜனதா கட்சித் தலைவர் வாஜ்பாய் பற்றிச் சில வரிகள்:
ப: வாஜ்பாய்  நல்ல கவிஞர்,  நகைச்சுவையாளர், அபாரமான சொற்பொழிவாளர் அவரது  சொற்பொழிவைச் சிறந்த சங்கீதக் கச்சேரியை தகிப்பது போல் ரசித்து அனுபவிக்க முடியும், தங்கு தடை இல்லாமல். எதுகை மோனையுடன் வார்த்தைகள் வசன மாகவும் வரும் கவிதையாக வும் பொழியும்.

சீனிவாசன், திருச்செந்தூர் 
கே - கடுகும் தற்பெருமையும் என்று நான் ஒரு புத்தகம் எழுதினால். நீங்கள் முன்னுரை எழுதித் தருவீர்களா?
ப - எழுதித் தருவேன். அச்டித்து வெளியிட உங்களுக்குக் கட்டுப்படியாகுமா என்பது கேள்வி. ஆயிரக்கணக்கான பக்கங்களுக்குப் போகுமே. என்னதான்  நான் சுருக்கி எழுதினாலும்!

க.கணேஷ் -  கே. ரமேஷ்.  - புதுடில்லி 23
கே -  இன்றைய மாணவனுக்கு உங்கள் அறிவுரை என்ன? 
ப -  அதிகமாக சினிமா பார்க்காதீர்கள், பார்த்த, பார்க்கத் தவற விட்ட சினிமாக்கனைப் பற்றி விடாமல் பேசிக் கொண் டிருக்காதீர்கள். இதே மாதிரி ஸ்போர்ட் விஷயத்திலும், விளையாடுங்கள். விளை யாட்டைப் பற்றி அரட்டை அடிக்காதீர்கள். நிறையப் படியுங்கள். ஆயிரம் ஆயிரம் ஆண்டு மனிதனின் அறிவும். அனுபவமும் அச்சடித்த புத்தகத்தில் 'திடீர்' மாத்திரைகள் மாதிரி கிடைக்கின்றன.  படியுங்கள். கவலை இல்லாத வயதில் நிறையப் படியுங்கள். ஃபிக்சட் பொசிட்டில் போட்டது போல் உங்கள் அறிவு வட்டியுடன் பெருகும்.

சே. ராஜேஸ்வரன், பட்டுக் கோட்டை
கே -  கதையைப் படிக்கும் போது தான் கதா பாத்திரங்களைக் கற்பனை செய்து கொள்ளுகிறோமே, பிறகு கதைக்கு ஓவியம் எதற்கு?
ப - தேவை என்றோ தேவையில்லை என்றோ சட்டென்று கூற முடியாது. சில கதைகளை ஓவியத்தின் அழகால் கவரப்பட்டுப் படித்து ஏமாந்திருக்கிறேன். அம்மாதிரியே படங்கள் சுமாராக இருந்ததால் பல கதைகளைப் படிக்காமலே விட்டிருக்கிறேன். கோபுலு மாதிரி ஓவியர்கள் படம் போட்டால் கதைக்கு  ஜீவன் கூடுகிறது. (கதாசிரியர்களுக்கு உரையாசிரியர் கோபுலு என்று சு. சமுத்திரம் சும்மாவா சொன்னார்.) அமரர் கல்கியின் கதைகள் பெற்ற வரவேற்புக்கு மணியம் வரைந்த படங்களும் ஓரளவு காரணம் என்பதை மறுக்க முடியுமா?

எம் எம் ஜெயஸ்ரீ களத்தூர் (வ. ஆ) 
கே - அன்னை தெரசாவைச் சந்திக்க என்ன செய்ய வேண்டும்?  அவரது சென்னை முகவரி என்ன? 
ப - அன்னை தெரசா சாதாரணமாகக் கல்கத்தாவில் தான் இருக்கிறார். அங்கு போனால் எளிதில் சந்தித்த விடலாம். மிஷனரிஸ் ஆஃப் சாரிடி என்பது அவர் நடத் தும் தொண்டு நிலையத்தின் பெயர்.

நடனம், போபால் 
கே -  திரு அருட்பாவிற்கு 'விளம்பர உதவி'  தேவையா?
ப - என்ன ஸார், நடனம். அருட்பாக்களைப் பலரும் படித்தறியச் செய்கிறார்களே என்று மகிழாமல் இப்படிக் கேட்கிறீர்கள்? 'விளம்பர உதவி' என்பது பழக்கத்தில் வந்துள்ள வாசகம். அதற்குப் பதில், ' பணிவுடன் வெளியிடுபவர்' என்று எண்ணினால் இந்த மாதிக் கேள்விக்கு இடமிருக்காது.

கே. பி. சிங் அரகண்டநல்லூர்
கே - நல்ல நண்பன் எங்கே கிடைப்பான்?
ப -  நல்ல நண்பனுக்கு எங்கும் நல்ல நண்பன் கிடைப்பான்.

வி. எஸ். ராஜா,  நாகை
கே - ஓசிப்பொடி வழக்கம் உண்டா?
ப - கிடையாது. உம்மை யாராவது ஓசிப் பொடிக்காக அணுகினால், தட்சிணாமூர்த்தி தேசிகரின் பாட்டைப் பாடுங்கள். பாடல் இதோ
ஒசிப்பொடி என்றொரு நாள் உனக்களித்தால்
நீ சற்றும் அச்சமின்றி நித்தம் நித்தம் யாசித்து
அடிக்கடி சும்மா வந்தலட்டுகிறாய் சீச்சீ
 பொடி கொடுப்பதில்லை யினிப் போ!

சுதா மணிமேகலை, வேலூர்
கே -  கடுகு பதில்களத் தொகுத்து வெளியிடுவீர்களா?
ப -  நான் தொகுத்து வெளியிடுவேன். வாசகர்கள் எனக்குக் குத்து விடமாட்டார்கள் என்று உத்தரவாதம் தருவீர்சளா?
 
எம்.சம்பத், வேலாயுதம் பாளையம்
சங்கராபரணம், உதிரிப்பூக்கள்  இரண்டையும் ஒப்பிடுங்களேன்!
ப: சங்கராபரணம் ஒரு மனோரஞ்சித மலர் உதிரிப் பூக்கள் ஒரு அற்புதமான கன ராகம்!

ரூ. 5 பரிசு பெறுபவர்
சே.ராஜேஸ்வரன்,  61. சவுக்கண்டித் தெரு,  பட்டுக்கோட்டை - 614601

- - - -- - - - -


- - - - - - -


கவலை வேண்டாம் - கீழே இதன் எழுத்து வடிவத்தைக் கொடுத்துள்ளோம்.

கடைசி பக்கம் - கல்கி

வாழ்க்கையின் ஒரே தேவை. 

கண்ணதாசன். 

சென்னை நகரம் முழுவதிலும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் மனிதர்களைப் பார்த்து, 'ஏன் இப்படி ஓடுகிறீர்கள்?' என்று கேட்டுப் பாருங்கள். என்ன சொல்வார்கள்?

"வேலை பார்க்க வேண்டாமா?"

"எதற்காக வேலை பார்க்க வேண்டும்?"

"சம்பாதிக்க வேண்டாமா?"

''எதற்காகச் சம்பாதிக்க வேண்டும்?"

"நிம்மதியாக வாழ வேண்டாமா?"

விஷயம் இவ்வளவுதான். மனிதனுக்கு நிம்மதி தேவை. அதைத் தேடி நிம்மதி இல்லாமல் அலைந்து கொண்டிருக்கிறோம்.

நிம்மதி எங்கே வருகிறது? மரத்தடிச் சாமியாருக்கு இருக்கும் நிம்மதி, மாளிகையிலுள்ள செட்டியாருக்கு இருக்கிறதா?

இல்லாதவருக்குத்தான் இல்லையே என்ற கவலை; இருப்பவனுக்குக் கவலையே இல்லை என்றுதான் பல பேர் கருதுகிறார்கள்.

உண்மையில் எவனுக்கு வசதிகள் அதிகமோ, அவனுக்கே கவலைகள் அதிகம்.

அடர்த்தியான காட்டுக்குள்ளேதான் பாம்புகள் ஆனந்தமாகக் குடியிருக்கின்றன. 

வசதியான மனிதனைச் சுற்றிலும் நன்றி கெட்ட கூட்டம் ஒன்று எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. 

உயிருள்ள மனிதனைப் பார்க்கும் போது கழுகு என்ன நினைக்கும்? 'இவன் எப்போது பிணமாவான், எப்போது சாப்பிடலாம்?' என்று தானே.

'பருத்த தொந்தி நம்மதென்று நாமிருக்க, நாய் நரிகள் பேய் கழுகு தம்மதென்று தாமிருக்கும்தான்' என்கிறார் பட்டினத்தடிகள்.

பசி எடுத்த நாய் செத்துப் போன சடலங்களை மட்டும் கவ்வுவதில்லை; உயிருள்ள கோழியையும் தான் கவ்வி விடுகிறது.

அந்த நாய்களுக்கும் பேய்களுக்கும் நடுவே. வெறும் பணத்தை மட்டும் வைத்துக் கொண்டு தூக்கமில்லாமல் புரண்டு கொண்டிருக்கும் மனிதனைப் பார்த்து, நிம்மதியான மனிதன் என்று. உலகம் கணக்கிடுகிறது.

நிம்மதி, ஏழடுக்கு மாளிகையிலும், ஏர் கண்டிஷன் ரூமிலும் ஜனிப்பதல்ல. அது சிந்தனைகள் நிறைவேறுகிற இடத்தில் பூத்துக் குலுங்குவது ஆசைகளும் கனவுகளும் பலிக்கும் இடத்தில் உற்பத்தியானது.

குற்றாலத்தில் அருவி விழுவது தெரிகிறது. அது எங்கிருந்து வருகிறதென்பது எல்லோருக்கும் தெரியாது.

பகவான் ரமண மகரிஷிக்கு ஒரு கோவணத்தில் இருந்த நிம்மதி, பரூக் மன்னனுக்குப் பட்டுப் பீதாம்பரங்களில் கிடைக்கவில்லை.

காஞ்சிப் பெரியவருக்குக் கால் நடையிலே கிடைக்கும் நிம்மதி, கடன்காரன், சினிமாக்காரனுக்கு கார் சவாரியில் கிடைப்பதில்லை.

புள்ளிகள் பூர்த்தி செய்யப்பட்டால்தான் கோலங்களாகின்றன. எண்ணங்கள் பூர்த்தியடையும் போது, அதற்கு நிம்மதி என்று பெயர் வருகிறது.

என் வாழ்வில் சலனம், சபலம், சஞ்சலம் பலமுறை வந்திருக்கிறது. தற்கொலை நினைவும் தலைதூக்கியிருக்கிறது. ஒருநாள் ஆனந்தமாகக் கழிந்து விட்டால். வாழ்க்கையில் நம்பிக்கை; நிம்மதி.

பசி தாங்காமல் சாகலாம் என்று நினைப்பவனை அழைத்து. ஒருவேளை சுவையான சாப்பாடு போடுங்கள். 'ஏன் சாக வேண்டும் என்று உங்களையே கேட்பான்.

வாழ்க்கை, சட்டத்துக்குக் கட்டுப்படாத பலசரக்குக் கடை சாமானைப் போன்றது. எல்லாம் கலந்துதான் இருக்கும்!

வாழ்ந்தே தீரவேண்டிய திர்ப்பந்தத்தில் மன உளைச்சல் என்ன பயன் தரும்?

தண்ணீரில் விழுந்தவன் நீந்தித்தான் ஆக வேண்டும். 

ஒரேயடியாகத் தூக்கிப் போட்டுவிடுவது சுலபம்தான். அதற்கு இவ்வளவு காலம் வாழ்ந்திருக்க வேண்டாமே!

இந்தப் போதனை எனக்கும் கூடத்தான்:

கால் சுடும்போது கை தலையில் அடித்துக் கொள்கிறது. காரணம், காலும் தலையும் ஒரே உடம்பில் இருக்கின்றன.

தண்ணீர் தாகம் எடுப்பவனுக்குக் காப்பி ருசியாக இருக்காது.

எது தேவையோ அதைப் பெற்றுவிட முயற்சி செய்வோம். இல்லையேல் விட்டு விடத் தயாராவோம்.

காரணம், நமக்குத் தேவை நிம்மதி "கோடி ரூபாய்களையும் அழகான மகா ராணிகளையும் இரண்டு வருட காலம் அனுபவித்துவிட்டு, இருபது வருட காலம் நிம்மதி இல்லாமல் அலைகிறாயா, நிரந்தர திம்மதி வேண்டுமா?" என்று இறைவன் என்னைக் கேட்டால், தான் சொல்லக்கூடிய பதில் "எதையும் எடுத்துக் கொண்டு நிம்மதியைக் கொடு" என்பதே.

= = = = = = = = = = = = =

அடுத்து வரும் பகுதியைத் தயாரித்தவர், 'யார் தயாரித்தது என்ற விவரம்  வெளியிடவேண்டாம்' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இந்திய மனப்பான்மை

நம்முடைய வரலாற்றைப் பார்த்தீங்கன்னா, பொதுவா இந்தியர்கள் அடுத்தவர்களுக்கு உழைத்து, அதில் வரும் வருமானத்தை வைத்தே வாழ்ந்திருக்கிறார்கள். தானாகவே ஒரு வியாபாரத்தை ஆரம்பிப்போம், அல்லது தொழிற்சாலையை ஆரம்பித்து உற்பத்தி செய்வோம் என்ற எண்ணம்  இல்லை, நிறைய பணம் சேர்த்து பணக்காரராவோம் என்ற பெரிய கனவுகளைக் கொண்டிருந்திருக்கவில்லை. ஆனால் இத்தகைய கனவுகளைக் கொண்டிருந்தவர்கள்தாம் பெரிய சாம்ராஜ்யத்தைக் கட்டமைத்திருக்கிறார்கள், வியாபாரத் தலங்களின் அதிபர்களாகியிருக்கிறார்கள். 

நம்ம வரலாற்றில் சாம்ராஜ்யக் கனவுகளோடு பல்வேறு தோல்விகளைச் சந்தித்தும் பெரும் ஆட்சியை நிறுவியவர்கள் பலர். அதில் ஒரு இண்டெரெஸ்டிங் ஆள், பாபர். அதற்கு முன்பு, மௌரிய சாம்ராஜ்யத்தை நிறுவிய சந்திரகுப்த மௌரியர், பிறகு விஜயநகரப் பேரரசை நிறுவிய ஹரிஹரர் புக்கர்.  சரித்திரத்துக்கு என்று ஞாயிறைத் தத்தம் செய்துவிட்டதால் நாம் வியாழனில் சரித்திரத்தைத் தவிர்ப்போம். இது எதனால் என் நினைவுக்கு வந்தது என்பதைச் சொல்கிறேன்.  

யூதர்களின் படிப்பின் ஒரு பகுதியாக, அவர்களுக்கு எப்படி வியாபாரம் செய்வது என்பது ஒரு பயிற்சியாகக் கொடுக்கப்படுகிறது. குறிப்பிட்ட பணத்தை அவர்கள் ஓரிரண்டு வருடங்களில் எப்படிப் பெருக்குகிறார்கள் என்று. இதனால்தான் பல வியாபாரக் குழுமங்களை அவர்கள் வைத்திருக்கிறார்கள். இந்தியாவிலும், சிந்திக்கள், பஞ்சாபியர்கள் போன்ற பலரும் சிறு வயதிலிருந்தே வியாபாரத்தில் ஈடுபடுகிறார்கள். தமிழகத்தில் ரெட்டியார்கள், நாடார்கள் போன்றவர்களும் பெரும்பாலும் வியாபாரத்தில் இருக்கின்றனர். எதற்குச் சொல்கிறேன் என்றால், இன்னொருவருக்கு வேலை செய்தால் மாதச் சம்பளம் வருமே தவிர, வேலை நிரந்தரமில்லை. அந்த மனப்போக்கைத் தவிர்த்து பிஸினெஸில் ஈடுபட்ட அசிம் ப்ரேம்ஜி, ஷிவ் நாடார் போன்ற பலர் பெரும் செல்வம் ஈட்டியிருக்கிறார்கள்.   

சமீபத்தில் கொல்கத்தா பயணம் செய்ய நேர்ந்தது. பொதுவாக கொல்கத்தாவை இந்தியாவின் அழுக்கு நகரம் என்று சொல்வார்கள். ஆனாலும் அங்கு இருந்த கட்டிடங்கள் நம் பழம் பெருமையைச் சொல்லின. உங்களுக்குத் தெரியும், கொல்கத்தா இந்தியாவின் தலைநகரமாக ஒரு காலத்தில் இருந்தது, கிழக்கிந்தியக் கம்பெனி இங்கிருந்துதான் இந்தியா முழுமையையும் ஆட்சி செய்தார்கள்.

கொல்கத்தாவின் சில கட்டிடங்களின் படங்கள். 




கிழக்கிந்தியக் கம்பெனி, சாதாரண வியாபார நிறுவனமாக இந்தியாவுக்குள் நுழைந்தது. இங்கிருந்து இங்கிலாந்துக்குத் தேவையான பொருட்களை வாங்கி அனுப்பும் நிறுவனமாக ஆரம்பித்தது. அதற்காக இங்கு வந்தவர்களில் பெரும்பகுதியினர், அங்கு உதவாக்கரைகளாக இருந்தவர்கள். மெதுவாக அவர்களுக்கு இந்தியர்களின் மனப்பான்மை நன்கு புரிந்துவிட்டது. அவர்கள் விசுவாசமான வேலைக்காரர்கள், மற்றபடி புத்திஜீவிகள் அல்லர் (அதாவது காசு சேர்க்கவேண்டும் என்ற எண்ணம்), அடிமை மனப்பான்மை உள்ளவர்கள், மொழி, ஜாதியினால் அவர்களிடம் பிரிவினை தோற்றுவித்து அவர்களை ஆளுவது மிகவும் சுலபம் என்பதைக் கண்டுகொண்டனர். இதனால்தான் அவர்களால் கொஞ்சம் கொஞ்சமாக நம் நிலப்பரப்பை ஆக்கிரமித்து நம்மை ஆள்வதற்கு முடிந்தது. 

கொல்கத்தாவில் உள்ள அரசி விக்டோரியாவின் நினைவாக கட்டப்பட்ட விக்டோரியா நினைவகம், அரசி விக்டோரியா 1901ல் மறைந்தவுடன், அப்போது இந்தியாவின் கர்சன் பிரபுவின் முயற்சியால் கட்டப்பட்ட து. 1921ல் வேல்ஸ் இளவரசரால் திறக்கப்பட்டது. 


ஆங்கிலேயர்களுக்காக உழைத்தோம் நாங்கள்.

தந்தத்தினால் ஆன ஆசனம். (வாரன் ஹேஸ்டிங் உபயோகித்தது). 

அரசி விக்டோரியா.  கட்டிடங்களையும் பெயர்த்து எடுத்துச் செல்ல முடிந்தது என்றால், ஒன்றையும் விட்டுவைத்திருக்கமாட்டார்களோ?

அரசி விக்டோரியா, 1858ல் அளித்த வாக்குறுதி. இதுதான் தேர்தல் வாக்குறுதிகள், கட்சியின் கொள்கைகளுக்கு அடிப்படை என்றால் மிகையில்லை. எவனெவனுக்கோ இங்க நினைவுச் சிலைகள் இருக்கிறது. எனக்கும் இருந்தால் என்ன? என்கிறாரோ இராபர்ட் கிளைவ்?

= = = = = = = = =

நீங்கள் கூகுளில் போய் ஒரு போனைப் பற்றித் தேடுகிறீர்கள். தகவல்களைப் பார்த்துவிட்டு விலை அதிகம் என்று விட்டுவிடுகிறீர்கள். அதன்பின் கவனித்துப் பாருங்கள். நீங்கள் உங்கள் மொபைலில் அல்லது கணிணியில் எந்தச் செயலியைத் திறந்தாலும் அந்த மொபைல் போனின் விளம்பரம் வந்துகொண்டே இருக்கும். அதே போல யூடியூபில் ஒரு குறிப்பிட்ட ஷூவைப் பற்றிய வீடியோவை நீங்கள் பார்த்தால் போதும்அடுத்து அந்த ஷூ பற்றிய விளம்பரங்கள் உங்களைச் சுற்றி வந்துகொண்டே இருக்கும்.

இதன் பின் இருப்பது ஓர் அடிப்படையான கணிணி அல்காரிதம்தான். நீங்கள் விரும்பும் பொருளைப் பற்றிய தகவலை எப்படியும் கண்டுபிடித்து அது தொடர்பான விளம்பரங்களை உங்களுக்குத் தொடர்ந்து காட்டிக்கொண்டே இருப்பதன் மூலம் உங்களை அந்தப் பொருளை வாங்கவைத்துவிடுவார்கள். இந்த அல்காரிதம் இப்படித்தான் செயல்படுகிறது; செயல்படும்.

இங்குதான் சிக்கல் தொடங்குகிறது.

இப்போது நீங்கள் பல்வேறு சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவராக இருக்கலாம். உதாரணத்திற்கு முகநூல், எக்ஸ், யூடியூப். இப்படி எதுவாக இருந்தாலும் சரி, நீங்கள் ஒன்றைக் கவனித்திருக்கிறீர்களா? இதையெல்லாம் பயன்படுத்த நீங்கள் காசு எதுவும் கொடுப்பதில்லை. அனைத்தும் இலவசம்தான்.

அப்படியிருக்க இந்த சமூக வலைத்தளங்கள் எப்படி இயங்குகின்றன? எப்படி லாபம் சம்பாதிக்கின்றன? எப்படி இவர்களால் அனைத்தையும் இலவசமாகாத் தரமுடிகிறது?

நொடிக்கு பல ஆயிரம் புகைப்படங்கள், போஸ்டர்கள், வீடியோக்கள் அதில் பதிவேற்றப்படுகின்றன.

அவ்வளவு தகவல்களையும் சேமித்து வைக்கவேண்டும். அதற்கு எவ்வளவு செலவாகும் என்று நீங்களே கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.

இவ்வளவு செலவு செய்து உங்களுக்கு ஏன் அந்த சமூக வலைத்தளங்கள் இலவசமாகக் கொடுக்கவேண்டும்? அவர்களுக்கு எங்கிருந்து லாபம் வருகின்றது?

எளிமையாக இதனை விளக்கவேண்டும் என்றால் ஒரு சொல் போதும். அது கண்காணிப்பு.

ஆம். இணையத்தில், சமூக வலைத்ளங்களில் புழங்கும் ஒவ்வொருவரும் கண்காணிக்கப்படுகிறார்கள்; கண்காணிக்கப்படுகிறீர்கள்; கண்காணிக்கப்-படுகிறோம்.

நீங்கள் இணையதளம் வந்தவுடன் என்ன பார்க்கிறீர்கள், என்ன தேடுகிறீர்கள், எதை விரும்புகிறீர்கள், எந்த வீடியோவில் அதிக நேரம் செலவிடுகிறீர்கள்..இப்படி உங்களைப் பற்றிய பல்வேறு தகவல்களைச் சேகரித்து அதன்மூலம் செயற்கை நுண்ணறிவு கொண்ட அல்காரிதங்களின் உதவியுடன் உங்களுக்கான விளம்பரங்களை அவர்கள் உருவாக்குகிறார்கள்.

அந்த விளம்பரங்களை உங்களுக்கு எப்படி எல்லாம் காட்டினால் நீங்கள் கண்டிப்பாக அந்தப் பொருளை வாங்குவீர்கள் என்பதையும் அவர்கள் கணிக்கிறார்கள்.

இப்படிச் சரியாக கணிக்க அவர்களுக்கு உங்களைப் பற்றிய தகவல் வேண்டும். எவ்வளவுக்கு எவ்வளவு உங்களைப் பற்றிய தகவல்கள் இருக்கிறதோ, அந்த அளவு உங்களுக்கான சரியான விளம்பரத்தை அவர்களால் காட்டமுடியும்அதன் மூலம் உங்களை அந்தப் பொருட்களை வாங்கவைத்துவிட முடியும்இந்த தகவல் கண்காணிப்பும், அதற்குத் தகுந்த விளம்பரங்களைக் காட்டும் செயற்கை நுண்ணறிவு அல்காரிதங்களும் பெரிதும் உதவியாக இருக்கிறது. அதனால்தான் அந்த விளம்பர நிறுவங்கள் பெரும் தொகையை முகநூல், எக்ஸ், யூடியூப் உள்ளிட்ட சமூக வலத்தளங்களுக்குத் தருகின்றன. இந்தப் பணத்தை வைத்துத்தான் சமூக வலைத்தளங்கள் லாபமும் சம்பாதிக்கின்றன.

அமெரிக்காவில் நடந்த உண்மைச் சம்பவம் ஒன்றையும் அந்தக் கட்டுரை சுட்டிக்காண்பிக்கிறது. ஒரு வீட்டிற்கு, ஒரு பெண் கர்பமானால் பயன்படுத்த வேண்டிய பொருட்களின் கூப்பன்களை ஒரு சூப்பர்மார்க்கெட், ஒரு வீட்டிற்கு தொடர்ச்சியாக அனுப்புகிறது. அந்த கஸ்டமருக்கோ 16 வயதில் ஒரு பெண் இருக்கிறார். மனைவிக்கு கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு இல்லை. அதனால் கஸ்டமர், ஏன் தொடர்ச்சியாக கர்ப்பம் தொடர்பான கூப்பன்கள் வருகின்றன என்று சூப்பர் மார்க்கெட்டைக் கேட்கஅதற்கு அந்த நிறுவனம், உங்கள் வீட்டில் வாங்கும் பொருட்கள் அடிப்படையில் உங்கள் வீட்டில் உள்ள ஒருவர் விரைவில் கர்ப்பம் ஆகப்போகிறார் என்று சொல்லியிருக்கிறது. கஸ்டமரின் பெண் கர்ப்பமானதை அவர்கள் பெற்றோர் அறிவதற்கு முன்பு, செயற்கை நுண்ணறிவு அறிந்திருக்கிறது

= = = = = = = =

அதிகாலை கண்விழிக்க என்ன செய்யவேண்டும்?

என்னடா இது.. எப்போதும் அதிகாலை கண்விழிக்க வேண்டும் என்று நினைத்து த்தானே படுத்துக்கொள்கிறோம். ஆனால் காலையில் அலார்ம் அடித்தாலும் எழுவதற்கு மனம் இல்லையே, மீண்டும் தூங்கிவிடுகிறோமே என்று நொந்துகொள்கிறீர்களா? உங்களுக்குத்தான் இந்த டிப்ஸ்.

முதலில் தீர்மானமாக நம் மூளைக்கு அதிகாலையில் எழுந்துகொள்ளணும் என்று திடமாகச் சொல்லவேண்டும். நம் மூளையைவிட நல்ல அலார்ம் கிடையாது

அடிக்கடி எழுந்துகொள்ளும் நேரம் மாறக்கூடாது. ஒரே நேரத்தில் எழுந்துகொள்ளும் பழக்கத்தை வைத்துக்கொள்ளவேண்டும்.

படுக்கை அறையில் சூரிய வெளிச்சம் வரும்படியாக ஒளி ஊடுருவும்படியான திரைச்சீலைகள் இருக்கவேண்டும்.

இரவு அளவாக உண்ணவேண்டும். சாப்பிட்டு உடனே படுத்தால் உறக்கம் வராது. சீரணத்தைப் பாதிக்கும். பத்து நிமிடங்கள் நடக்கவேண்டும். சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து படுத்துக்கொள்ளவேண்டும்.

சீக்கிரம் தூங்குகிறவர்களே சீக்கிரம் எழுந்துகொள்ள முடியும். இரவு 9-10க்குள் தூங்கிவிட வேண்டும்.

அலாரம் வைத்தாலும், அது மெல்லிய ஒலி எழுப்பும்படியாக இருக்கவேண்டும்.

தூக்கம் கலைந்ததும் அடித்துப் பிடித்து எழக்கூடாதுஉறங்கும்போது நம் உடலின் ரத்த ஓட்டத்தில் மாறுபாடு இருக்கும். அதனால் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு பிறகுதான் மெதுவாக படுக்கையை விட்டு எழவேண்டும்.

இதெல்லாம் எங்களுக்குத் தெரியுமேஅப்படி இருந்தும் காலையில் சீக்கிரம் ஏன் எழுந்துகொள்ள முடிவதில்லை என்று யோசிக்கிறீர்களா? எழுந்து செய்யக்கூடிய வேலைகள் எதுவுமே உங்களுக்கு இல்லை என்று தெரிகிறது! 

= = = = = = = =

கவிதைக்குப் பதில் நல்ல வரிகள்.. 


- - - - - - - - - -

நகைச்சுவை

சிரிப்பு வரும்படியாக ஏதாவது கிடைக்கக்கூடாதா?




= = = = = = = = = = =

91 கருத்துகள்:

  1. இந்திய மனப்பான்மை - நெல்லை என்று நினைக்கிறேன்!

    பின்னர் வருகிறேன், கௌ அண்ணா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. கடைசியில்(?) எழுதியவர் நெ த போல எழுத முயன்றிருக்கிறார். கே ஜி ஜி க்குப் பிறகு எழுதியிருக்கும் இரண்டாவது ஆள் யார் என்று கண்டுபிடிக்க முடிகிறதா?

      நீக்கு
    2. நெல்லையேதான்.

      கீதா

      நீக்கு
    3. கல்கத்தா வரலாறு பகுதி நெல்லை.

      மற்றவற்றிற்கு வருகிறேன் வாசித்துவிட்டு, கௌ அண்ணா

      கீதா

      நீக்கு
    4. நன்றி. மீண்டும் வருக.

      நீக்கு
    5. கேஜிஜிக்குப் பின்னர் எழுதி இருப்பவர் கொஞ்சம் ஸ்ரீராம் மாதிரி எழுத முயற்சித்திருக்கார். கடைசியில் எழுதியவர் நெல்லை போல் முயன்றிருக்கார். ஆனால் இரண்டுமே நெல்லை இல்லை.

      நீக்கு
  2. நகைச்சுவை இப்போதெல்லாம் ரசிக்கத் தகுந்தவகையில் இல்லை எனலாம். காஞ்சனா படம் பார்த்ததில்லை.

    நல்ல தரமான நகைச்சுவை என்பது மிகக் குறைவு.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. பழைய காஞ்சனாவும் பார்த்ததில்லை இப்போதைய காஞ்சனாவும் பார்த்ததில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழைய்ய்ய காஞ்சனா பார்த்திருக்கிறேன். லேசாக நினைவிருக்கிறது. கே.ஆர். ராமசாமி தான் ஹீரோ. சின்ன சூட்கேஸ் அளவில் ஒரு பாட்டரி ரேடியோ ஆன்டெனாவை மேலே உருவி விட்டு ஆன் செய்யும் காட்சி மட்டுமே நினைவிருக்கிறது. லக்ஷ்மி எழுதிய காஞ்சனையின் கனவு தான் கதை. நாயகன் பேர் மேகநாதன் மாத்தூர் ஜமீன்தார் என்று நினைவு. கல்யாணத்துக்கும் பின் காஞ்சனை படும் கஷ்டம்தான் கதை.‌

      நீக்கு
    2. கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
    3. முன்னால் வந்த காஞ்சனையின் கனவு படத்துக்கோ அல்லது நாவல் வெளிவரும்போதோ பெருமளவில் விளம்பரம் செய்யப்பட்டதாக அறிந்திருக்கேன்.

      நீக்கு
  4. கடுகு பதில்கள் பகுதி, ஶ்ரீராமைக் காப்பியடித்ததுபோல இருக்கிறது. அவர்தான், மத்தவங்களுக்குப் படிக்க முடியுதான்னு கவலைப்படாமல் மிகப் பழைய புத்தகங்களிலிருந்து போட்டோகாப்பி எடுத்து வெளியிடுவார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடப் பாவமே! பாவம் அவர்!

      நீக்கு
    2. காப்பினா தவறான அர்த்தத்துல சொல்லலை. போட்டோக்குப் பதிலா எழுதியிருக்கலாம். ஶ்ரீராம்தான் மிகப் பழைய லைப்ரரி புக்கிலிருந்து சிலசமயம் படிக்க முடியாதபடி ஸ்கேன் பண்ணிப் போடுவார். ஶ்ரீராம் இதனைப் படித்துப் புன்னகைப்பார் என்று தெரியும்.

      நீக்கு
  5. நிம்மதி பற்றிய கட்டுரையைப் படித்து கண்ணதாசன் எழுத்து போல இருக்கிறதே என நினைத்தேன். எப்படி, உண்மையை அழகாக எழுதியிருக்கிறார். வாழ்க்கை என்பது பலதும் கலந்ததுதானே

    பதிலளிநீக்கு
  6. ஒரு படம், 1, 2 , 3 என வந்தாலே, முதல் படம் பெரும் வெற்றிபெற்றது என்று புரிந்துகொள்ளலாம். காஞ்சனா டைப் படங்கள் கொஞ்சம் மலின நகைச்சுவையுடன் கூடியது. அதில் மனோபாலா பகுதியை எப்போதும் ரசிப்பேன்.

    பதிலளிநீக்கு
  7. ​ஸ்ரீராம் பிரசவ விடுப்பில் போய்விட்டாரோ. பதிவு வித்தியாசம் என்றாலும் சப்ஜெக்ட் எல்லாம் வியாழன் சப்ஜெக்ட் தான்.

    இந்த வாரம் அரசியல் நெடி அதிகம். நெல்லையை ஆசிரியர் குழுவில் நிரந்தரமாக சேர்க்கலாம். புதன், வியாழன், ஞாயிறு என்று பங்களிப்பில் முன்னிலை.

    ஜோக்ஸ் ஜஸ்ட் பரவாயில்லை ரகம்,

    Jayakumar

    பதிலளிநீக்கு
  8. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. அரசியல் வேசிகள் கவிதை? அது முதலில் புரியவில்லை. அப்புறம் மஞ்சள் பெயின்ட் பார்த்ததும் புரிந்தது.. கட்சிக்கு விஸ்வாசமாக இல்லாத பட்சிகள் என்று சொல்கிறாரோ?

    கீதா

    பதிலளிநீக்கு
  10. ஏ வி எம் பகுதி வாசித்ததும் நம்ம நெல்லை தான் நினைவுக்கு வந்தார். அவரும் எல்லோருடனும் புகைப்படம் எடுத்துக் கொள்பவர்.

    நான் புகைப்படங்கள் அதிகம் எடுப்பவள் என்றாலும் சுற்றம் நட்புகளை விட வெளி விஷயங்கள் மற்றவற்றை நிறைய எடுப்பேன். ஆனால் பகிர்வது மிகவும் குறைவு!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  11. கொள்ளையடிக்க வந்து விய்யாபாரிகள் (!) ஆகி நாட்டைப்பிடித்த நயவஞ்சகமும் நாகரிகம் தான்..

    கல்கத்தா பகுதி சிறப்பு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்களின் வரலாறு படித்தால், பொதுவாக இந்தியர்கள் இன்னொருவனுக்கு விசுவாசியாக இருந்து தன் நாட்டைக் காட்டிக்கொடுக்கும் குணமும், நாட்டுப்பற்றைக் காட்டிலும் சுயநலத்தையே பெரிதாக எண்ணுபவர்கள் என்றும், இன்னொரு முதலாளிக்குச் சிறந்த விசுவாசமான வேலைக்கார்ர்கள் என்பதும் புரியும்.

      நீக்கு
  12. தொ.கா & கூகுள் விளம்பரங்களைப் பொருட்படுத்துவதே இல்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதான் நல்லது, நமக்கு.

      நீக்கு
    2. நான் ஒரு பாலிசி வைத்துள்ளேன். தொலைக்காட்சியில் நான் பார்க்கும் நிகழ்ச்சியில் வரும் விளம்பரப் பொருட்களை வாங்குவதில்லை என்று. அவனுக்கு எப்படி என் தீர்மானம் தெரிந்தது என்று தெரியவில்லை. பெண்களுக்கான பொருட்களையே நான் பார்க்கும்போது விளம்பரமாக்க் காட்டறான்.

      நீக்கு
  13. நிம்மதி பற்றிய கட்டுரை சிறப்பு

    பதிலளிநீக்கு
  14. நிம்மதி ..

    கவியரசருக்கு நிகர் எவருமில்லை

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. வியாழன் கதம்பத்தில் சகோதரர் ஸ்ரீராம் அவர்களை காணாதது ஒரு பெரிய குறையே தவிர, மற்றபடி கதம்பம் நன்றாக உள்ளது. சகோதரர் ஸ்ரீராம் நலமாக உள்ளாரா? இல்லை வேறு முக்கியமான அலுவல் காரணமாக விடுப்பு எடுத்துள்ளாரா?

    காஞ்சனா பாகம்பாகமாக வந்து கொண்டேதான் உள்ளது. முதலில் வந்த பாகத்தின் சுவாரஷயம் இரண்டு, மூன்றில் இல்லை. பழைய காஞ்சனை படம் முடிந்தால் பார்க்கலாம்.
    .
    அரசியல் கவிதை அரசியல் புரிந்தால் ரசிக்கலாம்.

    இன்று நீங்கள், சகோதரி கீதாரெங்கன், சகோதரர் நெல்லைத் தமிழர் என கூட்டணியாக இன்று கதம்ப மாலையை சிறப்பாக தயாரித்து தந்தமைக்கு
    மனமார்ந்த பாராட்டுக்கள். மிகுதியையும் படித்து விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் நலமாக உள்ளார். விரைவில் எதிர்பாருங்கள்.
      ஆமாம் அது என்ன கடைசி பாராவில் ஒரு ஹேஷ்யம் !!

      நீக்கு
    2. "கூட்டணியாக இணைந்து" என்பதற்கு பதில் "இன்று" என மீண்டும் வந்து விட்டது. மன்னிக்கவும். அது காலையில் ஐந்து மணியளவில் பதிவு வந்தவுடன் முதல் ஆளாக படித்ததினால் வந்த ஹேஷ்யம்.:))

      நீக்கு
    3. இதிலிருந்து நிச்சயமா எனக்குப் புரிவது, கமலா ஹரிஹரன் மேடம் எதுவும் இன்று எழுதலை என்பது.

      நீக்கு
    4. நானா? நான் எங்கு எழுதுவது? ஊர், உலக விஷயங்களிலும், அரசியல் சார்ந்த விஷயங்களிலும் நான் எப்போதுமே அறிவுஜீவி என்பது உலகறிந்த விஷயம். உங்கள் அனைவரது எழுத்துகளை மட்டுந்தான் படித்துக் கொண்டிருக்கிறேன்.

      நீக்கு
  16. கல்கத்தா பழைய கட்டிடங்கள் படங்கள் சூப்பர்.

    கட்டுரைத் தகவல்களும் சூப்பர். கல்கத்தா என்றாலே பழைய லுக் தான் நினைவுக்கு வரும். ஆங்கிலேயர்கள் அங்குதானே செட்டில் ஆனாங்க முதலில். ஆமம கல்கத்தாதான் தலைநகரம் முதலில்.
    கூடவே பெங்காலி இனிப்புகள் சூரிய கலா சந்திரகலா என்ற வகை வகையாக என்றாலும் குறிப்பாக ரொஸகுல்லா, ஜாமூன் நினைவுக்கு வரும். என் அத்தை அங்குதான் இருந்தாங்க ஸோ ரொசகுல்லா அவங்க இங்க வரும் போதெலலம் கொண்டு வருவாங்க.

    எனக்கும் இப்போதைய கல்கத்தாவைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை உண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வங்காளம் எவ்வளவோ ஞானிகள் தோன்றிய இடம்!
      ஆனால் இப்போ .. :(((

      நீக்கு
    2. ஆமாம் ல....பாருங்க கௌ அண்ணா இது டக்குனு நினைவுக்கு வரலை பாருங்க.

      உண்மையிலேயே மிகப் பெரிய ஞானிகள் அங்கு உதித்தவர்கள். வங்களாத்திற்கு அந்தப் பெருமை உண்டு.

      நல்ல கலைஞர்களும்...

      கீதா

      நீக்கு
    3. 2015 ஆம் ஆண்டு டிசம்பரில் கல்கத்தா போனோம். நான் முதல் முறை/ நம்மவர் அலுவலக வேலையாக அடிக்கடி போயிட்டு வந்து கொண்டிருந்தார். ஆனாலும் நகரம் அவ்வளவு பழகவில்லை. முக்கியமாய் அதன் போக்குவரத்து. ப்த்து இருபது அடிக்கு ஒரு சிக்னல், வண்டிகள் இரு பக்கமும் நின்னுடும். சிக்னல் லேசில் மாறாது. ஒரே தூசி, புழுதி, எனக்குப் பிடிக்கவே இல்லை. நடைமேடைகள் எல்லாம் அரசியல் வாதிகள் தயவில் பிழைக்க வந்தவர்களால் ஆக்கிரமிப்பு. விமான நிலையத்திலிருந்து தங்குமிடம் வரதுக்குள்ளே அலுத்துப் போச்சு.

      நீக்கு
  17. ஆங்கிலேயர்களுக்காக உழைத்தோம் நாங்கள்.//

    இந்தப் படம் அட்டகாசமாக இருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
  18. இணையத்தில் நாம் இணைந்துவிட்டால் நம்மைப் பற்றிய தகவல்கள் ஊரறிந்துவிடும். அதுவும் சமூக வலைத்தளங்களில் இருந்தால்.

    மொபைல் கேமராவை முதன்முதலில் இயக்கத் தொடங்கும் போதும் அது கேட்குமே உங்கள் தகவல்கள், புகைப்படங்கள் பார்க்க பெர்மிஷன் கேட்குமே நாம் வேண்டாம் என்றால் இயங்காது. அது போலத்தான் கூகுள் செயலி, வாட்சப் செயலியை எல்லாம் இயக்கத் தொடங்கும் போது.

    இதுல வேற கூடவே சொல்லும் உங்கள் ப்ரைவஸியை நாங்கள் பாதுகாப்போம் என்று உறுதி மொழி வேற? !!!!!!
    அதான் நீயே எடுத்துக்கறியே அப்புறம் எங்க ப்ரைவஸி என்று கேட்கத் தோன்றும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல கருத்து. நம்ம கழுத்தைப் பிடித்து தகவல்கள் அறிந்து, நமக்கு வேண்டாத நேரங்களில் / இடங்களில் அதைப் பகிர்ந்து கழுத்தை அறுக்கின்ற இணையம் !!

      நீக்கு
  19. அமேசானில் ஒன்று ஆர்டர் செய்தாலும் போதும் அவ்வளவுதான்....காட்டிக் கொண்டே இருக்கும்.

    மொத்தத்தில் செயற்கை நுண்ணறிவு நிச்சயமாக ஆபத்துதான் ஆனால் அந்த வலையில் உலகமே சிக்கிக் கொண்டுதான் இருக்கிறது. வெளியில் வருவது எளிதல்ல

    கீதா

    பதிலளிநீக்கு
  20. அதிகாலை கண்விழிப்பு நமக்கு எந்த அலார்மும் தேவையில்லை.

    ஒரு வேளை பிரயாணம் நடு ராத்திரி என்றால் அலார்ம் வைச்சாலும் கூட மனம் விழித்துவிடும் மனசுக்குள் சொல்லி வைத்துக் கொண்டு படுப்பதால்.

    அப்படிக் கெடும் தூக்கத்தைச் சரிக்கட்ட இப்போதெல்லாம் நிறைய நாட்கள் தேவைப்படுகின்றன.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இழந்த தூக்கத்தை சரிக்கட்டுவது என்பது, கொட்டிய பாலை திரும்பப் பெற முயற்சிப்பது போலத்தான்!

      நீக்கு
  21. கடுகு பதில்கள் எப்பவுமே சுவாரசியம் தான். ரொம்பவே கருத்துடனும், நகைச்சுவையுடனும் இருக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  22. கவிதைக்குப் பதில் நல்ல வரிகள் - எல்லாமே சூப்பர்.

    நடுவில் உள்ளதுதான் இப்போது நடந்துகொண்டிருக்கிறது சமூக வலைத்தளங்களில். அசிங்கம்! தரமான விஷ்யாங்கள் குறைந்து கொண்டே இருக்கின்றன. எதையும் பேசலாம், யாரையும் பேசலாம் தனிப்பட்ட வாழ்க்கையையும் பேசலாம் என்று டி ஆர் பிக்காகப் போடுவதும், அது ஒரு புறம் என்றால் அதைப் பார்க்கும் கூட்டமும் இருக்கு பாருங்க....மக்களின் அறிவு மழுங்கி வருகிறது.
    நல்ல அறிவார்ந்த விஷயங்களுக்கு மதிப்பே இல்லாமல் போகின்றது

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல கருத்து, நன்றி.

      நீக்கு
    2. கீதா ரங்கன்... எனக்குக் கிடைக்கும் நேரத்தில், மூளைக்கு வேலை இல்லாமல் வரும் அக்கப்போர் காணொளிகள் பார்ப்பேன். அரசியல் மன அழுத்தம் தருவதால் பார்ப்பது குறைவு. சிலர்தான் அரசயலை நல்ல முறையில் சொல்றாங்க.

      அக்கப்போர் காணொளிகள் டைம் பாஸ். கிசுகிசு போல. ஆனால் இப்போ, டூ மச்சா ஒருவரின் அந்தரங்கம், தானே நேரில் பார்த்த மாதிரி அவதூறுகள் சொல்வது மிக அதிகமாகிவிட்டது. பொது வாழ்க்கையில் இருப்பவர் என்றால் என்ன வேண்டுமானாலும் அவரைப் பற்றிச் சொல்லலாமா?

      நீக்கு
    3. நெல்லை நானும் ஒருசில பார்ப்பதுண்டுதான். குறிப்பாக அரசியல் காணொளிகள் நல்ல முறையில் சொல்பவர்களின் வீடியோக்களைப் பார்ப்பதுண்டு.

      அக்கப்போர் ஓகேதான் ஆனால் ரொம்ப தரக்குறைவாக, நீங்க சொல்லியிருக்காப்ல என்னவோ நேரில் பார்த்தாப்ல பரப்பறாங்க பாருங்க.

      அதுக்கென்னவோ இப்ப சொல்றாங்களே Influencers என்று....எல்லாம் காசுக்காகத்தானே நெல்லை அப்ப எப்படித் தரம் இருக்கும்?

      கீதா

      நீக்கு
    4. Influencerக்கும் ப்ரோக்கருக்கும் வித்தியாசம் எதுவும் கிடையாது. இருவரும் காசுக்காக பொய்களை அள்ளி வீசறாங்க. சில பல ரெஸ்டாரன்டுகள், உணவுகள் சூப்பர்னு இவங்க சொல்றாங்களேன்னு டெஸ்ட் பண்ணினால், இவங்க மனைவிக்கும் சமையலுக்கும் சம்பந்தமே இல்லை, களி செய்து அதுதான் உப்புமா என்று சத்தியம் செய்வார்கள் போல என்று தோன்றும்.

      நீக்கு
  23. அப்போதெல்லாம் மன்னரைப் புகழ்ந்து பாடினால் சன்மானம் //

    இப்பவும் இதேதான் ஆனால் வேறு விதமாக!!!!!!

    அப்ப புகழ்ந்து பாடிட்டு கிடைக்கலைனா வசை பாடிடுவாங்க. ஆனால் இப்ப .....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சோப்படிச்சு சோப்படிச்சு வீடுகளை வளைத்துப்போட்ட வயிரமுத்துவையா சொல்றீங்க?

      நீக்கு
    2. ஹாஹாஹா நெல்லை....இப்படி ஊரறிந்த விஷயத்தைப் போட்டு உடைக்கலாமா? அவரு மட்டுமா? இன்னும் லிஸ்ட் உண்டே!!!!

      கீதா

      நீக்கு
  24. //ப சா நன்றி //

    புரியவில்லையே..

    பதிலளிநீக்கு
  25. // அவர்களது வரலாற்றைப் படித்தால், பொதுவாக இந்தியர்கள் இன்னொருவனுக்கு விசுவாசியாக இருந்து தன் நாட்டைக் காட்டிக்கொடுக்கும் குணமும், நாட்டுப்பற்றைக் காட்டிலும் சுயநலத்தையே பெரிதாக எண்ணுபவர்கள் என்றும், இன்னொரு முதலாளிக்குச் சிறந்த விசுவாசமான வேலைக்கார்கள் என்பதும் புரியும்..//


    இதுவே உண்மை...

    பதிலளிநீக்கு
  26. வணக்கம் சகோதரரே

    கடுகு அவர்களின் பதில்கள் சுவாரஸ்யமாக இருந்தது. இப்போது கேள்வி பதில்களை பெரிதாக்கி தந்தமைக்கு நன்றி. காலையில் கைப்பேசியில் படிக்க இயலவில்லை. ஒரு கதைக்கு ஓவியம் நன்கு துணையாக செயல்படுகிறது என்பது சரியான பதில். நம் எபியிலும் இப்படி கதைகளுக்கேற்ற ஓவியங்கள் வருவதால்தான் செவ்வாய் சிறப்புறகிறது.

    அரசியல் ஜோக்ஸ் நன்றாக உள்ளது. இன்னமும் படித்து விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  27. இன்றைய வியாழன் பல தகவல்களுடன் நன்றாக உள்ளது.

    கல்கத்தா செய்திகள் நெல்லை தமிழன் எனக் கூறுகிறது.

    காஞ்சனா ஒன்று ,இரண்டு பார்த்தேன். இரண்டு அவ்வளவாக பிடிக்கவில்லை அத்துடன் பார்ப்பதை நிறுத்தி விட்டேன்.
    ஜோக்ஸ் சுமார்.

    பதிலளிநீக்கு
  28. இன்றைய பதிவு மிக அருமை. நிலைய வித்வான்கள் தயாரிப்பு நன்றாக இருக்கிறது. நிறைய செய்திகள் எல்லாம் இருக்கிறது.கொல்கத்தாவின்
    படங்களை, விவரங்களை பார்க்கும் போது நெல்லைத்தமிழன் என்று நினைத்தாலும் அவர் அங்கு போவதாய் சொல்லவே இல்லை ஒரு பதிவிலும்.

    பதிலளிநீக்கு
  29. வணக்கம் சகோதரரே

    நிம்மதி குறித்து கவிஞர் கண்ணதாசனின் கட்டுரை அருமை. புதிய பறவையின் "எங்கே நிம்மதி" என்ற பாடலை எழுதியவரின் தாக்கமோ இந்த கட்டுரை. ரசித்துப் படித்தேன்.

    அதிகாலையில் வரும் விழிப்பு தகவலும் அருமை. நாம் பிரயாணபடும் நேரங்களில், கடிகாரத்தில் வைத்த அலாரத்திற்கு முன்பே நம் உள்ளுணர்வு அலாரம் செயல்பட்டு விடும். அதுதான் இயற்கை அலார அழைப்பு மணி. இன்று அனைத்துமே நல்ல தகவல்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  30. 'இந்திய மனப்பான்மை' பகுதியை எழுதியவர் பெயரை குறிப்பிட வேண்டாம் என்று சொன்னால் என்ன? ஒவ்வொரு வரியும் ஏன் வார்த்தையும் நெல்லை,நெல்லை என்கிறதே. போதும் போதாதற்கு புகைப்படங்கள் வேறு சாட்சி! :)))

    பதிலளிநீக்கு
  31. நான் காஞ்சனா1 மட்டும் பார்த்தேன்,இல்லை பார்க்க வைக்கப்பட்டேன். பிடிக்கவில்லை, அதனால் அடுத்த பகுதிகளை பார்க்கவில்லை.
    கடுகு சாரின் கட்டுரைகளிலும், கதைகளிலும் இருக்கும் நகைச்சுவையை பதில்களில் பார்க்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  32. கண்ணதாசனின் புலம்பல்களை சாரி, கருத்துக்களை என்னால் கொண்டாட முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  33. தொகுப்பு நன்று. கட்டிடங்களைப் பார்த்ததுமே கொல்கத்தா என நினைத்தேன். அங்கு சென்றிருந்தபோது இது போன்ற ஓரிரு கட்டிடங்களை படம் எடுத்திருந்தேன். விக்டோரியா மாளிகையின் உட்புறம் பிரிமிக்க வைக்கும் அழகு. அங்கிருந்த பெரிய அளவிலான ஓவியங்களும் மறக்க முடியாதவை. என்ன, படம் எடுக்கதான் அனுமதி இல்லை. இது யாருடைய பகிர்வாக இருக்கும்..?!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!