14.1.26

பாவம் பார்த்து ஏமாந்த தருணங்கள் உண்டா?

 

வாசகர்கள் எல்லோருக்கும் எங்கள் இனிய போகி & பொங்கல் வாழ்த்துகள் ! 


மார்கழி இறுதிநாள் : "போ"கி 
மறுநாள் : "தை"  (ப் பொங்கல்) 

மக்கள் எல்லோரும் "போதை" ஒழித்து பொங்கல் கொண்டாடி மகிழுங்கள். 

= = = = = = = = = =

எங்கள் கேள்விகள் : 

1) பொங்கல் திருநாள் என்றதும் உங்கள் நினைவுக்கு வருபவை என்னென்ன? 

2) இந்தப் படத்தைப் பார்த்தவுடன், உங்களுக்கு என்ன தோன்றுகிறது? 


= = = = = = = = == = = = =

கேள்வி பதில்கள் : 

நெல்லைத்தமிழன் :

1. சட்டத்தினால் தவறுதலாகத் தண்டிக்கப்பட்டவர்களுக்கு, பல வருடங்கள் கழித்து அவர்கள் குற்றவாளி அல்லர் என்று தெரிந்தால், அதற்கு அரசு என்ன தீர்வை வைத்திருக்கிறது? வைத்திருக்கவேண்டும்?    

# இதற்கு சட்டத்தில் நஷ்ட ஈடு கொடுப்பதற்கு உண்டான விதிகள் இருக்கும் என்று நினைக்கிறேன் -  சரியாகத் தெரியவில்லை. அதற்கான இடம் இல்லாவிடில் கொண்டு வர வேண்டும்.‌

2.  பாவம் பார்த்து ஏமாந்த தருணங்கள் உண்டா?   

# உண்டு. அதற்காக பாவம் பார்க்காமல் இருக்க வேண்டும் என்று நினைக்க முடியாது அல்லவா ?

3.  இந்த சோஷியல் மீடியா, தொலைக்காட்சிகள் வந்த பிறகு உறவுக்குள் பேச்சுவார்த்தைகள் குறைந்துவிட்டதா?  எல்லோரும் மீடியாவில் மூழ்கிவிட்டார்களா?  

# மொபைல் கைபேசி வந்த பின், நிச்சயம் குறைந்து விட்டது.‌

4.  மனித மனம் ஏன் தன்னுடைய வயதை ஒத்துக்கொள்ளாமல், இன்னமும் பிறர் அண்ணன், அக்கா, மாமா என்று அழைக்கவேண்டும் என்று விரும்புகிறது?  எனக்கு வயதாகவில்லை என்று சொல்லத்தானே எல்லோரும் விரும்புகிறார்கள்.   

# அப்படி விரும்புகிறார்களா என்ன ? நான் என் வயது பற்றி பெருமைப் படும் ஆள்.  அதுவும் சரியல்ல என்பது புரிந்தாலும் ...

5.  கோயில்களுக்குச் செல்லும் வழக்கம் உண்டா? நீங்களாகச் செல்வீர்களா அல்லது வீட்டில் உள்ளவர்கள் விருப்பத்துக்காகச் செல்வது உண்டா?

# வழக்கம் உண்டு. நானாக செல்வது மட்டுமில்லாமல் இன்னும் சிலரையும்  அழைத்துக் கொண்டு செல்வது இன்னும் அதிகம் பிடிக்கும்.

பானுமதி வெங்கடேஸ்வரன் : 

ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு 'பராசக்தி' என்று ஒரு படம் வரப்போகிறது. உங்கள் மாணவப் பருவத்தில் ஹிந்தி எதிர்ப்பு பேராட்டத்தில் கலந்து கொண்டீர்களா?

& இந்தி எதிர்ப்புப் போராட்டம் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் பரவிய 1965 கால கட்டத்தில் என்னுடைய சிறிய அண்ணன்தான் எஸ் எஸ் எல் சி படித்துக்கொண்டிருந்தார். அப்போது அவர் இ எ போராட்டத்தில் கொஞ்சம் பங்குகொண்டார் என்று ஞாபகம் 

நான் ஜூனியர் டெக்னிகல் ஸ்கூல் படித்த காலத்தில், (1965/66) பாலிடெக்னிக் மாணவர்கள் நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் எங்களையும் சேர்த்துக்கொண்டு ஊர்வலமாக சென்றார்கள். (குள்ளன்  சாஸ்திரி - ஒழிக என்பது போன்ற கோஷம் எழுப்பிய ஞாபகம்) பாலிடெக்னிக் அருகே ஊர்வலம் சென்றவுடன் பாலிடெக்னிக் & ஜே டி எஸ் ஒரு வாரமோ அல்லது 10 நாட்களோ லீவு என்று அறிவித்தார்கள். போராட்டம் வெற்றி என்று சொல்லி எல்லோரும் வீடு திரும்பினோம். 

சின்ன வயதில் மாப்பிள்ளை அழைப்பு ஊர்வல கார்களிலும், கல்யாணத்தில் மணமக்களை உட்கார வைக்கும் ஊஞ்சலிலும் அடித்து,பிடித்து இடம் பிடித்ததுண்டா?

# இல்லை.  காரணம் என் இளவயதில் கார் ஊர்வலத் திருமணம் அபூர்வத்திலும் அபூர்வம்.  என் பதினெட்டு வயது சமயத்தில்தான் உறவுக் கல்யாணத்தில் கார் ஊர்வலம் நடந்தது.  காரே கிடைக்காமல் இரவு 9க்கு மேல் ஜானவாசம் .

நான் முதலில் காரில் பயணித்தது என் இருபது வயதில்.

கே. சக்ரபாணி சென்னை: 

இவ்வளவு  வருடங்களாக தங்கத்தை   பேங்க்கில் வைத்து  லோன்   வாங்கியிருந்தார்கள். ஆனால்  இனிமேல்   தங்கம்  வாங்குவதற்கே லோன் வாங்கவேண்டும்  போலிருக்கிறதே! 

# கருக்காத பித்தளை என்ற பெருமைக்குரிய தங்கம் இவ்வளவு விலை உயர்வது ஒரு சுவாரசியம்.  

கருப்புப் பணம் தங்கமாக சேமிக்கப் படுகிறதோ என்று சந்தேகமாக இருக்கிறது.

= = = = = = = = =

படமும் பதமும் : 

நெல்லைத்தமிழன் :


சமீபத்தில் மதுரையில் ஹோட்டல் சபரீஷில் ஐந்து வகை ஊத்தப்பம் வாங்கிச் சாப்பிட்டேன். அவர்களிடம் ஏழுவகை ஊத்தப்பம் என்றொரு ஐட்டம் இருக்கிறது, ராகி மற்றும் மில்லட் ஊத்தப்பம் என்று நினைவு. அப்போது மாவு தயாராக இருந்திருக்கவில்லை. ஐந்து ஊத்தப்பத்தில் கேரட், கீரை, பொடி, ஆனியன் மற்றும் இன்னொரு வகையும் இருந்திருக்கும். நான் இரண்டு ஆனியன் ஊத்தப்பமாக இருக்கட்டும் என்று கேட்டதால் இப்படித் தந்தார்கள். விலை அதிகமில்லை (முருகன் இட்லியில் ஒரு ஆனியன் ஊத்தப்பமே 155 ரூபாய்). ஆனியன் என்றால் சிறிய வெங்காயமே உபயோகிக்கின்றனர். நான் இட்லி மி.பொடி வாங்கிக்கொண்டேன். அவ்வளவு ருசியாக இருந்தது. 


நெல்லையில் தங்கியிருந்த ஹோட்டலில் பஃப்ஃபே முறையிலான காலை உணவு. ஹோட்டலிலேயே செய்வதால், தினமும் நெல்லை புகழ் அல்வாவையே இனிப்புக்கு வைத்திருந்தார்கள். (எப்படித்தான் கட்டுப்படியாகின்றதோ). நான் (ங்கள்) ஒவ்வொரு முறையும் பல அல்வாத் துண்டுகளை எடுத்துக்கொண்டோம் (எண்ணிக்கையைச் சொல்லி, எதற்கு வயிற்றுவலியை வாங்குவானேன்). ரொம்ப ருசியாக இருந்தது. நெல்லையில் சுவையான அல்வா, பல கடைகளில் கிடைக்கும். அதிகபட்சம் கிலோ 400 ரூபாய்.

= = = = = =


உங்களுக்கெல்லாம் மகாபாரத யுத்தம் நடந்தது குருக்ஷேத்திரத்தில் என்பது தெரிந்திருக்கும். அது சுமார் 20 மைல் சுற்றளவுள்ள பகுதி. மஹாபாரதம் குறிப்பிடும் அத்தகைய பெரிய சேனைகள் யுத்தம் புரிந்த இடம் என்பதால் மிகப் பெரிய பரப்பளவுள்ள இடம். நான் துரியோதனன் ஒளிந்திருந்த மடு,  அபிமன்யூ சக்ரவியூகத்தில் மாண்ட இடம் என்று பல இடங்களுக்குச் சென்றேன். அதில் ஒன்று மேலே உள்ள, கர்ணன் தேர் அழுந்திய இடமும் ஒன்று. இந்த இடமே பல ஏக்கர் கணக்கில் விரிந்திருக்கிறது, தொல்லியல் துறை வசம் இருக்கிறது. இங்கு நடந்துசென்று, கர்ணன் தேர் அழுந்தியதாகக் கருதப்படும் இடம், அருகிலிருந்த கிணறு போன்ற பகுதிகளைப் பார்த்தேன். இதுபற்றி ஒரு தொடரில் எழுதுவேன் என்றாலும், புதனில் ஓரிரு படங்களைப் பகிர்ந்துகொள்ளலாம் என்று தோன்றியது. 


இந்த இடத்திற்கு நான் சென்றதே கொஞ்சம் அதிசயம்தான். ஆறு பேர்கள் கொண்ட குழுவாக ஆட்டோக்களில் எங்களை வேறு பல இடங்களுக்கு அனுப்பினார்கள் (கீதா உபதேசம், பீஷ்மர் அம்புப்படுக்கை,  பாலாஜி கோயில் என்றெல்லாம்). எங்கள் ஆட்டோ கடைசியாக வந்துகொண்டிருந்தபோது ஆட்டோ டிரைவரிடம் பேச்சுக்கொடுத்து, பல்வேறு இடங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது, கர்ணன் தேர் அழுந்திய இடம் நான்கு கிமீ தூரத்தில்தான் இருக்கிறது, போய் வருவதற்கு 500 ரூபாய் அதிகம் ஆகும் என்றார். உடனே எல்லோரும் சம்மதித்து அங்கு சென்று பார்த்து படங்கள் எடுத்துக்கொண்டு திரும்பினோம். எங்கள் ஆறு பேருக்கு மாத்திரம் அந்த வாய்ப்பு கிடைத்தது. (என் மனைவி உடம்பு சரியில்லாததால் அன்று அறையிலேயே தங்கிவிட்டார்)


தேர் அழுந்திய பகுதி (இங்குதான் கர்ணன் இறந்தான்)

= = = = = = = =

KGG பக்கம். 

முன்பெல்லாம் (1970, 71 etc ) டிசம்பர் / ஜனவரி மாத காலங்களில், சென்னை விழாக்கோலம் பூண்டிருக்கும். 

1) கர்நாடக சங்கீத இசை விழாக்கள். 

நேத்திக்கி அகாடெமில சந்தானம் பாடினார் பாருகோ ஒரு மோகனம் - அடடா பிச்சு ஒதறிட்டார்! 

" என்னவோ இந்த ரவி ரகு மாலி போல ஃப்ளூட் வாசிக்கிறாங்க என்று சொல்லறாங்க.. ஆனா இவங்க மாலியினுடைய பிணத்தின் நிழல் பக்கம் கூட நெருங்கமுடியாது " (என்னுடைய சித்தப்பா சொன்னது)  

2) பொங்கல் டிரேட் ஃபேர் என்னும் பொங்கல் சுற்றுலா வர்த்தகப் பொருட்காட்சி. 

" டேய் ஏதுடா இந்த ட்ரான்சிஸ்டர் ரேடியோ ?" 

" பொங்கல் டிரேட் ஃபேர் கடையில வாங்கினேன் " 

" டிரேட் ஃபேர் கடையில் மட்டும் எப்பிடிடா இவ்வளவு பெரிய அப்பளம் பொரிச்சு விக்கிறாங்க ?" 

" டெல்லி அப்பளமாம். மேலே ஏதோ காரப்பொடி தூவி தருகிறார்கள்! டேஸ்ட் சூப்பர் !"   

3) பொங்கல் சீசனில் நிச்சயம் ஒரு சர்வ தேச கிரிக்கட் - 5 நாள் போட்டி நடைபெறும். 

" என்ன இருந்தாலும் ஃப்ராங்க் வோரல் போல ஷாட் அடிக்க ஒரு ஆள் பிறந்து வரணும். " 

" அதெல்லாம் நம்ம என்ஜினீயர் கிட்ட நடக்காது. ஒரே விநாடியில stumping பண்ணி வீட்டுக்கு அனுப்பிடுவான் ! "

" ஐயோ சர் தேசாய் விளையாட வந்துட்டான்டா  ரன் எடுக்காம டொக்கு வெச்சிக்கிட்டே இருப்பான்டா .."

4) காணும் பொங்கல் அன்று நகரப் பேருந்துகளில் இரண்டு ரூபாய் கொடுத்து ஒரு (விடுமுறைப் பயண) டிக்கெட் வாங்கிக்கொண்டுவிட்டால் அதை அன்று முழுவதும் நகரப் பேருந்துகளில் அந்த பயணச் சீட்டைக் காட்டி எங்கிருந்து எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். 

காணும் பொங்கல் அன்றைக்கு மியூசியம் (சென்னை நகர slang பாஷையில் செத்த காலேஜ் !) அல்லது ஜூ (சென்னை நகர slang பாஷையில் உயிர் காலேஜ் !) பக்கம் போனோம் என்றால் நம்மால் எதையும் உருப்படியாகப் பார்த்துத் தெரிந்துகொள்ள முடியாது. பாமர மக்களின் கூட்டத்தில் நம்மை அவர்களே பிழிந்து தூக்கிக் கொண்டுபோய் எங்காவது மூலையில் ஒதுக்கிவிடுவார்கள்! 

ஆக, மார்கழி மாதம் முழவதையும் உற்சாகமாக கழிக்கலாம்! 

இப்போது அப்படி எந்தக் கொண்டாட்டங்களும் இரசிக்கும்படியாக இல்லை என்று நினைக்கிறேன். 

= = = = = = = = = = =

102 கருத்துகள்:

  1. இனிய பொங்கல் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. உங்களுக்கும் வாசகர்களுக்கும் வாழ்த்துகள்.

      நீக்கு
  2. //உங்கள் மாணவப் பருவத்தில் ஹிந்தி எதிர்ப்பு பேராட்டத்தில் கலந்து கொண்டீர்களா?// பொறக்கலீங்கோ. பள்ளிக்கூட காலத்ல ஹிந்தி படிச்சேன்- ப்ரவீண் வரை. உண்மையை சொல்லணுமானா, படிக்காட்டி எங்கப்பா விட்டிருக்க மாட்டார். :-)
    ஹிந்தி டீச்சர் மேஜையில் ரமண பகவான் ஃபோட்டோ இருக்கும். அப்டிதான் அவர் அருள் வலையில மாட்டினேன். ஆனால் அந்த டீச்சரிடம் ஒரு முறை கூட பாடம் தவிர்த்த எதுவும் பேச அனுமதியில்லை!! ரொம்பவே முசுடு :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
    2. டீச்சருக்கு அப்போ என்ன வயசு என்று சொல்லவில்லை நீங்கள்.  ஏனென்றால் என் அத்யாபக் என்னை விட இளையவர்.  துரதிருஷ்டவசமாக அல்லது அதிருஷ்டவசமாக ஆண்!

      நீக்கு
    3. என் அம்மாவைவிட மூத்த பெண்மணி! :-)

      நீக்கு
    4. ///உங்கள் மாணவப் பருவத்தில் ஹிந்தி எதிர்ப்பு பேராட்டத்தில் கலந்து கொண்டீர்களா?// பொறக்கலீங்கோ. // கீதா ரெங்கன் ப்ளீஸ் நோட். ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின் பொழுது பிறந்து விட்ட உங்களுக்கு அப்போது பிறக்கவே பிறக்காத திருவாழ்மார்பன் தம்பி. அவரை தம்பி அல்லது அம்பி என்று அழையுங்கள்.

      நீக்கு
    5. ///உங்கள் மாணவப் பருவத்தில் ஹிந்தி எதிர்ப்பு பேராட்டத்தில் கலந்து கொண்டீர்களா?// பொறக்கலீங்கோ. // கீதா ரெங்கன் ப்ளீஸ் நோட். ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின் பொழுது பிறந்து விட்ட உங்களுக்கு அப்போது பிறக்கவே பிறக்காத திருவாழ்மார்பன் தம்பி. அவரை தம்பி அல்லது அம்பி என்று அழையுங்கள். ;))

      நீக்கு
    6. நாராயண நாராயண !!

      நீக்கு
    7. அது ஹிந்தி எதிர்ப்பு போராட்டமல்ல.
      ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.

      நீக்கு
  3. //சட்டத்தினால் தவறுதலாகத் தண்டிக்கப்பட்டவர்களுக்கு, பல வருடங்கள் கழித்து அவர்கள் குற்றவாளி அல்லர் என்று தெரிந்தால், அதற்கு அரசு என்ன தீர்வை வைத்திருக்கிறது? வைத்திருக்கவேண்டும்? // அமெரிக்காவில் பல மில்லியன் டாலர்களுக்கு கேஸ் போட்டு பென்னம்பெரும்பாலும் ஜெயித்து விடுவார்கள்! என்னைப்பொறுத்தவரை அதுதான் சரியும் கூட.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ச்சே! நாம எல்லாம் அமெரிக்கால பொறந்திருக்கணும்!

      நீக்கு
    2. ஜனநாயகத்தில் புறம்போக்குகள்தான் அதிகம்.  அதாவது புறத்தால் பேசும் பேச்சுகளும், புறத்தாலேயே சென்று விடும் பணமும்!

      நீக்கு
  4. //பாவம் பார்த்து ஏமாந்த தருணங்கள் உண்டா? // ஐயோ பாவம்! ;-)

    பதிலளிநீக்கு
  5. பதிவுத் தலைப்பு எதிர்மறையாக இல்லாமல் 'பாவம் பார்க்காமல் வருத்தப்பட்ட தருணங்கள் உண்டா?' என்றிருந்தால் தன்னைத் தான் உணர்ந்து வருந்துகின்ற உன்னதமாக இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்துக்கு நன்றி என்று சப்பையாக பதிலளிக்காமல் உணர்வு பூர்வமாக உங்கள் அனுபவத்தில் உணர்வாக நான்கு வரிகள் எழுதவும். இது எபி வாசகனின் அன்பான வேண்டுகோள்.

      நீக்கு
    2. நெ த கேட்ட கேள்வி தலைப்பாக உள்ளது. எங்கள் தலைப்பு அல்ல. கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
    3. அறிவேன். அதைத் தலைப்பாக்கியவர்கள் என் கருத்தை உபயோகப்படுத்திக் கொள்ளக் கூடாதா என்ன?

      நீக்கு
    4. ஹிஹிஹி  ஜீவி ஸார்...   பூவ பூவுன்னும் சொல்லலாம், புயிப்பம்னும் சொல்லலாம்..  அல்லது நீங்க சொல்றமாதிரியும் சொல்லலாம்!

      நீக்கு
    5. ஜீவி சார்... இப்போ தோணுது உங்கள் கருத்துப்படியே கேள்வி கேட்டிருக்கலாமோ என.

      எனக்கு, பாவம் பார்க்காமல் பிறகு வருத்தப்பட்ட தருணங்கள் நிறையவே உண்டு. வீட்டில் அந்த மாதிரி சமயங்கள் வாய்க்கும்போது, வீட்டுத் தலைவன் என்ற கூடுதல் பொறுப்பினால் பாவம் பார்க்காமல் விட்டுவிடுவேன், பிறகு அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்று கருதி

      நீக்கு
    6. மனத்தில் இருப்பதை எந்த நேரத்தும் மறைக்காமல் சொல்லும் நெல்லையின் குணம் போற்றுதற்குரியது.

      நீக்கு
    7. நெல்லை! ஒரு மரக்கட்டையைப் பார்ர்த்தாலும் இதை என்ன செய்யலாம்ன்னு தச்சனுக்குத் தோணுமாம். அதே கதை தான். இப்படி மாற்றி நான் சொன்னதை ஒரு கதையாக்கணும்ன்னு உத்வேகம் என்னில் இப்பொழுது கிளர்ந்திருக்கிறது.

      நீக்கு
  6. போதை என்ற வார்த்தையைப் பார்த்து டாஸ்மாக் நோக்கி நடக்கும் மக்கள்தாம் தமிழகத்தில் அதிகம். அதிலும் இப்போதுதான் 3000 கிடைச்சிருக்கும். இதில் போதை ஒழித்து என்ற வார்த்தைகளைப் படிக்கும் பொறுமை இருக்குமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்கள் ஏன் இங்கு வந்து இதையெல்லாம் படித்துக் கொண்டிருக்கப் போகிறார்கள் நெல்லை!!

      நீக்கு
  7. கமுகு (பாக்கு) மரங்கள் படம் ஒன்றையும் தோற்றவில்லை.
    சிறு வயதில் ஒரு பொங்கலுக்கு காட்டு பாளையம் என்ற கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்ததும், கொண்டாடியதும் ஞாபகத்தில் வருகிறது.

    தண்டிக்கப்படாவிட்டாலும் தவறுதலான கைதுக்கு எதிராகப் பல வருடங்கள் போராடி 50 லக்ஷம் இழப்பீடு வாங்கினார் நம்பி நாராயணன்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் அவர் ஞாபகம் வந்தது. அது மாதவன் நடித்து படமாகவும் வந்தது.

      நீக்கு
  8. பொங்கல் திருநாள் என்றதும் மூன்றாம் வகுப்பு படித்த சமயத்தில் பரமக்குடியில் அப்பாவுடன் சந்தைக்குச் சென்று நானும் சகோதரனும் கரும்பைத் தூக்கி வந்த நினைவு வருகிறது..

    மற்றபடி பொங்கல் என்றதும் வேறு நினைவுகள் இல்லை. பெங்களூர் வந்த பிறகு, போகி, பொங்கல் அன்று மாத்திரமே மஞ்சக் குலை கிடைக்கும் என்பதால் மறக்காமல் வாங்கி வந்துவிட வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வு மாத்திரம் மனதில் இருக்கும். தபிழர்கள் மாத்திரமே இந்தப் பழக்கம் கொண்டுள்ளதால் அதற்குப் பிறகு பசுமஞ்சள் மாத்திரமே கிடைக்கும், இலை நஹி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்களுக்கு பொங்கல் என்றதும் அம்மா செய்யும் பொங்கல், அதைவிட ஏழு தான் கூட்டு..  இதையெல்லாம் விட பொங்கல் வாழ்த்து அட்டைகள்..  யார் யார் அனுப்பி இருக்கிறார்கள், என்னென்ன படங்கள் வந்திருக்கின்றன ..  அதை வாங்குவதும் அனுப்புவதும் ஒரு திருவிழா போல ஊர் முழுவதும் நடக்கும்.  என் முதல் காதலிக்கு ( இது அவளுக்கு தெரியாது) பெயர் போடாமல் பொங்கல் வாழ்த்து அனுப்பினேன். ( தெரிந்திருந்தால் பெயர் போட்டே அனுப்பி இருப்பேனே!!) 

      நீக்கு
  9. தங்கம் வாங்குவதற்கே..... உலக நாடுகள் மத்தியில் டாலர் மீதான நம்பகத் தன்மையும் அதனைக் கட்டுப்படுத்துபவர் மீதான நம்பகத் தன்மையும் குறைந்ததால், தங்கத்தை வாங்கி வைக்கறாங்க. அதுவே கடந்த பதினைந்து மாதங்களில் எண்பது சத்த்திற்கைம் அதிகமான விலையேற்றத்திற்குக் காரணம். வெள்ளியும் 80 ருபாயிலிருந்து 160-200 பக்கம் சென்றுவிட்டது.

    இனி பஞ்சலோகச் சிலை என்றால் பஞ்சம் என்பதால் தங்கம் வெள்ளி இல்லாது செய்த சிலை என்றுதான் பொருள் கொள்ளணும் போலிருக்கு.

    பதிலளிநீக்கு
  10. படத்தில் உள்ள தண்டுகளைப் பார்க்கும்போதெல்லாம் பல குடியிருப்பு வளாகங்களில் (எங்களதும் உட்பட) ஏகப்பட்ட அளவில் தென்னை/ஈச்சை இலை போன்று நிறைய இலைகளுடன் வளர்க்கும் குறு மரங்கள் நினைவுக்கு வருகிறது. நிழல் இல்லாமல் ஆனால் பச்சைப் பசேலென்று காட்சி கொடுக்கும் இவைகளினால் என்ன லாபம்?

    பதிலளிநீக்கு
  11. ஹிந்தி எதிர்ப்பு கால்த்தில் எனக்கு நாலு அல்லது ஐந்து வயதிருக்கும். இருந்தாலும் அப்போது நடந்த ஒரு சம்பவம் நினைவில் இருக்கிறது. நான், என் கடைசி அக்கா, அம்மா, அப்பா நால்வரும் எதற்காகவோ திருச்சி மெயின்கார்ட்கேட் பகுதியில் இருக்கும் செயிண்ட் ஜோசஃப் சர்ச் வாசலில் நின்றுகொண்டிருந்தோம். அப்போது கல்லூரி, பள்ளி, மாணவர்கள் ஊர்வலமாக வந்து கொண்டே இருந்ததால் எங்களால் ரோடை க்ராஸ் பண்ண முடியவில்லை. அந்த மாணவர்கள் பேரணியில் என் மூத்த அக்காவும் சென்றார். அவர் எங்களை கவனிக்கவில்லை. என் அம்மா அக்காவை அழைத்ததை பார்த்த வேறு ஒரு பெண் அக்காவை கூப்பிட முயன்றார். அதற்குள் அவர்கள் தாண்டிச் சென்று விட்டார்கள்.
    இந்தக் கேள்வியை எழுதி அனுப்பி விட்டு என் அக்காவிடம், இந்த சம்பவத்தை கூறி, "என்ன முழக்கமிட்டீர்கள்? எது வரை சென்றீர்கள்?" என்று கேட்டேன். அக்கா,"வேறு என்ன முழக்க்மிட்டிருப்போம்? ஹிந்தி ஒழிக என்றுதான்சொல்லியிருப்போம். அண்ணா சிலை வரை அப்போது அண்ணா சிலை கிடையாது, கரூர் டர்னிங்க் என்பார்கள், அதுவரை சென்று விட்டு திரும்பி விட்டோம்" என்றார்.
    இதைத்தவிர ரயில் நிலையங்களில் தார் பூசி அழிக்கப்பட்ட ஹிந்தி பெயர் பலகைகளும் நினைவில் இருக்கின்றன. நான்கு வயதில் நடந்தது நினைவில் இருக்குமா? என்று கேட்காதீர்கள், எனக்கு இப்படி சில நினைவில் இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட பார்றா...   உங்க அக்கா ஹிந்தி எதிர்ப்பு வீராங்கனையா?  இப்போ நஷ்ட ஈடு எதுவும் வாங்க முடியாதா?!!

      நீக்கு
    2. ஹஹாஹா! எல்லா மாணவ மாணவிகளும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்று சொல்லியிருப்பார்கள். என் பெரிய அக்காவுக்கு முன்னால் ஹிந்தியிலும் பாஸ் மார்க் வாங்க வேண்டும் என்று இருந்ததாம்., என் அக்கா காலத்தில் பாசாக வேண்டும் என்ற அவசியம் இல்லை, ஆனால் படிக்க வேண்டும் என்றிருந்ததாம். படிக்கவே மாட்டோம் என்று போரடியிருக்கிறார்கள். நாம் தப்பித்தோம். ஆனால் அப்படி தப்பித்த நம் குழந்தைகளை சி.பி.எஸ்.ஸி. பள்ளியில் சேர்த்து, ஹிந்தி படிக்க வைத்தோம்.

      நீக்கு
  12. சட்டத்தினால் தவறாக தண்டிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயம் இழப்பீடு வழங்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யார், நாமெல்லாம் சேர்ந்தா?  சனநாயக நாட்டிலே ஒரு வளக்கு போட்டா சென்ம சென்மமா இயுக்கும்..  நம்ம ​லொள்ளு பேரன்களுக்கு கூட கொஞ்சமாதான் நஷ்டஈடு கிடைக்கும்.  அதுவும் தேகந்தான்சந்!

      நீக்கு
  13. திருநெல்வேலியில் மட்டும் அல்வா சிறப்பாக இருப்பதற்கு தாமிராரணி தண்ணீர் காரணமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை அல்வா வைத்து வெல்ல அல்வா. அல்வா என்றால் பாம்பே அல்வா தான். பிஸ்தாவும் நெய் ஒழுகலுமாய் அப்படி ஒரு டேஸ்ட். நாக்கைத் தடவி தொண்டைக்குழிக்குள் வழுக்கி.. சேட்ஜி கடைகளில் விழுங்கியதில்லையா என்ன? பாரீஸ் கார்னர் பக்கம் போனாலே பாம்பே அல்வா டேஸ்ட் ஆளை அசத்தும்.

      நீக்கு
    2. அவர்கள் தாமிரவருணி தண்ணீர் ஒரு காரணம் என்று சொல்லிக்கொள்கிறார்கள். நான் பத்து அல்வாத் துண்டுகள் சாப்பிட்டிருந்தாலும் எடை கூடாத்தற்குக் காரணம் பல கோயில்களில் பிரகாரத்தில் நடந்த நடைதான்.

      நீக்கு
    3. ஜீவி சார்.. பாம்பே அல்வா டேஸ்ட் கிடையாது. கராச்சி அல்வா என்ற ரப்பர் அல்வா அதன் இழுவைக்காகப் பிடிக்கும். இந்தத் தடவை நெல்லையில் அனேகமா எல்லாக் கடைகளிலும் குறைந்தது 200 கிராம் வாங்கிவந்து, சாப்பிட்டால் எடை அதிகரிக்கிறது என்று எல்லாவற்றையும் வீண் செய்தது நினைவுக்கு வருது.

      நீக்கு
    4. ஜீவி ஸார்..   வழுக்கி இறங்கும் அல்வா பாம்பே பிஸ்தாவா...    நீங்கள் மதுரை பிரேமவிலாஸ் அல்வா சாப்பிட்டு அறியாதவர்..  ஆஹா..  அது அல்வா...    அதுதான் அல்வாவுக்கெல்லாம் பிஸ்தா..

      நீக்கு
    5. அட! போகி ஸ்பெஷல் இன்று எங்கள் வீட்டு போளியை மறந்து விட்டு அலவாவது இன்னொண்ணாவது?....
      ஆயிரம் சொல்லுங்கள்.. பண்டிகை, விசேஷம்ன்னா ஸ்மார்த்தர்களை அடிச்சிக்க ஆளில்லை. ஒவ்வொரு பண்டிகைக்கும் விதம்விதமா அடுக்ஜளை களைகட்டும் அழகு ஒன்றே போதும்.

      நீக்கு
  14. /சமீபத்தில் மதுரையில் ஹோட்டல் சபரீஷில் ஐந்து வகை ஊத்தப்பம் வாங்கிச் சாப்பிட்டேன்/
    ஒன்றொன்றும் இவ்வளவு பெரியதாக இருக்கின்றதே! ஐந்தும் சாப்பிட முடிந்ததோ? ஆனியன் ஊத்தாப்பம் பார்ப்பதற்கே நாவில் எச்சில் ஊறுகின்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாமே உள்ளங்கையைவிடச் சற்று பெரிது. விலை 140க்குள் என நினைவு. ஆஹா.. அருமையாக ருசித்தேன். அதற்காகவே, இன்னொரு முறை மதுரை செல்லும் திட்டமிருக்கிறது.

      நீக்கு
    2. நானும் அதே சபரீஷில் அண்ணன், அப்பாவுடன் சாப்பிட்டிருக்கிறேன்.  நல்ல ஹோட்டல் அது.

      நீக்கு
    3. ஹோட்டல் சபரீஷ், மதுரை, குறித்து வைத்துக் கொள்கிறேன்.

      நீக்கு
  15. தேர் அழுந்திய பகுதி (இங்குதான் கர்ணன் இறந்தான்)/
    இதெல்லாம் இத்தனை ஆண்டுகள் கழித்து எப்படி இவ்வளவு துல்லியமாகச் சொல்கிறார்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதெல்லாம் வழிவழி கடத்தப்படும் செய்திகள். ப்ராசீன், புராதானப் பகுதிகள். யுகம் மாறுவதால், வட இந்திய யாத்திரைகளில் இடத்துக்கு, அதாவது அந்த ஊர் மண்ணை மிதிப்பதுதான் முக்கியம், தற்போதுள்ள ப்ராசீன் இடங்களைவிட எனச் சொல்வர். தொல்லியல் துறையின் கணிப்புப்படி தற்போது உள்ள கிருஷ்ண ஜென்ம பூமியிலிருந்து 200 மீட்டர் தொலைவில்தான் ஜன்மஸ்தான் இருந்தது என்றும், அகழ்வாய்ந்தால் தெரியும் எனவும், அந்த இடம் முஸ்லீம் வசம் இருப்பதால் அதைச் செய்ய முடியவில்லை என்றும் குறிப்பிட்டுப் படித்த நினைவு.

      நீக்கு
  16. ஜனவரியில் சென்னையில் நடக்கும் புத்தகத் திருவிழாவை மறந்தது ஏனோ? 70-71ல் அது கிடையாதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த வருடம் நடப்பது 49 வது காட்சி.  கனக்குப் போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்!

      நீக்கு
    2. நான் கணக்குல வீக். நீங்களே சொல்லிடுங்க.

      நீக்கு
    3. கொஞ்சம் இருங்க..  கால்குலேட்டரைக் காணோம்..  தேடி எடுத்தாறேன்!

      நீக்கு
  17. பொங்கல் என் மனதிற்கு மிகவும் நெருக்கமான பண்டிகை. ஊருக்குச் சென்றபொழுது பெரிய திண்ணைகளுக்கு செம்மண் பட்டை, சுண்ணாம்பு பட்டை அடித்தது, மாடுகளுக்கு பூஜை செய்தது, கஸிங்களோடு போட்டி போட்டு கரும்பு தின்றது, அதனால் வாய் புண்ணானது, அம்மா, பாட்டி, அத்தைகள், மாமிகள், அவர்கள் குழந்தைகள், சகோதரிகள் என்று எல்லோரோடும் சேர்ந்து காக்காய் பிடி, கன்னு பிடி வைத்து, 'காக்கா கூட்டம் கலைந்தாலும் எங்க கூட்டம் கலையாமல் இருக்கணும்' என்று வேண்டிக் கொண்டது எல்லாம் நினைவுக்கு வரும். சென்னையில் இருந்தபோது அம்மா இருந்தவரை எல்லோரும் சேர்ந்துதான் கனுப்பிடி வைப்போம். அன்று அம்மா வீட்டில் சாப்பாடு. அம்மா வெற்றிலை பாக்கில் வைத்துக் கொடுக்கும் பணத்தை எடுத்துக் கொண்டு புக்ஃபேர் சென்றது என்று பல இனிமையான நினைவுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய நினைவுகள்! பகிர்வுக்கு நன்றி.

      நீக்கு
  18. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எனக்கும் ஒரு சந்தேகம் பாட்னா என்ற பாடலிபுத்திரத்தில் இருந்து// கௌரவர்கள் ஆண்டது டில்லிதானே? பாட்னா என்பது கர்ணன் ஆண்ட அங்க தேசம். டில்லிக்கு அருகில்தானே ஹரியானா? அங்கேதானே குருக்ஷேத்திரம் இருக்கிறது. டில்லிக்கு அருகில் சமீபத்தில் பிரபலமான குர்காவுன் என்பது துரோணருக்கு காணிக்கையாக அளிக்கப்பட்ட இடம் என்பார்கள் குருவின் கிராமம் என்பதுதான் குர்காவுன்..

      நீக்கு
    2. பானுக்கா, ஜெ கே அண்ணா எனக்கும் இந்த டவுட் வரும். பானுக்கா சொன்னதுதான் நான் அறிந்ததும்.
      உத்தர்பிரதேசத்தைப் பூர்வீகமாகக் கொண்ட குடும்பம் தற்போதைய குருகிராமத்தில் இருப்பவர்ககள் இதைத்தான் சொன்னார்கள். அவர்கள் பராசரர் வழி வந்தவர்கள்.

      நம்ம வெங்கட்ஜி கூட கௌரவர், பாண்டவர் ஆண்ட இடம் என்று ஹஸ்தினாபுரம் மேப் கொடுத்த நினைவு. அவர் சுற்றுலா சென்ற பதிவில் கொடுத்திருந்த நினைவு.

      உத்தர்பிரதேசத்தில் இப்போதைய மீரட்.
      பாண்டவர்களின் இந்திரப்பிரஸ்தம் இப்போதைய தில்லி.

      குரு வம்சம் அரசாண்ட பகுதி என்று ஹரியானா, தில்லி, உத்தர்பிரதேசம். என்று வரும்.

      கீதா

      நீக்கு
    3. ​டில்லியை இந்திரப்பிரஸ்தம் (பாண்டவர் தலைநகரம்) என்று கூறுவார்கள். ப்ரயாக்ராஜ் போன்று பெயர் மாற்ற நடவடிக்கைகள் துவங்கிவிட்டன.

      Jayakumar

      நீக்கு
    4. பெயர் மாற்றங்களை நாம் வரவேற்கணும். பாரத்த்தின் தொன்மையான பெயர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களால் பெயர் மாற்றம் பெற்றது. ட்ரிவேண்ட்ரம் என்பதையே திருவனந்தபுரம் எனப் பெயர் மாற்றினரே

      நீக்கு
  19. நானும் குருஷேத்திரம் சென்றிருக்கிறேன். ஆனால் கர்ணன் தே அழுந்திய இடம் எல்லாம் பார்க்கவில்லையே ;((

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குருஷேத்திரத்தில் துரியோதன்ன் மறைந்துகொண்ட மடு, சக்ரவியூகம் எனப் பலப் பல இடங்கள் உள்ளன. ஜனமேஜயன் சர்ப்ப யாகம் செய்த இடமும் சிறிது தொலைவில் உள்ளது. பல இடங்களுக்கு யாத்திரைக்கைக் கூட்டிச் செல்வதில்லை. எனக்கு அந்த இடங்களைக் காணும் வாய்ப்பு ஒரு யாத்திரையில் கிடைத்தமு. இத்தனைக்கும் பல யாத்திரைகளின்போது குருஷேத்திரம் சென்றிருக்கிறேன்.

      நீக்கு
    2. மடுவில் மனிதன் மறைந்து கொள்ள முடியுமா?  மறைபொருள் மாற்றுப்பொருள்  ஏதும் இருக்குமோ?!

      நீக்கு
  20. கௌ அண்ணே, இங்க யாரும் 'போதை' யில் கிடையாதே!!!! ஹிஹிஹி...டிவி போதையும் நம் மக்களுக்குக் கிடையாது....ஓ ஊருக்குச் சொல்றீங்களா!!!

    வா ...தை! ஒரு மாதம்தான் நீ இருப்பாய்...அப்புறம் போ....தை அடுத்தவருடம் வா தை!

    கீதா

    பதிலளிநீக்கு
  21. பொங்கல் என்றாலே, பால் பொங்கும் பருவம்!!!

    ஊரில் ரசித்தது போன்று அதன் பின் எங்கும் இல்லை.

    கௌ அண்ணா நீங்க போட்டிருக்கும் படம் கரும்பு போல இருந்தாலும் அது கரும்பல்ல...மூங்கில் வகை, இலையோடு போட்டிருந்தீங்கனா என்ன வகைன்னு சொல்லியிருக்க முடியும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // பொங்கல் என்றாலே, பால் பொங்கும் பருவம்!!!//

      அட..  அந்தப் பாட்டு உங்களுக்கும் பிடிக்குமா?

      நீக்கு
    2. எனக்கு பிடிக்கும் என்றால் வெள்ளியன்று பகிவீர்களா என்ன?

      நீக்கு
    3. ரொம்பப் பிடிக்கும் ஸ்ரீராம். அந்தப் பாட்டு!

      நான் வீட்டில் பொங்கலுக்குப் பால் கொஞ்சம் வைத்து பொங்கும் போது பொங்கலோ பொங்கல் சொல்வேனோ இல்லையோ இந்தப் பாட்டைப் பாடிப்புடுவேன்!!!!

      கீதா

      நீக்கு
  22. சட்டத்தினால் தவறுதலாகத் தண்டிக்கப்பட்டவர்களுக்கு, //

    கண்டிப்பாக நியாயம் கொடுக்க வேண்டும்.....பொதுவெளியில் அறிவிக்க வேண்டும் அவர்கள் மீது தவறு இல்லை என்று தேசிய அளவில் அறிவித்துச் லீகல் அத்தாட்சியும் கொடுக்க வேண்டும். லீகலாக compensation கொடுக்க வேண்டும். ஏனென்றால் இவர்கள் குற்றவாளி (குற்றம் பொறுத்து) என்று முத்திரை கொடுக்கப்பட்டால் வெளிநாட்டுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தால் கூடச் செல்ல முடியாது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேண்டுமென்றே ஒருவர் பெயரை கெடுக்கும் வேலைகள்தான் பிரதானமாக இருக்கும் இந்த காலகட்டத்தில்  இதெல்லாம் சாத்தியமா என்ன!

      நீக்கு
    2. ஸ்ரீராம் சாத்தியமோ இல்லையோ....இதெல்லாம் நம் மனசுல நினைச்சேனும் சந்தோஷப்படுவோமேன்னுதான்...கொஞ்சம் வீர வசனம் பேசி....சினிமால இப்படியான வீர வசனங்களை, கதைகளில் வீர வசனங்களை ரசிப்பது போல!!!! அப்படி வைச்சுக்கலாம்!

      கீதா

      நீக்கு
  23. பாவம் பார்த்து ஏமாந்த தருணங்கள் நிறைய. நல்லது செய்யப் போக....அதனால் இப்போது வரையிலும் கூட சில கஷ்டங்கள் தொடர்கின்றன.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாவம் என்பதை sin என்று கொண்டால்?

      நீக்கு
    2. ஹாஹாஹா....சரியா புடிச்சீங்க, ஸ்ரீராம்

      பாவம் னாலே எனக்கு உடனே பாவப்பட்ட மக்கள்ன்னுதான் நினைவுக்கு வந்தது!!

      உங்க பாயின்டுக்கே வரேன்....ஹையோ அப்படிச் செய்வது'பாவம்' (sin)இல்லையோ என்று நினைத்து அப்புறம் அதற்கான பின்புலம் பார்த்து ஏமாந்து தப்பா ஜட்ஜ் பண்ணிவிட்டோமே என்று பரிதாபப்பட்டதும் உண்டு.

      கீதா

      நீக்கு
  24. 3. நம் வீட்டில் இதுவரை அப்படி இல்லை.

    4. ஹாஹஹாஹாஹா இது என்னைத்தானே சொல்றீங்க நெல்லை!!!!!!!!!!!!!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  25. சின்ன வயதில் மாப்பிள்ளை அழைப்பு ஊர்வல கார்களிலும், கல்யாணத்தில் மணமக்களை உட்கார வைக்கும் ஊஞ்சலிலும் அடித்து,பிடித்து இடம் பிடித்ததுண்டா?//

    என் அத்தையின் கல்யாணத்தில் அடித்துப் பிடிக்காமலேயே கிடைத்தது! ரொம்பச்செல்லமாக்கும்! என் அத்தைகள் இருவருக்குமே!

    வேறு எந்தக் கல்யாணத்திலும் அப்படி அமர்ந்த நினைவில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் முயற்சித்திருக்கிறேன்.  ரோட்ல வேடிக்கை பார்க்கறவங்க எல்லாம் கார்ல ஏறக்கூடாதுன்னு ஓரமா அனுப்பிட்டாங்க..  

      நீக்கு
    2. அச்சச்சோ! அப்படியா? கருணையே இல்லாதவங்களா? ஏம்பா...சின்னப் பிள்ளை ஆசைப்படுதுன்னு ஏத்திவிட்டிருக்கலாம் இல்லையா?

      கீதா

      நீக்கு
  26. ஊத்தப்பம் ஆஹா! ஆனால் நம்பர் பயமுறுத்துகிறதே! எனக்குச் சொன்னேன்!

    நானும் வீட்டில் சிறிய வெங்காயம்தான் பெரும்பாலும் ஊத்தப்பத்திற்கு. கீரையும் போட்டுச் செய்வதுண்டு...பொடி...தக்காளி..காய் என்று

    கீதா

    பதிலளிநீக்கு
  27. அல்வா அதுவும் நெல்லை அல்வா இழுக்கிறது ஆனால் படத்தை மட்டும் பார்த்துவிட்டு...ச்சீ இது நல்லால்லைனு சொல்லிட்டுப் போய்விடுகிறேன்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  28. நெல்லை, குருஷேத்திரம் படங்கள் எல்லாம் சூப்பர்

    கீதா

    பதிலளிநீக்கு
  29. கௌ அண்ணா பகுதி ரசித்தேன்.

    நான் சென்னையில் இருந்த வரை அதுவும் மகன் அங்கு இருந்தவரை இருவரும் பல கச்சேரிகள் சென்று வந்ததுண்டு, தங்கமயமான வருடங்கள்!

    பொங்கல் டிரேட் ஃபேர், புத்தகக் காட்சி என்று மகிழ்ந்த நாட்கள்,

    கீதா

    பதிலளிநீக்கு
  30. /// ஜனநாயகத்தில் புறம்போக்குகள்தான் அதிகம்.///

    வணிகத்தினுள் தர்மம் கிடையாது..

    பதிலளிநீக்கு
  31. ///உங்கள் மாணவப் பருவத்தில் ஹிந்தி எதிர்ப்பு பேராட்டத்தில் கலந்து கொண்டீர்களா?//

    போராட்டம் கல்லெறிதல் இவற்றை வேடிக்கை பார்த்திருக்கின்றேன்...

    அப்போது இரண்டாம் வகுப்பு

    பதிலளிநீக்கு
  32. குருஷேத்திரம் பற்றிய பகுதி அடுத்ததா!...

    பதிலளிநீக்கு
  33. இந்தி அரக்கி என்றொரு படம் வரைந்து
    காட்டினார்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :)) நான் கூட இந்தி அரக்கி படம் சுவரிலும் வீதியிலும் பார்த்தேன்.

      நீக்கு
  34. அனைவருக்கும் இனிய போகி மற்றும்
    பொங்கல் நல்வாழ்த்துகள்
    கே. சக்ரபாணி

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!